top of page

பூவும் நானும் வேறு-2

Writer: Krishnapriya NarayanKrishnapriya Narayan

இதழ்-2


கடந்தகால பாவத்திற்கும்... நிகழ்கால புண்ணியத்திற்கும்...


இடைப்பட்ட தூரத்தைக் கடக்க இயலாமல் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என் எதிர்காலம்;


எல்லா காலத்திலும் நான் மாட்டும் நானாகவே இருப்பதால்;


வாடி உதிர்ந்துபோகும் குணத்தை நான் கொள்ளாமல் இருப்பதால்;


பூவும் நானும் வேறுதான்!


***


மாலை வீடு திரும்பியது முதல் மகளைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார் ராகவன். காஃபியை கலந்துகொண்டு வந்து அவருடன் உட்கார்ந்து அதை அருந்தி முடிக்கும் வரையிலும் சரி, அதன் பின் அவருடைய கையை பிடித்துக்கொண்டு, கடைக்கு அழைத்துச் சென்று, காய்கறிகள் வாங்கிவந்த நேரத்திலும் சரி, வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல், எதோ சிந்தனை வயப்பட்டவளாக இருந்த மகளின் தோற்றம் அவருடைய மனதைக் கலங்கச் செய்தது.


'எதையாவது கேட்டு அவள் மனதை வருத்த வேண்டாம்!" என எண்ணி இரவு உணவு உண்டு முடிக்கும் வரையிலும் பொறுமை காத்தவர், அதற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாமல், "வசும்மா! ஸ்கூல்ல ஏதாவது பிரச்சினையா? இல்ல ஹோம்ல இருந்து கால் பண்ணி ஏதாவது சொன்னாங்களா?" என கேட்டார் ராகவன்.


அவர் என்னவோ சாதாரணமாகக் கேட்பதுபோல்தான் கேட்டார். ஆனாலும் அவர் மனதில் குடி கொண்டிருந்த பதட்டம், அவரையும் மீறி வெளியில் கொஞ்சம் தெறித்துவிட,


'ஐயோ அப்பாவை கலவரபடுத்திட்டோமோ!' என வருந்தியவள், "ஹோம்ல அம்மா நார்மலாதான் இருக்காங்க. பயப்படாதீங்கப்பா!" என்று சொல்லிவிட்டு அன்று பள்ளியில் நடந்ததை விவரித்தாள் வசுந்தரா.


"அப்பா! முதல்ல அந்த பையன் ட்ரிங்க் பண்ணிட்டு வந்திருக்கான்னுதான் நினைச்சேன். ஹெச் எம் கிட்டேயும் சொன்னேன்.


உடனே அவனைக் கூப்பிட்டு விசாரிச்சாங்க.


ஆனா சாராயத்தையும் தாண்டி அவன் கஞ்சா மாதிரி ஏதோ ட்ரக் கன்ஸ்யூம் பண்ணியிருப்பான் போல இருக்கு. அதுவுமில்லாம அவனுக்கு இந்த பழக்கம் ரொம்ப நாளா இருக்கும் போலிருக்கு.


அவனை சஸ்பெண்ட் பண்ணிடலாம்னு ஹெச்.எம் சொன்னார்.


பாவம்பா அந்த பையன். இவ்வளவு சின்ன பையனை எதுக்கு தண்டிக்கணும்னு தோணிச்சு.


அதனால வேண்டாம்னு சொல்லி, அவனை ஸ்ட்ராங்கா வார்ண் பண்ணி விட சொல்லிட்டேன்பா.


இவன் மட்டும் இல்லப்பா, இதுமாதிரி இன்னும் நிறைய பேர் இருகாங்க.


ட்ரிங்க் பண்ணிட்டு ஸ்கூலுக்கே வராங்க. அவங்க இப்படி டீச்சர்ஸையே தப்பான பார்வை பார்க்கும்போது, கூட படிக்கற பொம்பள பிள்ளைங்க நிலைமையை நினைச்சாதான் ப்பா ரொம்ப பயமா இருக்கு!


வேற வழி தெரியாம டீச்சர்ஸே அவங்களைப் பார்த்து பயந்து ஒதுங்கி போறாங்க. இல்லனா அவங்களை தண்டிக்கறாங்க.


அதுல என்ன பிரயோஜனம் இருக்கு சொல்லுங்க.


இந்த மாதிரி போதை வஸ்துக்கள் சின்ன பசங்க கைல கிடைக்க காரணமானவங்களை இல்ல தண்டிக்கணும்.


இதை பற்றி போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கலாம்னு சொன்னா, ஹெச்.எம் சம்மதிக்க மாட்டேங்கறாரு.


அதனால நாளைக்கு ஸ்கூல் முடிஞ்சதும், பாரதி அம்மாவை பார்த்துட்டு வரலாம்னு நினைச்சிட்டு இருக்கேன்பா. அவங்க எனக்கு கட்டாயம் ஹெல்ப் பண்ணுவாங்க.


அவங்க கிட்ட பேசிட்டு, அந்த பையனை ரீஹெபிலிடேஷன் ட்ரீட்மெண்ட்க்கு கூட்டிட்டு போலாம்னு நினைக்கறேன்.


இந்த விஷயத்துல என்னால என்ன செய்ய முடியுமோ தெரியல. பார்க்கலாம்!" என்றாள் வசுந்தரா. சொல்லி முடித்ததும், மிக நீண்ட பெருமூச்சு ஒன்று எழுந்தது அவளிடம்.


"அப்பா! நீங்க என்ன நினைக்கறீங்க! என் முடிவு சரிதானா!" எனக் கேட்டாள் அவள்.


"ஏற்கனவே, உங்க ஸ்கூல்ல உன் மேல சிலர் காழ்புணர்ச்சியில இருக்காங்க இல்ல!


இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபடும்போது பல பகைகளை வளர்த்துக்க வேண்டியதாக இருக்கும் தங்கம்!


என்ன சொல்றதுன்னு தெரியல; எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கும்மா!


நான் ஹெல்தியா இருந்தால் இப்படி பேச மாட்டேன்!" என்று வருத்தத்துடன் சொன்னார் ராகவன்.


"முளைக்கும் இடத்திலேயே குற்றங்களை அழிக்கணும் பா! அது ஒரு நல்ல ஆசிரியரால மட்டும்தான் முடியும்.


என் பிள்ளைகள் தவறான பாதையில் போறத பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது.


என் பிள்ளைகள் போதைக்கு அடிமை ஆகக் கூடாது.


என் பிள்ளைகளால எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப் படக்கூடாது.


எந்த பெண் பிள்ளைகளும் மனம் தடுமாறி தவறான பாதையில் போகக் கூடாது.


என் பிள்ளைகள் படிப்புல, விளையாட்டுல, எல்லாத்துலயும் சிறப்பா இருக்கணும்.


என் பிள்ளைகள் சமுதாயத்துல மேல் மட்டத்துக்கு வரணும்.


அப்பா நான் முடிவு பண்ணிட்டேன் பா! இதில் என் உயிர் போனாலும் பரவாயில்லை!


அப்படியாவது நம்ம மேல படிந்திருக்கும் பாவக் கரை நீங்குமா பார்க்கலாம்!" என்றாள் வசுந்தரா உறுதியாக, திண்ணமாக.


மேற்கொண்டு மகளின் எண்ணத்திற்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாமல் வாய் மூடி மௌனமானார் செல்வராகவன்.


***


மறைமலை நகர் பகுதியில் அமைந்திருந்த ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிக்குள் தனது ஸ்கூட்டியை ஓட்டி வந்த வசுந்தரா, அதன் உள்ளே கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி அமைந்திருந்த 'வில்லா' எனப்படும் தனி வீடு ஒன்றை நோக்கிச் சென்று அதன் சுற்றுச்சுவர் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள்.


வீட்டின் கதவைத் திறந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர், "நீங்க தான் வசுந்தராவாம்மா? நீங்க வருவீங்கன்னு அம்மா சொன்னாங்க!" என்று சொன்னபடியே அவளை உள்ளே அழைத்தார் அவர்.


அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அவளை உட்காரச் சொன்னவர், சில நிமிடங்களில் தண்ணீர் நிரம்பிய கண்ணாடி குவளையை அவளிடம் நீட்டினார்.


அதை அவளது கைகளில் வாங்கிக்கொண்டிருக்கும் பொழுதே கம்பீர தோற்றத்துடன் அங்கே வந்தார், அறுபது வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணி பாரதி!


திவ்யாபாரதி ஐ.பி.எஸ்!


மத்திய அரசில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி. மிகவும் கண்டிப்பும், கறாரும் நிரம்பியவர்; நிமிர்வுடன் கூடிய நேர்மையாளர். அதனாலேயே பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்கி, ஊர் விட்டு ஊர் மாற்றல் ஆகி இந்தியா முழுதும் சுற்றியவர்.


பணி ஓய்விற்குப் பிறகு,அவரது தமக்கையின் மகனுடைய கட்டாயத்தின் பெயரில் அவர் சென்னையிலேயே குடியேறி, சில வாரங்களே ஆகி இருந்தது. வசுந்தராவின் நலம் விரும்பி. அவளுடைய வழிகாட்டி அனைத்துமாய் விளங்குபவர்..


வசுந்தரவிற்கு மட்டுமில்லை, தீபனுக்கும் அவர் அப்படியே!


அவரை பார்த்த அடுத்த நொடி மிகுந்த மரியாதையுடன் இருக்கையிலிருந்து எழுந்தவள், "எப்படி இருக்கீங்கம்மா?" என்று கேட்கவும்,


கையை அசைத்து, 'உட்கார்' என்பதைப் போல் சைகை காண்பித்தவர், "எனக்கு என்ன குறைச்சல்! வேலை வெட்டி எதுவும் இல்லாம ரொம்ப நல்லாவே இருக்கேன்!" என்றார், சலிப்பான குரலில்.


"பாரதிம்மாஆஆ!" எனப் போலி கோபத்துடன் அழைத்தவள், "நீங்கப் போய் இப்படிச் சொல்லலாமா! எவ்ளோ சேலஞ்சிங் ஆன வேலையெல்லாம் பார்த்திருக்கீங்க!


எவ்வளவு அவார்ட்ஸ்! எவ்வளவு மெடல்ஸ்! சான்ஸே இல்ல!


இப்போதைக்குக் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க! நீங்க ரிட்டையர் ஆனால் கூட உங்க டிபார்ட்மெண்ட்ல உங்கள சும்மா இருக்க விடமாட்டாங்க!" என்றாள் வசுந்தரா பெருமை பொங்க.


"ரயிலம்மா! ஒரு பூஸ்டும் ஒரு காஃபியும் எடுத்துட்டு வா!" என்று அவரது பணியாளரை அழைத்துச் சொன்ன பாரதி, "அம்மாவை போய் பார்த்தியா? அப்பா நார்மலா இருக்காங்களா?" என்றார் அக்கறையுடன்.


அவள் பருகும் பானம் உட்பட நினைவில் வைத்துச் சொல்லும் அவரது அக்கறையில் மனம் நெகிழ்ந்தவளாக, "அப்பா நார்மலா இருகாங்க! போன சண்டே... நானும் அப்பாவும் போய் அம்மாவை பார்த்துட்டு வந்தோம் மா!


அம்மா கிட்டதான் எந்த இம்ப்ரூவ்மெண்டும் இல்ல!" என்றாள் வசுந்தரா வருத்தத்துடன்.


"இன்னைக்கு காலகட்டத்துல ரொம்ப ஸ்ட்ரைட் ஃபார்வேர்டா இருந்தாலே பிரச்சினைதான்!" என அதற்காக வருந்தியவர், "சரி நீ எப்படி இருக்க? உன் லட்சிய வேலையெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?" என்று கேட்டார் பாரதி.


சில நொடிகள் மௌனமாய் இருந்தவள், ராகவனிடம் சொன்னதை போலவே பள்ளியில் நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்லி முடித்தாள் வசு.


பிறகு, "அம்மா! இந்த ட்ரக் எப்படி எப்படியெல்லாமோ பசங்க கைக்கு கிடைக்குது! இதைத் தடுக்க உங்களால எதாவது செய்ய முடியுமா?" என்று கேட்டாள் அவள்.


அவள் சொன்னவற்றைக் கேட்டு கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல், "ராசாத்தி! என்கிட்ட சொல்லிட்ட இல்ல; இதை நீ இப்படியே மறந்துட்டு, உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு! என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன்!


அந்த பையனுக்கு கவுன்சிலிங் கொடுக்க, ஏற்பாடு செய்யலாம்! டோன்ட் ஒர்ரி!" என்றார் பாரதி. அதே நேரம் அழைப்பு மணியின் ஒலி கேட்கவும், "ரயிலம்மா! யாருன்னு பாரு?" என்றார் அவர்.


சில நொடிகளில் திரும்ப வந்த ரயிலம்மா, "அம்மா! தீபன்னு ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்கார்!" எனச் சொல்லவும், அவரது கண்கள் வசுந்தரவிடம் செல்ல, அவருடைய நெற்றி சிந்தனையில் சுருங்கியது. உடனே தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, "உள்ள வரச்சொல்லு!" என்று அவரை பணித்தார் பாரதி.


'பிரான்ஸ் கேரன் பௌரே' வாசனைத் திரவியத்தின் மணம், அவர்கள் உட்கார்ந்திருந்த வரவேற்பறை முழுதும் பரவி, அவனது வருகைக்குக் கட்டியம் சொல்ல, அங்கே நுழைந்தான் தீபன்.


அவனை வரவேற்கும் விதமாக, குலுக்குவதற்காக நீண்ட காரத்துடன், பாரதி இருக்கையிலிருந்து எழ முற்பட, "மேம்! ப்ளீஸ்!" என்று அவரை தடுத்தவன், "எப்படி இருக்கீங்க?" என கேட்டுக்கொண்டே, அவருடைய கையை பற்றி குலுக்கியவாறு "நீங்கள்லாம் இருக்கும்போது எனக்கு என்ன குறை?' என்ற பாரதியின் பதிலை பெற்றுக்கொண்டு உரிமையுடன் அவரது அருகில் உட்கார்ந்துகொண்டான்.


தீபனை, அந்த நேரத்தில், அந்த இடத்தில் கொஞ்சமும் எதிர்பார்க்காத வசுந்தரா, அவனைப் பார்த்தவுடன் இருக்கையிலிருந்து எழுந்துவிட, அச்சத்தில் அவளது முகம் வெளுத்து, உடல் நடுங்கத் தொடங்கியது.


அதைக் கவனித்த பாரதி அதட்டலாக, "ரயிலம்மா, கூடவே இன்னும் ஒரு காஃபீ எடுத்துட்டு வா! ப்ளாக்கா!" என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, "ராசாத்தி! நீ ஏன் நின்னுட்டு இருக்க? உட்காரு" என தொடர்ச்சியாக சொல்லி முடித்தார்.


அவரது குரலில் தெளிந்தவளாக இருக்கையில் அமர்ந்தாள் வசுந்தரா.


அவளது செய்கையை தீபன் கவனித்தானா என்பதை அறிய, பாரதி அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்க்கவும், எந்த வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், அவனுடைய முகம் தெளிவாக இருந்து. அவராலேயே எந்த வித முடிவுக்கும் வர இயலவில்லை.


அதற்குள் கைப்பேசியில் அழைப்பு வர, "எஸ்க்யூஸ் மீ கைஸ்!" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்றார் பாரதி.


சில நொடிகள் மவுனத்தில் கழிய, "நீங்க வசுந்தரா டீச்சர் தானே?" என தானே அதை முதலில் கலைதான் தீபன்,


அவன் என்ன கேட்டான் என்பது கூட புரியாமல், வார்த்தைகள் தந்தி அடிக்க, "என்... என்ன சொன்... னீங்க" என்று அவள் கேட்க, தனக்குப் பின்னல் எதையோ தேடுவது போல் பாவனை செய்தவன், "இங்க சிங்கம், புலி எதுவுமே வரலியே; நீங்க ஏன் இப்படி பதட்டப்படறீங்க? இல்ல என்னைப் பார்த்தால் சிங்கம், புலி, கரடி மாதிரி தோணுதா?" என இலகுவாக அவன் கேட்கவும்,


"இல்ல! இல்ல! அப்படியெல்லாம் இல்ல!" என்றாள் அவள் பதட்டம் கொஞ்சமும் குறையாமல்.


"நீங்க வசுந்தரா! ரைட்!" என அவன் கேட்கவும், 'ஆம்' என்பது போல் தலையை ஆட்டினாள் அவள்.


அதற்குள் அங்கே சமையல் வேலை செய்யும் பெண்மணி, பானங்களைக் கொண்டுவந்து கொடுக்கவும், கவனம் இல்லாமல் அவனுக்காக வந்த காஃபியை அவள் எடுக்க், அதைக் கவனித்தவன், "நான் பூஸ்ட், இந்த லைட் காஃபீ இதெல்லாம் சாப்பிடுறது இல்ல!" என்று கிண்டலாகச் சொல்லவும், "சாரி!" என்றவாறு அதைத் தட்டில் வைத்தால் அவள்.


அதற்குள் பாரதி அங்கே வந்துவிட, இருவரையும் பரஸ்பரம் அறிமுகப் படுத்தி வைத்தார் அவர்.


மூவரும் மௌனமாகப் பானங்களை அருந்தி முடித்தனர்.


பிறகு அவளிடம் ஒரு சந்திப்பு அட்டையை நீட்டியவாறு, "ஸ்கூல்ல ஆர்.ஓ பிளாண்ட் போடணும்னு ஸ்பான்சர் கேட்டிருந்த இல்ல, வீக் டேஸ்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு இந்த அட்ரெஸ்ல போய் பாரு. என் அக்கா பையன்தான் இருப்பான். ஹி வில் ஹெல்ப் யூ!" என்றவர், "நீ அர்ஜண்டா வீட்டுக்கு போகணும்னு சொன்ன இல்ல, கிளம்பு!" என அவளை உடனே அங்கிருந்து அனுப்பும் விதமாக பாரதி சொல்லவும், இருவரிடமும் சொல்லிக்கொண்டு, விட்டால் போதும் என அங்கிருந்து ஓடிப்போனாள் வசுந்தரா.


அவள் சென்றதும், "மேம்! என்னையெல்லாம் பார்த்தால் ஹெல்ப் பண்ணுவேன்னு தோணலியா உங்களுக்கு? உங்க அக்...கா மகனைபார்க்க சொல்லி இருக்கீங்க?" என்று தீபன் கிண்டலுடண் கேட்கவும்,


"ஓ மை காட் தீபன்! இந்த பொண்ணு போன்ல இதைப்பத்தி கேக்கும் போது அவன் என் பக்கத்துலதான் இருந்தான். ஸோ நான் எதேச்சையா அப்பவே அவன் கிட்ட சொல்லிட்டேன். தட்ஸ் இட்" என்றார் பாரதி. அது உண்மையும் கூட. ஆனால் அவர் வசுந்தராவின் பெயரை அன்று குறிப்பிடவில்லை.


"அத விடு! அம்மா, அப்பா, சரிகா, சந்தோஷ் எல்லாரும் எப்படி இருகாங்க?" என அவர் கேட்கவும், "பேச்சை மாத்தறீங்க குருவே!" என்றான் அவன்.


"இல்ல! இதை விடப் பெரிய ஒரு வேலையை நீ செய்யணும் சிஷ்ய கேடி!" என அவர் இலகுவான கிண்டலுடன் சொல்ல, அதன் பிறகு அவர்களுடைய உரையாடல் தீவிரமாக மாறிப்போனது.


***


வசுந்தரா, வீட்டிற்கு வந்த பிறகும், அவளுடைய படபடப்பு அடங்கவே இல்லை.


தொலைக்காட்சியின் உள்ளேயே புகுந்திருந்த ராகவன் மகளைப் பார்த்ததும் பாரதியைப் பற்றி விசாரிக்க, அவருக்குப் பதில் சொல்லிவிட்டு இரவு உணவைத் தயாரித்து அவருடன் சேர்ந்து உண்டு முடித்து, மேற்கொண்டு ஏதும் பேசாமல் போய் அவளுடைய அறையில் படுத்துக்கொண்டாள் அவள்.


அவள் இயல்பு நிலையை அடைய சில மணித்துளிகள் தேவைப்பட்டது அவளுக்கு.


அதன் பிறகும் ஏதேதோ யோசையில் அவள் மூழ்கி இருக்க, அவளை கைப்பேசியில் அழைத்த பாரதி, "ஏம்மா உனக்கு இன்னும் மெச்யூரிட்டியே வரலியே! அவனை கவனிச்சியா எப்படி இருக்கான்னு. அவனுடைய முகத்தைப் பார்த்து என்னாலேயே எதையும் கண்டுபிடிக்க முடியல! போம்மா! நல்ல வேளை அவன் உன்னை யாருனு கண்டு பிடிக்கல! ஆனாலும் கேள்வி மேலே கேள்வி கேட்டு என்னையே ஆழம் பாக்கறான்! இனிமேல் இப்படி இருக்காத!" என அவளை மிகவும் கடிந்து கொண்டார்.


'ஓகே மா!’ ‘சாரி மா!’ என்பதை தாண்டி வேறு வார்த்தைகள் எழவில்லை வசுந்தராவிடம்.


***


அடுத்த நாளே தீபனை கைப்பேசியில் அழைத்த திலீப், "டேய் மச்சான்! நாளைக்கு ஈவினிங் என் ஆஃபிசுக்கு வரியா? என்னோட ஏஞ்சல் இங்கே வரப்போறா!


ஐ லவ் பாரதி சித்தி! அவங்கதான் என்னை பார்க்கச் சொல்லி அவ கிட்ட சொல்லி இருகாங்க?" என்றான் மகிழ்ச்சியும் குதூகலமும் கலந்த ஆரவாரக் குரலில்.


"ஷ்யூர் டா மச்சான்!" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் தீபன் வழக்கம் போல எந்த வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல்.


ஆனாலும், அவனைப் பார்த்ததும் கலவரம் குடிகொண்ட வசுந்தராவின் முகம் அவன் மனதில் ஒரு நொடி வந்து மறைந்தது.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page