top of page

Poovum Naanum Veru! 12

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

இதழ்-12


"அவங்க யாருன்னு அவங்களுக்கே மறந்துபோச்சு போலிருக்கு" எனக் கிண்டலாக சொன்ன தீபன், "ஐ மீன் அவங்க பேருக்கு என்ன அர்த்தம்னு அவங்களுக்கே புரியல! ம்..." என முடித்தான்.


அதற்கு என்ன பதில் சொல்வது எனப் புரியாமல், மிக முயன்று புன்னகைத்தாள் வசு.


அதன் பின் அவள் கொஞ்சம் கலகலப்பாக இருப்பதுபோல் தெரிந்தாலும் அவளுடைய கவனம் மொத்தமும் சாத்விகாவிடம் மட்டுமே இருந்தது.


அவள் ஓயாமல் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் அலுக்காமல் பதில் சொல்லிக்கொண்டே சாதுவுக்கு உணவை ஊட்டியவள், தானும் சாப்பிட்டு முடித்தாள்.


அதற்குள், "ஆன்டி! சூச்சூ!" என அவள் நெளிய, அவளைத் தூக்கிக்கொள்ள எழுந்த தீபனை தவிர்த்து, தானே அவளை அழைத்துக்கொண்டு ஓய்வறை நோக்கிப் போனாள் வசு.


அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, "என்ன பேசிட்டியா?" என தீபன் கேட்க, "எங்க!" என அலுத்துக்கொண்டவன் அனைத்தையும் சொன்னான் திலீப்!


"சரி விடு!" என அப்போதைக்குப் சொன்னவன், வசு அங்கே வந்த உடனேயே, "மிஸ்.வசு! இவன் உங்களை இங்க ஏன் வரச்சொன்னான் தெரியுமா?" என தீபன் கேட்க, 'தெரியாது' என்பது போல் தலையை ஆடியவள், மிரட்சியுடன் திலீப்பை பார்த்தாள் வசு.


"நீங்க இப்படி டென்ஷன் ஆக என்ன இருக்கு" என்றவன், "இந்த கல்யாண ஏற்பாட்டில் உங்களுக்கு விருப்பம்தானா? இல்ல பெரியவங்க சொல்றாங்களேன்னு நீங்க இதுக்கு சம்மதிச்சீங்களா?" என நேரடியாகவே அவளிடம் கேட்டுவிட்டேன் தீபன்.


என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் மிரண்டுபோய் குழப்பத்துடன் சில நொடிகள் யோசித்தவள், கலைவாணி சொன்ன வார்த்தைகள் நினைவில் வர, தட்டுத்தடுமாறி, "எனக்குச் சம்மதம்தான்!" எனச் சொல்லிவிட்டாள் வசு.


உள்ளுக்குள்ளே கனன்ற கோபத்தைக் கொஞ்சமும் வெளிக்காண்பிக்காமல், திலீப்பை பார்த்தவன், அவன் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு, "போதுமா திலீப்! சந்தோஷம்தான! இனிமேல் நிம்மதியா தூங்குவ இல்ல!" என தீபன் கிண்டலாகக் கேட்க, "மச்சான் ரொம்ப ஓட்டாதடா!" என்றான் திலீப் புன்னகையுடனே.


"ஓகே டா! பாப்பாவுக்கு தூக்கம் வந்திடும்! நான் கிளம்பறேன்!" என்றவன், "நீங்க எப்படி போவீங்க வசு!" எனக் கேட்க, "நான் ட்ரைன்ல போயிடுவேன்! ஊரப்பாக்கம் ஸ்டேஷன்ல ஸ்கூட்டியை விட்டிருக்கேன்! அதுல வீட்டுக்கு போயிடுவேன்" என்றாள் அவள் சற்று தயக்கத்துடன்.


"வாட்… தனியாவா" என்றவன், "நோ! நோ! இப்பவே மணி நைன் ஆகப்போகுது; திலீப் நீ அவங்களை ட்ராப் பண்ணிட்டு அப்பறம் வீட்டுக்கு போ!" என்றான் தீபன் உண்மையான அக்கறையுடன்.


"இல்ல! பரவாயில்ல! இங்கிருந்து நைன் தர்டிஃபைக்கு ஒரு டைரக்ட் ட்ரெயின் இருக்கு; நான் போயிடுவேன்" என வசு மறுப்பாகக் கூற, அவளுடன் பயணிக்க ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைக்கவும் அதை விட்டுவிட மனம் இல்லாமல், "நீ சும்மா இரு வசு; தீபன் சொல்றதுதான் சரி. நான் முதலிலேயே யோசிக்கல; இல்லனா உன்னை பிக் அப் பண்ண கார் அனுப்பியிருப்பேன்" என்றான் திலீப் அவளுடைய மறுப்பை ஏற்காமல்.


அதே நேரம் சரியாக அவனுடைய கைப்பேசி ஒலிக்க, அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்து, “ஆஆஆ” என்றவாறு விழிகளை இறுக மூடித்திறந்தவன், "தாத்தாடா மச்சான்! இந்த நேரத்துல ஏன் கூப்பிடறார் தெரியலியே" எனப் புலம்பலாக தீபனை பார்த்துச் சொல்லிவிட்டு, "சொல்லுங்க தாத்தா!" என்றான் பணிவு தோய்க்கப்பட்ட குரலில்.


"முக்கியமா பேசணும். உடனே கிளம்பி வா." என அவர் கட்டளையாகச் சொல்ல,


"என்ன… இப்பவேவா; உடனே வரனுமா?!" என அவன் அதிர்வுடன் கேட்க, "இதென்ன கேள்வி; உடனே வான்னு சொன்னா அதுதானே அர்த்தம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்க வந்து சேரு" என அழுத்தமாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.


அவன் பரிதாபமாக தீபனை பார்க்க, கலகலவென சிரித்தவன், "உங்க அம்மா செஞ்ச வேலையா இருக்கும்!


உன் கல்யாண விஷயத்தைச் சொல்ல அங்க போயிருப்பாங்க!" என தீபன் சொல்ல,


"நீ என்ன முக்காலமும் உணர்ந்த மகான் தீபப்ரகாசானந்தாவா மச்சான்! எல்லாத்தையும் நேரில் பார்த்த மதிரி சொல்ற!


அம்மா அங்கதான் இருக்காங்க; அவங்க குரல் கேட்டுது!" என்று வியப்பது போலச் சொன்னவன், "மச்சான் நீயே இவளை ட்ராப் பண்ணிடுடா ப்ளீஸ்!" என முடித்தான் திலீப்.


'நீ பிளான் பண்ணது; பிளான் பண்ணாதது எல்லாமே தானா நடக்குதே தீபா! இப்ப காத்து உன் பக்கம்தான் போலிருக்கே!' என மனதிற்குள் எண்ணியவன், "சரி! நீ உடனே கிளம்பு; இல்லனா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார் உங்க தாத்தா" என்றான் தீபன் அடக்கப்பட்ட சிரிப்புடன்.


பேசிக்கொண்டே அவர்கள் அந்த நட்சத்திர விடுதியின் வாயிற்பகுதிக்கு வந்துவிட, ஒன்றன்பின் ஒன்றாக இருவரது கார்களும் அங்கே வந்தது.


திலீப்புடைய வாகனம் நகர்புறத்தை நோக்கித் திரும்ப, தீபனுடைய வாகனம் சென்னையின் புறநகர் பகுதியில் பயணித்தது.


ஓட்டுநர் வண்டியை ஓட்டி வர, வசு பின் இருக்கையில் அமர்ந்து சாத்விகாவை மடியில் வைத்துக்கொண்டு மெல்லிய குரலில் அவளிடம் ஏதோ பேசிக்கொண்டே வர, அவர்களுக்கு அருகில் சற்று இடைவெளி விட்டு உட்கார்ந்துகொண்டு அவனது மடிக்கணினியில் மும்முரமாக மூழ்கிப்போனான் தீபன்.


முழுவதுமாக ஒருமணி நேரம் கடந்திருக்க, காரை ஓரமாக நிறுத்திவிட்டு, "சார்! ஊரப்பாக்கம் ஸ்டேஷன் வந்திருச்சு!" என அவனது ஓட்டுநர் தீபனிடம் சொல்லும்வரை தன்னை மறந்து வேலையில் மூழ்கி இருந்தான் அவன்.


அவருடைய குரலில்தான் சுற்றுப்புறம் உறைத்தது அவனுக்கு.


அவன் பக்கத்தில் திரும்பிப் பார்க்க வசுவின் மடியில் படுத்தவாறு சாத்விகா உறங்கி இருந்தாள். வண்டி நின்றதை உணர்ந்து வசு அப்பொழுதுதான் உறக்கத்திலிருந்து விழித்திருப்பாள் போலும். அவளுடைய கண்களில் உறக்கம் இன்னும் மீதம் இருந்தது.


கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தவன் மடிக்கணினியை அணைத்து ஓரமாக வைத்துவிட்டு வாகனத்தை விட்டு இறங்கிச் சுற்றி வந்த தீபன் குழந்தையை கைகளில் தூக்கிக்கொள்ள, உடனே கீழே இறங்கினாள் வசு.


சாத்விகாவை வசதியாகப் படுக்க வைத்து அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த தலையணைகளை அணைவாக வைத்துவிட்டு, "சாவியையும் டோக்கனையும் கொடு!" என அவன் வசுவிடம் கேட்க,


"என்ன?" எனப் புரியாமல் விழித்தவளிடம், "உன் ஸ்கூட்டி சாவியையும் பார்க்கிங் டோக்கனையும் கொடு!" என அவன் விளக்கமாகச் சொல்லவும், வெகுவான தயக்கத்துடன் அவற்றை தீபனிடம் கொடுத்தாள் அவள்.


ஏதோ கூர்மையாக யோசித்தவாறே அவற்றை கையில் வாங்கியவனின் கண்களில் ஒரு மின்னல் வெட்டி மறைந்தது.


உடனே அவனுடைய ஓட்டுநரிடம் அவற்றை கொடுத்தவன், "சீனு அண்ணா! ரயில்வே பார்கிங்க்ல இவங்க வண்டி இருக்கு” என அவளது வாகனப் பதிவு எண்ணைச் சொன்னவன் தொடர்ந்து “அதை எடுத்துட்டு இவங்க வீட்டுக்கு வந்துடுங்க! இங்க இருந்து ஒரு ரெண்டு மூணு கிலோமீட்டர்தான் இருக்கும்." என்று அவளுடைய வீட்டிற்கு வழியைக் கூறி அவரை அனுப்பினான் தீபன்.


"பாப்பா நல்லா தூங்கறா! நீ முன்னால வந்து உட்கார்!" என்று சொல்லிவிட்டு ஓட்டுநர் இருக்கையில் போய் உட்கார்ந்து வண்டியைக் கிளப்பினான் அவன்.


அதுவரையிலும் அவனுடைய அழைப்பில் சம்பிரதாயத்திற்காகவேணும் ஒட்டியிருந்த ‘…ங்க’ திடீரென்று காணாமல் போயிருப்பதையும், அதைவிட, மனப்பாடம் செய்ததுபோல் அவளுடைய வாகன எண்ணை தீபன் சொன்னதையும் உணர்ந்தவள் அதைப் பற்றிய சிந்தனையில் இருக்கவே, அவன் சொன்னவுடன் எதையும் யோசிக்காமல் அவனுக்கு அருகில் இருக்கும் இருக்கையில் போய் உட்கார்ந்தாள் வசு.


ஊரப்பாக்கத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்தது வெள்ளரிப்பக்கம் கிராமம்.


மூன்று வருடங்களுக்கு முன் வசுவிற்கு அந்த ஊர் பள்ளியில் பணி நியமனம் ஆகிவிட, அங்கேயே ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு குடிவந்தது அவளுடைய குடும்பம்.


முழுநேரமும் ஒருவர் அருகிலிருந்து பார்த்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலையிலிருந்ததாலும், ஓரளவிற்கு நடமாடிக்கொண்டிருந்தாலும் ராகவனும் ஒரு இதய நோயாளி என்பதாலும், குறைந்தபட்ச கட்டணம் பெற்றுக்கொண்டு முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்களைப் பாதுகாக்க வண்டலூர் பகுதியில் இயங்கிவரும் தொண்டு நிறுவனம் ஒன்றில் பிடிவாதம் பிடித்து, அங்கே வந்த சில மாதங்களிலேயே சேர்ந்தார் கலை.


நகரத்திலிருந்து வெகுவாக தள்ளி இருப்பதால், சமீப காலமாகத்தான் வளர்ச்சி அடைய தொடங்கியிருந்தது அந்த ஊர்.


அங்கங்கே புதர் மண்டிப்போய் காலியாக இருக்கும் மனைகளும், போதுமான அளவுக்குத் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்திருக்கும் பகுதிகளும் கிலியைக் கொடுப்பதால் இரவு நேரத்தில் வெளியே செல்வதையே தவிர்த்துவிடுவாள் வசு.


அன்று தீபனுடன் பயணிப்பதில் ஒரு பாதுகாப்பை உணர்ந்தாலும், அவனுக்கு அவளைப் பற்றித் தெரிந்துவிட்டதாலோ என்னவோ அதையும் மீறி ஒரு சங்கடமும் ஏற்பட்டது அவளுக்கு.


வசு ஏதேதோ யோசனையுடன் சாலையை வெறித்தவண்ணம் இருக்க, வண்டியை ஓட்டுவதில் கவனமாய் இருந்தான் தீபன்.


அவளுடைய வீட்டிற்குச் செல்லும் திருப்பம் வரும் வரை அந்த அமைதி நிலை நீடிக்க, ஆளரவம் அற்ற அந்த இடத்தில் மென்மையாக அந்த கார் நின்றுவிடவும், அதை உணர்ந்து, "எங்க வீட்டுக்கு லெஃப்ட்ல டர்ன் பண்ணி போகணும்!" எனத் திக்கித்திணறி பதட்டத்துடன் சொன்னாள் அவள்.


"யெப்! தட் ஐ நோ! பட்" என நிறுத்தியவன், ஒரு நொடி யோசித்து, "இன்னும் எத்தனை பேர இப்படி பொய் சொல்லி ஏமாத்தலாம்னு நினைக்கற மித்...ரா!" எனக்கேட்டான் தீபன் சற்று கடினமான குரலில்.


எதிர்பாராத அந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்தவள், "இல்ல! நான் எந்த பொய்யும் சொல்லல! யாரையும் ஏமாத்தல! உண்மையிலேயே நானே ஏமாந்துதான் போயிட்டேன்" எனக் கண்களில் துளிர்த்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்றவாறு தழுதழுத்தாள் வசு.


லேசாக திரண்ட கண்ணீரால் பளபளத்த அவள் விழிகளை ஆழமாக பார்த்துக்கொண்டே, "ம்ஹும்! நிஜமாவா! அப்படினா அதை ப்ரூவ் பண்ணு! நான் நம்பறேன்!" என அவன் கொஞ்சமும் இளக்கமில்லாமல் சொல்லவும், அச்சத்தில் நா வறண்டு போக பேசவும் முடியாமல், "நானா! எப்படி!" எனக் கேட்டாள் வசு.


"ம்... ரொம்ப சிம்பிள்; அதாவது உன் அண்ணன் எங்க இருக்கான்னு சொல்லு; எனக்கு அது போதும்; அதுக்கு பிறகு நீ திலீப்பை கல்யாணம் பண்ணிட்டாலும் சரி; வேற எவனை கல்யாணம் செஞ்சுக்கிட்டாலும் சரி; உன்னை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்!" என உறுமினான் தீபன்.


அவன் அப்படிச் சொல்லவும், சில நொடிகள் கண்களை மூடி தன்னை கொஞ்சம் நிலை படுத்திக்கொண்டு, ஒரு முடிவுக்கு வந்தவளாக, "எனக்கு ஒரு டூ டேஸ் டைம் கொடுங்க! உங்களுக்குப் பதில் சொல்றேன்! ஐ மீன்; நீங்க சொன்ன மாதிரி ப்ரூவ் பண்றேன்" என அவள் சொல்லவும், "ஏன்; அவனை அலர்ட் பண்ண உனக்கு இந்த டூ டேஸ் வேணுமா?" என அவன் நக்கலாகக் கேட்க,


ஒரு கசந்த புன்னகையுடன், "நீங்க நம்பினாலும் சரி; நம்பாம போனாலும் சரி! உங்களுக்கு தேவையான தகவலை நான் உங்களுக்குக் கொடுக்க ரெண்டு நாள் ஆகும்! வேற வழி இல்ல மிஸ்டர் தீபப்ரகாசன்! நீங்க வெயிட் பண்ணிதான் ஆகணும்" என்றவள்,


சில நிமிடங்களுக்குள்தான் என்றாலும் அவள் எடுத்த அழுத்தமான முடிவு கொடுத்த துணிவில், "நீங்க என்னை வீட்டுல ட்ராப் பண்றீங்களா இல்ல நான் இறங்கி நடந்துபோகட்டுமா?" என அவள் சீற்றமாய் அவனுக்குப் பதில் கொடுக்க, தீபன் தனது கோபம் முழுவதையும் அவனுடைய காரில் காண்பிக்க, சீற்றத்துடன் அவளது வீட்டை அடைந்தது அந்த வாகனம்.


அவர்கள் வீட்டு வாயிலிலேயே தீபனின் ஓட்டுநர் ஸ்கூட்டியுடன் காத்திருக்க, அவளை அங்கே இறக்கிவிட்டுவிட்டு உடனே கிளம்பினான் தீபன்.


***


வசு வீட்டிற்குள் நுழைய, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு அவளுக்காக வரவேற்பறையிலேயே காத்திருந்த கலைவாணி ஆவலுடன், "யாரு; மாப்பிள்ளையா உன்னை ட்ராப் பண்ணிட்டு போனார் வசும்மா; வீட்டுக்குள்ள கூப்பிட்டிருக்கலாம் இல்ல? உன்னை எதுக்காக கூப்பிட்டார்?" எனக் கேள்விமேல் கேள்வியாகக் கேட்க, அவரது கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லாமல், "மா! நீங்க ஏன் இப்படி உட்கார்ந்துட்டு இருக்கீங்க; அப்பறம் பேக் பெயின் வரும்" என அன்னையைக் கடிந்துகொண்டவள், "நீங்க சொல்லக்கூடாதா ...ப்பா?" என அவரிடமும் சீற, "ஏன் மா இப்படி சொல்ற; உன்னை பார்க்காமல் அவளுக்கு எப்படி தூக்கம் வரும்" என நிதானமாகக் கேட்டவர், "ஏன் கலை! எல்லாத்தையும் இப்பவே கேட்டாகணுமா? காலையில பார்த்துக்கலாம் போய் தூங்கு" என மனைவியையும் தடுத்தார் ராகவன்.


"என்னவோ போங்க" என்றவள், "நீங்க ரெண்டுபேரும் சாப்பிட்டீங்களா? சந்திரா அக்கா சாப்பிட்டாங்களா?" எனத் தணிந்த குரலில் அக்கறையுடன் கேட்டாள் வசு.


அவர்கள் சாப்பிட்டு முடித்தது தெரியவும், "சந்திரா அக்கா! அம்மாவை கூட்டிட்டு போய் ரூம்ல படுக்க வைங்க ப்ளீஸ்!" என அவரை கவனித்துக்கொள்ளும் செவிலியரிடம் சொல்லிவிட்டு, சமையல் அறையைச் சுத்தம் செய்து முடித்தாள்.


அன்னையின் தூக்கம் கெடக்கூடாது என்ற காரணத்தால் வரவேற்பறையில் மடிக் கணினியுடனும், திருத்த வேண்டிய விடைத் தாள்களுடனும் வந்து உட்கார்ந்த வசு முதல் வேலையாக அடுத்த நாளே நாமக்கல் செல்ல பேருந்திற்குப் பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டு, பின் இரண்டு நாட்கள் தற்செயல் விடுப்பு (casual leave) கோரி பள்ளிக்கு ஒரு கடிதமும் எழுதிவிட்டு, அனைத்து பரீட்சை தாள்களையும் இரவோடு இரவாகத் திருத்தி முடித்தாள்.


***


அடுத்த நாள் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவள், திருத்திய தாள்களை ஒப்படைத்துவிட்டு, தலைமை ஆசிரியரை சந்தித்து விடுப்பு கோரி கடிதத்தையும் கொடுத்துவிட்டு, அவர்கள் பகுதியில் இருக்கும் மெஸ் ஒன்றில் வீட்டில் இருப்பவர்களுக்கு இரண்டுநாட்களுக்கு உணவு ஏற்பாடு செய்துவிட்டு உடனே வீட்டுக்கு வந்தாள் வசு.


அந்த நேரம் அவளை அங்கே எதிர்பாராததால், திகைத்த கலைவாணியிடம், "மா; என்னோட காலேஜ் ஃப்ரென்ட் அனுசூயா தெரியும் இல்ல; நாளைக்கு அவளுக்கு கல்யாணம்;" என்று சொல்லி உண்மையாகவே அவளுக்கு வந்திருந்த, அனுசூயா-சத்யநாராயணன் என மனமக்களின் பெயர் அச்சிடப்பட்டிருக்கும் ஒரு திருமண அழைப்பிதழை காண்பித்தாள் வசு.


"தெரியுமே! நீதான் போகப்போறதில்லன்னு சொன்னியே வசும்மா!" என ராகவன் கேட்க, "ப்ச்... இல்லப்பா! உங்களையும் அம்மாவையும் விட்டுட்டு போக வேண்டாம்னுதான் பார்த்தேன்.


ஆனா மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வர சொல்லி கம்பெல் பண்றாங்க; அவாய்ட் பண்ண முடியல!" என பாதி உண்மையும் மீதி பொய்யுமாக அவரிடம் சொன்னாள் வசு.


"ரெண்டு நாள் தான; நாங்க மேனேஜ் பண்ணிப்போம்; நீ போயிட்டு வா வசும்மா! உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்!" என பரிவுடன் சொன்னார் கலைவாணி.


'தன் மனதறிந்து பெற்றோரை ஏமாற்றுகிறோமே' என்ற குற்ற உணர்ச்சி மேலிடத் தனது ஆடைகளை எடுத்து பயணப் பெட்டியில் அடுக்கியவள், நாமக்கல் நோக்கி தனது பயணத்தைத் தொடங்கினாள் வசு.


***


இந்த பயணமும் புதிதில்லை...


பயணிக்கும் பாதையும் புதிதில்லை...


புதிது - உனக்கான இந்த பயணம் மட்டுமே!


நான் பயணிக்கும் இப்பாதை ஒரு வழிப் பாதை!


நான் ஒருத்தி மட்டுமே பயணிக்கும் நெடுவழி பாதை!


இப்பயணம் முடியும் இடம்...


இந்த பாதை முடியும் இடம்...


எனை தன்னுள் இழுத்துக்கொள்ளும்...


ஒரு பெர்முடா முக்கோணம் எனத் தெரிந்தே பயணிப்பதால்...


பூவும் நானும் வேறுதான்.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page