top of page

Aalangatti Mazhai - 3

௩- சாரல்


(பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் அடர்ந்த தூரல்கள் சாரல் எனப்படும். மழை பொழியுமிடம் ஓரிடமாக இருக்கும். காற்று அந்த மழைத்துளிகளைக் கொண்டு சென்று வேறிடத்தில் வீசி பரவலாக்கும். பின்பு அந்த நீர் சிறு ஓடையாக ஓடி மண்ணில் தேங்கி ஊறி இறங்கும்.)


அந்தக் காகிதத்தை அப்படியே கசக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போயிருக்கலாம் ஆனால் ஏனோ அதைச் செய்ய வர்ஷிணிக்கு மனம் வரவில்லை. ஏதோ ஒன்று அவளைத் தடுத்தது.


ஒரு இனிய நறுமணத்துடன் பட்டுப் போன்று மிருதுவாக இருக்கும் அந்த காகிதமாக இருக்கலாம், அச்சு போல அதில் வார்க்கப்பட்டிருக்கும் அழகிய கையெழுத்தாக இருக்கலாம். அல்லது கவிதை போன்ற இனிய வரிகளாக இருக்கலாம். அனைத்தையும் மீறி அதை யார் எழுதியது என அறிந்துகொள்ளும் ஒரு ஆவல் உள்ளே தொன்றிவிட்டதே! அதுவாகக் கூட இருக்கலாம்..


வர்ஷிணி குடியிருப்பது அரசாங்கத்தால் மிகவும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பகுதி. முறையான அனுமதி இல்லாமல், நினைத்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் அதன் உள்ளே நுழைந்துவிட முடியாது.


‘ஆக இங்கே அருகில் குடியிருக்கும் யாரோ ஒருவன்தான் இந்த கடிதத்தை அங்கே வைத்திருக்கக் கூடும்! யாராக இருக்கும்? உடன் வேலை செய்பவனா? மேலதிகாரியா அல்லது இங்கே பணியிலிருக்கும் சீனியர் யாருடைய மகனோவா?’ என யோசனை வண்டு மூளையை குடையப் பார்வையைச் சுழலவிட்டாள். கண்களில் தென்பட்ட வரையிலும் பழகிய முகங்கள்தாம். ஒரு சிநேகப் புன்னகையோடே அவளைக் கடந்து சென்றனர்.


‘ஒரு வேளை புதியவர்கள் யாரவது இங்கே யார் வீட்டிற்கும் விருந்தினராக வந்திருக்கக் கூடுமோ?!’ என்ற எண்ணம் பொறி போலத் தோன்ற, அதற்கான விடையைக் கண்டுபிடிக்கும் பேராவல் மட்டுமே அவளுக்கு உண்டானது.


அந்த நேரம் பார்த்து, “ஹை அக்கா! குட் ஈவினிங்” என ராகம் போட்டபடி அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள் ஐஸ்வர்யா, அவள் குடியிருக்கும் ப்ளாக்கில் முதல் தளத்தில் வசிக்கும் வசந்தி மேடமின் மகள்.


அவர்களும் தமிழர் என்பதால் இங்கே இவளுக்கு இருக்கும் நெருங்கிய தோழியாகிவிட்டாள். பதினொன்றாம் வகுப்பில் படிக்கிறாள். பாடத்தில் எதாவது சந்தேகம் என்றால் இவளிடம்தான் வருவாள்.


“குட் ஈவினிங் ஐஷு” என பதிலுக்கு வாழ்த்தியவள், “ஆமாம், நம்ம ஏரியால புதுசா யாராவது வந்திருக்காங்களா, ஐ மீன் யார் வீட்டுகாவது கெஸ்ட்” என தனது சந்தேகத்தை அவளிடம் கேட்டாள்.


வர்ஷிணியின் கையிலிருந்த காகிதத்தில் பார்வையைப் பதித்தவாறே, “லாங் வீக் எண்ட்ங்கறதால இங்க இருந்து ஊருக்கு போனவங்கதான் அதிகம். எனக்கு தெரிஞ்சு புதுசா யாரும் வந்த மாதிரி தெரியலியே? திடீர்ன்னு ஏன்க்கா கேட்கறீங்க? எனக் கேட்டாள் ஆராய்ச்சி தொனிக்க.


‘ஓ மை காட்... இந்த பொண்ணு சரியான டேஞ்சரஸ் பார்ட்டி... விட்டா இந்த லெட்டர்ல என்ன எழுதி இருக்குன்னு கூட கண்டுபிடிச்சு சொன்னாலும் சொல்லுவா! வரூ பீ அலர்ட்டு’ என சுதாரித்தவள், “இல்லல்ல சும்மாதான் கேட்டேன்” என அவசரமாகச் சொல்லிவிட்டு அவளுடைய பாடத்திலிருந்து சில பல கேள்விகளைக் கேட்டு பேச்சைத் திசை திருப்ப, அது நன்றாக வேலை செய்தது.


“ஐயோக்கா, இப்பதான் அம்மா கிட்ட இருந்து தப்பிச்சு எஸ் ஆகி விளையாட வந்தேன். ப்ரீயா விடுங்க” என்று கடுப்பாகி அவளது தோழியை நோக்கி ஓடிப் போனாள் ஐஷு.


“ஐஷு... உன்னோட இந்த பயம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என கத்தி சொல்லி அவளது செல்லமான முறைப்பைப் பெற்றுக்கொண்டு, ‘ஷ்ப்பா...’ என்ற ஆசுவாச பெருமூச்சுடன் காலி காபி கோப்பையைக் கையில் ஏந்தியபடி அந்த கடிதத்துடன் மறுபடி அவளது வீட்டுக்குள் போனாள்.


கூந்தலை ஒரு கேட்ச் க்ளிப்பில் அடக்கி முகம் கழுவி வந்து அணிந்திருந்த பேன்ட் சட்டை பாணி இரவு உடையிலிருந்து ஜீன்ஸ் குர்திக்கு மாறியவள் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க காலையில் வைத்த சிறிய ஸ்டிக்கர் பொட்டு அப்படியே இருந்தது.


கைப்பேசியை எடுத்து பேன்ட் பாக்கட்டுக்குள் சொருகியவள், அங்கே இங்கே என்று தேடி ஸ்கூட்டி சாவியை கண்டெடுத்தாள். பின்பு சணலால் ஆன பை ஒன்றையும் பர்சையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்து ஸ்கூட்டியின் சீட்டை திறந்து பையை உள்ளே வைத்துப் பூட்டி பின் அதை கிளப்பிச் சென்றாள்.


அந்த குடியிருப்பு வளாகத்தை விட்டு சற்று தள்ளி இருக்கும் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தவள் அடுத்த வாரத்துக்குத் தேவையான காய்கறிகள் பழங்கள் இன்னும் சில பொருட்களையும் தேர்ந்தெடுத்து அள்ளி கூடையில் போட்டு எடுத்து வந்து நீண்ட வரிசையில் நின்று பில் போட்டு அதற்கான தொகையைச் செலுத்தி அனைத்தையும் வாங்கி, தான் கொண்டு வந்த பையில் போட்டு எடுத்துக்கொண்டு வெளியில் வர, டார்க் சாக்கலட் வாங்காமல் மறந்து வந்துவிட்டது அப்பொழுதுதான் அவளது நினைவில் வந்தது.


சர்க்கரை கலக்காத டார்க் சக்கலட்டில் உள்ள கொக்கோ மாதவிடாய் கால வயிற்று வலியை மட்டுப்படுத்தும். கூடவே மூட் ஸ்விங்க்ஸை கட்டுக்குள் வரும். அதனால் அதை வாங்கி தயாராக வைத்துக் கொள்வாள்.


‘இந்த ஒரே ஒரு பொருளுக்காக மீண்டும் உள்ளே போய் வரிசையில் நின்று’ நினைக்கும்போதே ஐயோ என்றிருந்தது. பிறகு வாங்கிக் கொள்ளலாம் என கனமான பையை தூக்கிக்கொண்டு அவளது ஸ்கூட்டியை நெருங்கக் கண்களே வெளியில் வந்து தெறித்துவிடும் போல் விரிந்தது அவளுக்கு.


பனிப் பொழிவினால் ஸ்கூட்டியின் சீட் லேசாக ஈரமாகியிருக்க அதில் விரல் கொண்டு வரையப்பட்ட இதயத்தின் நடுவில் அமர்ந்து அவள் மறந்து வந்த அந்த டார்க் சாக்கலேட் அவளுக்காகத் தவம் கிடந்தது.


பையை வண்டியின் முன்பக்கமாக வைத்துவிட்டுச் சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றினாள். பரபரப்பான அந்த இடத்தில் தனித்து யாரையும் அடையாளம் காண இயலவில்லை. நீண்ட நேரமாக ஒருவன் தன்னை பின்தொடர்கிறான், என்கிற கோபத்தில் முகமெல்லாம் சிவந்துபோனது அவளுக்கு. அந்த சாக்லட்டை தூக்கி வீசியெறியும் ஆத்திரத்துடன் அவள் மீண்டும் ஸ்கூட்டியை நெருங்க அது அங்கிருந்து காணாமல் போயிருந்தது.


புசுபுசுவென எழுந்த பெருமூச்சுடன், ‘எங்க இருந்துடா இப்படி புதுசு புதுசா கிளம்பறீங்க? யாருடா நீ?’ என மனதிற்குள்ளேயே சலித்தபடி ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு அவள் செல்ல, மூளைக்குள் வேறு எதுவுமே ஓடவில்லை.

கவனமின்றி, சிக்னல் விழுந்தவுடன் வாகனத்தை நிறுத்தாமல் கோட்டை தாண்டி நிறுத்தி, பாதசாரிகளிடம் சில திட்டுகளை வாங்கிக்கொண்டு ஸ்கூட்டியை காலால் தள்ளியபடி பின்னோக்கி நகர்ந்தாள்.


எல்லோரும் தன்னை மட்டுமே பார்ப்பது போல் ஒரு பிரமை தட்ட, பக்கவாட்டில் திரும்பி அவள் பார்க்க, ஹெல்மெட்டால் முகம் முழுவதையும் மறைத்தபடி ராயல் என்பீல்டில் வீற்றிருந்தான் ஒருவன்.

அதற்குள் சிக்னல் பச்சைக்கு மாற வாகனத்தை அவள் கிளப்பவும், அருகிலிருந்தவனின் மொபைல் ஒலிக்கத் தொடங்க அவனது வாகனமும் சீறிக்கொண்டு கிளம்பியது.


“புத்தம்புது காலை... பொன்னிற வேளை’


அந்த வரிகள் அந்த சூழ்நிலைக்குக் கொஞ்சமும் பொருந்தாமல் இருந்தாலும் பாடலின் இனிமையில் அவளது உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது. அனிச்சை செயலாக தன் புறங்கையால் வறண்டிருந்த அவளது இதழ்களை அழுந்தத் துடைத்துக்கொண்டாள்.


எதையோ இழந்தது போல சொல்லொணா ஒரு தவிப்பு வந்து சூழ்ந்துகொள்ள தொட்டாற்சிணுங்கி போல மனம் சுருண்டுபோனது. உடலும் துவண்டு போக வாகனம் கொஞ்சம் ஆட்டம் கண்டது.


ஓரமாக நிறுத்தி தன்னை கொஞ்சம் சமன் செய்துகொண்டு பின்பு மிதமான வேகத்தில் வாகனத்தைச் செலுத்தியபடி ஒருவழியாக இருப்பிடம் வந்து சேர்ந்தாள்.


கடிதம் சாக்கலட் என மனதில் கேள்விகள் குடைய அவளது வாகனத்தைப் பார்த்துவிட்டு உள்ளே செல்லும்படி ஜாடை செய்த அவர்கள் குடியிருப்பு காவலாளியை நெருங்கி, வாகனத்தை நிறுத்தி காலை ஊன்றி நின்றவள், தமிழ், மலையாளம், ஆங்கிலம் எனக் கலந்து கட்டி அவரிடம் பேச்சுக் கொடுத்தாள்.


“நம்ம ஏரியாவுக்கு புதுசா யாராவது குடி வந்திருக்காங்களா?”


“இல்லையே!”


“யார் வீட்டுக்கும் கெஸ்ட் வந்திருக்காங்களா?”


“ம்ம்... நம்ம செந்தமிழ் சார் வீட்டுக்கு ஒருத்தர் வந்திருக்கார்”


ஒரு நொடி திடுக்கிட்டவள், “யாராம்?” என்றாள் உள்ளே போன குரலில்.


“அவங்க மச்சான்னு நினைக்கறேன், ஏன் மேடம் கேட்கறீங்க” என அவர் தீவிர பாவத்தில் கேட்கவும், “இல்ல சும்மாதான்” என்றவள், “அவங்க பேர் என்னன்னு தெரியுமா” என்று கேட்க, “தெரியாதுங்க மேடம், ரெஜிஸ்டர்ல செக் பண்ணி சொல்லட்டுமா” என அவர் தயங்கியபடி கேட்க, ஒரு மேலதிகாரியின் வீட்டு விருந்தினரைப் பற்றிய தகவலை இவளிடம் எப்படிச் சொல்வது என அவர் தவிப்பது புரிய, “இட்ஸ் ஓகே, சும்மாதான் கேட்டேன், தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டுச் சட்டென முன்னேறி உள்ளுக்குள்ளே சென்றாள் வர்ஷிணி.


அவள் சென்றதும் அவள் நின்ற அதே இடத்தில் நின்று என்ட்ரி போட்டுவிட்டு அதே பாதையில் பயணித்து உள்ளே சென்றது அவள் சிக்னலில் பார்த்த ராயல் என்பீல்ட் புல்லட்.


***


வெகு நேரம் உறக்கம் வராமல் தவித்தவள் ஒருவராகத் தூங்கும் பொழுது நடுநிசியைத் தாண்டியிருந்தது. ஆனாலும் வழக்கம் போல காலை ஐந்தரைக்கே விழிப்பு தட்டிவிட்டது.


கைப்பேசியை இயக்கி சக்தி, ஸ்ரீ, ஷிவா ஆகிய அவளது மூன்று தேவதைகளும் ஒன்றாக இருக்கும் படத்தை பார்த்து, “குட் மார்னிங் குஜிலீஸ்” என்று அதற்கு இதழ் குவித்து ஒரு முத்தத்தையும் பதித்துவிட்டு எழுந்தவள் நேராகப் போய் தன்னை சுத்தம் செய்துகொண்டு வந்தாள்.


இன்டக்ஷன் அடுப்பில் தண்ணீரை வைத்து டிகாக்ஷன் தயார் செய்தவள் வெதுவெதுப்பான சூட்டில் கொஞ்சம் தண்ணீரைப் பருகிவிட்டு வீட்டைச் சுத்தம் செய்தாள், பின் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு ஒரு ட்ரேக் டீ-ஷர்ட்டுக்கு மாறியவள் வெளியில் வந்து, அதிகாலை போடப்பட்டிருந்த பால் பாக்கட்டை எடுத்து பிரிட்ஜில் வைக்கப்போக அதனுள்ளிருந்து அவளைப் பார்த்துப் பரிகசித்தது முந்தைய இரவு அவளை அதிகம் கடுப்பேற்றிய அந்த டார்க் சாகலேட் பாக்கட்.


ஸ்கூட்டி சீட்டிலிருந்து அது காணாமல் போயிருக்கக் குழந்தைகள் யாரும் அதை அங்கே வைத்துவிட்டு மீண்டும் எடுத்துச் சென்றிருக்கக் கூடும் என எண்ணியவள் வரையப்பட்டிருந்த ஈர இதயத்திற்கு மட்டும் தோதான ஒரு காரணத்தை தேடினாள்!


வீட்டிற்கு வந்து, வாங்கிய பொருட்களை ஃப்ரிட்ஜில் எடுத்து அடுக்க எத்தனிக்க அவற்றுடன் அந்த சக்லட்டும் இருந்தது. அவளுக்கோ ஐயோ என்றிருந்தது.


ஆனாலும், அவள் அதைத் தூக்கியெறியாமல் இருக்க அந்த முகம் தெரியாதவன் செய்த அந்த தந்திரம் அவளுக்குச் சிறு புன்னகையைத்தான் தோற்றுவித்தது. ஏனோ இப்பொழுது அதைத் தூக்கி குப்பையில் ஏறிய மனம் வரவில்லை. ஐஸ்வர்யா வரும்பொழுது அவளுக்குக் கொடுத்துவிடலாம் என எண்ணியவள் வீட்டைப் பூட்டிக்கொண்டு அந்த வளாகத்தின் உள்ளேயே இருக்கும் பூங்காவை நோக்கிப் போனாள்.


தினமும் அறை மணி நேரம் நடந்துவிட்டு அங்கேயே இருக்கும் ஜிம்மில் சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவளது வழக்கம்.


வழக்கமாக அங்கே சந்திக்கும் மனிதர்கள் பலரும் கண்களில் படப் புன்னகையுடன் முகமன்களைச் சொல்லிக்கொண்டு அவள் நடைப்பயிற்சியைத் தொடர, யாரோ தன்னையே பார்ப்பதுபோல ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டது.


அவளது விழிகள் சுழன்று அந்த பகுதி முழுவதையும் ஸ்கேன் செய்ய, புதிதாக யாரும் தென்படவில்லை. உண்டான சிறு பதற்றத்தில் அதற்கு மேல் நடக்க முடியாமல் போக, அங்கேயே இருக்கும் மேடையில் போய் அமர்ந்துகொண்டாள். மனம் முழுவதும் ஏதோ பாரமாக அழுத்த, தலை வேறு லேசாக வலிக்கத் தொடங்கவும் குனிந்தபடி தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். கண்கள் தாமாக மூடிக்கொண்டன.


அந்த நிலை மாறாமல் சில நிமிடங்கள் ஆகியும் அவள் அப்படியே உட்கார்ந்திருக்க அவளை ஒட்டியும் ஒட்டாமலுமாக யாரோ அவளுக்கு அருகில் உட்காருவதுபோல் தோன்றவும், பதறி நிமிர்ந்தாள்.

அமைதி தவழும் முகம் முழுவதும் புன்னகையைப் பூசியபடி அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் அவளது இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. புசுபுசுவென எழுந்த வேக மூச்சுக்களுடன் “அப்படினா அந்த லெட்டர வெச்சது” என்றபடி, ‘நீதானா?!’ என்பதாக அவனை நோக்கி விரல் நீட்ட, “என்ன லெட்டர்?” என்றான் அவளது கேள்விக்குப் பதிலான மற்றொரு கேள்வியுடன். அவனது கண்கள் அவளது விரலில் தென்பட்ட நடுக்கத்தை அளவேடுத்தது.


“இல்ல, அந்த சாக்லட்?” என முகம் சிவந்து அவள் அவனை முறைக்க, அடக்கப்பட்ட சிரிப்பில் அவனது மீசை துடிக்க, உடல் குலுங்க, “எந்த சாக்லட்?!” என்றான் அவளைச் சீண்டும் விதமாக.


உச்சபட்ச ஆத்திரத்துடன், “கிருஷ்ணா!” என அவள் பற்களைக் கடிக்க, அதில் அவனது புருவம் மேலே உயர்ந்தது.


“ஓஹ்... மேடம்க்கு என் பேர்லாம் கூட தெரிஞ்சிருக்கு” என்றான் கிருஷ்ணா நக்கல் இழையோட.


Episode Song



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page