top of page

Poove Unn Punnagayil - 30

அத்தியாயம்-30

பரபரப்பாகக் காலை சிற்றுண்டியைத் தயார் செய்துகொண்டிருந்தவளுக்கு நேராக, "சத்யா" என்றவாறு தன் அலைப்பேசியைக் கொண்டுவந்து நீட்டினான் கருணாகரன்.


'ஐயோ, என்ன இந்த பையன் பொழுது விடிய கால் பண்ணியிருக்கான். இது காலேஜ் போற நேரம் கூட இல்லையே?' என யாருக்கு என்னவோ என்பதாக மனதிற்குள்ளேயே பதறியபடி, “சொல்லுடா” என்றாள் தாமரை படபடப்புடன்.


"ஹாப்பி பர்த் டே அக்கா" என உற்சாகமாக சத்யாவின் குரல் ஒலிக்கவும் ‘ஷ்... அப்பாடா!’ என்கிற ஆசுவாசத்துடன், "தேங்க்ஸ் டா தங்கம்!" என்றவள், "இதை சொல்லத்தான் இவ்வளவு சீக்கிரம் எஸ்.டி.டீ பூத் தேடி வந்து கால் பண்ணியா?" எனக் கேட்டாள் அவள் பெருமை பொங்க.


"இல்லையா பின்ன, அதுக்குதான் ஆறரை மணி பஸ் பிடிச்சி கிளம்பி வந்தேன்க்கா" என்றவன், "அப்பா ஊருக்கு வர முடியலன்னு சொல்லி மெட்ராஸ்ல இருந்து கொஞ்சம் பணம் மணி ஆர்டர் பண்ணியிருந்தாங்க. கூடவே உன் வீட்டுக்கு வந்தது பத்தி எழுதியிருந்தாங்கக்கா. உனக்கு பர்த்டேன்னு ஞாபகம் வெச்சிருக்காங்க பாரேன்" என அதிசயித்தவன், "இன்னும் ஒரு முக்கியமான விஷயம்க்கா" என இழுக்க, "என்னடா சொல்லு" என அவள் ஊக்குவிக்கவும், "ஒன்னும் இல்லக்கா, ஒரு சீனியர் அண்ணா மூலமா தரமணில ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணியிருந்தேன். இன்டர்வ்யூக்கு வந்திருக்கு. ரிட்டன் டெஸ்ட்டு, பர்சனல் இன்டர்வ்யூன்னு ரெண்டு மூணு நாள் நான் அங்க தங்க வேண்டி இருக்கும்க்கா. உன் வீட்டுல தங்கி போயிட்டு வரட்டுமா?" என அவன் தயங்கியபடியே கேட்க, என்ன சொல்வதென்றே புரியவில்லை தாமரைக்கு. "இதை நீ அத்தான் கிட்டயே கேட்டிருக்கலாமே" என்றவள், "இரு போன அவர்கிட்ட கொடுக்கறேன், நீயே கேளு" என்று சொல்லிவிட்டு கைப்பேசியைக் கருணாகரனிடம் கொடுக்க, கேள்வியுடன் அதை வாங்கினான் அவன்.


தமக்கையிடம் சொன்ன அதே விஷயத்தை சத்யா அவனிடமும் விவரிக்க, "இதையெல்லாம் என் கிட்ட கேட்கணுமா என்ன? இது உன் அக்கா வீடுப்பா. நீ எப்ப வேணா வரலாம். எப்ப வேணா போகலாம்" என்றான் சில தினங்களுக்கு முன் மாமனாரிடம் அவன் நடந்துகொண்ட விதத்தை முற்றிலும் மறந்துபோனவனாக.


தாமரையின் உதடுகள் இகழ்ச்சியுடன் வளையவும், அதைப் பார்த்ததும் வழக்கமாக வரும் கோபத்திற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது கருணாகரனுக்கு.


அதற்குள், 'தேங்க்ஸ் அத்தான், இன்டர்வ்யூக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. வியாழக்கிழமை பர்ஸ்ட் பஸ்ஸ பிடிச்சு வந்துடறேன். மத்ததை நேர்லயே பேசிக்கலாம்" என குதூகலமாக சொல்லியபடி அழைப்பைத் துண்டித்தான் சத்யா.


"அன்னைக்கு சூழ்நிலை உங்க அப்பா கிட்ட அப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு. இவன் இப்ப முறைப்படி சொல்லிட்டுதான வரப்போறன். உனக்கு என்னை பார்த்தா அவர்கள் பட ரஜினி மாதிரி தோணுதா? வாய் ரொம்ப கோணுது" எனே சிரிப்பினூடே தன் செய்கைக்கு நியாயம் கற்பித்தவன், “ஹாப்பி பர்த்டே” என சமாளிப்பாக சொல்லிவிட்டு, 'மஹாராணி இதெல்லாம் முன்னாலையே சொல்ல மாட்டாங்க. வேலைல நாம மறந்துபோனா மட்டும் நாலு நாளைக்கு மூஞ்சியை தூக்கி வெச்சிட்டு சுத்த வேண்டியது' என தனக்குத்தானே புலம்பியபடி மகள் உறக்கம் கலைந்து குரல் கொடுக்கவும் அவளைத் தூக்குவது போல வேகமாக அங்கிருந்து அகன்றான் கருணாகரன், மனைவி சமையல் செய்யும் நேரங்களில் மகளுடைய பொறுப்பு மொத்தம் அவனுடையதாக இருப்பதால்.


அவனுடைய செய்கையில் ஒரு புன்னகை அரும்பினாலும் எதற்கு முறைப்பான் எதற்கு சிரிப்பான் என்பது புரியாமல் அவனுக்குத் தகுந்தபடி நடந்துகொள்ளவும் முடியாமல் பாடாய் பட்டுக்கொண்டிருக்கிறோமே என ஆயாசமாக இருந்தது அவளுக்கு.


அன்று மாலை சீக்கிரமே வீட்டுக்கு வந்தவன் வாழை இலையில் சுற்றப்பட்ட மல்லிகைச்சரத்துடன் ஒரு ஜோடி கொலுசையும் அவளுக்குப் பிடித்த சிவப்பு நிற கண்ணாடி வளையல்களையும் அவளுக்குப் பரிசளிக்க, அவன் செய்யும் இடக்குகள் அத்தனையும் மறந்துபோய் அந்த நொடியின் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்து போனது தாமரையின் மனதில்.


பரிசு கொடுத்தால்தான் பெண்கள் மனம் மகிழ்ந்துபோவார்கள் என இதற்கு அர்த்தமில்லை. பெண்கள், அதிலும் குறிப்பாக வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டாமல் பொருளாதார சுதந்திரம் இல்லாமல் கணவனை மட்டுமே சார்ந்து வாழும் பெண்கள், அவனுக்குப் பிடித்தபடி சமையல் செய்வது அவனுக்கான பிரத்தியேக வேலைகளைச் செய்வது என அனைத்தையும் கவனித்துக்கொள்கிறாள். இங்கே அவன் அந்த வீட்டின் அரசனாக/எஜமானனாகத் திகழ்கிறான். ஆனால் மனைவி என்னும் பெண்ணுக்கான அங்கீகாரம், அவள் தன்னை ஒரு தலைவியாக உணரும் தருணம், தான் அங்கே ஒரு பணிப்பெண் இல்லை அந்த இல்லத்தின் அரசி எனக் கணவன் தன்னை அங்கீகரிக்கிறான் என்பதற்கான அன்பின் அடையாளமல்லவா இதுபோன்ற வாழ்த்துகளும் பரிசுகளும்.


குடும்ப செலவுகளுக்குப் பணம் சம்பாதித்து வந்து போட்டுவிட்டால் மட்டும் கணவன் அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்று அவளால் உணர்ந்துவிட முடியுமா என்ன? பிறந்தநாள் திருமணநாள் போன்ற ஓரிரு சிறப்பான நாட்களை நினைவில் வைத்திருந்து அவளுக்கு வாழ்த்து சொல்வது, சிறு சிறு அன்பளிப்புகள் கொடுப்பது என்பது அவளைச் சிறப்பிக்கும் ஒரு சிறு செய்கை அல்லவா. இது ஒரு குழந்தைத்தனமான எதிர்பார்ப்புதானே? எனவேதான் இவற்றை அதிகம் எதிர்பார்க்கிறார்கள், இதிலேயே அவர்கள் மனம் குளிர்ந்தும் போகிறார்கள்.


வேட்டையாடிகள் காலம் தொட்டே மிகப்பெரிய விலங்கை எவன் ஒருவன் வேட்டையாடிக் கொண்டுவருகிறானோ அந்த வலிமை மிக்கவனையே பெரும்பாலான பெண்கள் தேடி இணை சேர்ந்தார்கள். காலம் காலமாக ஒரு சின்னஞ்சிறு உலகத்திற்குள் பூட்டிவைக்கப்பட்ட பெண்களின் அற்பமான மனநிலை இது. இது இயல்பில் பெண்களின் மரபணுவில் பதிந்துபோன ஒன்றாக இருப்பதாலோ என்னவோ சுயமாக வருமானம் ஈட்டி இந்த பரந்த உலகை ஆள ஆரம்பித்தபின்னும் கூட பெண்களில் இந்த மனநிலையில் இன்னும்கூட மாற்றம் ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது.


'பேர்ட் ஆஃப் பாரடைஸ்' என்ற ஒரு பறவை இனத்தில் தான் விரும்பும் இணையைக் கவர ஆண் பறவையானது தன் இறகுகளை வட்டமாக விரித்து குதித்துக் குதித்து நடனமாடும். மயிலும் கூட அப்படிதான். இது ஒருவித இயற்கையின் நியதி. 'நீ எனக்கு மிக முக்கியமானவள். உன்னுடைய தேவைகளை நான் அறிவேன்' என மனைவியை நம்பவைக்கவேண்டிய கடமை ஒவ்வொரு கணவனுக்கும் உண்டு. காரணம் 'நான் என்ன இருந்தாலும் வேறு ஒரு குடும்பத்திலிருந்து இங்கே 'வந்தவள்'தானே என்கிற ஒருவிதமான அன்னியத்தனமான பாதுகாப்பற்ற மனநிலை ஒவ்வொரு பெண்ணுக்கும் அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது, அவள் பொருளாதார சுதந்திரம் பெற்றவளாக இருந்தாலும் கூட!


***


அவளுடைய பிறந்தநாளைக் கொண்டாட அவளையும் குழந்தையையும் கோவிலுக்கு அழைத்துச்சென்றவன், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தாமரையிடமிருந்த மகளை வாங்கி தோளில் சுமந்தவாறு அவளை உரசியபடி கோவிலை நோக்கி நடக்க, போவோர் வருவோரின் பார்வையெல்லாம் ஒரு ஆர்வத்துடன் அவர்களையே தொட்டு தொட்டு மீள்வதுபோல் தோன்றவும், அவளுடைய அப்பா வாங்கித்தந்த புடவையை உடுத்தி அவன் பரிசளித்த கொலுசையும் வளையல்களையும் அணிந்து தலை நிறைய மல்லிகையைச் சூடி அவள் கிளம்பிவந்த அழகில் ஏற்கனவே மயங்கிப்போயிருந்தவனுக்கு, என் மனைவி என் மகள் என அப்படி ஒரு கர்வம் உண்டானது.


அதை அப்படியே தக்கவைத்துக்கொள்ளும் ஆசை தோன்ற, கடவுளை தரிசித்துவந்தக்கையுடன் பிரபல ஸ்டூடியோ ஒன்றுக்கு போய் மனைவி மற்றும் மகளுடன் அழகான குடும்ப புகைக்கப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டபின்தான் பசி என்ற உணர்வே தெரிந்தது அவனுக்கு.


மகளின் மழலையுடனும் குறும்பு சேட்டைகளுடனும் அன்றைய மாலை இன்பமாய் கழிந்திருக்க மனநிறைவுடன் கூடிய இது வரை அவர்கள் உணர்ந்தேயிராத ஒருவித புதிய கிறக்கமும் மயக்கமும் இருவரையுமே ஆட்கொண்டது.


இரவு உணவை ஒரு ஹோட்டலில் முடித்துக்கொண்டு இருவரும் வீடு வந்து சேரும்போது களைப்பில் உறங்கிப்போயிருந்தாள் குழந்தை.


கருணா வாகனத்தை நிறுத்திவிட்டு வந்து வீட்டின் கதவைத் திறக்க, மகளைத் தூளியில் வசதியாகப் படுக்கவைத்தாள் தாமரை. அந்த நொடிக்காகவே காத்திருந்தவனாகக் காதலும் மோகமும் போட்டிபோட தாபத்துடன் அவளை நெருங்கினான் கருணாகரன்.


முதன்முறையாக எதார்த்தமாக மன பேதங்களற்ற ஒரு இனிமையான இயல்பான முத்தங்களுடனும் அணைப்புகளுடனும் தொடங்கி காமம் மட்டுமே தலைதூக்காமல் ஒருவர் மீது மற்றவருக்கு இயல்பாகச் சுரக்கும் அன்பும் கொஞ்சம் கலந்த கூடலாக அது முற்றுப்பெற இருவருக்குமே ஒரு புதிய உலகத்தைத் திறந்தது காண்பித்தது அன்றைய தினம்.


ஒருவரை ஒருவர் காயப்படுத்திப்பார்க்காமல் மனதளவில் இன்னும் அதிகம் நெருங்கவேண்டும் என்கிற எண்ணம் ஒன்றுபோல இருவருக்குமே ஏற்பட்ட தருணமாக அது அமைந்து போனது.


அதை செயல்படுத்துவது என்பது அவ்வளவு சுலபமானதாக இருக்குமா என்ன? அதற்கு இருவருமே கொஞ்சம் அதிகம் விட்டுக்கொடுத்துப் போராட வேண்டாமா? அதற்கான சோதனையைத்தான் காலம் அவர்களுக்காகத் தயாராக வைத்திருந்தது கூடிய விரைவிலேயே!


***


"ஏம்மா, ஃபர்ஸ்ட் பஸ்ஸ பிடிச்சிருந்தா இந்த நேரத்துக்கு வந்து சேர்ந்திருக்கணும் இல்ல? இந்த பையன் ஏன் இன்னும் வரல?" என முகச்சவரம் செய்தபடியே கேட்டுக்கொண்டிருந்தான் கருணா.


"தெரியலியேங்க, ஒரு வேளை தூங்கிட்டு பஸ்ஸை விட்டுட்டானோ என்னவோ" என அடுக்களையிலிருந்தே அவனுக்கு பதில் கொடுத்தவளுக்கு ஒரு பெருமூச்சு எழுந்தது.


காலை உணவை முடித்துக்கொண்டு தானே அவனை அந்த நிறுவனத்தில் இறக்கி விட்டுவிட்டு சைட்டுக்கு போவதாகச் சொல்லியிருந்தான் கருணா. சத்யா என்னடாவென்றால் இப்படி தாமதம் செய்கிறானே என்று இருந்தது இவளுக்கு.


"பரவாயில்லைங்க, நீங்க சாப்பிட்டுட்டு கிளம்புங்க. அவன் வந்தா பஸ் பிடிச்சு போய்க்குவான், அதான் லேண்ட் லைன் போன் வந்துடுச்சே. அவன் வந்ததும் உங்களுக்கு கால் பண்ண சொல்றேன்" என்றவள் தன் வேலையில் மும்முரமாகிவிட, "எதுக்கும் ஒரு ஒன்பது மணி வரைக்கும் பார்க்கறேன்" என்று சொல்லிவிட்டு குளிக்கப்போனான் அவன். இந்த அளவுக்கு கரிசனமாக அவன் நடந்துகொள்வதே போதும் என்றிருந்தது தாமரைக்கு.


ஆனால் சத்யாதான் வந்தபாடில்லை. வேறு வழி இல்லாமல் கருணா தன் தொழிலை கவனிக்க சென்றுவிட மதியம் வரைக்குமே அவன் வராமல் போகவும் ஒரு வித பயம் பிடித்துக்கொண்டது தாமரைக்கு.


கருணாகரனின் அலைபேசிக்கு அழைத்தால் இன்கமிங் அவுட்-கோயிங் கால் அனைத்திற்குமே அதிக கட்டணம் என்பதால் அவனுக்கு அழைத்துச் சொல்லலாமா வேண்டாமா என அவள் தவித்துக்கொண்டிருக்க, அவனே அவளை அழைத்துக் கேட்கவும் சத்யா வரவில்லை என்பதை அவள் சொல்ல, என்னவென்று விசாரிப்பதாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்தான் அவன்.


அதன்பிறகு அவனிடமிருந்தும் எந்த தகவலும் இல்லாமல் போக, அவர்களுடைய படுக்கையறை ஜன்னல் வழியாக காம்பௌண்ட் கேட்டையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவள், உறக்கத்திலிருந்த ஹாசினி விழித்துக்கொண்டு சிணுங்கவும் அவளை கவனிக்கச் சென்றாள் தாமரை.


சரியாக அந்த நேரத்தில் பரபரப்புடன் உள்ளே நுழைந்த கருணா, "சட்டுனு ரெண்டு செட் டிரஸ் எடுத்து வச்சிட்டு கிளம்பு தாமரை" என்று அவளையும் துரிதப்படுத்த, "ஐயோ! என்ன ஆச்சுங்க?" என பதறினாள் அவள். "ஹேய், பயப்படற அளவுக்கு ஒண்ணும் இல்ல தாமரை. பதறாத" என அவளை அமைதிப்படுத்தும் விதமாகச் சொன்னவன், "சத்யா இன்னும் வரலன்னு சொல்லி லோகு சித்தப்பாவை விட்டு உங்க வீட்டுல விசாரிக்க சொல்லலாம்னு அவருக்கு கால் பண்ணேன். அவர்தான் நம்மள உடனே கிளம்பி ஊருக்கு வரச்சொல்லி சொன்னார். ஏதோ போலீஸ் கேஸுன்னு மட்டும்தான் தெரியும். என்ன எதுன்னு ஊருக்கு போய்தான் விசாரிச்சு தெரிஞ்சிக்கணும்" என அவன் சொல்ல, எதுவுமே ஓடவில்லை தாமரைக்கு.


அவசரத்துக்கு கையில் கிடைத்ததை எடுத்து ஒரு பைக்குள் திணித்துக்கொண்டு மகளுக்கு தேவையானவற்றை மட்டும் பார்த்து எடுத்துவைத்து அவள் கிளப்பி வர, அவனுடைய நண்பனிடமிருந்து ஒரு காரை இரவல் வாங்கிவந்திருந்தான் கருணா. விஷயம் நிச்சயம் பெரியது என்பது புரிய, உடல் நடுங்கிப்போனது அவளுக்கு.


"சத்யா ரொம்ப நல்ல பையன்ங்க, அவன் தப்புத்தாண்டா எதுக்கும் போகமாட்டான்" என அவள் தடுமாற, என்ன நினைத்தானோ அவளைத் தோளோடு அணைத்தவன், "பயப்படாத தாமரை, அவனை நான் தப்பா நினைக்கல. எதுவா இருந்தாலும் அவனுக்கு சப்போர்ட்டா நான் இருப்பேன்" என்றான் மனதிலிருந்து. காரணம், நன்றாகப் படிப்பவன், குடும்பப் பொறுப்புகள் எல்லாவற்றையும் அக்கறையுடன் கவனிப்பவன் என்பதால் எப்பொழுதுமே சத்யாவைப் பற்றிய ஒரு நல்ல அபிப்ராயம் உண்டு அவனுக்கு. அந்த விதத்தில் அவனுடைய சொந்த தம்பியான ஜனார்த்தனனைக் கூட இந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளமாட்டான் கருணா.


வழக்கமாக எப்பொழுது அவள் பிறந்த வீட்டுக்குப் போகவேண்டும் என்றாலும் முதலில் காட்டுக்கோவிலூர் சென்று அங்கே இரண்டு தினங்கள் இருந்துவிட்டு பிறகுதான் அங்கே செல்லவே முடியும் அவளால். ஆனால் இந்த முறை அவளை நேராக முந்திரிதோப்புக்குத்தான் அழைத்துவந்தான் அவன்.


நடக்கும் விசித்திரங்களால் நொடிக்கு நொடி அவளுடைய பயம் அதிகமாகிக்கொண்டே போனது.


வீட்டிற்குள் நுழைந்ததும் மகளை அணைத்துக்கொண்டு கதறினார் கோதை, என்ன நடந்தது ஏது நடந்தது என சொல்லக்கூடத் திராணியற்றவராக.


"முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க" என மருமகன் கொஞ்சம் குரலை உயர்த்தவும்தான் அனைத்தையும் சொல்லத்தொடங்கினர் அவர்.


இந்த முறை ஒரு டிரைவரும் மயிலமுமாக சில லட்சங்கள் பெறுமானமுள்ள ஸ்டீல் லோட் ஏற்றிக்கொண்டு ஒரிசா நோக்கி ஓட்டிச் சென்ற லாரி இதுவரை அங்கே போய் சேரவில்லை. அதனால் லாரி நிறுவன உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க அது சம்பந்தமாக விசாரிக்க முந்தைய இரவு அங்கே வந்த காவலர் இருவர் சத்யாவை தங்களுடன் அந்த பகுதியைச் சேர்ந்த காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றுவிட, செய்வதறியாமல் திகைத்துப்போனார் கோதை.


மகனை அப்படி அனுப்பிவைத்துவிட்டு வீட்டிலும் இருப்புகொள்ளவில்லை, தனியாக காவல்நிலையம் போகவும் அவருக்கு அவ்வளவு பயமாக இருந்தது. அக்கம்பக்கத்தினரை அந்த நடுநிசி நேரத்தில் தொந்தரவு செய்யவும் தயக்கமாக இருந்தது. இவற்றுடன் கணவருக்கு என்ன ஆனதோ என்கிற பதற்றம் வேறு சேர்ந்துகொள்ள, கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு போய்விட்டார் அவர்.


இரவு வேளை என்பதால் அந்த தடத்தில் பேருந்துகள் கிடையாது. அந்த ஊரில் தொலைப்பேசி வசதி வேறு இல்லவேயில்லை என்பதால் எதைச் செய்யவேண்டும் என்றாலும் காலை வரை காத்திருக்கத்தான் வேண்டும். எனவே பொழுது விடியும் வரை பொறுத்திருந்து பக்கத்து வீட்டிலிருப்பவர் மூலம் லோகுவிடம் தகவல் சொல்லி கருணாகரனின் அப்பாவிடம் அவரைவிட்டே சொல்லச் சொல்லியிருக்க, அன்றைக்கென்று பார்த்து லோகுவின் மனைவியை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டியதாக இருக்கவும் அவரால் காவல்நிலையம் வரை போக இயலவில்லை. அந்த நிலையிலும் அவர் தானே நேராக பாபுவிடம் போய் செய்தியை சொல்ல, இந்த விஷயத்தில் தலையிடவே விரும்பவில்லை பாபு. "இதுக்குதான் இந்த ட்ரைவர் கிளீனர் சம்மந்தமே வேண்டாம்னு பார்த்தேன். எங்க கேட்டான் இந்த கருணா?" என அவர் வெளிப்படையாகச் சொல்லிவிட அதை அப்படியே வந்து கோதையிடம் சொல்லிவிட்டார் தகவல் சொல்லப்போன அந்த மனிதர். இதற்கிடையில் லோகுவை தொடர்புகொண்டு கருணா பேசியிருக்க, அரைகுறையாகக் கேள்விப்பட்ட தகவலை வைத்துக்கொண்டு அவர்கள் கிளம்பி வந்துவிடவும், அனைத்தையும் கொட்டித்தீர்த்துவிட்டார் கோதை.


தாமரையையும் அங்கேயே விட்டுவிட்டு கருணாகரன் காவல்நிலையம் செல்ல, சென்னையில் அந்த லாரி நிறுவன அலுவலகம் இருந்த பகுதியில் புகார் அளிக்கப்பட்டிருக்கவே விசாரிப்பதற்காக சத்யாவை அங்கே அழைத்துச் சென்றுவிட்டது தெரிந்தது. நேராக அவன் அங்கே சென்று பார்க்கவும் பிரச்சனை இழுத்துக்கொண்டே போனது.


அந்த லாரி எந்த இடத்திலும் விபத்துக்குள்ளாகவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்க, அந்த ஓட்டுநர் மற்றும் மயிலம் இருவருமே பல வருடங்களாக அங்கே வேலை செய்பவர்கள் என்பதால் அவர்கள் மீது சந்தேகம் எழவில்லை என்றாலும் லாரியும் அதிலிருந்த சரக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. மனித உயிர்களைப் பற்றிய அக்கறை இரண்டாம் பட்சமாகிப் போனது.


கிட்டத்தட்ட பத்து நாட்கள் சத்யா மாற்றி கருணாகரன் என இருவருமாக காவல்துறையினர் கூப்பிட்ட இடங்களுக்கெல்லாம் சென்று அலையோ அலை என அலைந்த பின், ஆந்திரா செல்லும் தடத்தில் ஒரு கொள்ளை கும்பலால் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு வழிப்பறி செய்யப்படும் தகவல்கள் புலனானது. தீவிர விசாரணைக்குப் பிறகு, இவர்கள் ஓட்டிச்சென்ற லாரியும் சூறையாடப்பட்டு அது தனித்தனி பாகங்களாகக் கழற்றி விற்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதிலிருந்த சரக்குகளும் கொள்ளையடிக்கப்பட்டிருக்க மயிலமும் அந்த ஓட்டுநரும் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர்..


அவர்களுடைய பிரேதங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, உடற்கூறாய்வு செய்யப்பட்டு மறுபடியும் அங்கேயே புதைக்கப்பட்டது, அவற்றை வீட்டிற்குத் தூக்கி வரும் நிலையில் கூட அவை இல்லாமல் போனதால். கருணாகரனும் சத்யாவும் மட்டுமே அங்கே சென்றிருக்க, பெண்கள் இருவராலும் அவரது நைந்துபோன அந்த உடலைக் கூட பார்க்க முடியாமல் போனது.


இவ்வாறாக அடுத்துவந்த பதினைந்து நாட்களும் அலைச்சல் துக்கம் துயரம் கண்ணீர் என வேதனை நிறைந்ததாகச் சென்றிருக்க, அடுத்து வந்த நாட்களில் மயிலத்தின் ஈமச்சடங்குகளை முறைப்படி செய்துமுடித்தனர்.


கொஞ்சம் கடினமாக இருந்தபோதும் அவ்வப்பொழுது சென்னை சென்று தன் தொழிலையும் கவனித்துக்கொண்டு இங்கே வந்து தாமரையின் குடும்பத்துக்கு பக்க பலமாகவும் இருந்தான் கருணாகரன். சொல்லப்போனால் எந்தவித குழப்பமும் இல்லாமல் பிறந்த வீட்டு வகையில் முதன்முதலாகத் தாமரை கலந்துகொண்ட நிகழ்வு இதுதான் என்று சொல்லலாம்.


இது போன்ற நேரத்தில் ஒதுங்கி நின்றதால் அவனுடைய அப்பாவின் மேல் ஏகத்துக்கும் எரிச்சல் கருணாகரனுக்கு. வழக்கமாக செய்வதுபோல் கோபிப்பதோ நேருக்கு நேர் சண்டை போடுவதோ இல்லாமல் அவன் சுத்தமாக அவருடன் முகம் கொடுத்துப் பேசுவதை நிறுத்தியிருக்க, முதன்முதலாகக் கொஞ்சம் பயம் உண்டாகியிருந்தது பாபுவுக்கு மூத்த மகனைக் குறித்து. அவனுடைய நிலைமையும் படிப்படியாக உயர்ந்துகொண்டிருப்பதும் ஒரு காரணம் எனலாம். கொஞ்சம் அடக்கி வாசிக்கத் தொடங்கியிருந்தார் மனிதர்.


அனைத்தும் முடிந்து சென்னை கிளம்பலாம் என அவர்கள் முடிவு செய்திருந்த தருணம், அவர்களுடைய வீடு தேடி வந்தாள் அவள் – தேன்மொழி, கண்களில் கண்ணீருடன்.


****************

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page