top of page

Valasai Pogum Paravaikalaai - 8

8

தங்கக் கூண்டு

நடந்த முடிந்த சம்பவங்களில் சற்று அதிகமாகவே ஓய்ந்து போனார் வசந்தகுமார்.


தெரிந்த முகங்கள், நட்பு, சொந்தபந்தம் ஏதும் இல்லாத ஏதோ ஒரு அந்நிய ஊரில் போய் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து வாழ்க்கையைத் தொடங்க இந்த முறை துணிவு வரவில்லை.


வயதுக்கு வந்த மகளை வைத்துக்கொண்டு வம்பை விலைக்கு வாங்க அவர் தயாராகவே இல்லை. அகால திருமணத்திலிருந்து தப்பிக்கப் பள்ளிக்கூடத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் அஞ்சு, தங்கம் இன்னும் சில மாணவிகள், முதல் தலைமுறையாகக் கல்வியை நாடி வந்த நலிந்த சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகள் என அங்கே அம்போவென விட்டுவிட்டு வந்தவர்களைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சியில் நெஞ்சு அடைக்கும். ஒரு போலி நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்ததற்காக மனதே விட்டுப்போகும். இயலாமையுடன் அனைத்தையும் உள்ளேயே போட்டுப் புதைத்துக்கொள்வார்.


காவல் நிலையம் சென்று திரும்பிய அன்றே, இருக்கும் விடுப்புக்களை எல்லாம் எடுத்துக்கொண்டு சைதாப்பேட்டையில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு வந்தவர் சென்னைக்கே மாற்றல் வாங்கிக்கொண்டார். சட்டென அங்கேயே தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடித்தனத்தையும் தொடங்கினார்கள்.


அந்த ஊரிலேயே தொடரவும் இயலாமல் அவசர கதியில் வேறு பள்ளியில் இடம் வாங்கவும் முடியாமல் பத்தாம் வகுப்பு பரீட்சையை குயிலி தனிப்பட்ட முறையில் நேரடியாக எழுத வேண்டியதாகியது. எப்படியோ சுமாரான மதிப்பெண்களுடன் தேர்வானாள்.


தொடர்ந்து அவர், தான் வேலை செய்யும் பள்ளியிலேயே அவளையும் பதினொன்றாம் வகுப்பில் சேர்த்தார்.


இப்பொழுதெல்லாம் அவர் எந்த வம்புதும்புக்கும் போவதில்லை. தான் உண்டு தன் வேலையுண்டு எனத் தன்னைச் சுருக்கிக்கொண்டார். இந்தப் புதிய பள்ளியில் சேர்ந்ததில் அவருக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் அவருடைய நீண்ட நாளைய நண்பரான கமலக்கண்ணனும் அங்கே வேலை செய்வதுதான்.


எம்.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி முடித்து அவர் பி.எட் சேர்ந்ததும் அவருடன் படித்தவர். அன்று தொட்டே நல்ல நண்பர்கள் இருவரும். அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்ள முடியாமல் போனாலும் கடிதத் தொடர்பு இருக்கவே செய்தது. ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் அவருடையது. அவர்கள் இல்ல விழாக்கள் அனைத்திற்கும் இவருக்குத் தவறாமல் அவரிடமிருந்து அழைப்பு வந்துவிடும். கூடுமானவரையில் சென்றும் வருவார். இப்பொழுது நெருக்கம் இன்னும் அதிகமானது.


ஓரளவுக்கு இந்தப் புதிய வாழ்க்கைமுறையும் அவருக்குப் பழகிப்போனது.


இதற்கிடையில் எல்லோருமே ஒரே இடத்திலேயே குடியிருக்கும் முனைப்புடன், சைதாப்பேட்டையில் இருக்கும் கற்பகத்தின் தந்தை வழியிலான அந்தப் பூர்விக வீட்டை ஜாயின்ட் வேன்ச்சரில் கொடுத்து உடன் பிறந்தவர்கள் ஆறுபேரும் ஆளுக்கொரு பிளாட்டை வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட, வசந்தகுமாருக்கும் அது சரி என்றுதான் பட்டது. இரண்டு அண்ணன்-அண்ணிகள் மூன்று அக்கா-மாமாக்கள் அவர்கள் பெற்றப் பிள்ளைகள் அவர்கள் மூலம் உண்டான உறவுகள், அனைத்திற்கும் மேலாக அன்பைப் பொழியும் கற்பகத்தின் அம்மா என இவ்வளவு பெரிய குடும்பம் அமைவதென்பதும் ஒரு வரம்தான் அல்லவா! மனைவியும் மகிழ்ச்சியடைவாளே! எனவே அவர்கள் பங்கிற்கு வந்த தொகையுடன் கூட கொஞ்சம் பணமும் போட்டு அங்கேயே மூன்று படுக்கையறைக் கொண்ட ஒரு பிளாட்டை கற்பகத்தின் பெயரிலேயே வாங்கினார்.


ஒரே வருடத்தில் கட்டி முடித்து அங்கே குடிவந்தார்கள். நாள் கிழமைகளில் ஒன்று கூடுவது, சாதாரண ஜுரம் தலைவலி என்றால் கூட விட்டுக்கொடுக்காமல் ஒவ்வொருவரும் ஓடோடி வந்து அக்கறையுடன் விசாரிப்பது, யார் வீட்டில் எந்த சிறப்பு உணவுகள் செய்தலும் சுடச்சுடப் பகிர்ந்துகொள்வது, எந்த ஒரு நல்லது கெட்டது என்றாலும் மொய் செய்வதிலிருந்து முறை செய்வது வரை எல்லோருமாகக் கூடிப் பேசி ஒத்த மனதாய் போய் வருவது என உறவுகளின் மகத்துவத்தைத் திகட்டத் திகட்ட அனுபவித்தனர். அதுவும் கற்பகத்தின் அம்மா மருமகனைத் தாங்கோ தாங்கென்று தாங்கினார்.


ஆனாலும் கூட உறவுகள் என்பது எப்பொழுதுமே மான்களும் மயில்களும் ஆடும் நந்தவனமாகவும் குயில்கள் கூவும் ஆனந்த பூஞ்சோலையாகவும் இருபதில்லையே. ஓநாய்களும் குள்ளநரிகளும் கூட இருக்கும்தானே?!


அப்படியும் சிலர் அந்தக் குடும்பத்திலும் இருக்கதான் செய்தனர்.


அதாவது கற்பகத்தின் மூத்த அண்ணிக்கு எந்த காரணத்தினாலோ அவரை அறவே பிடிக்கவில்லை. பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காதவளுக்கு இவ்வளவு படித்த கணவர் என்பதையே அவரால் தாங்க முடியவில்லை. அவருடைய மூத்த மகளுக்கும் கற்பகத்துக்கும் ஏறத்தாழ ஒத்த வயதுதான். ஆனால் தேடித் தேடிப் பிடித்தும் இப்படி ஒரு வாழ்க்கைத் துணை அவளுக்கு அமையவில்லை.


அடுத்து, மகனைப் பொறியியல் படிக்க வைத்தார்கள். வேலைத் தேடிக்கொண்டு, திருமணமும் செய்துகொண்டு வெளிநாடு போனவனுக்கு இங்கே திரும்ப வரும் எண்ணமே இல்லை.


அவர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளவும் ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறதே. அதைப் பூர்த்தி செய்வது இவர்களுடைய மகள் வயிற்றுப் பேத்தி மஞ்சுதான்.


குயிலியை விட இரண்டு வயது இளையவள். அவளைப் பிரபலமான ஒரு தனியார்ப் பள்ளியில் சேர்த்திருந்தனர். படிப்பில் கெட்டி. பத்தாம் வகுப்பில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு. கேட்கவா வேண்டும். இவர்கள் வாய்க்கு குயிலிதான் அவல்.


அவர்கள் குடும்பத்து மற்றப் பிள்ளைகளுக்கும் இதே நிலைதான் என்றாலும் அதிகம் பாதிக்கப்பட்டதென்னவோ குயிலிதான்.


அம்மாவும் பெண்ணுமாகச் சேர்ந்துகொண்டு அவர்கள் பேசும் பேச்சில், தான் ஒரு சுத்த மக்கு என குயிலியே நம்ப ஆரம்பித்துவிட்டாள் என்றால் அதற்கு மேலே என்னவென்று சொல்வது?


தனக்கு கணிதம் வராது, அறிவியல் வராது, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவே வராது எனத் தீர்மானமான முடிவுக்கு வந்துவிட்டவள் முயற்சி செய்வதையே விட்டுவிட்டாள்.


என்ன பேசியும் அவளுக்குள் தன்னம்பிக்கை என்ற ஒன்றை வசந்தகுமாரால் விதைக்கவே இயலவில்லை. எதையும் காலம் சரி செய்யும் என்ற நம்பிக்கையில் அவர் தன்னைத் தேற்றிக்கொண்டார். ஆனால் அந்தக் காலமென்பது மிக மோசமாக அதை அவளுக்குக் கற்றுக்கொடுத்தது.


‘உனக்குதான் மத்த படிப்பெல்லாம் சரியா வரலியே, பேசாம கேட்டரிங் படி. அதுக்கு இப்ப நிறைய ஸ்கோப் இருக்கு. அதுதான் உனக்கு செட் ஆகும்’ என்று வேறு அவர்கள் தூபம் போட, அதற்கேற்றாற்போல் தொலைக்காட்சியைத் திறந்தாலே, “எங்கள் கேட்டரிங் இன்ஸ்டிட்யூட்டில் சேருங்கள், உலகத்தரமானப் பயிற்சிகளைக் கொடுக்கிறோம். நீங்கள் அமெரிக்காவில் பணியாற்றலாம், ஆப்பிரிக்காவில் பணியாற்றலாம். படிக்கும்போதே சம்பளம் கொடுப்போம்’ என அலங்கார வார்த்தைகளைக் கோர்த்து விளம்பரங்களும், சிறு நிகழ்ச்சிகளும் சேனலுக்கு சேனல் நாள் முழுதும் வந்தவண்ணம் இருக்க, அதையே தீவிரமாக எடுத்துக்கொண்டு பகல் கனவு காணத் தொடங்கினாள் அவள்.


அப்பொழுதும் கூட வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. படிப்பு முடிந்ததும் மின்னலே படத்தில் வரும் மாதவன் போலத் தன்னை உருகி உருகிக் காதலிக்கும் ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு அவனுக்கு விதவிதமாக சமைத்துப்போடவேண்டும் என்கிற எண்ணமே வெகு தீவிரமாக இருந்தது.


“சமையல் கத்துக்கணும்னு சொன்னா நானும் அம்மாவும் சொல்லிக்கொடுக்கறோம். இல்லன்னா பார்ட் டைமா ஏதாவது ஒரு குக்கரி கிளாஸ்ல சேர்த்துவிடறேன். கூடவே ஒரு பேசிக் டிக்ரீ படி” என எவ்வளவோ எடுத்துச்சொன்ன வசந்தகுமாரின் வார்த்தைகள் அவளுடைய ஒரு செவிக்குள் புகுந்து மறு செவி வழியாக வெளியேறிப்போனது.


இந்த விஷயத்தில் அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தாரே தவிர கற்பகத்திற்கு மகளிடம் எப்படி எடுத்துச் சொல்வது என்று கூட விளங்கவில்லை. எல்லாமே ஒரு கை ஓசை என்றானது.


அதற்கேற்றாற்போல அவளது பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாமல் போனது. சலித்துப்போனவராக ‘நடப்பது நடக்கட்டும், சரியான வயது வந்ததும் நல்ல ஒரு வரனாகப் பார்த்து திருமணம் செய்துவிடலாம். கற்பகத்தைத் தான் பார்த்துக்கொள்வது போல அவன் அவளைப் பார்த்துக்கொள்வான்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அவர்.


அவளுடைய விருப்பப்படியே தொலைக்காட்சி சேனலில் முதன்மையாக விளம்பரம் கொடுக்கும் ‘&&&இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலாஜி’ எனும் நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் படிக்கும் பி.எஸ்.ஸி. பட்டப்படிப்பில் அவளைச் சேர்த்துவிட்டார்.


அவள் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வரை எல்லாம் நன்றாகதான் போய்க்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அந்த நிறுவனம் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிந்தது. அவர்கள் விளம்பரத்தில் சொன்னது போலத் தொடர்ந்து ஊக்கத்தொகை எதையும் கொடுக்கவும் இல்லை.


பெற்றோர்களெல்லாம் சேர்ந்து அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்க, தீர்ப்பு வரும்வரை என்ன செய்வதென்று கூட புரியவில்லை. போதும் போதும் என்று ஆனது அவருக்கு.


எப்படியோ எல்லாம் சரியாகி ஒரு வழியாக அவள் அந்தப் படிப்பை முடித்து வெளியில் வந்தாலும், அவர்கள் விளம்பரத்தில் சொன்னதுபோல் உருப்படியாக எந்த வேலையும் அமையவில்லை. இதிலேயே ஒரு வருடம் வீணானது.


அவளுக்கு வரன் பார்க்கவும் தொடங்கியிருந்தார். ஆனாலும் மகளை நம்பி ஒப்படைக்கும் அளவுக்கு முழு திருப்தியுடன் எதுவும் கூடி வரவில்லை.


அப்படியே விட்டுவிட மனமில்லாமல், முன்பு செய்ததுபோல் இல்லாமல் ஒரு பிரபல கல்லூரியில் இடம் வாங்கி அவளை மேற்படிப்பில் சேர்த்துவிட்டார்.


வயதின் முதிர்ச்சியோ மற்றவரின் கேலிகள் புரிந்ததோ அல்லது வெளியுலக அனுபவமோ என்னவோ அவளுக்கும் கொஞ்சம் பொறுப்பு வந்திருந்தது. அலட்சியம் காண்பிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தினாள்.


அப்பொழுதுதான் கமலக்கண்ணனின் மூத்த அண்ணனுடைய அறுபதாம் கல்யாணத்திற்கு மனைவியுடன் வந்து நேரிலேயே அழைத்துவிட்டுப் போனார் அவர். அங்கே சென்றபொழுதுதான் அவருடைய இரண்டாவது அண்ணனான தெய்வசிகாமணியின் ஒரே மகன் சூர்யாவை பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க நேர்ந்தது.


அவனுடைய கையைப் பிடித்து இழுத்து வந்த கமலக்கண்ணன், “என் சின்னண்ணா பையன், என் பையன் சூர்யா. ஞாபகம் இருக்கா? சின்ன பையனா இருந்தப்ப பார்த்திருப்ப” என வசந்தகுமார் குடும்பத்துக்கு அவனை அதிகப்படியான உற்சாகத்துடன் அறிமுகம் செய்து வைத்தார்.


‘அவர்கள் மொத்த குடும்பத்திற்கும் ஒரே ஆண் வாரிசு...


குடும்பத்திற்கு மிகவும் அடங்கிய பிள்ளை...


அதி பயங்கர புத்திசாலி. பள்ளியில் முதல் மாணவன்...


‘பிட்ஸ் பிலானி’யில் பொறியியல் படிக்கிறான்...


ஒரு மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்திற்காக கேம்பசில் செலக்ட் ஆகியிருக்கிறான். தொடக்க சம்பளமே ஆறு இலக்கம்...


மைசூரில் ட்ரைனிங்கில் இருக்கிறான்...


வேலை கிடைத்து வெளிநாடு போயிருக்கிறான்...


என்பதாக அடிக்கடி அவனைப்பற்றிய தகவல்கள் அவருக்கு வந்துகொண்டுதான் இருக்கும். தப்பித்தவறி இவர் ஏதாவது ஒரு விழாவுக்குச் செல்லாமல் விட்டிருந்தால் அதற்கு அவன் வந்துவிட்டுப் போயிருப்பான். இப்படியாக, அவனை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் இப்பொழுதுதான் அமைந்தது.


அவனுடைய செழுமையானத் தோற்றமும் இளமை கம்பீரமும் குயிலியை ஆர்வத்துடன் பார்க்க வைத்தது. வசந்தகுமாரும் அதை உணர, அதற்கு முன்பே கமலக்கண்ணனுக்கு வசந்தகுமாருடன் சம்பந்தம் பேசும் ஆசைத் துளிர்விட்டிருக்க, அவர்கள் வீட்டிலும் சொல்லி வைத்திருந்தார்.


சிறு வயதிலிருந்தே அவளிடம் எல்லோரும் பழகிக்கொண்டிருப்பதால் அவர்கள் வீட்டிலும் அனைவருக்கும் விருப்பமே! குறிப்பாகக் கமலக்கண்ணனின் அம்மாவுக்கு. அவர்களும் கற்பகத்தின் வகையறா என்பதால் வசந்தகுமாரைக் கொண்டு எந்த ஜாதிப் பிரச்சனையும் எழவில்லை.


சூர்யாவைப் பார்த்ததும் கற்பகத்துக்கும் மனம் நிறைந்து போக, அங்கேயே அவர்கள் திருமணத்திற்கான பிள்ளையார் சுழிப் போடப்பட்டது.


*********


முதல் பார்வையிலேயே குயிலி சூர்யா இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போக முறைப்படி கமலக்கண்ணனின் வீட்டிற்கு இவர்கள் போய் பேசி அவர்கள் இங்கே வந்து பெண் பார்த்து நிச்சயத்திற்கு நாள் குறித்து எனப் பெரியவர்களைப் பொறுத்தவரை அவர்கள் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்து முடித்தனர்.


இருந்தாலும் குயிலியுடன் தனியாகப் பேசி ஒரு தெளிவான முடிவுக்கு வந்தப் பிறகு நிச்சயதார்த்தத்தை நடத்திக் கொள்ளலாம் என சூர்யா பிடிவாதமாகச் சொல்லிவிட பெரியவர்களும் அதற்கு உடன்பட்டனர்.


இரண்டு குடும்பங்களையும் சேர்த்து வீட்டு மனிதர்கள் மட்டுமே நூறு பேரைத் தொட்டிருக்க, பெண் பார்க்க வந்த தினமே அப்படி ஒரு கும்பல் வசந்தகுமாரின் இல்லத்தில்.


இவ்வளவு பெரிய கும்பலை வைத்துக்கொண்டு தெளிவாக எதுவும் பேச முடியாது என்பதால் தனியாக வெளியில் எங்கேயாவதுதான் சந்தித்துப் பேச வேண்டுமென சூர்யா தீர்மானமாகச் சொல்லிவிடவே, எல்லோருக்கும் அதற்கு ஒப்புக் கொண்டாக வேண்டிய சூழ்நிலை உண்டானது. அந்த வார இறுதியிலேயே அவனே வந்து அவளை அழைத்துச் சென்றான்.


அவர்கள் பிளாட் வாயிலுக்கு வந்துவிட்டதாக சூர்யாவிடமிருந்து கைப்பேசியில் குறுந்தகவல் வரவும் கிளம்பித் தயாராக இருந்த குயிலி அம்மா அப்பாவுடன் இணைந்து வெளியில் வந்தாள்.


அவர்களுடையது ஒரு சராசரி நடுத்தரக் குடும்பம்தான். எங்கே சென்று வந்தாலும் பேருந்து அல்லது ஆட்டோவில்தான். காரில் அதுவும் இப்படி ஒரு புதியவனுடன் என்பதால் அவளுக்குச் சற்று சங்கடமாகத்தான் இருந்தது.


அவனுக்குப் பக்கத்திலா அல்லது பின் இருக்கையிலா எங்கே அமருவது என்ற தயக்கத்துடன் வந்தவளுக்கு அவனே இறங்கி முன்பக்க கதவைத் திறந்து அவள் வசதியாக அமர வழி செய்துவிட்டு வசந்தன் கற்பகம் இருவரிடமும் மரியாதை நிமித்தம் இரண்டு வார்த்தைகள் பேசிய பின்புதான் காரைக் கிளப்பினான். வெகு இயல்பான இப்படிப்பட்ட சின்ன சின்ன நடத்தைகளில் கூட அனைவரையும் அவன் கவர்ந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.


உற்சாகமான ஒரு குலுங்கலுடன் அந்த கார் கிளம்ப, ஒவ்வொருவர் வீட்டு பால்கனியிலிருந்தும் பல ஜோடிக் கண்கள் இருவரும் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தன.


ஏதோ ஒரு உந்துதலில் கிளம்பி வந்துவிட்டாளே ஒழிய அவனைத் திரும்பிப் பார்க்கக்கூட அவளுக்கு அவ்வளவு தயக்கமாக இருந்தது.


அதைப் புரிந்துகொண்டவன் போல, தன் கைப்பேசியை கார் ஆடியோ சிஸ்டத்துடன் இணைத்தவன், “உனக்கு யாரைப் பிடிக்கும் இளையராஜாவா ரஹ்மானா” எனப் பேச்சுக் கொடுத்து இருவருக்கும் பொதுவாக இசையைக் கொண்டு வர “இளையராஜாவோ ரஹ்மானோ, எஸ்.பீ.பி சித்ரா காம்பினேஷன் ரொம்ப பிடிக்கும்” சிறு தயக்கத்துடன் அவள் பதில் கொடுக்க, எனக்கு இளையராஜாதான் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ்” என்றவன், அந்தக் கூட்டணியில் சில பாடல்களைத் தட்டிவிட,


ஆலப்போல் வேலப்போல்...


அஞ்சலி அஞ்சலி...


செம்பூவே பூவே...


தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே...


இளையராஜாவும் ரஹ்மானும் மாறி மாறி இசையை நிரப்பினார்கள் அந்த கார் முழுவதிலும்.


மயக்கமும் கலக்கமும் உடல் முழுவதும் பரவத்தொடங்க ஒரு புதுவித அனுபவம் அவளுக்கு. ஏசியின் குளுமையைத் தாண்டியும் உடல் வியர்த்தது. திரும்பி அவனுடைய முகத்தைப் பார்க்கும் தைரியம் வாகனம் நின்ற பிறகும் கூட வரவேயில்லை.


*********

2 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page