top of page

Valasai Pogum Paravaikalaai - 12

12

கை(ம்)ப்பாவை


பத்துடன் பதினொன்று என அவ்வளவு சுலபமாக சரணாலயம் குழுமத்தை விட்டுக்கொடுத்துவிட முடியாது.


குயிலி அந்த நிறுவனத்தைக் கையிலெடுப்பதற்கு முன்பிருந்தே இவர்களுடைய நிறுவனம்தான் அவர்களுக்குத் தணிக்கை செய்து வந்தது.


இவள் அதை வாங்கி, அதன் தரத்தை உயர்த்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறாள். வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தை விட்டுவிட யாருக்குதான் மனம் வரும்.


அதோடில்லாமல் உணவகத் தொழில் துறையில் அவளுக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது. காரணம்… அன்னாசி, மாம்பழம், கொய்யா, ஆரஞ்சு போன்ற பழங்களின் சாற்றை உபயோகித்து கொஞ்சமும் சர்க்கரை சேர்க்காமல் நாற்பது வகையான கேக்குகள் மற்றும் இனிப்புகளைச் சொந்தமாகக் கண்டுபிடித்து அதற்கு தன் பெயரில் காப்புரிமைப் பெற்றிருக்கிறாள். குறிப்பிட்ட சில பிரியாணி வகைகளுக்கும். அதில் கொழிக்கும் பணத்தில்தான் அவளது அனைத்து முதலீடுகளுமே!


அவளை எப்படி நேரடியாகப் பகைத்துக் கொள்வார். வேறு வழி இல்லாமல் தங்கத்தைதான் அவளிடம் விட்டுக்கொடுக்க வேண்டியதாகிப்போனது.


நிச்சயம் அந்த ஆளின் மீது நடவடிக்கை எடுப்பதாக வாக்குக் கொடுத்து அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார் ஆடிட்டர் திருநீலகண்டன்.


அதன்பின் தங்கத்தை அழைத்துக் கொண்டு போய் அவளுடைய வீட்டில் விட்டு மேகலாவையும் நேரில் சந்தித்துவிட்டுதான் தன் வீட்டிற்கு வந்தாள்.


இவ்வளவு வருடத்திற்குப் பிறகு இருவரையும் சந்தித்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் தங்கத்தின் நிலை மனதில் பெரும் பாரமாக ஏறி அமர்ந்து கொண்டது. அவர்களைப் பற்றிய சிந்தனையுடனேயே வீட்டிற்குள் நுழைந்தவளை ஓடி வந்து கட்டிக்கொண்டான் சரண்.


"மம்மம் சாப்டியா பேபி" என்று அவள் வாஞ்சையுடன் கேட்க. "இல்லம்மா உனக்காகதான் வெயிட்டிங்" எனஅவன் கொடுத்த பதிலில் அவசரமாகப் போய் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள்.


அனைவரும் ஒன்றாகச் சாப்பாட்டு மேசையில் ஆஜராக, "என்னடா கண்ணம்மா, ஆடிட்டர் ஆஃபீஸ்ல இருந்து ஒரு பொண்ணு வந்திருந்தாளாமே. பிராஞ்ச் மேனேஜர் மீட்டிங்க கூட தள்ளி வெச்சுட்டு அவளோட எங்கயோ வெளியில கிளம்பிப் போயிட்டியாம். என்கிட்ட கூட எந்தத் தகவலுமே சொல்லலையே யார் அந்த வி.ஐ.பி" எனப் படபடவெனக் கேட்டார் வசந்தகுமார். உண்மையில் அவருக்கு அப்படி ஒரு வியப்பு. காரணம் அவ்வளவு சுலபத்திலெல்லாம் தன்னுடைய எந்த வேலையையும் குயிலி தள்ளிப் போடமாட்டாள். அதேபோன்றுதான் வசந்தனும் எந்த ஒரு சூழலிலும் தன் நிதானம் தவறமாட்டார். இந்தப் படபடப்பும் கூட மகள் விஷயமென்று வரவேதான்.


சரண் வேறு இருவரையும் குறுகுறுவெனப் பார்க்க, "நீ மீட்டிங்க கேன்சல் பண்ணிட்டன்னு தெரிஞ்சதுல இருந்து, உன் பீஏ இருக்கானே அவன் பேர் என்ன ம்ம்?" எனக் கற்பகம் விட்ட சிறு இடைவெளியை, "பிரேம்... பாட்டி" என்று சரண் நிரப்ப, "ஆஆங்... அவனைக் கேள்வி மேல கேள்வி கேட்டுத் தொளைச்சு எடுத்துட்டாரு. அந்தப் பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்கலன்னா உங்க அப்பாக்கு மண்டையே வெடிச்சிடும். சீக்கிரம் சொல்லிடு" என்று முடிக்க,


"அப்பாவுக்கு மட்டும்தானா இல்ல உனக்குமாம்மா" எனக் கிண்டல் இழையோட குயிலி கேட்கவும், "அப்படி கேளுடி என் தங்கம்" என மனைவியைச் சீண்டினார் வசந்தகுமார்.


"என்னப்பா உங்களாலயே சஸ்பென்ஸ் தாங்க முடியாமதான வந்ததும் வராததுமா என்கிட்ட இவ்வளவு கேள்வி கேட்கறீங்க. அப்ப அம்மா மட்டும் என்ன செய்வாங்க" என அவரையும் வாரியவள், அவர் முறைக்கவும், “ஓகே... ஓகே...” என பம்மி பின், "தங்கத்த பார்த்தேன்ப்பா" என உருக்கமாக முடித்தாள்.


"யார சொல்ற?" என வசந்தகுமார் அதிர்வுடன் கேட்க, "ஆமாம்பா நம்ம தங்கமயிலதான் சொல்றேன்" என்றவள் அவர் மேற்கொண்டு எதுவும் கேள்வி கேட்க இடம் கொடுக்காமல், “ஒரே ஊர் காரங்கதான அதனால அஞ்சுவும் அவளும் இன்னும் கான்டாக்ட்லதான் இருக்காங்க. அவளையும் நேர்ல போய் பார்த்துட்டேன். நல்லா இருக்கா. இப்ப எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. ஸோ, மீதிய காலைல பேசிக்கலாம்” என்று அப்போதைக்கு அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தன் அறை நோக்கிச் சென்றாள், இந்த இரவு நேரத்தில் அவர்களைப் பற்றி விரிவாகப் பேசினால் நிச்சயம் அவளுடைய அப்பாவின் உறக்கம் பறிபோகும் என்பதை அறிந்த மகளாக.


அடுத்து வந்த இரண்டு தினங்களும் அவர்களைப் பற்றிய பேச்சாகவேதான் தான் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் குயிலி.


மனம் வருந்தினாலும் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டார்கள் பெரியவர்கள். அவர்கள் இருவரையும் நேரில் காணும் ஆவல்தான் ஏற்பட்டது.


அதை விட அதிகமாக அவர்களுடைய வசந்தகுமார் சாரையும் கற்பகம் அம்மாவையும் குயிலி பெற்ற குமரனையும் நேரில் காணும் தவிப்புடன் அஞ்சு தங்கம் இருவருமே தங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்து விட்டுப் போனார்கள். தயக்கம் காரணமாக சீனு மட்டும் வரவில்லை.


அன்று ஞாயிறு என்பதால் ஒரு நாள் முழுவதும் அங்கே தடபுடல்தான். பேசிப்பேசி ஓய்ந்தார்கள்.


நீச்சல் குளத்துடன் ஆடம்பரமாக அமைந்திருக்கும் அவளுடைய குட்டி பங்களாவைப் பார்த்துவிட்டுச் சொல்லிச் சொல்லி வியந்தார்கள்.


மூவரின் பிள்ளைகளுக்குள் ஒரு நல்ல நட்பும் மலர்ந்தது. குறிப்பாக சரணும் லட்சுமியும் ஒத்த வயதில் இருக்க ஒருவரை ஒருவர் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர்.


மேகலாவும் கல்யாணியும் மாற்றி மாற்றி அவனுடைய கொழுக்கொழுக் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சிக் கொஞ்சியே அவனை ஒரு வழி செய்துவிட்டனர். அவர்கள் அங்கிருந்து கிளம்புகிறார்கள் என்றதும் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டான் சரண்.


தங்கள் வீட்டிற்கு ஒருநாள் தானே வந்து அவனை அழைத்துப்போவதாகக் கல்யாணி சத்தியம் செய்து சொன்னப் பிறகுதான் முகம் தெளிந்தான்.


மனமே இன்றி எல்லோரும் அங்கிருந்து கிளம்பும் சமயம் தங்கத்திடம் ஒரு காகித உரையை நீட்டிய குயிலி, “நம்ம அக்கௌண்ட்ஸ், ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் எல்லாத்தையும் அப்பாதான் பார்த்துக்கறாங்க. அவங்களுக்கு பீ.ஏவாதான் உன்னை அப்பாயின்ட் பண்ணியிருகோம். அப்பாவே எடுத்த டெசிஷன்தான் இது.


நம்மளோட கார்ப்பரேட் ஆஃபிஸ் சைதாப்பேட்ல இருக்கு. அங்கதான் உனக்கு வேலை. நம்ம எல்லா ரெஸ்டாரன்ட் கலக்ஷன் கேஷும் டெய்லி அங்கதான் வரும். அதாவது சிட்டிக்குள்ள இருக்கற எட்டு பிராஞ்ச்சஸ் அண்ட் நம்ம சரணாலயம் கலக்ஷன் எல்லாம். அதெல்லாம் செக் பண்ணி வாங்கி பாங்க்குக்கு அனுப்பனும். அதுதான் அங்க ரொம்ப பெரிய ரெஸ்பான்சிபிலிடி. ஸோ, அப்பாவால தனியா ஹான்டில் பண்ண முடியல. இந்த வேலைக்கு எத்தனையோ பேரை இன்டர்வியூ பண்ணிடோம். அப்பாவுக்கு யார் மேலயும் நம்பிக்கை வரவே இல்ல. உன்னை அதுக்கு சஜஸ்ட் பண்ண உடனே அப்பாவுக்கு டபிள் ஓகே. கொஞ்சம் கொஞ்சமா எல்லா வேலையும் கத்துக்கோ. ஆல் த பெஸ்ட்” என்றபடி குலுக்குவதற்காக தன் கையை நீட்ட, தங்கத்தால் இவை எதையுமே நம்ப இயலவில்லை.


“ஹேய் லூசு, ஷேக் ஹான்ட் பண்றா பாரு. கையைக் குடு” எனப் பேச்சற்று உறைந்துபோய் நின்றவளின் கையைப் பிடித்து இழுத்த அஞ்சு குயிலியின் கையில் திணிக்க, பிறகுதான் அவளுக்கு உணர்வே வந்தது.


கண்களில் கண்ணீர் பெருக அந்த உரையைப் பிரித்து அதைப் படித்தவளுக்கு அப்படியே மூச்சு முட்டியது. அந்த வேலைக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்தான் அது. அதில் அவளுக்காகக் குறிப்பிட்டிருந்த சம்பளம் இப்பொழுது இவள் வாங்குவது போல் இரு மடங்கு.


அதுவும் அந்த அலுவலகம் அவளது வீட்டிலிருந்து வெகு அருகிலிருந்தது.


வானளாவ ஓங்கி வளர்ந்த மரத்தில் கொடி ஒன்று படருவதுபோல அப்படியே தோழியை இழுத்து அணைத்துக் கொண்டாள் தங்கமயில். அவளுடைய இதயத்துடிப்பின் ஒலி குயிலியின் செவிகளுக்கே கேட்டது.


அவர்கள் அங்கிருந்து அகன்றதும் அவளைப் பற்றி ஆயிரம் கேள்விகள் குடைந்தன வசந்தகுமாருக்குள். அதைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள ஒரு நாள் அஞ்சுவைத் தேடிச் சென்றார் அவர்.


*********


மதியத்திலிருந்து மாலைக்கு நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு உஷ்ணமான நேரம் அது. ஒரு முக்கிய வேலையாக அந்தப் பக்கம் வந்தவர், அது சீக்கிரமே முடிந்துவிட அப்பொழுதே அஞ்சுவைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்ற முடிவுக்கு வந்தார்.


வசந்தகுமாருக்கு அந்தப் பகுதியில் அவளுடைய வீட்டைக் கண்டுபிடிப்பதொன்றும் அவ்வளவு கடினமாக இல்லை.


வீட்டின் கதவு திறந்தே இருக்க,


பூவே இளைய பூவே


வரம் தரும் வசந்தமே


மலர் மீது தேங்கும் தேனே


எனக்குத் தானே ...


எனப் பாட்டு இரைந்து கொண்டிருந்தது.


நெருங்கிச் சென்று வீட்டிற்குள் பார்க்க, ஆளில்லாத அந்தச் சிறிய ஹாலில் இருந்த தொலைக்காட்சியில் ஏதோ ஒரு மியூசிக் சேனல் செவ்வனே தன் கடமையை ஆற்றிக்கொண்டிருந்தது.


ஒரு பக்கம் பைப்பையாகத் துணிகள் குவிந்து கிடக்க அத்துடன் சேர்த்து, ஒரு ப்ரிட்ஜ், ஒரு பெரிய வாஷிங்மெஷின், இஸ்திரி போட உபயோகிக்கும் பெரிய மேசை ஒன்று என்று எல்லாமுமாக மொத்தக் கூடத்தையும் ஆக்கிரமித்திருக்க, மனிதர்கள் புழங்கக் கொஞ்சம் இடத்தை மட்டும் விட்டு வைத்திருந்தனர்.


அருகிலிருந்த தடுப்புச் சுவருக்குப் பின்னால் ஒரு தலை அசைவது தெரிய, “உள்ள வரலாமா?” என அவர் மென்மையாகக் கதவைத் தட்டவும் “ஆங்... வாங்க” என்றவாறு வெளியில் வந்தான் சீனு.


வெள்ளை வேட்டிச் சட்டை அணிந்து காலில் ஒரு சாதாரண ரப்பர் செருப்புடன் மிக எளிமையான தோற்றத்தில் கம்பீரம் குறையாமல் நின்றிருந்த அந்த புதிய மனிதரைப் பார்த்ததும் ‘யார் இவர்?’ என்ற யோசனையில் நெற்றிச் சுருங்கப் புன்னகைக்க முயன்றவாறு, “உள்ள வாங்க” என்றான் தயக்கத்துடன்.


“சீனுதான... நான் குயிலியோட அப்பா” என அவர் தன்னை அவனிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள, அவனைப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. “வாங்க சார், வாங்க... வாங்க” என அவரை வரவேற்றவன் அங்கிருந்த அறைக்குள் சென்று பிளாஸ்டிக் சேர் ஒன்றைக் கொண்டுவந்து போட்டு, “உட்காருங்க சார்” என்றான்.


எங்கோ மூலையில் பதுங்கியிருந்த கைப்பேசியைத் தேடியெடுத்து இயக்கி, “அஞ்சு சீக்கிரம் வீட்டுக்கு வா. உங்க வசந்த் சார் வந்திருக்காரு” எனப் பரபரத்தவன் அழைப்பைத் துண்டித்து, “அஞ்சு, ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடும் சார், இங்கப் பக்கத்துலதான் இருக்காம்” என்றவன் மீண்டும் அந்தத் தடுப்புக்குப் பின் சென்று மறைந்தான்.


கடவுளை நேரில் கண்ட பக்தன் போல ஒரு பரவச நிலையில் அவன் இருக்க ஒரு புன்னகையுடன் அந்த வீட்டையே அளவெடுத்துக் கொண்டிருந்தார் வசந்தகுமார்.


கையில் ஒரு குவளை தேநீருடன் அவன் திரும்பி வர, ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை அவசரமாக நிறுத்திவிட்டு, “வாங்க சார், துணி டெலிவரி கொடுக்கப் போயிருந்தேன்” எனச் சொல்லிக்கொண்டே காலில் அணிந்திருந்த செருப்பை வேகமாக உதறிவிட்டு மூச்சு வாங்க உள்ளே நுழைந்தாள் அஞ்சு.


“ஏம்மா இவ்வளவு பதட்டம். முதல்ல உட்கார்ந்து ரிலாக்ஸ் பண்ணிக்கோ” என்றபடி அவன் நீட்டிய தேநீரைக் கையில் வாங்கி ஒரு மிடறு பருகியவர், “குட், நல்லா இருக்கு” என்றார் மெச்சுதலாக.


“தேங்க்ஸ்” என அவன் சங்கோஜத்துடன் புன்னகைக்க, அவருக்கு அருகிலேயே கீழே உட்கார்ந்தாள் அஞ்சு.


“நீங்கப் பேசிட்டு இருங்க, பின்னால கொஞ்சம் ஈரத்துணி இருக்கு, காயப் போட்டுட்டு வரேன்” என அங்கிருந்து அகன்றான் சீனு.


“பரவாயில்ல அஞ்சு, உன் வீட்டுக்கார் நல்ல மாதிரியா இருக்கார்” என்றார் மனதிலிருந்து.


“ஆமாம் சார், நான் ஆசைப்பட்ட மாதிரி பெரிய படிப்பெல்லாம் படிக்க முடியலியே தவிர இந்த மட்டும் நான் கொடுத்து வெச்சிருக்கேன்னுதான் சொல்லணும். எங்கப்பன் அக்கா புருஷன் தம்பிங்க எல்லாமே சரியான தண்ணி வண்டிங்க. இவருக்கு அந்தப் பழக்கமெல்லாம் கூட கிடையாது. என்னையும் பிள்ளைங்களையும் பூ மாதிரி பார்த்துக்கறாரு” என்றாள் பெருமையுடன்.


“சந்தோஷமா இருக்குமா. ஒரு சிலபஸ்குள்ள அடங்கிப் பட்டம் வாங்கறதுக்காகப் படிக்கற படிப்பெல்லாம் ஏதோ ஒரு வேலையைத் தேடிக்க மட்டும்தான். ஆனா உண்மையான கல்விக்கு எல்லையே கிடையாது. வாழற காலம் முழுமைக்கும் படிச்சிட்டே இருக்கலாம். ஆனா பறவைகளை மாதிரி ஆணும் பெண்ணுமா இணை சேர்ந்து, ஒரு கூட்டைக் கட்டிக்கிட்டு, குழந்தைகளைப் பெத்துகிட்டு, அவங்களைப் பராமரிச்சு ஒரு அன்பான வாழ்கை வாழறதுங்கறது ஒரு தவம் மாதிரி. அது உனக்கு கைக் கூடி இருக்கு” என விளக்கம் கொடுத்தவர், “கண்ணு ரெண்டா இருந்தாலும் பார்வை ஒண்ணா இருக்கற மாதிரி, நீயும் உன் வீட்டுக்காரருமா சேர்ந்து நல்லா உழைக்கறீங்கன்னு தெரியுது. வீடு சின்னதா இருந்தாலும் எல்லா வசதியும் செஞ்சு வெச்சிருக்கீங்க. கழுத்துல காதுல தங்கத்துல போட்டிருக்க. பிள்ளைகளை நல்லபடியா படிக்க வைக்கற. இதெல்லாம் ஒரு நல்ல வளர்ச்சிதானம்மா? இன்னும் மேல மேல வளரவும் உனக்கு காலம் இருக்கு. அதனால மனசுல எந்தக் குறையும் வெச்சுக்காத அஞ்சு” என அவளுடைய மனநிலைப் புரிந்தவராக அவளுக்கு எடுத்துச் சொன்னார்.


“சரியா சொன்னீங்க சார். உங்க கூட வாழ்ந்த கொஞ்ச காலம்தான் என்னோட இந்த வளர்ச்சிக்கே காரணம். இல்லன்னா எங்க அக்கா மாதிரி, தம்பிங்க மாதிரி அந்தக் குட்டையை விட்டு வெளியிலயே வந்திருக்க மாட்டேன்” என்றாள் உணர்ந்து.


“சந்தோஷம்மா, ஆனா உன்னை மாதிரிதான எனக்கு அந்த தங்கம் பொண்ணும்? அவ ஏன் இப்படி இருக்கா? அவளோட அப்பாவுக்கு இருந்த வசதிக்கு அவளை நிச்சயம் பெரிய இடத்துலதான கட்டிக் கொடுத்திருப்பாரு. இதுல மூணு அண்ணனுங்க வேற. எனக்கு அவளைப் பார்க்கவே சகிக்கலம்மா” என வருந்தினார் பெரியவர்.


“என்ன சார் பண்றது? எல்லாம் எங்க தலை எழுத்து. ஒண்ணு தெரியுமா சார்? தங்கத்துக்கு உங்களை மாதிரி பள்ளிக்கூட டீச்சர் ஆகணும்னுதான் ஆசை. எங்க எங்களை நிம்மதியா வாழ விட்டாங்க. உங்களை அந்த ஊரை விட்டு அடிச்சுத் தொரத்தின பிறகு முதல் காரியமா எங்க கல்யாணத்தை நடத்தி முடிச்சாங்க. பத்தாவது பரீட்சை எழுத அனுப்பமட்டேன்னு சொன்னாங்கன்னு தங்கம், வயலுக்கு அடிக்கறப் பூச்சி மருந்தைக் குடிச்சா. எப்படியோ காப்பாத்தி அப்பறம் வேற வழி இல்லாம அனுப்பினாங்க. ஆனா அன்னைக்கே என் வீட்டுக்கார் எனக்காக நின்னாரு தெரியுமா சார். எல்லார் கிட்டயும் கெஞ்சிக் கூத்தாடி என்னைப் பரீட்சை எழுத அனுப்பி வெச்சாரு” என பெருமைப்பட்டுக்கொண்டவள் தொடர்ந்தாள்.


“தங்கத்தோட புருஷன் இருந்தான் இல்ல சார், அவன் சரியான குடிகாரன். பொம்பள பொருக்கி. அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே கிடையாது. அவளோட அண்ணிப் பேச்சைக் கேட்டுகிட்டு அவனை என்னவோ நல்லவன் வல்லவன்னு சொல்லி இவளை அவனுக்குக் கட்டி வெச்சாங்க. கல்யாணத்துக்குப் பிறகுதான் அவனோட சாயம் மொத்தமும் வெளுத்துது. பிறந்த வீட்டுல அவளுக்குப் போட்ட நகை நட்டு எல்லாத்தையும் வித்து குடிச்சி ஊர் மேஞ்சான். கேள்வி கேட்டா இவளுக்கு அடி உதைதான். இங்க வந்து சொன்னாலும், ஆம்பளைன்னா அப்படி இப்படிதான் இருப்பான்னு அட்வைஸ் பண்ணி அனுப்பி வெச்சிடுவாங்க.


அப்படி அடிச்சதுல ஒரு தடவ அவளோட கற்பமே கலஞ்சு போச்சுன்னா பாருங்க. அதுக்குப் பிறகு ரெண்டு வருஷம் கழிச்சுதான் மேகலா பிறந்துது. அதுக்கு மூணு வயசு இருக்கும்போது சாராயக் கடையில நடந்த ஒரு தகராறுல ஒருத்தன் அவனைக் குத்திட்டான். அந்தப் பாவி மூணு நாள் ஆஸ்பத்திரில கிடந்து செத்துப் போனான்.


இதுக்கு நடுவுல மருமகன குத்தினவன நானே பழி வாங்கறேன்னு சொல்லி அவளோட அப்பா ஒருத்தனைப் போட்டுத் தள்ளிட்டு ஜெயிலுக்குள்ள போய் உட்கார்ந்துட்டாரு.


அதுக்குள்ளயே ஆஸ்பத்திரில வெச்சே அவன்கிட்ட கையெழுத்து வாங்கி அவன் பேர்ல இருந்த சொத்தையெல்லாம் தன் பேருக்கு மாத்திக்கிட்டான் அவனோட தம்பி.


இதெல்லாம் பாவம் தங்கத்துக்கு எதுவுமே தெரியாது. ஒரு வழியா எல்லாம் அடங்கி காரியமெல்லாம் முடிஞ்சு வந்தா, ‘என் கிட்ட வாங்கின கடனுக்கு எங்கண்ணன் சொத்தை என் பேர்ல மாத்திக் கொடுதுட்டான்’ன்னு அவ மச்சினன் கூசாம சொன்னான். “பிள்ளையை வளர்க்கவாவது ஏதாவது கொடுங்கன்னு அவ கேட்டதுக்கு, ‘காலம் முழுமைக்கு உன்னை 'வெச்சு' வேணா காப்பாத்தறேன். நீயும் இந்த வீட்டுல ஒரு ஓரமா இருந்துட்டுப் போ... சொத்தெல்லாம் கொடுக்க முடியாது’ன்னு டபுள் மீனிங்ல சொல்லியிருக்கான். அந்த வீட்டு பெரியவங்களும் அதைப் பெருசா எடுத்துக்கல.


நகை நட்டுப் போட்டு சீர் செனத்தி செஞ்சு கல்யாணம் பண்ணிக் கொடுக்கறோம், சொத்துல பங்கு கேட்கக் கூடாதுன்னு சொல்லி கல்யாணத்துக்கு முன்னாலேயே அவளோட அண்ணனுங்க அவ கிட்ட எழுதி வாங்கிட்டனுங்க. அதனால அங்கயும் ஒண்ணும் இல்லாம போச்சு. கூடவே வெச்சிருந்தா சொத்துல எங்க பங்கு கேட்பாளோன்னு நினைச்சு அண்ணனும் அண்ணிங்களும் அவளை ஓட ஓட விரட்டி அடிச்சாங்க. அவங்க அம்மாவுக்கும் வீடுக்குள்ள மதிப்பில்லாம போயிடுச்சு. ஆதரிக்க ஆளே இல்லாம் கைல பிள்ளையோட ஒரு நாள் தனியா இங்க வந்து நின்னா சார்.


என் வீட்டுக்காருக்கு இந்த ஊருதான். அந்த சமயத்துல இங்க ஒரு தள்ளு வண்டியில வெச்சு அயர்ன் பண்ணிக் கொடுத்துட்டு இருந்தாரு. அவ இங்க தங்கிக்க கூட என் மாமா எந்த ஒரு மறுப்பும் சொல்லல தெரியுமா சார்!


பக்கத்து வீட்டு அக்கா உதவியால இங்கயே ஒரு எக்ஸ்போர்ட் கம்பனில வேலைத் தேடிகிட்டா. அப்பறம் எப்படி எப்படியோ கஷ்டப்பட்டு அந்தப் பிள்ளையை வளர்த்தா. இப்ப இந்த மட்டுமாவது இருக்கா சார்” எனக் கண்ணீருடன்தான் அவளது கதையைச் சொல்லி முடித்தாள் அஞ்சு.


மனம் பதைக்க உணர்வற்று அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார் வசந்தகுமார். அவருடைய கண்களிலும் கண்ணீர் திரண்டிருந்தது. கைக்குட்டையால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொள்ள, “இவங்க எல்லாரையும் பார்க்கும்போது என் மாமா கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும்னுதான் நினைப்பேன். பாவம் அவர் சரியான வாயில்லா பூச்சி சார்.


சின்னவ பிறந்தப்ப, வசவசன்னு பெத்துகிட்டு அப்பறம் அதுங்கள வளர்க கஷ்டபடக்கூடதுன்னு நான் ஆபரேஷன் பண்ணிக்றேன்னு சொன்னதுக்கு, கூடவே கூடாது ஒரு ஆம்பள பிள்ளை வேணும்ன்னு எங்க மொத்த குடும்பமும் எதிர நின்னனங்க. இவர்தான் எனக்கு சப்போர்ட் பண்ணி எல்லாரையும் பகைச்சுகிட்டாரு.


நான் என்ன சொன்னாலும் மறுபேச்சு பேசாம செய்வாரு சார்” என அவள் தன் கணவனின் புகழ் பாடிக்கொண்டிருக்க, சற்று முன் பின்புற வாயில் வழியாகச் சென்ற சீனு முன் வாயில் வழியாக உள்ளே வந்தான்.


கையில் வைத்திருந்த பையை மனைவியிடம் கொடுத்தவன், “இதுல சூடா போண்டா சட்னி எல்லாம் இருக்கு. சூர்யா சார் பிளாட்ல கான்டீன் இருக்கு இல்ல, அங்க இருந்து வாங்கிட்டு வந்தேன். ஒரு தட்டுல வெச்சு சாருக்குக் கொடு” என்றான் கொஞ்சம் கூட விகற்பமே இல்லாமல்.


அவனைப் பற்றி அஞ்சுகம் சொன்ன அனைத்தும் உண்மை என்றே அவருக்குத் தோன்றியது. அவனைப் பொறுத்தவரை அவளைத் தனக்குக் கிடைத்த ஒரு தேவதையாகவே கருதுகிறான் என்பது வெளிப்படையாகத் தெரிய, சற்றுமுன் அவன் சொன்ன சூர்யா என்கிற யாரோ ஒருவனுடைய பெயர் அவருடைய இதயத்திற்குள் ஊசிப் போல இறங்கியது.


மகளையும் பேரனையும் எண்ணி மீண்டுமொருமுறை அவரது கண்கள் கலங்கின.


உள்ளே போய் ஒரு தட்டில் அந்த போண்டாவை வைத்து சட்டினியை ஊற்றி எடுத்து வந்த அஞ்சு அவரது முக வாட்டத்தைப் பார்த்ததும், “இதெல்லாம் கேள்வி பட்டா நீங்க ரொம்ப வருத்தபடுவீங்கன்னுதான் தங்கம் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லவேயில்ல. ஆனா நான்தான் எல்லாத்தையும் சொல்லி உங்களை இப்படி ஃபீல் பண்ண வெச்சுட்டேன் சார், சாரி” என மறுகினாள்.


“அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா, எனக்கு குயிலியைப் பத்தின நினைப்பு வந்துடுச்சு. ஒரு மூனே மூனு மாசத்துல எல்லாம் முடிஞ்சு இப்படி திரும்ப வருவான்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கல. அப்படி உடைஞ்சு போயிருந்தாம்மா அவ. இந்தப் பிள்ளை மட்டும் இல்லன்னா நம்மள விட்டுட்டுப் போயிருப்பா, அந்தளவுக்கு அந்தப் பாவியை அவளுக்குப் பிடிச்சிருந்தது.


கூட இருக்கறவங்க எல்லாருமே, ஒண்ணு அவளைப் பார்த்து பரிதாபப்பட்டாங்க இல்ல அவளைக் குத்திக் கிழிச்சாங்க. எல்லாத்தையும் சகிச்சிட்டு ஒரு ஜடம் மாதிரி நடமாடிட்டு இருந்தா.


ஒரு தாய் பறவை இறக்கைல மூடி பருந்துகிட்ட இருந்து தன் குஞ்சை எப்படி காப்பாத்துமோ அப்படி இவங்க கண்ணுல எல்லாம் படாம, பொத்திவெச்சு அவள காப்பாத்தினோம். ஒரு கட்டத்துக்கு மேல தானே உணர்ந்து தெளிஞ்சா. அதுக்கு அப்பறம் தன்னைத்தானே செதுக்கிகிட்டா. இந்த வளர்ச்சி எல்லாமே அவளோட சொந்த முயற்சியாலயும் உழைப்பாலயும் வந்ததுதான்.


சரி அவளுக்கு வேற கல்யாணம் பண்ணலாம்னு பார்த்தாலும் அதுவும் சரியா வரல. இவ்வளவு காலமா இல்லாம இந்தக் குழந்தை என்னடான்னா புதுசா ‘அப்பா... அப்பா...’ன்னு கிடந்தது ஏங்கறான்.


பணம் காசு கொட்டிக் கிடக்கு. அவளுக்கும் குழந்தைக்கும் அரணா நானும் பேபியும் இருக்கோம். இருந்தாலுமே கூட என்னால அவளோட இந்தத் தனிமையை ஜீரணிச்சுக்கவே முடியலம்மா.


குயிலியை கம்பேர் பண்ணும்போது இந்தத் தங்கம் பொண்ணு இன்னும் பாவம் இல்லையாம்மா? அன்னாட வாழ்கையைத் தள்ளவே இந்தப் பாடு பட்டுட்டுத் துணைக்கு ஆளில்லாம, வயசுப் பெண் குழந்தையை வெச்சிட்டு வேலி இல்லாத பயிரா என்ன மாதிரியான கஷ்டமெல்லாம் பட்டுட்டு இருக்கால்ல?


ஆனாலும் பாரு, குயிலி கிட்ட இருக்கற அதே உறுதி இவ கிட்டயும் இருக்கு. இந்தப் போரட்டத்துக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்காம போகாது. அவளுக்குக் காலம் என்ன பரிசை மூடி வெச்சுக் காத்திருக்கோ?!” என்றார் ஒரு பெருமூச்சுடன்.


“நீங்க சொன்னதுதான் சார், ஒரு நல்ல வாழ்க்கை வாழ அவளுக்கும் கூட இன்னும் நிறைய காலம் இருக்கு. பார்ப்போம்! அதுவும் இப்ப அவ கூட நீங்க இருக்கீங்களே! அதை விட வேற என்ன வேணும்?!” என்றாள் அஞ்சு நம்பிக்கையுடன்.


“சரிம்மா, ரொம்ப நேரம்மச்சு. நான் கிளம்பறேன்” என்றவர், “கிளம்பறேன்ப்பா சீனு” என விடைப்பெற்று வெளியேற, அவரை வழி அனுப்ப இருவருமே வெளியில் வந்தனர்.


நிழலுக்காக வீட்டு வாயிலில் படுத்திருந்த நாய் ஒன்று அவர்களைப் பார்த்ததும் எழுந்து சோம்பலுடன் அங்கிருந்து அகல, அங்கே ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டிருந்த தகரப் பலகை ஒன்று கண்களில் பட்டது.


‘வசந்தம் லாண்டரி சர்வீஸ்’ என அதில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்துவிட்டு, “இதையும் விட்டு வைக்கலியா நீங்க?” என அவர் சிரிக்க, அசடு வழிந்தவள், “இங்க மெயின் ரோட்ல் கடை வெச்சிருந்தோம் சார். கொரோனாவால யாரும் துணிக் குடுக்கல. வாடகை கூட கொடுக்க முடியாம மூடிட்டோம். இப்ப வீட்டுல இருந்து செஞ்சாலும் பழைய கஸ்டமருங்க எல்லாரும் துணிக் கொடுக்கறாங்க. நல்லாவே போகுது. வாடகையும் மிச்சம்” என்றாள் சர்வ சாதாரமாக.


அதையும் மனதில் குறித்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார் வசந்தகுமார்.


*********

4 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page