Poove Unn Punnagayil - 28
அத்தியாயம்-28
மருமகளாகக் கருணாகரனுடைய பூர்விக வீட்டில் அடியெடுத்து வைத்ததுதான் தெரியும், அதன்பின் அந்த வீடுதான் அவளுடைய மொத்த உலகமே என்றதாக ஆகிப்போனது தாமரைக்கு.
அந்த வீட்டைத் தாண்டி வெளி உலகத்தை அவள் பார்ப்பதற்குள் எட்டு மாதங்கள் முடிந்துவிட்டது மின்னல் வேகத்தில்.
திருமணம் முடிந்ததும் தொடர்ந்த சடங்குகள், மருவீட்டு முறை, நெருங்கிய உறவினர் வீட்டில் விருந்து என சிந்திக்க நேரமில்லாமல் ஒரு மாதம் ஓடியிருக்க, நேரம் கிட்டும்போது சென்னைக்குப் போய் தொழிலை கவனித்துவந்தவன், நிரந்தரமாக அங்கேயே அவளை அழைத்துச் செல்வதைப் பற்றிய பேச்சையே அதன்பிறகுதான் எடுத்தான் கருணாகரன்.
திருமணம் முடிவாகும்வரை அவனுடைய அலுவலகத்திலேயே தங்கியிருந்தவன், சென்னையில் ஒற்றை படுக்கையறை கொண்ட பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து, போகும் போதும் வரும்போதும், அவளுக்கு பிறந்த வீட்டில் சீதனமாகக் கொடுத்த வீட்டு உபயோகப் பொருட்களையும் பாத்திரப் பண்டங்களையும் சிறுகச்சிறுக அங்கே கொண்டுபோய் வீட்டைத் தயார்செய்தும் இருந்தான்.
தாமரையின் அருகாமைக்காக அவன் ஏங்கிக்கொண்டிருப்பது ஒரு காரணமென்றால், நீண்ட வருடங்களாக அவன் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஹோட்டல் சாப்பாட்டிலிருந்தும் தனிமையிலிருந்தும் ஒரு நிரந்தர விடுதலை கிடைக்குமே என்கிற மிகப்பெரிய ஆசுவாசம்மும் அவனுக்கு.
இதெல்லாம் தெரிந்தே இருந்தாலும் கூட தாமரையை அவனுடன் அனுப்பக் கொஞ்சமும் மனம்வரவில்லை மோகனாவுக்கு.
வீட்டு வேலையுடன் திருமண வேலைகளும் சேர்ந்துகொள்ளக் கருணாகரன் கல்யாணம் முடிவதற்குள் உதவிக்கு ஆளில்லாமல் ஒரு வழி ஆகியிருந்தார் மோகனா.
தாமரை அங்கே வந்தது முதல் அந்த சில நாட்களுக்குள்ளாகவே கச்சிதமாக அவள் வேலை செய்யும் விதத்தில் அவர் கொஞ்சம் சொகுசுக்குப் பழகிப்போயிருக்க, அதை இழக்க மனமில்லை. அதையும் தாண்டி, அவர்களைத் தனிக்குடித்தனம் வைக்கக் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை அவருக்கு.
சின்னவன் திருமணத்திற்குப் பிறகு இங்கேதான் இருக்கப்போகிறான் என்பது உறுதிப்படத் தெரிந்தாலும் இவர்களைப் பார்த்து அவனுடைய மனமும் மாறிப்போனால் என்ன செய்வது என்கிற பதற்றமும் சேர்ந்துகொள்ள இதைத் தள்ளிப்போடவே முயன்றார் என்றுதான் சொல்லவேண்டும்.
அடுத்து அவனுடைய திருமண வேலைகள் வேறு தயார் நிலையிலிருக்க, அவருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது எனலாம். அதையே காரணம் காட்டி, "அதான் நீ அப்பப்ப வந்துட்டு போயிட்டு இருக்கல்ல, கொஞ்ச நாளைக்கு அவ இங்கயே இருக்கட்டும். ஜனா கல்யாணம் முடிஞ்சதும் கூட்டிட்டு போ, எனக்கு வேற முட்டி வலி உயிர் போகுது. எப்படியோ இதோடவே உன் கல்யாணத்தை நடத்தி முடிச்சிட்டேன். ஆனா இப்ப முடியல" என அவர் முக்கலும் முனகலுமாகச் சொல்ல, இதற்கும் மறுக்க வழியில்லாமல் போனது கருணாகரனுக்கு.
அவனுடைய வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி அங்கே வந்துபோனாலும் அதுவும் பேச்சுக்கு இடம் கொடுக்கும். மனைவியின் அருகாமையும் உடலின் தேவைகளும் வராமலும் இருக்கவிடாது. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் சென்னையிலும் அவர்கள் ஊரான காட்டுக்கோவிலூரிலுமாக அல்லல் பட்டுக்கொண்டிருந்தான் அவன்.
அப்படியே வந்தான் என்றாலும் கூட அந்த இரண்டு கட்டு வீட்டில், அவன் ஒரு கோடியிலிருந்தான் என்றால் மற்றொரு கோடியில் இருப்பாள் அவள். இன்னும் சொல்லப்போனால் அடுக்களைக்குள்ளாகவே பகல் முழுவதும் கழிந்துவிடும் தாமரைக்கு.
அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் பகல் நேரத்தில் அவளால் எட்டி கூட பார்க்க இயலாது. அந்த கூட்டுக்குடும்பத்திற்குள் அது ஒரு விபரீதமான சங்கடத்திற்குள்ளாகும் செயலும் கூட.
எனவே திருமணத்திற்குப் பின் இயல்பாக நடக்கும் சின்னசின்ன கொஞ்சல்களுக்கெல்லாம் அவர்களுக்குச் சந்தர்ப்பமே அமையாமல் போனது.
வீட்டில் எல்லோரும் உண்டு முடித்ததும் அனைத்தையும் கழுவிக் கவிழ்த்து அவள் அறைக்குள் நுழைந்தாள் என்றால் இருவருக்கும் அங்கே வாய்ப்பேச்சிற்கே இடமிருக்காது. இதழ் முத்தங்களில் தொடங்கித் தீண்டல்களைக் கடந்து கூடலில் முடியும் இரு உடல்களின் நிசப்த உரையாடல் மட்டுமே நிகழும் அந்த இருட்டறைக்குள். உடல்களைத் தாண்டி உள்ளங்களின் சங்கமம் என்பதே இல்லாமல் போனது அவர்களுடைய அந்த தாம்பத்தியத்திற்குள்.
நெருக்கம் என்பது மனதளவிலும் ஏற்படவேண்டும் என்பது