top of page

Poove Unn Punnagayil - 14

அத்தியாயம்-14

அடுத்த நாளே அவளுடைய அத்தையும் சித்தப்பாவும் வீட்டிற்குள் வந்து குதித்தனர் அவரவர் வாழ்விணையருடன். தாத்தா பாட்டி வேறு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டிருக்க, எல்லோரும் ஒன்று கூடி ஒரு சிறு பஞ்சாயத்தை கூட்டியிருப்பது போல் தோற்றமளித்தது.


இறுகிப்போய் கல்லென உட்கார்ந்திருந்தார் கருணாகரன். நடப்பதை ஒரு பார்வையாளாக பார்த்துக்கொண்டிருந்தார் தாமரை வழக்கம் போல.


இதையெல்லாம் எதிர்பார்த்தோ என்னவோ சந்தோஷை உடன் அழைத்துக்கொண்டு அவர்களுடைய ஊருக்கு சென்றுவிட்டான் சத்யா அவனுடைய அம்மாவை அழைத்துவர. அவன் இங்கே இருந்தால் அவனையும் இதில் இழுத்துவிட்டு அவர்கள் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கிவிட வாய்ப்பிருக்கிறது.


"குடியில பிறந்த பொண்ணு, என்னை கலக்காம அழைக்காம இப்படி ஒரு பெரிய விஷேஷம் நடந்து முடிஞ்சிருக்கு. அப்பா அம்மா உயிரோட இருக்கும்போதே பிறந்த வீட்டுல எனக்கு இந்த கதி. என் உரிமையே பறிபோயிடுச்சு. புகுந்த வீட்டுலையும் என் மானம் போச்சு" என அவளுடைய அத்தை நிர்மலா ஒரு பாட்டம் அழுது புலம்ப, இடைவெளி விடாமல், "அது என்ன? காதல் கரமந்திரம்னு அவதான் வந்து நின்னான்னா, கையை காலை உடைச்சு நம்ம பார்க்கற பையனுக்கு கட்டி வைக்காம, நம்ம வழக்கத்துலயே இல்லாததையெல்லாம் செஞ்சிட்டு இருக்க அண்ணா? அண்ணியும் உனக்கு உடந்தையா?" என வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான் ஜனார்த்தனன், அவளுடைய சித்தப்பா.


தாமரையை சொல்லவும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை கருணாகரனுக்கு. "நீ ஏதாவது கேள்வி கேக்கனும்னா என்னை மட்டும் கேளு. அது என்ன அண்ணியை இதுல இழுக்கறது. இந்த பழக்கத்தை நீங்க விடவே மாட்டிங்களா?" என உறுமியவர், "என்னவோ நடக்காத ஒண்ண நான் செஞ்சிட்ட மாதிரி இப்படி சீன போடற. உன் மச்சான் பையனோடதும் காதல் கல்யாணம்தான? அவனே முன்ன நின்னுதானே அந்த கல்யாணத்தை செஞ்சுவெச்சான். அப்ப எங்க போச்சு இந்த வாய். அவனோட காலை உடைக்க சொல்லி உன் மச்சான்கிட்ட சொல்லல? இங்க வந்து அம்மா அப்பா கிட்ட பொலம்பிட்டு போயி, முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி வெச்சிட்டு மொற செஞ்சிட்டுதான வந்தீங்க? ஏன் உன் மச்சானை விட துட்டுல கொழுத்தவன் பொண்ணுங்கறதால அந்த காதல் கல்யாணம் தப்பில்லன்னு தோணிபோச்சா?" என அவர் அடுக்கடுக்காக கேள்வி கேட்கவும், பதில் சொல்ல இயலவில்லை, செந்தணலாக சிவந்துபோன அவனுடைய மனைவியின் முகத்தை பார்த்து கலவரமாகத்தான் முடிந்தது அவனால்.


ஜனாவின் மைத்துனன் வேறு யாரும் இல்லை, மோகனாவின் தம்பி மகன்தான். கௌசிக் வீட்டினர் சென்றதிலிருந்து இதுவரை ஆற்றாமையுடன் புலம்பிக்கொண்டிருத்தவருக்கு இனி வாய் திறக்க வழியே இல்லாமல் போனது.


"உன் பிள்ளைன்னு வந்தா நீ கையையாவது உடைச்சிக்கோ இல்லை காலையாவது உடைச்சிக்கோ. என்னால அதை செய்ய முடியாது. எம்பொண்ணு தேர்ந்தடுத்திருக்கற பையனும் எதுலயும் குறைஞ்சவன் இல்ல. நல்லா படிச்சிருக்கான். பார்க்க வாட்டசாட்டமா நல்லா இருக்கான். இப்ப பணம் காசு இல்லன்னாலும், என் பிசினெஸ்ஸை நம்பி ஒப்படைக்கற அளவுக்கு நல்ல திறமையானவன். இனி இதை பத்தி யாரவது பேசினீங்கன்னா தயவு செஞ்சி என்னை விட்டு தள்ளி நின்னுக்கோங்க. எனக்கு என் பெண்டாட்டி பிள்ளைங்கதான் பிரிஃபரென்ஸ். மத்தவங்க எல்லாம் அப்பறம்தான்"


உண்மையாக மனதில் பட்டதைத்தான் சொல்கிறாரா, அல்லது மற்றவர்களுக்காக விட்டுக்கொடுக்காமல் பேசுகிறாரா? என்பது புரியாமல் வியப்பாகிப்போனது ஹாசினி தாமரை இருவருக்குமே.


ஆனால் தனக்கு உடன்பாடே இல்லையென்றாலும் கூட மகளின் விருப்பத்தை மட்டுமே கருத்தில் கொண்டு தான் எடுத்திருக்கும் ஒரு முடிவு யாருடைய விமரிசனத்துக்கும் உள்ளாகக்கூடாது என அவர் கறாராக எண்ணியதன் வெளிப்பாடுதான் இந்த பேச்சு என்பது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.


ஆடித்தான் போனார்கள் மற்றவர் எல்லாரும். மோகனாவால் மகன் இப்படி பேசுவதை நம்பவே இயலவில்லை. 'ஏதோ என்னை மீறி நடந்துபோச்சு' என அவர் ஆதங்கப்படுவார் என எண்ணிக்கொண்டிருக்க, அவர் இப்படி பேசவும் எப்படி எதிர்வினையாற்றுவது என்றே புரியவில்லை ஒருவருக்கும்.


எதையும் காட்டிக்கொள்ளாமல் எல்லோரிடமும் அவர் இயல்பாக நடந்துகொண்டாலும் ஆதி காலத்தில் நடந்த எதையும் அவர் மறக்கவில்லை என்பது புரிந்தது மணிகண்டன், அதாவது நிர்மலாவின் கணவருக்கு. அவர்களுடைய குடும்பத்தை பொறுத்தவரை தாமரை போல அவரும் ஒரு மௌன பார்வையாளரே. அவர் உணர்ந்த அதே செய்தியை பாபுவும் உணர்ந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.


அதன் பின், "ஏதோ ஒரு ஆதங்கத்துல பேசிட்டேன். நீ மனசுல வெச்சிக்காத அண்ணா" என ஜனா அப்படியே குட்டிக்கரணம் அடிக்க, நிர்மலாவும் சமாதானத்திற்கு வந்துவிட, ஒரு சுமுகம் ஏற்பட்டது.


அன்று இரவே கோதையை அழைத்துவந்துவிட்டான் சத்யா. மகனை பற்றிய வேதனை ஒருபுறம் இருந்தாலும் பேத்தியின் திருமணத்தை குறித்து மகிழ்ச்சிதான் அவருக்கு. காரின் பின் இருக்கையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தவரை வேகமாக வந்து கையை பிடித்து இறங்க உதவிய மகளிடம், "என்ன தாமர உனக்கு மாப்பிளை வரப்போறானா?" என மலர்ந்த முகத்துடன் கோதை கேட்கவும், சத்யா அவருக்குப் புரியவைத்தே அழைத்து வந்ததில் கொஞ்சம் நிம்மதியுற்றார் தாமரை.


ஏற்கனவே மாமியாரும் மாமனாரும் முகத்தைத் தூக்கி வைத்திருக்கிறார்களே! இவர் பங்கிற்கு இவர் வேறு ஏதாவது முறுக்கிக்கொண்டால் யாரையென்று சமாளிப்பது?


***


அடுத்த நாள் அனைவரையும் அழைத்துக்கொண்டு கௌசிக்கின் வீட்டிற்கு சென்று கை நனைத்துவிட்டு வந்தனர்.


"இப்படி அரண்மனை மாதிரி வீட்டுல இருந்துட்டு அந்த புறா கூண்டுல உன் பொண்ணு எப்படித்தான் இருக்கபோறாளோ. மனுஷங்கள பார்த்தாலும் கொஞ்சம் வித்தியாசமா தெரியறாங்க" என அப்பாவிடம் அத்தைதான் புலம்பிக்கொண்டிருந்தார். "நானும் தாமரையும் எங்க வாழ்க்கையை தொடங்கினது இதை விட சின்ன வீட்டுலதான்க்கா ஞாபகம் இருக்கா. அவளே தேர்ந்தெடுத்த வாழ்க்கை அதனால அவ எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணிப்பா" என ஹாசினியை பார்த்துக்கொண்டே கருணா நக்கலான குரலில் சொல்ல, ஒரு பயப்பந்து உருண்டது அவளுடைய வயிற்றுக்குள் சங்கரியை நினைத்து. அங்கே சென்றதில்லையே தவிர, கௌசிக் பெருமையாகச் சொல்லியிருக்க, அந்த வீட்டைப் பற்றி அவளுக்குத்தான் முன்பே தெரியுமே! அதனால் அது ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை.


அனைவரும் ஒன்று கூடி பேசி என்னென்ன செய்யவேண்டும் என பட்டியலிட ஒரு நாள், நேரில் சென்று பார்த்து கல்யாண மண்டபத்திற்கு ஏற்பாடு செய்ய ஒருநாள், கேட்டரிங் கான்ட்ராக்டரை வரவழைத்து கௌசிக் வீட்டினரை கலந்து பேசி சமையல் மெனு முடிவு செய்ய ஒருநாள், வெள்ளி, பித்தளை, எவர்சில்வர் என வகைவகையாக ஏற்கனவே வாங்கிவைத்திருக்கும் சீர்வரிசை பாத்திரங்களை எல்லாம் தேர்தெடுத்து அவற்றை முறைப்படுத்த ஒருநாள், பேங்க் லாக்கரிலிருந்து அவளுக்கு போட வேண்டிய நகைகளை எடுத்து வந்து, கொஞ்சம் மங்கி தெரிவதை பாலிஷ் போட கொடுத்து என அதற்கு ஒரு நாள், கல்யாண பத்திரிகையின் டிசயனை தேர்ந்தெடுத்து அதை அச்சிட கொடுப்பதில் ஒரு நாள், உறவினர்களுக்கு கொடுக்கவேண்டிய துணிமணிகள், பரிசுப்பொருட்கள் என வாங்கிவர அதற்கு ஒரு நாள் என திருமணத்திற்கிடையிலான நாட்கள் ஒவ்வொன்றாக குறைந்துகொண்டே வந்தன.


சத்யாவும் ஜனாவும் திருமண வேலைகளை பார்த்துக்கொள்ள, முழுவதுமாக அவரது தொழிற் சார்ந்த வேலைகளில் தன்னை புகுத்திக்கொண்டார் கருணாகரன். இல்லையென்றால் தொழிலில் பிரச்சனை உண்டாகிவிடும்.


நாட்கள் எப்படி ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறது என்பதே புரியவில்லை ஹாசினிக்கு. திருமணத்திற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருந்தன.


தனியாக எங்கும் வெளியில் செல்ல அனுமதி இன்றி கிட்டத்தட்ட ஹவுஸ் அரெஸ்டில் இருந்தாள் அவள். கருணாகரனிடம் சிறு இளக்கம் தெரியவே, குற்றவுணர்ச்சி இல்லாமல் இயல்பாக நடமாடமுடிந்தது அவளால். இல்லையென்றால் மன அழுத்தம் கூடிப்போயிருக்கும்.


பாட்டிகள் இருவர், தாத்தா, அத்தை-மாமா, சித்தப்பா-சித்தி, அத்தையின் மகன், மருமகள்- பேரன், சித்தப்பாவின் மக்கள் என வீடு முழுவதும் ஆட்கள் நிறைந்திருப்பதால், அதுவும் இளசுகள் அவளுடன் அறையை பகிர்ந்துகொண்டிருப்பதால் கைப்பேசியில் சேர்ந்தாற்போல சிலநிமிடங்கள் கூட கௌசிக்குடன் பேச இயலவில்லை. ஆனாலும் தான் நினைத்தபடியே எல்லாம் நடந்துகொண்டிருப்பதால் ஒரு வித ஆனந்த பரவசம் அவளது உடல் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தது. கௌசிக்குடனான எதிர்கால வாழ்க்கையை பற்றி வண்ணமயமான கனவுகளில் மிதந்துகொண்டிருந்தாள் ஹாசினி.


அப்பொழுதுதான் அவளுடைய கல்லூரி தோழியரெல்லாம் ஒன்று சேர்ந்து அவளை பார்க்கவந்தனர்.


அவளுடைய காதல் விவகாரத்தை அவர்களிடமிருந்து மறைத்தது, நிச்சயத்திற்கு கூட யாருக்கும் சொல்லாதது என அவ்வளவு கோபம் அனைவருக்கும். அடிப்பது போல் அவள்மீது பாய்ந்தேவிட்டாள் பாலா.


"ஹேய்... அவ கல்யாண பொண்ணு, ஏதாவது ஹர்ட் ஆகிட போகுது" என பதறியவாறு சவிதாவும் ப்ரீத்தியும் இடையில் புகுந்து தடுக்கவில்லை என்றால் நான்கு ஐந்து அடிகள் வகையாக விழுந்திருக்கும் அவளுக்கு.


"இத்தன வருஷமா ஒண்ணுக்குள்ள ஒண்ணா எப்படியெல்லாம் பழகியிருப்போம். எப்படிடி உன்னால எங்ககிட்ட இருந்து மறைக்க முடிஞ்சுது"


கேட்கும்போதே கண்களில் கண்ணீர் திறையிட்டது அவளுக்கு.


"சொன்னா எங்க என்னை ஓட்டியே கொன்னுடுவீங்களோன்னு பயம்தான் மச்சீ. கௌசியும் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான். ரியலி சாரிடி. இன்னும் டூ டு த்ரீ இயர்ஸ்க்கு அப்பறம்தான் கல்யாணம்னு பிளான் பண்ணி வெச்சிருந்தோம். அன்பார்ச்சியூனேட்லி அப்பா கண்ணுல மாட்டிட்டோம். ரொம்ப பிரச்சனை ஆயிடுச்சு. அப்பா எங்க கல்யாணத்துக்கு இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பாங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கல. இந்த கலவரத்துல எனக்கு யாரையும் காண்டாக்ட் பண்ணனும்னு தோணல. சொல்லப்போனா எனக்கு எங்கேஜ்மென்ட் கூட நடக்கலடி. ப்ச்... ரிங் கூட போடல தெரியுமா? சும்மா தட்டு மட்டும் மாத்திக்கிட்டாங்க. அவ்வளவுதான்.” என நிராசையுடன் சொன்னவள், “லவ் மேரேஜ்ங்கறதால அத்தை சித்தப்பா சைட்ல இருந்து கொஞ்சம் ப்ராப்ளம் அது இதுன்னு போனதால, நேத்துதான் உங்ககிட்டயெல்லாம் சொல்ல முடிஞ்சுது" என மிக நீண்ட தன்னிலை விளக்கம் கொடுத்தாள் ஹாசினி.


"அது எப்படி மச்சீ, பர்ஸ்ட் இயர் படிக்கும்போதேவா? அந்த ஒரு வருஷம் மட்டும்தான அவன் அங்க படிச்சான். நாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்துதான் அவன் கிட்ட டவுட் க்ளியர் பண்ண போவோம். சாமியார் மாதிரி யாரையும் தலை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டானே. உன் கிட்ட மட்டும் எப்படிடி மயங்கினான்" என மேகலா அதிசயிக்க,


"அப்பல்லாம் இல்ல மேகி, நாம தேர்ட் இயர் படிக்கும்போதுதான் ஸ்டார்ட் ஆச்சு. என் ஸ்கூல் பிரென்ட் ஜானு தெரியும் இல்ல அவ வீட்டுக்கு ஒரு பார்ட்டிக்கு போயிருந்தேன். அதுக்கு கௌசியும் வந்திருந்தான். அப்ப அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுலதான் அவன் குடியிருந்தான். டூ இயர்ஸ்க்கு பிறகு மீட் பண்ணதால ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அந்த டைம்ல எனக்கு நிறைய அரியர்ஸ் இருந்ததால அவன் கிட்ட ஹெல்ப் கேட்டேன். போன் நம்பர் ஷேர் பண்ணி, என்ன டௌட்னாலும் கேட்க சொன்னான், அதுல இருந்து அடிக்கடி பேச ஆரம்பிச்சு, மீட் பண்ண ஆரம்பிச்சு இப்படி போச்சு. அவனுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு அவன் பார்வையிலேயே புரிஞ்சுது. அவனா லவ்வை சொல்லுவான்னுவெயிட் பண்ணேன், பட் அந்த அளவுக்கு அவன் துணியல. காரணம் அவனோட கமிட்மெண்ட்ஸ்னு புரிஞ்சுது. அவன் எப்பவுமே சொல்ல மாட்டான்னு தோணிச்சு. அதனால நானே ப்ரபோஸ் பண்ணிட்டேன். கொஞ்சம் தயங்கினாலும் அக்சப்ட் பண்ணிட்டான். இதுதான் எங்க லவ் ஸ்டோரி" என ஒளிவு மறைவில்லாமல் தன் அந்தரங்கங்களை தயக்கமும் பெருமையுமாக அவர்களிடம் பகிர்ந்தாள் ஹாசினி கிசுகிசுப்பான குரலில்.


போனால் போகிறது என்பதாக மற்றவர்களெல்லாம் அவளை விட்டுவிட்டால் கூட பாலாவின் முகம் தெளியவே இல்லை.


சாவித்ரி கொண்டு வந்து வைத்த பலகாரங்களை சாப்பிட்டு முடித்து கிளம்பினார்கள் அனைவரும்.


வாசல் வரை வழி அனுப்ப வந்தவளிடம், "மச்சீ, உங்க வீட்டுல சுத்தி யாராவது இருந்துட்டே இருக்காங்க. ப்ரீயா எதுவும் பேசவே முடியல. உனக்கு கல்யாணம் முடிஞ்சுட்டா எங்க கூடலாம் வெளியில வந்து உன்னால டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது"


"ஹேய் அப்படியெல்லாம் இல்ல, கௌசி என்னை எந்த விதத்துலையும் கண்ட்ரோல் பண்ண மாட்டான். நான் இப்ப எப்படி இருக்கேனோ அதே மாதிரிதான் மேரேஜ்க்கு அப்பறமும் இருக்கபோறேன்" என இடைபுகுந்தாள் ஹாசினி.


அவளை விந்தையான ஒரு பார்வை பார்த்தவள், "ப்ச்... உனக்கு உலக அனுபவம் போறாது விடு. நான் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சிடறேன்" என நக்கலாகச் சொல்லிவிட்டு, "ஒரு நாள் எங்க கூட அவுட்டிங் வா. கொஞ்சம் ப்ரீயா பேசலாம்" என முடித்தாள் பாலா.


"பத்திரிகை வெக்கற வேலை, வெட்டிங் சாரி பர்ச்சேஸ் எல்லாம் இருக்கு. இன்னும் போட்டோக்ராபர் வேற ஏற்பாடு பண்ணல. அதை பார்க்கணும். நடுவுல டைம் கிடைச்சா கண்டிப்பா வரேன்" என ஹாசினி சொல்ல, "ஹேய்...அப்ப ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் இருக்குன்னு சொல்லு' என ப்ரீத்தி அவள் யோசித்தே இராத ஒரு விஷயத்தை அவளுக்கு எடுத்துக்கொடுக்க, "ஹேய்... இந்த மெஹந்தி, சங்கீத் இதையெல்லாம் மிஸ் பண்ணிடாத. வீட்டுல சொல்லி அரேஞ் பண்ணு. நம்ம எல்லாரும் சேர்ந்து செம்மயா என்ஜாய் பண்ணலாம். இதெல்லாம் ஒன் டைம் ஈவன்ட். இப்ப மிஸ் பண்ணிட்டா அதையெல்லாம் அப்பறம் நினைச்சாலும் நடத்திப்பார்க்க முடியாது" என மேகி வேறு கிளப்பி விட, ஆசையுடன் விழி விரித்தாள் ஹாசினி.


அதில் எக்கச்சக்கமாக கடுப்பாகிப்போனவளாக, "ப்ச்... இவளுங்க வேற சொல்ல வந்த முக்கியமான விஷயத்தை டைவர்ட் பண்ணிட்டு" என சலித்தவள், "ஹசின், எந்த சாக்கும் சொல்லாத. அட் எனி காஸ்... ஒரு நாள் எங்களுக்காக ஒதுக்கு. இனி இப்படி ஒரு சான்ஸ் நமக்கு கிடைக்கவே கிடைக்காது ப்ளீஸ். முடிஞ்சா தருணையும் அன்னைக்கு நம்ம கூட ஜாயின் பண்ணிக்க சொல்றேன்" என்று சொல்லிவிட்டு தங்கள் வந்திருந்த வாகனத்தில் ஏறினாள் பாலா.


'பாலா சொன்னமாதிரி கௌசி நம்மள கண்ட்ரோல் பண்ணுவானா என்ன?' என தனக்குத்தானே கேள்வி கேட்டு, 'ச்ச...ச்ச... அவன் அப்படியெல்லாம் செய்யமாட்டான், ஏன்னா அந்த அளவுக்கு அவன் என்னை லவ் பண்றான்' என தானே அதற்கு ஒரு பதிலையும் சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் ஹாசினி, கௌசிக்குடனான தன் எதிர்காலத் திருமண வாழ்க்கையைப் பற்றிய அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்.


இதுபோன்ற கண்மூடித்தனமான நம்பிக்கையெல்லாம் எங்கேயாவது எதார்தத்துடன் பொருத்தி வருமா என்ன? இதை கொஞ்சமாவது உணர வேண்டாமா இந்தப்பெண்? இல்லையென்றால் பெருத்த ஏமாற்றத்தில் துவண்டுபோகமாட்டாளோ இவள்?


****************


0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page