top of page

Poovum Naanum Veru - 20

இதழ்-20


செல்வராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருந்த நிலையில், அங்கே அவருக்குத் துணையாக மாரியை வைத்துவிட்டு, அத்தியாவசியமாக சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கென, அன்று காலையிலேயே கிளம்பி வீட்டுக்கு வந்தார் கலைவாணி உடன் மகளையும் அழைத்துக்கொண்டு.


அவர் வந்திருப்பது தெரிந்ததும், அவர்களுடைய வீட்டிற்குள் வந்த அருணா, அதீத ஆத்திரத்துடன், "செய்யறதெல்லாம் செஞ்சிட்டு; மூணு நாளா எங்க போய் ஒளிஞ்சிட்டு இருந்த?" என வாணியை வார்த்தைகளால் தாக்க,


தங்களைப் போலவே சரிகாவுக்காக அவர்களும் மருத்துவமனையிலிருந்த காரணத்தால், செல்வராகவனின் நிலையை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது புரியவே, அவர் பேசியதற்காக உணர்ச்சிவசப்படாமல், "சரிகா இப்ப எப்படி இருக்கா சரிகாம்மா! வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடீங்களா?" என வாணி உண்மையான அக்கறையுடன் விசாரிக்க,


"இன்னும் அவளோட உயிர் போகல: அதுதான் மிச்சம் இருக்கு" எனக் கோபம் குறையாமல் சொன்னவர், "உன் பையனை எங்க ஒளிச்சி வெச்சிருக்க? தயவு செஞ்சி சொல்லிடு!" என அருணா சீற,


அனைத்து குற்றங்களும் அவர்கள் பக்கம் இருக்கும் காரணத்தால், "உண்மையாவே அவன் எங்க இருக்கான்; எப்படி இருக்கான்; எதுவுமே தெரியாது சரிகாம்மா! என்னை நம்புங்க" என வெகுவாக தாழ்ந்துபோய் பதில் சொன்னார் வாணி.


அனைத்தையும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா.


"உங்களுக்காவது உங்க பிள்ளை எங்க இருக்கான்னுதான் தெரியலன்னு சொல்றீங்க; ஆனா எங்களுக்கு எங்க பிள்ளை உயிரோட இருக்கானான்னே தெரியல;


இங்க யாரையும் எங்களுக்குத் தெரியாது; எங்களுக்கு உங்களை மாதிரி அரசியல்வாதிங்க; போலீஸ்காரங்க சப்போர்ட்லாம் கிடையாது;


எங்க தீபனை எப்படி கண்டுபிடிக்கபோறமோ தெரியல?" என அவர் மெல்லிய குரலில் முனக, பதைபதைத்துப்போனார் வாணி.


"என்ன சொல்றீங்க சரிகாம்மா! எனக்கு ஒண்ணுமே புரியலையே?" என அவர் அச்சத்துடன் கேட்க, "ப்ச்... உங்ககிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது! கொலைகாரங்க கிட்டேயே நியாயம் கேட்டு என்ன பிரயோஜனம்! நீங்களும் ஒரு பொண்ண பெத்து வெச்சிருக்கீங்க; அதை மறந்துராதீங்க" என அவர்கள் அனைவரையுமே குற்றவாளிகளாக எண்ணி முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து சென்றார் அருணா.


உடலில் கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த சக்தியும் வடிந்தாற்போன்று அப்படியே தொய்ந்துபோய் வாயிற்படியில் உட்கார்ந்தார் வாணி.


அவரை எப்படித் தேற்றுவது என்பது புரியாமல் தவித்த மித்ரா, பின் தன்னை சமாளித்துக்கொண்டு உள்ளே சென்று சூடாகப் பாலை காய்ச்சி எடுத்துவந்தவள், அன்னையை வற்புறுத்தி அதனைப் பருகவைக்க, அவர் சற்று தெளியவும், அவருக்கு அருகில் உட்கார்ந்த மித்ரா, "ம்மா; அண்ணா இப்படியெல்லாம் பண்ணியிருப்பாங்களாம்மா?" என அப்பாவியாகக் கேட்க,


மகனுடைய அந்த நம்பிக்கை துரோகம் மனதை சுடவும், கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிய, புடவை தலைப்பால் அதைத் துடைத்துக்கொண்டு, 'அவன் பண்ணித்தான் இருக்கான் வசும்மா; ஆதாரமா வீடியோவே இருக்காம்' என மனதில் எண்ணியவர், அதைச் சொல்லும் துணிவு இல்லாது, "புரிலயேம்மா!" என்றார் வாணி.


அவர் சொன்னது விளங்காமல், "அப்படின்னா அண்ணாவைக் தேடவே வேண்டாமா" என அவள் கேட்க,


"அவன் தப்பு பண்ணியிருக்கான்; அதனாலதான் எங்கேயோ ஓடி ஒளிஞ்சிட்டு இருக்கான்;


அப்பா இந்த மாதிரி நிலைமையில் இருக்கும்போது கூட அவன் வரவே இல்ல; இந்த நிலைமையில் அவனைத் தேடி கண்டுபிடிச்சாலும் அது நமக்கு நிம்மதியைக் கொடுக்காது வசும்மா" எனச் சொன்னவர்,


"இவனுங்க செய்யற அக்கிரமத்தை பத்தி தெரிஞ்சவங்க யாராவது வெளிய சொல்லியிருந்தால் முன்னாலேயே நாம கொஞ்சம் சுதாரிச்சிருக்கலாம்! சரிகாவுக்கு இந்த நிலைமையே வந்திருக்காது" என அவர் எதார்த்தமாகச் சொல்லவும், பெற்றோரிடம் அவர்கள் காதலைப் பற்றி மறைத்துத் தான் செய்த தவறு விஸ்வரூபம் எடுத்து அவள் முன் நிற்க, அவளது மனசாட்சி அவளைக் குத்தி கிழித்தது.