Nilamangai - 8
Updated: Feb 25
நிலமங்கை – 8
நினைவுகளில்…
வருடா வருடம் தாமுவின் கழனியிலும் மங்கை பூஜை செய்து ஏர் உழுது அந்த வருடத்தின் உழவை தொடங்கிவைப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் அவனுடைய அம்மாவே பூஜை செய்து முடிக்க, ஜனார்த்தனன் ஏர் ஓட்ட, அவள் அந்த நிலத்திற்குள் காலை கூட வைக்கவில்லை. அது ஒரு மாதிரி மனதைச் சுட, அங்கே நிற்கவே மனமில்லாமல் வீட்டுக்குக் கிளம்பினான் தாமு.
அந்த நேரம் பார்த்து பவ்யா அழைக்க, அவளுடன் பேசக் கொஞ்சம் கூட ஆர்வமில்லாமல் போக, அந்த அழைப்பை அவன் ஏற்கவில்லை. விடாமல் அவளும் மீண்டும் மீண்டும் அழைத்தபடியே இருக்க, அவளது அந்த பிடிவாதம் ஒரு வித எரிச்சலைக் கொடுக்க கைபேசியை சைலண்டில் போட்டுவிட்டான். ஆனாலும் விட்டு விட்டு அழைப்பு வருவதை அவன் உணராமல் இல்லை.
அடுத்து என்ன என்பதாகக் குழம்பிய மனதுடன் அவன் வரப்பின் மீது நடக்க, வேகமாக வந்து மூச்சு வாங்க அவன் எதிரில் வழி மறித்து நின்றாள் மங்கை.
சட்டென ஓரடி பின்னால் நகர்ந்தவன், "ஹேய், அறிவில்ல உனக்கு? கொஞ்சம் இருந்தா மோதி வாய்க்கால விழுந்திருப்போம்" என அவன் எரிந்து விழ, அவளுடைய சுபாவத்திற்கு மாறாக சட்டென அவளது கண்கள் கலங்கிப் போனது.
"எவ்ளோ நாள் கழிச்சு பார்க்கிறோம், ஏன் தாமு இப்படி எரிஞ்சு விழற" என வருத்தத்துடன் கேட்டுவிட்டு, "உனக்கு கல்யாணம் முடிவாயிருக்கு இல்ல, அதுக்கு வாழ்த்து சொல்லிட்டு, அப்படியே இதை உனக்கு கொடுக்கலாம்னு தான் வந்தேன். இனிமே உங்கூட்டுக்கு போகக்கூடாதுன்னு தாத்தா கண்டிஷனா சொல்லிடுச்சு தெரியுமா? அதான் இங்க வெச்சாவது சொல்லிடலாம்னு ஓடயாந்தேன்" என்றபடி ஒரு குவளையை நீட்டினாள் மங்கை.
பொன்னேர் பூட்டும்போது, அந்த பூஜையில் தேங்காய் உடைத்து வைத்து, அரிசியும் வெல்லமும் கலந்து வாழை இலையில் படையல் போடுவார்கள். பின் அந்த தேங்காயைத் துண்டங்களாக நறுக்கி வெல்ல அரிசியுடன் கலந்து அங்கே வந்திருக்கும் அனைவருடனும் பகிர்ந்து சாப்பிடுவார்கள். அதைத்தான் அந்த குவளையில் நிரப்பி அவனுக்காக எடுத்துவந்திருந்தாள்.
வெல்லத்துடன் ஊறிய அரிசியும் தேங்காய் துண்டங்களும் சேர்ந்து அந்த கலவை அவ்வளவு ருசியாக இருக்கும். அவனுக்கு அது மிகவும் பிடித்தமான ஒன்றும் கூட. அதை அறிந்தே வைத்திருப்பவள் என்பதால், பொன்னேர் பூட்டும் சமயங்களில் அவன் அங்கே இல்லாமல் போனாலும் கூட, அவனுக்காக எடுத்து வைத்து அவன் அங்கே வந்தவுடன் கொண்டுவந்து கொடுப்பாள் இம்மங்கை.
அந்தக் கரிசனத்தை எண்ணியபடியே, அனிச்சையாக அதை வாங்கி, கொஞ்சமாக உள்ளங்கையில் சரித்து வாயில் போட்டு மென்றபடி, "வர வர கிழவன் ரொம்ப ஓவராதான் போகுது! ஏன், எங்கூட்டுக்கு நீ வந்தா இப்பஎன்ன கொறஞ்சு போயிடுமாம்?" என்று அபத்தம் எனத் தெரிந்தே அப்படி ஒரு கேள்வியை அவன் கேட்டு வைக்க, "எங்கூட்டு கிழவனை மட்டும் கொற சொல்லு, உங்க கிழவி அப்படியே அப்பாவி பாரு? நல்ல நாள்லயே நான் அங்க வந்தா அது ஜாடையா எதாவது சுருக்குனு சொல்லும். புஷ்பா அத்தைக்காக நானும் கண்டும் காணாம போயிட்டு இருந்தேன். உங்கூட்டு பொல்லாத கிழவி எங்க தாத்தாவாண்ட என்ன சொல்லிச்சோ யாரு கண்டா? அது எனக்கு முட்டுக்கட்ட போடுது. நான் வூட்டுக்குதான் வரதில்லையே, வழியில தெருவுல பார்த்தாக்க உங்காத்தா கூட என்ன ஏதுன்னு ஒரு வார்த்த கேக்காம, பார்த்தும் பார்க்காத மாதிரி மூஞ்சை திருப்பிக்கினு போகுது. புத்தி தெரிஞ்ச நாளா உங்க கழனில நான்தான பொன்னேர் பூட்டி பூஜ போட்டுட்டு இருக்கேன்? இன்னைக்கு அதுக்கு கூட புஷ்பா அத்த என்ன கூப்புடல! தெரியாமத்தான் கேக்கறேன் தாமு, நான் உன் குடுபத்துக்கு என்ன கெடுதல் செஞ்சுப்புட்டேன்னு எல்லாரும் இப்படி என்ன ஓரங்கட்றீங்க?" எனத் தொண்டை அடைக்க அவள் கேள்வி கேட்க, விக்கித்து போனான் தாமு.
'காலில் அணிந்திருக்கும் கெட்டி கொலுசின் ஓசை கலீர் கலீர் என எதிரொலிக்க, உரிமையுடன் அவனது வீட்டிற்குள் வலம் வந்தவள், இனி அங்கே வரவே மாட்டாளா?' என மனதை துளைத்த கேள்வி அவனை அதிர வைத்து இனிக்க இனிக்க வாயில் போட்டு மென்ற பொருள் பாதியில் கசந்து, அவசரமாக உள்ளே போய் அவனது நெஞ்சை அடைக்க, திணறிப்போனான்.
"ஐயோ தாமு! என்ன ஆச்சு" என பதறியவள், வேகமாகக் குனிந்து கால்வாயில் ஓடிய நீரை கை நிறைய அள்ளி அவனது வாயில் புகற்றினாள்.
சில்லென்ற தண்ணீர் நெஞ்சுக்குழிக்குள் இதமாக இறங்கி அவனை ஆசுவாசப்படுத்தியது. அவன் அணிந்திருந்த சட்டை நனைந்து அவனது நெஞ்சில் ஈரம் படர்ந்திருக்க, அவனுக்கு ஒன்றென்றால் அவளுக்கு ஏற்படும் பதற்றமும், அவன் மீதான அவளுடைய அக்கறையும், மல்லிகையும், சீயக்காயும் மஞ்சளும் கலந்து அவள் மீதிருந்து வந்த கலவையான மணமும் அவனைக் கிறுகிறுக்க வைக்க, அவனது மூளை சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டிருந்தது.
அப்படியே அவளது கைகளைப் பற்றி தன்னருகில் இழுத்தவன், "பேசாம என்னை கட்டிக்கோ மங்க, அதுக்கு மேல நீ எங்கிட்ட வரத யாரு தடுக்கறாங்கன்னு நானும் பார்க்கறேன்" என அவனது மனதை உடைத்துக்கொண்டு வார்த்தைகள் கொட்டிவிட, விதிர் விதிர்த்துப் போனாள் நிலமங்கை.
இவன் இப்படி ஒரு வார்த்தை சொல்வான் என் கனவிலும் கூட எண்ணவில்லையே அவள்! கணநேரம் கூட அவளை விட்டு அகலாமல் அவளைக் காவல் காக்கும் அவளது தாத்தாவின் கண்களில் மண்ணை தூவி விட்டு அவனைக் காணத் தான் இப்படி ஓடிவந்ததே தவறோ என்றெண்ணினாள்! இந்தக் காட்சியை மட்டும் யாராவது பார்த்துவிட்டுப் போய் அவரிடமோ அல்லது தாமுவின் பாட்டியிடமோ வத்தி வைத்தால் அவ்வளவுதான்.
யாருமே அவனை ஒரு வார்த்தைகூட இகழ்ந்து பேச மாட்டார்கள். 'பெண்ணென்ற அடக்கம் கொஞ்சமாவது இருக்கிறதா? அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி இருக்கும் நேரத்தில், மேல் விழுந்து போய் அவனுடன் உனக்கென்ன பேச்சு?' என்கிற ரீதியில் ஒட்டுமொத்தமாக அவளை மட்டுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவார்கள்.
நான்கையும் நினைத்து பயத்தில் மருண்டவளின் விழிகள் நாலாபுறமும் சுழன்றன. நல்லவேளையாக அவரவர் வேலைகளில்அவரவர் மும்முரமாக இருக்க, யாரும் அவர்களிருவரையும் கவனிக்கவில்லை என்பது சிறு நிம்மதியைக் கொடுத்தது.
வேறெந்த சிந்தனையும் அற்று புதிராக அவனைப் பார்த்தபடி தன் கைகளை உருவிக்கொண்டு பின்னோக்கி எட்டு வைத்தவள் அப்படியே திரும்பி ஓட்டமும் நடையுமாக அவனது பார்வையிலிருந்து கரைந்து மறைந்தாள்.
அவள் மறைந்த நொடியே அவனது அறிவு விழித்துக் கொண்டது. உணர்ச்சிவசப்பட்டுச் சிந்திக்காமல் பேசியிருந்தாலும் தன் செயலை எண்ணி கொஞ்சம் கூட வருந்தவில்லை, சொல்லப்போனால் தன் மனச்சிறையை உடைத்துக்கொண்டு விட