top of page

Nilamangai - 6

நிலமங்கை - 6


நினைவுகளில்...


அடுத்த நாள் வழக்கம்போல அலுவலகம் வந்திருந்தான் தாமோதரன்.


முந்தைய இரவு 'சாரிங்க... ராங் நம்பர்' என்று சொல்லி நிலமங்கை அழைப்பைத் துண்டித்த பிறகு மறுபடியும் அவளை அழைக்க அவனுடைய தன்மானம் இடங்கொடுக்கவில்லை. ஆனால் அதனால் உண்டான ஏமாற்றத்தால் மனதிற்குள் ஒரு சிறு சினம் மட்டும் ஆறாமல் கனன்றுகொண்டே இருந்தது.


போதாத குறைக்கு அந்த மமதி வேறு மனதிற்குள் தோன்றி அவனைப் பார்த்து எள்ளலாகப் சிரித்துவைக்க, உடனே கைப்பேசியை எடுத்து ஒரு எண்ணை அழுத்தினான்.


"ஹாய் டியூட்... குட் மார்னிங்" என எதிர்முனையில் உற்சாகமாக ஒலித்த, அவனுக்குக் கீழே வேலை செய்யும் சந்தோஷின் குரலில், "குட் மார்னிங்!" என சம்பிரதாயமாக மறுமொழிந்து, "நெக்ஸ்ட் யூ.எஸ் ஆன்சைட் லிஸ்ட்ல உன் டீம்ல யாரெல்லாம் இருகாங்க?" என நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.


என்னவோ ஏதோ என பதற்றமடைந்தவனாக, "என்ன தாமோதர், எனிதிங் இம்பார்ட்டன்ட்?" என எதிர்முனையிலிருந்த சந்தோஷ் தயக்கத்துடன் இழுக்க, "சும்மா சொல்லேன்" என்றான் அவனுடைய மனநிலை புரிந்திருந்தும்.


தாமோதரனுக்கு மேலிடத்திலிருக்கும் செல்வாக்கு புரிந்தவன் என்பதால், மறுக்க இயலாமல் அவன் கேட்ட தகவலை சந்தோஷ் சொல்ல, அவன் எதிர்பார்த்தது போலவே அதில் மமதியின் பெயரும் இருக்க, "குட்... ஆனா அந்த மாமதியை மட்டும் இந்த லிஸ்ட்ல இருந்து தூக்கிடு" என்றான் தாமோதரன் வெகு சாதாரணமாக.


"ஆனா ஏன்... பேசிக் ரிக்கொயர்மென்ட்ஸ் எல்லாமே பக்கவா இருக்கே?" எனக் கேட்டுவிட்டு, "பாவம் தாமு அவங்க..." என சந்தோஷ் தன்னையும் அறியாமல் அந்த பெண்ணுக்குப் பரிந்து வர, "அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது. இந்த செட்ல வேணாம். கொஞ்சம் டென்சன் ஆகி, கெஞ்ச விட்டு அப்பறம் அடுத்த செட்ல அனுப்பிக்கலாம். இது உன்னால முடியலைன்னா சொல்லு நான் பார்த்துக்கறேன்" என தாமு விடாப்பிடியாகக் கிட்டத்தட்ட அவனை நிர்ப்பந்திக்கவும், வேறு வழி தெரியாமல் அதற்கு ஒப்புக்கொண்டு அந்த அழைப்பிலிருந்து விலகினான் சந்தோஷ்.


மனதை அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒரு பாரம் குறைந்தது போல் உணர்ந்தான் தாமோதரன்.


மனம் கொஞ்சம் இலகுவாகிவிடவே, அந்த வார இறுதியிலேயே ஊருக்கு சென்று நிலமங்கையை நேரில் பார்க்கவேண்டும், முடிந்தால் அவள், 'ராங் நம்பர்' என்று சொல்லி அழைப்பைத் துண்டித்ததற்கு அவளை ஒரு வழி செய்யவேண்டும் என்று மனதிற்குள் திட்டமிட்டுக்கொண்டான்.


ஆனால் அடுத்து வந்த ஆறு மாத காலம் அவனால் ஊர் பக்கமே போகமுடியாதபடி, வேலை நிமித்தம் அவன் அமெரிக்கா சென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உண்டாகிப்போனது தாமோதரனுக்கு.


***


அமெரிக்காவிலிருந்து திரும்பிய பின், மேலும் சில தினங்களுக்கு பிறகுதான் பொன்மருதத்திற்கே வந்தான் தாமோதரன். பின் மாலை நேரத்தில் வீடு திரும்பியவனை, "நீயி அமெரிக்காவுல இருந்து திரும்பி வந்து பத்து நாளுக்கு மேல ஆவுது. ஊரு பக்கம் வரணும்னு எண்ணமே வரலல்ல உனக்கு. இப்புடி அமெரிக்காவும் ஆப்பிரிக்காவுக்கு போயிதான் துட்டு சம்பாதிச்சி கொட்டணும்னு என்ன தலையெழுத்து நமக்கு.


ஒண்ணு ஊர் மேய போனா இன்னொன்னு கிடக்குன்னு தொடச்சு போட்டுட்டு போக உன் ஆயி அப்பன் என்ன மூணு நாலா பெத்து போட்டிருக்குதுங்க. நான்தான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒத்தையா பெத்து வெச்சேன்னா, இதுங்களும் சேர்ந்து ஓரியா பெத்து வெச்சிகினு கிடக்குதுங்க ம்கும்" என வந்ததும் வராததுமாக பிலுபிலுவென பிடித்துக்கொண்டார் அவனுடைய பாட்டி.


பெங்களூரிலிருந்து வாலாஜா வரை வரும் வரை கூட அவ்வளவு களைப்பு ஏற்படவில்லை அவனுக்கு. முந்தைய தினம் பொழிந்த மழையால் சேரும் சகதியும் குண்டும் குழியுமாக மாறிப்போயிருந்த சாலைகளால் அங்கிருந்து சில நிமிடங்களில் கடக்கவேண்டிய தூரத்தை முழுவதுமாக இரண்டு மணி செலவு செய்து வந்து சேர்ந்திருந்தான். போதாத குறைக்கு வழியை மறித்து நின்றிருந்த ஆட்டு மந்தைகள் வேறு.


அதில் உண்டான கடுப்புடன் உள்ளே நுழைந்தவனுக்கு பாட்டியின் இந்த பேச்சு நல்லவேளையாக சிரிப்பை வரவழைத்துவிட, கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவருக்கு அருகில் போய் நிதானமாக அமர்ந்தவன், "நீ கவலையே படாத ஆயா! உன்னோட அந்த கொறைய நான் போக்கறேன். பையனும் பொண்ணுமா ஒரு ஏழு எட்டு பெத்து போட்டா போதுமா உனக்கு? வருஷத்துக்கு ஒண்ணா வரிசையா ரிலீஸ் பண்ணி இந்த வூடு முழுக்க ஓட விடல நான் உன் பேரன் இல்ல" என அவன் சூளுரைத்த விதத்தில் வெட்கம் பிடுங்கியது கிழவிக்கு.


முகத்தை மூடிக்கொண்டு சிரித்தவரின் கோபம் மலையேறி இருக்க, "உனக்கு பொருத்தமா மூணு ஜாதகம் வந்துது. நீ ஊருல இருந்து வரத்துக்குள்ளாற ஒரு பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சி அது முழுவாமயே இருக்குது. இன்னொண்ணுக்கும் பேசி முடிச்சிட்டாங்களாங்காட்டியும். அஆங்" என நொடித்துக்கொண்டவர், "இன்னும் ஒரே ஒரு பொண்ணுதான் இப்ப தோதா இருக்குது. அடியேன்னு சொல்றதுக்கு ஆளக்காணுமாம், அதுக்குள்ளாற நீ இன்னாடான்னா ஏழெட்டு புள்ள வரைக்கும் போயிட்ட, ம்கும்..." என சலிப்புடன் முடித்தார் அவர்.


என்ன சொல்வதென்றே புரியவில்லை, இந்த ஆறேழு மாதங்களில் நிலமங்கை பற்றிய நினைப்பை எப்படி மனதிற்குள் அடைத்துவைத்தான் என்றே விளங்கவில்லை அவனுக்கு.


ஆர்க்டிக் குளிர் பிரதேசங்களில் வாழும் கரடி, வௌவால், அணில் போன்ற சிலவகை விலங்குகள், அங்கே குளிர்காலங்களில் நிகழும் பனி பொழிவிலிருந்தும் உணவு பற்றாக்குறையிலிருந்தும் தங்களை தற்காத்துக்கொண்டு உயிர் வாழ ஹை