Nilamangai - 9(1) (C)
Updated: 6 days ago
நிலமங்கை - 9
நிதரிசனத்தில்...
வெதுவெதுப்பான சூரிய ஒளி உடலைத் தீண்டி ஒரு இதத்தைக் கொடுக்க பொழுது புலர்ந்துவிட்டது என்பது மட்டும் மூளையில் உரைத்தது. ஆனாலும் கூட சுகமான உறக்கத்தைக் களைந்து விழித்தெழ மனமும் உடலும் ஒத்துழைக்கவில்லை.
கனவின் தாக்கத்தில், அதுவரை செவிகளில் ரீங்காரமிசைத்துக் கொண்டிருந்த பூச்சிகளின் ஒலியும், எங்கோ தூரத்தில் உறுமும் சிங்கங்களின் கர்ஜனையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இன்னதென்று பிரித்தறிய இயலாவண்ணம் கலவையான பேச்சுக் குரல்கள் கேட்கத் தொடங்க, செந்தமிழ், அதுவும் அவர்களது வட்டார வழக்கில் வந்து செவிகளை சூடாக்க, ‘இந்த இடத்துல மனுஷங்க குரல் எப்படி?!' எனக் கொஞ்சமாகப் பிரக்ஞை எட்டிப்பார்த்து குழப்பத்தைக் கொடுத்தது நிலமங்கைக்கு.
கைப்பேசியை தேடி கைகள் அனிச்சையாகப் படுக்கையைத் தடவ, வந்தவாசிப் பாயின் சொரசொரப்பு மூளையில் உரைத்தது. 'டென்ட்டுக்குள் எப்படி பாய்?' என்கிற அடுத்த கேள்வி முளைக்க, "அப்பா, வம்பு பண்ணாதப்பா, இந்த மாத்தரைய போட்டுக்க, இல்லன்னா கால் நரம்பெல்லாம் இழுக்குதுன்னு தூக்கம் வராம அவஸ்த படுவ" என வனமலர் தந்தையை கண்டிப்பது தெளிவாகச் செவிகளைத் தீண்ட, , தான் இருப்பது இருளடர்ந்த ஏதோ ஒரு கானகத்துக்குள் இல்லை, தன் சொந்த வீட்டில் என்கிற அளவுக்கு சூழ்நிலை பிடிபட்டது. ஆனாலும் விழிகளை திறக்கவே இயலவில்லை. நள்ளிரவு வரை அவளைப் பிணைக் கைதி போல பிடித்து வைத்திருந்த தாமோதரனின் நினைவு வேறு வந்து தொலைக்க , முணுமுணுவென மனதிற்குள் எரிச்சல் பரவியது.
அதற்குள், மகளுடன் மல்லுக்கட்ட முடியாமல் வேலுமணி மாத்திரைகளைப் விழுங்கி முடித்திருக்க, அவளுக்கு அருகில் வந்தமர்ந்த வனா அவளது கையில் மென்மையாகத் தட்டி, "அக்கா, அக்கா" என்றழைக்க, உறக்கம் அகலாமலேயே எழுந்து அமர்ந்தவள், தலையைக் குலுக்கி, அழுந்த கண்களை மூடி, விரல்களால் கசக்கி சில பல முயற்சிகளுக்குப் பின் விழிகளைத் திறந்தாள்.
அவளுடைய நிலை உணர்ந்து சங்கடமாகிப்போய், "சாரிக்கா, அம்மாதான் எழுப்ப சொல்லிச்சு. இன்னைக்கு பேக்கடையானுக்கு பொங்கல் வெக்க போறாங்க... இப்பவே மணி பத்தாகுது. இப்ப எழுந்து குளிச்சு ரெடி ஆனயின்னாத்தான் சாமி கும்புட்டு நேரத்துக்கு சோறு துன்ன முடியும்" என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.
பல் துலக்காமல் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள் மங்கை. ஆனாலும் அவளது சங்கடம் உணர்ந்து, "பரவாயில்ல வனா, இதுல என்ன இருக்கு" என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்.
திருமணத்திற்காக வந்து தங்கியிருக்கும் அவளுடைய ஒன்றுவிட்ட மூன்று அத்தைகள், ஒரு பெரியம்மா, இரண்டு சித்திகள் எல்லோரும் காய்கறிகள் நறுக்குவது, மசாலா அரைப்பது என ஒன்று கூடி வேலை செய்தவண்ணம் இருக்க, மதிய விருந்து தயாரிப்பில் வீடே தடபுடல் பட்டுக்கொண்டிருந்தது. மகேஸ்வரி சமயலறையில் அடுப்பை பிடித்துக்கொண்டு பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க, ஆண்களெல்லாம் வாயிற் திண்ணையில் அமர்ந்து வம்பளத்துக் கொண்டிருந்தனர். நாலைந்து பொடிசுகள் வேறு இங்கேயும் அங்கேயும் ஓடி வீட்டையே இரண்டாக்க, அனைத்தையும் ஒரு பார்வை பார்த்தவாறு, இவளை கவனித்து அவர்கள் கேள்வி கணைகளை தொடுக்கும் முன், அவசராவசரமாக புழக்கடை நோக்கிச் சென்றாள்.
அங்கேயிருந்த வேப்பமரத்தின் அடியில் மூன்று செங்கற்களைச் சுத்தம் செய்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக்கொண்டிருந்தார் பூங்காவனத்தம்மாள். மூப்பு காரணமாக அவரது செவித்திறன் குறைந்துபோயிருக்க, அவள் அங்கே வந்த சந்தடி கூட உணராமல் அவர் வேலையில் மும்முரமாக இருக்க, நேராகப் போய் கிணற்றடி பிறையிலிருந்த பற்பொடியை எடுத்து பல் துலக்கி முகம் கழுவியவள், அந்த மூதாட்டியை நெருங்கி வந்து, பின்னாலிருந்து அவரை அணைத்தாள்.
முதலில் ஒரு நொடி திடுக்கிட்டாலும் அவளை உணர்ந்தவர், முகத்தில் ஒரு போலியான கடுமையைப் படரவிட்டு, உடலை வளைத்து அவளை உதறியபடி தன் வேலையைத் தொடர, "ஏய் கிழவி, இந்த மெதப்புதான வேணான்றது. இந்த பொண்ணு இவ்வளவு வருஷம் கழிச்சு வந்திருக்குதே, அதுவும் ஆசையா வந்து கட்டிக்குதே, என்ன ஏதுன்னு விசாரிப்போம்னு தோணுதா உனக்கு" என அவள் குழைய, "போடி சொத்த வாயாடி, அப்புடியே வந்துட்டா நீட்டி மொழகிட்டு, கட்டிக்க வேண்டியவன கிடப்புல போட்டுபுட்டு கிழவிய தூக்கி மடியில வெச்சிக்கறாளாம்" என அவர் நொடிக்க, அவர் எங்கே வருகிறார் என்பது புரிந்து அவளது உடல் இறுகியது.
அவளது நீண்ட மௌனத்தில் திகைத்துத் திரும்பி அவளது முகத்தைப் பார்த்ததுமே அந்த கிழவியின் வீராப்பெல்லாம் போன இடம் தெரியாமல் போய்விட, "என்ன மங்க இது, இப்படி எளச்சு போய் கிடக்கற? குலதெய்வத்துக்கு வேண்டுதல் வெச்சு மொட்ட போட்டுட்டியா, எம்மா நீளமா இருக்கும் உன் தலமயிறு" என அடிவயிற்றிலிருந்து ஆதங்கப்பட்டார்.
முந்தைய தினம் அவள் உடுத்திருந்த அதே புடவையிலிருக்க, நல்லவேளையாக உடை பற்றிய கேள்வியெதையும் அவர் எழுப்பவில்லை.
"போதும் விடு கிழவி, நான் நல்லாத்தான் இருக்கேன், நீ எப்படி இருக்க? உன் பேரன் பொண்டாட்டி உன்னை எப்படி பார்த்துக்குது? வேளாவேளைக்கு சோறாக்கி போடுதா, இல்ல சோம்பேறி மாதிரி உக்காந்துட்டு உன்ன வேல வாங்குதா? அத சொல்லு முதல்ல!" என எள்ளல் தொனியில் கேட்டு அவரது வாயை பிடுங்கினாள்.
மூக்கால் அழுது புலம்பப்போகிறார் என்ற அவளது எதிர்பார்ப்புக்கு மாறாக, "எனக்கென்ன கொற மங்க! என்ன தங்கமா தாங்குது நம்ம தேவி பொண்ணு. அத மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க,எம்பேரன் செல்வந்தான் குடுத்து வெச்சிருக்கணும்! அப்புடி பொறுப்பில்லாம ஊரை மேஞ்சிட்டு இருந்தவன இப்ப எப்படி மாத்தி வெச்சிருக்குது தெரியுமா?" என அவர் தேவியின் புகழ் பாட, அப்படியே வாய் பிளந்தாள் மங்கை.
முதலிலெல்லாம் அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் கூட ஒத்துப்போகாது. இவர் கிழக்கே நின்றால் அவள் மேற்கே நிற்பாள். பேசினாலே இருவருக்கும் அது வார்த்தைப் போராகத்தான் இருக்கும்!
"என்ன கிழவி, மெய்யாலுமா சொல்ற" என அவள் அதிசயிக்க, பழைய நினைவுகளில் ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது அவருக்கு.
"உங்கிட்ட நான் பொய்யா புளுவப் போறேன்! மெய்யாலுந்தான் சொல்றன் மங்க, இந்த செல்வம் பயல பொடவ முந்தானில முடிஞ்சு வெச்சிருக்குதாங்காட்டியும். வூட்டு வேல, கழனி வேல எதுலயும் கொற வெக்கறதில்ல. தங்கங்கணக்கா ரெண்டு புள்ளைங்கள பெத்து, பதூசா வளக்குது. இம்மா வேலைக்கும் நடுவுல, தினுசு தினுசா ரவிக்கையெல்லாம் வேற தெக்குது! அஆங்... இந்த வனா பொண்ணுக்கு கூட கல்யாண சேலைக்கு தோதா ஜிகுஜிகுன்னு பூவேல செஞ்சு ரவிக்க தெச்சிருக்குது பாரு! இன்னைக்கெல்லாம் பார்த்துகினே கிடக்கலாம்" என பெருமையடித்துக் கொள்ள, "போதும் கிழவி, உன் பேரன் பொண்டாட்டி பெருமையை கொஞ்சம் நிறுத்திக்கோ" என நொடித்தாலும், அவளுக்குமே அவ்வளவு பெருமையாக இருந்தது தோழியை எண்ணி. அதுவும் பூங்காவனத்தம்மாள் வாயால் பாராட்டு வாங்குவதென்பதெல்லாம் அவ்வளவு சுலபமா என்ன?
*ஒனக்கு வேற ஏதோ ஜாக்கட் தெக்கணும்னு சொல்லிடு இருந்துச்சு. அளவு எடுக்க இன்னைக்கு வந்தாலும் வரும்" என்று அவர் தொடர, "எனக்கா, எனக்கு என்ன ஜாக்கெட்டு இப்ப" எனக்கேட்டாள் புதிராக. "உந்தங்கச்சி கல்யாணத்துக்கு ஒனக்கு பொடவ எடுத்து வெச்சிருக்குது இல்ல உன் சின்னாத்தா. அதுக்கு தான்" என்றவர், "சரி... சரி... பேசிக்கினே நிக்காத! எனக்கும் வேல கெடுது பாரு... சட்டுன்னு போய், சுருக்க முழிவிட்டு வா! இங்க பேக்கடையானுக்கு பொங்கல் வெச்சிட்டு, நடு வூட்டுல பொடவ படைக்கணும்" என அவளை விரட்ட, அங்கேயே ஓரமாக கொடியில் தொங்கிய வனாவின் நைட்டியையும் ஒரு துண்டையும் எடுத்துக்கொண்டு கிணற்றுக்கு அருகிலிருந்த குளியலறைக்குள் போய் புகுந்துகொண்டாள்.
உள்ளேயே அண்டாவில் தயாராக இருந்த சுடுநீரை வளாவி அலுப்பு தீர குளித்துமுடித்து வெளியில் வர, அவளுடைய சித்தி விறகடுப்பை பற்றவைத்து பொங்கல் வைத்திருந்தாள். பூஜைக்காக தயார் செய்யப்படிருந்த செங்கல்களுக்கு பூ வைத்து விளக்கை ஏற்றிகொண்டிருந்தாள் வனா.
வெல்லமும் ஏலக்காயுமாக அந்த சர்க்கரை பொங்கல் கமகமக்க, அதில் நெய்யை ஊற்றி கிளறி இறகினாள் மகேஸ்வரி.
"வனா, உள்ள போயி தாத்தாவையும் தம்பியையும் மட்டும் கூப்புடு. மத்தவங்கல்லாம் பூவாடைகாரிக்கு படையல் போட்டு சாமி கும்புட்டா போதும்" என மகளை பனிக்க, உள்ளே சென்றவள் இருவருடனும் திரும்ப வந்தாள்.
அதற்குள் தானும் உள்ளே சென்று, வேறு சுடிதார் அணிந்து, நெற்றியில் பொட்டு வைத்து திரும்ப வந்தாள் நிலமங்கை.
தயாராக இருந்த பொங்கலை புழக்கடை முனிக்கு படைத்து, கற்பூரம் காண்பித்து அந்த பூஜையை முடித்தார் பூங்காவனத்தம்மா.
அதன் பின் பொங்கல் வைத்த அடுப்பில் மீதமிருந்த பசு விரட்டி சாம்பலை எடுத்து உதிர்த்து அந்த திருநீற்றை பிள்ளகைள் மூவரின் நெற்றியிலும் தீற்றியவர், எம்புள்ளைங்கல்லாம் எந்த காத்து கருப்பும் அண்டாம, நோய் நொடி இல்லமா நல்லபடியா இருக்கனும் முனீஸ்வரா" என வாயார வாழ்த்தி, "இந்தா சந்தானம் , நீ பூசிட்டு, அப்படியே உன் மருமகபிள்ளைகும் பூசி வுடு. சீக்கிரமே அவன் எழுந்து நடமாடட்டும்" என்றார் அக்கறை ததும்ப. கடைசியாக ராஜேஸ்வரியின் நெற்றியில் தீற்றியவர், "நல்ல படியா உன் பொண்ணு கல்யாணத்த முடி" என்றபடி, பொங்கல் பானையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல, மற்றவரும் உள்ளே வந்தனர்.
"சரி... ராஜி, என் ஜோலி முடிஞ்சுது, நான் பொறப்படுறேன்" என்று கிளம்ப, "இரு பெரிம்மா! இம்மா நேரமா பட்ட பட்டினியா கிடந்து பொங்கல் வெச்சிருக்க. ஒரு டீ தண்ணியாவது குடிச்சிட்டு போ!" என அடுபடிக்குள் சென்றாள் மகேஸ்வரி.
ஆயாசத்துடன் பூங்காவனம் அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர அவரை பார்த்துவிட்டு மங்கையின் பெரியம்மா வந்து அவருக்கு அருகில் அமர்ந்து பேச்சு கொடுக்க, தேநீரும் வந்து சேர அப்படியே வம்பளக்கத் தொடங்கினர்.
அவர் தேநீரை அருந்தி முடிக்கவும்,ஒரு தட்டில் தாம்பூலம் வைத்து, இரண்டு நூறு ரூபாய் தாள்களை அதில் வைத்து அவரிடம் நீட்டினாள் மகேஸ்வரி, “காணிக்க பெரிம்மா, மறுத்து பேசாம வாங்கிக்க” என்றவாறு. .
"சரி, இன்னைக்கு பொழுதுக்கு தேடி வர லட்சுமிய ஏன் வேணாம்னு சொல்லணும், குடு" என்றபடி அதை எடுத்து, தன் சுருக்குப் பைக்குள் திணித்தபடி அங்கிருந்து அகன்றார் பூங்காவனம்.
அதன்பின் வடை பாயசத்துடன் சமையல் செய்து, எல்லோருமாக கூடி நின்று வழிபட்டு வீட்டின் நடு கூடத்தில் புடவை வைத்து பூவாடைகாரிக்கு படையல் போட்டனர்.
எல்லாம் முடிந்து ஒரு வழியாக எல்லோரும் உண்டு முடிக்க, மதியம் இரண்டாகிப் போனது.
முகம் நோக்க நேர்ந்தால் ஒரு புன்னகை, ஓரிரு வார்த்தையில் பேச்சு என, ஓரளவுக்கு மேல் தேவையற்ற சர்ச்சை பேச்சுக்களை யாரும் மங்கையிடம் வைத்துக்கொள்ளவில்லை. அது சற்று வியப்பாக இருந்தாலும் நிம்மதியாகவே இருந்தது அவளுக்கு. அதற்கு காரணம் தாமோதரன்தான் என்பதை அவள் உணரவில்லை. அவனைத் தாண்டி அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவளை நெருங்கும் துணிவு யாருக்கும் இல்லை என்பதை அவள் அறியவே இல்லை!
தொடர் பயணங்கள், இடமாற்றம், கால நேர மாறுபாடு, போதாத குறைக்கு தாமோதரன் திருவிளையாடல் என கடந்த சில நாட்களாகவே அவள் ஆழ்ந்த உறக்கத்தை தொலைத்திருக்க, அதற்கு மேல் தாக்கு பிடிக்க இயலாமல், சாப்பிட்ட கையுடன் அவளது அப்பாவின் அறைக்குள் போய், பாய் விரித்து படுத்தவள், சட்டென உறங்கியும் போனாள்.
"அக்கா, எந்திரிக்கா... விளக்கு வெக்கற நேரமாச்சு... தேவிக்கா வேற வந்து உனக்காக காத்திருக்கு" என காலை நடந்தது போலவே மறுபடியும் வனா அவளை எழுப்ப, விழித்துப் பார்த்தால் லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது. காலை இருந்த களைப்பெல்லாம் சற்று நீங்கியிருக்க, உடனே போய் முகம் கழுவி வந்தாள்.
இரவுக்கு மொத்தமாக ஒரு உப்புமாவை கிளறி வைத்துவிட்டு, களைப்புடன் பெண்டிரெல்லாம், கூடத்து அறையிலுள்ள தொலைக்காட்சியுடன் ஐக்கியமாகி இருக்க, வாயிற் திண்ணையில் ஆண்களின் சீட்டுக் கச்சேரி களைகட்டியிருந்தது.
மங்கை நேராக கூடத்தை நோக்கி போக, அவளுக்காக தேவி அங்கே காத்திருக்க, “வாடீ” என்றபடி அவளுக்கு அருகில் போய் அமர்ந்தாள்.
வனா இருவருக்குமாக தேநீரை கொண்டுவந்து கொடுக்க, அவசரமாக மடக்கென்று தொண்டையில் கவிழ்த்துக்கொண்டாள் தேவி.
தேனீரை சுவைத்தபடியே, "ஹேய் லூசு, இப்ப என்ன அவசரம்னு நெருப்பு கோழி மாதிரி இப்படி பத்திக்க பத்திக்க முழுங்கற" என மங்கை அவளை கடிய, "அட நீ வேறக்கா, சும்மா ஒக்காந்து ஊதி ஊதி டீ குடிக்க இதுக்கு ஏது நேரம். இப்ப இது எம்மாம் பெரிய பிசி ஆசாமி தெரியுமாக்கா ஒனக்கு. நம்ம ஊர்ல யார் ஊட்டு கல்யாணன்னாலும் மேடம்தான் காஸ்ட்யூம் டிசைனர்" என கிண்டல் போல் என்றாலும் பெருமையாகவே சொல்ல,
"ஏய், கல்யாண பொண்ணு... உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டேன்னு தைரியமா? இருடீ உன்ன" என அவளை தேவியும் பதிலுக்கு கலாய்க்க, "பார்றா, இப்ப என்ன இல்லாதத சொல்லிட்டேன்னு என் மேல பாயரக்கா நீயி" என்றவள், சரி... சரி... நீ அக்காவுக்கு அளவு எடு, நாம்போய் நீ எனக்கு தெச்ச ஜாக்கட்ட எடுத்தாந்து காமிக்கறேன்" என்று வனா அங்கிருந்து அகல, "ம்ம்... பெரியாளு ஆயிட்டதேவி நீ! பொண்ணுங்க புருசனுக்கு சொக்கு பொடி போடுவாங்கன்னு ஒரு பேச்சுக்கு சொல்லுவாங்க... நீ என்னடான்னா புருசனோட ஆயாவுக்கெல்லாம் சொக்கு பொடி போட்டு வெச்சிருக்கங்காட்டியும்" என மங்கையும் தன் பங்கிற்கு அவளை வார, "என்ன மங்க, கெழுவி ஏதாச்சும் சொல்லிச்சா என்ன" எனக் கேட்டாள் தேவி தீவிர தொனியில்.
"இல்லயா பின்ன" என்றவள் காலையில் பூங்காவனம் சொன்னதையெல்லாம் அப்படியே சொல்ல, கண்களில் நீரே வந்துவிட்டது தேவிக்கு.
"என்னவோ போ, இப்பல்லாம் இந்த கெழவி வாயில விழுந்து எந்திரிக்காம, எனக்கு பொழுது போவ மாட்டேங்குது தெரியுமா" என்றாள் இலகுவாகவே.
அதற்குள் வனா, அவளுடைய திருமண புடவைக்கு பொருத்தமாக அட்டகாசமான ஆரி வேலைப்பாடுடன் கூட தேவி தைத்து கொடுத்த ரவிக்கையை கொண்டுவந்து காண்பிக்க, அதன் நேர்த்தியான அழகை கண்டு அசந்தே போனாள் மங்கை.
"ஆஸம் தேவி, ரியலி யு மேட் எ ஒண்டர்ஃபுல் ஜாப்" என தன்னை மறந்து சொல்ல, "ஏய் மங்க, என்னா இது, இங்கிலீஷ் காரி கணக்கா சும்மா தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசற" என கத்தியேவிட்டாள் தேவி.
"ஏய்... இதுக்கு போய் இப்படி கத்தி தொலைப்பியா? என்னவோ ஏதோன்னு பயப்பட மாட்டாங்க? ரொம்ப நாளா வெள்ள காரங்க கூடவே பேசிட்டு இருக்கேன் இல்ல அந்த பழக்கத்துல வந்துடுச்சு, கம்முனு வுடு" என அவளை அடக்க, அதன் பின் பேச்சு அவளது கணவன் பிள்ளைகள் எனப் போக, அடுத்த கட்டமாக புதுப்பெண்ணான வனாவை கேலி பேசுவதில் இறங்க, ஒரு கட்டத்தில் பெண்களுக்குள்ளான அந்தரங்க பேச்சாக அது மாறிப்போனது.
வேண்டாம் என தடுத்த மங்கையின் பேச்சை காதில் வாங்காமல் ரவிக்கை தைக்க அவளுக்கு அளவு வேறு எடுக்கத் தொடங்கினாள் தேவி.
கை பாட்டிற்கு அளவுகளை குறிக்க, அவர்களது கடந்த கால நினைவலைகள் மங்கையையும் சற்று உற்சாகமூட்டியிருக்க, பெண்கள் மூவரும் வாய் விட்டு சிரித்தபடி இருக்க, நிமிர்ந்து நேரே பார்த்த தேவியின் சிரிப்பு பட்டென நிற்க, அவளது வேலையும் தடைப்பட ஒரு உந்துதலில் திரும்பி பின் பக்கம் பார்த்தாள் நிலமங்கை.
ஒரு கை மேலே சட்டத்தை பிடித்திருக்க தூணில் சாய்ந்து, அவர்களது அந்தரங்கப் பேச்சையெல்லாம் கேட்டுவிட்டான் என்கிற படி உதடு மடக்கி சிரிப்பை அடக்கியவண்ணம் அங்கே நின்றுகொண்டிருந்தான் தாமோதரன்.
அவனது கண்களில் கசிந்த உணர்வில் கட்டுண்டு உடல் முழுவதும் கூச்சம் பரவியது நிலமங்கைக்கு.