top of page

Valasai Pogum Paravaikalaai - 3

3

சரணாலயம்

டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும், சுந்தர் பிச்சைப் போல கூகுளின் சீ.ஈ.ஓ ஆக வேண்டும் அதையும் கடந்து கணினியியல் செயற்கை நுண்ணறிவு யுகத்தின் பிரம்மா பில்கேட்ஸ் போல இந்த உலகத்து மக்களனைவரையும் தன் ஒற்றைக் குடைக்குள் கொண்டு வரவேண்டும் என வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பேரவா இருக்கதானே செய்கிறது?!


பறந்து விரிந்த வானத்தைத் தொடும் உயரமெல்லாம் எட்டிப்பிடிக்காமல் போனாலும் கூட, வீட்டின் முற்றத்தில் சின்னஞ்சிறியதாக ஒரு கூட்டைக் கட்டும் சிட்டுக்குருவியைப் போல குயிலியின் ஆசையும் லட்சியமும் மிகவும் எளிமையானது இயல்பானது என்றுதான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் இங்கே அத்தகைய ஒரு சின்ன உயரத்தையும் கூட அவ்வளவு சுலபமாக எட்டிவிட முடியாது என்பதைக் காலம் முகத்தில் அறைந்தாற்போல் மிக மோசமாக அவளுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டது.


அவளுடைய அப்பா அம்மாவினுடையது சுலபமாகக் கை சேர்ந்த ஒரு காதல் திருமணம். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் காதலில் வீழ்ந்த நொடி எப்படி இருந்தனரோ இன்று வரை அப்படிதான் இருக்கிறார்கள்.


அவர்களைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததாலோ என்னவோ தனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்பது மட்டுமே அவளுடைய எதிர்கால கனவாக, லட்சியமாக இருந்தது. அவளுடைய அப்பாவைப் போலவே தன்னைக் கண்ணுக்குள் வைத்துக் காக்கும் ஒரு இணையை மட்டுமே அவள் எதிர்பார்த்தது. அதுகூட அமையாமல் போனதுதான் அவளுடைய துரதிர்ஷ்டம்.


“பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கணும், கை நிறைய சம்பாதிக்கணும், சொந்த கால்ல நிக்கணும். லட்சியம்னா இப்படிதான் இருக்கணும். அதை விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கணுமாம், புருஷனுக்கு விதவிதமா சமைச்சு போடணுமாம், நாள் முழுக்க கண்ணே மணியேன்னு காதல் டயலாக் பேசிக் கொஞ்சிக்கணுமாம். லவ் பேர்ட்ஸ் மாதிரி ஜோடியா சுத்தித் திரியணுமாம்! பிள்ளைக் குட்டிப் பெத்துட்டுக் கொஞ்சிக் கொஞ்சி வளர்க்கணுமாம். கருமம் இதெல்லாமாடி இலட்சியம். இதெல்லாம் எல்லாருக்கும் இருக்கற ஒரு சாதாரண ஆசை அவ்வளவுதான். உங்க அம்மா அப்பாவை மட்டும் வெச்சு உலகமே இதுதான்னு நினைக்காதடீ குக்கூ. ஊர் உலகத்துல கல்யாணம் செஞ்சுட்டு ‘வேண்டா வெறுப்பா பிள்ளையைப் பெத்து காண்டாமிருகம்’னு பேரு வெச்ச கதையா அவ அவ படுற பாட்டைப் பார்த்தால் தெரியும். எங்க வீட்டுல வந்து ரெண்டு நாள் தங்கிப் பாரு, கல்யாணமே வேண்டாம்னு ஓடியே போயிடுவ” என்பாள் அஞ்சு. அது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்பது மிகவும் தாமதமாகதானே மண்டைக்குள் உரைத்தது.


உடலில் ஒட்டிய தூசியைத் தட்டிவிடுவது போல தன் வாழ்க்கைத் துணையையே வேண்டாம் என இப்படி உதறிவிட்டு வருமளவுக்கு மிகப்பெரிய முடிவை எடுக்கக் கிடைத்த அவகாசம் கூட திருமணத்துக்கு முன் அவனைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ள அவளுக்குக் கிடைக்கவில்லையே.


இத்தனைக்கும் அவளுக்கு அவன்மீது கோபமோ வெறுப்போ காழ்ப்புணர்ச்சியோ எதுவுமே இல்லை. ஒருவித எரிச்சலும் சலிப்பும் மட்டுமே!


அதனால்தானோ என்னவோ அவனைக் கயவன், நம்பிக்கைத் துரோகி, ஏமாற்றுக்காரன் எனச் சொல்ல இன்று வரைகூட அவளுக்கு மனம் வந்ததில்லை.


நல்லவன்தான்! ஆனால் ஸ்திரமான முடிவுகள் எடுக்கத் தெரியாத குழப்பவாதி! எதற்காகவும் காத்திருக்கும் பொறுமையில்லாத ஒரு அவசரக்குடுக்கை. பிரச்சனைகளை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் ஓடி ஒளியும் ஒரு கோழை! அவனை நம்பி திருமண வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்தது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போலல்லவா ஆனது?!


எவ்வளவு முயன்றும் சிந்தனையைத் தூர விரட்ட இயலாமல் குயிலி தவியாய் தவித்துக்கொண்டிருக்க அவளுக்கான காஃபி வரவும் தன்னை மீட்டுக்கொண்டவள், “என்ன ஜோதிம்மா, உங்க காயமெல்லாம் ஆறிடுச்சா?” எனக்கேட்டாள் அதை எடுத்து வந்தவரின் கையைப் பார்த்துக்கொண்டே.


அதில் தொனித்த ஆத்மார்த்தமான அக்கறையில், “சரியா போயிடிச்சு மேடம்! இனிமேல் கட்டுக் கூட போட வேணாம்னு சொல்லிட்டாங்க” என சங்கோஜத்துடன் நெளிந்தவாறு அவர் தன் சுட்டு விரலைத் தூக்கிக் காண்பிக்க, “குட்! இனிமேல் வேலை செய்யும்போது கொஞ்சம் கவனமா செய்ங்க என்ன” என்றவள் “ரிசப்ஷன்ல பிரேம் இருந்தா வரச்சொல்லிட்டுப் போங்க” என்று சொல்ல ஒரு புன்னகையுடனேயே அங்கிருந்து அகன்றார் அவர்.


மிகவும் நலிந்த நிலையில் இருக்கும் ஒவ்வொரு மனிதருமே ஆசைக் கொள்வது மற்றவர் தங்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என்பதைதானே? அதைச் செய்வதில்தான் பல பேருக்கு இங்கே கௌரவ குறைச்சல். அவர்களிடம் சிந்த ஒற்றைப் புன்னகைக்குக் கூட பஞ்சம்!


கடந்த எட்டு ஆண்டுகளில் இலண்டனில் அவள் சம்பாதித்த பணம் முழுவதையும் இந்த நட்சத்திர விடுதியில்தான் முதலீடு செய்திருக்கிறாள். சரியான நிர்வாகம் இல்லாமல் மிக மோசமான நஷ்டத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் இந்த ஹோட்டலின் பங்குகளைக் குறைந்த விலைக்கு வாங்கி கடந்த மாதம்தான் இதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்தாள்.


வேறொரு பெயரில் இயங்கி வந்த நிறுவனம், ‘சரணாலயம் ஹோட்டல்ஸ் ப்ரைவேட் லிமிடட்’ என மாறியிருந்தது.


ஒரு வாரமாகதான் இங்கே வரவே ஆரம்பித்திருக்கிறாள். ஓரளவுக்கு நன்றாகவே அமைந்திருந்த அந்த விடுதியின் உள்ளுக்குள்ளே சிறுசிறு மாற்றங்களைச் செய்து புதுப்பித்திருக்கிறாள். மூன்று நட்சத்திர அந்தஸ்து உள்ள ஹோட்டலை ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்துவதற்கான ஏற்பாட்டிலும் இறங்கியிருக்கிறாள். அதற்கான கட்டுமானப் பணிகளும் தொடங்கவுள்ளது. இவை அனைத்திற்கும் பக்கபலம் அவளுடைய அப்பா வசந்தகுமார் மட்டுமே.


இங்கே ஹௌஸ் கீப்பிங்கில் துப்புரவு வேலையில் ஈடுபடுபவர்தான் ஜோதி என்கிற வயது முதிர்ந்த இந்தப் பெண்மணி.


அவள் இங்கே பொறுப்பேற்ற தினம் பசி மயக்கத்துடன் அவர் வேலைக்கு வந்திருக்க, கவனமில்லாமல் போனதால் தானாக மூடிக்கொள்ளும் கதவினில் அவருடைய கை விரல் சிக்கிக்கொண்டது. அது தையல் போடுமளவுக்குக் காயத்தை உண்டாக்கியிருக்க, இரத்தம் கசிய கையில் கட்டப்பட்டிருந்த ஈரத்துணியுடன் ரிசப்ஷனிலேயே அவரை நிற்க வைத்து, “நீயெல்லாம் வேலைக்கு வரலன்னு யார் இப்ப அழுதாங்க. செஞ்ச வேலைக்கு சம்பளத்தை வாங்கிட்டுப் பேசாம வேலையை விட்டு நின்னுரு” என இவர்களுடைய மேலாளர் அவரை வசைப்பாடிக் கொண்டிருக்கும் சமயம்தான் அவளுடன் உள்ளே நுழைந்தார் வசந்தகுமார்.


இதையெல்லாம் பார்த்தவருக்குக் கோபத்தில் முகம் சுருங்கிப்போனது.


“என்ன சுரேஷ் இது, மனிதாபிமானமே இல்லாம இப்படி பேசுறீங்க?” என வெகுவாக அவரைக் கடிந்து கொண்டவர், “குயிலிம்மா, டிரைவர் கிட்ட சொல்லி இவங்கள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகச் சொல்லு” என மகளிடம் சொல்ல, வலியிலும் அந்த மேலாளரின் சுடு சொற்களிலும் துடித்துக்கொண்டிருந்த அந்த முதியவர் வியப்புடன் அவர்களை ஏறிட்டார்.


குயிலி அழைத்ததும் அவளுடைய ஓட்டுநர் அங்கே வர அவருடன் அந்தப் பெண்மணியை அனுப்பி வைத்துவிட்டு, “எவ்வளவு கஷ்டமும் தேவையும் இருந்தா இந்த வயசுலயும் அவங்க வேலைக்கு வருவாங்கன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இனிமேல் இந்த மாதிரி ரஃப்பா நம்ம ஸ்டாஃப்ஸ் யாரையும் ஹான்டில் பண்ணாதீங்க அது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அவங்க சரி ஆகி வந்த பிறகு அவங்களோட வயசுக்குத் தகுந்த மாதிரி கொஞ்சம் ஸ்ட்ரெயின் இல்லாத வேலையா அவங்களுக்கு அலாட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார்.


அன்று முதல் தன்னுடைய கண் பார்வையிலேயே அவரை வைத்திருக்கிறாள் குயிலி.


தன் மடிக்கணினியை ஆன் செய்தவள் அவர்களுடைய விடுதிக்காக தரமான ஒரு புதிய இணையத்தளத்தை நிறுவத் தேவையான தகவல்களைத் தேடத்தொடங்கக் கதவைத் தட்டிவிட்டு “நீங்க வரச்சொன்னீங்கன்னு ஜோதிம்மா சொன்னாங்க” என்றவாறு உள்ளே நுழைந்தான் பிரேம், அவளுடைய காரியதரிசி.


“ஆங்... யா பிரேம், நல்ல வெப்சைட் டெவலப்பர்ஸ் பத்திக் கேட்டிருந்தனே” என அவள் நேரடியாக விஷயத்துக்கு வர, “முகில் இன்போஸ்ன்னு ஒரு கம்பனி மேம்! என்னோட ஃப்ரெண்ட் அங்கதான் வேலை செய்யறான் அங்க என்கொயரி பண்ணி கொட்டேஷன் அனுப்ப சொல்லியிருக்கேன்” என அவன் பதில் கொடுக்க, “ஃபைன்... ரேட்ஸ் பார்த்துட்டு முடிவு செய்யலாம்” என்றவள் மடிக்கணினியை அவன் புறம் திருப்பி மாதிரிகாக சில வலைத்தளங்களைக் காண்பிக்கத் தொடங்க அதன்பின் வேலை அவளைத் தனக்குள் முழுவதுமாக இழுத்துக்கொண்டது.


ஜோதிம்மா மட்டும் சரியான நேரத்துக்கு உணவை அங்கேயே கொண்டு வந்து கொடுக்கவில்லை என்றால் அவளுக்குப் பசி தாகம் கூட மறந்து போயிருக்கும். மகளை அறிந்த தந்தையாக வசந்தகுமார் செய்து வைத்திருக்கும் ஏற்பாடு அது என்பதை நன்றாகவே அறிவாள் அவள். அவருடைய அந்த அன்பை அக்கறையை ஈடு செய்ய இந்த உலகத்தில் மற்றொருவன் பிறந்து கூட வர முடியாது என்றுதான் அவளுக்குத் தோன்றும். மனைவி மகளென்று இல்லை அவரைச் சுற்றி உள்ள அனைவருக்காகவும் பேதமின்றி அவருடைய இந்த அன்புப் பெருவெள்ளம் பொங்கிப் பிரவாகிக்கும். குயிலிக்கு அதை எண்ணி எப்பொழுதுமே ஒரு பெருமிதம் உண்டு.


*********


முக்கிய வேலைகளை முடித்துக்கொண்டு பின்மாலையில் குயிலி வீட்டிற்குள் நுழையும்போது அங்கே நிலவிய அசாத்திய அமைதியைப் பார்த்து, ‘வீடு மாறி நுழைந்துவிட்டோமோ!’ என்கிற அளவுக்கு வியப்பாக இருந்தது. வழக்கமாக, வரவேற்பறையில் ஒன்று, அம்மா அப்பாவின் படுக்கையறையில் மற்றொன்று என இரண்டு தொலைகாட்சிகளின் சப்தம் கார்டூனும் மெகா சீரியலுமாகக் கலந்து கட்டி வந்து காதைக் கிழிக்கும்.


வழக்கத்திற்கு மாறாக, புத்தகத்தை மடியில் விரித்து வைத்தவாறு ஹால் சோஃபாவில் அமர்ந்து ‘இவனைப் போன்ற நல்லப் பிள்ளையை இந்தப் பூலோகத்திலேயே பார்க்க இயலாது!’ என மற்றவர் எண்ணக்கூடிய அளவுக்குப் பதவிசாக சரண் உட்கார்ந்திருந்த தோரணையே அவன் ஏதோ மிகப்பெரிய வில்லங்கத்தை இழுத்துவிட்டிருக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொன்னது.


விழி உயர்த்தி அவன் அவளைப் பார்த்த கள்ளப்பார்வை அவளுக்கு அதை உறுதிபடுத்த, மற்ற சமயமாக இருந்தால் அவளுக்குச் சிரிப்புதான் வந்திருக்கும். ஆனால் இப்பொழுதோ அது இனம்புரியா ஒரு கலவரத்தைதான் தோற்றுவித்தது.


அவளுடைய வாகனம் உள்ளே நுழையும் ஓசையில் சுதாரித்தது சரண் மட்டுமில்லை, அவனுடைய பாட்டியும்தான். மகளின் முன்னால் வர பயந்துகொண்டு பம்மியபடி அவருடைய அறைக்குள் போய் அவர் தஞ்சம் புக, மடிக்கணினிக்குள் புகுந்து ஏதோ பழைய கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தகுமார், “இப்ப என்ன நடந்துபோச்சுன்னு இப்படி ஓடி வந்து ஒளியர பேபி?! அவ என்ன சிங்கமா புலியா? நம்ம குழந்தைதானம்மா? பாவம் ஹோட்டல்ல இருந்து டயர்டா வந்திருப்பா. நேத்தைக்கே இந்தப் பையன் அவளை உண்டு இல்லைன்னு படுத்தி எடுத்துட்டான். போ... போய் என்ன ஏதுன்னு கவனி” என்றார் இலகுவாகவே.


“ம்கும்... நம்ம குழந்தைக்கு அவ குழந்தைதான ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ். அவன் விஷயத்துல மட்டும் அவ விட்டே கொடுக்கமாட்டாளே. அதுவும் அவன் இன்னைக்கு பண்ணிவெச்சிருக்கற வில்லங்கத்துக்கு என்ன ஆட்டம் ஆடப்போறாளோ நம்ம குழந்தை. எங்க சின்னண்ணன் பேரன் கல்யாணத்துக்குக் கூப்பிட்டானேன்னு குட்டிப்பையன அழைச்சிட்டுப் போனோம் பாருங்க, அங்கப் பிடிச்சிது சனி. இவனைப் பார்த்து பாவம்... பாவம்னு சொல்லியே பிள்ளை மனசை நோகடிசுட்டாங்க எங்க பெரிய அண்ணி. அன்னைக்கு ஆரம்பிச்சது இன்னைக்கு வரைக்கும் ஓயல” என அவர் நொடித்துக்கொள்ள, அதற்குள் அவர்களைத் தேடி அங்கேயே வந்துவிட்டாள் குயிலி.


“என்னம்மா என்ன பிரச்சனை. உங்க பேரன் என்ன இப்படி நல்லவன் வேஷம் போடறான்” என அவள் இலகுவாகவே கேட்க, கற்பகமோ கலவரத்துடன் கணவரை ஏறிட, ‘சொல்லு, நான் சமாளிக்கறேன்!’ என்பதைப்போல புன்னகையுடனேயே மனைவியை ஊக்குவித்தார் வசந்தன்.


“ஒண்ணும் இல்லடீ, காலைல நான் கொஞ்சம் கண் அசந்த நேரமா பார்த்து உன் பிள்ளை என் ஃபோனைத் தூக்கிட்டுப் போய் பாத்ரூம்குள்ள புகுந்துட்டான்”


அதில் அதிர்ந்து அவள் பார்த்த பார்வையில், “இல்லடி, அவன், ஃபோன்ல என் கைரேகையை உருட்டினது கூட தெரியாத அளவுக்குத் தூங்கிட்டேன் போலிருக்கு” எனப் பரிதாபமாக விளக்கம் கொடுத்தவர், “நல்ல வேளையா வெளியில போயிருந்த உங்க அப்பா வரவும் அவனோட சத்தத்தையே காணுமேன்னு தேடப்போய் வகையா மாட்டினான். ஃபேஸ்புக்ல போய் அவனோட அப்பா பேரைக் கொடுத்து சர்ச் பண்ணியிருப்பான் போலிருக்கு. ஆனா யாருக்கும் ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் எதுவும் அனுப்பல” என அவசர அவசரமாகச் சொல்லி முடித்தார்.


தெரிந்தோ தெரியாமலோ இப்படி ஒரு இறுக்கமான சூழ்நிலை உருவாகிவிட்டிருந்த போதும் கூட பிரச்சனை ஆறும் வரை ஒரு சில நாட்கள் தன் கைப்பேசியை அணைத்து தூர எரிய மனமில்லை அவருக்கு எனும்போது அவளுக்கு ஆயாசமாகதான் இருந்தது. நேற்றே சிறு வாக்குவாதம் உண்டாகி அடங்கியிருக்க, மீண்டும் ஒருமுறை அவரைக் கடிந்து பேச மனமும் வரவில்லை. வயது முதிர்ந்த தன் தாயையா இல்லை உலகமே அறியாத தன் மகவையா, யாரையென்று நோவது?


தன் நிலையை நொந்தபடி தலையைப் பிடித்துக்கொண்டு அப்பாவுக்கு அருகில் போய் உட்கார்ந்தாள் மகள்.


ஆதரவாக அவள் தோளைப் பற்றியவர், “அவனும் சின்ன குழந்தைதானம்மா, கொஞ்சம் தெளிவா பேசினா புரிஞ்சிப்பான். இல்லன்னா அவனுக்கு ஏதாவது ஒரு டாஸ்க் கொடுத்து அதை முடிக்கச் சொல்லு. அப்பதான் உங்க அப்பாவைப் பத்தின தகவலை உனக்கு சொல்லுவேன்னு சொல்லு. அவனோட இந்தத் தீவிரமும் குறையும். நமக்கும் கொஞ்சம் கால அவகாசம் கிடைக்கும்” என அவர் தன்மையாகச் சொல்ல, அவளுக்கும் அதுதான் சரி என்று பட்டது.


மனதும் சற்றுத் தெளிந்தது.


அதே நேரம், உள்ளே சென்று சில நிமிடங்கள் ஆகியும் அம்மா இன்னும் வெளியில் வந்தபாடில்லையே என்கிற பதற்றத்துடன் ஒரு யுத்தத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் வீரனுக்கு உரித்தான மனநிலையில் கதவை லேசாகத் திறந்து எட்டிப்பார்த்தான் சரண்.


அங்கிருந்த மூவரின் பார்வையும் ஒருசேர அவனிடம் செல்ல, “கோவப்படாம அவனைக் கொஞ்சம் ஸ்மூத்தாவே ஹான்டில் பண்ணு கண்ணம்மா!” என அவளுடைய காதுக்குள் கிசுகிசுத்தார் வசந்தன் ஒரு அழுத்தமான தொனியில்.


ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக்கொண்டவள் மகனைப் பார்த்து சகஜமாகப் புன்னகைக்க, அவனுடைய முகத்தில் திகைப்பின் ரேகைப் படர்ந்தது.


அவளுடைய புன்னகைக் கொடுத்த துணிவில் வேகமாக ஓடிவந்து அவள்மீது விழுந்தவன் அவளுடைய கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டான். அம்மாவுக்குப் பிடிக்காத ஒரு செயலை செய்துவிட்டோமே என்கிற குற்றவுணர்ச்சியா இல்லை ‘தப்பிச்சோம்டா சாமி’ என்கிற ஆசுவாசமா எனப் பிரித்தறிய முடியாவண்ணம் இருந்தது அவனது அந்தச் செய்கை.


மனம் நெகிழ்ந்துபோய், அம்மாவுக்கே உரித்தான ஒரு வாஞ்சையுடன் அவனுடைய குண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். வியப்பு மாறாமல் விழி உயர்த்தி அவளுடைய முகம் பார்த்தவன், “என் மேல கோபம் இல்லையாம்மா?!” என்று கேட்டு, பதிலுக்குக் கண்களை உருட்டி அவள் பார்த்த பார்வையில், “சாரிம்மா!” என்றவாறு தலை குனிந்தான்.


“செய்யறதெல்லாம் செஞ்சிட்டு நல்லா பயந்தவன் மாதிரி எப்படிடா உன்னால இந்த லுக்கு விட முடியுது. பாரு உன்னால எனக்கும் என் பெண்ணுக்கும்தான் தேவையில்லாத பிரச்சனை” என்றார் கற்பகம்.


“சாரி பாட்டி! அப்பாவைப் பத்தி தெரிஞ்சுக்கற க்யூரியாசிட்டிலதான் அப்படி செஞ்சிட்டேன். இனிமேல் அப்படி செய்யமாட்டேன்” என அவன் பதில் கொடுக்க, சட்டென இழுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டு அவனை அணைத்தபடி மௌனமாக உட்கார்ந்திருந்தவருக்குப் பேச்சே வரவில்லை, அவரது விழிகளின் ஓரம் கண்ணீர்தான் கசிந்தது.


அதை உணர்ந்து அவசரமாகத் தன்னை விடுவித்துக்கொண்டவன், மெத்துமெத்தென்ற அவனது பிஞ்சு விரல்களால் அவரது கண்ணீரைத் துடைத்தவாறு, “நிஜமாவே சாரி பாட்டி. இனிமேல் நான் உங்க ஃபோனை எடுக்கவேமாட்டேன்” என அவன் வருத்தத்துடன் சொல்ல, “எனக்கு இனிமேல் இந்தப் பாழாய் போன ஃபோனே வேணாம் போடா” என்றார் அவர் ரோஷத்துடன்.


ஆனால் அவரது இந்த முடிவு சில நிமிடங்கள் கூட நீடிக்காது என்பது புரியத் தந்தை மகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.


பாட்டி பேரன் இருவரும் இயல்புக்குத் திரும்பும் வரை பொறுத்திருந்தவர், “கண்ணா, அம்மா உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும்னு சொன்னா! நீ அதை கவனமா கேட்டுப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு என்ன” என வசந்தன் சொல்லக் கேள்வியாக குயிலியைப் பார்த்தான் சரண்.


“ஏன் சரண், அம்மா உன்னை நல்லபடியா கவனிச்சுக்கலன்னு நினைக்கறியா. அதனாலதான் அப்பாவைக் கேட்டு இப்படி அடம் பிடிக்கறியா” எனக் கவலை தோய்ந்த குரலில் குயிலி கேட்க, அவள் மனநிலையை உள்வாங்கியவனாக, “நோ... மா. ஐ நெவெர் திங்க் லைக் தட்” என்றபடி குற்றவுணர்ச்சி மேலோங்கத் தலை குனிந்தான் அவளுடைய செல்வன்.


“அப்பறம் ஏன் கண்ணு இப்படியெல்லாம் வியர்டா பிஹேவ் பண்ற?” என அவள் இதமாகவே கேட்க ஒரு துடிப்புடன் அவளைத் தலை நிமிர்ந்து பார்த்தவன், “அன்னைக்கு அந்தப் பாட்டி என்னைப் பார்த்து பாவம் பாவம்னு சொன்னாங்க இல்லம்மா? லண்டன்ல இருந்த வரைக்கும் அப்பா இல்லன்னா அது அவ்வளவு பேட்ன்னு எனக்கு தெரியாது. ஆனா இங்க என் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர அவங்க அப்பாதான் ஸ்கூல்ல டிராப் பண்றாங்க” என்றவன் சட்டென அருகிலிருந்த பாட்டியின் செல்ஃபோனைக் கைப்பற்றி வேகமாக அவனுடைய இன்ஸ்டாகிராம் செயலிக்குள் நுழைந்து அதில் சில படங்களை அவளிடம் காண்பித்து, “பாரும்மா... அவங்க எல்லாரும் எப்படி ஃபேமிலியா பிக்சர்ஸ் போடறாங்க. எனக்கு லோவா ஃபீலாகுது” என்றான் ஒரு மரத்த தொனியில்.


அங்கே இருந்த வரை யாரும் இப்படி இவனது நிலையை ஒரு குறையாக அடிக்கோடிட்டு இவனுக்கு மிகைப்படுத்திக் காண்பித்ததில்லை. ஆனால் அந்த வேலைதான் இங்கே உள்ளவர்களால் சிறப்பாக செய்யப்படுகிறது என்பதால் இவனுக்கு இதெல்லாம் கருத்தில் பதிகிறது என்பது விளங்க, சுள்ளென அவளுடைய மனதிற்குள் முள் ஒன்று தைத்தது.


“உன் கிளாஸ்ல உன்னை மதிரி சிங்கிள் பேரன்ட் சைல்ட் வேற யாருமே படிக்கலியா?” என தன் பக்க நியாயத்திற்கு அவள் துணைத் தேட, “யா... ஆர்த்தி இருக்காளே. ஆனா அவ என்னை விட ரொம்ப பெரிய பாவம். ஏன்னா அவளோட மாம் அவளோட பயலாஜிக்கல் ஃபாதார டிவோர்ஸ் பண்ணிட்டு வேற மேரேஜ் பண்ணிட்டாங்களாம். ஸோ, அவ அவங்க தாத்தா பாட்டி கூடதான் இருக்கா” என்றவனது பதிலில் சில நொடிகள் பேச்சே வரவில்லை அவளுக்கு. அவளுக்கு இந்தச் சூழ்நிலைகளெல்லாம் நன்றாகவே புரியும்.


சரண் அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து, “ஓகே செல்லம், உன்னோட அப்பாவைப் பார்க்க அம்மாவே உனக்கு ஹெல்ப் பண்றேன். ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என அவள் சொல்லி முடிக்கவில்லை, “தேங்க்யூ ம்மா” என்று பாய்ந்து வந்து அவளை அணைத்தவன், “எப்பம்மா அப்பா கிட்ட என்னை கூட்டிட்டுப் போவ” என ஆவலுடன் கேட்க, “ஒரு சிக்ஸ் மந்...ஸ்” என அவள் முழுமையாகச் சொல்லக்கூட இல்லை, “நோ... நோ... அவ்வளவு லாங் பீரியட் எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது” என இடைப்புகுந்தான்.


அதில் அவள் பொறுமை இழந்து மூச்சை இழுத்து விட்டபடி அவளுடைய அப்பாவைப் பார்க்க, “அடேய் பையா, உங்க அம்மா இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கறதே ரொம்ப பெரிய விஷயம், அதைப் புரிஞ்சிக்கோ” என வசந்தன் மகளின் சார்பாகச் சொல்ல, அவன் பார்த்த பரிதாப பார்வையில், “கண்ணா உங்க அம்மா இங்க வந்து, எக்கச்சக்கமா இன்வெஸ்ட் பண்ணி இந்த பிசினஸ்ல இறங்கியிருக்கா, இப்ப அவ மெண்டலி டிஸ்டர்ப் ஆனான்னா அவளால வேலைல கான்சன்ட்ரேட் பண்ண முடியாம போயிடும். அப்ப நிறைய லாஸ் ஆயிடும் இல்ல. நீதான் பயங்கர புத்திசாலி ஆச்சே. இதெல்லாம் உனக்குப் புரியாதா என்ன?” என அவர் மேலும் எடுத்துச் சொல்ல அவர் சொல்வதில் இருக்கும் நியாயம் புரியவும் சில நிமிடங்கள் குயிலியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான்.


அவன் யோசிக்க நேரம் கொடுத்து மற்றவர் மௌனமாக இருக்க, அவன் என்ன சொல்லப் போகிறான் என்கிற ஆவலில் அவனையே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார் கற்பகம்.


“ஓகே தாத்தா, பட் சிக்ஸ் மன்த்ஸ்லாம் என்னால வெய்ட் பண்ண முடியாது. இந்த இயர் என் பர்த்டேவ என்னோட அப்பாவோடதான் செலிப்ரேட் பண்ணும். அதுக்கு என்னை பாவம்னு சொன்னாங்க இல்ல அந்தப் பாட்டி... அவங்கள இன்வைட் பண்ணனும்” என அவன் அழுத்தமாகச் சொல்ல, மகனுடைய மனதை மாற்றுவதென்பது கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து கொக்கைப் பிடிக்கும் கதைதான் என்பது நன்றாகவே விளங்கியது குயிலிக்கு. ஆனாலும் அவனது பிறந்தநாளுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் இருக்க, “சரி... பட்... நீ இனிமேல் ஒரு நாள் கூட ஸ்கூலுக்கு லீவ் போட கூடாது. கிளாஸ் வொர்க் பெண்டிங் வைக்கக் கூடாது. எதுக்குமே பிடிவாதம் பிடிக்கக் கூடாது. பர்டிகுலர்லி ஃபோன் யூஸ் பண்ணவே கூடாது” என்று பல நிபந்தனைகளுடன் தன் சம்மதத்தை குயிலி சொல்ல, அவள் முகம் முழுவதிலும் முத்தத்தால் நிரப்பினான் சரண், “தேங்க் யூ ம்மா” என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே.


அம்மா சொன்னதை நிச்சயம் செய்து முடிப்பாள், விரைவிலேயே தகப்பனைப் பார்க்கப்போகிறோம் என்கிற நம்பிக்கை நிரம்பி வழிந்தது அவனுடைய முகத்தில். நினைத்ததைச் சாதித்துவிட்ட நிம்மதியின் சாயலும் அங்கே படர்ந்திருந்தது.


‘இதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியப்படுமா!?’ என மற்ற மூவருக்கும்தான் லேசான பயம் பிடித்துக்கொண்டது.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page