top of page

TIK - 1

திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடுத்து விடு!


இதயம்-1


மனம் விரும்பிச்செய்யும் எந்தச் செயலும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும்.


அப்படித்தான் தன் விருப்பப்படி டெக்ஸ்டைல் டிசைனிங் முடித்து உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் ஆதி டெக்ஸ்டைல்ஸின் டிசைனிங் பிரிவில் வேலைக் கிடைத்து சம்பளத்துடன் கூடிய ஆறு மாத பயிற்சியில் இருக்கிறாள் நமது நாயகி மல்லி என்கிற மரகதவல்லி.


இருபத்திரண்டு வயதில், அழகிய கொடிபோன்ற தோற்றத்தில், எலுமிச்சை நிறத்தில், துறுதுறு விழிகளுடன் ஒருமுறை பார்த்தால் மறுமுறை பார்க்கத்தூண்டும் அழகி அவள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூவரசந்தாங்கல் எனும் சிறிய கிராமம் அவர்களுடையது.


அவளுடைய அம்மா பரிமளா, அப்பா ஜகன்நாதன், செல்லத் தம்பி தீபன். ஜகன் ஒரு கைத்தறி பட்டு நெசவாளி. சிறிய அளவில் விவசாயமும் செய்து வந்தார்.


பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தேவைக்கு வருமானமும், நிறைவான எளியக் கிராமத்து வாழ்க்கையுமாகச் சென்றது அவர்களது நாட்கள்.


சிறந்த கல்வி வேண்டி மகளை ஹாஸ்டலில் சேர்த்திருந்தார் ஜகன். அவளின் தாத்தா பாட்டி இருந்தபொழுதில் மூன்றாக இருந்த பட்டுத் தறி இறுதியில் குறைந்து ஒன்று என ஆகிப்போனது.


ஒரு கட்டத்தில் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டு, தொடர்ந்து தறியை ஓட்ட முடியாமல் போய் அதுவும் இல்லாமல் போக, மன உளைச்சலால் ஜகனை நோயில் விழவைத்தது.


ஸ்ட்ரோக் ஏற்பட்டு அவரது வலது கை செயலிழந்து போக பேச்சும் சற்று குளறலாகிப்போனது.


அதன் பிறகு, மருத்துவ செலவுக்காக, கடன்களை அடைக்கவென அவர்களுடைய வீட்டையும், சிறிய அளவிலான விளைநிலத்தையும் விற்றுவிட்டு, ஜகனுடைய மருத்துவ வசதிக்காகச் சென்னை புறநகர்ப் பகுதியில் ஒரே அறை கொண்ட ஃப்ளாட்டில் வாடகைக்குக் குடியேறினர் மல்லி குடும்பத்தினர்.


பரிமளாவும் பி. எட் முடித்திருந்ததால், அங்கேயே ஒரு தனியார் பள்ளியில் வேலைக் கிடைத்துவிட, ஜகனும் வீட்டில் வெறுமையாக இருக்கப்பிடிக்காமல் தெரிந்தவர் ஒருவர் மூலம், அருகில் உள்ள ஒரு நூலகத்தில் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தார்.


இதற்கிடையில் மல்லியை ஹாஸ்டல் படிப்பை நிருத்தி, வீட்டிலிருந்தே படிக்க வைத்தனர். அவளும் படித்து முடித்து இந்த வேலையிலும் சேர்ந்து விட்டாள்.


தீபன் பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கிறான். அழகான சிறு கூடு போல அவள் குடும்பம். அதில் அல்லிராணியாக மல்லி.


***


இருள் பரவத்துவங்கியிருந்த மாலைநேரம் அலுவலகப் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த மல்லி வெளிப்பறம் வேடிக்கைபார்த்தவாறே பயணித்துக்கொண்டிருந்தாள்.


அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் தோழி சவிதா, ஏதோ சளசளத்துக்கொண்டே வரவும், பெயருக்கு, ‘ம்’, ‘ஓ’, ‘ஓஹோ’ என்றவாறு வந்தாலும் அவள் மனம் அவள் வீட்டிலேயே சுழன்றது.


பயிற்சி காலத்தில் ஒரு மாதம் முடிந்திருக்க, அன்று முதல் சம்பளம் வாங்கியிருப்பது மல்லிக்கு மன நிறைவை கொடுத்தது.


இனி ஓரளவுக்குப் பெற்றோருக்கு தோள் கொடுக்க முடியும், அதுவும் ஐந்து மாதத்தில் ட்ரைனிங் முடிந்தால் மழுமையான சம்பளமும் கணிசமாக வரும் என்று மகிழ்ந்தாலும், ‘தன் கனவு ஏன்றேனும் நிறைவேறுமா?’ என்ற அச்சமும் அவள் மனதில் சூழ்ந்தது.


கூடவே அவள் மனக்கண்ணில் வந்து மறைந்தாள் அம்மு. ‘அம்மு எங்கடீ இருக்க? எப்பதான்டீ நான் உன்னை பார்க்ப்போறேன்?’ என ஓடிய எண்ண ஓட்டம், ‘கிரீச்’ என்ற பஸ்ஸின் சடன் பிரேக்கில் கலைய, அவள் இறங்க வேண்டிய இடமும் வந்திருக்க, சவிதாவிடம், கையை அசைத்து. “பை” எனக் காண்பித்துவிட்டு பேருந்திலிருந்து இறங்கினாள் மல்லி.


கண்களால் தீபனைத் தேடியவள், ‘ஐயோ இவன் இன்னும் வரலியே’ எனக் கலங்கியவாறு அவனுக்காக காத்திருந்தாள்.


அது ரயில் நிலையம், பேருந்து நிருத்தம் என மக்கள் கூட்டம் நிறைந்த இடம்தான் எனினும் அங்கிருந்து அவள் தனியாக வீடு போய் சேருவதென்றால் கொஞ்சம் பதட்டம் சூழ்ந்துகொள்ளும்.


காரணம், வழியில் இருக்கும் அரசு மதுபானக்கடையும், தினமும் அதன் அருகே நின்று பல்லை இளிக்கும் வீரா என்பவனும், அவனுடைய அல்லக்கைகளும்.


தீபனுக்கு அழைக்கலாம் என அவள் நினைக்கும்போதே அவன் ஸ்கூட்டியில் அங்கே வந்துசேர பின்னால் உட்கார்ந்த மல்லி, “ஏ குரங்கே கொஞ்சம் முன்னாலயே வந்தா என்ன?” என்று எறிந்து விழ,


“ஏய் அக்கா! நான் டியூஷன் முடிஞ்சு வர வேணாமா? ஒரு அஞ்சு நிமிஷம் லேட் ஆனதுக்கு போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகற?” என்று கேட்டான் தீபன்.


“சாரிடா! ஏதோ பதட்டத்துல சொல்லிட்டேன்”என்று மட்டும் கூறினாள் மல்லி.


உண்மையான அவளது அச்சத்தை அவள் வீட்டில் சொல்லி, சாதாரணமாகவே இவளை நினைத்து கவலை கொண்டிருக்கும் பெற்றோரை மேலும் வருந்தச்செய்ய விரும்பவில்லை அவள்.


மேலும் திருமணம் என்று இவளுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தால், அம்மாவைச் சமாளிப்பது கடினம்.


அதன் பிறகு ‘குறைந்தபட்சம் பத்து பட்டுத் தறியாவது சொந்தமாகப் போட வேண்டும், விதவிதமான டிசைன்களில் பட்டுப்புடவை வடிவமைக்க வேண்டும்’ என்ற இவளது லட்சியமெல்லாம் வெறும் கனவாகவே போய்விடும்.


மேலும் இவள் அம்முவிற்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமலும் போய்விடும். இவ்வாறாக நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்திருந்தாள்மல்லி.


***


“ஏன்டீ மல்லீஈஈஈ எப்பவும் நானேதான் உன்னைத்தேடி வரணுமா? நீ என்னை தேடவே மாட்டியா?” எங்கோ கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல் அந்தக் குரல் மல்லியின் மனதைத் துளைக்க,


“ஐயோ! இது அம்முவோட குரலாச்சே.” என்று நினைத்தவாறு மல்லி,


“அப்படியெல்லாம் இல்லடி அம்மு! நீ எங்க இருக்கன்னு தெரியலையேடி இல்லன்னா உன்னைத் தேடி வந்திருப்பேனே” என்று தழுதழுக்க,


“உனக்கு என்ன பத்தித் தெரியணுமா அப்ப 98¬¬¬¬¬¬¬¬ நம்பருக்கு போன் பண்ணு” என்று சொல்லிக்கொண்டே அம்முவைப்போன்று தோன்றிய நிழல் உருவம் மறைந்தது.


“அம்மூஊஊஊ” என அலறியபடி எழுந்து உட்கார்ந்தாள் மல்லி. அவள் குரலை கேட்டு எழுந்த பரிமளா, “ஏய் மல்லி! என்னடி ஆச்சு, இன்னைக்கும் கெட்ட கனவு கண்டு தொலச்சியா?” என்று கேட்க,


தூக்கக் கலக்கத்தில் மிரண்டு விழித்தவள், “அம்மா! அம்மு!” என்று உளறினாள்.


“மறுபடியும் அம்மு கனவா? கடவுளே” என்று சலித்துக்கொண்டே, “சரி தண்ணி குடிச்சுட்டு தூங்குடீ, நாளைக்கு எல்லாருக்குமே வொர்கிங் டே வேற” என்றவாறே பரிமளா தண்ணீரை கொடுக்க,


அதை வாங்கி பருகியவள் சற்று தெளிந்து, “அம்மா, என் அம்மு எங்க இருக்காம்மா?” என்று என்னவோ அவளுடைய அம்மாவுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்பது போல் கேட்கவும்,


“அடியேய்! பாதி ராத்திரில எழுப்பி கேக்கறா பாரு கேள்வி... எனக்கு தெரிஞ்சுட்டேதான் உங்கிட்ட சொல்லாம இருக்கேன் பாரு... பேசாம படுடி!” என ஆயாசமாகச் சொன்னார் பரிமளா.


“அப்படின்னா நாம எப்படி அவளைக் கண்டுபிடிக்கிறது. அவ சோஷியல் மீடியா எதுலயும் கூட இல்லையே” என்று முனகியவாறே படுத்து கண்களை மூடிக்கொண்டாள் மல்லி.


அடுத்த நாள் காலை, அவள் கண்ட கனவின் தாக்கம் எதுவுமே இல்லாமல் சுறுசுறுப்பாக சளசளத்தவாறே அடுக்களையில் அம்மாவுக்கு உதவியாக மிக்ஸியில் சட்டினி அரைத்துக்கொண்டு அந்தச் சத்தத்தினூடே,


“அஞ்சு ப்ளோர் பில்டிங் மா” என மல்லி ஆரம்பிக்க, பரிமளாவோ ‘ஐயோ தினம் புலம்புர புலம்பலை இன்னைக்கும் ஆரம்பிச்சுட்டாளே!’ என்ற எண்ணியவாறே தோசை வார்த்துக்கொண்டிருந்தார்.


மல்லியோ, “ஆனா அங்க நான் வேல செய்யற செக்ஷன் தவிர வேற எங்கயும் போக முடியாது. நான், குழந்தைகளுக்கான ரெடிமேட் டிரெஸஸ்தான டிசைன் பண்றேன் ப்சு! என்னால பட்டுப்புடவை டிசைன் செய்யற செக்ஷன் உள்ள, நுழையக் கூட முடியாது. அவ்வளவு செக்யுரிடி தெரியுமா?


ஏகப்பட்ட ஸ்பெஷல் டிசையின்லாம் செய்யறாங்க தெரியுமா? எனக்கு மட்டும் பட்டுப்புடவை டிசைன் பண்ண ஒரு சான்ஸ் கிடைச்சிதுன்னு வை, சும்மா பிச்சு உதரலாம். ஒரே ஒரு தடவையாவது உள்ள போய் பார்கணும் மா” என்றவளைப் பார்க்க பரிமளவுக்கே பாவமாய் இருந்தது.


பட்டு புடவை நெசவுமேல் மகளுக்கு இருக்கும் அதிகப்படியான விருப்பம் அறிந்தவராயிற்றே! பட்டுத்தறி போட்டு அதனால் ஏற்கனவே ஓய்ந்துபோயிருந்த பரிமளாவுக்கு மறுபடியும் அதில் தலைகொடுக்க விருப்பமில்லை. அவர் தன் மகளின் மனதை திசை திருப்ப எண்ணி,


“நீ இப்ப செய்யற வேலையை சரியாகச் செய் போதும். அதுவும் உனக்கு நல்லாதானே வருது. அப்புறம் ஏன்டி இப்படி புலம்பிட்டு இருக்க?” என்று கேட்கவும்,


“என்ன இருந்தாலும் பட்டு நெசவு மாதிரி வருமா? அது நம்ம தலைமுறை தலைமுறையா செஞ்சிட்டுவர கலைதொழில் இல்லையா?” என்று அவசரப்பட்டு சொல்லி நாக்கை கடித்துக்கொணடு, அம்மாவின் தெறி லுக்கில், “மீ ஸ்கேப்” என்று அங்கிருந்து ஓடியே போனாள் மல்லி.


பேருந்தில் அலுவலகம் நோக்கி பயணிக்கும்போதுதான் அவளின் அந்த கனவு பற்றிய ஞாபகமே வந்தது மல்லிக்கு! அவள் அந்தக் கைப்பேசி எண்னை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த முயல, அந்த எண்கள் பிடிபடவேயில்லை.


ஏனோ, தனது இந்த கனவுகளைப்பற்றி யோசித்தாள் மல்லி.


அவள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து தேர்வு முடிவுகள் வந்த மறுநாளிலிருந்துதான் இதுபோன்ற கனவுகள் அவளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தன. எல்லாமே அம்முவை நினைக்கவைக்கும் கனவுகள்.


தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட நிலையில் சில கனவுகள் உண்மை போலவே தோன்றும். சமயத்தில், ‘அது கனவுதானா அல்லது உண்மையில் நிகழ்ந்ததா?’ என்ற குழப்பமே மிஞ்சும் அவளுக்கு.


அதன் பாதிப்பு இரண்டு நாட்கள்வரைக்கும் கூட இருக்கும். பல கனவுகள் ஞாபகத்திலேயே இருப்பதில்லை!


மறுநாள் அவள் அம்மா சிரித்துக்கொண்டே சொல்வதிலிருந்து, அவள் புரியாதவாறு நிறைய உளறியிருப்பது அவளுக்குத் தெரியவரும்!


‘இதற்கு முடிவுதான் எப்போது?’ என்று நினைத்துக் கொண்டிருந்தவளின் அருகில் சவிதா ஹாய் என்றவாறே வந்து உட்கார பேசியவாறே அலுவலகம் வந்து சேர்ந்திருந்தனர்.


உள்ளே நுழைந்தவுடன் வேலைகள் அவளை இழுத்துக்கொள்ள, அவளுடைய அந்த நாள் இரவை நோக்கி நகர்ந்தது.


***


அலுவலகம் விட்டால் வீடு! சனி ஞாயிறு விடுமுறை! தமக்கை மற்றும் தம்பியின் அதகளம் என அப்படியே ஒருமாதம் கழிய, ஒருநாள் அலுவலகத்தில் உணவு இடைவேளையில், மல்லி, சவிதா, ஐஸ்வர்யா, மணிகண்டன் மற்றும் மேகலா அனைவரும் அரட்டையடித்தபடி உணவு உண்டு கொண்டிருந்தனர்.


இவர்களுள் மல்லி, மேகலா, சவிதா மூவரும் ட்ரைனிங்கில் இருப்பவர்கள்! மணிகண்டன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அங்கே நிரந்தர பணியில் இருக்கின்றனர். அவர்களுடைய டீம் ஹெட் காஞ்சனா.


மேலும் இருபது நபர்களைக் கொண்ட, ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான உடை வடிவமைக்கும் பிரிவு, அந்த ஒரு தளம் முழுவதும் அமைந்திருந்தது.


“தெரியுமா? நம்ம ஆதி டெக்ஸ்டைல்ஸ்ல, புதுசா ஒரு வெட்டிங் சில்க்ஸ் கலேஷன்ஸ் இன்ட்ரோடியூஸ் பண்ணப்போறாங்க!” என்று மணிகண்டன் கூற.


“வாவ்!” என்றாள் மல்லி.


“இதுக்கே வாவ்னா! ஒரிஜினல் வெள்ளி சரிகையோட, கூட கொஞ்சம் டிசைனர் வொர்க்கும் செஞ்ச ப்யூரான பட்டு புடவையோட விலை உனக்கு தெரியுமா?” என்று கேட்க,


“என்ன ஒரு நாப்பதாயிரம் இருக்குமா?” என சவிதா பதிலுக்குக் கேட்க, “சான்ஸே இல்ல மினிமம் தொன்னூறாயிரம் இருக்கும்!” என்றாள் மல்லி.


“இல்ல, ஒரு லட்சத்து பன்னிரண்டாயிரமாம்” என்று எல்லோரையும் வாய் பிளக்க வைத்தான் மணி.


அத்துடன் ஒரு பிரபலமான தொழிலதிபர் பெயரை சொல்லி, “அவரோட பொண்ணு கல்யாணத்துக்காக முதல் செட் புக் ஆகியிருக்கு, அநேகமா அடுத்த வாரம் அந்த சாரீஸ் லாஞ்ச் செய்வாங்கன்னு நினைக்கிறேன்! தென் எல்லா டிவி சானல்ஸ்லயும் விளம்பரம் வரும்!” என்றான்.


“எப்படியும் அதே டிசைன் நார்மல் விலைலயும் கிடைக்கும் இல்ல?” என்று மேகலா கேட்க,


அதற்கு ஐஸ்வர்யாவோ, “கிடைக்கும், ஆனா டெஸ்டட் சரிகையா இருக்கும்” என்றாள்.


“கரூர்ல கூட ஒரு பிரான்ச் ஓபன் பண்ண போறாங்களாமே, அதுக்கு டிவில விளம்பரம் போயிட்டு இருக்கு பார்த்தீர்களா?” என்று மேகலா கேட்க,


அதற்கு மணிகண்டன் சிரித்துக்கொண்டே, “நியூஜெர்சியில் ஒரு பிரைஞ்ச் ஒப்பன் பண்றதுக்கான வேலைகள் வேற போயிட்டு இருக்கு. இன்னும் ரெண்டு இல்ல மூணு மாசத்துல ஒப்பனிங் இருக்கும்” என்று கூற, மற்றவர்கள் அதையெல்லாம் கேட்டு பிரமித்துக் கொண்டிருக்க, மல்லிக்கோ அந்தப் புடவைகளை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் மட்டுமே மேலோங்கியிருந்தது.


அந்தப் புடவைகளை அறிமுகப் படுத்திய பிறகு ஆதி டெக்ஸ்டைல்ஸின் எதாவது ஒரு கிளையில் அம்மாவுடன் சென்று எப்படியும் ஒருமுறை அவற்றைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று மட்டும் நினைத்துக்கொண்டாள்.


“ஐஸ்வர்யா! நீங்க நம்ம எம்.டிய நேர்ல பார்த்திருக்கிங்க இல்ல?” என்று மேகலா கேட்க, அதற்கு அவள், “ம் இரண்டு தடவை இங்க வந்திருக்கார், பார்த்திருக்கேன். ஆனா மணிதான் அடிக்கடி அவரை மீட் பண்ணுவார்” என்று கூற.


“சம் டைம்ஸ் டிசைன்ஸ் சாம்பிள்ஸ் எல்லாம் காமிக்கப் போவேன். அப்ப பார்த்திருக்கிறேன். மத்தபடி பிராஞ்ச் ஓப்பனிங், லாஞ்சிங் பார்ட்டி இதுபோல எங்கேயாவது பார்த்தாதான் உண்டு” என்றான் மணி.


அதற்கு மல்லி, “எப்படிப்பா, இவ்ளோ பெரிய டிசைனிங் விங் இது. தினமும் இதை வந்து பார்க்காம எப்படி மேனேஜ் பண்ண முடியும்?” என்று கேட்க,


“ஹா... ஹா... ஒரு நாளைக்கு ஒரு பிரான்ச் விசிட் பண்ணினார்னா கூட எல்லா ப்ரான்ச்சையும் பார்த்து முடிக்க ஒரு மாசத்துக்கு மேல ஆகும். அது இல்லாமல் அமிர்தம் உணவகம் தெரியுமா?” என்று ஐஸ்வர்யா கேட்டுவிட்டு நிருத்த,


“ஆமாம், செயின் ஆப் ரெஸ்டரன்ட்ஸ், சிட்டி முழுக்க இருக்கே, அதுதான?” என்று மல்லி கேட்க,


“ஆமாம், அதுவும் இவங்களோடதுதான். அப்புறம் எப்படி தினமும் இங்க வருவார்? அவரோட அப்பா வரதராஜன் சார் டி-நகர்ல இருக்கற மெயின் பிராஞ்சை கவனிச்சுக்கறார். அத்தோட, இந்த டிசைனிங் யூனிட்டை ஃபுல்லா பார்த்துக்கறாரே சசிகுமார், அவர் ஆதி சாரோட பெஸ்ட் ப்ரண்ட். அதனால இங்க ஒரு பிரச்னையும் வராது. அதைவிட இங்க ஒரு பின் விழுந்தாலும் அது ஆதி சாருக்கு தெரிஞ்சிடும்” என்று மணி விளக்கமாகச் சொல்லி முடித்தான்.


முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு, “அவங்க வீட்டுல இருக்கறவங்களாவது அவரைத் தினமும் பார்க்க முடியுமா, இல்ல அவங்களாலயும் முடியாதா?” என்று கிண்டலாக மல்லி கேட்கவும்,


“அதைப் பத்தி உனக்கு என்னம்மா வத்துது? அது அவங்க வீட்டுல இருக்கறவங்க படவேண்டியக் கவல!” என்று முடித்தான் மணி. அத்துடன் அவர்கள் உணவு நேரம் முடிய அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றார்கள்.


***


அன்று ஒரு திருமணத்திற்காக பரிமளாவும் ஜெகனும் அவர்கள் ஊரான பூவரசந்தாங்கல் சென்றிருந்தனர். தீபனுக்கு பரீட்சை இருக்கவும், மல்லிக்கும் விடுப்பு எடுக்க முடியாத காரணத்தால் இருவரும் வீட்டிலேயே இருந்தனர்.


தீபன் ஹாலில் உறங்கிக்கொண்டிருக்க மல்லி மட்டும் படுக்கை அறையில் உறங்கிக்கொண்டிருந்தாள்.


அப்பொழுது மறுபடியும் மறுபடியும், “மல்லி 98&&&&& நம்பருக்கு போன் பண்ணு! கால் பண்ணு!” என்று திரும்பத் திரும்ப அம்முவின் குரல் அவளுக்குக் கட்டளை போல் சொல்லிக்கொண்டே இருக்க, ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டாற்போல் கைப்பேசியை எடுத்த மல்லி அந்த எண்ணுக்கு அழைத்தேவிட்டாள்.


எதிர் முனையில் கம்பீரமான ஒரு ஆணின் குரல், “ஹலோ” என்றது.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page