top of page

Valasai Pogum Paravaikalaai - 27

27 - மறுமலர்ச்சி


இரண்டு வருடங்கள் கடந்து சில மாதங்கள் ஆகியிருந்த நிலையில்...


சூர்யாவின் வீடாக இருந்தது இப்பொழுது அஞ்சு மற்றும் தங்கம் இருவருக்குமான வீடாக அவர்களது நிரந்தர வசிப்பிடமாக மாறியிருந்தது. தரைத் தளத்தில் அஞ்சுகமும் முதல் தளத்தில் தங்கமயிலும் குடியிருந்தனர்.


குயிலி சூர்யாவுடன் சுமுகமாகப் போய்விட்டதால் அவள் ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை மனமுவந்து ஒப்புக்கொண்டாள் அஞ்சு. குயிலியுடைய நட்சத்திர விடுதி, தங்கும் விடுதிகள், உணவகங்கள் தொடர்பான அனைத்து சலவை வேலைகளையும் முதலில் பயிற்சியாகத் தட்டுத்தடுமாறிக் கற்றுக்கொண்டாள். இப்பொழுது சில மாதங்களாக கணவனின் துணையுடன் தனித்து இயங்குகிறாள். ஓரளவுக்கு அவளது வருமானமும் பெருகத் தொடங்கியுள்ளது.


சின்னவள் லட்சுமி ஒன்பதாம் வகுப்பில் படிக்க, மூத்தவள் கல்யாணி அவள் விரும்பியபடியே நுழைவுத் தேர்வில் வெற்றிப் பெற்று சட்டக் கல்லூரியில் இடம் கிடைக்க, இப்போது பீ.ஏ.பி.எல். ஹானர்ஸ் மூன்றாம் ஆண்டில் இருக்கிறாள்.


இருள் கூட விலகாத அந்தக் காலைப் பொழுதில் பிள்ளைகள் இருவரும் புத்தகமும் கையுமாக அமர்ந்திருக்க எல்லோருக்கும் தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து வைத்தவள், “மாமா... டீ ஆறுது பாரு, சீக்கிரம் வந்து குடி” என்று குரல் கொடுக்க, ஒரு நோட்டுப் புத்தகத்தை விரித்து வைத்தபடி அறைக்குள் உட்கார்ந்து ஏதோ கணக்கைச் சரிபார்த்துக் கொண்டிருந்த சீனு அதை அப்படியே மூடி வைத்துவிட்டு வெளியில் வந்தான்.


அவன் தேநீர் குவளையைக் கையில் எடுக்கவும், “இன்னைக்குப் பெரிய ஹோட்டல்ல நிறைய வேலை இருக்கு. தங்கம் என்னை ஹெல்புக்குக் கூப்பிட்டு இருக்கா. அவ காலைல சீக்கிரமாவே கிளம்பணும்னு சொல்லிட்டு இருந்தா. மேல போய் அவளைப் பார்த்துட்டு வந்துடறேன்” என்றவள் தங்கத்தைத் தேடிப் போனாள்.


அந்த நேரத்திற்கே குளித்து தயாராகி நின்றிருந்தாள் தங்கம். நாள் முழுதும் ஓடியாடி வேலை செய்ய ஏதுவாக ஒரு காட்டன் சுடிதார் அணிந்து பளிச்சென்று நின்றவளைப் பார்த்ததும் அஞ்சுவுக்கு அன்றைய விடியலே களைக்கட்டிவிட்டது.


“ஓய் மேகலா, உங்க அம்மா எங்கடி? சோம்பேறி மாதிரி இன்னும் தூங்கிட்டு இருக்காளா?” என வேண்டுமென்றே தன் கேலியைத் தொடங்க, “ஏய்... பொழுதுவிடிய என் கிட்ட ஒத வாங்கப் போரடீ நீ” என அவளை மிரட்டுவது போல் சொன்னாள் தங்கம், ஆனால் சிரித்துக் கொண்டே.


“ஓ... தங்கமாடி நீ? சாரிடி... சாரிடி... நான் மேகலான்னு நினைச்சுட்டேன்” என மேலும் அவளை ஓட்ட, “ஆத்தா அங்காள பரமேஸ்வரி... உன்கூட மல்லுக்கட்ட காலைல எனக்கு டைம் இல்ல, ஆளை விடு!” எனத் தங்கம் கையெடுத்து அவளைக் கும்பிட, “பிழைச்சுப் போ” என விட்டுக் கொடுத்தவள், “உண்மையிலேயே என் கண்ணே பட்டுடும் போல இருக்கடி தங்கம். பள்ளிக்கூடத்துல படிக்கறப்ப இருந்த பாரு, கிட்டத்தட்ட அந்த மாதிரி இருக்க” என்றாள் நிறைந்த மனதுடன். அவளது பாராட்டில் தங்கத்துக்கு முகமே சிவத்து போனது.


“போதும் விடுடி” என்றவள், “எனக்கு இப்ப வண்டி வந்துடும். நான் கிளம்பறேன். இராத்திரியெல்லாம் பேசிட்டே இருந்தோமா, அதனால ரெண்டு பேரும் சரியாவே தூங்கல. பாவம் இந்த மேகலா பொண்ணு , இப்பதான் அசந்து தூங்கிட்டு இருக்கு. அது மேல ஒரு கண்ணு வெச்சிக்கோ. அது எழுந்ததும் ஒரு டீ மட்டும் கொடுத்துடு போதும். காலைலயே கிளம்பி முகிலன் சார் வீட்டுக்குப் போய் இன்னைக்கு நாள் ஃபுல்லா அவங்க ஞானி தாத்தா கூடத்தான் இருக்கப் போகுதாம். அவங்க கூடவே கிளம்பி ஃபங்க்ஷனுக்கு வரேன்னு சொல்லிடுச்சு” என்று சொல்லிக் கொண்டிருக்க அவளது கைப்பேசி ஒலித்தது.


“கேப் வந்துடுச்சு, நான் கிளம்பறேன். நீ ஒரு ஒன்பது மணி போல அங்க இருக்கற மாதிரி வந்துடு” என்று சொல்லிவிட்டு அழைப்பை ஏற்றுப் பேசியபடியே கீழே இறங்கிப் போனாள் தங்கம்.


அவளது தைராய்ட் பிரச்சனைக்குத் தொடர்ந்து மருத்துகள் எடுத்து அதைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள், சத்தான ஆகாரம் உடற்பயிற்சி என தன் உடலினை உறுதி செய்தாள். அதுவே ஒரு தனி அழகையும் மிடுக்கையும் கம்பீரத்தையும் அவளுக்குக் கொடுத்தது.


குயிலி சொன்னபடி ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் அடிப்படையிலிருந்து வேலைகளைக் கற்றுக்கொண்டு திறம்பட தன் தகுதியையும் வளர்த்துக் கொண்டிருக்கிறாள். அதன் பலன் பிரேமுக்கு நிகரான ஒரு பதவியில் நல்ல சம்பளமும் பெறுகிறாள்.


முறையான படிப்பு இல்லாத காரணத்தால் வேறு எந்த நிறுவனத்திலும் இப்படி ஒரு வாய்ப்பு அவளுக்குக் கிடைத்திருக்க சாத்தியமே இல்லை. எல்லாம் குயிலியால் நடந்தது.


ஆனால் அந்தக் குறையும் இருக்கக்கூடாது என முறையாகப் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி, நல்ல மதிப்பெண்களுடன் தேர்வாகி மேல் படிப்புக்கும் விண்ணப்பித்திருக்கிறாள். பயிற்சி வகுப்பில் சேர்ந்து ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசும் அளவுக்குத் தேறியிருக்கிறாள்.


தங்கத்தின் இந்த மாற்றம் அவளுக்குத் தந்த மகிழ்ச்சியை வடிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். காலம் தனக்குள் பொத்தி வைத்திருக்கும் அதிசயங்களை யாராலும் கணிக்க முடியாது போலும்!


சில மாதங்களுக்கு முன் இந்த வீட்டை அஞ்சு மற்றும் தங்கம் இருவரின் பெயரிலும் மாற்றி எழுதிக் கொடுத்த தினம் தெய்வசிகாமணி அப்பா அவளிடம் சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தது.


“அன்னைக்கு ஒரு நாள் அருள்வாக்கு மாதிரி நான் ஒண்ணு சொன்னேனே உனக்கு ஞாபகமிருக்கா அஞ்சும்மா” என்று அவர் கேட்க, நெற்றிச் சுருக்கி யோசித்தவள் ‘என்ன?’ என்பது பிடிபடாமல் நினைவு அடுக்குகளில் தீவிரமாகத் தேடத் தொடங்கினாள்.


“ரொம்ப யோசிச்சு மண்டையை உடைசுக்காத” எனக் கிண்டலாகச் சொன்னவர், “அன்னைக்கு வலசைப் போற பறவைகளைப் பத்தி நீ சொன்ன போது ‘இப்ப கூட எதுவும் முடிஞ்சு போகல இன்னும் உங்களுக்கு ஒரு நீண்ட வாழ்க்கை இருக்கு. காலம் ஒரு நாள் மாறும். அது ஒரு நல்ல முகத்தை உங்களுக்கு நிச்சயம் கொடுக்கும். உங்கப் பிள்ளைகளோட சேர்ந்து நீங்களும் கூட முன்னேறலாம்’ன்னு நான் சொன்னப்ப உனக்கு அதுல நம்பிக்கையே இல்ல இல்லையா?


ஆனா எல்லாமே ஒவ்வொண்ணா நடக்குது பார்த்தியா?


வலசைப் போகும்போது பறவைகளோட உருவம் வேணா மாறி வேற மாதிரி நம்ம பார்வைக்குத் தெரியலாம். ஆனா அதோட உணர்வுகளும் வாழ்க்கை முறையும் எப்பவுமே மாறிப் போகாது. ஒண்ணை ஒண்ணு வழி நடத்தி, தன் பயணத்தைத் தொடர்ந்துட்டே இருக்கும். சோர்ந்து போய் தன்னோட முயற்சியைக் கை விடாம பல மயில் தூரம் பறந்து வந்து, பொருத்தமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, தனக்கான அழகானக் கூட்டைக் கட்டிட்டு, தன் இணையோட கூடி வாழ்ந்து, முட்டை இட்டுக் குஞ்சுப் பொரிச்சு அந்தக் குஞ்சுகளையும் கூட்டிட்டு தான் வாழ்ந்த இடத்துக்கே திரும்பப் போகும்.


அடுத்த சீசன்னுகுள்ள அந்தக் குஞ்சுகள் வளர்ந்து வலசைக்குத் தயாராகிடும்.


இதுதான் வாழ்கையின் சுழற்சி.


தன் சிறகுகளை மட்டுமே நம்பிப் பறக்கற பறவையோட தன்னம்பிக்கை நமக்கும் இருந்தா போதும். வாழ்க்கைல எந்த உயரத்தை வேணாலும் நம்மால தொட முடியும்” என்று சொல்லி அவள் முகத்தைப் பார்த்தவர், “உண்மைன்னு இப்பயாவது ஒத்துப்பியா” என்று கேட்டார்.


கண்கள் பனிக்கத் தலை அசைத்து அவர் சொன்னதை ஆமோதித்தாள் அவள்.


அவர் சொன்ன ஒவ்வொன்றும் எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று எண்ணும்போது இப்பொழுதும் கூட அஞ்சுவுக்கு உடல் சிலிர்த்தது.


யோசனையுடன் உறைந்து நின்றவள் கதவு திறக்கும் சத்தத்தில் தன்னை மீட்டுக் கொண்டாள். “கோல்ட் கிளம்பி போயிடுச்சா அஞ்சும்மா... ப்ச்... அது கூட தெரியாம நல்லா தூங்கிட்டேன்” என தன் துப்பட்டாவால் முகத்தைத் துடைத்தபடி அவளுக்கு அருகில் வந்து நின்றாள் மேகலா.


அவளது குரலில் தொனித்த வருத்தத்தில், “ஜஸ்ட் இப்பதான்டீ கண்ணு போனா. இதுக்காக ஏன் ஃபீல் பண்ற?” என்று அஞ்சு கேட்க, “இல்ல அஞ்சும்மா, மிட் நைட்ல தூக்கம் கலைஞ்சு திரும்பிப் படுத்தேனா, அம்மா கிட்ட இருந்து விசும்பல் சத்தம் வந்துது. லைட் போட்டுப் பார்த்தா அழுதுட்டு இருந்தாங்க” என அவள் சொல்லி முடிக்கவில்லை, “ப்ச்... வேற என்ன? நீ வெளிநாடு போக இன்னும் ஒரு மாசம் கூட இல்லையே. மகளைப் பிரிஞ்சு எப்படி தனியா இருக்கப் போறோமோன்னு வேதனை, நீ அங்க போய் எப்படி சமாளிப்பியோன்னு பயம் இதெல்லாம்தான் காரணம்” என்றாள் அஞ்சு குறையாக.


“இல்ல அஞ்சும்மா, அம்மா இதுக்கெல்லாம் மென்டலி பிரிபேர் ஆகணும். நான் இங்க இருந்தா எங்க ரெண்டு பேரையுமே நிம்மதியா இருக்க விடமாட்டான் அந்தக் கொலைகாரக் கிழவன்” என்றாள் காட்டமாக.


‘பெரியவங்களை மரியாத இல்லாம பேசாதே’ என அஞ்சுவால் அவளை அடக்க முடியாது. தங்கத்தின் அப்பா மாசிலாமணி செய்துகொண்டிருக்கும் விபரீதங்கள் அப்படி.


“சரி விடு, கீழ வந்து டீக் குடிச்சிட்டு முகிலன் சார் வீட்டுக்குக் கிளம்புவியாம். உங்க அம்மா சொல்லிட்டுப் போனா” என அஞ்சு கீழே இறங்கிப் போனாள்.


சிறையிலிருந்து விடுதலை ஆனதும் மாசிலாமணி முதல் காரியமாக மகளைத் தேடி வந்தார். இப்படி அவள் தனியே இருந்தால் அது தனக்கு அவமானம் என அவளைத் தன்னுடன் ஊருக்கே வந்துவிடுமாறு தேனொழுக அழைக்க, முற்றிலும் மறுத்திருந்தாள் தங்கம்.


முதலில் நல்லவர் போலத் திரும்பிப் போனவர் சில மாதங்களிலேயே, மனைவி மகன்-மருமகள்கள் என ஒரு கூட்டத்தையே தன்னுடன் கூட்டி வந்து சில தினங்கள் மகள் வீட்டில் டேரா போட்டார்.


அப்பொழுது தங்கம் வாடகை வீட்டில்தான் இருந்தாள். வேறு வழி இல்லாமல் வேலைக்கு விடுப்பு எடுத்து எப்படியோ எல்லோருக்கும் பொங்கிப் போட்டு அவள் சமாளிக்க, பிறகுதான் தெரிந்தது அவர்கள் எல்லோரும் அங்கே வந்ததன் நோக்கமே.


அதாவது, தங்கத்தின் இரண்டாவது அண்ணனின் மகனுக்கு மேகலாவைத் திருமணம் செய்து கொடுக்குமாறு விஷத்தைக் கக்கினார் மனிதர். இதில் என்ன கொடுமை என்றால், அவனுக்கு முன்பே ஒரு திருமணம் முடிந்து அவனது நடத்தைப் பிடிக்காமல் அந்தப் பெண் அவனை விட்டுவிட்டுப் போய்விட்டாள். அந்த அவமானத்தைத் துடைக்க மேகலாவைப் பலி கேட்டார்.


அந்த நேரத்தில் அவள் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்கவில்லை. பதறிய தங்கம் அதற்கு சம்மதிக்காமல் போக, அவர் கொலைச் செய்துவிட்டு சிறைக்குச் சென்றதை ஏதோ தங்கத்துக்காகத் தியாகம் செய்த ரீதியில் சித்தரித்து நன்றிக் கெட்டவள் என அவளைத் தரக்குறைவாகப் பேச, தங்கத்துக்காகப் பரிந்து பேச அங்கே யாருமே இல்லாமல் போகவும் அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.


அவ்வளவுதான் அதற்கு மேல் கொஞ்சம் கூட மேகலாவால் பொறுக்க முடியவில்லை.


மனதிற்குள் கலங்கினாலும், கணவன் செய்வது அநியாயம் என்றே தெரிந்தாலும், அதில் அவருக்குத் துளி கூட உடன்பாடே இல்லை என்றாலும், மகளின் பக்கம் நின்று பேசக்கூடத் துணிவில்லாமல் புடவை முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு அழுகையை அடக்கும் பாட்டியைப் பார்த்தாள்.


திரும்பத் திரும்ப இந்தக் கல்யாணம் என்கிற வார்த்தையே செவிகளில் விழ அவளுக்கு அப்படி ஒரு எரிச்சலைக் கொடுத்தது.


அம்மா பாட்டி என இந்தத் திருமணத்தால் எந்த ஒரு சுகத்தையும் அனுபவிக்காமல், தன்னிச்சையாகச் செயல்பட இயலாமல் அடிமை வாழ்க்கை வாழும் பெண்களை எண்ணி அசூயையாக இருந்தது.


எத்தனை தலைமுறைக் கடந்தாலும், கையிலும் காலிலும் விலங்குப் பூட்டாமல், பெரிய பெரிய மதில்கள் சூழ்ந்த மிகப் பெரிய பூட்டுக்களால் பூட்டப்பட்ட பிரம்மாண்ட இரும்பு கதவுகளால் ஆனச் சிறைக்குள்லெல்லாம் அடைக்காமல், அறிவுக்கு விலங்குப் போட்டு மனதுக்குப் பூட்டுப் போட்டு திருமணம் என்ற பெயரில் வீட்டுப் பெண்களைச் சிறைப்படுத்தி வைக்கும், இந்த அடிப்படைப் புத்தி மாறாத சுயநலம் பிடித்த மனிதர்களைப் பார்க்கும்போது அவளுக்குக் கொன்றுபோடும் வெறி உண்டானது.


தாத்தாவாம்! பாட்டியாம்! தாய் மாமன்களாம்! அத்தைகளாம்! பேணிப் பாதுகாக்க இல்லாமல் பிய்த்துத் தின்னும் உறவுகள் எதற்கு?


ருத்திர காளி அவதாரம் பூண்டவள், உருப்படாத ஒருவனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்து, அந்த வாழ்க்கை நீடிக்காமல் போனப் பின்னும் நியாயமாக அவர்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கூட கொடுக்காமல், நிராதரவான நிலையில் வீட்டை விட்டே வெளியேறும் அளவுக்கு அவளுடைய அம்மாவைப் பாடாய்ப் படுத்திவிட்டு இவ்வளவு நாட்களும் கண்டும் காணாமலும் இருந்தவர்களை தன் ஆத்திரம் தீரக் கேள்விக் கேட்டு ஒரு சேர எல்லோரையும் கிழிக் கிழி எனக் கிழித்துவிட்டாள். மேலும் வார்த்தைகள் தடித்தால் அடிக்கவும் கூடச் செய்திருப்பாள்.


மகளைத் தடுக்கும் நிலையிலெல்லாம் தங்கம் இல்லை. அந்தளவுக்கு அவளுடைய கை மீறிப் போயிருந்தாள் மேகலா. அவளுடைய அப்பாவைப் பற்றித் தெரிந்ததால் உண்டான பயத்துடன் அப்பிடியே உறைந்து நின்றுவிட்டாள்.


கண் மண் தெரியாத ஆத்திரத்தில், அவளைத் தடுக்காத தங்கத்தின் மீது முதலில் கை நீட்டியவர் இடையில் புகுந்து தடுக்க வந்த மேகலாவையும் ஓங்கி அறைந்துவிட, அவளது உதடு கிழித்து ரத்தம் வந்தது.


அப்படியும் கூட கொஞ்சமும் பின்வாங்காமல், தன் பலம் கொண்ட மட்டும் அவரை இழுத்துக் கீழே தள்ளியவள் அப்படியே வீட்டை விட்டு வேகமாக வெளியேறினாள். அதே வேகத்தில் காவல் நிலையம் போய் புகார் கொடுத்தவள் குயிலிக்கும் தகவல் சொன்னாள்.


அனைவரையும் கொத்தோடுத் தூக்கி வந்து காவல் நிலையத்தில் போட்டனர்.


சில நிமிடங்களுக்குள் நேராக அங்கே வந்து நின்றாள் குயிலி. கேள்விப்பட்டு அங்கே முகிலனும் வந்துவிட, அவர்களுக்கு அங்கே இருக்கும் செல்வாக்கைப் பார்த்துப் பதறி அவளை அடித்தப் பெரியவரை மட்டும் தனியே சிக்க வைத்துவிட்டு மற்றவர் எல்லோரும் கமுக்கமாக ஊருக்கே போய்விட்டார்கள்.


தங்கத்தின் அம்மாதான் அவள் காலில் விழாதக் குறையாகக் கெஞ்சி, கொடுத்தப் புகாரைத் திரும்பப் பெற வைத்தார். ஆனாலும் திருந்தவில்லை மனிதர். அடிக்கடி வந்து அவர்களுக்குத் தொல்லைக் கொடுத்துக் கொண்டே இருக்க, அது மேகலாவின் படிப்பைப் பாதித்தது.


சரண், கல்யாணி, லட்சுமி, மேகலா என நான்கு பிள்ளைகளையும் முகிலனுக்கு அவ்வளவு பிடிக்கும். இந்த சில மாதங்களில் குயிலியுடன் மட்டுமில்லாமல் அவர்களுடனும் நல்ல நட்பை வளர்த்துக் கொண்டிருந்தான். அதுவும் இந்த சம்பவத்துக்குப் பிறகு மேகலாவை தன் நேரடிப் பாதுகாப்பில் வைத்துக்கொண்டான். அவள் நீட் தேர்வுக்குத் தயார் செய்துகொண்டிருக்கவே, அவளுக்குத் தானே உதவி செய்வதாக ஞானி சொல்லிவிட, தினமும் அவர்கள் வீட்டுக்குப் போய் தேர்வுக்குத் தயார் செய்யத் தொடங்கினாள்.


பல வருடங்களாகத் தனிமையிலே தவித்தவருக்கு அவளது வருகை ஒரு மறுமலர்ச்சியைக் கொடுக்க, அவருடைய சிரிக்கச் சிரிக்கப் பேசும் இயல்பிலும் அவர் செலுத்தும் அன்பிலும் அவருடன் ஒன்றிப்போனாள் மேகலா. அது அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு அழகானப் பிணைப்பை உருவாகியது. அவள் அங்கே போக ஆரம்பித்தப் பிறகு மற்றப் பிள்ளைகளும் அவளுடன் அங்கே செல்லத் தொடங்க, அவருடைய வாழ்க்கை முறையே மாறிதான் போனது.


இதற்கிடையில் மேகலாவின் பாதுகாப்பைக் கருதி அஞ்சுவும் தங்கமும் ஒரே வீட்டில் இருக்கும்படியான ஒரு ஏற்பாட்டைச் செய்தான் சூர்யா.


எல்லாம் ஓரளவுக்குச் சுமுகமாகச் செல்ல, பன்னிரண்டாம் வகுப்பில் நல்லபடியாகத் தேறியவள் நீட் எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றாள். ஆனால் அவள் வாங்கியிருந்த மதிப்பெண்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போக, தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு அவர்களுடைய நிதி நிலை இடங்கொடுக்கவில்லை.


குயிலி உதவ முன்வந்தாள்தான். ஆனால் அதை ஏற்கத் தங்கத்தின் மனம் இடங்கொடுக்கவில்லை.


அதிகம் யோசித்து, ஜமாய்க்காவில் உள்ள ஒரு மருத்துவப் பல்கலைக் கழகத்தில் அவள் முறையாக விண்ணப்பிக்க உடனே இடம் கிடைத்துவிட்டது.


அவளுடைய அப்பா கொலை செய்யும் அளவுக்குக் கூடப் போவார் என்பது புரிந்தே இருக்க, இங்கே இருந்து இவ்வளவு குழப்பங்களுக்கு நடுவில் படிப்பதைவிட அது எவ்வளவோ மேல் என்று தங்கமும் சம்மதித்து அதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டாள்.


இன்னும் சில தினங்களில் மேகலா அங்கே செல்லப் போகிறாள். மகளுக்காக வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள்ளே வைத்து மறுகுகிறாள் தங்கம்.


வாழ்க்கையில் எந்த ஒரு சுகத்தையும் அனுபவிக்காமல் இவ்வளவு துன்பத்தையும் அனுபவித்து யாருக்காக வாழ்கிறாளோ அப்படிப்பட்ட தன் ஒரே பற்றுக்கோலான அவளுடைய மகளைப் பிரிந்து எப்படிதான் இருக்கப் போகிறாளோ அவள் என்கிற நினைப்பு பாரமாக ஏறி நெஞ்சின் மீது அமர்ந்துகொள்ள தேநீரைக் கொண்டு வந்து மேகலாவின் கையில் கொடுத்தாள் அஞ்சு.


அதை ரசித்துப் பருகியவள், ‘சூப்பர் டேஸ்ட் அஞ்சும்மா உங்க இஞ்சி டீ” என்றபடி அங்கிருந்த வாஷ் பேசினில் அந்தக் குவளையைக் கழுவி உணவு மேசை மேல் வைத்துவிட்டு, முகிலனின் வீட்டுக்குச் செல்ல குளித்துத் தயாரானாள் மேகலா.


அதே நேரம் நடைப் பயிற்சி முடித்துவிட்டு வியர்க்க விறுவிறுக்க அவளுடைய வீட்டிற்குள் நுழைந்தாள் குயிலி.

8 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page