9. காட்டாற்று வெள்ளம்
நிதரிசனத்தில்…
வெதுவெதுப்பான சூரிய ஒளி உடலைத் தீண்டி ஒரு இதத்தைக் கொடுக்க, பொழுது புலர்ந்துவிட்டது என்பது மட்டும் மூளையில் உரைத்தது. ஆனாலும் கூட சுகமான உறக்கத்தைக் களைந்து விழித்தெழ மனமும் உடலும் ஒத்துழைக்கவில்லை நிலமங்கைக்கு.
கனவின் தாக்கத்தில், அதுவரை செவிகளில் ரீங்காரமிசைத்துக் கொண்டிருந்த பூச்சிகளின் ஒலியும், எங்கோ தூரத்தில் இருக்கும் சிங்கங்களின் கர்ஜனையும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இன்னதென்று பிரித்தறிய இயலாவண்ணம் கலவையான பேச்சுக் குரல்கள் கேட்கத் தொடங்க, செந்தமிழ், அதுவும் அவர்களது வட்டார வழக்கில் வந்து செவிகளைச் சூடாக்க, ‘இந்த இடத்துல மனுஷங்க குரல் எப்படி?!' எனக் கொஞ்சமாகப் பிரக்ஞை எட்டிப்பார்த்து குழப்பத்தைக் கொடுத்தது நிலமங்கைக்கு.
கைப்பேசியைத் தேடி கைகள் அனிச்சையாகப் படுக்கையைத் தடவ, வந்தவாசிப் பாயின் சொரசொரப்பு மூளையில் உரைத்தது. 'டென்ட்டுக்குள் எப்படி பாய்?' என்கிற அடுத்த கேள்வி முளைக்க, "அப்பா, வம்பு பண்ணாதப்பா, இந்த மாத்தரைய போட்டுக்க, இல்லன்னா கால் நரம்பெல்லாம் இழுக்குதுன்னு தூக்கம் வராம அவஸ்த படுவ" என வனமலர் தந்தையைக் கண்டிப்பது தெளிவாகச் செவிகளைத் தீண்ட, தான் இருப்பது இருளடர்ந்த ஏதோ ஒரு கானகத்துக்குள் இல்லை, தன் சொந்த வீட்டில் என்கிற அளவுக்குச் சூழ்நிலை பிடிபட்டது. ஆனாலும் விழிகளைத் திறக்கவே இயலவில்லை.
நள்ளிரவு வரை அவளைப் பிணைக் கைதி போல பிடித்து வைத்திருந்த தாமோதரனின் நினைவு வேறு வந்து தொலைக்க, முணுமுணுவென மனதிற்குள் எரிச்சல் பரவியது.
அதற்குள், மகளுடன் மல்லுக்கட்ட முடியாமல் வேலுமணி மாத்திரைகளைப் விழுங்கி முடித்திருக்க, அவளுக்கு அருகில் வந்தமர்ந்த வனா அவளது கையில் மென்மையாகத் தட்டி, "அக்கா, அக்கா" என்றழைக்க, உறக்கம் அகலாமலேயே எழுந்து அமர்ந்தவள், தலையைக் குலுக்கி, அழுந்த கண்களை மூடி, விரல்களால் கசக்கி சில பல முயற்சிகளுக்குப் பின் விழிகளைத் திறந்தாள்.
அவளுடைய நிலை உணர்ந்து சங்கடமாகிப்போய், "சாரிக்கா, அம்மாதான் எழுப்ப சொல்லிச்சு. இன்னைக்குப் பேக்கடையானுக்குப் பொங்கல் வெக்க போறாங்க... இப்பவே மணி பத்தாகுது. இப்ப எழுந்து குளிச்சு ரெடி ஆனயின்னாத்தான் சாமி கும்புட்டு நேரத்துக்குச் சோறு துன்ன முடியும்" என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.
பல் துலக்காமல் ஒரு வார்த்தை கூட பேசமாட்டாள் மங்கை. ஆனாலும் அவளது சங்கடம் உணர்ந்து, "பரவாயில்ல வனா, இதுல என்ன இருக்கு?" என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்.
திருமணத்திற்காக வந்து தங்கியிருக்கும் அவளுடைய மூன்று ஒன்றுவிட்ட அத்தைகள், ஒரு பெரியம்மா, இரண்டு சித்திகள் எல்லோரும் காய்கறிகள் நறுக்குவது, மசாலா அரைப்பது என ஒன்று கூடி வேலை செய்தவண்ணம் இருக்க, மதிய விருந்து தயாரிப்பில் வீடே தடபுடல் பட்டுக்கொண்டிருந்தது.
மகேஸ்வரி சமையலறையில் அடுப்பைப் பிடித்துக்கொண்டு பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க, ஆண்களெல்லாம் வாயிற் திண்ணையில் அமர்ந்து வம்பளத்துக் கொண்டிருந்தனர். நாலைந்து பொடிசுகள் வேறு இங்கேயும் அங்கேயும் ஓடி வீட்டையே இரண்டாக்க, அனைத்தையும் ஒரு பார்வை பார்த்தவாறு, இவளைக் கவனித்து அவர்கள் கேள்வி கணைகளைத் தொடுக்கும் முன், அவசராவசரமாகப் புழக்கடை நோக்கிச் சென்றாள்.
அங்கேயிருந்த வேப்பமரத்தின் அடியில் மூன்று செங்கற்களைச் சுத்தம் செய்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக்கொண்டிருந்தார் பூங்காவனத்தம்மாள். மூப்பு காரணமாக அவரது செவித்திறன் குறைந்துபோயிருக்க, அவள் அங்கே வந்த சந்தடி கூட உணராமல் அவர் வேலையில் மும்முரமாக இருக்க, நேராகப் போய் கிணற்றடி பிறையிலிருந்த பற்பொடியை எடுத்து பல் துலக்கி முகம் கழுவியவள், அந்த மூதாட்டியை நெருங்கி வந்து, பின்னாலிருந்து அவரை அணைத்தாள்.
முதலில் ஒரு நொடி திடுக்கிட்டாலும் அவளை உணர்ந்தவர், முகத்தில் ஒரு போலியான கடுமையைப் படரவிட்டு, உடலை வளைத்து அவளை உதறியபடி தன் வேலையைத் தொடர, "ஏய் கிழவி, இந்த மெதப்புதான வேணான்றது. இந்தப் பொண்ணு இவ்வளவு வருஷம் கழிச்சு வந்திருக்குதே, அதுவும் ஆசையா வந்து கட்டிக்குதே, என்ன ஏதுன்னு விசாரிப்போம்னு தோனுதா உனக்கு" எனக் குழைந்தாள்.
"போடி சொத்த வாயாடி, அப்புடியே வந்துட்டா நீட்டி மொழகிட்டு, கட்டிக்க வேண்டியவன கெடப்புல போட்டுபுட்டுக் கிழவிய தூக்கி மடியில வெச்சிக்கறாளாம்" என அவர் நொடிக்க, அவர் எங்கே வருகிறார் என்பது புரிந்து அவளது உடல் இறுகியது.
அவளது நீண்ட மௌனத்தில் திகைத்துத் திரும்பி அவளது முகத்தைப் பார்த்ததுமே அந்த கிழவியின் வீராப்பெல்லாம் போன இடம் தெரியாமல் போய்விட, "என்ன மங்க இது? இப்படி எளச்சு போய் கிடக்கற? குலதெய்வத்துக்கு வேண்டுதல் வெச்சு மொட்ட போட்டுட்டியா? எம்மா நீளமா இருக்கும் உன் தலமயிறு?" என அடிவயிற்றிலிருந்து ஆதங்கப்பட்டார்.
முந்தைய தினம் அவள் உடுத்திருந்த அதே புடவையிலிருக்க, நல்லவேளையாக உடை பற்றிய கேள்வியெதையும் அவர் எழுப்பவில்லை.
"போதும் விடு கிழவி, நான் நல்லாத்தான் இருக்கேன், நீ எப்படி இருக்க? உன் பேரன் பொண்டாட்டி உன்னை எப்படி பார்த்துக்குது? வேளாவேளைக்கு சோறாக்கிப் போடுதா, இல்ல சோம்பேறி மாதிரி உக்காந்துட்டு ஒன்ன வேல வாங்குதா? அத சொல்லு மொதல்ல!" என எள்ளல் தொனியில் கேட்டு அவரது வாயைப் பிடுங்கினாள்.
மூக்கால் அழுது புலம்பப்போகிறார் என்ற அவளது எதிர்பார்ப்புக்கு மாறாக, "எனக்கென்ன கொற மங்க! என்ன தங்கமா தாங்குது நம்ம தேவி பொண்ணு. அத மாதிரி ஒரு பொண்ணு கெடைக்க, எம்பேரன் செல்வந்தான் குடுத்து வெச்சிருக்கணும்! அப்புடி பொறுப்பில்லாம ஊரை மேஞ்சிட்டு இருந்தவன இப்ப எப்படி மாத்தி வெச்சிருக்குது தெரியுமா?" என அவர் தேவியின் புகழ் பாட, அப்படியே வாய் பிளந்தாள் மங்கை.
முதலிலெல்லாம் அவர்கள் இருவருக்கும் கொஞ்சம் கூட ஒத்துப்போகாது. இவர் கிழக்கே நின்றால் அவள் மேற்கே நிற்பாள். பேசினாலே இருவருக்கும் அது வார்த்தைப் போராகத்தான் இருக்கும்!
"என்ன கிழவி, மெய்யாலுமா சொல்ற!" என அவள் அதிசயிக்க, அவருக்குப் பழைய நினைவுகளில் ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது.
"உங்கிட்ட நான் பொய்யா புளுவப் போறேன்! மெய்யாலுந்தான் சொல்றன் மங்க, இந்த செல்வம் பயல பொடவ முந்தானில முடிஞ்சு வெச்சிருக்குதாங்காட்டியும். வூட்டு வேல, கழனி வேல எதுலயும் கொற வெக்கறதில்ல. தங்கங்கணக்கா ரெண்டு புள்ளைங்கள பெத்து, பதூசா வளக்குது. இம்மா வேலைக்கும் நடுவுல, தினுசு தினுசா இரவிக்கையெல்லாம் வேற தெக்குது! அஆங்... இந்த வனா பொண்ணுக்குக் கூட கல்யாண சேலைக்குத் தோதா ஜிகுஜிகுன்னு பூவேல செஞ்சு இரவிக்க தெச்சிருக்குது பாரு! இன்னைக்கெல்லாம் பார்த்துகினே கிடக்கலாம்" எனப் பெருமையடித்துக் கொண்டார்.
"போதும் கிழவி, உன் பேரன் பொண்டாட்டி பெருமையைக் கொஞ்சம் நிறுத்திக்கோ" என நொடித்தாலும், அவளுக்குமே அவ்வளவு பெருமையாக இருந்தது தோழியை எண்ணி. அதுவும் பூங்காவனத்தம்மாள் வாயால் பாராட்டு வாங்குவதென்பதெல்லாம் அவ்வளவு சுலபமா என்ன?
“ஒனக்கு வேற ஏதோ ஜாக்கட் தெக்கணும்னு சொல்லிடு இருந்துச்சு. அளவு எடுக்க இன்னைக்கு வந்தாலும் வரும்" என்று அவர் தொடர, "எனக்கா? எனக்கு என்ன ஜாக்கெட்டு இப்ப?" எனக் கேட்டாள் புதிராக.
"உந்தங்கச்சி கல்யாணத்துக்கு தாமு ஒனக்கு பொடவ தினுசு தினுசா எடுத்து வெச்சிருக்குதில்ல, அதுக்குதான்" என்றவர், "சரி... சரி... பேசிக்கினே நிக்காத! எனக்கும் வேல கெடுது பாரு... சட்டுன்னு போய், சுருக்க முழிவிட்டு வா! இங்கப் பேக்கடையானுக்குப் பொங்கல் வெச்சிட்டு, நடு வூட்டுல பொடவ படைக்கணும்" என அவளை விரட்ட, அங்கேயே ஓரமாகக் கொடியில் தொங்கிய வனாவின் நைட்டியையும் ஒரு துண்டையும் எடுத்துக்கொண்டு கிணற்றுக்கு அருகிலிருந்த குளியலறைக்குள் போய் புகுந்துகொண்டாள்.
உள்ளேயே அண்டாவில் தயாராக இருந்த சுடுநீரை வளாவி அலுப்புத் தீர குளித்து முடித்து வெளியில் வர, அவளுடைய சித்தி விறகடுப்பைப் பற்ற வைத்து பொங்கல் வைத்திருந்தாள். பூஜைக்காகத் தயார் செய்யப்படிருந்த செங்கல்களுக்குப் பூ வைத்து விளக்கை ஏற்றிக்கொண்டிருந்தாள் வனா.
வெல்லமும் ஏலக்காயுமாக அந்தச் சர்க்கரைப் பொங்கல் கமகமக்க, அதில் நெய்யை ஊற்றிக் கிளறி இறகினாள் மகேஸ்வரி.
"வனா, உள்ள போயி தாத்தாவையும் தம்பியையும் மட்டும் கூப்புடு. மத்தவங்கல்லாம் படையல் போட்டுப் பூவாடைக்காரி கும்புட்டா போதும்" என மகளைப் பனிக்க, உள்ளே சென்றவள் இருவருடனும் திரும்ப வந்தாள்.
அதற்குள் தானும் உள்ளே சென்று, வேறு சுடிதார் அணிந்து, நெற்றியில் பொட்டு வைத்து திரும்ப வந்தாள் நிலமங்கை.
தயாராக இருந்த பொங்கலைப் புழக்கடை முனிக்குப் படைத்து, கற்பூரம் காண்பித்து அந்தப் பூஜையை முடித்தார் பூங்காவனத்தம்மா.
அதன் பின் பொங்கல் வைத்த அடுப்பில் மீதமிருந்த பசு விரட்டி சாம்பலை எடுத்து உதிர்த்து அந்தத் திருநீற்றைப் பிள்ளகைள் மூவரின் நெற்றியிலும் தீற்றியவர், எம்புள்ளைங்கல்லாம் எந்தக் காத்து கருப்பும் அண்டாம, நோய் நொடி இல்லமா நல்லபடியா இருக்கனும் முனீஸ்வரா" என வாயார வாழ்த்தி, "இந்தா சந்தானம், நீ பூசிட்டு, அப்படியே உன் மருமகபிள்ளைகும் பூசி வுடு. சீக்கிரமே அவன் எழுந்து நடமாடட்டும்" என்றார் அக்கறை ததும்ப.
கடைசியாக மகேஸ்வரியின் நெற்றியில் தீற்றியவர், "நல்ல படியா உன் பொண்ணு கல்யாணத்த முடி" என்றபடி, பொங்கல் பானையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்ல, மற்றவரும் உள்ளே வந்தனர்.
"சரி... மகேசு, என் ஜோலி முடிஞ்சுது, நான் பொறப்படுறேன்" என்று கிளம்ப, "இரு பெரிம்மா! இம்மா நேரமா பட்ட பட்டினியா கிடந்து பொங்கல் வெச்சிருக்க. ஒரு டீ தண்ணியாவது குடிச்சிட்டுப் போ!" என அடுபடிக்குள் சென்றாள் மகேஸ்வரி.
ஆயாசத்துடன் பூங்காவனம் அங்கிருந்த தூணில் சாய்ந்து அமர்ந்தார். அவரைப் பார்த்துவிட்டு வேலுவின் பெரியம்மா வந்து அவருக்கு அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுக்க, தேநீரும் வந்து சேர அப்படியே வம்பளக்கத் தொடங்கினர்.
அவர் தேநீரை அருந்தி முடிக்கவும், “காணிக்க பெரிம்மா, மறுத்து பேசாம வாங்கிக்க” என்றவாறு ஒரு தட்டில் தாம்பூலம், இரண்டு நூறு ரூபாய் தாள் என அதில் வைத்து அவரிடம் நீட்டினாள் மகேஸ்வரி.
"சரி, இன்னைக்குப் பொழுதுக்கு வர லட்சுமிய ஏன் வேணாம்னு சொல்லணும், குடு" என்றபடி அதை எடுத்து, தன் சுருக்குப் பைக்குள் திணித்தபடி அங்கிருந்து அகன்றார் பூங்காவனம்.
அதன் பின் வடை, பாயசத்துடன் சமையல் செய்து, எல்லோருமாகக் கூடி நின்று வழிபட்டு வீட்டின் நடு கூடத்தில் புடவை வைத்துப் பூவாடைகாரிக்குப் படையல் போட்டனர்.
எல்லாம் முடிந்து ஒரு வழியாக எல்லோரும் உண்டு முடிக்க, மதியம் இரண்டாகிப் போனது.
முகம் நோக்க நேர்ந்தால் ஒரு புன்னகை, ஓரிரு வார்த்தையில் பேச்சு என, ஓரளவுக்கு மேல் தேவையற்ற சர்ச்சைப் பேச்சுக்களை யாரும் மங்கையிடம் வைத்துக்கொள்ளவில்லை. அவளுக்கு அது சற்று வியப்பாக இருந்தாலும் நிம்மதியாகவே இருந்தது. அதற்கு காரணம் தாமோதரன்தான் என்பதை அவள் உணரவில்லை. அவனைத் தாண்டி அதிக உரிமை எடுத்துக்கொண்டு அவளை நெருங்கும் துணிவு யாருக்கும் இல்லை என்பதை அவள் அறியவே இல்லை!
தொடர் பயணங்கள், இடமாற்றம், கால நேர மாறுபாடு, போதாதகுறைக்கு தாமோதரன் திருவிளையாடல் எனக் கடந்த சில நாட்களாகவே அவள் ஆழ்ந்த உறக்கத்தைத் தொலைத்திருக்க, அதற்கு மேல் தாக்குப்பிடிக்க இயலாமல், சாப்பிட்ட கையுடன் அவளது அப்பாவின் அறைக்குள் போய், பாய் விரித்து படுத்தவள், சட்டென உறங்கியும் போனாள்.
"அக்கா, எந்திரிக்கா... விளக்கு வெக்கற நேரமாச்சு... தேவிக்கா வேற வந்து உனக்காக காத்திருக்கு" என காலை நடந்தது போலவே மறுபடியும் வனா அவளை எழுப்ப, விழித்துப் பார்த்தால் லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது. காலை இருந்த களைப்பெல்லாம் சற்று நீங்கியிருக்க, உடனே போய் முகம் கழுவி வந்தாள்.
இரவுக்கு மொத்தமாக ஒரு உப்புமாவைக் கிளறி வைத்துவிட்டு, களைப்புடன் பெண்டிரெல்லாம், கூடத்து அறையிலுள்ள தொலைக்காட்சியுடன் ஐக்கியமாகி இருக்க, வாயிற் திண்ணையில் ஆண்களின் சீட்டுக் கச்சேரி களைகட்டியிருந்தது.
மங்கை நேராகக் கூடத்தை நோக்கிப் போக, அவளுக்காக தேவி அங்கே காத்திருக்க, “வாடீ” என்றபடி அவளுக்கு அருகில் போய் அமர்ந்தாள்.
வனா இருவருக்குமாகத் தேநீரைக் கொண்டு வந்து கொடுக்க, அவசரமாக மடக்கென்று தொண்டையில் கவிழ்த்துக்கொண்டாள் தேவி.
தேனீரைச் சுவைத்தபடியே, "ஹேய் லூசு, இப்ப என்ன அவசரம்னு நெருப்பு கோழி மாதிரி இப்படி பத்திக்க பத்திக்க முழுங்கற" என மங்கை அவளைக் கடிந்தாள்.
"அட நீ வேறக்கா, சும்மா ஒக்காந்து ஊதி ஊதி டீ குடிக்க இதுக்கு ஏது நேரம். இப்ப இது எம்மாம் பெரிய பிசி ஆசாமி தெரியுமாக்கா ஒனக்கு. நம்ம ஊர்ல யார் ஊட்டு கல்யாணன்னாலும் மேடம்தான் காஸ்ட்யூம் டிசைனர், பியூட்டிசியன் எல்லாம்" எனக் கிண்டல் போல் என்றாலும் பெருமையாகவே சொன்னாள் வனா.
"ஏய், கல்யாணப் பொண்ணு... உன்னை ஒண்ணும் சொல்ல மாட்டேன்னு தைரியமா? இருடீ ஒன்ன!" என அவளை தேவியும் பதிலுக்குக் கலாய்க்க,
"பார்றா, இப்ப என்ன இல்லாதத சொல்லிட்டேன்னு என் மேல பாயரக்கா நீயி" என்றவள், சரி... சரி... நீ அக்காவுக்கு அளவு எடு, நாம்போய் நீ எனக்கு தெச்ச ஜாக்கட்ட எடுத்தாந்து காமிக்கறேன்" என்று வனா அங்கிருந்து அகன்றாள்.
"ம்ம்... பெரியாளு ஆயிட்ட தேவி நீ! பொண்ணுங்க புருசனுக்குச் சொக்குப் பொடி போடுவாங்கன்னு ஒரு பேச்சுக்குச் சொல்லுவாங்க... நீ என்னடான்னா புருசனோட ஆயாவுக்கெல்லாம் சொக்குப்பொடி போட்டு வெச்சிருக்கங்காட்டியும்" என மங்கையும் தன் பங்கிற்கு அவளை வார, "என்ன மங்க, கெழவி ஏதாச்சும் சொல்லிச்சா என்ன?" எனக் கேட்டாள் தேவி தீவிர தொனியில்.
"இல்லயா பின்ன?" என்றவள் காலையில் பூங்காவனம் சொன்னதையெல்லாம் அப்படியே சொல்ல, கண்களில் நீரே வந்துவிட்டது தேவிக்கு.
"என்னவோ போ, இப்பல்லாம் இந்தக் கெழவி வாயில விழுந்து எந்திரிக்காம, எனக்குப் பொழுது போவ மாட்டேங்குது தெரியுமா?" என்றாள் இலகுவாகவே.
அதற்குள் வனா, அவளுடைய திருமணப் புடவைக்குப் பொருத்தமாக, அட்டகாசமான ஆரி வேலைப்படுடன் தேவி தைத்துக் கொடுத்த இரவிக்கையைக் கொண்டுவந்து காண்பிக்க, அதன் நேர்த்தியான அழகைக் கண்டு அசந்தே போனாள் மங்கை.
"ஆஸம் தேவி, ரியலி யு மேட் எ ஒண்டர்ஃபுல் ஜாப்" எனத் தன்னை மறந்து சொல்ல, "ஏய் மங்க, என்னா இது, இங்கிலீஷ் காரி கணக்கா சும்மா தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசற" எனக் கத்தியேவிட்டாள் தேவி.
"ஏய்... இதுக்குப் போய் இப்படி கத்தித் தொலைப்பியா? என்னவோ ஏதோன்னு பயப்பட மாட்டாங்க? ரொம்ப நாளா வெள்ளகாரங்க கூடவே பேசிட்டு இருக்கேன் இல்ல அந்தப் பழக்கத்துல வந்துடுச்சு, கம்முனு வுடு" என அவளை அடக்க, அதன் பின் பேச்சு அவளது கணவன் பிள்ளைகள் எனப் போக, அடுத்தக் கட்டமாகப் புதுப்பெண்ணான வனாவைக் கேலி பேசுவதில் இறங்க, ஒரு கட்டத்தில் பெண்களுக்குள்ளான அந்தரங்கப் பேச்சாக அது மாறிப்போனது.
வேண்டாம் எனத் தடுத்த மங்கையின் பேச்சை காதில் வாங்காமல் இரவிக்கை தைக்க அவளுக்கு அளவு வேறு எடுக்கத் தொடங்கினாள் தேவி.
கைபாட்டிற்கு அளவுகளைக் குறிக்க, அவர்களது கடந்த கால நினைவலைகள் மங்கையையும் சற்று உற்சாகமூட்டியிருக்க, பெண்கள் மூவரும் வாய் விட்டுச் சிரித்தபடி இருக்க, நிமிர்ந்து நேரே பார்த்த தேவியின் சிரிப்பு பட்டென நின்றது. கூடவே அவளது வேலையும் தடைப்பட ஒரு உந்துதலில் திரும்பி பின் பக்கம் பார்த்தாள் நிலமங்கை.
ஒரு கை மேலே சட்டத்தைப் பிடித்திருக்க தூணில் சாய்ந்து, அவர்களது அந்தரங்கப் பேச்சையெல்லாம் கேட்டுவிட்டான் என்கிற படி உதடு மடக்கி சிரிப்பை அடக்கியவண்ணம் அங்கே நின்றுகொண்டிருந்தான் தாமோதரன்.
அவனது கண்களில் கசிந்த உணர்வில் கட்டுண்டு உடல் முழுவதும் கூச்சம் பரவியது நிலமங்கைக்கு.
கல்யாண கனவுகளுடன் சேர்த்து பகடிப் பேச்சின் குதூகலத்தில் தேன் குடித்த நரியின் கிறக்கத்தில் இருந்ததாலோ என்னவோ, தாமோதரனைப் பார்த்ததும் தேவியைப் போல தயங்கியெல்லாம் நிற்கவில்லை வனா. நொடி கூட தாமதிக்காமல், "தாமுத்தான், மத்தவங்க பேசறத சத்தமில்லாம ஒட்டு கேட்டுட்டு நிக்கறவங்க, அடுத்த ஜென்மத்துல பல்லியா பொறந்து செவுத்துல ஒட்டிட்டே அலைவாங்களாம்" எனத் துடுக்காகச் சொல்லிவிட, நிலமங்கையின் நிலையோ இன்னும் சங்கடமாகிப்போக, சத்தமில்லா சிரிப்பில் குலுங்கினாள் தேவி.
'மங்கையோட தங்கையா இருந்துட்டு இவ இந்தப் பேச்சு கூட பேசலன்னாதான் அதிசயம்!' என அவளை ஒரு கைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவன், "ஓய் ஒழக்கு, யாரப் பார்த்து ஒட்டுக் கேக்கறேன்னு சொன்ன, நடு கூடத்துல ஒக்காந்து நீங்க பேசற பேச்சு, மைக் செட் இல்லாமையே எங்க வூட்டு பேக்கட வரைக்கும் கேக்குதாங்காட்டியும், போற வரவங்கல்லாம் காதைப் பொத்திட்டு போறாங்க! அதான் உங்கள தடுத்து நிறுத்த இங்க ஓடியாந்தேன்" என அவளைப் பதிலுக்கு வாரினான்.
"இந்தக் கதையெல்லாம் என் கிட்ட உடாத அத்தான். காலைல இருந்து உன் பொண்டாட்டிய பாக்காம உன் தலையே வெடிச்சி போயிருக்கும், அத நேரடியா சொல்ல முடியாம வேற சாக்குபோக்கு சொல்லிட்டு இங்க ஓடியாந்திருக்க" என அவள் விடாமல் வாயாட, தன்னை நேரடியாக இழுக்கவும் ஒரு மாதிரியாக ஆகிப்போனது மங்கைக்கு.
தேவி வேறு சத்தமாகவே சிரித்து வைக்க, பட்டென தங்கையின் முதுகில் ஒரு அடி போட்டவள், "கல்யாணம் ஆகி வேற வூட்டுக்குப் போகப் போறவ, யார் என்னன்னு பார்த்து பேசவேணாம். வாய அடக்கு வனா" என்றாள் காட்டமாக.
"ஆவ்" என எட்ட முடியாமல் எட்டி தன் முதுகைத் தேய்த்தபடி, "பாரு ஆத்தான் உம்பொண்டாட்டிய, கல்யாண பொண்ணுன்னு கூட பாக்காம என்ன அடி அடிக்குது" என மூக்கால் அழுதபடி வனா அதற்கும் அவனிடமே பஞ்சாயத்துக்குப் போக, 'இவனிடம் இப்படியெல்லாம் கூட பேசுவாளா இவள்' என அதிர்ந்து மங்கை தேவியின் முகத்தை ஏறிட்டாள்.
"இதுங்க ரெண்டும் இப்படித்தான் மங்க, கண்டுக்காத! தாமுண்ணன் இதுக்கு ஃபுல் சப்போர்ட்டு. இல்லாம போனா அசலூர் காரன லவ் பண்றேன்னு வூட்டுல வந்து தெகிரியமா சொல்லியிருக்குமா? இல்ல உங்க தாத்தாவுந்தான் அதுக்கு சுளுவா ஒத்துக்கினிருக்குமா?" என்றாள் கிசுகிசுப்பாக.
'என்னாது, வனாவோடது லவ் மேரேஜா?' என உள்ளுக்குள் வியந்தவள், அதற்கு மேல் அங்கே இருக்க தயங்கி, விசுக்கென்று எழுந்து அங்கிருந்து செல்ல எத்தனிக்க, அதுவும் அவன் அங்கே நிற்பதால் மற்றொரு தூணின் பக்கமாக அவள் ஒதுங்கி நடக்க, வேகமாக வந்து வழி மறித்தவன், "தேவி, எம்பொண்டாட்டிக்கு எடுக்க வேண்டிய அளவெல்லாம் எடுத்து முடிச்சிட்டியா?" எனக்கேட்டான் பார்வையை மங்கையின் முகத்தில் பதித்தபடி.
"ஆங், ஆயிடுச்சு அண்ணே" என அவள் பதில் கொடுக்க, "அவசரத்துல தெக்கறேன் பேர்வழியேன்னு போனதும் வந்ததுமா தெச்சு வெச்சிட போற. அளவெல்லாம் கச்சிதமா இருக்கனும் ஆமாம், அத விட முக்கியம், நாளைக்கு காலைல எல்லாம் ரெடியா இருக்கணும்" எனக் கிண்டலாகவே சொன்னவன், அவளது முகம் போன போக்கை இரசித்தபடி, "உங்கூட முக்கியமா பேசணும், மங்க. எங்கூட நம்ம வூட்டுக்கு வா" என்றான் குரலைத் தழைத்து.
அதைக் கண்டுகொள்ளாத பாவனையில் தூணுக்கும் சுவருக்கும் நடுவிலிருந்த சிறு இடைவெளியில் புகுந்து இலாவகமாக அவனைக் கடந்து செல்ல அவள் எத்தனிக்கவும், "தோ பாரு மங்க, நீ இப்படி சும்மா சும்மா ஓடிப் புடிச்சு விளையாடிகினு இருந்தயின்னா எனக்கு எந்த கவலையும் இல்ல. மெய்யாலுமே இதை எனக்கு சாதகமா மாத்திப்பேன் புரிஞ்சிக்க" என்று கிசுகிசுத்தான்.
புரியாத பாவனையில் அவள் அவனைப் பார்க்கவும், "ஒன்ன அப்படியே அலேக்கா தூக்கி ஆட்டுக்குட்டி கணக்கா தோள்ள போட்டுகினு போயினே இருப்பேன், எவனும் என்னைத் தடுக்கவும் மாட்டான் சொல்லிட்டேன்" என அவன் கொடுத்த எச்சரிச்சையில் கடுப்புடன் அவனை ஏறிட்டவள், "ரொம்பவே ஓவரா போற தாமு" என்று சீறினாள்.
"ஹேய், நான் ஒன்ன ஒண்ணுமே செய்யலியேடி, இதுக்கேவா? எங்க என் மொகத்த பார்த்து சொல்லு, நானா ஓவரா போறேன்? ஏழு வருசமா ஒன்ன விட்டுத் தள்ளியே நிக்கறேன். தோ, நீ இப்படி கைக்கெட்டுற தூரத்துல நிக்கும் போது கூட ஒன்ன ஒண்ணும் செய்ய முடியாம, மிரட்டுற மாதிரி கெஞ்சிட்டு இருக்கேன், என்ன பார்த்து ஓவரா போறேன்னு சொல்ற" என, அதையும் கொஞ்சல் மொழியிலேயே அவன் சொல்ல, அதில் பொதிந்திருந்த உண்மை மனதை குழப்ப உள்ளுக்குள்ளே இறுகிப் போயிருந்த ஏதோ ஒன்று லேசாக இளகத் தொடங்கியது. எங்கே முழுவதுமாக கரைந்துபோய்விடுவோமோ என்ற பயம் அவளை மொத்தமாகப் பீடித்துக்கொள்ள, அப்படியே உறைந்து நின்றாள்.
அவளது நிலையைச் சாதகமாக்கி அவளது கைப்பற்றி அவளை தன் இழுப்புக்குச் செலுத்தியபடி தங்கள் வீடு நோக்கிச் சென்றான் தாமு.
அவனுடைய பிடியிலிருந்து விடுவித்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருந்தவளின் கரத்தை விட்டுவிடாமல் இரங்கூன் மல்லிகை கொடிவளைலில் நுழைந்தான்.
அதில் பூத்துக் குலுங்கிய மலர்களைப் பார்த்ததும் அவளுக்கு அனைத்தும் மறந்துபோக, அலைகடலென அமைதியின்றி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அவளது மனத்துக்குள்ளேயும் ஒரு இதம் பரவியது. அதனுடன் சேர்ந்து வீட்டிற்குள்ளிருந்து கமழ்ந்து வந்த ஜாதிப்பூவின் அழுத்தமான மணம் அவளைக் கட்டி இழுக்க, "கைய வுடு தாமு, எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. வூட்டுக்குள்ள போயி அத்த, ஆயா, எல்லாரையும் பார்த்துட்டு வரேன்" என்றாள் சலிப்புடன்.
"ரொம்பதான் பண்றடீ" என அவளது விரல்களில் ஒரு அழுத்தம் கொடுத்து மெதுவாக அவளை விடுவித்தபடி, "ரொம்ப நேரம் பேசிட்டு நிக்காம, சீக்கிரமா மேல வந்து சேரு" என்றவன், எங்கே விட்டால் அவளுடைய வீட்டுக்கே திரும்பப் போய்விடுவாளோ என்கிற சந்தேகத்தில், "நீ அங்க வரல, நான் சொன்னத நிச்சயமா செய்வேன்" என அழுத்தமாக எச்சரித்துவிட்டே மேலே சென்றான்.
இவ்வளவு வருடங்கள் கடந்த பின்பும் துளி அளவு கூட மாறாத அவனுடைய இந்தப் பிடிவாதம் அவளை வியக்க வைத்தது, சலிக்க வைத்தது, தடுமாற வைத்து பயம் கொள்ளவும் வைத்தது.
அவள் இங்கே வந்த பிறகான இரண்டே இரண்டு தினங்கள், அவளுக்கென்னவோ இரண்டு யுகங்களை கடத்தியது போன்ற பிரமையைக் கொடுத்தது.
எப்படியும் ஆட்டமாக ஆடுவான் என்று தெரிந்தேதான் இங்கே வந்தாள். ஆனால் அவனது இந்த ஆட்டம் அவளையே ஆட்டம் காண வைக்கும் என அவள் கனவிலும் எண்ணவில்லை. அவனுடைய ஆதிக்கத்துக்குப் பணியவே கூடாது என்கிற அவளது வைராக்கியத்தைப் பொடிப் பொடி ஆக்கி, தான் நினைத்ததைச் சாதிக்கிறானே என ஆயாசமாக இருந்தது.
இங்கே உடனடியாக அவள் ஆற்ற வேண்டிய மிக முக்கிய கடமையைக் காரணமாக்கி, காலம் அவளை இங்கே கட்டி இழுத்து வந்திருக்கிறது. இல்லாமல் போனால் அவள் இங்கே வந்திருக்கவே மாட்டாள். உண்மையில் வனாவின் கல்யாணம் ஒரு சாக்குதான், அவள் வராமலேயே போனாலும் அது நடந்தேறும். அவளுடைய நம்பிக்கை இப்படியாக இருக்க, அவளே அறியாத ஒன்று, அவளது கடமை அவளை இப்படிக் கட்டி இழுத்து வராமல் போயிருந்தாலும் கூட தாமோதரன் இங்கே அவளை இழுத்து வந்திருப்பான். உடலாலும் உயிராலும் இரண்டாக இருந்தாலும் உணர்வுகளால் இவளுடன் இரண்டற கலந்து கிடப்பவனாயிற்றே அவன்!
சிந்தனையில் கட்டுண்டு, தொலையியக்கிக் கொண்டு செலுத்தப்பட்டவள் போல ஜாதிப்பூவின் மணத்தைத் தொடர்ந்தபடி அவனுடைய வீட்டிற்குள் நுழைந்தாள். தாழ்வாரத்தில் உட்கார்ந்தபடி கூடைப் பூவைத் தரையில் கொட்டி அதனைத் தொடுத்துக் கொண்டிருந்தாள் புஷ்பா.
இவளைக் கண்டதும், "வாடியம்மா வா... வா... மதியமே ஒன்ன சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு உங்கூட்டுக்கு வந்தேன். அசந்து தூங்கிட்டு இருந்தியா, அப்படியே திரும்ப வந்துட்டேன்" என்றாள் எதார்த்தமாக.
மூச்சை இழுத்து மலரின் மணத்தை நுரையீரல் முழுவதும் நிரப்பிக்கொண்டவள், "என்னா வாசன, பின்னால ஏத்தி விட்டிருக்கியே, அந்தக் கொடில பூத்ததா...த்த இம்மாம் பூவும்" என்றபடி அவருக்கு அருகில் உட்கார்ந்தவள், தொடுக்க வாகாகப் பூவை அடுக்கி அவளிடம் நீட்டினாள்.
"என்ன இருந்து என்ன பிரயோசனம்? ஆம்பள கணக்கா இப்படி கிராப்பு வெச்சிட்டு வந்து நிக்கற? ஒரு நாலு பூவையாச்சும் ஸ்லைடு பின் வெச்சு சொருவி உன் தலைல வெக்க முடியுமா சொல்லு?" என அலுத்துக்கொண்டாள் புஷ்பா.
"ஐயோ அத்த, இது கிராப் இல்ல, பிக்ஸி கட்" எனக் கிண்டலாக மொழிந்தாள்.
"என்ன பேரா இருந்தா என்ன, ஏதோ ஒரு கன்றாவி. என் மருமகளுக்கு இப்ப தல நெறைய பூ வெச்சு அழகு பார்க்க முடியல வுடு" என்றாள் கடுப்புடன்.
"ஏன் அத்த, மாமாக்கு விஷ ஜுரம் வந்து முடியாம போனப்ப, சாமிக்கு நேந்துகிட்டு நீ மொட்ட போடல. இப்ப பாரு, பழைய மாதிரி முடி வளந்துடுச்சு இல்ல? இதுவும் அப்படிதான்" என பதில் கொடுக்க, "அப்ப இனிமேல் இப்படி முடி வெட்டிக்க மாட்ட இல்ல மங்க" எனக் கேட்டாள் புஷ்பா பாவமாக.
புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்தவள், "ஆயாவ எங்க காணும்?" எனப் பேச்சை மாற்ற,
"மாமாவோட ஒட்டிக்கினு கழனி வரைக்கும் போயிருக்குது. அங்க போய் எல்லார் வாயையும் புடுங்கலன்னா அதுக்கு தூக்கம் வராது" என்று சொல்லி சிரித்த புஷ்பா, "டீ குடிக்கறியா மங்க" என்று கேட்டாள்.
"இல்லத்த, இப்பதான் குடிச்சேன்" என்றவளுக்கு தாமு சொன்னது நினைவில் வரவும், "அத்த, தாமு என்ன வர சொல்லிச்சு" என்றாள் தயக்கத்துடன்.
மனதிற்குள் ஏதேதோ கற்பனைகள் ஊற்றெடுக்க, உண்டான மகிழ்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தக்கூட பயந்து, அதை மறைக்க முயன்று, "சரி... சரி... நீ போ" என அவசரமாக அவளுக்கு அனுமதி கொடுத்தவளின் முகத்தில் தோன்றிய பாவனையைக் கொஞ்சம் கூட விளங்கிக்கொள்ள இயலவில்லை மங்கையால்.
நிதானமாக நடந்து மாடி வரை வந்தவளுக்கு, உள்ளே நுழைய அவ்வளவு தயக்கமாக இருந்தது. வேறு வழி இல்லாமல் உள்ளே நுழைந்தவள், அவன் தனது அறைக்குள் இருப்பதை உணர்ந்து தயக்கத்துடன் கதவைத் தட்டினாள்.
படாரெனக் கதவைத் திறந்த தாமு, "இந்த மாதிரி தள்ளி எட்ட நிக்கற வேலையெல்லாம் வெச்சுட்டேன்னு வை, மவளே கொன்றுவேன்" என்று, நகர்ந்து அவளுக்கு வழி விட்டான். பட்டுப் புடவைகள், நகைகள் என அங்கே இருந்த கிங்-சைஸ் கட்டில் முழுவதிலும் கடைப்பரப்பி வைத்திருந்தான்.
அவஸ்தையுடன் அவள் அவற்றையெல்லாம் பார்த்து வைக்க, "இதையெல்லாம் வனா கல்யாணத்துக்காக நான் உனக்கு வாங்கியிருக்கேன்" என்றவன், "இது நலங்குக்கு, இது பெண் அழைப்புக்கு, இது முகூர்த்தத்துக்கு, இது ரிசப்ஷனுக்கு. அப்பறம் புடவைக்கு மேட்சிங் ஜூவல்லரி" என பட்டியலிட்டவன், அவற்றுக்கு நடுவில் தேடி ஒரு நகைப் பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டியபடி, "நீயே போட்டுட்டாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல, ஆனா இதை நீ கழுத்துல போட்டுட்டே ஆகணும் மங்க, இல்லன்னா நிறைய கேள்வி வரும். உன்னை யாராவது ஏதாவது சொல்லிட்டாங்கன்னா அத என்னால தாங்க முடியாது, அப்பறம் பெரிய இரசாபாசமா போயிரும், புரிஞ்சிக்க" என அவன் சொன்ன விதத்தில் அவளுக்குத் தொண்டை வறண்டது.
கைகள் நடுங்க அவள் அந்தப் பெட்டியைத் திறக்க, முந்தைய தினம், அவள் பார்த்த தாலி, முகப்பு வைத்த தங்க சரட்டுடன் கோர்க்கப்பட்டு, அவள் அணிய தயாராக இருந்தது.
ஏழு வருடங்களுக்கு முன் இருந்த நிலமங்கையாக அவள் இருந்திருந்தால் கூட, இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது? காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருப்பவளுக்கு கல்லணையாக இந்த தாமோதரன் தடைப் போட்டு நிற்பது போல் தேங்கி நின்றாள்.
ஆனால் அவன் அவளுக்குத் தடைப் போட்டு நிற்கும் அணை அல்ல, அவளது தேடல் முற்று பெரும் பெருங்கடல் என்பதை நிலமங்கை உணரும் காலமும் விரைவிலேயே கைகூடலாம்!
"நம்ம ஊர்ல, பெரிய கவுர போட்டுக் கட்டி மாட்ட மேய உடுவாங்க இல்ல, அங்க இருக்கற புல்ல எல்லாம் ஆச தீர மேயும், தன்னோட இஷ்டத்துக்குச் சுத்தி சுத்தி வரும், ஆனா அந்தக் கயிறோட நீளத்துக்கு மட்டும்தான் அதோட சுதந்திரம். அந்த மாடு மாதிரி என்னையும் நினைச்சிட்டியா தாமு" என்றாள் மனம் வெதும்பி.
மனதைக் குத்திக் கிழித்தது தாமோதரனுக்கு. "சீ... என்ன பேச்சுடீ பேசற நீ? ஒன்ன நான் கண்ட்ரோல் பண்ற மாதிரித்தான் ஒனக்கு தோனுதா? நீ இந்த உலகத்துல எந்த மூலைல இருந்தாலும், என்னோட உரிமையா இருக்கணும்னுதான நான் நினைக்கறேன்? என் மனச புரிஞ்சுக்கவே ட்ரை பண்ண மாட்டியா நீ?" எனக் கலங்கினான்.
"இந்த எண்ணமே அபத்தமா தெரியல உனக்கு? அந்தளவுக்கு உனக்கு என் மேல அன்பு இருந்தா, நீ இப்படி உரிமை கொண்டாட மாட்ட தாமு! கல்யாணம், இதோ இந்த தாலி எல்லமே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான அந்தரங்க உறவுக்கான அங்கீகாரம் மட்டும்தான? அதுவும் இந்தச் சமுதாயத்துக்காக மட்டும்தான? இப்படி ஒரு லீகல் ரிலேஷன்ஷிப் குள்ள நீ என்ன கொண்டு வந்ததும் அதுக்காகத்தான?" என்று அவள் நேரடியாகக் கேட்க, சற்றுத் தடுமாறித்தான் போனான்.
"இது உலக நியதிதான, அதுல என்ன தப்பிருக்கு மங்க? ஆனா எனக்கு அது மட்டும் காரணமில்ல! ஒன்ன தவிர வேற எந்த ஒரு பெண்ணும் என் வாழ்க்கைக்குள்ள வர முடியாது! என்னால வேற எவளையும் தொட முடியாது! இதை நான் சொல்லி உனக்கு புரிய வைக்க முடியாது! அதை உணர நீ தாமோதரனா மாறனும்" என்றான் கர்வமாக.
ஆயாசமாக இருந்தது அவளுக்கு.
"புத்தி தெரியாத சின்ன புள்ளைல இருந்து நாம ஒண்ணாதான இருந்தோம், திடீர்னு எப்படி தாமு உனக்கு என்ன பத்தி இப்புடி ஒரு எண்ணம் வந்துச்சு? அதுக்காக நீ எதையெதையோ செஞ்சு, நடக்க கூடாததெல்லாம் நடந்து முடிஞ்சுது. வெறுத்து போய் தான நான் இங்க எல்லாரையும் விட்டு விலகிப் போனேன்? இப்ப மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறியே?" எனக் கேட்டாள் மனம் பொறுக்காமல்.
"திடீர்னு எப்படி தாமு உனக்கு என்ன பத்தி இப்படி ஒரு எண்ணம் வந்துச்சுன்னு என்ன கேக்கறியே? இதே கேள்விய ஒரு தடவ நீயே உங்கிட்ட கேட்டுக்க மங்க? அதோட, நீ விலகிப் போனதா நினைச்சா, அதுக்கு நானா பொறுப்பு! நீ மனசு மாற நான் உனக்கு கொடுத்த ஒரு பிரேக் இந்த ஏழு வருஷம். அதுக்கு உன் படிப்பும் காரணமா அமைஞ்சு போச்சு, அவ்வளவுதான். மத்தபடி, நீ என்ன உணரலையே தவிர, நான் இங்க நிலமங்கையாதான் வாழ்ந்துட்டு இருக்கேன், சீக்கிரமே நீ தாமோதரன் இடத்துல இருந்து உண்மையைப் புரிஞ்சுப்ப" என்றான் அழுத்தம் திருத்தமாக.
அவள் பேச்சற்று அவனைப் பார்க்க, "எனக்கு மங்கையோட மனசு மட்டும் தனியாவோ இல்ல உடம்பு மட்டும் தனியாவோ தேவையே இல்ல! ரெண்டும் இணைஞ்சு என்னைப் புரிஞ்சு அவ வரணும் அவ்வளவுதான்" என்றபடி அவளைத் தன்னுடன் சேர்த்தணைத்தவன் அவளது கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்தான். அவனது கண்களில் இருந்து கசிந்த ஈரம், அவனது நெஞ்சின் ஈரமாக அவளை அசையவிடாமல் கட்டிப்போட்டது.
Enda ponnumga etho pesi sirichitu irukumga adai poi ketutu kalla sirippu sirikira kd da n