Uyirie (Virus 143) Final Part 2(1)
வைரஸ் அட்டாக் – 19
சில மாதங்கள் கடந்திருந்த நிலையில்...
இயல்பான ஒரு விடுமுறை நாள் அது. அப்பொழுதும் கூட தன் மடிக்கணினிக்கு விடுப்பளிக்காமல், அதில் மூழ்கியிருந்தான் விஸ்வா.
ஓய்வாக 'சோபா'வில் சாய்ந்து அமர்ந்தவாறு பழைய படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மேனகா. அதில் பொறுமையிழந்து அருகிலிருந்த 'ரிமோட்'டை எடுத்து 'சேனல்'லாய் மாற்றினாள், அவள் மடியில் படுத்திருந்த ரச்சனா.
"டாலி! அம்மா படம் பார்த்துட்டு இருக்கேன் இல்ல. ஏன் இப்படி சேனலை மாத்தற" என மேனகா 'ரிமோட்'டை அவளுடைய கையிலிருந்து 'படக்'கென்று பிடுங்க, "மா... எப்படிம்மா இந்த படத்தையெல்லாம் பாக்கற. செம்ம மொக்கையா இருக்கு" என அவள் பதிலுக்குப் பொங்க, அப்பொழுதென்று பார்த்து, அந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் அறிவித்ததற்கான செய்தி ஏதோவொரு செய்தி சேனலில் வரவும், அதைப் பார்த்தவள், "என்னோட ரிசர்ச் இன்னும் கொஞ்சம் முன்னால முடிஞ்சிருந்தா, இந்த வருஷம் எனக்குதான் இந்த நோபல் ப்ரைஸ் கிடைச்சிருக்கும்" என மேனகா பெருமையடித்துக்கொள்ள, "மா... இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல... உண்மையிலயே ஏதோ ஒரு ஃப்ளூக்ல தான் சக்கு பாட்டி பிக்ச்சர் வந்திருக்கும்" எனக் கிண்டலில் இறங்கினாள் அவளுடைய மகள்.
அதில் கொலை வெறி கொண்டவள், "நம்ம ஊர்ல, பிறந்த உடனே எவ்வளவு குழந்தைங்க காணாம போறாங்க தெரியுமா உனக்கு. அவங்கள கண்டுபிடிக்க பெத்தவங்க எவ்வளவு கஷ்டப்படறாங்க. அப்பா அம்மாவையே அடையாளம் தெரியாத எத்தனபேர் என்னை மாதிரி அனாதையா வளரறாங்க. நீயெல்லாம் பான் வித் சில்வர் ஸ்பூன். உனக்கு என்ன தெரியும் அந்த கஷ்டம். என்னோட இந்த ரெசெர்ச் அவங்களுக்கு எவ்வளவு யூஸ்புல்லா இருக்கப்போகுது பார்" என மூச்சிரைக்க மேனகா சொல்லிக்கொண்டே போக, அடங்காமல் ரச்சனா பதில் கொடுக்க, இப்படி இருவருக்குள்ளும் மூண்ட சிறு போரை அடக்க வழி தெரியாமல் விழி பிதுங்கினான் விஸ்வா.
இந்த கலவரங்களுக்கிடையில் நிர்மல் என்கிற பெயர் அவர்கள் செவிகளில் விழ, பட்டென்று அனைவரின் கவனமும் தொலைக்காட்சியை நோக்கித் திரும்பியது.
'தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட அமெரிக்க விஞ்ஞானி நிர்மலுக்கு நோபல் பரிசு. தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்' எனச் செய்தி தொடர்ந்துகொண்டிருக்க, அதில் காண்பித்த புகைப்படத்தைப் பார்த்து உண்மையிலேயே தலை சுற்றித்தான் போனது. மேனகாவுக்கு மட்டுமல்ல விஸ்வாவுக்குமே. திடீரென்று அம்மாவும் அப்பாவும் ஏன் இப்படி பேய் அறைந்ததுபோல் ஆனார்கள் எனப் புரியாமல் மிரட்சியுடன் அவர்களைப் பார்த்துவைத்தாள் ரச்சனா.
காரணம் கம்பீரமாக, 'கோட்-சூட்' அணிந்து வழுக்கைத் தலையும் கருப்பும் வெள்ளையும் கலந்த குறுந்தாடியுமாக, கருப்பு நிறத்தில் பெரியதாக 'ஃப்ரேம்' வைத்த கண்ணாடி அணிந்து, அறிவுக் களை முகத்தில் சொட்டச் சொட்ட அங்கே காட்சி அளித்தது சாட்சாத் நம் நிர்மலானந்தாவேதான்!
***
ரச்சனாவை சகுந்தலாவின் பாதுகாப்பில் விட்டுவிட்டு, இரண்டே தினங்களில் அமெரிக்காவிலிருந்தனர் விஸ்வாவும் மேனகாவும்.
வாஷிங்டன் நகரத்திலிருந்த நிர்மலின் வீட்டின் கதவைத் தட்டிவிட்டு அவர்கள் வெளியில் காத்திருக்க, அந்த நேரம் பார்த்து ரச்சனா கைப்பேசியில் அழைக்கவும், சற்று தள்ளிப்போய் அவளுடன் பேசத் தொடங்கினாள் மேனகா.
அப்பொழுது கதவைத் திறந்த பெண்மணியைப் பார்த்ததும் சற்று வியந்தவனாக, “நாங்க இண்டியால இருந்து வந்திருக்கோம். மிஸ்டர் நிர்மல் இருக்காறா? அவரை பார்க்க முடியுமா?" என விஸ்வா கேட்க, "ம்.. இருக்காரு... ப்ளீஸ் கம் இன்" என்றார் அந்த பெண்மணி.
பெண் வாடையையே வெறுக்கும் நிர்மலுடைய வீட்டில் இருக்கும் அந்த பேரிளம்பெண் யார் என அறிந்துகொள்ளும் உந்துதலில், "நீங்க" என அவன் இழுக்க, "ஐம் மிஸ்ஸர்ஸ் நிர்மல்" என 'ஸ்டைல்'லான ஆங்கிலத்தில் அவர் சொல்லவும் மேனகா அங்கே வரவும் சரியாக இருந்தது.
அவரது குரலில் திடுக்கிட்டு, அந்த பெண்மணியின் முகத்தைப் பார்க்க, நிர்மல் உயிரோடு இருப்பதை அறிந்த பொழுது ஏற்பட்ட அதிர்ச்சியைக் காட்டிலும் நூறு மடங்கு அதிர்ச்சி உண்டானது மேனகாவுக்கு.
ஒருமுறை கூட தொல்லை நாயகியை நேரில் பார்த்ததில்லை என்பதினால்தான் அத்தகைய அதிர்ச்சி விஸ்வாவுக்கு ஏற்படவில்லை போலும்.
அதுவும் அவள் ஜீன்ஸ் போட்ட முனியம்மாவாக இல்லாமல் பாந்தமாகப் புடவை கட்டிக்கொண்டு, அந்த அமெரிக்காவில் எங்கே போய் வாங்கி வந்தாளோ, தலை நிறைய மல்லிகைப் பூவை சூடிக்கொண்டு, மிகமிக பதவிசாக அவள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்ததும் மயக்கம் வராத குறைதான் மேனகாவுக்கு.
"ஐயோ... தொ...ல்ல!" என்ற மேனகாவின் குரல் வெளியிலேயே வரவில்லை என்றால், பதிலுக்கு, "மேனகாம்மா!" என நாயகி கத்திய கத்தலில் "இன்னாமே தொல்ஸு! வெளிய நின்னுகினே கூவின்னுகீற... வந்துருக்கறவங்கள வூட்டுக்குள்ளாற இட்டாந்து பேசர்தான" என லோக்கல் பாஷையில் குரல் கொடுத்தது, வேறு யாருமல்ல... சாட்சாத் நிர்மலேதான்.
"மச்சான்! யாரு வந்துருக்காங்கன்னு கொஞ்சம் வந்து பாரு" என அதிர்ச்சி விலகாமல் மேனகாவை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் தொல்லை நாயகி.
வயோதிகம் காரணமாக மேனகாவை சட்டென அடையாளம் தெரியவில்லை நிர்மலுக்கு. ஆனால், அவளைப் பின்தொடர்ந்து வந்த விஷ்வாவை பார்த்ததும் ஒரு நொடி 'ஜெர்க்' ஆ