top of page

Nilamangai - 1

Updated: Feb 7

நிலமங்கை


1. நினைவுகளின் பரவசமும் நிகழ்வுகளின் நிதரிசனமும்.


நினைவுகளில்…


ஆதவனின் கிரணங்கள் மிக மிக மென்மையாக நில மடந்தையை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் இளம் காலை நேரமது.


சற்று தூரத்தில் ஒரு ட்ராக்டர் இயங்கும் படபடவென்ற ஒலி மெல்லியதாகக் கேட்டுக்கொண்டிருக்க,  முதுகை நன்கு வளைத்து குனிந்தவண்ணம் பெண்டிரெல்லாம் நன்கு உழுது, பதப்பட்டிருந்த நிலத்தில்  சீரான இடைவெளியில் நெல் நாற்றுகளை நடவு செய்துகொண்டிருந்தனர்.


அப்பொழுதுதான் பூஜைப் போட்டு நடவைத் தொடங்கியிருப்பார்கள் போலும், மிகச் சிறிதளவேதான் நாற்றுகள் நடப்பட்டிருந்தன.


புடவை அணிந்த பெண்களுக்கிடையிடையே சில பாவாடை தாவணி பெண்களும் கலந்திருக்க, ஒருவரைப்போல அனைவருமே ஆண்கள் அணியும் சட்டையை மேலே அணிந்திருந்தனர்.


வரப்பின் மீது வந்து நின்ற தாமோதரனின் கண்கள் அந்தச் சிறு குழுவிற்குள் ஒருத்தியைத்தான் தேடிக்கொண்டிருந்தன.


அப்பொழுதுதான் நடுவிலிருந்து கணீரென்று ஒலித்தது அவன் தேடிய அவனது நிலமங்கையின் இனிமையான குரல்.


தன்னானே தான...னன்னே...


தன்னானே தான...னன்னே…


ஈசானி மூல பார்த்து... மொழுகி மாக்கோலமிட்டு…


மஞ்சளிலே பிடிச்சு வெச்ச பிள்ளையார முன்ன வெச்சு…


மூணே மூணு கைப்பிடிக்கு நாத்த எண்ணி எடுத்து வெச்சு…


என இனிய  நாட்டுப்புற பாடலொன்றை அவள் பாடத் தொடங்க,  அதை அப்பிடியே இலாகவமாகப் பிடித்துத் தொடர்ந்து பாட ஆரம்பித்தனர் மற்ற பெண்டிரெல்லாம்.


தன்னானே தான...னன்னே... 


தன்னானே தான...னன்னே...


ஈசானி மூல பார்த்து... மொழுகி மாக்கோலமிட்டு...


மஞ்சளிலே பிடிச்சு வெச்ச பிள்ளையார முன்ன வெச்சு...


மூணே மூணு கைப்பிடிக்கு நாத்த எண்ணி எடுத்து வெச்சு...


அருகம்புல்லு பூவோட பூச செஞ்சோம்… பூச செஞ்சோம்...


தொந்தி கணபதியே தொண நிக்க வேணுமய்யா! 


தன்னானே தான...னன்னே...


தன்னானே தான...னன்னே...


ஏழே ஏழு செங்கல்ல எண்ணி எண்ணி எடுத்து வெச்சு...


தண்ணியில நீராட்டி பசு மஞ்சள் பூசி வெச்சு...


குங்குமத்தில் பொட்டும் வெச்சு கூட பூவில் சிங்காரிச்சு...


பூஜை போட்டுத் தொடங்கி வெச்சோம், 


பிராம்மி... மகேஸ்வரி... கவுமாரி... வைஷ்ணவி... வராகி... இந்திராணி... சாமுண்டி...


ஏழு கன்னிமாரும் வந்து எங்க கொலங்காக்க வேணுமம்மா...


தன்னானே தான...னன்னே...


தன்னானே தான...னன்னே...


இந்த உலகத்து உசுரையெல்லாம் உமக்குள்ள வெச்சிருக்கும்...


நிலம்... நீர்... வானம்... காத்து... அக்கினியாம்...


அஞ்சு சாமிமாரும் வந்து எங்க பயிர் காக்க உதவுமய்யா...


தன்னானே தான...னன்னே...


தன்னானே தான...னன்னே...


கட்டுக் கட்டா கட்டி வெச்ச நாத்தெல்லாம் காத்திருக்கு...


குலவையிட்டுப் பொண்ணுகல்லாம் ஒண்ணா சேர்ந்து நட்டு முடிப்போம்...


தன்னானே தான...னன்னே...


தன்னானே தான...னன்னே...


ஆடியில நட்ட விதை அறுவடைக்குச் செழிச்சு நின்னா...


நன்றி சொல்வோம் சாமிக்கெல்லாம்...


தை மாசம் பொங்க வெச்சு…


தன்னானே தான...னன்னே...


தன்னானே தான...னன்னே...


வியாபார முதலைக்கெல்லாம் லாபம் சேர்க்கும் நோக்கம் வெச்சு...


நித்தம் புது சட்டம் போட்டு...


வரி மேல வரி விதிச்சு...


ஊர்வயிதிலெல்தான் அடிச்சு...


நாடாள ஆசையில்லை... சத்தியமா ஆசையில்ல...


தன்னானே தான...னன்னே...


தன்னானே தான...னன்னே...


உடம்பில் உரமிருந்து கைகாலில் வலுவிருந்தா...


பருவம் தப்பாம மாரி மழை பொழிஞ்சிருந்தா...


போதுமுங்க... போதுமுங்க... எங்களுக்குப் போதுமுங்க


வெத வெதச்சு நாத்து நட்டு... வேர்வ சிந்தி பயிர் வளர்த்து...


உலகத்துக்கே படியளப்போம்...


இந்த உலகத்துக்கே படியளப்போம்... 


சத்தியமான உண்மையிது... சும்மா ஒண்ணும் சொல்லலீங்க...


தன்னானே தான...னன்னே...


தன்னானே தான...னன்னே...


ஏழுலகம் சுத்திவரும் ஆசையில்லை எங்களுக்கு...


எங்க ஊர போல ஒரு சொர்க்கமில்ல தெரிஞ்சிக்கங்க...


விவசாயி வாழ்க ஒன்னும் சுளுவில்ல புரிஞ்சுக்கங்க...


விவசாயி வாழ்க ஒன்னும் சுளுவில்ல புரிஞ்சுக்கங்க...


தன்னானே தான...னன்னே...


தன்னானே தான...னன்னே...


(நாட்டுபுறப் பாடலை இயற்றியவர் கிருஷ்ணப்ரியா)


அதுவரை பக்கவாட்டில் நின்றுகொண்டிருந்தவன், அவளுடைய குரலைக் கேட்டபின் அவளுக்கு நேராக வந்து நின்றான். இப்பொழுதாவது அவள்  தன்னைத் தலை நிமிர்ந்துபார்ப்பாளா என்று!


ம்ஹும்... அப்பொழுதும் கூட தலை நிமிரவில்லை. சேற்றையும், நாற்றையும், பாட்டையும் தவிர அவளுக்கு வேறெதிலும் கவனம் இல்லை போலும்.


அவளுக்கு அருகிலிருந்த அவளுடைய தோழி தேவிதான் அவனைப் பார்த்துவிட்டு ஒரு புன்னகையைச் சிந்தியவாறு தன் தோளால் அவளுடைய தோளில் இடித்து காதில் கிசிசுகிசுத்தாள்.


சட்டெனத் தலை நிமிர்ந்து, தன் விழிகளை மலர்த்தி நேர்கொண்டு அவனைப் பார்த்தாள் நிலமங்கை.


ஆச்சரியத்தில் விரிந்த அவளது கண்கள் மகிழ்ச்சியில் மின்ன, 'தாமு' என அருகிலிருந்த யாருடைய கவனத்தையும் கவராத விதத்தில் முணுமுணுத்தாள்.


அவளுடைய குரல் அவனை எட்டவில்லையென்றாலும், அவளது அந்தச் செய்கை அவனுக்குப் புரிய, இதழ் கடையில் ஒரு புன்னகை அரும்பியது.


அவளுடைய அந்தப் பார்வை, அந்தப் பரவசம், அந்த முணுமுணுப்பு என அவன் உணர்ந்த அனைத்தும் மொத்தமாக நங்கூரம் பாய்ச்சியதைப் போல அவன் மனதில் அப்படியே இறுகப் பற்றிக்கொண்டது.


அன்று ஏனோ அவனுடைய கண்களுக்குப் புதிதாய் தெரிந்தாள் இந்த நிலமங்கை.


***


நிதரிசனத்தில்…


"தாமு! ஸ்டாப் இட். அளவுக்கு மீறிப் போயிட்டு இருக்க" எனக் கண்டனமாக ஒலித்தது தாமோதரனின் நண்பன் விக்ரமுடைய குரல்.


சென்னை கிண்டியில் இருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் மதுபான அருந்தகத்தில் இருவரும் இருந்தனர்.


இன்னும் சற்று நேரத்தில் தாமுவுக்கு விமான நிலையம் வேறு செல்ல வேண்டி இருக்க, அந்த எண்ணமே இல்லாமல் மதுவை உள்ளே அனுப்பிக்கொண்டிருந்தான்.


விக்ரம் இப்படிச் சொல்லவும், ஒரு சதவிகிதம் கூட அவனால் இந்தப் பழக்கத்தைச் சகித்துக்கொள்ள முடியாது, இருந்தாலும் தனக்காகதான் பொறுத்துக்கொண்டிருக்கிறான் என்பது புரிய, அவனுடைய கையை எடுத்து தன் நெஞ்சின்மேல் வைத்தவன், "பாருடா மாமா! எவ்வளவு ஃபாஸ்ட்டா துடிக்குது... அந்த இராட்சசி என்னை எப்படி மாத்தி வெச்சிருக்கா பாரு. ஐ ஹேட் மை செல்ஃப்" எனப் புலம்பியவனின் இதயம் உண்மையில் அதி வேகமாய் துடிக்க, அதிர்ந்தான் விக்ரம்.


அவனை அமைதிப்படுத்தும் விதமாக, , "தாமு! கண்ட்ரோல் யூர்செல்ஃப். இவ்வளவு எக்ஸைட்மென்ட் கூடாது. அன்ட், இதோட நிறுத்திக்கோ. அவள பார்க்கற வரைக்கும்தான் இந்த டென்ஷன் எல்லாம். பார்த்த அடுத்த செகண்ட் நீ கூலாயிடுவ" என்றான் நண்பனை உணர்ந்தவனாக.


அதுவரை அதிக கூட்டமில்லாமல் அமைதியாக இருந்த அந்த இடத்தில் திடீரென்று பேரரவம் கேட்க, அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தான் விக்ரம்.


செல்வ செழுமையைப் பறைசாற்றும் தோரணைகளுடன், ஏழெட்டு இளைஞர்கள் ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தனர். ஆனால் அதற்கும் கூட அசரவில்லை தாமோதரன். கருமமே கண்ணாயிருந்தான்.


மிக உயர்மட்ட மதுப் பிரியர்கள் மட்டுமே வந்து போகும் இடம் என்பதால் பாதுகாப்பு குறித்த பிரச்சனை எழ வாய்ப்பில்லை என்ற ஒரே காரணத்தினால்தான் தாமு, விக்ரம் இருவரும் அங்கே வந்ததே.


ஆனால் உள்ளே நுழைத்த அந்தக் கூட்டம் மதுவையும் தாண்டிய வேறேதோ போதை தலைக்கு ஏறியதைப் போல கொஞ்சம் கூட நிதானத்தில் இல்லை என்பதால் விக்ரமுடைய பார்வை கூர்மை பெற, அதற்குள் பின்னாலிருந்து தாமுவைப் பார்த்துவிட்டு, "டேய் மச்சான்... யாரோ லோக்கல் கை டா... நாட்டாம மாதிரி டோ...ட்டில வந்திருக்கான் பாரு. இவனையெல்லாம் எப்படி உள்ள விட்டானுங்க" என்றான் ஒருவன் முழு நக்கலுடன்.


தாமோதரன் அணிந்திருந்த வேட்டி, சட்டையைப் பார்த்து அவ்வளவு எள்ளல் அவர்களிடம்.


விக்ரம் கோபத்துடன் ஒரு அடி எடுத்து வைக்க, அதற்குள் அவனுடைய பேச்சில் கடுப்பாகி, தன் முழுக்கைச் சட்டையை மடக்கிவிட்டவாறு திரும்பிய தாமு, தன் வலது காலால் எத்தி வேட்டியை மடித்துக்கட்டி, "எவண்டா அவன்... சவுண்டு விட்டது" என்றான் கர்ஜனையாக.


அந்தக் கூட்டத்தில் ஒருவன் மட்டும் தாமுவை அடையாளம் கண்டுகொண்டுவிட, "டேய்... டீ.ஜே டா... சாரி கேளுங்கடா" என அலறினான் முழு பயத்தில்.


ஒரு சிலருக்கு மட்டும் அவன் யார் என்பது புரிந்தது. பலருக்குத்  தெரியவில்லை. ஆனாலும் மொத்தமாக அதிர்ந்து நின்றது அந்தக் கூட்டம். அங்கே வேலை செய்பவர்களும்தான்.


தலையில் கை வைத்துக்கொண்டான் விக்ரம்.


அதற்குள், முதலில் இகழ்ச்சியாகப் பேசியவன் பயந்துபோனவனாக, என்ன  ஏது  என எதுவும் புரியவில்லை எனும் பாவத்தில், "சாரி... சாரி... சாரி ப்ரோ! தெரியாம பேசிட்டேன்" என்றவாறு தாமுவை நெருங்கி அவனைத் தொட வர, அடுத்த நொடி வலியில் அலறினான்.


காரணம் அவன் கையை அப்படியே வளைத்துப் பிடித்திருந்தான் செல்வம்... தாமுவின் மெய்க்காப்பாளன்... அவனுடைய பிரத்தியேக காரோட்டி எல்லாம்.


அப்படியே அவனை ஒரு தள்ளு தள்ளியவன், "அண்ணா நெஞ்சுல கை வெக்கற அளவுக்குப் பெரிய பருப்பாடா நீ! அவங்க யார்னு தெரியும் இல்ல" என்றான் உச்சபட்ச கோபத்தில்.


"செல்வம்" என தாமு அவனை அடக்க, "சாரிண்ணா!" என்றவன், "என்ன சொன்ன... லோக்கல் கை...ன்னா? ஆமான்டா... நாங்க இந்த நாட்டோட லோக்கல் ஆளுங்கதான். வேட்டி எங்க லோக்கல் டிரஸ்தான் ஒத்துக்கறேன்" என்று சூடாகச் சொன்னவன், "நீயெல்லாம் எந்த ஊர் மேக்கு? ஏதாவது ஃபாரின் ப்ரீடா?" எனக் கேட்டான் எள்ளலாக. அவனுடன் வந்த ஒவ்வொருத்தனின் முகமும் கலவரத்தைப் பூசிக்கொண்டது


விக்ரம் தாமுவைப் பார்த்து கிண்டலாகச் சிரித்து வைக்க, "ஓய் என்ன, அவன் என்னோட தளபதிடா?" என்றான் தாமு பெருமையாக.


அதற்குள் அந்த பாரின் மேலாளர் அங்கே வர, அந்தக் கூட்டத்தைக் கலைக்க, அவர்களிடம் மன்னிப்பு வேண்ட என சில நிமிடங்கள் கரைய, அங்கிருந்து கிளம்பினர் மூவரும்.


"ஆல் தி பெஸ்ட்டா மாமா" என்று கிண்டலாகச் சொல்லி தாமுவிடம் ஒரு முறைப்பைப் பெற்றுக்கொண்டு விக்ரம் அப்படியே விடைபெற, அடக்கப்பட்ட சிரிப்புடன் வாகனத்தை இயக்கினான் செல்வம்.


"ரோட்ப் பாத்து வண்டிய ஓட்டு எரும... இப்படி லூசு மாதிரி இளிச்சிட்டே மீடியன்ல வுட்ற போற?" என அவனைக் கடுப்படித்தான் தாமு.


அவன் கவலை அவனுக்குத்தானே தெரியும். இன்னும் சற்று நேரத்தில் வானத்திலிருந்து வந்து குதிக்கப்போகிறாள் அவனுடைய இராட்சசி. அதுவும் மிக நெடிய ஏழு வருடங்களுக்குப் பிறகு அவளைக் காணப் போகிறான்.


எப்படி இருப்பாளோ!? எப்படி நடந்துகொள்வாளோ!? அவளைப் பார்த்ததும் தான் எப்படி நடந்துகொள்வோமோ!? என ஆயிரம் கேள்விகள் அவனுக்குள்.


விமான நிலையத்தை நெருங்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக மாறிப்போனது. விமானம் தரையிறங்கியதற்கான அறிவிப்பு வரும் வரை, அதில் வந்த பயணிகளெல்லாம் வெளியில் வந்த பிறகும் கூட அதுவேதான் தொடர்ந்தது.


எல்லோரும் வந்த பிறகும் நிலமங்கையைத் தேடி அவனுடைய கண்கள் சுழன்றவண்ணம் இருந்தன. "இந்த ஃபிளைட்ல வரதாத்தான கேசவன் சொன்னான்?" எனக் செல்வத்திடம் கேட்டான் சந்தேகமாக. 


"ண்ணா... இந்த ஃபிளைட் தாண்ணா" என்றான் செல்வமும்.


ஆனால் தாமோதரன் அவளைப் பார்க்கவில்லையே தவிர மங்கை அவனைப் பார்த்துவிட்டாள்.


அவளை அழைத்துச் செல்ல விமான நிலையத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றுதான் சொல்லியிருந்தாள். இருந்தாலும் விடமாட்டார்கள் என்று தெரியும். ஆனாலும் இவனை... இந்த தாமோதரனை இங்கே எதிர்பார்க்கவில்லை.


கொஞ்சம்... கொஞ்சமில்லை... கொஞ்சம் அதிகமாகவே  அவளுக்குப் படபடப்பாகிப்போனது. அப்படியே அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டாள். ஆனால் அவள் பார்வை மட்டும் தாமுவின் மீதே இருக்க, அந்தப் பார்வை துளைத்ததாலோ என்னவோ அனிச்சையாக அவள் இருந்த பக்கம் திரும்பினான் தாமோதரன்.


முதலில் அவளை அடையாளம் காணக்கூட இயலவில்லை. ஒல்லியாக,  கொஞ்சம் உயரமாக, ஜீன்ஸ் மற்றும் ஒரு டீஷர்ட் அணிந்து அதன் மேல் ஒரு ஜெர்கின் அணிந்து, மீசை முளைக்காத ஒரு பதின்ம வயது சிறுவன் என்றே அவளை நினைத்துவிட்டான். முழுவதுமாக ஒரு 'டாம் பாய்' தோற்றத்திலிருந்தாள்.


அவளுடைய கண்கள்... அந்தக் கண்கள் மட்டும்தான் அவளை அவனுக்குக் காண்பித்துக் கொடுத்தது. அடுத்த நொடி கொதிநிலைக்குப் போனான் தாமு. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள அவனுக்கு சில நிமிடங்கள் தேவைபட்டது.


அவளுடைய அந்தத் தோற்றம், அதைக் கொஞ்சம் கூட சகித்துக்கொள்ள இயலவில்லை.


'இவ எப்படி திரும்ப வந்தாலும், இவள அப்படியே அக்சப்ட் பண்ணிக்கனும்னு நினைச்சிருக்க... இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாத... எப்படி இருந்தாலும் இவ உன்னோட நிலமங்கைதான்' எனக் கண்களை மூடி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு ஓரளவிற்கு அவளை எதிர்கொள்ளத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டான்.


பின் அவளை நோக்கி அவன் சில எட்டுகளை எடுத்து வைக்க, அவளும் அவனை நோக்கித்தான் வந்துகொண்டிருந்தாள்.


'நீ எப்படி இருக்க? அத்த மாமா எப்படி இருக்காங்க?' போன்ற பரஸ்பர நல விசாரிப்புகள் இல்லை, 'என்னை பிக் அப் பண்ண நீ ஏன் வந்த?' என்றக் கேள்விகளை அவள் கேட்கவில்லை. 'நீ ஏன் இப்படி மாறிப்போயிருக்க?' என்ற கோபமாக இவன் அவளைக் குற்றஞ்சாட்டவில்லை. ஏன், ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை.


"கிளம்பலாம்... ஹாண்ட் லக்கேஜ் மட்டும்தான்" என அவள் நேரடியாகச் சொல்லிவிட, உடனே நிலமங்கையை அழைத்துக்கொண்டு கிளம்பினான் தாமோதரன்.


பேச எதுவுமில்லை என்பதுபோல அவள் இருக்க, தாமோதரனுக்கு அவளுடன் பேசவே பிடிக்கவில்லை.


செல்வம் காருடன் காத்திருக்க, "டேய், நீ டாக்சி பிடிச்சு வந்துடு. நான் ட்ரைவ் பண்ணிக்கறேன்" என்று அவனை அனுப்பிவிட்டான் தாமோதரன். 


தப்பித்தவறி வார்த்தைகள் ஏதாவது தடிக்க நேர்ந்தால் அவர்களுக்கு இடையில் யாரும் வேண்டாம் என்பது அவனது எண்ணமாக இருக்க, மறுக்க இயலாமல் செல்வம் இறங்கிக்கொண்டான்.


தாமு வாகனத்தைக் கிளப்பவும், அவனுக்கு அருகிலேயே வந்து உட்கார்ந்த மங்கையவள் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.


சலனமற்று நிர்மலமாக இருந்த அவளுடைய முகத்தையே அசைவற்று பார்த்திருந்தான் அவன்.


பளிங்கு போன்ற நெற்றி, அவள் வழக்கமாக வைக்கும் சிறு பொட்டுக் கூட இல்லாமல் வெறுமையாக இருக்க, காதில் மட்டும் போனால் போகிறது என்று சிறிய வெள்ளைக் கல் தோடு அணிந்திருந்தாள்.


மூக்கில் அது கூட இல்லை. மூக்குத்தி போட்டதன் அடையாளமாகச் சிறு புள்ளி மட்டுமே இருந்தது.


அதைப் பார்த்ததும் அப்படி ஒரு கோபம் உச்சிக்கு ஏற, அவன் கையில் அந்த வாகனம் ஒரு குலுங்கு குலுங்கிப் பின் கிளம்பியது.


பட்டென நிமிர்ந்தவள் அதிர்வான ஒரு பார்வையை அவனிடம் வீசிவிட்டு, மறுபடியும் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துகொண்டாள்.


இவ்வளவு காலம் கடந்த பின்னும் அவளுடைய மனதில் பட்ட காயம் கொஞ்சம் கூட ஆறவில்லை என்பதை அவளுடைய அந்தப் பார்வை அவனுக்கு உணர்த்த, அதை ஆற்றும் வழி என்ன என யோசித்தவாறு தன்னை மேலும் மேலும் நிதானப்படுத்திக்கொண்டு வாகனத்தைச் சீராக ஓட்டத் தொடங்கினான் தாமோதரன்.


அந்த வாகனம் அவர்கள் ஊரான பொன்மருதத்தை நோக்கிக் கிளம்ப, அப்பொழுதே மணி அதிகாலை நான்கு.


***


பேச்சற்ற அமைதியான பயணத்தில் இரண்டு மணிநேரங்கள் கடந்திருந்தன.


கொஞ்சம் கூட மேடு பள்ளம் இல்லாத தார்ச் சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றது அந்த உயர் இரக மகிழ்வுந்து. வழி நெடுகிலும் பசுமையைப் போர்த்தி இருக்கும் விளை நிலங்கள்தான்.


அன்றைய பொழுது கொஞ்சம் கொஞ்சமாகப் புலர்ந்துகொண்டிருந்தது. பரந்து விரிந்திருக்கும் அந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நடுவில், அவளுக்கே அவளுக்கென்று சொந்தமாக இருந்த அந்த இரண்டு ஏக்கர் நிலம் கண்ணில் தென்படவும், நிலமங்கைக்கு மனது படபடவென அடித்துக்கொண்டது.


அடுத்த நொடி கொஞ்சமும் யோசிக்காமல்,  "எக்ஸ்க்யூஸ் மீ... கொஞ்சம் காரை நிறுத்துங்க" என்றாள் மங்கை யாரோ முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு கால் டாக்சி டிரைவரிடம் சொல்வதைப்போல.


'தாமு... தாமு... என அழைத்து வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தவளா இவள்?' என்ற எண்ணம்தான் தாமோதரனுக்கு உண்டானது.


அவளுடைய பார்வையிலும் பேச்சிலும் தெறித்த அலட்சியம், அவனுடைய ‘தான்’ என்கிற அகங்காரத்தைச் சீண்டிவிடுவதாகவே இருந்தது.


'பல வருடங்கள் கழித்து இந்த மண்ணை மிதிக்கிறாள். அவளிடம் உன் கோபத்தைக் காண்பித்து விடாதே' என அவனுடைய அறிவு அவனை எச்சரிக்கை செய்ய, அவள் சொன்ன இடத்தைத் தாண்டி சில மீட்டர்கள் தள்ளியே வாகனத்தை நிறுத்தினான்.


அதையெல்லாம் கண்டுகொள்ளும் மனநிலையில் அவளில்லை போலும். வேகமாகக் கீழே இறங்கி, மீண்டும் பின்னோக்கிச் சென்றாள் மங்கை.


வரிசையாக வளர்ந்திருந்த பனை மரங்கள், காற்றின் வேகத்தில் சலசலக்க, அவை தலை அசைத்து அவளை வாவென வரவேற்பது போலவே தோன்றியது.


அந்த மண்ணின் ஒவ்வொரு அடியும் அவளுக்கு அத்துப்படி. சரியாக அவளுக்குச் சொந்தமாக இருந்த அந்த நிலத்திற்குள் இறங்கி வரப்பின் மீது நடந்தவள் அவள் பார்வையைச் சுழலவிட, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் எனக் காட்சி அளித்தது அந்தப் பகுதி முழுவதும்.


இதைத்தானே பார்க்க முடியாமல் போய் விடுமோ என அஞ்சினாள்!


இது எப்படிச் சாத்தியப்பட்டது?! எவ்வளவு யோசித்தும் விடை காண முடியவில்லை. கண்களை மூடி ஆழ்ந்து மூச்சை எடுத்து அந்தப் பசுமையின் மணத்தை நுரையீரல் முழுதும் நிறப்பிக்கொண்டாள் நிலமங்கை.


மூடிய கண்களுக்குள்ளும் கூட அந்த இடத்தின் பசுமை நிறைந்தே இருக்க, கண்களில் கண்ணீர் வழிந்தது.


ஒரு வேளை அந்தக் கண்ணீர் கூட பச்சை நிறமாக இருக்குமோ? கண்களைத் துடைத்துக்கொண்டவள் ஈரமான தன் உள்ளங்கைகளைப் பார்த்துக்கொண்டாள்.


கண்ணீர் கண்ணீராக மட்டுமே காட்சி அளிக்க, அப்படியே கீழே குனிந்து அந்த வரப்பின் ஓரத்தில் சந்தனம் போலக் குழைந்திருந்த சேற்றைச் சுட்டு விரல் நுனியில் தொட்டு எடுத்தவள் அதை அப்படியே நெற்றியில் இட்டுக்கொண்டாள்.


விழி அகலாமல் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான் அவளைப் பின்தொடர்ந்து வந்த தாமோதரன்.


அவளுடைய தோற்றத்திலிருந்த மாற்றத்தை, அவனுக்குக் கொஞ்சம் கூட பிடிக்காத அந்த மாற்றத்தை, இரசிக்கவே முடியாத அளவுக்கு அவளிடம் ஏற்பட்டிருந்த அந்த மாற்றத்தை, ஒரு சலிப்புடன்... ஒரு இயலாமையுடன்... பார்த்துக்கொண்டிருந்தான்.


அவனுடைய அந்தப் பார்வை அவளை ஊசியாய் தைக்க, அப்படியே திரும்பி அவளையே பார்த்துக்கொண்டிருந்தவனை ஒரு பார்வை பார்த்தாள், கண்கள் முழுவதும் வெறுப்பை உமிழ்ந்து.


காரணம், மடிக்கணினியைத் தட்டிக்கொண்டு கார்ப்பரேட் கலாச்சாரத்திற்குப் பழக்கப்பட்டுப்போனவன் இல்லை, தமிழனின் நிறத்துடன் கண்ணைப் பறிக்கும் அளவுக்குத் தூய்மையான வெண்ணிற கதர் வேட்டி வெள்ளை நிற  சட்டையில், அளவான உயரமும் அதற்கேற்ற உரமேறிய உடல்வாகுடனும், கையைக் கட்டியபடி கம்பீர தோற்றத்துடன் அங்கே நின்றுகொண்டிருப்பவன் இந்த நிலமங்கையைப் போற்றிப் பாதுகாக்கும் தாமோதரன் என்று இவளுக்குத்தான் தெரியாதே!


0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page