Aalangatti Mazhai - 4
Updated: Aug 23, 2022
௪ - அடை மழை
(இடைவெளியின்றி அதிக அடர்த்தியுடன் பார்வையை மறைக்கும் படி பெய்யும் மழை அடை மழையாகும். அடை மழையில் நீர் பெரும் ஓடைகளாக ஓடி குளம் ஏரிகளை நிரப்பும் வகையில் மண்ணுக்குக் கிடைக்கும்.)

விரல்களால் நெற்றியை அழுத்தி விட்டபடி, “ஹவ் ஸ்டுபிட் இஸ் திஸ்? நான் எதுக்கு உங்கள நினைக்கணும் சொல்லுங்க? அக்காவுக்கு கல்யாணமான இவ்வளவு வருசத்துல நீங்களும் நானும் நேருக்கு நேர் பார்துட்டது கூட இல்ல! அதுவும் அக்கா கல்யாணத்துல நீங்க என்னை வெச்சு செஞ்சதுக்கு உங்க கூட பேசினதே அதிகம்! தென் ஒய் திஸ் ஓவர் சீன்” எனப் பாய்ந்தாள் வர்ஷினி.
கிருஷ்ணாவின் முகம் ஒரு மாதிரியாக மாறிப்போனது. சட்டெனத் தன்னை சமாளித்தும் கொண்டான்.
அவள் பேசியதைக் காதிலியே வாங்காத ஒரு பாவத்தில், “தலை வலிக்குதா வர்ஷினி?” எனக்கேட்டான் அக்கறை தொனிக்க.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல” என்றவள், “மொதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க. லெட்டரும் சாக்கலட்டும் நீங்கதான் வெச்சீங்களா” எனக்கேட்டாள் வார்த்தைகளின் வேகம் குறையாமல்.
“ப்ச்... உனக்கு என்னதான் பிரச்சன? இங்க வந்ததுல இருந்து லெட்டர்... சாக்கலட்... லெட்டர்... சாக்கலட்ன்னு... இதையே மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்க? என்ன லெட்டர்? என்ன சாக்கலட்?” என்றான் ஒரு புரியாத பாவத்தை முகத்தில் காட்டி.
“அப்படின்னா அது நீங்க இல்லையா?” எனக் கேட்டாள் உள்ளே போன குரலில்.
“ப்ச்... வரூ” என அவன் அலுத்துக்கொள்ள, “ஐயோ! நீங்க என்ன என்னை இப்படி வரூன்னு கூப்பிடறீங்க” என்றாள் அவன் ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டதைப் போல.
“ஏன்... அப்படி கூப்பிட்டா ஏதாவது தெய்வ குத்தமா?” என விவகாரமாகக் கேள்வி கேட்டவன் அவள் உருத்து விழிக்கவும், “நம்ம புஜ்ஜி குட்டிங்க உன்னை அப்படித்தான கூப்பிடறாங்க அதான் என விளக்கமளித்தான்.
இரண்டாவதும் பெண்ணாய் போக அவளுடைய அப்பா அம்மாவிடமிருந்து செல்லமோ அல்லது அதிகப்படியான சலுகைகளோ எதுவுமே கிட்டியதில்லை இவளுக்கு. அதுவும் ரஞ்சனிக்கு ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு அவர்களுடைய கவனம் மொத்தமும் அவள் பக்கமே திரும்பிவிட வர்ஷிணியின் மனதில் ஒரு மாதிரியான வெற்றிடம் உருவாகிப்போனது.
ஆசையாக, செல்லமாகக் கொஞ்சிக் கொஞ்சி அவர்கள் இவளை விளித்ததாக நினைவே இல்லை. அதனால்தானோ என்னவோ இந்த உலகத்திலேயே அவளை அதிகம் நேசிக்கும் நபர் அவளாகவே மாறிப்போனாள்! அதன் அடையாளமாக மனதிற்குள்ளேயே ‘வரூ’ எனத் தன்னைத் தானே செல்லமாக அழைத்துப் பழகிக்கொண்டாள்.
அவளுடைய அக்கா பெற்றெடுத்த முத்துக்கள் மூன்றும் அவளை இயல்பாகவே ‘வரூ’ என அழைக்கத் தொடங்க, இப்படி ஒரு அதிசயம் எப்படி நிகழ்ந்ததென்றே தெரியவில்லை! அக்காவின் பிள்ளைகள் மேல் அவள் வைத்திருக்கும் பிரியம், என்னவோ தானே அவர்களை பெற்றெடுத்ததுபோல பொங்கிப் பிரவாகிக்கத் தொடங்கிவிட்டது.
விவரம் புரியாமல் இவன் போய் இப்படி விளிக்கவும், அது ஒரு மாதிரி சங்கடமாகப் பட்டது.
“இல்லல்ல... அப்படி கூப்பிடாதீங்க” என்றாள் பட்டென்று.
“ஏன்? குட்டிங்க அப்படித்தான உன்னை கூப்பிடறாங்க?” என்றான் விடாப்பிடியாக.
“அவங்க மட்டும்தான் அப்படி கூப்பிடலாம், வேற யார் அப்படி கூப்பிட்டாலும் எனக்குப் பிடிக்காது” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“அமிர்தவர்ஷிணி... இப்படி நீட்டி முழக்கி கூப்பிட கொஞ்சம் கஷ்டமா இருக்கு. வரூதான் ஈசியா இருக்கு... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு, “அந்த லெட்டர்... சாக்கலட்... பத்தி சொல்லு” எனப் பேச்சை மாற்றினான்.
‘உண்மையில் அவன் அவற்றை வைக்கவில்லையோ?’ என்கிற குழப்பத்துடன், ‘இதை பற்றி இவனிடம் எப்படிச் சொல்வது?’ என்கிற தயக்கமும் எழுந்தது.
“விடுங்க, அந்த அளவுக்கு முக்கியமான விஷயம் ஒண்ணும் இல்ல” என்று அவள் மழுப்பவும், உண்மையில் அவளது மனதை அறிய அவன்தான் அவற்றை அங்கே வைத்தது என்பதால் அதிகம் தோண்டித் துருவாமல் அதைப் பற்றி கண்டுகொள்ளாதவன் போல, “ஓகே” என்று விட்டுவிட்டான்.
இந்த கண்ணாமூச்சி ஆட்டமும் அவனுக்கு ஒரு சுவாரசியத்தைக் கொடுக்க, உண்மையில் அவளுக்கு எதிரில் இப்படி வந்து நிற்கும் எண்ணமெல்லாம் இல்லை அவனுக்கு. ஆனாலும் அவளது ஓய்ந்த தோற்றம் அவனது மன உறுதியை ஆட்டம் காண வைத்துவிட்டது. மறைவிலிருந்து அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தவன் அனிச்சையாக அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்துவிட அவள் அவனை ஒரு அதிர்வுடன் பார்த்தபிறகுதான் தான் செய்த பிசகே உரைத்தது அவனுக்கு.
‘டேய் கிருஷ்ணா? என்னடா செஞ்சி வெச்சிருக்க? அவ ஒரு மாதிரி உன்னை பார்க்கும் போதே புரியுல! கேள்வி மேல கேள்வி கேட்டே உன்னை கொல்லப்போறா! எப்படி வளைச்சு வளைச்சு கேட்டாலும் சொதப்பாம பதில் சொல்லிச் சமாளி’ என அவன் தனக்குள்ளேயே ஒரு ஒத்திகையைப் பார்த்தபடி புலம்பித்தள்ள, “ஆமாம்... உங்களுக்கு இஸ்ரோல சயின்டிஸ்ட் போஸ்டிங் எதாவது போட்டுக் கொடுத்திருக்காங்களா என்ன? ஆனா வாய்ப்பில்லையே, உங்களுக்கு ஏஜ் பார் ஆகியிருக்கணுமே?” எனக் கிண்டல் இழையோடக் கேள்வி கேட்டு அவனது எண்ணத்தை மெய்ப்பித்தாள் வர்ஷினி.
“ஓய்... என்ன கிண்டலா? எனக்கு வயசாயிடுச்சுன்னு சொல்ல வரியா” என வெகுண்டு எழுந்தவன், “அதுக்கு எனக்கு இன்னும் ரெண்டு மூணு வருஷம் இருக்கு தெரிஞ்சிக்கோ” என்றான் கெத்தாக.
“ஐயோ! அப்ப நிஜமாவே இங்க சயின்டிஸ்ட்டா ஜாயின் பண்ணியிருக்கீங்களா?” என அவள் விடாமல் அவனை வம்புக்கு இழுக்கவும், அவளது இந்த வம்புப் பேச்சைக் கூட அவ்வளவு ரசித்தான் கிருஷ்ணா என்பதுதான் உண்மை.
“நீ இங்கதான் சர்வீஸ்ல இருக்கன்னு தெரிஞ்ச பிறகும் அந்த தப்பை நான் செய்வேனா என்ன” என பதிலடி கொடுத்தவனை நன்றாக முறைத்தவள், “அப்பறம் ஏன் இங்க நான் தங்கியிருக்கும் குவாட்ரஸ்குள்ள மட்டும் வந்தீங்களாம்?” எனக்கேட்டாள் சூடாக.
“ப்ச்... வேற வழி, இங்கதான என் ஃப்ரெண்ட் செந்தமிழ்ச்செல்வனும் குடியிருக்கான்” என பதில் கொடுத்தான் கிருஷ்ணா தண்மையாகவே!
“ஓஹ்... நீங்கதானா அது?” எனச் சற்று அதிகமாகவே வியந்தவள், அப்படியே மௌனமாகிப் போனாள்.
இரு தினங்களுக்கு முன் எதார்த்தமாக அவளிடம் கொடுப்பது போல அவன் அவளது கைகளில் திணித்த பொக்கே நினைவுக்கு வர, அந்த கடிதம் சாக்கலட் இவையெல்லாம் கூட இவனது திருவிளையாடலாகத்தான் இருக்கும் என உறுதியாக நம்பினாள் வர்ஷிணி!
‘எங்கிட்ட மாட்டாமயா போவ! அப்ப இருக்கு உனக்கு!’ என கறுவியவள், அதே கடுப்புடன் அவனைப் பார்த்து வைக்க, மூண்ட சிரிப்பை அப்படியே அவன் அடக்கவும் அவனது துடித்த இதழ்களும் மின்னும் விழிகளும் அவளை அப்படியே கொள்ளை கொண்டது.
முகத்தில் சூடு பரவவும் கைகளால் அழுந்த துடைத்தபடி, “ஸோ... என்னோட சீனியர் ஆஃபீசர் வீட்டுலதான் தங்கியிருக்கீங்க! அப்படின்னா உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்ன்னு சொல்லுங்க” என அவள் பவ்வியமாகச் சொல்ல, “ஹேய்... உனக்குதான் அவன் சீனியர் ஆஃபீசர், எனகில்ல! உனக்கு ஏதாவது கெடுபிடி கொடுக்கறான்னா சொல்லு, அவனை ஒரு கை பார்க்கறேன்” என்று பட்டென அவன் கொடுத்த பதிலில் கலகலவென சிரித்தவள், “அவர் உங்க ப்ரெண்டா? நான் என்னவோ நீங்க அவரோட மச்சான்னு கேள்விபட்டேன்” என உளறிவிட, “யார் சொன்னாங்க?” எனக் கேட்டான் தீவிரமாக.
தன் தவறை என்னை நாக்கை கடித்தவள், முந்தைய தினம் செக்யூரிட்டி சொன்னதை மட்டும் சொல்ல, ‘ஸோ மேடம் நம்மள பத்தி என்கொயரி பண்ணியிருக்காங்க!’ எனக் குதூகலித்தவன், “நான் அவன மாமான்னு கூப்பிடுவேன், அவன் மச்சான்னுவான். அதை கவனிச்சிட்டு அந்த ஆளு அப்படி சொல்லியிருப்பாரு’ என தெளிவு படுத்தியவன், “அவன் என்னோட காலேஜ் ஃப்ரெண்ட். நான் இங்க ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணப் போறேன். ஸோ, அது சம்பந்தமா இங்க சில நாள் தங்க வேண்டி இருக்கு! இவனும் ரொம்ப நாளா என்னை இங்க கூட்டுட்டு இருக்கனா! அதான்” என்றான் அவள் மேலும் கேள்வி கேட்க இடம் கொடுக்காமல்.
“ஓகே... கிருஷ்ணா! நான் போய் ரெடி ஆகணும், கிளம்பறேன், அப்பறம் ப்ரீ டைம் கிடைக்கும்போது லீஷரா மீட் பண்ணலாம்... ஓகே” என அவள் எழுந்து நிற்க, “யா ஸ்யூர்” என்றபடி மனமே இல்லாமல் அங்கிருந்து அகன்றான் கிருஷ்ணா.
வீடு திரும்பிய பின் குளித்துச் சமைத்து அலுவலகம் கிளம்பிப்போன வர்ஷினி அவளது அன்றாடப் பணிகளுக்குள் மூழ்கிப் போனாள். கடிதமும் டார்க் சாக்கலட்டும் பின்னுக்கே போய்விட்டது. வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு குளித்து இரவு உடைக்கு மாறியவள் ஃகாபியை கலந்து எடுத்துக்கொண்டு வந்து பால்கனியில் போடப்பட்டிருக்கும் கூடை ஊஞ்சலில் உட்கார்ந்தாள்.
முதலில் சித்ராவின் எண்ணுக்கு அழைத்தவள் அவருடனும் வரதனிடமும் சுருக்கமாகப் பேசி முடித்து அழைப்பைத் துண்டித்தாள். பின் வீடியோ கால் மூலம் ரஞ்சனிக்கு அழைக்க, “வரூ குட்டிம்மா... எப்படி இருக்க” என்றபடி முதலில் தன முகத்தைக் காண்பித்தாள் சக்தி.
“நான் நல்லா இருக்கேன் சக்தி குட்டிம்மா” என அவள் கொஞ்சலாக பதில் கொடுக்க, அடுத்து சக்தியின் கன்னத்துடன் தன் கன்னத்தை உரசியபடி திரையில் வந்து ஒட்டிக்கொண்டாள் ஸ்ரீ. அடுத்து இதே போல ஷிவா.
சில நிமிடங்கள் அவர்களுக்கே உரித்தான ஒரு சுவர்க்கத்தில் நால்வரும் மிதக்க, “ஏய் நீங்க உங்க வரூ கூட கொஞ்சி குலாவினது போதும்டி, கொஞ்சம் அடங்குங்க. குடுங்கடி போன” என ரஞ்சனி அதைப் பிடுங்க, “ஏய் உனக்கு ஏன் இவ்வளவு பொறாமை” என அவளை வாரினாள் வர்ஷினி.
அதன் பின் அன்றைய சமையல், மகள்கள் மூவருடன் சேர்த்து தனக்கும் தங்கைக்கும் ஒரே போன்ற டிஸயனில் ரஞ்சனி ஆன்லைனில் வாங்கிய உடை எனப் பேச்சு அங்கும் இங்கும் சுற்ற, “ஆங்... ரஞ்சு நான் இன்னைக்கு உன் மச்சினனை இங்க பார்த்தேன்” என்றாள் வர்ஷிணி.
வியப்பு மேலிட, “அப்படியா?” என ரஞ்சனி கேட்கவும் ஏனோ அதில் ஒருவித செயற்கைத் தனம் ஒளிந்திருப்பதுபோல் போல் தோன்ற, “ஏன் அவர் இங்க வந்திருக்கறது தெரியாதா உனக்கு?” எனக்கேட்டாள் வர்ஷிணி.
“இல்லடி கேரலான்னுதான் சொன்னாரு, ஆனா அங்கதான் வந்திருக்காருன்னு தெரியாது” என மழுப்பியவள், “எங்க மீட் பண்ண” எனக்கேட்டாள் ரஞ்சனி ஒருவித தடுமாற்றத்துடன்.
“இங்க எங்க குவாட்ரஸ் பார்க்ல வெச்சுதான்” என அவளுக்கு பதில் கொடுத்தவள், “இங்க எதுக்காக வந்திருக்கார்ன்னு உனக்கு எதாவது தெரியுமா” என அவள் தோண்டித் துருவ, “ஆங்... தோ வரேன் அத்தை” எனக் குரல் கொடுத்தவள், “அத்தை கூப்பிடறாங்க வர்ஷிணி... நான் அப்பறம் பேசறேன்” என பட்டென அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.
உள்ளுக்குள்ளே ஏதோ நெருடியது வர்ஷிணிக்கு.
***
அடுத்த இரண்டு நாட்களும் நடைப்பயிற்சியின் போது வர்ஷிணியுடன் இணைந்துகொண்டான் கிருஷ்ணா. அரசியல் சினிமா என பொதுவாகப் பேசியபடி நடை போட அது ஒருவித குதூகலத்தைக் கொடுத்தது அவளுக்கு. வெகு இயல்பாக அவன் அவளது கைப்பேசி எண்ணைக் கேட்கவும் கொஞ்சமும் தயங்காமல் அதைப் பகிர்ந்துவிட்டாள். உடனே அதை பதிவு செய்தவன் தனது எண்ணை அவளது வாட்ஸ் ஆப்புக்கு அனுப்பினான்.
அதன் பின்னனான அன்றைய நாள் முழுவதுமே ஒரு உற்சாகத்துடனேயே கழிந்தது அவளுக்கு.
அலுவலகம் சென்று மாலை வீடு திரும்பியதும் அவளது அன்றாட நடைமுறைப் படி ஒரு கையில் காபி குவளையும் மறு கையில் கைப்பேசியுமாகக் கூடை ஊஞ்சலில் வந்து அவள் உட்கார்ந்த நொடி ‘ஹாய்’ என ஒரு வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி கிருஷ்ணாவின் எண்ணிலிருந்து வந்து விழச் சில்லென்ற உணர்வு எழுந்தது.
அவன் அருகில் எங்கோதான் இருக்கிறானோ என்கிற எதிர்பார்ப்புடன் வெளிப்புறமாகப் பார்வையைப் படரவிட்டு, ‘ஹாய்’ என்ற பதிலைத் தட்டிவிட்டாள்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவன் தென்படாமல் போக அவளது முகத்தில் ஏமாற்றம் பரவிய நொடி, “வீட்டுக்கு வந்துட்டியா?” என்ற கேள்வி வந்து விழுந்தது.
‘அப்படினா அவன் இங்க இல்ல!’ என்ற முடிவுக்கு வந்தவளாக, “ம்ம் ஜஸ்ட் இப்பதான்’ என அவள் பதில் கொடுக்க, அந்த உரையாடல் நீண்டுகொண்டே போனது.
அவனுடன் சேட் செய்துகொண்டே இரவு உணவைத் தயாரித்து முடித்தவள், தட்டில் போட்டு அதை அப்படியே படம் பிடித்து அனுப்ப, கையில் போர்க் மற்றும் ஸ்பூனுடன் நாக்கை சப்பு கொட்டும் ஈமோஜியின் ஸ்டிக்கருடன் ‘யம்மி... எனக்கு...’ எனக்கு என்று அவன் கேட்டு வைக்க, ஒரு நொடி கூட யோசனையில்லாமல் ‘இங்க வாங்க, ஷேர் பண்ணிக்கலாம்’ என பதில் அனுப்பிவிட்டு பின் தன் தவறை உணர்ந்து, ‘லூசு வரூ, அறிவிருக்கா உனக்கு?’ எனத் தலையில் கொட்டிக்கொண்டாள்.
உடனே பதில் வேறு வராமல் போக, எங்கே வந்துவிடுவானோ என மனம் படபடவென அடித்துக்கொண்டது.
நல்லவேளையாக, ‘சாரி இன்னைக்கு முடியாது, பிசி இன் பேக்கிங். நாளைக்கு நான் இங்க இருந்து கிளம்பறேன். இந்த வீக் எண்ட் மறுபடியும் வருவேன், அப்ப நிச்சயம் உன் கையால சாப்பிட வரேன்’ என பதில் வர, கொஞ்சம் ஆசுவாசமும் கொஞ்சம் கலக்கமுமாக வரையறுக்க முடியாத ஒரு மனநிலைக்குள் போனாள் வர்ஷினி.
ஆசுவாசம் அவன் இப்பொழுது வரவில்லை என்று சொன்னதற்காக!
கலக்கம் அடுத்த விடியலில் அவனது முகம் காண முடியாது என்பதால்!
தட்டை எடுத்துக்கொண்டு வந்து தொலைக்காட்சியின் முன் உட்கார, உணவு தொடைக்குள் இறங்க மறுத்தது.
அதே நேரம் அவள் வீட்டின் வாயில் வரை வந்துவிட்ட கிருஷ்ணா சில நொடிகள் நின்று பின் ஒரு தடுமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பச் சென்றதை அறியாமல் போனாள் அமிர்தவர்ஷிணி!
Episode Song