காதல் அட்டாக் – 11
அப்படியே உறங்கினான் உறங்கினான் உறங்கிக்கொண்டே இருந்தான் விஸ்வா, அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அவனுடைய அப்பா லண்டனிலிருந்து அங்கே வந்து சேரும் வரையில்.
அதாவது அவனை அப்படி ஒரு உரக்க நிலையிலேயே வைத்திருந்தாள் மேனகா என்றுதான் சொல்லவேண்டும்.
அவனை எழுப்பி சரியான நேரத்துக்கு உணவை மட்டும் கொடுத்துவிடுவாள்.
ஒவ்வொரு முறை அவனுக்கு உணவளிக்கும் சமயத்தில், பாதி உறக்கத்திலேயே அவன் சாப்பிடுவதை பார்க்கும் பொழுதும், அவனுடைய அடர்ந்த நீளமான தாடி அவளை கடுப்பேற்ற, 'போடா நீயும் உன் சாமியார் வேஷமும்" என்றுதான் தோன்றும் அவளுக்கு.
ஆசிரமத்திலிருந்து வந்த அடுத்த நாள் விடியலிலேயே, அவனை அவனுடைய அப்பாவின் பீஏ நேஹாவிடம் ஒப்படைத்துவிட்டு, தொல்லைநாயகியை கையுடன் அழைத்துக்கொண்டுபோய் அவளுடைய வீட்டின் வாயிலில் இறக்கிவிட்டுவிட்டு, அந்த காரை ஓட்டிப் போய் ஆசிரமத்தின் அருகிலேயே நிறுத்தியவள், பேருந்துமூலம் அங்கே திரும்ப வந்துவிட்டாள்.
***
ஆசிரமத்தில்தான் எல்லோரும் தன் தலையைப் பிய்த்துக்கொண்டிருந்தனர். குறிப்பாக நிர்மலானந்தா. ஒரே இரவுக்குள் அவருடைய சாது வேஷம் கலைந்துபோனது என்பதுதான் உண்மை.
விஸ்வா தப்பித்துப் போனதில் மொத்தமாக வெறி பிடித்துப் போயிருந்தது அவருக்கு. ஆசிரம நிர்வாகிகள் சிஷ்யர்கள் என அனைவரையும் குதறி எடுத்துவிட்டார்.
கிட்டத்தட்ட அவருடைய இருபத்தி இரண்டு வருடத் தவத்திற்குக் கிடைத்த வரம்தான் விஷ்வா. அவனுடைய அப்பா செய்த பாவத்தின் பலனாகத்தான் உலக இன்பங்களைத் துறந்து இந்தத் துறவற வாழ்க்கை அவனை பிடித்துக் கொண்டது. பிடித்துக் கொண்டது என்று சொல்வதைவிட அவனை அதற்குள் பிடித்து வைத்திருந்தார் முன்நாள் நிர்மல் இந்நாள் நிர்மலானந்தா.
அன்றைய காலகட்டத்தில் நிர்மல் ஒரு விஞ்ஞானி. அதாவது ஒரு மரபணு ஆராய்ச்சியாளர்.
அவர் வாழ்ந்த சமூகத்தில் அவர்தான் முதல் பட்டதாரி. அவரைத்தான் திருமணம் செய்வேன் என ஒற்றைக்காலில் நின்ற அவருடைய மாமன் மகளை மணந்து கொள்ள மனமில்லாமல் கல்லூரியில் உடன் படித்த சகுந்தலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நிர்மல். அவருக்குப் படிப்பு தண்ணீர் பட்ட பாடாக இருக்க மேலே மேலே படிக்க உதவித் தொகையும் கிடைக்கவும் தன் கல்வித்தகுதியை வளர்த்துக் கொண்டே போனார் நிர்மல்.
அதன் காரணமாக சகுந்தலா வேலைக்கு போய்தான் இருவருக்குமாகச் சம்பாதிக்கும் சூழ்நிலை உண்டாக, அதுவே ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் கருத்துவேறுபாடு ஏற்படக் காரணமாகிப்போனது.
வயது முதிர்ச்சியும் மன முதிர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் அவர்கள் செய்து கொண்ட அவசர திருமணம் அவசரமாகவே முடிந்து போனது.
நிர்மல் மேல்படிப்பு ஆராய்ச்சி படிப்பு என முழுவதுமாக அதில் மூழ்கிப் போனார்.
நாட்கள் செல்ல செல்ல, அவருடைய கனவு லட்சியம் ஆசை வெறி என அனைத்துமே அவர் செய்துகொண்டிருந்த மரபணு ஆராய்ச்சியாக மாறிப் போக சகுந்தலா என்ற பெண்ணே அவர் நினைவில் இல்லை என்ற அளவுக்கு அந்த திருமணத்தையே மறந்து போனார் அவர்.
அவர் எண்ணம் செயல் என அனைத்துமாக அவர் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சி மட்டுமே இருந்தது.
அப்பொழுது அவர் செய்துகொண்டிருந்த ஆராய்ச்சியை அடுத்த படி நிலைக்கு கொண்டு போக அவருக்கு ஒரு ஸ்பான்சர் தேவைப்பட, அப்பொழுதுதான் தொடங்கப்பட்டிருந்த ’விஸ் ஜெனிட்டிகல் ரிசர்ச் லேப்’ அவருடைய அறிவையும் புத்திசாலித்தனத்தையும் பார்த்து அவரை தத்தெடுத்துக் கொண்டது.
அவருக்குக் கீழே பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்களை நியமித்து அவருக்கென்று ஒரு தனிப்பட்ட குழுவை உருவாக்கி, அவரது கண்டுபிடிப்புகள் மொத்த செலவையும் ஏற்றுக்கொண்டது அந்த நிறுவனம்.
அதன் பின் கிட்டத்தட்ட ஐந்து வருட காலம் போராடி, விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட ஸ்டெம் செல்களை கொண்டு சோதனை கூடங்களில் அவற்றின் மாமிசத்தை செயற்கையாக உருவாக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்தார் நிர்மல்.
அதன் மூலம் சந்திரமௌலியின் மாமிச ஏற்றுமதி நிறுவனம் மிகப் பெரிய லாபத்தைச் சம்பாதிக்க இயலும் என்ற நிலை உருவாக, அந்த கண்டுபிடிப்பின் மொத்த உரிமத்தையும் தன் பெயருக்கே கொடுக்கும்படி நிர்மலை நிர்பந்தித்தார் சந்திரமௌலி.
அதற்கு நிர்மல் மறுக்கவும்,அதன் பிறகுதான் தொடங்கியது அவருக்கான உண்மையான சோதனை காலம்.
எவ்வளவு அறிவும் புத்திசாலித்தனமும் இருந்தாலும் கூட, பண பலமும் அதிகார பலமும், அநியாயத்திற்குத் துணை போய் அதற்கு ஜால்ரா தட்ட ஒரு கூட்டமும் இருக்கும் பொழுது, ஒரு தனி நபரின் திறமை சற்று அமிழ்ந்துதான் போகிறது.
அதற்கு விதிவிலக்கில்லாமல் சந்திரமௌலிக்கு முன் தனது அறிவுசார் சொத்துரிமை அனைத்தையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் நிர்மல். அதாவது அவருடைய கண்டுபிடிப்பை அப்படியே பறித்துக்கொண்டார் சந்திரமௌலி என்றுதான் சொல்ல வேண்டும்.
நிர்மலுடைய குழுவிலிருந்த ஒரு பெண்ணே அவர் மீது பாலியல் புகார் கொடுக்க, பெண் என்ற காரணத்தால் சட்டமும் அவளுக்குச் சாதகமாகிப் போக, சில வருடம் சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டிய கொடுமைக்கு ஆளானார் நிர்மல்.
நீதி மன்றத்தில் அவர் தன் பக்க நியாயத்தை எடுத்துச்சொல்ல, அவை கொஞ்சம் கூட எடுபடவில்லை அங்கே. நீதிக்குத் தேவை சாட்சி. அப்படி ஒரு சாட்சியைத் தனி ஒருவராக, அதுவும் நீதிமன்ற காவலில் இருப்பவராதலால் அவரால் கொண்டு வர இயலவில்லை.
செயற்கை முறையில் மாமிசம் என அவர் சொன்ன உண்மை அங்கே கேலிக்குரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. சோடிக்கப்பட்ட ஆதாரத்துடன் அந்த பெண் சொன்ன பொய் உண்மையாகிப்போனது.
அவரது தன்மானத்திற்கு விழுந்த அடியில் துவண்டு போனவர், தன்னை நிரூபிக்க இயலாமல் உடைந்தே போனார் நிர்மல். தண்டனை காலம் முடிந்து திரும்ப வந்து பார்க்க அவருடைய அடையாளம் மொத்தமும் அழிக்கப்பட்டிருந்தன.
ஏற்கனவே வாடகை வீட்டில்தான் இருந்தார் அவர். இப்பொழுது அதுவும் இல்லாமல் போயிருந்தது. அவர் படித்து வாங்கிய சான்றிதழ்களெல்லாம் போன இடம் தெரியவில்லை. பிழைக்கவும் வழி தெரியவில்லை.
கையில் வைத்திருந்த சொற்ப பணத்துடன், இருந்த ஒரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடிபுகுந்தார் நிர்மல். அங்கே இருந்த ஆதி துலுக்கானத்தம்மன் கோயில்தான் அவருக்கு ஒரே புகலிடமாக இருந்தது.
அங்கே இருந்த வேப்ப மரத்தைச் சுற்றி ஒரு மேடை அமைக்கப்பட்டிருக்கும்,. தினமும் அதில் போய் உட்கார்ந்திருப்பார் அவர். அவர் அணிந்திருத்த பழுப்பாகிப் போன வெள்ளை உடையும், அவருடைய தாடியும், அவர் முகத்தில் ஒளிர்ந்த அறிவு களையும் அவருக்கு ஒரு தெய்வீக தோற்றத்தைக் கொடுக்க, ஏதோ சித்தர் என்கிற பார்வையில் அவரை பார்க்க ஆரம்பித்தனர் அந்த கோவிலுக்கு வந்துபோகும் பாமர மக்கள்.
தானாகப் போய் ஏமாற்றவேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை அவர். அவர்களாகவே தேடிவந்து தொடக்கத்தில் அவர் கையிலிருந்து குங்குமத்தை வாங்கி சென்ற மக்கள் அடுத்த நிலையாகக் காணிக்கை கொடுக்க ஆரம்பித்து தாங்களாகவே தங்களை ஏமாற்ற அவருக்கு ஒரு புதிய வழியை வகுத்துக் கொடுத்தனர்.
அப்பொழுதுதான் தன்னை வஞ்சித்த இந்த உலகத்தைப் பதிலுக்கு தானும் வஞ்சித்தால் என்ன என்ற கேள்வி உருவானது நிர்மலுக்கு. நிர்மல் நிர்மலானந்தாவாக மாற தொடங்கினார்!
அவர் சொன்ன அறிவியலை நம்பாத கூட்டம், தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அலங்காரமான பேச்சு சாதுரியத்துடன் அவர் சொன்ன ஆன்மிகத்தை நம்பியது.
தானே தன்னை கடவுள் என உருவாக்கப்படுத்திக்கொண்டார் நிர்மலானந்தா. அதையும் நம்பியது அந்த கூட்டம். சில்லறையில் தொடங்கி கோடிகளில் கொட்ட தொடங்கியது பணம்.
கை தட்டவும், ஜால்ரா தட்டவும், ஆடச் சொன்னால் ஆடவும் பாடச் சொன்னால் பாடவும் குதிக்கச் சொன்னால் குதிக்கவும் ஏன் சாகச் சொன்னால் அவருக்காக உயிரை விடவும் கூட ஒரு கூட்டம் உருவாகி இருந்தது.
அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அவருக்கு ஆசிரமங்கள் உருவாகிக்கொண்டே போனது. ஆனாலும் அவருடைய மனதுக்கு மட்டும் அமைதியே கிட்டவில்லை.
காரணம் சகுந்தலா! சிறை கொடுத்த தனிமை அவளை அடிக்கடி நினைக்க வைக்க, மனம் அவளுக்காக ஏங்க ஆரம்பித்திருந்தது. எங்குத் தேடியும் அவளைக் கண்டுபிடிக்கவே இயலவில்லை அவரால்.
அனைத்துமாக ஒன்று சேர்ந்து போக சந்திரமௌலியின்பால் தீராத வன்மம் மனதின் ஒரு மூலையில் செந்தணலாகக் கனன்றுகொண்டே இருந்தது.
பல வருடங்கள் கழித்து அவரை பழிவாங்க ஒரு சந்தர்ப்பமாக நிலர்மலானந்தா என்கிற நிர்மலிடம் வந்து வகையாகச் சிக்கினான் சந்திரமௌலியின் திரண்ட சொத்துக்களுக்கு ஏக போக வாரிசான அவருடைய ஒரே மகன் விஸ்வா.
அவனுடைய வயதிற்குத் தகுந்தபடி ஆட்டம் பாட்டம் கேளிக்கை கொண்டாட்டம் என இருந்தவன்தான் விஸ்வா. அதவும் பல தலைமுறைகளாகத் திரட்டி வைத்திருக்கும் செல்வம், வாழ்க்கையின் எல்லா வண்ண பக்கங்களையும் அவனுக்கு காண்பித்துக் கொடுத்தது.
துன்பம் கவலை என எதையுமே அறியாததாகத்தான் இருந்தான் அவன், வாழ்க்கையின் மற்றொரு இருண்ட பக்கத்தையும் காணும் வரை. அதாவது உடல்நலமும் மனநலமும் பதிக்கப்பட்டு அவனுடைய அம்மா படுக்கையில் விழும் வரை.
அப்பொழுது அவர் அவனுக்கு உணர்த்திய உண்மைதான் அவனை வேறு விதமான ஒரு தேடலுக்கு இட்டுச்சென்றது எனலாம். அந்த சமயத்தில்தான் ஒரு விமான பயணத்தில் அவனுக்கு அறிமுகமானார் நிர்மலானந்தா.
அவன் யார் என்று யாருமே சொல்லாமலேயே அவருக்குத் தெரிந்திருக்க, அவருடைய ரிஷிமூலத்தை அறியும் சாத்திய கூறு விஷ்வாவுக்கு மட்டுமல்ல, சந்ரமௌலிக்கே... ஏன் வேறு யாருக்குமே இல்லை என்ற காரணத்தை அவர் நன்றாகவே உணர்ந்திருக்க, அவனிடம் சில நிமிடங்கள் பேசியதிலேயே அவனுடைய தேடலைப் புரிந்துகொண்டவர், அந்த தேடலை தன் பழி உணர்ச்சிக்கு வாகாக பயன்படுத்திக்கொண்டார் நிர்மலானந்தா.
நம் மனம் அடையும் இன்பமும் சரி துன்பமும் சரி அவற்றின் காரிய கர்த்தா நாம் மட்டுமே. நம்மை நாமே விரும்பவும், நம்மை நாமே வெறுக்கவும், நம் மீது நாமே அதீத நம்பிக்கை வைக்கவும், தன்னம்பிக்கை இழந்து வாழ்க்கையின் விளிம்பு வரை ஓடி ஒளியவும் ஏதோ ஒரு கண்ணுக்குப் புலப்படாத கருவி காரணம் இல்லை. நம்மைத் தீர்மானிக்கும் அந்த சக்தி நம் அறிவு மட்டுமே.
நம் அறிவை நம் கட்டுப்பாட்டுக்குள் நாம் வைக்காமல் போனால் அதை சுலபமாக கைப்பற்றி யார் வேண்டுமானாலும் அவர்கள் விறல் நுனியில் நம்மை அவருடைய கைப்பாவையாக ஆட்டி வைக்க முடியும்.
மிகத் துளி அளவு அடுத்தவரின் மனப்போக்கை கணிக்கத் தெரிந்தாலே போதும், ஒருவருடைய அறிவை மழுங்க அடித்து அவரை கட்டுப்படுத்த இயலும் என்றால் கூடவே மதி மயக்கும் சொல்லாடல்களையும் அழகான கட்டுக்கதைகளையும் பிரயோகித்து கண்ணை மூடிக் கொண்டு தன்னை நம்ப வைக்கும் கலையை நன்கு வசப்படுத்திவிட்ட நிர்மலானந்தாவுக்கு விஸ்வாவை வசப்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை.
விமானத்தை விட்டு இறங்கியவன், பைட் பைப்பர் கதையில் வரும் எலிகளைப் போல அவருடைய பின்னாலேயே வந்துவிட்டான் விஸ்வா.
அதன் பின் அவரை விட்டு விலகவே இல்லை. அவருடைய கண்களின் அசைவுக்கு அடிக்கொண்டிருதான் அவன்.
அவரைப் பொறுத்த வரைக்கும் விஷ்வா அவருடைய பொக்கிஷம். அந்த பொக்கிஷம் கை நழுவிப் போன ஏமாற்றத்தில் அவரது ஆசிரமத்தில் நிர்மலானந்தா கொதித்துக் கொண்டிருக்க அடித்துப் பிடித்து மகனைக் காண ஓடி வந்திருந்தார் சந்திரமௌலி.
அப்பொழுதுதான் கண்விழித்து எழுந்து உட்கார்ந்திருந்தான் விஷ்வா. ஆனாலும் இன்னும் கூட சுயநினைவு முழுவதாக வரவில்லை அவனுக்கு. நம்பிக்கைக்குரிய சில பணியாளர்களுடன் ரீமா விஷ்வாவை கவனித்துக் கொண்டிருக்க வீட்டு வரவேற்பறையில் உட்கார்ந்துகொண்டு சந்திரமௌலிக்காக காத்திருந்தாள் மேனகா.
அப்பொழுது அவர் புயலென உள்ளே நுழையவும், வரவேற்கும் விதமாக சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்துத் தலையசைத்தவள், "ஹவ் ஆர் யூ சார்" என இயல்பாக விசாரிக்க, "ஹான்... ஃபைன்மா" என்றவர், "என்னால விஸ்வா என் கிட்ட வந்துட்டான்னு நம்பவே முடியல... தேங்க்ஸ்மா" என தழுதழுத்தார் மௌலி.
அதைப் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவள், "ம்ம்... ஆனாலும் அந்த கெமிக்கலோட எஃபக்ட் இன்னும் கூட அவருக்கு இருக்கு. இன்னைக்கு நைட் இல்லன்னா நாளைக்கு காலைல சரியாகிடும். இல்லன்னா என் கிட்ட சொல்ல சொல்லியிருக்கேன்" என சிறு விளக்கம் கொடுத்துவிட்டு, "நான் சொன்ன மாதிரி உங்க பிள்ளையை அந்த ஆசிரமத்துல இருந்து வெளியில கொண்டு வந்துட்டேன். இனிமேல் அவரை உங்க கூட தக்க வச்சுக்கறது உங்களோட சாமர்த்தியம். நான் இப்ப கிளம்புறேன். ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட ரிசர்ச்சுக்கு நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு நம்பறேன்" என்று அவள் அடுக்கடுக்காக சொல்ல, மகனை நேரில் காணும் ஆவலிலிருந்தவருக்கு அவளுடைய பேச்சு செவியிலேயே ஏறவில்லை. தோராயமாகத் தலையாட்டிவிட்டு மகனைத் தேடிச் சென்று விட்டார் அவர். இனிமேல் அங்கே தனக்கு வேலை இல்லை என எண்ணியவள், உடனே அங்கிருந்து கிளம்பினாள் மேனகா.
***
விஸ்வாவை குறி வைத்துத் தூக்கும் முனைப்பிலிருந்தவளுக்கு கிட்டத்தட்ட ஒரு வாரமாகவே சரியான தூக்கம் இல்லை.
அன்று மாலை வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்தவள்தான் அடுத்த நாள் காலை சூரியன் சுட்டெரிக்கும் நேரம் வரை கண் விழிக்கவில்லை.
மில்லி கூட அவளுடைய கட்டிலிலேயே ஒரு மூலையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது.
ஆழ்ந்த உறக்கத்திலிருத்தவளுக்கு கலகலவென கண்ணாடி விழுந்து நொறுங்கும் ஒலி எங்கோ வெகு தூரத்தில் கேட்க, சில நொடி இடைவேளையில் அவள் காதின் அருகில் மில்லியன் குரல் கேட்டது.
அதில் திடுக்கிட்டு அவள் எழ, மறுபடியும் கண்ணாடி குவளை நொறுக்கும் ஒலி அவளுடைய படுக்கை அறைக்கு வெளியில் கேட்க, அதில் இன்னும் அதிகமாகக் கத்தியது மில்லி.
"ஷட் அப் மில்லி" என மில்லியை அடக்கியவள் வேகமாக வெளியில் வந்து பார்க்க, வீட்டைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழியே என அன்றைய கோட்டாவாக இரண்டு பீக்கரை நொறுக்கியிருந்தாள் தொல்லைநாயகி.
"தொ...ல்லை... லை... லை" எனக் கத்தியவள், இந்த மாசம் உனக்குச் சம்பளமே கிடையாது" என்றாள் மேனகா கடுப்புடன். அதற்குக் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் அசாதாரணமாக அவளை ஒரு பார்வை பார்த்து, "அஆங்... சொல்லமாட்ட யாமா நீயி" என நொடித்தவள், விரலை ஆட்டி ஆட்டி முணுமுணுப்பாக எதையோ கணக்குப் போட்டு, "உன்னோட அந்த மில்லி பெர்ச்சளியை உட்டு தொரத்த உட்டத்துக்கு ஒரு ஆயரம், பொறவு மூன்னாளு என்னை மயக்கி வெச்சிருந்த இல்ல அதுக்கு மூவாயரம், பொறவு தலீவர் பட டிக்கெட்டுக்கு ஆயரம், பொறவு எங்க சாமி சொப்புளுவுக்கு உன்னை இட்டுக்கினு போனதுக்கு... அதுக்கு என் பக்கத்து வூட்டுக்காரி கிட்ட சீட்டு ஆட்டையபோட்டு குட்ததுக்கு எல்லாத்துக்கும் மொத்தமா" எனச் சொல்லிவிட்டு கன்னத்தை தட்டி யோசித்தவள், ஒரு மூவாயரம்... ஹாங் அல்லாமா சேத்து" என விரலை விட்டு எண்ணியவன், "ஆறாயரம்... மொத்தமா எண்ணி வெய்யி. இல்லனா ஜீ பேயில டேங்கர் பண்ணு" என்றாள் நாயகி கெத்தாக.
அவள் சொன்ன 'மயக்கி வெச்சிருந்த' 'சொப்புளுவு' 'ஜீ பேயில டேங்கர் (ட்ரான்ஸ்ஃபர்) பண்ணு' என்ற வார்த்தைகளிலும் அவளுடைய பாவனையிலும் வாய் விட்டு சிரித்தவள், 'நல்லவேள, அந்த கெமிக்கலை இவ மேல டெஸ்ட் பண்ணது இவளுக்குத் தெரியாது. இல்லனா அதுக்கும் சார்ஜ் பண்ணியிருப்பா" என எண்ணியவாறு, "நாயகி செம்மையை தேறிட்ட போ" என அவளைப் புகழ்வது போல் கிண்டலாக சொன்னவள், "போனா போகுது... உன் பழைய கணக்குல கழிச்சிக்கோ. ஆனா இந்த மாச சம்பளம் கட்னா கட்தான்" என்று கறாராகச் சொல்லி, யம்மா... யம்மா... என அன்று முழுவதும் நாயகியைக் கெஞ்ச வைத்தாள் மேனகா.
அடுத்த மூன்று தினங்கள் வழக்கம்போல அவளுடைய கல்லூரிக்குச் சென்றுவந்தாள் மேனகா.
தினமும், சந்திரமௌலி அவளை அழைப்பர் என அவள் எதிர்பார்த்து ஏமாந்துதான் மிச்சமாக இருந்தது அவளுக்கு.
ஆனால் நான்காவது நாள் அதிகாலையிலேயே அவளை அழைத்த ரீமா, "மௌலி சார் உன்னை உடனே வரச் சொன்னார். கார் அனுப்பியிருக்கேன். கிளம்பி வா" எனச் சொல்ல, அவள் குரலில் தொனித்த கட்டளையில் அப்படியே பற்றிக்கொண்டு வந்தது மேனகாவுக்கு. இருந்தாலும் அவள் இருந்த நிலையில் தன கோபத்தைக் காண்பிக்க இயலாமல் "சரி" என்று மட்டுமே சொல்ல முடிந்தது அவளால்.
அவள் உடனே கிளம்பி சந்திரமௌலியின் விருந்தினர் மாளிகைக்கு வர, வரவேற்பறையிலேயே தலையில் முட்டுக்கொடுத்து அமர்ந்தவண்ணம் சோக சிற்பமாக அவளுக்காகக் காத்திருந்தார் அவர்.
அவருடைய அந்த தோற்றம் அவளுக்குக் குழப்பத்தைக் கொடுக்க, "குட் மார்னிங் சார்" என்றவாறு அவரை நோக்கி வந்தாள் மேனகா.
அவருக்கு எதிரில் இருந்த இருக்கையை கையால் காண்பித்து 'உட்கார்' என்பதுபோல் அவர் ஜாடை செய்ய, அவர் பார்த்த ஒரு பார்வையில் அங்கே நின்றிருந்த ரீமா மற்றும் அவருடைய பாதுகாவலர்கள் அனைவரும் அங்கிருந்து அகன்றனர்.
"என்ன சார்... என்ன நடந்தது?" என அவள் கலவரத்துடன் கேட்க, "அவன் மறுபடியும் அங்கேயே போயிட்டான் மா" என்றார் அவர்.
எவ்வளவு அரும்பாடு பட்டு அவனை அங்கிருந்து மீட்டு வந்தாள் அவள். இவர் வெகு சாதாரணமாக அப்படிச் சொல்லவும், "என்ன?" எனக் கடுமையாகக் கேட்க வந்து அந்த தொனி சற்று இறங்கி அவள் கேட்ட விதத்தில், "என்னால அவனை கண்ட்ரோல் பண்ண முடியல. சுயநினைவு வந்ததும் ரொம்பவே கலாட்டா பண்ணிட்டான்" என பரிதாபமாகச் சொன்னவர், "எனக்கு உன்னை விட்டா வேற ஆப்ஷன் இல்ல. அதனால உன்கிட்ட கேக்கறேன். என் பையனை மறுபடியும் நீதான் இங்க கொண்டுவரனும்" என்றார் அவர் வெகு எதார்த்தமாக.
"இன்னா சார்... வெள்ளாட்றியா" எனப் பதறியவள், "அது ஒண்ணும் அவ்வளவு ஈஸி இல்லாங்காட்டியும் தெரிமா? அவங்க படா உஷாராயிருப்பாங்க அஆங்..." என்றாள் அவள். பதட்டத்தில் நாயகியின் பாஷையும் அவளுடைய உடல்மொழியும் அப்படியே வந்திருந்தது அவளுக்கு.
அவளை ஒரு விசித்திர பார்வை பார்த்தவர், "அதெல்லாம் இல்ல... உன்னால முடியும்... நீ செஞ்சுதான் ஆகணும்... அப்பத்தான் உன்னோட ரிசர்ச்சுக்கு ஸ்பான்ஸர் பண்ணுவேன்" என்றார் அவர் பக்கா வியாபாரியாக.
'ஐயோ... கோட்ட மொதல்ல இருந்து போடசொல்லுதே இந்த பெரிசு' என்ற எண்ணம் தோன்ற, பேச்சற்று நின்றாள் மேனகா.
Comments