top of page

TIK - 19

இதயம்-19


வளர்பிறை நிலவு, ஒரு துண்டமாக வானில் ஒளிர்ந்துகொண்டிருக்க, கடற்காற்று இதமாகத் தழுவிச்செல்ல, பால்கனியில் போடப்பட்டிருந்த மூங்கில் கூடை ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் மல்லி. மனம் முழுதும் கேள்விகளே! ‘முந்தைய நாள் தொலைக்காட்சிச் செய்தியில், குறிப்பிட்டிருந்த எலும்புக் கூடு யாருடையதாக இருக்கும்? அந்தக் கொலைகள் எப்பொழுது நடந்ததாக இருக்கும்? அங்கே, அப்படிப் பட்ட கொலைகளைச் செய்து, புதைக்கும் அளவிற்குச் சென்றது யாராக இருக்கும்?’ அது பெண்களுக்கான தனிப்பட்டப் பள்ளிக்கூடம் அதுவும் அங்கே வேலை செய்யும் அனைவருமே, உடற் கல்வி ஆசிரியை உட்படப் பெண்கள்தான். அலுவலக பணியாளர்கள், காவலாளிகள் என, ஆண்கள் சிலர் மட்டுமே உண்டு அனைவருமே ஐம்பது வயதைக் கடந்தவர்கள் என்பதுதான் ஞாபகம். அந்தப் பள்ளியின் தாளாளரின் மகன்கள் மட்டும் எப்போதாவது அங்கே வருவார்கள். அதுவும் விடுதியின் பக்கமெல்லாம் அவர்கள் வந்ததில்லை. அவர்களை ஒரே ஒரு முறை மட்டும் அதுவும் எதோ ஒரு கலைநிகழ்ச்சி சமயத்தில் பார்த்திருக்கிறாள். அவர்களுடைய முகம் கூட, சரியாக ஞாபகத்தில் இல்லை. ‘காவல் துறையினர், ஆய்வு செய்கிறார்கள்!’ என்று திரும்பத் திரும்ப செய்திகளில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களேத் தவிர அதுபற்றி புதிதாக எந்தத் தகவலும் இல்லை. யோசிக்க யோசிக்க தலையே வெடித்துவிடும்போலிருந்தது மல்லிக்கு. அப்பொழுது பொறி போன்று ஆதி! தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வர, “இந்த சம்பவத்தைப் பற்றித்தானா பேசிக்கொண்டிருந்தான்?” கண்களை மூடி! அவன் பேசிய, ஒவ்வொரு வார்த்தைகளையும் கோர்க்க முயன்றுகொண்டிருந்தாள் மல்லி!. ‘டீ என் ஏ.. சோதனை!’ ‘எவிடென்ஸ்!’ ‘லவர் கூட ஓடி போய்ட்டாங்க!’ ‘கேசை கிளோஸ் பண்ணிட்டாங்க!’ ‘செல்வியுடையதுதானா?’ தூக்கிவாரி போட்டது மல்லிக்கு. அவள், அங்கே, எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சமயம் விடுமுறை முடிந்து திரும்பியிருந்த பொழுது அம்மு, செல்வி இரண்டு பெண்களுமே அங்கே இல்லை! ‘அப்படியென்றால் செய்திகளில் குறிப்பிட்ட சிறுமியின் எலும்புக்கூடு செல்வியுடையதுதானா?’ ‘அது தேவாவிற்கும், தெரியும் போலவே!’ அம்முவின் இறப்பும் நினைவிற்கு வந்துசேர, செல்வியின் மரணம் பற்றிய உண்மை ஏதோ அம்முவிற்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கும் அம்முவின் மரணத்திற்கும், நிச்சயமாக ஏதோ சம்பந்தம் இருப்பதுபோல் தோன்றியது மல்லிக்கு. அவளைப் போன்ற தெளிவான, தைரியமான ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டிருக்க நூறு சதவிகிதம் வாய்ப்பே இல்லை. செல்வியைக் கொன்றதுபோல் அம்முவையும் யாரோ கொலைதான் செய்திருக்கிறார்கள். இதைச் சொன்னால், இந்த தேவாதிராஜன் புரிந்துகொள்வானா? நினைக்கும்போதே, மூச்சு திணறுவதுபோல் இருந்தது மல்லிக்கு. முன்தினம் அவள் பார்த்த அவனுடைய கோப முகம், கண்களில் தோன்றி, மறைந்தது. ‘சசிகுமார் வீட்டிற்குச் சென்று வந்ததிலிருந்து கொஞ்சம் உற்சாகமாகவே காணப்படுகிறான். ஏதாவது பேசி மறுபடியும் வேதாளம், முருங்கை மரம் ஏறிவிட்டால்?’ புதிதாக மணம் முடித்தவர் போன்றா இருக்கிறார்கள்? இதற்குத்தானே படித்துப் படித்துச் சொன்னாள், திருமணம் வேண்டாம் என்று!. கொஞ்சமாவது இசைந்தானா அவன்?! ஐயோ! என்று இருந்தது மல்லிக்கு! அவளுடைய சிந்தனையை கலைப்பதுபோல் அவள் மேல், சில்லென்று குதித்து விழுந்தது எதோ ஒன்று அது என்னவென்று பார்த்தால்... தேரை!. வீலென்று அலறினாள் மல்லி!. மடிக்கணினியில் மூழ்கி இருந்தவன் அவளது குரல் கேட்டுப் பதறி அங்கே வர, சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு, கண்களை மூடி நின்றவளைப் பார்த்ததும் முதலில் ஒன்றும் புரியவில்லை ஆதிக்கு. “என்னாச்சு மல்லி?” என்றவாறே அவளது அருகில் வர அவனது, தோளை, இறுக்கப் பற்றிக்கொண்டு முதுகுக்குப்பின் ஒளிந்தவாறு, கையை நீட்டி அவள் காண்பித்த திசையைப் பார்த்தவன் சிரித்தேவிட்டான். “அடிப்பாவி! ஒரு நிமிஷத்துல என்னை டென்ஷன் பண்ணிட்டியே! நேற்று அந்தக் கொலைகாரன் கத்தியோட உன்னைக் கொல்ல வந்தப்ப கூட நீ இப்படி கத்தல. போயும் போயும் ஒரு தேரையை பார்த்து இப்படி பயப்படுவியா என்ன?” அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தவனைப் பார்த்து முறைத்தவள் மெல்லிய குரலில், “பயமெல்லாம் இல்ல அதைப் பார்த்தால் ஒரு அருவருப்பு உவ்வேக்” என்றவள், “மாம்ஸ்! ப்ளீஸ்! அதைப் போகச் சொல்லுங்க” என்று கூற, தலையில் அடித்துக்கொண்டவன், “போ..ன்னா! போய்டுமா! அதை நான்தான் விரட்டணும்” என்றான் ஆதி. உள்ளே செல்லும் பாதையில் அந்தத் தேரை அட்டகாசமாக உட்கார்ந்திருக்க, “ப்ளீஸ்! ப்ளீஸ்! மாம்ஸ்! அதை விரட்டுங்க!” என அவள் கெஞ்ச. அவனைப் பற்றியிருந்த அவளது கரங்களைப் பார்த்தவாறே, “சரி! அதை விரட்டினா நீ எனக்கு என்ன தருவ?” ஒரு நல்ல வியாபாரியாக பேரம் பேசினான் ஆதி. “வில்லங்கமாக எதையாவது கேட்டு வைப்பானோ?” என யோசித்தவள். “இந்த டீலிங் லாம் சரிப்படாது. நேற்று அந்தக் கொலைகாரனை அசால்ட்டா பிடிச்ச மாதிரி, இதையும் துரத்திடுங்கப்பா ப்ளீஸ்!” என அதைப் பார்க்கக்கூட பயந்தவளாய் கண்களை மூடிக்கொண்டு சொல்ல, சத்தமாகச் சிரித்தவன், “எவ்ளோ தெனாவெட்டா பேசற! அந்தத் தேரை கிட்ட இருக்குற பயம் கூட என்னிடம் உனக்கு இல்லையே!” என அவன் அங்கலாய்க்க, அதற்குள் அவன் சாகசம் செய்ய இடம் கொடுக்காமல் அந்தத் தேரையாரே குதித்து வோறு புறமாகச் சென்றுவிட, “வட போச்சே!” என்பதுபோல் அவளைப் பார்த்துவைத்தான் ஆதி. இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டவாறே, “உங்களைப் பார்த்தால் பயம் எதற்கு வரணும் டன் டன்னாக லவ்தானே வரணும்!” என்று கூறி விட்டு அவள் உள்ளே சென்றுவிட, “அடிப்பாவி!” என்றவாறு தானாக மூடிக்கொண்ட கதவையே பார்த்திருந்தான் தேவா. அந்தக் கதவை லேசாகத் திறந்து எட்டிப்பார்த்தவள், “ஆனா! கொஞ்சமே கொஞ்சம், பயமும் வருதுதான் மாம்ஸ்!” என்று கூறி விட்டுப் போனாள் மல்லி. *** அடுத்தநாள் காலை டிராக் சூட் அணிந்து நடைப்பயிற்சிக்காகக் கிளம்பி வந்தவன் மல்லியைப் பார்க்க, கால் முதல் தலை வரை இழுத்து மூடியபடி தூங்கிக்கொண்டிருந்தாள். “இப்படி முகத்தை மூடி, தூங்காதேன்னு சொன்னால் கேட்கறாளா பாரு! லூசு! மூச்சு திணறப் போகுது” என்று முனகியவாறே போர்வையைக் கழுத்துவரை இருந்து விட்டுவிட்டு அங்கிருந்து சென்றான் ஆதி. திருமணம் முடிந்த இந்த நான்கைந்து நாட்களில் அவன் நடைப்பயிற்சி முடித்து வரும் பொழுது மல்லி கீழேதான் இருப்பாள். ஆனால் அன்று, அவன் திரும்பிய நேரம் மல்லியை அங்கே காணாமல் அன்னையை நோக்கிச் சென்றவன். “மல்லி எங்கம்மா?” என்று கேட்க, “இன்னும் கீழே வரலப்பா. மணி ஆறுதானே ஆகுது. அசந்து தூங்கிட்டு இருப்பா, தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டேன்” என்றார் லட்சுமி. மல்லி! என்ன செய்கிறாள் என்று பார்த்துவிட்டே உடற்பயிற்சி செய்யப் போகலாம் என்று நினைத்தவன், அவர்களது அறை நோக்கிச் சென்றான். மறுபடியும் முகத்தை மூடியவாறே, தூங்கிக்கொண்டிருந்தாள் மல்லி. அவள் அருகில் சென்று, போர்வையை இழுக்க மறுபடியும், தூக்கத்திலேயே முகத்தை மூட போர்வையை அவள் இழுக்கவும் அவளது கையை பிடித்த ஆதி, அதிர்ந்தான் அவள் கரம் தணல்போல் தகித்துக்கொண்டிருந்தது ஜுரத்தில்!. மல்லி! என்று அவளை அவன் அழைக்கவும், “ம்ம்” என்று முனகினாள் மல்லி. அன்னையிடம், கைப்பேசி மூலம் அவளது நிலையைச்சொல்லி அங்கே வரச்செய்தான் ஆதி. அவளைத் தொட்டுப் பார்த்தவர், “ஜுரம் ரொம்ப அதிகமா இருக்கு ராஜா! ஆஸ்பத்திரிக்கு அழைத்துக்கொண்டு போயிடலாம் பா!” என அவர் சொல்லவும், மல்லியை எழுப்பி, மெதுவாகத் தயாராகும்படி அவர் சொல்லவே. அவளுமே முகம் கழுவி வேறு உடைக்கு மாறி வர, தயாராக இருந்த கஞ்சியை, வற்புறுத்தி அவளைச் சாப்பிட வைத்து, பாராசிட்டமால் மாத்திரை ஒன்றையும் போடவைத்தார் லட்சுமி. சிறிது நேரத்தில் கேர் ஃபார் லைஃப் இல் இருந்தார்கள் இருவரும். முன்பே தொலைப்பேசியில் தாமரையிடம் தகவல் சொல்லியிருந்ததால், நேரே அவள் புற நோயாளிகளைப் பரிசோதிக்கும் அறைக்குச் சென்றனர். உள்ளே நுழையவும், “வாங்கண்ணா!” என்று வரவேற்றாலும் வழக்கமான உற்சாகமின்றி தாமரையின் முகம் வாடிப் போயிருந்ததைக் கண்டு ஆதியின் கண்கள் யோசனையில், சுருங்கியது. அவளது தந்தை மற்றும் அண்ணன் இருவரின் நிலைதான் காரணம் என்று மனதில் நினைத்துக்கொண்டான் ஆதி. மல்லி எடுத்துக்கொண்ட மாத்திரையின் விளைவால் காய்ச்சல் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. ஆனால் குளிர், தலைவலி, கண்களில் எரிச்சல் என்று இருந்ததால், எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை, அவள். “அம்மா, அப்பா எப்படி இருக்காங்க அண்ணா!” என்று விசாரித்தாள் தாமரை. அவளுக்கு, “நன்றாக இருக்காங்கம்மா” என்று பதில் சொன்னவன் தொடர்ந்து மல்லியைப் பற்றி கூறினான். பிறகு, அவளை மேலோட்டமாக பரிசோதித்து சில கேள்விகளையும் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்ட தாமரை, “யூரின் இன்பெக்சன் போலிருக்கு அண்ணா! வெயில்காலம் இல்லையா இவள் தண்ணீர் நிறைய குடிக்கலன்னு நினைக்கிறேன்” என்றவள். சில மருத்துவப் பரிசோதனைகளை எழுதிக் கொடுத்து, அதை அங்கேயே எடுக்கச் சொல்லிவிட்டு சில மருந்துகளையும் பரிந்துரை செய்திருந்தாள். பிறகு, “ரிசல்ட் பார்த்துட்டு நான், போன்லயே சொல்றேன் மல்லி. மறுபடியும் தேவைப் பட்டால், இங்கு வந்தால் போதும். அதுவரை நிறையத் தண்ணீர் ஜூஸ் எல்லாம் எடுத்துக்கோ!” என்று மல்லியிடம் சொல்லிவிட்டு ஆதியைப் பார்க்க, “என்ன டாக்டர் அம்மா! உனக்கே உடம்பு சரியில்லையா? ஏன் உன் முகமே தெளிவாக இல்லையே? உன்னைக் கவனிக்காமல் உன் வீட்டுக்காரன் என்ன செய்யறான்?” என்று கேள்விகளாய்க் கேட்டுத்தள்ள, “இல்லணா அவங்க யூ. எஸ் போயிருக்காங்க! வர இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆகும்” என்றவள் தொடர்ந்து உடம்புக்கு ஒண்ணுமில்லை ஆனால் மனசுதான்ணா கொஞ்சம் சரியில்லை” என்று கூற, அவன் மல்லியைப் பார்க்கவும் அதன் அர்த்தம் புரிந்ததுபோல், “அண்ணா! நீங்க மல்லியைக் கல்யாணம் செஞ்சிருக்கீங்க. உங்க செலக்ஷன் அவ. உங்களை மாதிரிதானே இருப்பா! அதனால, எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இதைப் பற்றி உங்களிடம் சொன்னால் என் டென்ஷன் கொஞ்சம் குறையும்” எனத் தாமரை சொல்லவும், ஆதியிடம் அவள் கொண்டுள்ள நம்பிக்கையும் அதே போன்று அவள் தன்னையும் ஏற்றுக்கொண்டதையும் நினைத்து வியப்புடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி. “என்னம்மா உன் அப்பாவையும் ரத்தினத்தையும் பற்றிய கவலையா?” என்று ஆதி கேட்க, “அவங்களைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லண்ணா. அப்பாவும் அவனும் செய்யும் எல்லா அராஜகமும் எனக்குத் தெரியும். இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு நினைத்தேன். சீக்கிரமாகவே மாட்டிக்கொண்டார்கள்” என அவள் வேதனையாகச் சொல்லவும், அவளைப் பார்த்து ஆதிக்கு, மிகவும் வருத்தமாகிப்போனது, “வேறு வழியில்லை இதை அவள் புரிந்துகொண்டதே போதும்!” என்று நினைத்தவன், “வேறு என்ன பிரச்சினைமா?” என்று கூற, “நீங்கள் வருவதற்கு முன்பாக இங்கே ஒரு பெண் வந்திருந்தாள் அண்ணா! அவள் ஒரு பெண்ணுக்கு சினை முட்டை தானம் செய்வதற்கான செக்கப்பிற்கு வந்திருந்தாள். அவளை இதற்கு முன்பு ஒரு முறை இங்கே பார்த்தது நினைவில் வர அது பற்றிக் கேட்கவும், கதறித் தீர்த்துவிட்டாள் அண்ணா” என்று தாமரை சொல்லவும், இருவருமே அமைதியாக அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தனர். தொடர்ந்தாள் தாமரை. “அவளோட கணவன் அவளை நிர்பந்தப்படுத்தி அடிக்கடி இந்தச் செயலில் அவளை ஈடுபடுத்துவதாகச் சொன்னாள்! அதற்கு அவளது மாமியாரும் உடந்தையாம். பல ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு அவள் உடல்நிலை வேறு மிகவும் மோசமாக இருக்கு. அந்த எக் ரெசிபியன்ட் யாரோ ஒரு புரோக்கர் மூலமாக இவர்களை அணுகியிருப்பாங்க போலிருக்கு. நாற்பதாயிரம் வரை கொடுப்பங்களாம். இதை யாரிடமும் சொல்லிடாதிங்கன்னு அழறா அண்ணா! அவங்க இங்கே வந்த பிறகு இதைப் பற்றி சொல்லி எதாவது செய்யணும்” என்று முடித்தாள் தாமரை. தாமரையின் பேச்சில் கவனமாக இருந்த ஆதி அப்பொழுதுதான் மல்லியைக் கவனித்தான் அவள் முகம் ஜிவு ஜிவு எனச் சிவந்து போய் இருந்தது. தெளிவாக இருந்த மல்லியின் முகம் மறுபடி சிவத்திருக்கவும் காய்ச்சல் அதிகமாகிவிட்டதோ எனப் பதறிய ஆதி அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க சூடு அதிகம் இல்லை. அவன் செயலைப் பார்த்து சிரித்த தாமரை, “அண்ணா அவளுக்கு சாதாரண காய்ச்சல் தான் நீங்க பதறாதீங்க!” என்று கூற, “இல்லம்மா! காலையில் ரொம்பவே கொதித்தது. அதனால்தான் பயந்துட்டேன்!” என்றான் ஆதி. பிறகு அவளிடம் விடைபெற்று, டெஸ்ட்களுக்குக் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும். மதிய உணவு உண்டுவிட்டு மல்லி மருந்துகளையும் சாப்பிட்டுவிட்டு அவர்களது அறைக்கு வரவும், நேராக பால்கனிக்குச் சென்று கூடை ஊஞ்சலில் ஓய்வாக உட்கார்ந்து கொண்டாள் மல்லி. அவளைப் பின் தொடர்ந்து வந்த ஆதி, “இங்கே அனல் காற்று வீசுது மல்லி உள்ளே வந்து ஏசி போட்டு படுத்துக்கோமா” என்று கூற, “இல்ல மாம்ஸ் எனக்கு இங்கேயே கம்பர்டபுலா இருக்கு” என்றவள். கண்களை மூடி வசதியாகச் சாய்ந்துகொள்ள, அவளது விழிகளில் கண்ணீர் வழிந்தவண்ணம் இருந்தது. அதைப் பார்த்த ஆதி, “ஏய்! மல்லி! என்னப்பா ஆச்சு ஏன்பா அழற? அம்மாவைப் பார்க்கணுமா?” எனப் பதற. “இல்ல மாம்ஸ்! நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்” என்று கூற, “எந்தப் பெண்ணை?” என்றவன் அதற்குள் தாமரை குறிப்பிட்டவளைத்தான் அவள் சொல்கிறாள் என்பது புரியவும், “ஓ!” என்றான். “உங்க ஃப்ரண்ட் நல்லவர் இல்லை மாம்ஸ்!” என்றாள் மல்லி. “நீ என்ன சொல்ல வர மல்லி?” என அவன் புரியாமல் கேட்க, “அந்தப் பெண்ணுக்கு நாமதான் உதவி செய்யணும் மாம்ஸ்!” ஏன்னா அந்தப் பெண் சொன்ன விஷயம் வினோத்திற்கு தெரிந்துதான் நடந்திருக்கும்! வறுமைல கஷ்டப்படறவங்கள தன்னோட லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு மோசமான ஜென்மம் மாம்ஸ் அவன்” என்றவளை விசித்திரமாகப் பார்த்தவன், “புரியல” என்று கூற, நான் அந்த மருத்துவமனைக்கு முன்பே ஒரு முறை போயிருக்கேன்!” என்றாள் மல்லி. “தெரியும்!” என்றவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்தவள், “நீங்க நினைப்பதுபோல் நான் மயங்கி விழுந்த அன்று இல்லை அதற்கு முன்பே ஒருமுறை அங்கே போயிருக்கிறேன்!” நக்கலாகச் சொன்னவளை உதடுகளில் பூத்த புன்முறுவலோடு பார்த்தவன், கரம் பற்றி, அவளை இழுத்து, தன் மார்புடன் சேர்த்து அணைத்தவாறு, “தெரியும்! ஜூன் 6... 2017!”என்றவன், “அந்த நாளை நீ மறந்தாலும் என்னால் மறக்க முடியாது மல்லி! ஏன் தெரியுமா?!” புன்னகையுடனேயே சொன்னான் ஆதி. “ஏனென்றால் இரும்பாக இருந்த என் இதயத்தை இளக்கி, அதைத் திருடி உன்னுடன் நீ எடுத்துப் போன நாள் அது மல்லி!” முடித்தான் தேவாதிராஜன். உறைந்துபோய் அவனையே கண்களை இமைக்காமல்! பார்த்துக்கொண்டிருந்தாள் மரகதவல்லி!

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page