top of page

Valasai Pogum Paravaikalaai - 6

6

மாசு


பத்தாம் வகுப்பு படிப்பின் மத்தியில் பெண்கள் மூவரும் இருந்த சமயம்...


அன்று ஒரு சனிக்கிழமை. பள்ளி அரை நாள்தான் என்பதால் மதியத்திற்கு மேல் கிளம்பி அருகிலுள்ள டவுனுக்குச் சென்று அந்த மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார் வசந்தன்.

குயிலி, அஞ்சு இருவரும் வாயிற் திண்ணையிலேயே அமர்ந்து ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, வாகனத்தை நிறுத்திவிட்டு அவர்களை நெருங்கி வரவும்தான் தெரிந்தது எதற்காகவோ முகம் சிவக்க அழுதுகொண்டிருந்த அஞ்சுகத்தை சமாதானம் செய்துகொண்டிருந்தாள் அவருடைய அருமை மகள்.


அவ்வளவு சுலபத்திலெல்லாம் கண்ணீர் உகுப்பவளில்லை அஞ்சுகம் என்பதை அறிந்தவராதலால் யோசனையில் நெற்றி சுருங்க, “என்னடா பொண்ணுகளா என்ன பிரச்சனை?” என்றவாறு வாங்கி வந்தப் பொருட்களை ஓரமாக வைத்துவிட்டு மகளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தார்.


“அது ஒண்ணும் இல்லைங்க, நம்ம தங்கம் பொண்ணு நாளைக்குப் போயி மூக்குக் குத்திக்கப் போகுதாம். அத இன்னைக்கு ஸ்கூல்ல வந்து இவங்ககிட்ட பெருமையா சொல்லி இருக்கு. அவளைப் பார்த்துட்டு நம்ம அஞ்சுவுக்கும் மூக்குக் குத்திக்க ஆசை வந்துருச்சு. பள்ளிக்கூடம் விட்டதும் நேரா அவங்க அம்மாகிட்ட போய் கேட்டிருக்கா... இப்படி நெனச்ச நேரத்துல துட்டுக்கு அவங்க எங்கப் போவாங்க பாவம். இவ பிடிவாதம் பிடிக்கவும் நல்லா திட்டி விட்டுட்டாங்க. அதனால உட்கார்ந்து அழுதுட்டே இருக்கா” என விளக்கமாகச் சொல்லிவிட்டுத் திண்ணை மேல் இருந்த கூடையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றார் கற்பகம்.


அதில் அவளுடைய அழுகை மேலும் கூடிப்போனது. வயது பிள்ளைகளுக்கே உரிய நியாயமான சின்ன ஆசைதானே! ஆனால் அதை நிறைவேற்றக்கூட வழியல்லாத நிலையில் இருக்கும் அவளது பெற்றவர்களை நினைத்து வசந்தனுக்கு மனதில் பாரமேறியது. ஒரு முடிவுக்கு வந்தவராக, “ஓய் பேபி... பிள்ளைகளுக்குப் பொட்டலம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு. அதை ஒரு தட்டுல வெச்சு கொண்டு வந்து கொடு” என்று சொல்லிவிட்டுப் பக்கவாட்டில் போய் அங்கிருந்த கிணற்றில் தண்ணீர் மொண்டு முகம், கை, கால்களைக் கழுவி வந்தார்.


அவர் வாங்கி வந்திருந்த ஜாங்கிரியிலும் மிக்ச்சரிலும் கவனம் திரும்பியிருக்க சற்று ஓய்ந்திருந்தாள் அஞ்சு.


அவர்களுக்கு எதிரிலிருந்த திண்ணையில் அமர்ந்தவர், “என்ன அஞ்சு ஜாங்கிரி நல்லா இருக்கா?” என அவர் புன்னகையுடன் கேட்க, முகத்தைத் துடைத்துக்கொண்டு லேசான விசும்பலுடன் தலையசைத்தாள்.


“நீ இருக்கற மூடுக்கு எங்க கசக்குதுன்னு சொல்லுவியோன்னு நினைச்சேன்” என அவர் கேலியாகச் சொல்ல, “போங்க சார்!” என்றாள் அவள் வெட்கம் கலந்து.


பார்வையை தன் மகளிடம் திருப்பி, “குக்கூ குட்டி... உன் ஃப்ரெண்டுதான் இப்படி விழுந்து புரண்டு அழறாளே... நீ வேணா உன் உண்டிக்காசுல இருந்து அவளுக்கு ஒரு மூக்குத்தி வாங்கிக் கொடேன்” என அவர் விளையாட்டாகவே சொல்ல, அசந்துபோய் அவரைப் பார்த்தாள் அஞ்சு.


“ஐயோ... அதெல்லாம் வேணாம் சார்” என அவள் சொல்லிக்கொண்டிருக்க, “ஐ! நெஜமாவே சொல்றீங்களாப்பா?!” எனக் குதூகலித்த குயிலி, “அவளுக்கு நான் வாங்கித் தரேன். எனக்கு நீங்க வாங்கிக் கொடுங்க” என்றாள் உற்சாகம் மேலிட.


அஞ்சு சொன்னதை இருவருமே காதில் வாங்காத பாவத்தில், “குக்கூ பாப்பா... உனக்கு அதெல்லாம் செட் ஆகாதுடா. வலிக்க வலிக்க மூக்குக் குத்திக்கிட்டு மூணு நாள்ல ‘எனக்குப் பிடிக்கல’ன்னு சொல்லிக் கழட்டி எறிஞ்சுறுவ. சமயத்துல மூக்கு நுனியில அந்த அடையலாம் புள்ளி மாதிரி அப்படியே தங்கிப்போயிடும்” என்றார் மகளை அறிந்தவராக.


“அதெல்லாம் இல்ல... நான் பர்மனன்ட்டா போட்டுப்பேன்” என்றவள், “ப்ளீஸ்ப்பா” என முகத்தைச் சுருக்கிக் கெஞ்சலில் இறங்க, “அய்ய... பொம்பள பிள்ளைக்கு மூக்குக் குத்தினாதான் அழகு. அவளே கேட்கும் போது அதையும் இதையும் சொல்லி அவ மனச மாத்தாதீங்க வாத்தியாரே” என உள்ளேயிருந்து குரல் வரவும்,


“அழகு அழகுன்னு சொல்லி ஒரு சின்ன வட்டத்துக்குள்ள நம்மள சுருக்கக் கூடாது பேபி. அதிகப்படியான நகையும் மேக்கப்பும் இல்லாம இயற்கையா இருக்கறதே ஒருவித அழகுதான் தெரிஞ்சுக்கோ” என மனைவிக்குப் பதில் கொடுத்தார்.


அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மகள் மீண்டும் மீண்டும் ‘ப்ளீஸ்’ என்று தொடர, “ஓகே... ஓகே... நாளைக்கு காலைல பத்து மணிக்கு மூணு பேரும் ரெடியா இருங்க. நாம டவுனுக்குப் போறோம்” என்றார் வசந்தன்.


“வேணாம் சார்” என அஞ்சு மறுப்பு சொல்ல வர, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல, நாம நாளைக்குப் போறோம். மூக்குக் குத்திக்கறோம். உங்க வீட்டுல சொல்லிட்டு வந்துடு” என்றவர், “அய்ய... சார் நீங்களுமா மூக்குக் குத்திக்கப் போறீங்க” என்று பொங்கிய சிரிப்புடன் அஞ்சு கேட்கவும், “ஆமாம்... பொம்பள பிள்ளைங்க மட்டும்தான் மூக்குக் குத்திட்டு அழகா இருக்கணுமா? ஏன் நாங்கல்லாம் இருக்கக் கூடாதா?” என ஏடாகூடமாகக் கேள