Poove Unn Punnagayil - 29
அத்தியாயம்-29
பிரசவ சமயத்தில் மட்டும் இல்லை, சடங்கு செய்து குழந்தையைத் தொட்டிலில் இட்டு பெயர் சூட்டும் விழா நடந்து முடியும் வரையிலும் கூட ஒன்று தொட்டு ஒன்று ஒரே இழுபறி நிலைதான் இரு குடும்பத்துக்குள்ளும்.
உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி என, தாமரையின் நிலைதான் கேலிக்கூத்தாக இருந்தது.
எதையும் வெளியில் சொல்ல முடியாமல் மயிலம் ஒரு பக்கம் மருகி கொண்டிருக்க அவளுடைய புகுந்த வீட்டினர் செய்யும் அக்கப்போருக்கெல்லாம் இவளைத்தான் பிலுபிலுவென பிடுங்கினார் கோதை.
அவரை சொல்லியும் குற்றமில்லை. பணப் பற்றாக்குறை ஒரு பக்கம், வேலைச் சுமை மறுபக்கம் என அவர் திண்டாடிக்கொண்டிருக்க, கருணாகரன் குடும்பத்தினரால் ஏற்படும் மனச்சுமையை அவர் எங்கே போய் இறக்கிவைப்பார்? தாமரை மட்டுமே வடிகாலாகிப்போனாள்.
கருணாகரன் என்னவென்றால், "ஒரு மாப்பிள்ளைக்கு எப்படி மரியாதை கொடுக்கணும்னு உங்க வீட்டு ஆளுங்களுக்கு தெரியவே தெரியாதா?" என ஒவ்வொன்றுக்கும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு பாடாய் படுத்தியெடுத்தான்.
பிள்ளையைத் தொட்டிலில் போடும் நாளன்று அவனும் அவனைச் சார்ந்தவர்களும் வருவார்களோ மாட்டார்களோ என்ற அளவுக்கு மன உளைச்சலை கொடுத்து கடைசி நிமிடத்தில் போனால் போகிறது என்பது போல் அவர்கள் வந்து விட்டுப் போக, யாருக்காக யாரிடம் பேசி எதை புரியவைப்பது என்பது விளங்காமல் 'ஏன்தான் பெண் ஜென்மமாய் பிறந்து தொலைத்தோமோ?!' என தன்னைத்தானே நொந்துகொள்ளத்தான் முடிந்தது தாமரையால்.
மகளைப் பிரிந்து தன்னால் இருக்க முடியாது என்கிற ஒரே காரணத்தால் பிள்ளை பெற்று ஒரு ஐந்து மாதம் கூட அவளை பிறந்தவீட்டில் ஓய்வாக இருக்க விட்டுவைக்கவில்லை கருணாகரன்.
மூன்றாம் மாதமே நாள் பார்த்துக் கொண்டுவந்து விட்டுவிடுமாறு பாபுவை கொண்டு கடிதம் எழுதவைத்தான் அவன்.
மூன்று மாதம் என்பதெல்லாம் வெறும் பெயருக்குத்தான். நாள் கணக்கு என்று பார்க்கும்போது முழுவதுமாக இரண்டு மாதங்கள் கூட நிரம்பியிருக்கவில்லை. சீர் மற்றும் பலகாரங்களுடன் குழந்தையையும் தாமரையையும் அழைத்துவந்து காட்டுக்கோவிலூர் வீட்டில் விட்டுவிட்டுப்போனார்கள் கோதையும் மயிலமும்.
ஹாசினியை பார்த்ததும் அவர்களை மகனுடன் அனுப்பிவைக்க மனம் வரவில்லை மோகனாவுக்கும் பாபுவுக்கும். சில தினங்களாவது குழந்தையுடன் செலவிடவேண்டும் என்று சொல்லி ஒரு மாதம் கழித்து வந்து அவர்களை அழைத்துப்போகச்சொல்லிவிட்டார் மோகனா.
அங்கே என்னடாவென்றால் ரூபா கருவுற்று, வாந்தியும் மசக்கையுமாகக் கட்டிலை விட்டு இறங்காமல் ஓய்விலிருக்க, மோகனாவோ வாராமல் வந்த செல்வமான பேத்தியை விட்டு அங்கே இங்கே நகராமல் உட்கார்ந்துவிட்டார்.
முன்னிருப்பாக வீட்டுவேலைகளை அனைத்தும் தாமரையின் தலையில் விழுந்தது.
மற்ற வேலைகளைச் செய்துகொண்டே இடையிடையே குழந்தை அழும்போதெல்லாம் பசியாற்றுவது, குழந்தையின் ஒன்று இரண்டு எல்லாம் சுத்தம் செய்வது, இரவெல்லாம் உறங்காமல் அழும் குழந்தையுடன் விழித்தே உட்கார்ந்திருப்பது என கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அப்படி ஒரு எரிச்சல் உண்டாகும் தாமரைக்கு.
அனைத்திற்கும் சிகரம் வைத்தால் போன்று, 'நாம மாசமா இருந்த போது எல்லா வேலையும் நாமதான செஞ்சிட்டு இருந்தோம், கூடவே கல்யாண வேலையும் சேர்ந்து எவ்வளவு அலைச்சல். ஆனா இந்த பொண்ணு மட்டும் உட்கார்ந்த இடத்தை விட்டு அசையவே மாட்டேங்குதே? பச்சை உடம்பு காரி, நாம இவ்வளவு வேலை செய்யறோம், இவங்களுக்கு அந்த உணர்வே இல்லையே? தம்பி மகன்னு சொல்லி இவ்வளவு சலுகையா?' என்கிற எண்ணம் தாக்க, கண்கள் குளமாகும். ஆனாலும் எதையும் வெளியே சொல்லவும் முடியாது.
இரவில் அவளுடன் மோகனா படுத்துக்கொள்வதால், இடையில் கருணாகரன் வந்த பொழுதுகூட அவனிடம் எதையும் சொல்லி சண்டை பிடிக்கக்கூட இயலவில்லை. சொன்னாலும், 'நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் தாமர, என்னால அவங்க கிட்ட இதையெல்லாம் போய் சொல்லிட்டு இருக்க முடியாது' என்கிற பதில்தானே அவனிடமிருந்து வரப்போகிறது?
பல்லைக் கடித்துக்கொண்டு அவள் பொறுத்திருக்க, ஒரு மாதம் முடிந்ததும் முடியாததுமான அவளை தன்னுடன் அழைத்துச்சென்றான் கருணாகரன்.
இடையிடையே சிற்சில சச்சரவுகள் மூண்டாலும், ஹாசினியின் முதல் பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட வழக்கமான சலசலப்பைத் தவிர்த்துப்பார்த்தால் முதல் வார்த்தைகளாக அவள் 'த்தை... தாத்தா' சொன்னது, தொடர்ந்து 'அப்பா' சொன்னது, 'அம்மா' சொன்னது, குழந்தைக்குக் கதை சொல்லி அவர்கள் சோறு ஊட்டியது, 'நிலா நிலா ஓடி வா' 'அம்மா இங்கே வா வா' 'பா பா ப்ளாக் ஷீப்' என மழலையுடன் மழலையாக மாறிப்போய் 'அஆ' சொல்லு 'ஏபீசிடி' சொல்லு எனக் கொஞ்சி குழைந்ததாகக் குதூகலத்துடன் அடுத்து வந்த இரண்டரை வருடங்கள் குழந்தையின் வளர்ச்சி கொடுக்கும் இயல்பான சிறு சிறு சந்தோஷங்களை அள்ளித்தெளித்து கணவன் மனைவிக்குள் ஓரளவுக்குச் சுமுகமானதாகவே சென்றன.
தன் தோள்களையே பல்லக்காக்கி தன் மகள் என்கிற பேரரசியை அதில் அமரவைத்து, அவனுடைய பெரும்பான்மையான நேரத்தை அவளுடனானதாகவே மாற்றி அமைத்துக்கொண்டான் கருணாகரன்.
கருணாகரன் தாமரை இருவரின் வாழ்க்கையின் மையப