top of page

Poove Unn Punnagayil -17

அத்தியாயம்-17

திருமணத்திற்காக வந்திருந்த உறவினரெல்லாம் கிளம்பிப்போய், தினமும் ஒவ்வொருவராக, திருமணம் விசாரிக்க வந்தவர்களிடமெல்லாம் கல்யாண ஆல்பம், வீடியோ என போட்டுக் காண்பித்து, நடந்து முடிந்த திருமண நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்து களித்து, எல்லா ஆரவாரமும் அடங்கி ஒரு வழியாக அவர்களுடைய வாழ்க்கை இயல்புக்குத் திரும்பவே ஒரு மாதத்திற்கும் மேலானது.


ஹாசினியின் திருமணம் மருவிருந்து அந்த சடங்கு இந்த சம்பிரதாயம் என எல்லாம் முடிந்து, முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவைத்து தேனிலவுக்காக மகள் மற்றும் மருமகனை விமானநிலையம் வரை சென்று கனடாவுக்கு வழியனுப்பி வைத்து, அவர்கள் திரும்ப வந்ததும், கௌசிக்கின் வீட்டிற்கே சென்று மகிழ்ச்சியும் பொலிவுமாகப் பூரிப்புடன் திகழ்ந்த மகளை மனநிறைவுடன் பார்த்துவிட்டு வந்து, மூன்று மாதங்கள் கடந்திருந்தன.


இதற்கிடையில் நாள் பார்த்து அவர்கள் வீட்டிலேயே ஹாசினிக்கு தாலி பிரித்துக் கோர்க்கும் சடங்குக்கு ஏற்பாடு செய்து சங்கரி இவர்களை அழைத்திருக்க, தாத்தா பாட்டி, அத்தை, சித்தி என் சில முக்கியமான குடும்பத்தினரை மட்டும் அழைத்துக்கொண்டு, அதற்குத் தேவையானவற்றை வாங்கிச்சென்று முறை செய்துவிட்டு வந்தனர்.


வெண்ணிலவில்லாத அமாவாசை வானம்போலான மகளில்லாத வீட்டினில் கொஞ்சம் கொஞ்சமாக வாழப்பழகிக்கொண்டிருந்தனர் அந்த அன்னையும் தந்தையும்.


மகளுடன் பழையபடி இழையவில்லையே தவிர, எதற்கும் விட்டுக்கொடுக்காமல் அவளுடைய புகுந்தவீட்டிற்கு வந்துபோய்க்கொண்டுதானிருந்தார் கருணாகரன்.


உலக வழக்கப்படி தானும் தன் அன்னை தந்தையைப் பிரிந்துவந்த ஒரு சராசரி மகள்தான் என்பதால், பெண் குழந்தையைப் பெற்றெடுத்த தினத்திலிருந்தே இப்படி ஒரு பிரிவுக்கு மனம் பழக்கப்பட்டுப் போயிருக்க, தாமரை அதிகம் பாதிக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.


சந்தோஷ் எம்.ஐ.டியில் இடம் கிடைத்து பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்க, கல்லூரி வாழ்க்கை கொடுத்த புதிய அனுபவத்தில் தமக்கையின் பிரிவைப் பெரிதும் உணரவில்லை.


பெரியவர்களுக்கிருக்கும் தளைகளேதும் இல்லாத காரணத்தால் அவனுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவளை நேரில் சென்று பார்த்துவிட்டு வேறு வந்துவிடுவதால், அவன் எப்பொழுதும் போலவே இருந்தான்.


தாமரை ஹாசினியை கருவில் சுமக்கத் தொடங்கியதுமுதல் இன்று வரை அவளை மனதினில் சுமப்பவர், அக்கருவைப் பிரித்தெடுத்து தன் வயிற்றில் பொத்தி சுமக்க ஒரு வாய்ப்பு மட்டும் கிட்டியிருந்தால் அதையும் கூட செய்திருப்பார் அவர். அப்படி ஒரு பேரன்பும் அக்கறையும் தன் மகவின்மேல் கொண்டவர் என்பதால், அதுவும் அவளது திருமணத்திற்கு மனதளவில் கொஞ்சம் கூட தயாராகியிருக்காத நிலையில் கண்ணிமைக்கும் நேரத்திற்கும் எல்லாம் நடந்து முடிந்திருக்கவே கருணாகரன்தான் தவியாய் தவித்துப்போனார்.


காலை செய்தித்தாளை படித்துக்கொண்டே காஃபி அருந்தும் சமயங்களில், வழக்கம் போல சந்தோஷ் அங்கே வந்து உட்கார்ந்தவுடன், "என்ன சந்து, அக்கா இன்னும் எழுந்து வரல?" என தன்னை மறந்து கேட்டுவிட்டு, தாமரையும் அவனுமாக கிண்டலாகவோ அல்லது பரிதாபமாகவோ அவரை பார்க்கும் பார்வையில் செய்தித்தாள்களுக்குள் தன் உணர்வுகளை மறைத்துக்கொள்வர் அவர். திருமணம் முடிந்த சில தினங்களுக்குள் பல முறை இப்படி நடந்திருக்கிறது.


அவர் சாப்பிட உட்காரும் சமயத்தில் மகளுக்கு பிடித்தமான உணவு ஏதாவது மேசை மேல் இடம்பெற்றிருந்தால், "குழந்தைக்கு கொடுத்து அனுப்பினியா தாமரை?" என்ற கேள்வி தன்னையறியாமல் அவர் இதழ்களிலிருந்து உதிர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே அவர்கள் வீட்டில் வேலை செய்பவர் யாராவது ஒருவர் மூலமாக அவளுடைய புகுந்த வீட்டிற்குப் போய்ச் சேர்ந்திருக்கும் அது.


"அவங்க வீட்டுல சாப்பாடு ஒரே காரம்மா, மொத நாள் செஞ்சத ஃப்ரிட்ஜ்ல வைத்து சூடு பண்ணி வேற சாப்பிடறாங்க. எனக்கு பிடிக்கவே மாட்டேங்குது" எனப் பேச்சுவாக்கில் சொல்லி மகள் கண் கலங்கியிருக்க, அவளுடைய உடல் வேறு சற்று இளைத்தமாதிரி தோன்றவும், இப்படிச் செய்ய ஆரம்பித்திருந்தார் தாமரை, ஒரு அதீத பாசத்தில்.


தொடக்கத்தில் ஓரிருமுறை கௌசிக்குடன் வந்து சென்றவள், தொடர்ந்த நாட்களில் தன் காரை எடுத்துக்கொண்டு தனியாக வந்து செல்லத்தொடங்கிவிட்டாள் ஹாசினி அவனுக்கு நேரமே கிடைப்பதில்லை என்று குறைபட்டுக்கொண்டே.


காலை வந்தாள் என்றால், இரவு கௌசிக் வீடு திரும்பும் நேரத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றாற்போல்தான் திரும்பச்செல்வாள் அவள்.


பெரும்பாலும் அவள் அங்கே வரும் நேரங்களில் கருணாகரனோ சத்யாவோ இருக்கமாட்டார்கள்.


சந்தோஷ் கல்லூரியிலிருந்து திரும்பிவரும் நேரத்தில் அவனைப் பார்த்துவிட்டு உடனே கிளம்பிவிடுவாள்.


"அத்த மாமா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதான கிளம்பி வர" என தாமரை கேட்டார் என்றால், "கௌசிக் கிட்ட சொல்லிட்டுதான் வந்திருக்கேன். அவங்க கிட்ட அவன் சொல்லிப்பான்" என இடக்காகப் பதில் சொல்பவள், "இதெல்லாம் நல்லா கேளு, அங்க நான் படுற பாடு உனக்கு தெரியுமா" எனத்தொடங்கி,


'மா... அவங்க குக்கிங் மட்டும் செஞ்சு வெச்சிட்டு, மத்த எல்லா வேலையையும் என்னையே செய்ய வெக்கறாங்கம்மா. பாவம் காலேஜ் போற பொண்ணுன்னு பூஜாவ மட்டும் எதையும் செய்ய சொல்லமாட்டாங்க. மெய்ட் போட்டுக்கலாம்னா, 'மூணு பொம்பளைங்க வீட்டுல இருக்கோம், அப்பறம் எதுக்கு வேலைக்கு ஆளு'ன்னு அதுக்கும் சம்மதிக்க மாட்டேங்கறாங்க’