top of page

Valasai Pogum Paravaikalaai - 22

22.குழப்பம்


“அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே!

மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்!”


எடுத்த எடுப்பில் இப்படிதான் தொடங்கினாள் கைப்பேசியில் அஞ்சுவை அழைத்திருந்த தங்கம்.


“பாரதியாரோட பாட்டு எவ்வளவு இருக்கு எரும, பொழுது விடிய ஃபோன் பண்ணி இதைப் பாடிட்டு இருக்க, அதையும் விட்டு விட்டு” எனக் கடுப்பானாள் அஞ்சு.


“ஏய், நீ பயந்தாங்கொள்ளிதான... அதை ஒத்துக்கோ” என தங்கம் அவளைச் சீண்ட, “அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்... அதை நீ தெரிஞ்சிக்கோ முதல்ல” என அவளுக்கு அஞ்சு பதில் கொடுக்கவும், “ஓகேடீ பயந்தாங்கொள்ளி, நீ நல்லா பயந்துட்டே குண்டுச் சட்டில குதிரை ஓட்டு! பை” என்று தங்கம் கிண்டலாகச் சொல்லிப் பட்டென்று அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டாள். கடுப்பில் தலையில் அடித்துக்கொண்டாள் அஞ்சு.


இப்படியாக மூன்று நாட்களாய் குழம்பிய குழப்பத்தில் அஞ்சுவுக்கு மண்டையே காய்ந்து போனது. எந்த நேரமும் இதைப் பற்றிய பேச்சுதான். இவள் எது சொன்னாலும் அவனுக்கு தனிப்பட்ட கருத்து என்ற ஒன்றே இல்லை என்பது போலத் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டிருந்தான் சீனு. அவளுக்கு சுவருடன் முட்டிக்கொண்ட கதைதான்.


ஏற்கனவே நிலைமை இப்படி இருக்க, மற்றொரு புதிருடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பினாள் அவளுடைய மூத்த மகள்.


“ம்மா... இன்னும் ரெண்டு மாசத்துல பப்ளிக் எக்ஸாம் வந்துடும் இல்ல. ப்ளஸ் டூ முடிச்சதும் மேற்கொண்டு என்ன படிக்கலாம்னு கிளாஸ்ல டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். பீ.ஏ.பீ.எல் ஹானர்ஸ்ன்னு ஒரு லா டிகிரி இருக்காம். எங்க காமர்ஸ் டீச்சர் சொன்னாங்க. அதுக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் இருக்கு. அதை கிளியர் பண்ணா சீட் கிடைச்சிடும். அதை முடிச்சு லாயர் ஆகிட்டா, தென் மேஜிஸ்திரேட் எக்ஸாம் ஒண்ணு இருக்காம். அதையும் கிளியர் பண்ணா ஜட்ஜாவே ஆகலாமாம். வக்கீல் ஆகணும்னு ஆசைப்பட்டேன்னு நீ அடிகடி சொல்லுவ இல்லம்மா. பேசாம படிச்சு வக்கீல் ஆகி உன் ஆசையை நான் நிறைவேத்தறேன்” என மகள் சொல்லிக்கொண்டிருக்க அப்படியே புல்லரித்துப் போனது அஞ்சுவுக்கு.


நெகிழ்ச்சியில் அவளது கண்கள் கலங்கவும், “செலவைப் பத்தி பயம் வந்துடுச்சாம்மா” எனத் தானே ஒரு காரணத்தைக் கண்டுகொண்டவள், “நீ கவலை படாத, நான் பார்ட் டைமா ஏதாவது வேலைக்குப் போய் படிச்சுக்கறேன். பாட்டி சொல்லிச்சு ஆயா சொல்லிச்சுன்னு கல்யாணம் அது இதுன்னு மனசு மாறாம என்னை நிம்மதியா படிக்க மட்டும் விடுங்க போதும்” என்று கொஞ்சமும் சலனமே இல்லாமல் சொல்ல, அப்படியே மகளை அணைத்துக்கொண்டாள் அஞ்சு.


இவள் பூப்படைந்த சமயம் மஞ்சள் நீராட்டு விழா நடத்த வேண்டும் என சீனுவின் அம்மா ஒற்றைக்காலில் நிற்க, வேறு வழி இல்லாமல் அதற்கு ஏற்பாடு செய்யத் தொடங்கினாள்.


தாய்மாமன் முறை செய்கிறேன் என இவளுடைய சின்னத் தம்பியை உள்ளே நுழைத்தாள் இவளுடைய அம்மா அன்னம்மா. எலி ஏன் ஏரோப்ளேன் ஓட்டுகிறது என்று தெரியாதா இவளுக்கு. எங்கே மகளை அவனுக்குப் பெண் கேட்டுவிடுவார்களோ என்கிற முன்னெச்சரிக்கையில் அந்தச் சீரைப் பெரியத் தம்பியை விட்டுச் செய்யும்படி இவள் சொல்லப்போக, அப்படி ஒரு கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது பச்சையப்பனுக்கு.


வழக்கம் போலப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு அவளுடைய அக்கா மகளை அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். அதனால்தான் அவள் இப்படி யோசித்தது.


அதற்கு வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தவர்கள் நேரடியாகக் கல்யாணியை சின்னவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படிக் கேட்டுவிட, திட்டவட்டமாக முடியாது என்று சொல்லிவிட்டாள். ‘நாங்க இல்லாம எப்படி இந்தச் சடங்கை நடத்தறன்னு பார்க்கறோம்’ எனப் பச்சையப்பன் சவால் விட, அவசியமே இல்லை என அந்த விழாவை அப்படியே நிறுத்திவிட்டாள் அஞ்சு. யாராலும் அவளுடைய மனதை மாற்ற இயலவில்லை.


அவள் தரப்பு நியாயம் புரிய சீனு அவள் பக்கம் நிற்கவும் அவர்களுக்குப் பிறந்த வீடு, புகுந்த வீடு என இருபக்க உறவுகளும் இல்லாமல் போனது.


அந்த சம்பவத்துக்குப் பிறகு கல்யாணிக்கு தன் கல்வி குறித்த அச்சம் இருந்துகொண்டே இருக்கிறது. அவளுடைய பெரியம்மா மகளின் நிலையை வேறு அருகிலிருந்து பார்த்தவள் என்பதால் அவளுக்கு அம்மா வழி சொந்தங்களே அலர்ஜி.


மகளின் இந்தப் பேச்சு மனதில் ஊசிக் கொண்டு தைக்க, “ஏன் கண்ணு இப்படியெல்லாம் சொல்ற. நீ நல்லா படி அது போதும். அம்மா அப்பா எதுக்கு இருக்கோம். எப்பாடு பட்டாவது உன்னைப் படிக்க வைக்கறோம்” என்றாள் ஒரு வைராக்கியத்துடன்.


அம்மாவின் அந்த வார்த்தைகள் கல்யாணிக்குத் தெம்பைக் கொடுக்க, “மா... பசிக்குது. ஏதாவது சாப்டுட்டு சூர்யா சாரைப் போய் பார்த்துட்டு வந்துடறேன். லா என்ட்ரன்ஸ்க்கு எப்படி ப்ரிபேர் பண்றதுன்னு அவர்கிட்ட கேட்டா சொல்லுவாரு” எனச் சொல்ல, அவளுக்கு மகளின் தீவிரம் புரிந்தது.


மகள்களின் கனவுகளுக்கு ஒரு வடிவம் கொடுக்க ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் கூட உழைக்கலாம் என்ற எண்ணம் மனதில் வலுப்பெற்றது. குயிலி சொன்னதை முயன்று பார்த்தால்தான் என்ன என்ற எண்ணம் முதன்முதலாக மனதில் தோன்றியது.


*********


அறைக்குள் மகள்கள் இருவரும் நேரத்துடனேயே உறங்கியிருக்க, அவர்களுக்குத் தொந்தரவில்லாதபடி மெல்லியதாகச் சத்தம் வைத்து தொலைக்காட்சியில் ஏதோ ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான் சீனு.


சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு முகத்தைத் துடைத்தவாறே ஓய்வாக அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள் அஞ்சு. நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்க்க பதினொன்று என்று காண்பித்தது.


“நூறாவது தடவையா இந்தப் படத்தைப் போடறான். உனக்கு போர் அடிக்கலயா மாமா?” என்று கேட்டாள் கிண்டலாக.


“நமக்கு ரொம்ப பிடிச்ச விஷயமா இருந்தா போரே அடிக்காதுடீ என் அத்தப் பெத்த அஞ்சுகமே” எனக் கிறங்கியபடி அவளை நெருங்கி உட்கார்ந்தான் அவன்.


“அஆங்... இந்த டயலாக் எல்லாம் நல்லா பேசு! எங்க, நீ பார்த்துட்டு இருக்கியே இந்த சினிமால வந்துதா?” என்றபடி அவனது நெற்றியில் அவள் முட்ட, “என்ன, மகாராணி ரொம்ப சந்தோஷமா இருக்கற மாதிரி தெரியுது?” என்றான் சீனு அவளுடைய இடையை வளைத்தபடி. சட்டென அவளது பார்வை அறையை நோக்கிச் செல்ல, தொலைக்காட்சியை அணைத்தவன் ஓசையெழுப்பாமல் போய் அறைக்கதவை மூடிவிட்டு வந்தான்.


மீண்டும் அவளைத் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன், “சின்னப் பிள்ளைல இருந்தே எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டீ. அம்மாவும் மாமனும் சேர்ந்து நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யவும் வேணாம்னு சொல்ல மனசு வரல. நான் வேணாம்னு சொல்லியிருந்தா கூட நிச்சயம் உன்னைப் படிக்கல்லாம் வெச்சிருக்க மாட்டாங்க. நம்ம அங்காளி பங்காளி வேற எவனுக்காவது உன்னைக் கட்டி வெச்சிருப்பாங்க. அவனுங்கள பத்தியெல்லாம் உனக்குத் தெரியாதா என்ன? குடிகாரப் பயலுக, உங்க அக்கா மாதிரி உன்னையும் அழுக்குத் துணியா மாத்தி கசக்கி வெச்சிருப்பானுங்கடீ. உன்னைக் கட்டிக்கிட்டு அந்தக் கூட்டத்துல சிக்காம நல்லபடியா வெச்சு குடும்பம் நடத்தனும்ங்கற ஆசைதான்” என அவன் தழுதழுக்க, மகள் பேசியதைக் கேட்டிருக்கிறான் என்பது புரிந்தது அவளுக்கு. மனது அப்படியே நெகிழ்ந்து போனது.


“ஏன் மாமா, இதெல்லாம் எனக்கு தெரியாதா? நீ இப்படி வெலாவாரியா வெளக்கி சொல்லணுமா” என்றபடி அவனை அணைத்துக்கொள்ளவும் அவனது இதழ்கள் அவளது நேற்றில் பதிந்து தன் ஊர்வலத்தைத் தொடங்க, அறையின் கதவு திறக்கப்படும் ஓசையில் சுதாரித்து சட்டென விலகினர்.


உறக்கம் கலையாமல் தள்ளாடியபடி அவர்களை நோக்கி வந்த லக்ஷ்மி, சீனுவை இடித்துத் தள்ளிவிட்டு அஞ்சுவைப் பாயில் தள்ளி அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.


“பாரு மாமா இந்தக் கழுதையை, என்னை என்ன பாடு படுத்தி வைக்கறா” என அஞ்சு அங்கலாய்க்க, “உன்னை மட்டுமா என்னையும்தான்” என்றான் அவன் கடுப்புடன்.


அதில் அப்படி ஒரு சிரிப்பு வர, “மாமா இதெல்லாம் இருக்கட்டும், குயிலி சொன்னத பத்தி நான் முடிவுக்கு வந்துட்டேன் தெரியுமா?” என்று அவள் சொல்ல, “என்ன” என அதிர்ந்தான் அவன்.


“தைரியமா எடுத்து செய்வோம் மாமா” என அவள் சொல்லவும், “இதெல்லாம் வேலைக்கு ஆகுமா அஞ்சு. பயமா இருக்கு” என்றான் உள்ளே போன குரலில்.


“இல்ல மாமா, பயந்தா இந்த உலகத்துல வாழவே முடியாது. நாம கடை போடலாம்னு சொன்னப்ப கூட நீ இப்படிதான் பயந்த. ஆனா துணிஞ்சு இறங்கின பிறகு நல்லாதான போச்சு” என அவள் அழுத்தமாகச் சொல்ல, அவளை மறுத்துப் பேச மனம் வரவில்லை சீனுவுக்கு.


ஆனால் அடுத்த நாள் குயிலி அவளை அழைக்க, “என்னால முடியாது குயிலி. எனக்கு இதுல இஷ்டம் இல்ல” என்றாள் வேண்டுமென்றே.


“ஏய் என்னடி இப்படி சொல்ற” என அவள் அங்கலாய்க்க, “நான் சொல்றத நீ மட்டும் கேட்கறியா என்ன? அப்பறம் நீ சொல்றத நான் எதுக்கு கேட்கணும்” என அவள் குதர்க்கமாகக் கேட்கவும்தான் குயிலிக்கு அவள் எங்கே வருகிறாள் என்பதே புரிந்தது.


“ஏய் என்ன கொழுப்பாடி உனக்கு. கார் அனுப்பறேன். மரியாதையா கிளம்பி இங்க வந்து சேரு, நேர்ல பேசிக்கலாம்” என்று சொல்லி பட்டென அழைப்பைத் துண்டித்தாள். விஷமப் புன்னகை ஒன்று மலர்ந்தது அஞ்சுவின் இதழ்களில்.


*********


ஏற்கனவே சூர்யாவின் குடும்பத்தினர் அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் தொல்லையில் எக்கச்சக்கக் கடுப்பிலிருந்தாள் குயிலி. இந்த அழகில் அஞ்சுவின் பேச்சு எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றுவதுபோல ஆனது.


அவள் வந்ததும் கடித்துக் குதறும் வெறியில் அமர்ந்திருந்தாள். அவள் வந்தால் நேராக தன் அலுவலக அறைக்கு அனுப்புமாறு ரிசப்ஷனில் சொல்லி வைத்திருந்தாள்.


அதன்படி அஞ்சு உள்ளே நுழைந்ததுமே, “என்னடி என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? பெரிய இவன்னு நினைப்பா உனக்கு. உன்னை விட்டா வேற ஆளே இல்லன்னுதான் உனக்கு இந்த ஆஃபரைக் கொடுத்தேனா” என எகிறினாள் குயிலி.


அதே வேகத்தில், “அதான் உனக்கு நிறைய ஆள் இருக்கில்ல, அப்பறம் என்ன? அவங்களையே வேலைக்கு வெச்சிக்கோ. நான் எதுக்கு” என இவளும் பதிலுக்கு எகிற, கோபத்தில் புசுபுசுவெனப் பெருமூச்சு விட்டபடி அமைதியாக உட்கார்ந்திருந்தாள் குயிலி.


வேண்டுமென்றே அவள் முகத்தைத் திருப்பிக்கொள்ள, பள்ளிக் கால அஞ்சுதான் நினைவில் வந்தாள். அது குயிலியின் கோபத்தைச் சற்று மட்டுப்படுத்த, தண்ணீர் குடித்து தன்னை சமன் செய்துகொண்டு, “ஏய், என்னதான்டி வேணும் உனக்கு” என அவள் இறங்கி வர, “உனக்கு என்ன வேணும், அத நீ முதல்ல சொல்லு” எனக் கேட்டாள் அஞ்சு விதண்டாவாதமாக.


“நீ கஷ்டபடக்கூடாதுடி அஞ்சு. எனக்கு அதுதான் வேணும். நீ ஆசைபட்டப் படிப்பைப் படிக்கலன்னாலும் வாழ்க்கைல உயர்ந்த இடத்துக்கு வரணும்” என தன் மனதைச் சொல்ல, ‘எனக்கும் அதே ஆசைதான் குயிலு. நீ ஆசைப்பட்ட மாதிரி ஒரு கல்யாண வாழ்க்கை உனக்கு அமையலன்னாலும், இப்ப அதை சரி செஞ்சுக்க ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சிருக்கு. அதை யூஸ் பண்ணிக்கோ” என அஞ்சு நேரடியாகச் சொல்ல, குயிலிக்கு சலிப்பாகிப்போனது.


“ஏற்கனவே சரணோட நட்சத்திரப் பிறந்த நாள் அன்னைக்கு, நெருங்கின சொந்தக் காரங்கள கூப்பிட்டு கிராண்டா ஆயுஷ்ஹோமாம் பண்ணனும்னு ஆரம்பிச்சிருக்காங்க. அம்மாவும் அதுக்கு ஒத்து ஊதவும், இந்தப் பையனுக்கும் ஆசை வந்துடுச்சு. பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான். இதெல்லாம் தடுக்க முடியாதுன்னு அப்பாவும் ஓகே சொல்லிட்டாரு. சரி பரவாயில்லன்னு பார்த்தால், நானும் கூட உட்கார்ந்து ஜோடியா ஹோமம் செய்யணுமாம். இந்தப் பையனும் ஒத்தைக் கால்ல நிக்கறான். அம்மா சைட் ரிலேஷன் எல்லாரையும் வேற கூப்பிடப் போறாங்க. என்ன எப்படி கார்னர் பண்றாங்க பாரு" என்றாள் கடுப்புடன்.


“என்னடி தப்பு, சரணோட அம்மா அப்பா நீங்கதான. அப்ப நீங்கதான் சேர்ந்து செய்யணும்” என அஞ்சு சொல்ல, “போடி இவளே. இருக்கறது போறாதுன்னு குல தெய்வக் கோவிலுக்கு வேற போகணுமாம். அங்கல்லாம் நான் வர மாட்டேன்னு சொல்லி ஏற்கனவே எனக்கும் அம்மாவுக்கும் ரொம்ப பிரச்சனை. இந்த சாமி, சடங்கு, சம்பிரதாயம் இதையெல்லாம் விட்டு நான் ரொம்ப தூரம் வந்துட்டேன். அவங்களுக்கு இது புரிய மாட்டேங்குது. உனக்குமா” எனப் புலம்பித் தள்ளினாள்.


“அப்படின்னா கடைசியா என்னதான்டீ சொல்ல வர, நீ சூர்யா சார ஏத்துக்க மாட்ட, அப்படிதான” எனக் கேட்டாள் அஞ்சு.


“அதுக்கு என் மனசு இடம் கொடுக்கல, சொன்னா ஏன்டீ புரிஞ்சிக்க மாட்டேங்கற. மறுபடியும் தொடங்கின இடத்துக்கே போகணும்னு சொன்னா ஒரு மாதிரி போரா இருக்கு” என அவள் மேலும் கடுப்பாகவும், “அதே மாதிரிதான், நீ சொல்ற படி நடக்க எனக்கும் மனசு இடம் கொடுக்கல. ஆளை விடு” என்று சொல்லிவிட்டு, வேகமாக அங்கிருந்து அகன்றாள் அஞ்சு.


“ஹேய், என்னடி பிரச்சனை. ஏன்டீ இந்த அஞ்சு பொண்ணு கோவிச்சிட்டு போகுது” எனக் கேட்டுக்கொண்டே அங்கே வந்தாள் தங்கம்.


“ப்ச்... போடி, இப்பதான் தொண்ட தண்ணி வத்த எல்லாத்தையும் சொல்லி முடிச்சேன். இப்ப ரீ டெலிகாஸ்ட் பண்ண முடியாது” என அலுத்துக்கொண்டாள் குயிலி.


“சரி, அப்ப நான் போறேன். நீ ரெஸ்ட் எடு” என அவள் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, “ஏய், இருடி” என அவளைத் தடுத்தவள், அனைத்தையும் சொல்லி, “ஏண்டி அவ இப்படி லூசு மாதிரி பிஹேவ் பண்றா” என நியாயம் கேட்க, “அவ சொல்றதுல என்னடி தப்பு. நீ கொஞ்சம் கன்சிடர் பண்ணுடி. நீ ஒரு சரியான ராட்சசன பார்த்திருக்க மாட்ட. அதனாலதான் உனக்கு சூர்யா சாரை பத்தி புரியல. நான் அப்படிப்பட்ட ஒரு பொறுக்கிக் கூட குடும்பமே நடத்தியிருக்கேன். அவன் தம்பி இருக்கான் பாரு, அவன் இவனை விட ஒரு பெரிய பொறுக்கி. என் அப்பனை விட ஒரு அயோக்கியனைப் பார்க்க முடியுமா சொல்லு? ஆனா சூர்யா சார் அப்படியெல்லாம் இல்ல! ரொம்ப மென்மையான மனுஷன். நீ கொஞ்சம் யோசிக்கலாம்” என்று சொல்லவிடு அங்கிருந்து ஓடியே போனாள்.


கற்பமே கலைந்து போகும் அளவுக்கு ஒரு பெண்ணை அடித்து துன்புருத்தியவனை உணர்ந்தவள் என்பதால் அவள் பார்வையில் சூர்யா உயர்ந்து நிற்கிறான் என்பதை புரிந்துகொள்ள இயலவில்லை குயிலியால்.


“ஒருத்தன் நல்லவனா இருக்கணுமங்கறது ஒரு அடிப்படை பண்பு. அதனால கெட்டவனா இல்லனா அது எப்படி ஒரு ஸ்பெஷல் குவாலிடி ஆகும். சூழ்நிலையைக் கையாளத் தெரியாத ஒரு கோழை, தன்னை நம்பி வந்தவள பலியாக்கி, தனக்கான நியாயத்தைத் தேடிட்டவன் எந்த விதத்துல ஒசந்தவனா இருக்க முடியும்? ‘என் குழந்தை’ன்னு அவன் அன்னைக்குச் சொன்ன வார்த்தை எவ்வளவு பயங்கரமானதுன்னு சொன்னா இவங்களுக்கெல்லாம் புரியுமா’ என்ற கேள்வியுடன் தன் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டாள் குயிலி.


*********

2 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page