Poove Unn Punnagayil - 25
அத்தியாயம்-25
"வீட்டுல இருக்கற யாரை பத்தியும் கொஞ்சம் கூட கவலை இல்ல. யார் கிட்டயும் பயமும் இல்ல மரியாதையும் இல்ல. சொந்த புத்தியும் இல்ல, சொல்றத கேட்டு நடக்கற புத்தியும் இல்ல, இப்படி பட்ட பிள்ளைகளை பெத்ததுக்கு இதெல்லாம் நமக்குத் தேவைதான். இவளுக்குத்தான் பொறுமை நிதானம் எதுவுமே கிடையாது. உங்களுக்குமா? ஏற்கனவே மாத்திரை போட்டும் பீப்பீ குறையவே மாட்டேங்குது, இப்ப இது வேறயா?" என மகள் கணவர் இருவரையும் திட்டிக்கொண்டே கருணாகரனின் காயத்தைச் சுத்தம் செய்து மருந்து தடவிக் கட்டும் போட்டுவிட்டார் தாமரை. இதைச் செய்து முடித்து உடைந்து கிடந்த கண்ணடித் சில்லுகளை வாறி சுத்தம் செய்து அவர் வருவதற்குள் மகள் சொன்ன அனைத்தையும் அவரிடம் சொல்லிமுடித்தார் கருணா.
“ப்ச்... நான் அன்னைக்கே சொல்லல? இவ இந்த மாதிரித்தான் எக்குத்தப்பா எதையோ செஞ்சு வெச்சிருப்பான்னு எனக்கு அப்பவே தெரியும்” என அலுத்துக்கொண்டவர், "எவ்வளவு இன்சென்சிடிவா, அருவருப்பான வார்த்தையை ஒரு ஆம்பளைபிள்ளைய பார்த்து சொல்லிவெச்சிருக்க ஹாசினி நீ? ச்ச, இந்த அளவுக்கா உன்னை நாங்க கேவலமா வளர்த்திருக்கோம். ச்ச...ச்ச" என தாமரை ஆற்றாமையுடன் மகளிடம் பாய, அவள் மீதும் கொஞ்சம் தவறு இருப்பதாக அவள் கருதிய ஒரே காரணத்தினால், அதுவும் கூட ஒரு கட்டத்திற்கு மேல் மறைக்க முடியாத சூழ்நிலை இந்த சத்யாமாமாவால் உருவாகி, அதை அவளே ஒப்புக்கொள்ள வேண்டியதாகிப்போகவும், மறுத்து எதுவும் பேச வாய்ப்பே இல்லாமல் போக, மௌனமாக தலைகுனிந்து அனைத்தையும் கேட்டுக்கொண்டாள் ஹாசினி.
ஆனலும் அவள் முகத்தில் படர்ந்திருந்த கடுமையும் ஆத்திரமும், தன் தவறை ஒப்புக்கொள்ள அவள் கொஞ்சம் கூட தயாராக இல்லை என்பதை அவளைப் பெற்றவர்களுக்குச் சொல்லாமல் சொல்லியது.
"இவ வந்து இவ்வளவு நேரம் ஆகுதே, இந்த பசங்க ஏன் இன்னும் வந்து சேரல?" என அவர் கவலையுடன் கேட்க, "சந்துவை அழைச்சுக்கிட்டு மறைமலைநகர் சைட் வரைக்கும் போறானாம், சத்யா போன் பண்ணி இப்பதான் சொன்னான்" என அவருக்கு பதில் கொடுத்த தாமரை, "நல்லவேள, இவ பேசின எதையும் அவன் கேட்கல. பாவம் கேட்ருந்தான்னா மனசொடிஞ்சு போயிருப்பான்" என முடித்தார் எரிச்சலுடன்.
அதை காதிலேயே வாங்காதவள் போல ஹாஸினி அங்கிருந்து நைசாக நழுவப் பார்க்க, "மேனர்ஸ் இல்லாம பாதி பேசிட்டு இருக்கும்போது எங்க ஓடற, முதல்ல உட்காரு" என கருணாகரன் போட்ட அதட்டலில் பட்டென்று அவள் உட்கார,
"குட்டிம்மா, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இப்ப அப்பா உனக்கு ஒரு ஒரு கதை சொல்லலாம்னு இருக்கேன். கொஞ்சம் கவனமா கேளு. கல்யாணமாகி ஒரு பொண்ணு புகுந்த வீட்டுக்கு வந்தா எந்த அளவுக்கு அவளுக்கு பிரச்சனைகள் இருக்கும்னு அப்பவாவது உனக்கு புரியுதான்னு பார்க்கலாம்" என்றவர், "இது வேற யாரோட கதையோ இல்ல. நம்ம குடும்ப கதைதான். உன் அம்மா அப்பாவோட கதை" என்றார் இலகுவாகவே சிறு புன்னகையுடன்.
'என்ன?' என்பதாக முகத்தில் படர்ந்த ஆச்சரியத்துடன் தாமரை அவரை ஏறிட, "என்ன பாக்கற தாமர? எல்லாம் நம்ம கதைதான். வா... இங்க வந்து உட்காரு. நீயும் என் கூட சேர்ந்து நம்ம மகளுக்கு சொல்லலாம் இல்ல!" என தன் பக்கத்தில் தட்டி ஜாடை செய்து அவர் சொல்லவும், வந்து உட்கார்ந்தார் தாமரை. அவர் முகத்தில் பரவிய சிந்தனை ரேகைகளைப் பார்த்ததும் அவர் பழைய வாழ்க்கைக்கே பயணப்பட்டு விட்டது புரிந்தது தாமரைக்கு.
தொடர்ந்தார் கருணாகரன்.
"என்னதான் நீங்கள்லாம் இப்ப இவ்வளவு அல்ட்ரா மார்டனா சுத்திட்டு திரிஞ்சாலும் பேசிக்கலி நம்மளோடது கிரமத்து பின்னணியிலயிருந்து வந்த விவசாய குடும்பம்தான்.
ஊர்லயே, வீடு, வாசல், நிலம் நீச்சுன்னு நம்மளோடது கொஞ்சம் பெரிய கை. சுத்துப்பட்டு ஊர்ல எல்லாம் தாத்தாவுக்கு நல்ல மரியாதை. அதுவும் நான் சிவில் முடிச்சதும் அவர கையிலயே பிடிக்க முடியலன்னா பார்த்துக்கோயேன்"
பெருமையுடன் சொல்லிக்கொண்டே போனார் அவர். 'ம்... ம்... என்றவாறு ஒரு சுவாரஸ்யத்துடன் அதை கவனிக்கத்தொடங்கினாள் ஹாசினி. பழைய நினைவுகள் மனதில் எழும்ப தாமரையையுமே ஒரு உற்சாகம் தொற்றிக்கொண்டது.
"நான் முதல்ல படிச்சது ஊர்ல இருக்கற கவர்மண்ட் பள்ளிக்கூடத்துலதான். அப்பறம் பீஈ, மெட்ராஸ்ல ரூம் எடுத்து தங்கி படிச்சேன்.
கௌசிக் மாதிரித்தான், படிக்கும்போதே ஒரு பெரிய கம்பெனியில அஃப்ரன்டிஸா சேர்ந்து வேலை கத்துக்க ஆரம்பிச்சுட்டேன்.
ஊர் பக்கமெல்லாம் எப்படினா, ஒண்ணு விவசாயம் பார்க்கணும் இல்லனா கவர்மெண்ட் வேலைக்கு போகணும். 'கால் காசு உத்தியோகன்னாலும் கவர்மெண்ட் உத்தியோகம்'ன்னு டயலாகே பேசிட்டு திரிவாங்க. அதே டிசைன்ல தாத்தா என்னையும் கவர்ன்மெண்ட் வேலைக்கு போகச்சொல்லி ரொம்பவே எதிர் பார்த்தாங்க.
ஆனா எனக்கு இப்படி மாச சம்பளம் வாங்கிட்டு பிழைப்பை ஓட்றதுல கொஞ்சம் கூட உடன்பாடு இல்ல.
ஸ்டீரியோ டைபிக்கா நானும் படிச்சேன் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு பேருக்கு ஒரு வேலைக்கு போயிட்டு, சுவாரஸ்யமே இல்லாம ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்க்கைய தள்றதுல எல்லாம் இன்ட்ரஸ்ட்டே இல்ல.
பிசினஸ் பண்ணனும், ஒரு எண்டே இல்லாம ஸ்கை இஸ் த லிமிட்ன்னு போயிட்டே இருக்கணும் அப்படின்னு ஒரு அதீத வேகம் மட்டும் இருந்துது.
அதுக்கு தாத்தாவோட எதிர்பார்ப்பு செட் ஆகல. எவ்வளவோ ட்ரை பண்ணியும் என்னோட கனவ கொஞ்சம் கூட அவங்களுக்கு என்னால புரிய வைக்கவே முடியல. அதனால தாத்தாவுக்கும் எனக்கும் ஒரு பெரிய கோல்ட்வாரே ஸ்டார்ட் ஆகிடுச்சு.