top of page

Poove Unn Punnagayil - 7

அத்தியாயம்-7

“மாமா... படம் முடிஞ்சு வெளியில வந்துட்டோம். நீங்க எங்க இருக்கீங்க” என மூச்சை இழுத்துப்பிடித்து, வெகுவாக முயன்று இயல்பாக ஹாசினி கேட்க,


"ஹ்ம்ம்... வந்துட்டேன். இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல காஃபி ஷாப்ல இருப்பேன். நீ அங்க வந்துடு" என வேண்டுமென்றே அவளை பதட்டப்படுத்தும்விதமாக சொன்னான் சத்யா.


"அங்கதான் இருக்கேன்" என பட்டென அழைப்பைத் துண்டித்து அவள் ஜாடை செய்யவும், அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினான் கௌசிக்.


அவன் வெளியேறிச் செல்லும்வரை பொறுத்திருந்தவன், "என்ன, உன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் உன்னை தனியா விட்டுட்டு கிளம்பி போயிட்டாங்களா என்ன" எனக் கேட்டுக்கொண்டே ஹாசினியின் அருகில் வந்து அமர்ந்தான் சத்யா.


அங்கே பாதி பருகிவிட்டு கௌசிக் வைத்துவிட்டுப்போயிருந்த காஃபி கோப்பையில் பார்வையைப் பதித்து அவன் அவளை ஏறிட, வெலவெலத்துப்போனாள் ஹாசினி.


"அது, அது வந்து" என அவள் தடுமாற, "இந்த மால், &&&கம்பெனிக்காக கன்ஸ்ட்ரக்ட் பண்ணதே நாமதான் தெரியுமா? இப்ப இவங்களோட ஃபுல் மெயின்ட்டனன்ஸும் நம்மதான் பார்க்கறோம்ங்கறதாவது தெரியுமா?” என அவன் கேள்விகளை அடுக்க, 'தெரியாது' என்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவைத்தாள் அவள்.


ப்ச்… என ஆதங்கப்பட மட்டுமே முடிந்தது அவனால். "ஒரு பிசினஸ் பண்ற குடும்பத்துல பிறந்துட்டு, இதுவரைக்கும் அடிப்படை கூட கத்துக்காம இருக்கறது தப்பாவே தெரியலையா ஹசி, உனக்கு? இது சம்பந்தமாதான படிச்சிருக்க?" என அவன் அவளைக் கடிய, "மாமா, ப்ளீஸ்... உங்க அட்வைஸ நிறுத்திட்டு சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க" என அவள் சலித்துக்கொள்ள, "சொல்ல வந்த விஷயத்தை சொல்லட்டுமா" என மிரட்டும் தொனியில் கேட்டவன், அவள் அரண்டு விழிக்கவும், "நம்ம காம்படிட்டர்ஸ் ஜீவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல வேலை செய்யறானே அந்த பையன், அவன் உனக்கு எப்படி பழக்கம்?" என அவன் நேரடியாகக் கேட்க ஆடித்தான் போனாள் ஹாசினி.


பயத்தில் அவளுக்குப் பேச்சே வராமல் போக, "பதில் சொல்லு ஹாசினி" என அடிக்குரலில் உறுமினான் அவன்.


“கௌசிக்கையா கேக்கறீங்க?”


“ஸ்ஸ்... எஸ் எஸ், அவன் பேர் கௌசிக் இல்ல. இப்பதான் ஞாபகத்துக்கு வருது! அவனைத்தான் கேட்டேன்"


"அவன், அவன் என்னோட சீனியர், மாமா"


"என்ன, சீனியர்னா, காலேஜ்லயா"


"ஆமாம், சூப்பர் சீனியர்"


"ஓஹ்" என வியந்தவன், "என்ன தெய்வீக காதலா" என வெகு தீவிரமாகக் கேட்க, 'ஆமாம்' என்பதுபோல் மௌனம் காத்தாள் அவள்.


"எவ்வளவு நாளா?"


"த்ரீ இயர்ஸா"


அலுப்புடன் நெற்றியை தேய்த்துவிட்டுக்கொண்டான் அவன்.


"மாம்ஸ்... மாம்ஸ்... நெகட்டிவா எதையும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்! அவன் ரொம்ப நல்லவன். அவனோட தங்கை பீ.ஈ பைனல் இயர் படிக்கறா. அவளுக்கு உடனே கல்யாணம் செய்யற பிளான்ல இருக்காங்க. அது முடிஞ்சதும் எங்க கல்யாணத்தை பத்தி ரெண்டுபேர் வீட்டுலயும் பேசலாம்னு இருந்தோம், அதுக்குள்ள" என அவள் இழுக்க, "அவ்வளவு அறிவு இருக்கறவங்கதான் பப்ளிக்ல இப்படி நடந்துப்பீங்களா. இத்தனைக்கும் அவனுக்கும் கல்யாண வயசுல ஒரு தங்கை இருக்கா இல்ல. நீங்கலாம் அறிவை மொத்தமா கழட்டி வெச்சுடுவீங்களா?" என அவன் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப, மவுனமாகத் தலை குனிந்தாள் அவள்.


"சரி கிளம்பு" என்றபடி அவன் எழுந்துகொள்ள, அலறி அடித்துக்கொண்டு அவனுடன் இணைத்து அவள் வெளியில் வர, அங்கே கோபால் காருடன் தயாராக இருக்கவும், அவளுடைய இருசக்கர வாகனத்தின் சாவி பார்க்கிங் டோக்கன் இரண்டையும் வாங்கி அவனிடம் கொடுத்தவன், "வண்டியை வீட்டுல கொண்டுவந்து விட்டுட்டு போயிடு” என்று சொல்லிவிட்டுத் தானே காரை கிளப்பினான்.


அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவள்தான், வீடு வந்து சேரும் வரையில் வாயே திறக்கவில்லை ஹாசினி.


வீட்டை அடைந்ததும் வாகனத்திலிருந்து இறங்க எத்தனித்தவளிடம், "ஒரு முடிவுக்கு வரவரைக்கும் நீ எங்கயாவது ஊர சுத்த கிளம்பின நடக்கறதே வேற. அக்காவுக்கோ அத்தானுக்கோ மனசு கஷ்ட படர மாதிரி எதையாவது செஞ்சேன்னு வை, அவ்வளவுதான்" என்ற கண்டிப்புடன் அவளை உள்ளே அனுப்பினான் சத்யா.


***


இரவு உணவை உண்பதற்காக அனைவரும் ஒன்றாக கூடி இருக்க, "சுகர் மாத்திரை போட்டுடீங்களா அத்தை" என கேட்டுக்கொண்டே அவருக்கு உணவைப் பரிமாறினார் தாமரை. "போட்டுட்டேன்" என பதில் சொன்னவர், "கருணா இன்னும் வரலையா" என மோகனா மகனைப் பற்றி விசாரிக்க, "வந்துட்டாங்க அத்தை, ரெப்ரெஷ் பண்ணிட்டு சாப்பிட வருவாங்க” என்ற தாமரையின் பார்வை, மகளிடம் சென்றது. அவளது அதீத அமைதி பல கேள்விகளை எழுப்ப, சத்யா அவரை பார்த்த பார்வையில் மதியமே அவன் அவரை ஓட்டியது நினைவில் வர எதையும் கேட்கவில்லை அவர்.


அதற்குள் கருணாகரன் மகனுடன் அங்கு வந்து சேர, அவரது கவனம் மொத்தமும் சத்யாவிடமே இருந்தது.


"நம்ம மாணிக்கம் அவனோட பொண்ணு கல்யாணத்துக்கு நம்மளை அழைச்சிட்டு போனானே, உன்னால வர முடியுமா இல்ல நானே நாளைக்கு அம்மாவையும் தாமரையையும் கூட்டிட்டு போயிட்டு வந்துடவா?" என அவருடைய அப்பா பாபு கேட்ட கேள்விக்குக் கூட அவருக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை.


"கருணா... நான் கேட்டுட்டே இருக்கேன், நீ என்னவோ யோசிச்சிட்டு இருக்க!" என அவர் மறுபடியும் மகனுடைய கவனத்தை தன் புறம் ஈர்க்கவும்,


"இல்லப்பா, எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்களே போயிட்டு வந்துடுங்க"


"என்னவோ போ, சாதி சனத்துக்கு நடுவுல இதெல்லாம் தப்புனு உனக்கு புரியவே மாட்டேங்குது. நீயும் ரெண்டு பிள்ளையை பெத்து வெச்சிருக்க. அவங்களுக்கு கல்யாணம் காட்சி பண்ணும்போது மத்தவங்களும் நம்ம வீட்டுக்கு வரணும் இல்ல" என அவர் முணுமுணுக்க, அனிச்சை செயலாகக் கருணாகரனின் பார்வை வேதனையைச் சுமந்து ஹாசினியிடம் செல்ல, ஹாசினி தாமரை இருவரின் பார்வையும் சத்யாவை நோக்கித் திரும்பியது பயம், ஏக்கம் என இரு வேறு மனநிலையில்.


சத்யாவின் பார்வையோ அவனுடைய அத்தானை முற்றுகை இட்டது 'கவலை படாதீங்க, பார்த்துக்கலாம்!' என்பதாக.


இதற்கிடையில், "தாத்தா எனக்கு மொற பொண்ணு யாராவது இருக்காளா? ஒரு வேளை நாளைக்குக் கல்யாணத்துக்கு வருவான்னா சொல்லுங்க, நானும் வரேன். அப்படியே எனக்கு ஒரு கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்ணிடுங்க" என கிண்டலாக சந்தோஷ் கேட்டது, "அடி ராஸ்கல், முளைச்சு மூணு எல விடல, கல்யாணம் கேக்குதா உனக்கு" எனத் தாத்தா அவனுக்கு பதில் கொடுத்ததோ செவிகளில் நுழைந்தாலும் ஒருவருடைய சிந்தையையும் எட்டவே இல்லை.


உண்டு முடித்து எல்லோரும் அவரவர் அறைக்குள் போய் புகுந்துகொள்ள, தாமரை எதையோ உருட்டிக்கொண்டிருப்பதை உறுதிசெய்துகொண்டு, சத்யாவை தேடி அவனுடைய அறைக்கே வந்தார் கருணாகரன்.


யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவன் அவசரமாகப் முடித்து அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு, "நானே உங்ககிட்ட வந்து பேசணும்னு இருந்தேன் மாமா" என்றவன், "குட்டிம்மா" எனத் தொடங்கி மேற்கொண்டு பேச இயலாமல் அவர் தயக்கத்துடன் அவனை ஏறிட, "நான் அவகிட்ட பேசிட்டேன் மாமா. மேட்டர் கன்ஃபார்ம்தான்" எனக் கொஞ்சம் சங்கடத்துடன் தயங்கியவன், "காலேஜ் சீனியராம். இப்ப கூட அவன் விஷயமாதான் என் ஃப்ரெண்ட் மனோ கிட்ட விசாரிக்க சொல்லியிருக்கேன். இன்னும் ரெண்டு மூணு நாள்ல எல்லா டீடைல்ஸும் கிடைச்சுடும். ஹாசினியையும் கொஞ்சம் கண்டிச்சு வெச்சிருக்கேன். பார்க்கலாம். சிக்கல் இல்லாத இடமா இருந்தா தோண்டி துருவாம கல்யாணத்தை முடிச்சிடலாம் அத்தான்" என அவர் மேற்கொண்டு எதையும் கேட்கும் சங்கடத்தைக் கொடுக்காமல் அனைத்தையும் சொல்லிமுடித்தான் சத்யா.


என்ன சொல்வது என்பதுகூட விளங்காமல், "தேங்க்ஸ்...பா" என்றதுடன் முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தார் கருணாகரன்.


கணவர், மகள், தம்பி, ஊரில் தனியாக இருக்கும் அம்மா என அனைவரைப் பற்றிய எண்ணங்களும் மனதை அழுத்த தோட்டத்து கல்மேடையில் அமைதியாக உட்கார்ந்திருந்த தாமரை அவரது கண்களில் பட, அவருக்கு அருகில் வந்து உட்கார்ந்தவர் மனைவியின் கையுடன் தன் கையை கோர்த்துக்கொண்டு அப்படியே அவருடைய தோளில் தலை சாய்ந்தார் கருணாகரன் ஆறுதல் தேடி.


தாமரையின் விரல்கள் அழுத்தமாக அவருடைய விரல்களைப் பற்றிக்கொள்ள, அதில் அதீதமாக வெளிப்பட அவருடைய அக்கறையில் கருணாகரனின் அடிவயிற்றிலிருந்து தொண்டைக்குழி வரை வந்த 'சாரி' என்ற வார்த்தை அப்படியே தடைப்பட்டது அதை சொல்லத் தகுந்த தருணம் இது இல்லை என தோன்றிய எண்ணத்தால். கண்களின் ஓரம் துளிர்த்த நீரை மனைவி அறியாவண்ணம் துடைத்துக்கொண்டார் கருணாகரன்.


உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்

சுமைதாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்


வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும் முடியலாம்

முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே!


(Episode song)



சத்யாவின் அறையிலிருந்து மிதந்து வந்த கீதம் இருவரின் மனதிற்குள்ளும் ஒரு இதத்தை பரவச் செய்தது.


****************

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page