top of page

Nilamangai - 6 (FB)

Updated: Sep 27

நிலமங்கை - 6


நினைவுகளில்...


அடுத்த நாள் வழக்கம்போல அலுவலகம் வந்திருந்தான் தாமோதரன்.


முந்தைய இரவு 'சாரிங்க... ராங் நம்பர்' என்று சொல்லி நிலமங்கை அழைப்பைத் துண்டித்த பிறகு மறுபடியும் அவளை அழைக்க அவனுடைய தன்மானம் இடங்கொடுக்கவில்லை. ஆனால் அதனால் உண்டான ஏமாற்றத்தால் மனதிற்குள் ஒரு சிறு சினம் மட்டும் ஆறாமல் கனன்றுகொண்டே இருந்தது.


போதாத குறைக்கு அந்த மமதி வேறு மனதிற்குள் தோன்றி அவனைப் பார்த்து எள்ளலாகப் சிரித்துவைக்க, உடனே கைப்பேசியை எடுத்து ஒரு எண்ணை அழுத்தினான்.


"ஹாய் டியூட்... குட் மார்னிங்" என எதிர்முனையில் உற்சாகமாக ஒலித்த, அவனுக்குக் கீழே வேலை செய்யும் சந்தோஷின் குரலில், "குட் மார்னிங்!" என சம்பிரதாயமாக மறுமொழிந்து, "நெக்ஸ்ட் யூ.எஸ் ஆன்சைட் லிஸ்ட்ல உன் டீம்ல யாரெல்லாம் இருகாங்க?" என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.


என்னவோ ஏதோ என பதற்றமடைந்தவனாக, "என்ன தாமோதர், எனிதிங் இம்பார்ட்டன்ட்?" என எதிர்முனையிலிருந்த சந்தோஷ் தயக்கத்துடன் இழுக்க, "சும்மா சொல்லேன்" என்றான் அவனுடைய மனநிலை புரிந்திருந்தும்.


தாமோதரனுக்கு மேலிடத்திலிருக்கும் செல்வாக்கு புரிந்தவன் என்பதால், மறுக்க இயலாமல் அவன் கேட்ட தகவலை சந்தோஷ் சொல்ல, அவன் எதிர்பார்த்தது போலவே அதில் மமதியின் பெயரும் இருக்க, "குட்... ஆனா அந்த மாமதியை மட்டும் இந்த லிஸ்ட்ல இருந்து தூக்கிடு" என்றான் தாமோதரன் வெகு சாதாரணமாக.


"ஆனா ஏன்... பேசிக் ரிக்கொயர்மென்ட்ஸ் எல்லாமே பக்கவா இருக்கே?" எனக் கேட்டுவிட்டு, "பாவம் தாமு அவங்க..." என சந்தோஷ் தன்னையும் அறியாமல் அந்த பெண்ணுக்குப் பரிந்து வர, "அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது. இந்த செட்ல வேணாம். கொஞ்சம் டென்சன் ஆகி, கெஞ்ச விட்டு அப்பறம் அடுத்த செட்ல அனுப்பிக்கலாம். இது உன்னால முடியலைன்னா சொல்லு நான் பார்த்துக்கறேன்" என தாமு விடாப்பிடியாகக் கிட்டத்தட்ட அவனை நிர்ப்பந்திக்கவும், வேறு வழி தெரியாமல் அதற்கு ஒப்புக்கொண்டு அந்த அழைப்பிலிருந்து விலகினான் சந்தோஷ்.


மனதை அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒரு பாரம் குறைந்தது போல் உணர்ந்தான் தாமோதரன்.


மனம் கொஞ்சம் இலகுவாகிவிடவே, அந்த வார இறுதியிலேயே ஊருக்கு சென்று நிலமங்கையை நேரில் பார்க்கவேண்டும், முடிந்தால் அவள், 'ராங் நம்பர்' என்று சொல்லி அழைப்பைத் துண்டித்ததற்கு அவளை ஒரு வழி செய்யவேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்டுக்கொண்டான்.


ஆனால் அடுத்து வந்த ஆறு மாத காலம் அவனால் ஊர் பக்கமே போகமுடியாதபடி, வேலை நிமித்தம் அவன் அமெரிக்கா சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உண்டாகிப்போனது தாமோதரனுக்கு.


***


அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின், மேலும் சில தினங்களுக்கு பிறகுதான் பொன்மருதத்திற்கே வந்தான் தாமோதரன். பின் மாலை நேரத்தில் வீடு திரும்பியவனை, "நீயி அமெரிக்காவுல இருந்து திரும்பி வந்து பத்து நாளுக்கு மேல ஆவுது. ஊரு பக்கம் வரணும்னு எண்ணமே வரலல்ல உனக்கு. இப்புடி அமெரிக்காவும் ஆப்பிரிக்காவுக்கு போயிதான் துட்டு சம்பாதிச்சி கொட்டணும்னு என்ன தலையெழுத்து நமக்கு.


ஒண்ணு ஊர் மேய போனா இன்னொன்னு கிடக்குன்னு தொடச்சு போட்டுட்டு போக உன் ஆயி அப்பன் என்ன மூணு நாலா பெத்து போட்டிருக்குதுங்க. நான்தான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒத்தையா பெத்து வெச்சேன்னா, இதுங்களும் சேர்ந்து ஓரியா பெத்து வெச்சிகினு கிடக்குதுங்க ம்கும்" என வந்ததும் வராததுமாக பிலுபிலுவென பிடித்துக்கொண்டார் அவனுடைய பாட்டி.


பெங்களூரிலிருந்து வாலாஜா வரை வரும் வரை கூட அவ்வளவு களைப்பு ஏற்படவில்லை அவனுக்கு. முந்தைய தினம் பொழிந்த மழையால் சேரும் சகதியும் குண்டும் குழியுமாக மாறிப்போயிருந்த சாலைகளால் அங்கிருந்து சில நிமிடங்களில் கடக்கவேண்டிய தூரத்தை முழுவதுமாக இரண்டு மணி செலவு செய்து வந்து சேர்ந்திருந்தான். போதாத குறைக்கு வழியை மறித்து நின்றிருந்த ஆட்டு மந்தைகள் வேறு.


அதில் உண்டான கடுப்புடன் உள்ளே நுழைந்தவனுக்கு பாட்டியின் இந்த பேச்சு நல்லவேளையாக சிரிப்பை வரவழைத்துவிட, கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவருக்கு அருகில் போய் நிதானமாக அமர்ந்தவன், "நீ கவலையே படாத ஆயா! உன்னோட அந்த கொறைய நான் போக்கறேன். பையனும் பொண்ணுமா ஒரு ஏழு எட்டு பெத்து போட்டா போதுமா உனக்கு? வருஷத்துக்கு ஒண்ணா வரிசையா ரிலீஸ் பண்ணி இந்த வூடு முழுக்க ஓட விடல நான் உன் பேரன் இல்ல" என அவன் சூளுரைத்த விதத்தில் வெட்கம் பிடுங்கியது கிழவிக்கு.


முகத்தை மூடிக்கொண்டு சிரித்தவரின் கோபம் மலையேறி இருக்க, "உனக்கு பொருத்தமா மூணு ஜாதகம் வந்துது. நீ ஊருல இருந்து வரத்துக்குள்ளாற ஒரு பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சி அது முழுவாமயே இருக்குது. இன்னொண்ணுக்கும் பேசி முடிச்சிட்டாங்களாங்காட்டியும். அஆங்" என நொடித்துக்கொண்டவர், "இன்னும் ஒரே ஒரு பொண்ணுதான் இப்ப தோதா இருக்குது. அடியேன்னு சொல்றதுக்கு ஆளக்காணுமாம், அதுக்குள்ளாற நீ இன்னாடான்னா ஏழெட்டு புள்ள வரைக்கும் போயிட்ட, ம்கும்..." என சலிப்புடன் முடித்தார் அவர்.


என்ன சொல்வதென்றே புரியவில்லை, இந்த ஆறேழு மாதங்களில் நிலமங்கை பற்றிய நினைப்பை எப்படி மனதிற்குள் அடைத்துவைத்தான் என்றே விளங்கவில்லை அவனுக்கு.


ஆர்க்டிக் குளிர் பிரதேசங்களில் வாழும் கரடி, வௌவால், அணில் போன்ற சிலவகை விலங்குகள், அங்கே குளிர்காலங்களில் நிகழும் பனி பொழிவிலிருந்தும் உணவு பற்றாக்குறையிலிருந்தும் தங்களை தற்காத்துக்கொண்டு உயிர் வாழ ஹைபர்னேஷன் எனப்படும் மாதக் கணக்கில் நீடிக்கும் நீளுரக்கதை கொள்ளும். அந்த சமயத்தில் அவற்றின் இதயத் துடுப்பு கூட மிக மெல்லியதாக இருக்கும். அப்பொழுது அவற்றுக்கு உணவின் தேவை கூட இருக்காது.


அப்படிப்பட்ட கடுங்குளிர்காலம் முடிந்து அவற்றின் வாழ்விடங்களில் உஷ்ண நிலை உயரும்போது ஏதோ ஒரு பொந்துக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் அந்த மிருகம் புற வெட்பநிலையை உணராது. ஆனால் அது விழித்துக்கொள்வதற்கான அலாரம் அதன் உணர்விலேயே கலந்திருக்கும். அதற்கான வேலையை அவற்றின் மூளையின் அடிப்பகுதியான ஹைபோதலாமசால் கட்டுப்படுத்தப்படும் ஒரு ரசாயனம் செய்துமுடிக்கும்.


அதைப்போலத்தான் சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய நொடியே நிலமங்கையின் நினைவும் அவனுக்குள் பீறிட்டு கிளம்பவே செய்தது. கூடவே கடைசியாக, அவள் 'ராங் நம்பர்' எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்த சம்பவமும்.


உடனே ஊருக்கு வந்து அவளை ஒரு கை பார்க்கவேண்டும் என உள்ளே இருந்து பொங்கிய வன்மம் அப்படியே அடங்கிப்போனது அவனை அழைத்துச் செல்ல காருடன் வந்த செல்வம் சொன்ன ஊர் கதை உலகத்து கதைகளால்.


உண்மையில் நேராக பொன்மருதம் வரும் எண்ணத்தில்தான் இருந்தான். அதனால்தான் காரை எடுத்துக்கொண்டு செல்வத்தை விமானநிலையத்திற்கே வரச்சொல்லியிருந்தான். ஆனால் அதுவே அவன் அதீதமாக எரிச்சல் அடையக் காரணமாகிப்போனது.


அவனைக் கண்ட நொடி உற்சாகம் பீறிட, "ண்ணா... எப்டிண்ணா இருக்க?" என தொடங்கி அவன் என்ன பதில் சொன்னான் என்பதைக் கூட காதில் வாங்காமல் அவன் ஊரில் இல்லாத ஆறு மாதங்களில் நடந்த அத்தனை விவகாரங்களையும் அவர்கள் ஊரில் குடியிருக்கும் ஒவ்வொரு தனிநபர் பற்றிய விவரங்கள் உட்பட ஆடு மாடு கன்று போட்டது வரை அனைத்து புள்ளிவிவரங்களையும் விலாவாரியாக அவன் விளக்கி முடிக்க, அனிச்சையாக அதில் மங்கையைப் பற்றிய தகவல்களும் வந்து இணைந்துகொண்டன.


"எப்படியோண்ணா... இந்த மங்க பொண்ணும் என் ஆளுமா சேர்ந்து படியோ படியோன்னு படிச்சு ப்ளஸ் டூ எக்ஸாம் எல்லாம் எழுதி முடிச்சிடுச்சுங்க. பார்க்கலாம் இந்த வருஷமாவது இந்த தேவியோட படிப்ப நிறுத்திட்டு அதோட அப்பன் கல்யாண பேச்சை எடுக்கறானான்னு" என அவன் இயல்பாக சொல்லப்போக, பேச்சு எதார்த்தமாகத் திரும்புவது போல் மங்கையின் பக்கம் திரும்ப, அவள் எந்த ஒரு போட்டி தேர்வுக்கும் தயாராகவேயில்லை குறைந்தபட்சம் அவள் அவற்றிற்காக விண்ணப்பிக்கக்கூட இல்லை எனத் தெரிந்தது.


அவன் அவ்வளவு தூரம் சொன்னதற்காகவாவது அவள் முயற்சி செய்வாள் என அவன் எண்ணிக்கொண்டிருக்க, வேளாண் பட்டப்படிப்பு என எப்படியோ தன் மனதில் நினைத்ததை நினைத்தபடி அவள் சாதித்துக்கொண்டாள் என்ற எண்ணமே அவ்வளவு ஒரு கசப்பைக் கொடுக்க ஊருக்கு வரக்கூட பிடிக்கவில்லை அவனுக்கு. சில நிமிடங்களிலேயே பெங்களூரு செல்ல ஒரு விமானம் தயார்நிலையில் இருக்க அவசர வேலை என்று செல்வத்திடம் சொல்லிவிட்டு அப்படியே கிளம்பிவிட்டான் தாமோதரன்.


கிட்டத்தட்ட பத்து தினங்கள் வேலை... வேலை... வேலை... இடையே இரண்டு தின கோவா பயணம் பார்ட்டி, மது, கேளிக்கைகள் எனத் தன்னை மூழ்கடித்துக்கொண்டவன், மனப் பயிற்சியால் மங்கை மீதான தன் எண்ணப்போக்கை கைகழுவிவிட்டதாக உறுதியான நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்ட பிறகுதான் பொன்மருதத்தின் எல்லைக்குள்ளேயே காலை வைத்தான்.


அதற்கேற்றாற்போல வரலட்சுமி இப்படி பேசவும், அந்த பெண்ணை போய் பார்த்தால்தான் என்ன என்ற எண்ணம் தோன்ற, "பொண்ணு எந்த ஊரு ஆயா?" எனக்கேட்டான் ஆர்வமுடன்.


அதை காதில்வாங்கியவராக அவனை முறைத்தபடியே புஷ்பா காஃபி கோப்பையை லொட்டென அவனுக்கு அருகில் வைத்துவிட்டு கழுத்தை வெட்டி நொடித்தவண்ணம் வாய்க்குள்ளேயே எதையோ முணுமுணுத்துக்கொண்டே அங்கிருந்து அகன்றார்.


"கடுப்ப பாத்தியா உன் ஆத்தாளுக்கு? அந்த மங்க பொண்ண மொண்டுக்கினு வரலன்னு அப்படியே கழுத்து முட்டும் கொற இவளுக்கு. ம்கூம்... பாரு கண்ணு, பொழுது விடிஞ்சி பொழுது போனா உங்க அப்பனாண்ட அப்படி ஒரு சண்டை பிடிக்குது இது" என குதர்க்கமாக மொழிந்தவர், 'ஐயோ! இந்த கெழவி ஏன் அவள இப்ப நடுவுல இழுக்குது?' என எரிச்சலுடன் அவன் அவரை பார்த்த பார்வையில், எப்பொழுதுமே இந்த பேச்சு அவனுக்கு ராசிக்காது என்பதாக, "சரி... சரி... அத வுடு" என அக்கறையின்றி சொல்லவிட்டு, "பொண்ணை பத்தி கேட்ட இல்ல. எல்லாம் நம்ம உத்திரமேரூர் காரங்கதான் தாமு. உன் தாத்தா வழியில தூரத்து சொந்தமும் கூட. ஆனா போன தலமொறையிலயே மெட்ராஸ்ல போய் குடியேறிட்டாங்க. பொண்ணு பேரு பவியாவோ திவியாவோ சொல்லிச்சு. உன்ன மாதிரியே நல்ல படிப்பெல்லாம் படிச்சிருக்குதாங்காட்டியும். மோட்ராசுலயே ஏதோ கம்பியூட்டர் கம்பனில வேலைக்கும் போறாப்பலயாம். பார்க்க, அரண்மனை படத்துல பேயா வருதே ஹீரோயினி ஆங்... அஞ்சிகா இல்ல அது கணக்கா கொழுக்கு மொழுக்குன்னு வெள்ள தோலோட இருக்குது" என வாயெல்லாம் பல்லாக சொல்லிக்கொண்டே போக, 'இப்படிப்பட்ட வெள்ளைத் தோல் பெண்ணெல்லாம் நமக்குக் கொஞ்சமாவது தோதாக வருமா?' என்ற கேள்வி எழுந்தாலும் அது தன் திருமண கொள்கைக்கு முரணாக இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே கொஞ்சம் ஜொள்ளும் வழியத்தான் செய்தது.


"நீ எப்ப ஆயா அந்த பொண்ண பார்த்த?" என்றான் தாமு வியப்பு மேலிட.


"போன தையில உன் தாத்தாவோட சின்னத்த பேத்தி கல்யாணத்துக்கு போயாந்தோம் இல்ல, அதுக்கு குடும்பத்தோட வந்திருந்தாங்க. பொண்ணோட அப்பனுக்கு உன்ன பத்தி முன்னமே தெரியும்போலிருக்கு. அப்படி இப்படி பேச்சு அடிப்படவும் அங்கேயே ஜாதகத்தை எடுத்து நீட்டிப்புட்டான். பொண்ணு கூட எவ்வளவு ஆசையா என்னாண்ட பேசிச்சு தெரியுமா" என அவர் அதிகம் சிலாகிக்க, "நீயி இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் என்ன சொல்லப்போறேன் ஆயா. அப்பா கைல சொல்லி பொண்ணு பார்க்க ஏற்பாடு செஞ்சிடு" என்றவன் தன் மாடி அறை நோக்கிப் போக, அழுகையில் அப்பொழுது மூக்கை சிந்த ஆரம்பித்தவர்தான், பெண் பார்க்கும் படலம் முடிந்து பரஸ்பரம் இருவருக்கும் பிடித்துப்போய் நிச்சயதாம்பூலத்திற்கு நாள் குறித்த பின்பும் கூட அதுதான் தொடர்ந்தது.


கணவர் மற்றும் மாமியாரின் வாய்க்கு பயந்து வீட்டுத் தலைவி என்கிற பொறுப்பில் பெண்பார்க்க போய் வர – நிச்சயதாம்பூலத்திற்கு என ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துகொண்டிருக்கிறாரே ஒழிய ஒரே மகனின் திருமணம் கொஞ்சம் கூட சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை புஷ்பாவுக்கு.


நிலமங்கையைத் தவிர வேறு யார் மருமகளாக வந்தாலும் அதை ஏற்கின்ற அளவுக்கு அவருடைய மனம் பக்குவப்படவில்லை என்பதே காரணம்.


முழு உரிமையுடன் கணவரிடம் தன் மறுப்பை பதிவு செய்யக்கூட இயலவில்லை என்றால் இந்த விஷயத்தில் துளி அளவு அணுகக்கூட இடமே கொடுக்கவில்லை அவருடைய அருமை மகன். கரும்பாறையில் போய் முட்டிக்கொள்வதுபோலத்தான் இருந்தது அவருக்கு.


சென்னையில் அவர்கள் வீட்டிற்கே போய் பெண்ணை நேரில் பார்க்கும் வரையிலும் கூட எந்த ஒரு தீர்மானத்திற்கும் வராதவன் அவளை நேரில் பார்த்து கூடவே சிலமிடங்கள் தனிமையில் பேசிய பிறகு அப்படியே தலை குப்புற விழுந்துவிட்டான் தாமு என்றால் அது மிகையில்லை. அவனுடைய பாட்டி சொன்னதை விட நேரில் இன்னும் அழகாக இருந்தாள் அந்த பெண் பவ்யா. அழகு என்றால் ஆளை அசர அடிக்கும் அப்படி ஒரு அழகு, காலத்திற்கேற்றாற்போல நவ நாகரிக தோற்றமும் அவள் பேசும் தோரணையும் அவனையும் மீறி அவளைப் பிடித்திருக்கிறது என அங்கேயே அவனைச் சொல்ல வைத்துவிட்டது.


சிந்திக்க சிறிதளவு அவகாசம் கொடுத்தாலும் எங்கே பேரன் மனம் மாறிவிடுவானோ என்கிற பயத்தில் வரலட்சுமி வேறு அவசரப்படுத்தவும் ஊருக்கு வந்ததும் வராததுமாக அவர்கள் குடும்ப புரோகிதரை சந்தித்து நிச்சய தாம்பூலத்துக்கு நாளையும் குறித்துவிட்டார் ஜனார்த்தனன்.


ஏனோ தெரியவில்லை அவன் அங்கே வந்த அந்த நான்கைந்து நாட்களில் ஒரு முறை கூட அவனுடைய வீட்டின் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை நிலமங்கை. அதனால் நேருக்கு நேர் அவளை எதிர்கொள்ளும் சங்கடம் ஏற்படாமலேயே போனது அவனுக்கு. விடுப்பு முடிந்து பெங்களூருக்கே திரும்பச் சென்றுவிட்டான் தாமு.


***


மறுபடியும் தாமோதரன் பொன்மருதம் வந்தபொழுது ஒரு வாரம் கடந்திருந்தது. அடுத்த வாரத்தில் நிச்சயதாம்பூல விழா நடக்கவிருக்க நீண்ட விடுப்பு எடுத்து வந்திருந்தான்.


அந்த ஒரு வாரமும் வேலை முடிந்து இருப்பிடத்திற்குத் திரும்பிய பிறகு ஒரு முறையேனும் பவ்யாவை அழைத்துப் பேசிவிடுவான். அவன் அழைக்கத் தாமதமானால் கூட அவளே அழைத்துவிடுவாள்.


பேச்சுக்கள் பெரும்பாலும் அவர்களுடைய வேலை அதில் இருக்கும் எதிர்கால வாய்ப்புகள், அமெரிக்கா, க்ரீன்-கார்ட் என்பதாகவே இருக்கும்.


சமையல் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளுவது, சாப்பாட்டில் விருப்பு வெறுப்பு பற்றி எதாவது அவன் கேள்வி கேட்டாலும் சாதுரியமாகப் பேச்சை மாற்றி அவள் அந்த பகுதியையே தவிர்ப்பதாகத் தோன்ற எரிச்சல் கூட மூளும் தாமோதரனுக்கு.


ஆனாலும், முயன்றால் தன் விருப்பத்துக்கு அவளை வளைக்க முடியாமலா போகப்போகிறது என்கிற அகந்தையும் சற்று அதிகமாகவே தலை தூக்க 'என்ன இருந்தாலும் பெண்தானே ஒரு கை பார்த்துக்கொள்ளலாம்' எனத் தன்னை தானே சமாதானப்படுத்திக்கொள்வான்.


இன்னும் இரண்டு தினங்களில் காஞ்சிபுரம் போய் நிச்சய புடவை வாங்குவதாக இருக்க, அந்த புடவை குறைந்தது ஐம்பதாயிரத்திலாவது இருக்க வேண்டும் அதுவும் தானே நேரில் வந்து தனக்குப் பிடித்ததாக பார்த்துத்தான் அதை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அங்கே அவள் பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்க, இங்கே வரலட்சுமி என்னடாவென்றால் திருமணத்திற்கு முன்பாக பெண்ணை இப்படி எல்லா விஷயத்திலும் தலையிட வைக்கக் கூடாது எனக் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். புஷ்பாவோ பட்டும் படாமல் ஏனோதானோவென்று இருக்க, இதையெல்லாம் வேறு பார்க்கவேண்டியதாக இருந்தது அவனுக்கு.


திருமணத்தை எண்ணி ஒரு இன்பப் பூரிப்பு ஏற்படுவதற்கு பதிலாக மனதோரம் சற்று சலித்துத்தான் போனது. ஒருவித திருப்தி இல்லாத மனநிலையில் சிக்கித்தவித்தான் அவன். அவனுடைய உயிரின் தேடலுக்கும் கைக்கெட்டிய எதார்த்தத்துக்கும் உள்ள இடைவெளி விண்ணுக்கும் மண்ணுக்குமானதாக இருக்கிறதே! அதனால்தானோ?


இத்துடன் நிற்காமல் எரிகிற நெருப்பில் எண்ணை வார்ப்பதாகவே அமைந்துபோனது தொடர்ந்து நடந்த சம்பவங்கள் எல்லாமே.


***


காலை வழக்கம்போல சீக்கிரமே கண்விழித்தவன் ட்ராக்ஸ் சூட் அணிந்து நடைப்பயிற்சிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான் தாமு.


அமெரிக்காவிலிருந்து வாங்கிவந்திருந்த நவீன ரக கேமராவை உபயோகிக்க ஏதுவாக முந்தைய இரவுதான் தயார் செய்திருந்தான். மறக்காமல் அதை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டவன் கீழே இறங்கி வர, வீடே பரபரப்பாக இருந்தது.


"என்ன ஆயா, உம் மருமக இங்கயும் அங்கேயும் ஓடிக்கினு இருக்குது. நிச்சதாம்பூலத்துக்குதான் இன்னும் ஒரு வாரம் இருக்குதே, இன்னைக்கு என்ன விசேஷம்" என அவன் கிழவியின் காதை கடிக்க, "உட்டா இன்னைக்கே அந்த பவியா பொண்ண இட்டாந்து குடும்பம் நடத்துவ போல" என விஷமமாக மொழிந்தவர், "என்ன கிழவி... முடியலையா உனக்கு' என அவன் கடுப்பாகவும், "பின்ன அசலூர்காரன் மாதிரி கேள்வி கேட்டா வேற எப்படி பதில் சொல்லுவாங்களாம்?" என நொடித்துக்கொண்டு, "கோட மழை பெய்ஞ்சுதில்ல... அதான் இன்னைக்கு நாள் நல்லா இருக்கவும் பொன்னேர் பூட்டப்போறாங்களாங்காட்டியும். அதுக்குதான் அவ தயார் செஞ்சிட்டு இருக்கா" என அவர் விளக்கம் கொடுத்தார்.


"சரி... சரி... ஆள வுடு. நான் கிளம்பறேன்" என அவள் வெளியே செல்ல எத்தனிக்கவும், "இந்தா தாமு, இந்த டீய குடிச்சிட்டு போ" என அவனைத் தடுத்த புஷ்பா, "அதிசயமா இன்னைக்கு ஊர்ல இருக்க. எப்படியும் பூஜ போட இன்னும் கொஞ்சம் நேரம் ஆவும். முடிஞ்சா அங்க வாயேன்" என அவர் வாஞ்சையுடன் சொல்ல, ஏனோ ஒரு பரிதாபம் வந்து ஒட்டிக்கொண்டது அவனுடைய மனதில். 'திருமண விஷயத்தில்தான் அவர் பேச்சை மதிக்கவில்லை, குறைந்தபட்சம் இதையாவது செய்வோம்' என அந்த நொடி அவன் எடுத்த முடிவு, உண்மையில் ஒரு விபரீத முடிவு. காலம் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் ஒரு முக்கிய நகர்வு.


***


விடிந்தும் விடியாத அந்த காலைப் பொழுதில் கூரை மேல் ஏறி நின்று கூவிக்கொண்டிருக்கும் சேவலையும், இந்த கோடிக்கும் அந்த கோடிக்கும் துள்ளிக்கொண்டு ஓடும் பிறந்து சில தினங்களே ஆன கன்றுக்குட்டியையும், கூட்டை விட்டு இறை தேடிக் கிளம்பும் புள்ளின கூட்டங்களையும், தன் கேமராவில் சிறைப்படுத்திக்கொண்டே நடந்தவன், அவர்கள் கழனியை அடைய, சந்தானத்தின் விளைநிலத்தில்தான் முதல் பூஜையைத் தொடங்கியிருந்தனர் அதுவும் நிலமங்கையின் கைகளால்.


ஒரு நீண்ட பிரிவிற்கு பிறகு மீண்டும் அங்கே அவளை பார்த்த நொடி அவனுடைய பகுத்தாராயும் அறிவு முற்றிலும் பணிநிறுத்தம் செய்துவிட இந்த உலகமே மறந்துபோனது தாமோதரனுக்கு.


முன்பு பிறை நிலவாக அவனுடைய பார்வைக்குத் தெரிந்தவள் ஒரு சில மாதங்களில் முழுமதியாக மாறியிருந்தாள்.


தேன் நிறத்தில் அடர் நீல சரிகை போட்ட பாவாடை, அடர் நீல ரவிக்கை அதே நிறத்தில் தாவணி அணிந்து அதன் முந்தானையை இழுத்து சொருகியிருந்தாள் நிலமங்கை.


ஈரக் கூந்தலைத் தளர்ச்சியாக பின்னலிட்டு மல்லிகை மலர்ச் சரத்தைச் சூடியிருந்தாள்.


தேங்காயை உடைத்து வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து அறுகம்புல்லால் அலங்கரித்து வைத்திருந்த மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்து, ஏர் கலப்பையில் பூட்டப்பட்டிருந்த காளைகளுக்குப் பொட்டு வைத்த அந்த மண்ணின் மங்கையிடம் மட்டுமே அவனுடைய ஜீவனின் தேடல் முற்றுப்பெறும் போலும்.


முத்து முத்தாக வியர்வை பூத்திருந்த அவளுடைய பிறை நெற்றியை வட்டமான பொட்டு அலங்கரிக்க, வில்லென வளைந்த புருவமும் கூர் நாசியும் கோடி கவிதைகள் படைக்கும் ஆற்றல் மிகுந்தவையாகத் தோன்றியது தாமோதரனுக்கு.


ஏனோ அவளுடைய மூக்கின் நுனியில் ஒரு மூக்குத்தி இல்லாமல் போனது நிலவின் களங்கமாக அவனுடைய மனதிற்குத் தோன்ற, அவளிடம் குறை என எதை எதையெல்லாம் நினைத்தானோ அவை அனைத்தும் மறந்தே போனது அவனுக்கு.


அதன் பின் அவனுடைய கையிலிருந்த கேமரா நிலமங்கையைத் தவிர வேறு எந்த கோணத்திலும் திரும்பவே இல்லை.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page