Poove Unn Punnagayil - 24
அத்தியாயம்-24
வீட்டு வரவேற்பறை சோஃபாவில் உட்கார்ந்து ஏதோ பத்திரங்களைப் படித்து சரி பார்த்துக் கொண்டிருந்தார் கருணாகரன். இரத்தக் கொதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரையை அவருக்குக் கொண்டு வந்து கொடுத்தார் தாமரை, தண்ணீருடன். அதை வாங்கி உட்கொண்டவர் கையிலிருந்த காகிதங்களை பத்திரமாக அதன் உறைக்குள் போட்டு ஓரமாக வைத்துவிட்டு தன் கரத்தை மனைவியை நோக்கி நீட்ட, என்னவென்று புரியாமல் தயக்கத்துடன் தாமரையும் கையை கொடுக்கவும் அப்படியே பற்றி இழுத்து தனது அருகில் மனைவியை உட்கார வைத்தார் அவர்.
காவலாளி ஓட்டுநர் இருவரும் மட்டும் வெளியிலிருக்க, ஒரு ஈ காக்கை இல்லை வீட்டிற்குள். பாபுவும் மோகனாவும் ஊரிலிருக்க, பிள்ளைகள் கூட சாப்பாட்டுக்கு வெளியே சென்றுவிட, வீட்டில் இவர்கள் இருவருக்கு மட்டுமே சமையல் என்பதால் வேலை முடிந்து சாவித்திரி கூட சீக்கிரம் கிளம்பியிருந்தார்.
இருவருக்கும் இப்படி ஒரு தனிமை வாய்ப்பதென்பது அபூர்வம்தான். அப்படிப்பட்ட சமயங்களில் கட்டுப்பாடில்லாமல் உள்ளே இருக்கும் காதல் மன்னன் 'ரெமோ'வை கட்டவிழ்த்துவிட்டுவிடுவார் கருணாகரன்.
அந்த நினைப்பில், "ஐயோ என்னங்க இது" என தாமரை தவிப்புடன் நெளிய, "ஷ்.. ப்பா... இதுக்கேவா? நான் என்ன உன்னை ரொமான்ஸ் பண்ணவா கூப்பிட்டேன், சும்மா ஒரு அன்புலதான" என அங்கலாய்த்தவர், "அவ ஆசைப்படி கல்யாணம் பண்ணிகொடுத்தும், நல்ல படியா வாழாம நம்ம குட்டிம்மா இப்படி வந்து, இங்க விரக்தியா உட்கார்ந்திருக்கும்போது இப்படிப்பட்ட எண்ணமெல்லாம் தோணுமா சொல்லு" என ஆதங்கத்துடன் சொல்லிவிட்டு, "ஆனா, அன்னைக்கு நான் உங்க அப்பா கிட்ட நடந்துகிட்ட விதம் எவ்வளவு தப்பு இல்ல. அவர் இறந்து உன் தம்பியோட நிலைமையும் சரியில்லாம நீ ரொம்ப மனவேதனைல இருந்த சமயத்துல கூட வீம்பா கொஞ்சமும் விட்டுக்கொடுக்காம உன் மனச எவ்வளவு நோகடிச்சிருக்கேன். அதுக்குத்தான் எனக்கு இப்படி ஒரு தண்டனை போலிருக்கு" என உண்மையிலேயே மனதார வருந்த, "ப்ச்... எதுக்கிப்ப தண்டனை அது இதுன்னு தத்துபித்துன்னு பேசிட்டு? அதுதான் எல்லாம் சரியாப்போய் சுமுகமா நல்லபடியாதான குடும்பம் நடத்திட்டு இருக்கோம், விடுங்க. இதெல்லாம் எல்லா குடும்பத்துலையும் நடக்கறதுதான். ஒண்ணும் புதுசில்ல. சீக்கிரமே சரியாயிடும்" என்றார் தாமரை கண்டனமாக.
"என்னதான் நீ இப்படி பூசி மொழுகினாலும், அந்த சம்பவங்களோடு தாக்கம் இன்னும் கூட உன் கிட்ட ஒட்டிட்டு இருக்கறமாதிரியே இப்பல்லாம் எனக்கு தோணுது தாமரை. அவ்வளவு அன்பும் காதலும் அன்னியோன்னியமும் நெருக்கமும் இருந்தாலும் கூட சில விஷயங்கள்ல நீ தாமரை இலை தண்ணி மாதிரி ஒட்டாம நிக்கறயோன்னு தோணுது. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதேங்கற மாதிரி. என்னோட சம்பாத்தியத்துல உனக்கு பாத்தியதையே இல்லனு நீ நடந்துக்கற மாதிரி. உன்னோட இந்த மினிமலிச கொள்கையே அதனால வந்ததுதானோன்னு தோணுது" என அவர் சொல்லிக்கொண்டே போக, ‘இந்த அளவுக்குக் கணவர் தன்னை பற்றி யோசிக்கிறாரே’ எனக் கொஞ்சம் நிம்மதியாகத்தான் இருந்தது தாமரைக்கு.
"நீங்க சொன்னதுல பாதி மட்டும்தான் உண்மை. ஆரம்பத்துல உங்ககிட்ட அதீத எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனா அது நாளாவட்டத்துல காணாம போச்சு. அதுக்குக் காரணம் வயசும் மெச்யூரிட்டியம் தானே தவிர உங்க சம்பாத்தியத்துல எனக்கு எந்த பாத்தியதையும் இல்லனு அதுக்கு அர்த்தம் இல்ல. நமக்காக அப்பா செலவு செய்யணும், அண்ணன் தம்பிங்க செய்யணும், கணவர் செய்யணும் அப்பறம் பிள்ளைங்க செய்யணும்ங்கற மாதிரி எதையும் வாங்கற இடத்துலயே பெண்கள் நிற்கறது, இப்ப இல்ல எப்பவுமே எனக்கு பிடிக்காது. அதனாலதான் எனக்குன்னு சொந்தமா ஒரு மினிமம் இன்கம் வேணும்னு நினைக்கறேன். மத்தபடி மினிமலிச கொள்கைங்கறதெல்லாம் நான் சின்ன வயசுல இருந்து வாழ்ந்த வாழ்க்கை எனக்கு கத்துக்கொடுத்த பாடம்" என தாமரை சொல்லிக்கொண்டிருக்க, வாயிற்புறம் தடால் புடால் என சத்தம் கேட்கவும் பதறி வெளியில் வந்து பார்த்தார் அவர்.
கருணாவும் பின்னாலேயே வர, ஓட்டி வந்த ஸ்கூட்டியை அப்படியே ஓரமாகக் கிடத்திவிட்டு, தலைக்கவசத்தைக் கழற்றி வீசி எறிந்து விட்டு அது ஒரு பக்கமாக உருளவும், ஒரு நிதானமின்றி முகத்தை மூடியிருந்த துணியைப் பிடித்து இழுத்து அவிழ்த்தாள் ஹாசினி.
முகம் சிவந்து, நீர் நிரம்பி கண்களும் சிவந்திருக்க ஆவேசம் வந்தவள் போல உடல் நடுங்க உள்ளே நுழைந்தாள் அவள் அங்கே நின்றிருக்கும் பெற்றோரைக் கூட கண்டுகொள்ளாமல்.
"என்ன ஆச்சு ஹசி? ஏன் இப்படி இருக்க? தம்பி எங்க? ரெண்டுபேரும் ஒண்ணாதான கிளம்பி போனீங்க" என தாமரை பதறிக் கேட்க, திரும்பி தாமரையை அலட்சியமாகப் பார்த்தவள், "அவன் உன் தம்பி கூட வருவான்" என்றாள் எகத்தாளமாக.
"அவன் கூட எப்படி, சத்யாவும் ஹோட்டலுக்கு வந்தானா? அங்க என்ன பிரச்சனை" என தாமரை கலக்கத்துடன் கேட்க, நேராகப் போய் சோஃபாவில் அமர்ந்தவள், "உலகத்துலயே இல்லாத உன் தொம்பி இருக்கார் இல்ல, அவர்தான் பிரச்சனை. நான் கேட்டனா என்னையும் கௌசிக்கையும் சேர்த்துவைனு. ஏன் அந்த ஆளுக்கு இந்த வேண்டாத வேலை. யாரோட முகத்துலயே முழிக்கக்கூடாதுன்னு நினைச்சேனோ, பிளான் பண்ணி அவனை மீட் பண்ண வெச்சிட்டர். அதுக்கு உன் பிள்ளையும் உடந்தை. ச்ச அவருக்கு எதுக்கு இந்த தேவையில்லாத ஆணியெல்லாம். அனாவசியமா இப்படி அடுதவங்க விஷயத்துல மூக்கை நுழைக்கறத விட்டுட்டு அவங்க வேலையை மட்டும் பார்திருந்தாங்கன்னா அவங்களுக்கு உருப்படியா ஒரு லைப் செட்டில் ஆகியிருக்கும். இப்படி ஒண்டிக்கட்டையா நின்னிருக்கமாட்டாங்க. என் விஷயத்துல தலையிட அவங்களுக்கு நேரமும் இருந்திருக்காது”
‘விவாகரத்து’ என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்தால் பதறிப்போய் மன்னிப்பு கேட்டு கௌசிக் தன்னை தேடிவருவன் என்று அவள் எண்ணியிருக்க, நிலைமையே தலைகீழாக அல்லவா ம