top of page

Nilamangai - 13 FB

Updated: 3 days ago

நிலமங்கை 13

Episode 12 continuation...


நினைவுகளில்...


“ஆமா, இன்னாத்துக்கு என்ன பாத்து இப்புடி ஈன்னு இளிச்சிக்கினு கெடக்க நீயி! இதெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட புடிக்கல சொல்லிட்டேன், ஆமா! மொதல்ல எப்பவும் போல சாதரணமா நடந்துக்க” என அதட்டியவள், அவன் அலட்சியமாக அவளை ஏறிட, “எனக்கு உன்ன புடிக்குமா புடிக்காதான்னு கேட்டா, புடிக்காதுன்னு சொல்லுவேன்னு நினைச்சியா? மெய்யாலுமே எனக்கு உன்ன ரொம்ப புடிக்கும்! ஆனா கல்யாணம் கட்டிக்கற அளவுக்கு புடிக்கும்னு அதுக்கு அர்த்தமில்ல? தெரியாமத்தான் கேக்கறேன், இந்த மாதிரி நான் டிராயிங் பண்றது உனக்கு தெரியவே தெரியாது பாரு! எப்பவோ உம்மேல கோவமா இருக்கும்போது வரைஞ்சதா இருக்கும். எப்ப வரைஞ்சேன்னு எனக்கே நினைப்புல இல்ல! இதப் போய் தூக்கினு வந்து என்ன கேள்வி கேக்கற! வெவரமான ஆளுதான தாமு நீயி, இதை வெச்சி நீயே ஒன்னு நினைசுக்குவியா?” என்று படபடத்தாள் நிலமங்கை தன்னை இயல்பாகக் காண்பித்துக் கொண்டு.


"என்னாது, இந்த படத்தை நீ எப்பவோ என் மேல கோவமா இருக்கும்போது வரஞ்சியா… இது அக்மார்க் புளுகுன்னு உனக்கே தெரியல! இந்த ட்ராயிங்ல என்னோட கண்ண பாரு, அதுல இருக்குற போதைய பாரு. இப்படி ஒரு பார்வை உன்னை நான் பார்த்தனான்னு கூட எனக்கு தெரியல. மே பி, முன்ன ஒரு தடவை இதே மாதிரி என்னை கட்டிக்கோன்னு சொன்னேன் இல்ல, அப்ப பார்த்திருப்பேன்…னு நினைக்கறேன். ஆனா அதை இவ்ளோ ஃபீல் பண்ணி நீ வரஞ்சிருக்க பாரு அங்க தெரியுது உன் மனசு! கோபமா இருக்கும்போது வரஞ்சியாம்… போடி.


இதுல இருக்குற இன்னொரு ஹிட்டன் ட்ரூத், நான் பீல் பண்ணது என்னன்னா, என்னோட மனசு உனக்கு நல்லாவே புரிஞ்சிருக்கு… சரிதான" என அவன் அவளது மனதை புட்டு புட்டு வைக்க, என்ன பதில் பேசுவது என்று கூட புரியாமல் தவித்து தான் போனாள்.


"என்ன மங்க, கொஞ்ச நேரத்துக்கு முன்னால மீட்டிங் போட்டு அந்த பேச்சுப் பேசின, இப்ப எங்க போச்சு அந்த வாயி. வெளிப்படையா ஒடச்சு பேசு" என்று அவன் அவளது பொறுமையை சோதிக்க, தன்னுடைய இந்த சிறு மௌனம் கூட அபாயத்தின் அறிகுறி ஏற்று உணர்ந்து கொண்டவள், "இதோ பாரு தாமு, இப்ப கூட சொல்றேன், எனக்கு உன்ன புடிக்கும், ஆனா நீ சொல்லிட்டு இருக்குற மாதிரி எல்லாம் எதுவும் கிடையாது. உன்ன கட்டிக்கிற எண்ணம் எனக்கு ஒரு துளி கூட கிடையாது. அப்படி நடந்தா அது உனக்கும் நரகமா போகும். எனக்கும் நரகமா போகும். இதோட இந்த பேச்சை விட்ரு" என்றாள் தீர்மானமாக.


"ஏன்"


"ப்ச், ஏன்னெல்லாம் என்னால விளக்கமா சொல்லிட்டு இருக்க முடியாது. விட்ருனா விட்ரு"


"அப்படி எல்லாம் என்னால விட முடியாது மங்க, நான் சேட்டிஸ்ஃபை ஆகற மாதிரி ஒரே ஒரு ரீசன் சொல்லு போதும், நான் அப்புடியே திரும்பி போயினே இருக்கேன்" என அவளது வார்த்தையை பிடுங்குவதிலேயே அவன் குறியாக இருக்க, நிச்சயமாக என்ன பேசியும் அவனைத் திருப்தி படுத்த முடியாது என்பது மங்கைக்கு நன்றாகவே புரிந்தது. ஆனாலும் கூட முயற்சி செய்யாமல் இருக்க முடியவில்லை.


"தாமு புரிஞ்சிக்க, வெளிநாட்டுல வேலை பார்க்கணும், அங்கேயே கிரீன் கார்டு வாங்கிட்டு செட்டில் ஆகணும்ன்றத லட்சியமா வெச்சி இருக்குற ஆளு நீ. அதுக்காக உன்னை நீ தயார் பண்ணிக்க எவ்வளவு மெனக்கெடுறேன்னு எனக்கு நல்லாவே தெரியும். இதே மாதிரி நீ போயிட்டு இருந்தா உன் ஆசைப்படி, சுந்தர் பிச்சை மாதிரி நீ பெரிய ஆளா வருவ.


ஆனா எனக்கு வெளிநாட்டுல வந்து வாழறதுல ஒரு துளி இஷ்டம் கூட இல்ல.


அப்படி பார்க்கும்போது, நம்ம ரெண்டு பேரோட லட்சியமும் வேற வேற திசையில பயணிக்குது. என் வழியில உன்னை இழுக்கிறதோ இல்ல உன் வழிக்கு நான் வரதோ ரெண்டுமே நடக்காத காரியம். இதுல யாராவது ஒருத்தர், அவங்க லட்சியத்த இழந்தா மட்டும்தான் நாம ஒண்ணு சேர்ந்து ஒரு வாழ்க்கை வாழ முடியும். அப்படி நடந்தா ஒண்ணு நீ நிம்மதி இல்லாம வாழணும், இல்லன்னா நான் நிம்மதி இல்லாம வாழணும். இன்னும் சரியா சொல்லனும்னா, நிச்சயமா உன்னால என் வழிக்கு வர முடியாது. அதனால என்னதான் உன் வழிக்கு இழுக்க நீ முயற்சி செய்வ. என்னோட உணர்வுகள தொலைச்சிட்டு ஒரு ஜடமா உன் கூட அங்க வந்து என்னால குடும்பம் நடத்த முடியாது.


இதுல யாருக்கும் சந்தோஷம் கிடைக்காது. அதைவிட அவங்கவங்க பாதைல போறது, ரெண்டு பேருக்குமே நல்லது" என நிறுத்தி நிதானமாக அவனுக்கு புரிய வைக்க முயன்றாள்.


"ஸோ, இவ்வளவு டீப்பா நீ இந்த விஷயத்தை பத்தியெல்லாம் யோசிச்சி, இதோட சாதக பாதகங்கள ஆலசி ஆராய்ஞ்சு தெளிவா இருக்க அப்படித்தான மங்க?" என்று அவன் இலகுவாகக் கேட்கவும் ஆடித்தான் போனாள்.


“உனக்கு என்ன கட்டிக்கற அளவுக்கு பிடிக்கலன்னும்போது எதுக்கு இவ்வளவு தூரம் யோசிச்சிருக்க நீயி” என அவன் மறுத்து வேறு சொல்ல கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் அவளை நெருக்க, மங்கையின் பதற்றம் உச்சத்தை தொட்டது. அவனுக்கு பதில் சொல்ல இயலாமல் கொந்தளித்துப் போனவள், "ஆமா நீ என்ன, என்ன இவ்வளவு கேள்வி கேக்கறதுக்கு ஆளு. எனக்கு இஷ்டம் இல்ல, உன்ன கட்டிக்க மாட்டேன்னு சொன்னா அதோட விட்டுட்டு போ. அத உட்டுட்டு இப்புடி நொய்யி நொய்யினு புடுங்குற வேலையெல்லாம் வெச்சுக்காத. இப்புடி என் உயிரை எடுக்கதான் இப்ப அமெரிக்காவுல இருந்து வந்து சேந்திருக்கியா" என அவள் குரலை உயர்த்தி ஆத்திரத்துடன் கத்த,


"ப்ச்… கூல் மங்க, எதுக்கு இப்படி கத்தற! 'நீ என்ன கட்டிக்கிறியா?'ன்னு நான் உன்கிட்ட சம்மதம் கேட்டு நிக்கல. கட்டிக்கோன்னு ஒரே ஒரு ஆப்ஷன மட்டும் தான் உனக்கு குடுத்திருக்கேன். நீ அதை இன்னும் சரியா கவனிக்கல போல இருக்கு! இந்த விஷயத்துல உன் சம்மதம் மட்டும் இல்ல வேற யாரோட சம்மதமும் எனக்கு தேவையில்ல. யார் மறுத்தாலும் நம்ம கல்யாணம் நடக்கும். அதை எப்படி நடத்திக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் இப்ப அமெரிக்காலருந்து வந்திருக்கிறது உன்னை கட்டி கையோட உன்ன கூட்டிட்டு போகத்தான். அதுல உனக்கு கொஞ்சம் கூட சந்தேகமே வேணாம்!


உன்ன தவிர வேற ஒருத்தியை கட்டிக்கிட்டு என்னால குடும்பம் நடத்த முடியும்னு சொன்னா, அப்பவே அந்த பவ்யா பொண்ண கட்டிக்கிட்டு, இன்நேரம் நான் ஒண்ணு ரெண்டு புள்ளைங்களுக்கு அப்பனாகியிருப்பேன். ஆனா அது என்னால முடியாது, என் வாழ்க்கைல உன்ன தவிர வேற எந்த பொண்ணுக்கும் என்னால எடம் கொடுக்க முடியாது. அதுக்கான காரணத்த கேட்டா எனக்கு பதில் சொல்ல தெரியல. இந்த விஷயத்துல என் மனச என்னாலேயே மாத்திக்க முடியல. முயற்சி செஞ்சு தோத்துட்டேன்னு தான் சொல்லணும். இதையெல்லாம் வார்த்தையால சொல்லி உனக்கு விளங்க வெக்க முடியாது. நீயே புரிஞ்சிட்டாதான் உண்டு.


வேணா, உன் பக்கத்துல இருந்து உனக்காக ஒண்ணு செய்யறேன். உன் ஆசப்படி, இங்க இருக்கிற நிலப் புலன்கள அப்படியே விட்டுவெக்கறேன். வேணும்னா இன்னும் கூட நிறைய வாங்கிப் போடுறேன். எல்லா வேலைக்கும் ஆளுங்கள போட்டு மெயின்டைன் பண்ணிக்கலாம்.


முதல்ல ஒரு பத்து பதினஞ்சு வருஷம் என் இஷ்டப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு, அதுக்குப் பொறவு இங்க வந்து நீ ஆசைப்படுற வாழ்க்கைய வாழலாம். இதுவும் நான் உனக்கு கொடுத்திருக்கற ஒரே ஒரு ஆப்ஷன் மட்டும்தான். பர்மிஷன் எல்லாம் கேட்கல புரிஞ்சுக்க!" எனது தன் பக்கம் நியாயத்தை மட்டுமே அவன் பேச அவளுக்கு ஆயாசமாக இருந்தது.


இவன் சொல்லும் வாழ்க்கை முறை என்பது ஒரு வழி பாதை. அதன் உள்ளே நுழைந்தவர்களால் அதிலிருந்து மீண்டும் திரும்ப வரவே இயலாது. இவனுடைய வற்புறுத்தலுக்கு பலியாகி இவனை திருமணம் செய்து கொண்டு அங்கே போனால், தனக்கே கூட தன் லட்சியங்கள் மறந்து போகும் அபாயம் இருக்கிறது. எக்காரணம் கொண்டும் இதற்கு அடிபணியவே கூடாது என மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.


இதைக்கூட வெளியில் சொல்ல அவளுக்கு அவ்வளவு பயமாக இருந்தது. காரணம், எதிரில் நிற்கும் இந்த தாமோதரன், மனிதர்களை விழுங்கும் ஒரு பிரம்மராட்சதனைப் போல அவளது கண்களுக்கு தெரிந்தான்.


இதிலிருந்து எப்படி விடுபடப் போகிறோம் என திகிலாக இருக்க உடலின் சக்தி மொத்தம் வடிந்து போய் இப்படியே தொய்ந்து நின்றாள். இங்கிருந்து வீடு வரையிலும் நடந்து செல்லக் கூட முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.


அவளது செயலற்ற நிலையை உணர்ந்தவனாக, "பயப்படாத மங்க, கனவுல கூட நான் உனக்கு எந்த ஒரு கெடுதியும் நினைக்க மாட்டேன். என்னோட பாதி உசுரு உன்கிட்ட தான் இருக்கு. அத புரிஞ்சுக்க முயற்சி பண்ணு" என்றபடி அவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டான். துவண்டு போய் அவனுடைய இழுப்புக்கு வந்தவளால் அவனை உதறித் தள்ள இயலவில்லை. அவளின் உடலில் ஓடிய நடுக்கமும் அதி வேகமாக தடதடக்கும் அவளது இதயத்துடிப்பும் அவளுடைய நிலையை அவனுக்கு சொல்லாமல் சொல்ல, அவளது கூந்தலை வருடி ஆதுரமாக அவள் நெற்றியில் இதழ் பதித்து, அடுத்த நொடி தன்னிடமிருந்து தானே அவளைப் பிரித்தவன், "ச்சீ லூசு" என்றபடி, உச்சபட்ச மன அழுத்தத்திலும், இயலாமையிலும் அவளது விழியின் ஓரம் கசிந்த கண்ணீரை இதமாகத் துடைத்து விட்டு, "ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு, தோ வந்துட்றேன்" என அங்கிருந்து சென்றான்.


சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட, இருள் கவிழ்ந்து, நிலவொளி நாலாபுறமும் நன்றாக ஊடுருவியிருந்தது. “ச்ச, இவன் கூபிட்டான்னு இவன் கூட நடத்து வர ஒத்துகிட்டதே பெரிய தப்பு!! ரொம்ப நாள் கழிச்சு இவன பார்க்கவும் புத்தி பேதலிச்சு போச்சாங்காட்டியும். இன்னும் ரெண்டு மூணு மாசம் இங்க இருகபோறேன்…ன்னு சொன்னானே! அதுக்குள்ள வேற என்னல்லாம் செய்யப்போறானோ?! இவனோட நினைப்பே இல்லாம, நாம வேற என்னென்னவோ செஞ்சிட்டு இருக்கோமே! அதெல்லாம் பாதில நின்னுபோனா, நம்ம நம்பி இருக்கற சனங்களோட நெலம என்ன ஆகும்’ என நினைத்து, மனம் பதறிப் போனது.


வேறே ஏதும் சிந்திக்கத் தோன்றாமல், ஆளரவமற்ற அந்த சாலையில் மெள்ளமாக நடக்கத் தொடங்கினாள். பழகிய பாதையில் கால்கள் தானாக அவளை இட்டுச் செல்ல, தன் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்து அவளுக்கு அருகில் நிறுத்தி, “நாந்தான் உன்ன அங்கயே நிக்கச் சொன்னேன் இல்ல, எதுக்கு மங்க இப்படி தனியா போய்ட்டு இருக்க” என அவன் கண்டனமாக சொன்னபோதுதான் சுற்றுப்புறமே அவளுக்கு உரைத்தது.


ஆக, இருசக்கர வாகனத்தில்தான் இங்கே வந்திருக்கிறான். வேண்டுமென்றே ‘பேசிட்டே நடக்கலாம்’ எனத் தன்னை அழைத்திருக்கிறான் என அவன் மீது உண்டான ஆத்திரத்தில் அவனை ஏரெடுத்து பார்ப்பதையும் தவிர்த்து அவள் தன் நடையைத் தொடர, "வூடு வரைக்கும் நிச்சயமா உன்னால நடந்து போக முடியாது, ரொம்ப பிகு பண்ணாம ஒழுங்கு மரியாதையா பின்னால ஏறி உக்காரு. பத்திரமா உன் வூட்டுல எறக்கி உட்டுட்டு போறேன். இல்லனா இன்னைக்கே உன்ன எங்கூட்டுக்கு தூக்கிட்டு போயிருவேன்" என அதிகாரமாக தொடங்கி இலகுவான சிரிப்புடன் அவள் முடிக்க, உண்மையில் அவளுக்குமே நடக்கத் தெம்பில்லாமல் போயிருக்க, அமைதியாக அவன் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்.


ஒரு பக்கமாக காலை தொங்கவிட்டு உட்கார்ந்திருந்தவளின் கையைப் பற்றி தன் வயிற்றைச் சுற்றிப் போட்டவன், "கெட்டியா பிடிச்சுக்கோ மங்க, பேலன்ஸ் இல்லாம கீழ விழுந்துற போற" என்று சொல்ல அப்படியே தோய்ந்து அவன் முதுகில் தலை சாய்த்தாள்.


'சாரி மங்க, உன் விஷயத்துல என்னால விட்டுக் கொடுக்கவே முடியாது. இப்ப உனக்கு என்னோட இந்த முடிவு கஷ்டமாக இருந்தாலும் எதிர்காலத்துல இதை நினைச்சு நீ சந்தோஷப்படத்தான் போற' என்றெண்ணிய படி அவளது அருகாமையை மிகவும் ரசித்தவனாக வாகனத்தை ஓட்டி வந்து அவளுடைய வீட்டு வாயிலில் நிறுத்தினான். அதன் பின்னும் கூட இறங்கத் தோன்றாமல் அவள் அப்படியே உட்கார்ந்திருக்க, "என்ன மங்க, இப்படியே உன்ன எங்கூடுக்கு இட்னு போயிறவா?" என்று அவன் கிறக்கமாகக் கேட்க அதன் பின்புதான் வண்டி நின்றதையே உணர்ந்தாள்.


அனிச்சையாக அவளது பார்வை வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டில் போட்டு அதில் படுத்திருந்த அவளது தாத்தாவின் மீது பாய, அரவம் கேட்டு அவரும் எழுந்தமர்ந்து நெற்றியின் மேல் கையை குவித்து வைத்து கண்களை சுருக்கி இவர்களைப் பார்க்க, இவளது சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. ஆனால் தாமோதரனோ வம்பை விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கும் மனநிலையுடன் கையை ஆட்டி அவருக்குத் தன் இருப்பை தெரியப்படுத்திவிட்டு, வாகனத்தை கிளப்பிக் கொண்டு வேகமாக அங்கிருந்து சென்று மறைந்தான்.


இந்த இரு ஆண்களின் உணர்வுகளுக்கு இடையில் சிக்கி பரிதவித்துப்போனவளாக, தளர்ந்த நடையுடன் அவளுடைய தாத்தாவை நெருங்க, “ஒனக்கு உடம்புல கொஞ்சமாவது ஒணக்க இருக்கா மங்க? பொட்டபுள்ள வூடு வர நேரமா இது” எனக் குத்தலாக தொடங்கியவர், “அமாம், உன் வண்டி எங்க?” என்று கேட்க, “செல்வண்ணே எடுத்துட்டு போயிருக்கு” என உள்ளே போன குரலில் முணுமுணுத்தாள்.


“அப்படின்னா உன்ன எறக்கி உட்டுட்டு போனது?” என இழுத்தவர், “கதிரா இருக்க வாய்பில்ல, பொறவு யாரு மங்க” என பதட்டத்துடன் கேட்க, “தாமு” என்றாள் குரலே எழும்பாமல்.


“புரில, தெளிவா சொல்லு”


மீண்டும் அவள் “நம்ம தாமுதான் தாத்தா, அமரிக்கால இருந்து வந்திருக்கு” என்று சத்தமாகச் சொல்ல, “நம்ம தாமுவாம் நம்ம தாமு! இந்த நெனப்ப நீ இன்னும் விட்டுத் தொலைக்கலியா? அவனெல்லாம் அசலூர் காரனா போயி எவ்வளவோ வருஷம் ஆச்சு” என அவர் சொன்ன விதமே அவரது எரிச்சலை சொல்லாமல் சொல்ல, “அவன எங்க பார்த்த நீயி” என தன் விசாரணையைத் தொடர்ந்தார்.


அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச இயலாத மனநிலையில், “பஞ்சாயத்து போர்டு ஆபீசாண்ட வந்திருந்துது தாத்தா” என பதில் கொடுத்தாள், வேறு வழி இல்லாமல்.


அதீதமாக கண்டிப்பு காண்பித்தாலும், “இனிமேல் இப்படி அவங்கூட ஜோடி போட்டுட்டு சுத்தாத மங்க, பொறவு தேவையில்லாத தொல்லையா பூடும்” என எச்சரிக்கும் விதமாகச் சொன்னவர், “களைப்பா தெரியற, சோறாக்கி வெச்சிருக்கேன், போய் மூஞ்சி கைகால் கழுவிகினு வந்து போட்டுத் துண்ணு’ என்றார் கரிசனையுடன்.


நேராகப் போய் கிணற்றடி தொட்டியில் அவர் நிரப்பி வைத்திருந்த தண்ணீரில் முகம் கை கால் கழுவி வந்தவளுக்கு, பசி வயிற்றை கிள்ளியது.


அவளை விட்டுவிட்டு அவரும் சாப்பிட்டிருக்க மாட்டார் என்பது தெரிந்து, மரத்தடியிலேயே ஒரு பாயை விரிதவள், உணவுப் பாத்திரங்களை கொண்டுவந்து அதில் வைத்துவிட்டு இருவருக்கும் தட்டை எடுத்து வைத்தாள்.


மண் சட்டியில் சூடாக சேறு இருந்தது. பூண்டு வெங்காயத்துடன் காராமணியும் கத்தரிக்காயும் போட்டு காரக் குழம்பு வைத்திருந்தார். அதற்குத் தொட்டுக்கொள்ள தோதாக முட்டையை பக்குவமாக பொரித்திருந்தார். கமகமவெண எழுந்த அவற்றின் மணமே பசியைக் கூட்டியது.


அந்த வேகத்தில்தட்டில் சோற்றை போட்டு குழம்பை ஊற்றி அவசரமாகப் பிசைந்து, அள்ளி ஒரு வாய் உள்ளே போட, அப்படியே அந்த சோறு தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது. அதில் புரை ஏறிவிட, தலையில் தட்டியபடி, “என்ன பொண்ணு நீயி, பார்த்து நிதானமா துன்னக் கூடாது” என பதறிப் போனார் தாத்தா.


அப்படியும் அவள் திணற, வேகமாகப் போய் ஒரு சொம்பில் தண்ணீரை எடுத்து வந்தவர், “சோறு துண்ணும்போது பக்கத்துல தண்ணி எடுத்து வெச்சிக்கன்னு சொன்னா கேக்காத, இந்தக் கிழவனுக்கே தொண்ட விக்கிக்கினா தனியா இன்னா செய்வ நீ” என அவளை திட்டியபடி அதை அவளுக்கு புகட்ட, அவளது கண்களில் நீர் வழிந்தது.


அதன் பின் அசுவாசமடைந்து இருவருமாக சாப்பிட்டு முடிக்க, பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு வீட்டிற்குள் போய் பாயை விரித்து, தாத்தாவின் பழைய வேட்டியை அதன் மேல் போட்டு, தலையணைப் போர்வையுடன் அப்படியே முடங்கினாள்.


பொதுவாக, கோடை காலங்களில் தாத்தா மரத்தடியில்தான் படுப்பார். பாதுகாப்பு காரணங்களால் மங்கைக்கு அனுமதி இல்லை. அவள் இப்படி தனியாக உறங்குவது வழக்கம்தான் என்றாலும் அன்று அவளுக்கு இந்தத் தனிமை ஒருவித வெறுமையைக் கொடுத்தது.


முகம் புதைத்து ஒரு குறை அழுதுத் தீர்க்க அன்னையின் மடி இல்லாமல் போனதின் துயரத்தை பரிபூரணமாக அனுபவித்தாள்.


அப்பா, தாத்தா என்ற உறவுகள் என்னதான் அன்பைப் பொழிந்தாலும், ஓரடி தள்ளி நின்றே அதை அனுபவிக்க இயலும். ஆரத் தழுவி, கட்டி அணைத்து, மடியில் உறங்கி என எதுவும் பழக்திலேயே இல்லை. பொம்பள பிள்ளைங்கள தொட்டுப் பேச கூடாது, என ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிச் சொல்லித்தான் வளர்ப்பார்கள்.


'இது நம்ம தாமுக்கு மட்டும் எப்புடி தெரியாம போச்சு? இல்ல வெளியூர் வெளிநாடுன்னு போனதுல எல்லாம் மறந்து போச்சா? இல்ல என்ன மட்டும் தான் இப்படி தொட்டு பேசறானா?' என தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டவளுக்கு அதுதான் உண்மை என்று தோன்றியது!


அவனுடைய அணைப்பும் காமக் கலப்பில்லா முத்தமும் நினைவில் வர, அவளுடைய மனம் ஆறுதல் தேடி அவனிடமே தஞ்சம் புகுந்தது! ஆனால் அது கொள்ளிக்கட்டையை எடுத்து தலை சொறிவது போல் ஆகும் என்பதும் புரிய, முன்னம் செய்த அதே தவறை மீண்டும் ஒருமுறை செய்ய அவள் தயாராகவே இல்லை. மனதிற்கு கடிவாளமிட்டு லகானை அறிவினிடம் ஒப்படைத்துத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்!


இவள் இப்படி விசனப்பட்டு கொண்டிருக்கும் இதே நேரம் தாமோதரனும் கூட உறக்கம் வராமல்தான் புரண்டு கொண்டிருந்தான்.


மங்கை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முறை, நோட்டுப்புத்தகத்திலிருந்து கிழித்து நான்காக மடித்த காகிதம் ஒன்றை அவனிடம் நீட்டி, "இந்த தேவா பையன பாரு தாமு, கொஞ்சம் கூட அறிவு இல்லாம எனக்கு போய் லவ் லெட்டர கொண்டு வந்து கொடுக்கறான்" எனக் கண்ணப்ப நாயக்கரின் கடைசி மகனைப் பற்றிய ஒரு புகாருடன் இவனை நாடி வந்திருந்தாள்.


அதைப் பிரித்து படித்தவனுக்கு சிரிப்பு பொங்கியது. அவ்வளவு இரசனையாக கவிதை நடையில் அதை எழுதியிருந்தான் தேவா.


அவன் அதை பார்த்து வாய்விட்டு சிரிக்க, "இன்னா தாமு நீயி, நான் இத பாத்து எம்மா பயம் பயந்து போய் கெடக்கேன் தெரியுமா? அந்த நாயி இன்னாடானா, நான் சொல்ற எதையும் காதுல வாங்காம பொழுதுக்கும் என் பின்னாலயே சுத்திக்கினு கிடக்குது. இத பத்தி தாத்தாவுக்கு தெரிஞ்சா என்ன பள்ளிக்கூடத்த விட்டே நிறுத்திடும். சித்திக்கு கண்டி தெரிஞ்சுதுன்னு வை, வேற வெனையே வேணாம். ப்ளீஸ் தாமு, நீ அவனை கூட்டு ரெண்டு தட்டு தட்டி பயம் வராப்பல சொல்லு தாமு" என உண்மையான அச்சத்துடன் சொல்ல, அந்தக் காதல் கடிதத்தை மடித்து சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டவன், சரி என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.


அதேபோல தேவாவை கூப்பிட்டு அவன் தலையில் தட்டி, "தம்மாத்தூண்டு பையன் நீ, எங்கூட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கறியா? எவ்வளவு நல்லா தெளிவா இந்த லெட்டர எழுதி இருக்க, இந்த அறிவ, போய் உன் படிப்புல காமி, இப்புடி பொண்ணுங்க பின்னால சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாத, மறுபடியும் இப்படி செஞ்சன்னு வையி, உன் கைய கால ஒடச்சிட்டுதான் மறு வேல பார்ப்பேன்" என அவனை மிரட்டி அறிவுரை சொல்லி, அனுப்பி வைத்தான்.


அதன் பின் தேவா என்பவன் அவன் நினைவிலிருந்து மறைந்தே போனான் என்றுதான் சொல்லவேண்டும்.


ஆனால், ‘இது என்ன இது, ஒரு பையன் தொரத்தி தொரத்தி லவ் லெட்டர் கொடுக்கற அளவுக்கு இந்த மங்க பொண்ணு அவ்வளவு பெரிய மனுஷி ஆயிடுச்சா என்ன?’ என்ற வியப்பு மனம் முழுதும் வியாபிக்க, அதன் பிறகுதான் அவளை உற்று கவனிக்கவே தொடங்கினான்.


அது உண்மைதான் என அவன் முழுமையாக உணர்ந்த தருணம் அவளுக்காக வாங்கி வந்த அந்த புத்தகத்தை அவளிடம் அவன் கொடுக்கப் போன தருணம்தான்.


கடந்த முறை இங்கே வந்த போது அவளுடைய பொக்கிஷமான அந்த புத்தகத்தை தன்னையும் அறியாமல் கொண்டு வந்தவன் அதிலிருந்த புகைப்படத்தை பார்த்து சற்று குழம்பித்தான் போனான்.


இப்படி ஒரு படம் அவளுடைய கைக்கு எப்படி வந்திருக்கும் என்ற யோசனையுடன் அவன் அதை திருப்பிப் பார்க்க, கல்யாண அல்பத்திலிருந்து அதை அவள் பிய்த்து எடுத்து வந்திருக்கிறாள் என்பது புரிந்தது.


கூடவே, அந்தப் படத்தில் அவளுக்கு அருகில் நிற்கும் தேவாவும் அவனுடன் இணைந்த அந்த சம்பவமும் நினைவில் வந்துத் தொலைய, பழைய கதை தொடர்கிறதோ என்ற சந்தேகம் மூளைக்குள்ளே தீப் பற்றி எரிந்தது.


மங்கை கதிரை மறுக்கக் கூட இதுதான் காரணமோ என்று அவனுடைய மூளை விபரீதமாக யோசிக்க, அமெரிக்கா திரும்பிய உடனேயே கைப்பேசியை எடுத்து, தேவாவின் அண்ணனுக்கு அழைத்தான்.


அவன் இவனுடன் தொடக்கப் பள்ளியில் படித்தவன், இன்றுவரை பட்டும் படாமலும் இவனுடன் தொடர்பிலும் இருப்பவன்.


கண்ணப்ப நாயக்கர் இறந்த தகவல் இப்பொழுதுதான் அவனுக்கு தெரியவந்ததாக காண்பித்துக் கொண்டு, அவனுடைய அப்பாவின் இறப்புக்கு துக்கம் விசாரிப்பது போலத் தொடங்கி, இயல்பாகப் பேச்சை வளர்க்க, இவன் போட்டு வாங்கியதில் பல விஷயங்களை உளறிவைத்தான் அவன்.


முதலில் இங்கே இருக்கும் சொத்துக்களை விற்க தேவா சம்மதிக்கவே இல்லை. அவன் பங்கைப் பிரித்து தரச்சொல்லித்தான் கேட்டானாம். ஆனால் மொத்தமாக கொடுத்தல் மட்டுமே அந்த நிலத்தை வாங்கிக்கொள்ள அந்த அரசியல்வாதியின் சொந்தக்காரர் தயாராக இருக்க, அவனிடம் கெஞ்சி, ஆசை காட்டிப் பலவாறாகப் பேசிப் பார்த்தும் பலனில்லாமல் போயிருக்கிறது.


அந்த சமயத்தில்தான் நிலமங்கை அவனிடம் வந்து, அந்த நிலங்களை தனக்கு குத்தகைக்கு தரச்சொல்லி பேசியிருக்கிறாள். அதை சாதகமாக பயன்படுத்தி, அவள் தன்னை மணந்துகொண்டால் அந்த நிலத்தை விற்காமல் இங்கேயே இருந்துவிடுவதாக அவன் அவளிடம் பேரம் பேசி இருக்கிறான்.


அதற்கு அவள் உடன்படாமல் மறுத்துவிட்டு போய்விட, அவள் இனி தனக்கு கிடைக்கவே மாட்டாள் என்பது தெளிவாக தெரிந்துபோக, அதில் உண்டான ஆத்திரத்தில் அந்த நிலத்தை விற்க ஒப்புக்கொண்டு கையெழுத்து போட்டுவிட்டான் தேவா.


இதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, ‘அப்பாடா என ஆசுவாசப் பட்டுகொண்டலும், அந்த போட்டோவை அவள் ஏன் எடுத்து வைத்திருக்கிறாள் என்ற கேள்வியுடன், அந்த புத்தகத்தை எடுத்து ஒவ்வொன்றாக அதன் தாள்களைப் புரட்ட, அவள் அவனை வரைந்திருந்த ஓவியம் கிடைக்க, அவனது கேள்விக்கும் விடை கிடைத்தது.


அதாவது அந்த புகைப்படத்தை அவள் கவர்ந்தெடுத்து வந்ததே அதில் ஒரு ஓரத்தில் அவன் இருக்கும் காரணத்தால்தான் என்பதுதான் அந்த விடை.


பார்த்த நொடியே அந்த கோட்டோவியம் அவனை பித்துபிடிக்க வைத்துவிட்டது என்றால் அது மிகையில்லை.


இனி வாழ்ந்தாலும் இந்த நிலமங்கையுடன்தான், செத்தாலும் அவள் மடியில்தான், தன்னை முழுவதுமாக ஆட்கொள்ளும் உரிமை அவளுக்கு மட்டுமேதான், இதை ஆதிக்க புத்தி என யாரேனும் தூற்றினால் கூட கவலையில்லை, அவளிடம் உருவாகியிருக்கும் இந்த பிணைப்பை தன்னால் மாற்றிக்கொள்ளவே இயலாது என பரிபூரணமாக உணர்ந்தான் தாமோதரன்.


என்ன செய்தும் அவளை என் உரிமை உள்ள மனைவியாக அடைந்து என் ஆயுளுக்கும் என்னுடன் கட்டிவைத்துக் கொள்வேன் என்ற எண்ணத்துடன்தான் இங்கே வந்து இறங்கியிருக்கிறான்.


அதுவும் அவள் இவ்வளவு தீவிரமாக தன் மறுப்பை பதிவு செய்த பின், அவளை தன் வழிக்கு கொண்டு வர என்னவெலாம் செய்யலாம் என திட்டமிடத் தொடகிவிட்டான். அது அறப்போராட்டமாகவும் இருக்கலாம் அல்லது அடக்குமுறை சர்வதிகரமகவும் மாறலாம்! இரண்டில் ஒன்று எதுவாக இருந்தாலும் அது அவள் எடுக்கும் முடிவை சார்ந்தே அமையப் போகிறது!



© KPN NOVELS COPY PROTECT
bottom of page