top of page

Aalangatti Mazhai - 7

Updated: May 18

௭ - அரண்ட பருவம்


(தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழையை அரண்ட பருவம் என்பார்கள்.)



கதவைக் கொஞ்சமாகத் திறந்து, கிருஷ்ணா உள்ளே நுழைய இயலாத

வண்ணம் வழியை மறித்து நின்ற வர்ஷிணி, “ஹலோ, என்ன திமிரா” என்றாள்.


தூக்கிப்போட்ட கொண்டையுடன், தொளதொளவென கோர்ட்ஸ் பேண்ட் சட்டை அணிந்து, ஒல்லி என்றும் இல்லாமல், குண்டு என்றும் சொல்லமுடியாமல் சற்று பூசினார்போன்ற உடல்வாகுடன் எதிரே நின்றவளின் முகத்தைப் பார்த்ததும் அவனுக்கு பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது.


வரதன் அறைந்த அறையில் கன்னம் பழுதிருக்க, விரல்களின் தடத்தைச் சீக்கிரம் மறைய வைக்கிறேன் பேர்வழியே என இரண்டு நாட்களாக மஞ்சளை அரைத்து அப்பி வைத்திருந்தார் சித்ரா.


மூத்தவளின் நிச்சயத்துக்கு வருவோர் போவோருக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமே என்கிற ஆதங்கம்தான் அவருக்கு.


அது எப்படியோ முகம் முழுவதும் பரவிக் காய்ந்து கழுவிய பின்பு கூட நிறம் மங்காமல், மஞ்சள் காப்பில் பரிமளிக்கும் அம்மனைப் போன்று மங்களகரமாகக் காட்சி அளித்தாள் அவள்.


சிரிப்பை அடக்கமுடியாமல் திணறியபடி, “நீதான வர்ஷிணி, அப்ப நீதான் வேணும்" என்றான் இடக்காக.


ஓர் அலட்சிய பார்வையுடன் பின்னால் ஓர் எட்டு வைத்தவள் பட்டெனக் கதவை மூட, "ஹேய்... ஸ்ரீதருக்கு வாங்கின ரிங்கையும் பிரேஸ்லட்டையும் மறந்து வெச்சிட்டு வந்துட்டாங்களாம். இப்ப பங்க்ஷன்ல அதை அவனுக்கு போடணும். அது உங்க அம்மா ரூம்ல இருக்கற பீரோல இருக்காம். அதை எடுத்துக் கொடுக்க நீ வேணும். அதைத்தான் சொன்னேன்" என்றான் கதவைத் தள்ளிப் பிடித்தவாறு.


ஒரு வன்ம புன்னகை முகத்தில் படர அவள் பிடியைத் தளர்த்தவும், கதவு படக்கென்று திறந்துகொள்ள, சற்று தடுமாறி தன்னை சமாளித்துக் கொண்டவன் பற்களைக் கடித்தபடி, "அராத்து" என்றான். அவன் இகழ்ந்தது உண்மையில் அவளுக்கு ஒரு வெற்றி பெருமிதத்தைத்தான் கொடுத்தது.


சுவற்றில் மாட்டப் பட்டிருந்த தொலைக்காட்சி அலறியபடி இருக்க, அனிச்சையாக அவனது பார்வை அங்கே வரவேற்பறையின் பக்கம் சென்றது. விரித்துவைக்கப் பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தின் தாள்கள் படபடத்துக் கொண்டிருக்க, அதைச்சுற்றி பருமன் பருமனான புத்தகங்கள் சில இரைந்து கிடக்க அவனது நெற்றி சுருங்கியது.


வீட்டில் தனிமையில் இருக்கும்போது, யாரோ ஒரு முகம் தெரியாதவன் வந்து நகையைக் கொடு என்று கேட்டால் என்னவென்று நினைப்பாள். அவன் பார்வையைப் பொருட்படுத்தாமல் அப்படியே கதவை மெல்லப் பட்டும் படாமல் மூடி விட்டுப் போய் பீரோவைத் திறந்து பார்க்க, ஸ்ரீதருக்குப் போடுவதற்காக அவர்கள் வாங்கியிருந்த நகைகள் உண்மையில் அங்கேதான் இருந்தன.


ஆனாலும் ஒரு புதியவனிடம் அவற்றைக் கொடுத்தனுப்பவா முடியும்? வீட்டு லேண்ட்லைன் போனிலிருந்து அவளுடைய அம்மா, அப்பா, ரஞ்சனி ஏன் அவளுடைய அத்தை என ஒவ்வொருவருக்கும் அழைக்க, எந்த அழைப்பும் ஏற்கப்படவில்லை.


அதற்குள் பொறுமை இழந்து அவன் படபடவென கதவைத் தட்ட, வேறு வழி இல்லாமல் வெளியில் வந்தவள், "நீங்க யாருங்க, உங்களை நம்பி எப்படி நகையைக் கொடுக்க முடியும்" என்று கேட்க, "நோ இஷ்யூஸ், நீயே எடுத்துட்டு வா. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்றான் இலகுவாக.


"வாட், அதெல்லாம் என்னால வர முடியாது" என அவள் பதற, "அப்படினா நம்பி நகையை என் கிட்ட கொடு" என்றான் விடாக்கண்டனாக.


'நமக்குன்னு வந்து சேருது பாரு! இந்த பங்க்ஷன்ல கலந்துக்க வேண்டாம்னு பார்த்தா, இப்படியெல்லாமா நடக்கும்? ச்சை... இப்படியா நகையை மறந்து தொலைச்சிட்டு போவாங்க? இத வாங்கிட்டு போக நம்ம வீட்டு ஆளுங்க ஒருத்தர் கூடவா இல்ல? ஃபோன கூட எடுத்துத் தொலைக்க மாட்டேங்கறாங்க' எனப் பலவாறாகப் புலம்பியபடி, உள்ளே சென்றவள் அவற்றை எடுத்துக்கொண்டு வர, "ஐய, இப்படியேவா வரபோற?" என்றான் ஒரு மாதிரியான குரலில்.


"ஏன்... என்ன இப்ப? ஜஸ்ட் இதை கொடுத்துட்டு திரும்ப வந்துடப் போறேன்" எனப் பதில்கொடுக்க, அவன் முகம் அஷ்ட கோணலாக மாறியது.


"ஹலோ, இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்றேன். அங்க வரது வராதது உன் இஷ்டம். ஆனா வந்தா அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி வரணும். இல்லனா நகையை என் கிட்டக் கொடு, நானே எடுத்துட்டு போறேன்" என அவன் பிடிவாதமாகச் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டவள், அப்படினா இங்கயே வெயிட் பண்ணுங்க, நான் ரெடி ஆகி வரேன் என்று உள்ளே சென்றாள்.


"உனக்கு ஜஸ்ட் டென் மினிட்ஸ்தான் டைம். இல்லனா நானே எடுத்து போறேன்" என்று அவன் குரல் கொடுக்க, அனைவரையும், குறிப்பாக வாயிலில் அவளுக்காகக் காத்திருப்பவனை மனதிற்குள் அர்ச்சித்தபடியே நன்றாக முகம் கழுவி, அன்று ரஞ்சனி வாங்கிவந்த உடையை அணிந்து, கூந்தலை முடிந்து, லேசான ஒப்பனையுடன் தயாராகி அந்த நகைகள் அடங்கிய சிறு பையை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள் வர்ஷிணி.


குறைந்தபட்ச நாகரிகம் கருதிக் கூட அவனை வீட்டிற்குள் அழைக்கவில்லை அவள். அதே போன்று, 'யாருங்க நீங்க?' என் அவள் இரண்டு முறை கேட்டிருந்தும் அவன் ஒரு முறை கூட பதில்சொல்லவில்லை என்பதையும் அவள் கருத்தில் கொள்ளவேயில்லை.


அவர்கள் வீட்டிலிருந்து நடந்தே செல்லும் தூரம்தான் அந்த மினி ஹால். ஆட்டோ கூட அதிகப்படி. அதே நினைப்பில் அவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு காம்பவுண்ட் கேட்டை மூடிவிட்டு வெளியில் வந்தாள்.


கொஞ்சம் தள்ளி வீதியில் நிறுத்திவைத்திருந்த காரை நோக்கி அவன் போக, அவள் சற்று தயங்கி நிற்கவும், அவன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்க, “இல்ல நீங்க போங்க நான் நடந்தே வரேன்” என்றாள் லேசான கலவரத்துடன்.


"சரிதான், அதுக்குள்ள பங்க்ஷனே முடிஞ்சி போயிடும். அம்மா தாயே நான் ஒண்ணும் உன்னை கடத்திட்டு போகமாட்டேன். தைரியமா வந்து உட்கார்" எனக் கிண்டல் தொனிக்கச் சொல்லிவிட்டு அவன் காரை கிளப்ப, ‘போடா டேய்’ என்கிற பாவத்தில் ஒரு அலட்சிய பார்வையை வீசிவிட்டு, சுற்றிவந்து அவனுக்கு அருகில் உட்கார்ந்தாள்.


“எனக்கு ஒரு டவுட்டு” எனத் தீவிர பாவனையில் அவன் இழுக்கவும், அவள் கேள்வியாக அவனைப் பார்க்க, “இல்ல டீவி அந்த கத்து கத்திட்டு இருக்கு, அந்த நாய்ஸ்ல ஒரு சென்டன்ஸ் கூட உருப்படியா படிக்க முடியாது. எக்ஸாமுக்கு படிக்கணும்னு சாக்கு சொல்லி பங்க்ஷனுக்கு வராம ஏமாத்திட்டு இங்க கார்டூன் பார்த்துட்டு உட்கார்ந்திருக்க? உங்க வீட்டுல உன்னை மொத்தமா தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா?” எனக்கேட்டான் மிகுந்த எரிச்சலுடன்.


அன்று அவனுடைய அம்மா கேட்டதற்கு, ‘எதோ பாஸ் செஞ்சிடுவேன்’ என அவள் சொன்ன பதில் அவர்களுடைய குடும்பத்துக்குள் மிகமிக பிரபலம் என்பதால் அவளைப் பற்றி யாருக்கும் ஒரு நல்ல அபிப்ராயம் இல்லை. அதே பிம்பம்தான் இவனுக்கும். அத்தோடில்லாமல் சொந்த அக்காவின் நிச்சயத்துக்குக் கூட வராமல் அவள் வீட்டில் உட்கார்ந்து கார்டூன் பார்த்துக்கொண்டிருக்க, அவள் மீதான அவனது பார்வை இன்னும் மோசமாகிப் போனது. அதெல்லாம் இவளுக்குத்தான் தெரியாதே!


அதில் அவளுடைய முகம் ஒரு மாதிரியாக மாறிப்போனது. அந்த விசேஷத்தில் கலந்துகொள்ளாமல் தன் எதிர்ப்பை பரிபூரணமாக அவள் காண்பித்துக் கொண்டிருக்க, இவள் பரீட்சைக்கு படிப்பதால்தான் வரவில்லை என்பது போல எதையோ சொல்லிச் சமாளித்து, இப்படி ஏதோ ஒரு விதத்தில் அவளைப் பணிய வைத்து அங்கே வரவழைத்துவிட்டார்கள் என்பதாக அவளது மனதுக்குள் நெருட, உள்ளுக்குள்ளே குமுறியது.


யாரோ முன் பின் தெரியாதவனெல்லாம் தன்னை கேள்வி கேட்கிறானே என்கிற ஆத்திரம் பொங்க, அதற்கு முழு காரணமான அப்பா அம்மாவின் மேல் கண்மண் தெரியாத ஒரு கோபம் துளிர்த்தது.


இன்னும் கொஞ்சம் பக்குவப்பட வயதிலிருந்தால் அவரவர் நியாயம் அவரவருக்கு என்பதாவது அவளுக்குப் புரிந்திருக்குமோ என்னவோ. நியாய தர்மம் யோசிக்கும் மனம் எதார்த்தத்தை உணரவில்லை.


காழ்ப்புணர்ச்சி, கழிவிரக்கம் இரண்டும் போட்டிப்போட அவன் பக்கமும் திரும்பவில்லை. அவன் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.


மடியில் வைத்திருந்த பையையே வெறித்தபடி அவள் தலை கவிழ்த்து உட்கார்ந்திருந்தாலும் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அவன் வாகனத்தை ஒட்டியதை மட்டும் உணரமுடிந்தது.


விழா மண்டபத்தின் வாயிலில் வாகனத்தை நிறுத்தியவன் தொண்டையை செருமிக்கொண்டு, நீ உள்ள போ, நான் வண்டிய பார்க் பண்ணிட்டு வரேன்” என்று சொல்ல, மௌனமாக இறங்கி உள்ளே நுழைந்து மின்தூக்கி மூலம் விழா நடக்கும் இடத்திற்கு வந்தாள் வர்ஷிணி.


இரண்டு குடும்பங்களிலிருந்தும் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருக்க, அதிக கூட்டமில்லாமல் அமைதியாக இருந்தது அந்த விழாக்கூடம்.


உள்ளே நுழைந்ததும் அவள் முதலில் பார்த்தது, கற்கண்டு, பூ, பன்னீர் சொம்பு அனைத்தும் அடுக்கப்பட்டிருந்த வரவேற்பு மேசைக்கு அருகில் நின்ற அவளுடைய அத்தையைத்தான். “அம்மா தாயே, எங்க நீ நிஜமாவே வராம இருந்துடிவியோன்னு கவலை பட்டுட்டு இருந்தேன். மனசு இறங்கி ஒரு வழியா வந்து சேர்ந்தியே!” என அவர் வியப்பு மேலிடச் சொல்லவும், அம்மா நகை எடுத்து வர மறந்த விஷயத்தை அவர் அறிந்திருக்கவில்லை என்பது புரிந்தது.


அவளைப் பார்த்துவிட்டு அங்கே ஓடி வந்த சித்ராவும் இதே போல ஒரு வியந்த பாவத்தைக் காண்பிக்க ஒன்றுமே புரியவில்லை வர்ஷிணிக்கு. நான் “போன் பண்ணா ஏன் ஒருத்தர் கூட எடுக்கல” எனக் கடுப்புடன் கேட்டாள்.


“போன் பண்ணியா, எப்ப?” என்று கேட்டார் சித்ரா. அவருடைய கையிலிருந்த கைப்பேசியைப் பிடுங்கிப் பார்க்க அது சைலன்டில் போடப்பட்டிருக்க, “நிச்சயதார்த்த ப்ரேஸ்லெட் மோதரத்த வேணும்னேதான வீட்டிலேயே வச்சுட்டு வந்தீங்க?” என அவள் எரிச்சலுடன் கேட்க, “என்னது, இந்த பொண்ணு பிரேஸ்லெட் மோதிரத்தை வீட்டிலேயே வெச்சிட்டு வந்துடுச்சா?” என அதிர்ந்தார் சித்ரா.


“என்னம்மா ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கற?” என வர்ஷிணி உள்ளே போன குரலில் கேட்க, “நிஜமாதான்டீ, அக்காதான் எடுத்துட்டு வரேன்னு சொல்லியிருந்தா. மறந்து வச்சிட்டு வந்துட்டா போலிருக்கு. அது கூட எனக்குத் தெரியாது” என பதில் கொடுத்தார்.


“என்னடி உனக்கு போன் பண்ணி எடுத்துட்டு வர சொன்னாளா என்ன?” என வனஜா கேட்க, ‘அதான, இந்த ரஞ்சனி போன் பண்ணி எடுத்துட்டு வர சொல்லி இருந்திருக்கலாமே!’ என்ற கேள்வி எழுந்தது. குழப்பமாக இருவரையும் பார்த்தவள், “அப்ப எடுத்துட்டு வர சொல்லி வீட்டுக்கு ஒருத்தர் வந்தாரே அவர் யாரு?” என்று கேட்டாள்.


“என்னடி சொல்ற, யாருடி அது வீடு வரைக்கும் வந்தவங்க?” என அதிர்ச்சியுற்றார் சித்ரா. “கார்ல பிக் அப் பண்ணான் மா” என்றபடி அவன் உள்ளே வந்து விட்டானா என அவள் விழிகளால் தேட, சரியாக உள்ளே நுழைந்தான் கிருஷ்ணா.


“அங்க வருதே அந்த பனைமரம் தான்” என அவள் கிசுகிசுக்க, அங்கே பார்த்த நொடி, ஒரு ஆசுவாச பெருமூச்சு எழ, “அடடே நம்ம கிருஷ்ணா! ரொம்ப பொறுப்பான புள்ள” என அவனுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தார் வனஜா.


‘கிருஷ்ணாவா! இந்த பேர எங்கேயோ கேட்டிருக்கிறோமே’ என்ற கேள்வி மனதில் ஓட அவள் யோசிக்கவும், அன்று பெண் பார்க்க வந்த தினம் அவனைப் பற்றி ஸ்ரீதரின் அம்மா கொஞ்சம் மிகையாகப் பெருமை பீற்றிக் கொண்டிருந்தது நினைவில் வர, கூடவே ‘வல்லவரு நல்லவரு’ கவுண்டமணி காமெடியும் நினைவுக்கு வர பக் என்று சிரிப்பு வந்தது வர்ஷிணிக்கு


அடக்காமல் அவள் சிரித்து விட, சரியாக அதே நேரம் அங்கே வந்த கிருஷ்ணாவின் முகமே மாறிவிட்டது. பெரியவர்கள் இருவரும் ஒரு சேர அவளை முறைக்க, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள் கையில் வைத்திருந்த பையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு, “வந்த வேலை முடிஞ்சுது. நான் கிளம்புறேன்” என்று திரும்ப, “ஹேய் வர்ஷிணி, வா... வா... ரஞ்சனி உன்னை அர்ஜெண்டா கூப்பிடுறா” என்றபடி அவளுடைய மாமாவின் பெண் சாரா அவளை நோக்கி ஓடி வந்தாள்.


அதோடு நிற்காமல் அவளுடைய கையைப் பிடித்து தரதரவென அவளை இழுத்துச் செல்ல, வர்ஷிணியால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவளைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துவைத்தான் கிருஷ்ணா. அவனைக் கண்களால் எரித்தவாறே சாராவுடன் சென்றாள் வர்ஷிணி.


அவள் உள்ளே சென்ற நொடி மணப்பெண்ணை மேடைக்கு அழைத்துவரும்படி வனஜா வந்து கூப்பிட, அதன் பின் தன்னைத் தாண்டி அங்கே இங்கே அவளை நகர விடவில்லை ரஞ்சனி. மேடையில் கூட பக்கத்திலேயே அவளை நிறுத்திக் கொண்டாள்.


கடகடவென சடங்குகள் தொடங்க ஒரு சிறு குறை கூட இல்லாமல் நடந்து முடிந்தது ரஞ்சனியின் நிச்சயதார்த்த வைபவம்.


என்ன ஸ்ரீதரின் அம்மா தனலட்சுமியும் அவனுடைய அண்ணி சசிகலாவும் செய்த பந்தாதான் கொஞ்சம் அதிகப்படி. ஆம், அந்த இரண்டு பெண்மணிகளின் பெயரும் அன்றுதான் வர்ஷிணியின் மனதிலேயே பதிந்தது.


இதில் என்ன கொடுமை என்றால், அன்றைய விழா நாயகன் ஸ்ரீதரா இல்லை கிருஷ்ணாவா என அனைவரும் குழம்பிப் போகும் அளவுக்கு அவனைத்தான் கொண்டாடினர் அவர்கள் பக்க உறவினர் அனைவரும்.


அதுவும் குறிப்பாக சசிகலா ‘காபி சாப்பிடு கிருஷ்’ ‘ஜூஸ் சாப்பிடு கிருஷ்’ ‘பாவம் இங்க வந்ததுல இருந்து உனக்கு ரெஸ்ட்டே இல்ல, ஒரு இடமா உட்காரு’ என அவனை விழுந்து விழுந்து கவனித்த விதத்தில், பார்க்கப் பார்க்க ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும் கூடவே ஏதோ உதைத்தது வர்ஷிணிக்கு. அதற்கான விடை ரஞ்சனியில் திருமணத்தின்போதுதான் அவளுக்குத் தெரியவந்தது.


***

Episode Song









Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page