top of page

TIK -26

இதயம்-26

“கங்கம்மா கொடுத்த அந்த நோட் புக் அதை அன்னைக்கு நான் கவனிக்கல மல்லி! ஆனால் அது உன் தாத்தாவுடையதாகத்தான் இருந்திருக்கணும்” “அம்மு அதை உனக்காகத்தான் விட்டுட்டு வந்திருக்கா. அது தெரியாமல் அந்த அம்மா அதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துட்டாங்க” என்ற ஆதி, “கங்கம்மா இப்ப நம்ம ஹோட்டலில்தான் தங்கி இருகாங்க!” எனச் சொல்லவும் திடுக்கிட்டாள் மல்லி. “என்ன! சொல்றீங்க! அவங்க எப்படி இங்கே வந்தாங்க?” என அவள் குழப்பத்துடன் கேட்கவும், “அவங்க இங்க வரல! நான்தான் அவங்களை இங்கே வரவழைத்தேன்!” என்றவன், “நான் கங்கம்மாவை இங்கே வரவழைத்தது சில விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளத்தான்! செல்வி தவிர மற்ற இரண்டு பெண்களின் எலும்புக்கூடு கிடைத்ததே, அதில் ஒருத்தங்க பெயர் தனலக்ஷ்மி. மற்றும் ஒரு பெண்ணின் பெயர் மணிமேகலை. இந்தப் பெயரெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா?” என ஆதி மல்லியிடம் கேட்கவும், நெற்றியைச் சுருக்கி ஒரு நிமிடம் யோசித்தவள், “ஐயோ! அவங்க எங்க மிஸ் ஆச்சே! தனம் மிஸ்! மேகலா மிஸ்! அவங்க தானா?” என அவள் அதிர்ச்சி அடைய, “கூல் மல்லி! நான் அம்முவை அங்கிருந்து அழைத்துவந்த பிறகுதான் அதுவும் உடனுக்குடன் இல்லாமல் அதிக நாட்கள் இடைவெளியில் அந்த இரண்டு கொலைகளும் நடந்திருக்கு! போஸ்ட் மார்டெம் செய்த பிறகு, மரபணு டெஸ்டில் அந்தப் பெண்கள்தான் என்பதை உறுதிப் படித்தியிருக்காங்க! அந்த இரண்டு பெண்களுமே அங்கேயே அருகில் இருந்த கிராமங்களிலிருந்து அந்தப் பள்ளிக்கு வேலைக்கு வந்தவர்கள். மேலும் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவர்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கள் தனது காதலனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார்கள் என்று அங்கே அனைவரும் நம்பும் படி கதைகட்டி விட்டிருக்காங்க. என்ன கொடுமைனா, அதை அவர்களுடைய பெற்றோர்களும் கொஞ்சம் கூட சந்தேகப் படாமல் நம்பியிருக்கைங்க” என்றவனின் முகம் வேதனையை தத்தெடுத்து தானும் அதே தவற்றை செய்ததை நினைத்து. தொடர்ந்து, “அதில் மணிமேகலையின் பெற்றோர் மட்டுமே போலீசில் புகார் செய்திருந்தனர். இன்னும் கூட பெண் கையில் கிடைத்தால் கொன்றுவிடும் மனநிலையில்தான் இருந்திருக்கிறார் தனலக்ஷ்மியின் அப்பா” என்ற ஆதி, “இதையெல்லாம் கங்கம்மாவின் மூலமாகத்தான் நான் தெரிந்து கொண்டேன்” என்று கூறிவிட்டு, “விடுமுறை முடிந்து அம்மு அங்கே போன அடுத்த நாள்தான் அவள் அங்கே அந்தப் பயங்கர சம்பவத்தை பார்த்திருக்கிறாள்” என கங்கம்மா மூலமாக தான் அறிந்துகொண்டதையும் அதன் பிறகு அவர்களது வாழ்க்கையில் நடந்தவற்றையும் விவரிக்கத் தொடங்கினான் ஆதி. விடுதியில் எல்லா மாணவியரும் இரவு உணவு உண்ட பிறகு எட்டு மணிக்கு அவரவர் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்பது அங்கே இருக்கும் நடைமுறை. அதன்படி எல்லோரும் சென்று படுத்துவிட, மல்லி இல்லாமல் அங்கே இருக்கவே பிடிக்கவில்லை அம்முவிற்கு தூக்கமும் வரவில்லை. விடுதிக்குத் திரும்பியதிலிருந்தே லேசான தலைவலி கண்களில் எரிச்சல் உடல் வலி என அசதியாக இருந்தது அவளுக்கு. ஏதாவது மாத்திரை கேட்டுப்பார்க்கலாம் என அலுவலக அறை நோக்கிப் போனாள். ‘இந்த நேரத்தில் அந்த வார்டனிடம் போய் எதாவது சொன்னால் திட்டித் தீர்க்குமே!’ எனத் தயங்கியவாறு சத்தம் எழுப்பாமல் லேசாக அந்த அறை கதவைத் திறந்தாள் அம்மு. மெல்லிய கோடு போன்ற அந்த இடைவெளி வழியாகப் பார்க்க அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் அலங்கோலமான நிலையில் செல்வி கிடத்திவைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அத்துடன் அங்கே அவர்கள் பேசுவதும் தெள்ளத்தெளிவாகக் கேட்டது அம்முவிற்கு. “இப்ப என்ன சொல்றீங்க மேடம் இந்த பொண்ணு இப்படி பொசுக்குன்னு போகும்னு எனக்குத் தெரியுமா என்ன?” என்ற ஆணின் குரலில் அதிர்ந்தாள் அம்மு. “ஐயோ! செல்விக்கு என்ன ஆச்சு?” என்ற பதட்டம் எழுந்தது அவளுக்கு. “இல்ல ராஜவேல்! என் பாதுகாப்புல இருந்த இந்த பெண்ணை இப்படி அநியாயமா சீரழிச்சு கொன்னுட்டீங்களே. நீங்க பண்ணது மிகப்பெரிய கொடுமை. இப்ப நான் இதை எப்படி ஃபேஸ் பண்ணுவேன்? இந்த பொண்ணோட ப்ரன்ட்ஸுக்கு எப்படி பதில் சொல்லுவேன்?” எனப் பதட்டத்துடன் ஒலித்தது வார்டனின் குரல். என்னதான் கண்டிப்பும் கறாருமாக இருந்த பொழுதும், அதுவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டும்காணாமலும் இருந்தாலும் ஒரு பெண்ணாக அவரது மனம் தாங்கவில்லை போலும். “ஐயோ! செல்வி செத்துபோய்ட்டாளா?” என அம்மு மனதிற்குள் அதிர அதற்குள், “நீங்க வாய மூடிக்கிட்டு, அந்த பொண்ணு ஹாஸ்டலில் இருக்கப் பிடிக்காமல் இங்கிருந்து தப்பிச்சு போயிடிச்சுன்னு போலீசில் ஒரு கம்ப்ளைண்ட் கொடுங்க போதும். மற்றதை நானே பார்த்துக்கறேன். அதை விட்டுட்டு நடந்த உண்மையைச் சொல்லுவேன் அது இதுன்னு உளறினீங்கனா; உங்களையும் குழிதோண்டி புதைச்சிடுவேன்” என அகங்காரமாக ஒலித்தது அவனது குரல். “மற்றபடி இங்கே யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது. மூவாயிரம் பேருக்கு மேல் படிக்கும் பள்ளிக்கூடம் இது. பிறகு அடுத்த வருடம் அட்மிஷன் பாதிக்கும்” என அடுக்கிக்கொண்டே போனான் அவன். செல்வியின் நிலை கண்டு கோபத்திலும் பயத்திலும் அம்முவின் உடல் நடுங்கத் தொடங்கியது. கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போகும் எண்ணத்தில், அம்மு அந்தக் கதவின் மீது கைவைத்தவாறே எதோ சொல்ல வாயெடுக்க, தொண்டை வறண்டு போய் நாக்கு உலர்ந்துபோக பேச்சே வரவில்லை அவளுக்கு. பின்னாலிருது அவளது வாயைப் பொத்தி அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றார், அந்த நேரத்தில் வார்டன் அறை நோக்கிப் போன அம்முவைப் பின் தொடர்ந்து வந்த கங்கம்மா. அங்கே நடப்பது அனைத்தையும் கவனித்தவர் பதறிப்போய்,“பாப்பா! அவசரப்பட்டு எதாவது பேசி வைக்காதே. பிறகு அந்த செல்விபாப்பா நிலைமைதான் உனக்கும் வரும். உன்னை இங்கிருந்து உயிரோட வெளியே போக விடமாட்டான் அந்தப் படுபாவி. அப்பன் மந்திரிங்கற திமிறுல ஆடறான்” என அவளை எச்சரிக்கை செய்தவர், சிறிய பெண் ஒரு சமயம் இல்லாமல் போனாலும் ஒரு சமயம் எதாவது உளறி வைத்தால் அது அவளுக்கே ஆபத்தாக முடியலாம் என்ற பயத்தில், “பாப்பா! நீ எதாவது செஞ்சு இந்த ஸ்கூலை விட்டே போயிடு” என்றும் சொன்னார். பதில் ஏதும் பேசாமல் முகம் வெளிறிப்போய் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கவே பரிதாபமாகவும், அதே சமயம் திகிலாகவும் இருந்தது அந்த மூதாட்டிக்கு. அதனால் செய்வதறியாமல் கைகளைப் பிசைந்தவர் எதோ யோசனை தோன்றவும், “உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?” என்று கேட்க, கொஞ்சமும் யோசிக்காமல், “என்னோட ராஜா அண்ணா!” என்றாள் அம்மு அந்த நிலையிலும். அடுத்த நொடியே தனது வலது கையை நீட்டி, “இங்கே நடந்ததை உன் குடும்பத்தில் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று உங்க அண்ணா மேல சத்தியம் பண்ணு!” என அவர் சொல்ல, “ஐயோ ஆயாம்மா! எங்க அண்ணாவிடம் சொன்னால் அந்த ஆளைப் போலீசில் பிடிச்சி கொடுத்திடுவாங்க!” என அம்மு விட்டுக்கொடுக்காமல் மறுக்கவும், ஏனோ அவளது பேச்சை நம்ப முடியவில்லை கங்கம்மாவிற்கு. அவரது அறிவிற்கு எட்டியவரையில் அவளது நன்மையை நாடி எதையெதையோ பேசி கடைசியில் அவளைச் சத்தியம் செய்ய வைத்தார் அவர். அரைகுறை மனதுடன் சத்தியம் செய்து கொடுத்தாள் அம்மு. பிறகு விடாப்பிடியாக அவளை அவளது அறைக்கு அழைத்துவந்து விட்டுவிட்டுச் சென்றார் கங்கம்மா. இரவு நெடு நேரம் ஆகியும் தூக்கம் வராமல் தவித்தவளின் மனதில் பலவித எண்ணங்கள் தோன்றி அவளை மிரட்டவும், ‘ராஜா அண்ணாவிடம் 'இங்கே படிக்க பிடிக்கல' என்று சொல்லி எப்படியாவது வேறு பள்ளியில் சேர்ந்துவிட வேண்டும்!’ என அண்ணனின்மேல் அவள் கொண்ட நம்பிக்கையில் தெளிவான ஒரு முடிவுக்கு வந்தவளின் மனதில் மல்லியின் நினைவு தோன்றவும், ‘ஐயோ! அவள் இங்கே இருந்தால் ஒரு வேளை அவளுக்கும் எதாவது ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற பயம் எழ, ‘குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்ல மாட்டேன் என்றுதானே சத்தியம் செஞ்சிருக்கோம், மல்லியிடம் சொல்லலாம் அதனால் தவறில்லை!’ என்ற எண்ணத்தில், ஒரு காகிதத்தை எடுத்து மல்லியை எச்சரிக்கும் விதமாக அன்று அங்கே நடந்த அனைத்தையும் கோர்வையாக எழுதினாள் அம்மு. அந்தக் கடிதத்தை மல்லியின் தாத்தாவின் நோட் புக்கில் வைத்து, சேஃப்டி பின் கொண்டு அதை இணைத்து, காலை எழுந்தவுடன் மல்லியின் இடத்தில் வைக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்து படுத்துக்கொண்டாள் அவள். வெகு நேரம் கழித்தே தன்னையும் மீறித் தூங்கியும்போனாள். ஆனால் அடுத்த நாள் அதிகமான காய்ச்சலில் சுருண்டு படுத்திருந்தவளை கவனித்த கங்கம்மா அவள் நிலையை வார்டனிடம் சொல்ல, அவளை வந்து பார்த்த வார்டன், அவளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் வரதனை அழைத்து வீட்டிற்கு அழைத்துப் போகச் சொன்னார். அம்முவை அழைத்துவர ஆதியை அனுப்பி வைத்தார் வரதன். ஜுரம் கொஞ்சம் கூடக் குறையாமல் இருக்கவே வீட்டிற்குக்கூட அழைத்துச்செல்லாமல் மருத்துவக் கல்லூரியுடன் அமைந்திருந்த பிரபல தனியார் மருத்துவனை ஒன்றிற்கு அம்முவை அழைத்துச் சென்றான் ஆதி. புற நோயாளிகள் பிரிவில் அவளைப் பரிசோதித்த மருத்துவர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் அங்கே அனுமதிக்குமாறு சொல்லவும், அங்கே மருத்துவப் படிப்பின் இறுதியில், ஹவுஸ் சர்ஜனாக இருந்த வினோத்தை கைப்பேசியில் அழைத்த ஆதி விஷயத்தைச் சொல்லவும், அங்கே வந்த வினோத் அம்முவின் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் செய்தான். அவளுக்கு டெங்கு என உறுதிப்படுத்தப் பட அடுத்து வந்த ஒருவார காலமும் அம்மு மருத்துவமனையிலேயே இருக்கவேண்டியதாக ஆகிப்போனது. மறந்தும் அவள் விடுதியில் நடந்த எதையும் யாரிடமும் சொல்லவில்லை. அவள் கேட்பதற்கு முன்பாகவே அவளது அண்ணன் அவளை வேறு பள்ளிக்கு மாற்றிவிடவே, அந்தப் பள்ளியில் படிக்கத் தனக்கு விருப்பம் இல்லை என அம்மு சொல்லவேண்டிய நிலை ஏற்படவே இல்லை. முல்லையிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தகங்கள் எல்லாம் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து பரணில் போடப்பட்டது. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, மேலும் சில நாட்கள் ஓய்வு என கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் புதிய பள்ளியில் சேர்ந்தாள் அம்மு. அதன் பின் மல்லியைப் பற்றி தெரிந்துகொள்ள அம்மு முயற்சி செய்ய, அவள் விடுதியிலிருந்து சென்றுவிட்டாள் என்பது தெரிந்தது. அவளது அப்பாவின் கைப்பேசி எண்ணிற்கு முயற்சி செய்ய அது உபயோகத்தில் இல்லை என்று வந்தது. ஆதி அம்முவிற்காக தெரிந்தவர் ஒருவர் மூலம் மல்லியைப் பூவரசந்தாங்கலில் விசாரிக்கவும், அவர்கள் அந்த ஊரிலேயே இல்லை என்பது மட்டும் தெரிந்தது. *** இதற்கிடையில் அந்த வருடத்திற்கான படிப்பை அம்மு முடித்துவிட, வேல்விழி பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வுகளை எழுதிமுடித்திருந்தாள். அப்பொழுதுதான் மகளை ஆதிக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அருளாளனிடம் பிரச்சினையைக் கிளப்பினார் கயல்விழி. ஏனென்றால் ஆதியின் வளச்சியைக் கண்டு சொந்தத்தில் சிலர் அவனுக்குப் பெண் கொடுக்க ஆர்வத்துடன் இருப்பது தெரியவரவும், அவளுக்கு உள்ளுக்குள்ளே பயத்தைக் கிளப்பியது. உடனே அருளாளன் மருமகனை அழைத்துப் பேசவும், “உங்க மகளைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே! நீங்களெல்லாம் சேர்ந்து என்ன முடிவு செய்தலும் எனக்குச் சம்மதம்!” என கழன்று கொண்டார் அவர். “வேலுதான் இன்னும் படிப்பையே முடிக்கலையே திருமணத்திற்கான வயதும் ஆகல அதனால அவசரப் படவேண்டாம்” என்ற தந்தையின் வார்த்தைகள் அவளது காதுகளில் விழவேயில்லை. “நம்ம ஊர் பக்கமெல்லாம் இது சகஜம்தான் உடனே கல்யாணத்தை முடிக்கலன்னா அசலில் யாரையாவது ஆதி திருமணம் செய்துகொண்டால் சொத்து கைவிட்டு போயிடும்” எனக் கயல் அதிலேயே நிற்க, சொந்தம் விட்டுப்போகக்கூடாது என உறவுமுறைக்குள் நடந்த திருமணங்கள், சொத்து கைவிட்டு போகக்கூடாது என நடக்கும் அவல நிலையை எண்ணி வருத்திய அருளாளன், வேறு வழியின்றி மகனை அருகில் வைத்துக்கொண்டு கயலின் முன்னிலையிலேயே பேரனை அழைத்து அவனது விருப்பத்தைக் கேட்கவும், “முன்னால் சொன்னதுதான். எனக்கு அம்மு எப்படியோ வேல்விழியும் அப்படிதான். என்னால் அவளைத் திருமணம் செய்துகொள்ள முடியது” என முன்பு சொன்ன அதே வார்த்தைகளைத்தான் மறுபடியும் சொன்னான் ஆதி. அவனது விருப்பத்திற்கு மாறாக ஏதும் செய்ய விரும்பவில்லை அருளும், வரதனும். அதில் கொதிநிலைக்குப் போன கயல், “அப்படியானால் கமலக்கண்ணுக்கு என் மகளைத் திருமணம் செய்துவையுங்கள்” என விடாப்பிடியாக நிற்க, அவர் ஆயாசத்துடன், “ஏம்மா! அவன் இப்பதானே பீஈ மூன்றாம் வருடம் படிக்கிறான்? என்று கேட்க, “பரவாயில்லை அவன் நன்றாகப் படிக்கக்கூடியவன். கேம்பஸில் இப்பவே அவனுக்குதான் வேலையும் கிடைத்துவிட்டதே!” எனக் கயல் கூறவும், தன் வார்த்தைகள் அவளிடம் எடுபடாமல் போகவே மனம் நொந்து, “நீங்களே உங்களுக்குள் பேசி முடிவெடுத்துக்கொள்ளுங்கள்!” என்று ஒதுங்கிக் கொண்டார் பெரியவர். மனதிற்குள் சில கணக்குகளைப் போட்ட சுலோச்சனா கணவர் மற்றும் மகனைக் குடைந்தெடுத்து திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார். “வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் பேசலாமா?” என்ற அருளாளனின் கேள்விக்கு. “இல்லை தாத்தா! இப்ப என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இன்னும் தொழிலில் முன்னேறவேண்டும் என்பதுதான் இப்போதைய என்னுடைய எண்ணம்” என்று சொல்லிவிட்டான் ஆதி. அதன் பிறகு கமலக்கண்ணன் வேல்விழி திருமணம் தடபுடலாக நடந்தது. திருமணத்தன்று நாத்தனார் முடிச்சு போட மணமகனின் சகோதரியை அழைக்கவும், ஆசையுடன் மேடையின்மீது ஏறிய அம்முவின் கையைப் பிடித்து கீழே இழுத்த சுலோச்சனாவின் தங்கை மகள் ஜோதி, “உன்னோட ராஜா அண்ணாவுக்குக் கல்யாணம் ஆகும்போது நீ முந்திக்கோ. நான்தான் எங்க கமல் அண்ணாவுக்கு முறை செய்வேன்.” என்று முறையில்லாமல் பேசி விட்டு மணமேடைக்கு செல்ல எத்தனிக்க, “இதோ பாரு ஜோதிக்கா, எங்க எல்லா அண்ணனுக்குமே நானேதான் தாலி முடிவேன். நீ போய் ஓரமா நில்லு” என அவளை முந்திக்கொண்டு அம்மு செல்ல எத்தனிக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த லட்சுமி அங்கே பிரச்சினை உருவாவதைத் தடுக்க எண்ணி, மகளை அழைத்துச் சென்று தாத்தாவிற்குத் துணையாக இருக்குமாறு பணித்தார். மூத்தவன் இருக்க இளையவனுக்குத் திருமணம் நடத்துவது மனதிற்கு ஒவ்வாமல், உடல்நிலை சரியில்லை என்று சொல்லி எந்தச் சடங்குகளிலும் கலந்துகொள்ளவில்லை அருளாளன். எனவே சரியாக முகூர்த்த நேரத்திற்கு மட்டுமே அங்கே வந்திருந்தார். அதனால் அம்மு அன்னையின் சொல் படி அவருடன் இருந்துகொண்டாள். ஆதியும் அவனது தாத்தாவை அங்கே அழைத்து வந்துவிட்டு அவருடனேயே சென்றுவிட்டான். அம்மு அங்கே இருப்பது பிடிக்காமல் அவளையும் தன்னுடனேயே அழைத்துச்சென்றான் ஆதி. அதன் பிறகு குடும்பத்தில் நடந்த குழப்பங்களில் மல்லியை நினைக்ககூட முடியவில்லை அம்முவால்.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page