top of page

Nilamangai -4

Updated: Dec 30, 2022

நிலமங்கை - 4


நினைவுகளில்...


நிலமங்கை கோபத்துடன் சென்றதும், அவள் தானாகவே தன்னை நாடி வருவாள் எனக் காத்திருந்தான் தாமோதரன்.


அது நடக்காமல் போக, இரண்டு நாட்கள் விடுமுறையில் வந்திருந்தவனுக்கு, அன்று இரவு பெங்களூரு திரும்பவேண்டியிருந்ததால் சிறு ஏமாற்றமும் கோபமும்தான் உண்டானது.


'அவ முன்ன மாதிரி இன்னும் சின்ன பொண்ணு இல்ல தாமு! வயசுக்கு தகுந்த மெச்யூரிட்டி அவளுக்கு வந்துடுச்சு போல. அதனாலதான் அவ உன்னை தேடி வரல. நீ இப்படியே ஈகோ பார்த்துட்டு நிக்காம, நேரா போய் அந்த புக்க கொடுத்துட்டு வா. அதுதான் உன் எதிர்காலத்துக்கு நல்லது" என அவனது மனசாட்சி இடித்துரைக்க, மேற்கொண்டு யோசிக்காமல் அவளுடைய வீட்டிற்குச் சென்றான்.


மல்லிகை, கனகீம்பரம் பூச்செடிகள், இரண்டு பெரிய வேப்பமரங்கள், கொய்யாமரங்களுடன் கூடிய சிறு தோட்டம், இருபது மாடுகளுக்கு மேல் வைத்துப் பராமரிக்கப்படும் தொழுவம், இவற்றுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஏற்றக் கிணறும் , பூசனி கொடிகளால் மூடிய, கூரை வேய்ந்த வீடுதான் மங்கையும் அவளுடைய தாத்தாவும் வசிப்பது.


ஒரு கூடம் அதை ஒட்டிய ஒரு சிறிய அறை மற்றும் சமையலறை மட்டும்தான் அங்கே.


தாமுவின் அம்மா புஷ்பாவுடைய பெரியப்பாவின் மக்கள்தான் வேலுமணி, பூங்கொடி இருவரும். அதனால் சந்தானம் அவனுக்குப் பெரியப்பா முறை என்பதால், வாயிலிலிருந்தே "பெரியப்பா" என தாமு குரல் கொடுக்க, "வா தாமு! எப்படி இருக்க" எனக் கேட்டுக்கொண்டே வெளியில் வந்த சந்தனம், "உட்காருப்பா" எனத் திண்ணையை கான்பிக்க, அவர் உள்ளே அழைக்க மாட்டார் என்பது நன்றாகவே அவனுக்குத் தெரியும் என்பதால், அவர் சுட்டி காண்பித்த இடத்தில் அமர்ந்து, "நல்லா இருக்கேன் பெரியப்பா... மங்க வூட்ல இல்ல" என்று கேட்டான்.


"அது கழனி வரைக்கும் போயிருக்கு! வர கொஞ்ச நேரம் ஆவும்" என்றவர், "டீ கொதிக்கவெக்கறேன் குடிக்கறியா?" என்று அவனை உபசரிக்கும்வண்ணம் கேட்க, கையில் வைத்திருந்த புத்தகத்தை அவரிடம் நீட்டியவாறு, "பரவாயில்ல பெரியப்பா. இந்த புக்க மங்க கேட்டுதுன்னு வாங்கியாந்தேன். அதாண்ட கொடுத்துருங்க" என்று சொல்லிவிட்டு, "இன்னைக்கு ரவைக்கு ஊருக்கு கிளம்பறேன். அதான் நானே கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்" என விளக்கம் வேறு கொடுத்தான். 'இந்த பொண்ணு ஏன் இப்படி செய்யுது?' என்கிற எண்ணத்தில் அவருடைய முகம் கடுகடுப்பாக மாறிப்போக, அதை மறைக்க முயன்று, "ரொம்ப சந்தோசம் தாமு!" என்றவர் அதைப் புரட்டி அதன் விலையைப் பார்த்துவிட்டு, வேட்டியில் சுருட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து எண்ணி அவனிடம் நீட்டினார்.


கொஞ்சம் கடுப்பானாலும் மறுக்க வழியின்றி அதை வாங்கிக்கொண்டவன், "நேரம் ஆச்சு. நான் கிளம்பறேன்" என்று சொல்லிவிட்டு தாமு அங்கிருந்து செல்ல அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் சந்தானம்.


தாமு, மங்கை இருவருக்குள்ளும் அத்தை மகன், மாமன் மகள் உரவுதான். திருமணம் செய்யும் முறைதானென்றாலும் சந்தானத்துக்கு அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லை.


பேத்தி விஷயத்தில் கொஞ்சம் அதிக எச்சரிக்கையாகத்தான் இருப்பார் அவர். அவளுடைய விருப்பத்திற்கு மாறாகச் சிறு துரும்பு கூட அசையாது அங்கே என்ற நிலையில் அவர் அவளைப் போற்றி பாதுகாக்க, அவளைப்பற்றி நன்றாகவே அறிந்துவைத்திருந்தார்.