Nee Sonna Oor Vaarthaikaga! 4
Updated: Mar 17
பகுதி -4
ஹரியைப் பொறுத்தவரை, அவன் ஒன்றை நினைத்துவிட்டால், அவனது சிந்தனை செயல் என அனைத்தும் அதை நோக்கியே ஒருமுகப்பட்டிருக்கும்!
அதுபோல், ஒரு செயலில் இறங்கிவிட்டான் என்றால் முழு மூச்சாக அதில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டான். அவனுடைய அந்தக் குணமே படிப்பிலாகட்டும், பங்குபெறும் போட்டிகளிலாகட்டும் அவனை முதல் இடத்தில் வெற்றிப் பெறச் செய்தது.
ஹரியின் அப்பா ராதாகிருஷ்ணன் தனது சொந்த முயற்சியால் ஆர்.கே. என்டர்ப்ரைசஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி, நடத்தி வருகிறார். அம்மா விஜயா ஒரு அன்பான குடும்பத்தலைவி. இனிமையாகப் பாடுவார். கணவர் மற்றும் குழந்தைகளே உலகம் என்று வாழும் ஒரு வெகுளியவர்.
ஒரே ஒரு சகோதரி, மருத்துவர். சமீபத்தில்தான் திருமணம் முடிந்து சென்னையில் வசிக்கிறார். அவருடைய கணவரும் ஒரு மருத்துவர்தான்.
ஹரி அவனுடைய அப்பாவிற்கு அவ்வளவு செல்லம்! அவரும் அவனை ஒரு நண்பனைப்போலதான் நடத்துவார்.
சமீபமாகவே தொழில் சார்ந்த கருத்து வேறுபாடுகளால் பனிப்போர் மூண்டிருந்தது இருவருக்குள்ளும்.
இதுவரையிலும் கூட மகன் ஒன்று சொல்லி அவர் அதை மறுத்ததே இல்லை. அதுபோல்தான், அவனது அப்பா ஒன்றைச் சொல்லிவிட்டார் என்றால் ஹரியால் அதை மீறவே முடியாது. அவரிடம் அவ்வளவு அன்பும் மரியாதையும் அவனுக்கு உண்டு
இருவரில் யாருடைய கருத்து முதலில் சொல்லப்படுகிறதோ அதுவே செயல்வடிவம் பெரும். பல சமயங்களில், முதல் வார்த்தை யாருடையது என்ற போட்டியே வந்துவிடும் இருவருக்கும். அந்தக் கூற்றின்படி ராதாகிருஷ்ணன் முந்திக் கொண்டதால்தான் ஹரி மறுக்க முடியாமல் எம்.ஈ. சேர வேண்டியதாக ஆகிப்போனது.
ஒரு ஆர்வமேயின்றி, தன் தந்தைக்காக கல்லூரி வரத் தொடங்கியவனை முழு ஆர்வத்துடன் தனக்காகக் கல்லூரிக்கு வரச் செய்திருந்தாள் ஸ்வேதா.
எது எப்படியோ அவனது தந்தையின் தொழிலை முயன்று பார்க்கலாம் என்றுதான் நினைத்தானே தவிர முழுமனதுடன் அவனால் அதில் ஈடுபடமுடியுமா என்று அவனுக்கே தெரியவில்லை.
தனது வெளிநாடு வாழ் ஆசையைத் துறக்கவும் அவனுக்கு மனமில்லை. மேலும் ஒன்றரை வருடப் படிப்பு மீதம் இருப்பதால் பக்குவமாக ஸ்வேதாவிடம் தன் காதலை வெளிப்படுத்தி அவளது மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஓர் ஓரத்தில் இருக்கவே செய்தது.
அதற்கு முன் ஒரு முறை அவர்கள் தொழிற்சாலைக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் அவ்வளவுதான்.
அவன் விடுதியில் தங்கிப் படிக்கத் தொடங்கிய பின், தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை என்றால் திருவள்ளூர் சென்றுவிடுவான் ஹரி.
எக்காரணம் கொண்டும் ஃபேக்டரிக்கு வரும்படி அவனைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அப்பாவிடம் அவன் முன்பே சொல்லியிருந்த காரணத்தினால் அவர் அவனை அங்கு அழைப்பதும் இல்லை. தொழில் பற்றி அவனிடம் எதுவும் பேசுவதும் இல்லை.
இந்த முறை சனி, ஞாயிறு, திங்கள் என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. எனவே வெள்ளி மதியமே கிளம்பி அவன் நேராகப் போய் நின்றது அவர்களுடைய தொழிற்சாலைக்குதான்.
வெறும் எழுபதுபேர் மட்டுமே வேலை செய்யும் தொழிற்க்கூடமும் அதை ஒட்டிய சிறிய அலுவலகமும் அங்கே அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.
அதனுள்ளே நழைந்ததும் அவன் கண்ட காட்சி அவன் மனதை மிகவும் நெகிழ செய்துவிட்டது.
தான்தான் அங்கே முதலாளி என்கிற தோரணையெல்லாம் இல்லாமல் சில தொழிலாளர்களுடன் சேர்ந்து பழுதுபட்டிருந்த ஒரு இயந்திரத்தைச் சரி செய்ய போராடிக்கொண்டிருந்தார் அவனுடைய அப்பா.
"அப்பா" என்ற அவனது அழைப்பில் திடுக்கிட்டுத் திரும்பியவர், "ஹரிப்பா! நீ என்ன இந்த நேரத்துல இங்க வந்திருக்க?" என்று வியந்தே போனார். சத்தியமாக அவர் தன் அருமை மகனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது குரலே அவனுக்கு உணர்த்தியது.
"ஏன்பா? நான் இங்கெல்லாம் வரக்கூடாதா?" என்று அவன் கிண்டலாகக் கேட்க,
அதற்கு அவரோ, "நீ இங்க வரணும்னுதானப்பா நான் காத்துட்டு இருக்கிறேன்" என்று நெகிந்து போனார்.
உடனே பேச்சை மாற்ற வேண்டி, "நீங்க ஏன்பா இந்த வேலையெல்லாம் செஞ்சிட்டு இருக்கீங்க? ஒரு மெக்கானிக்கைக் கூப்பிடலாம் இல்ல?” என்று கேட்க,
"இல்லப்பா, சின்ன ஃபால்டாத்தான் இருக்கும், சரி செய்ய முடியுமான்னு பார்த்தேன். முடியலனா வெளியில இருந்துதான் ஆளைக் கூப்பிடனும். இன்னைக்கு ஒரு முக்கியமான ஆர்டரை வேற முடிச்சுக் கொடுக்க வேண்டியதா இருக்கு" என்று அவர் கவலையுடன் சொல்ல,
“சரி, நீங்க கொஞ்சம் நகருங்க. நான் ட்ரை பண்ணி பார்க்கறேன்" என்றவனை அதிசயமான ஏதோ வேற்றுக் கிரக வாசியைப் பார்ப்பதுபோல் பார்த்தவாறே அவர் நகர்ந்து அவனுக்கு வழிவிட, சொன்னதுபோல் அடுத்த இருப்பது நிமிடத்தில் அதைச் சரிசெய்யவும் செய்தான் ஹரி யூடியூப் உதவியுடன்.
பின்பு தாமதமின்றி தடைப்பட்ட வேலைகள் தொடர்ந்திட, காட்டன் வேஸ்டில் கைகளைத் துடைத்தவாறே வந்த மகனைக் கட்டி அணைத்துக்கொண்டார் அந்தப் பாசக்கார தந்தை.
அலுவலக அறையில் வந்தமர்ந்து தேநீர் வரவழைத்துப் பருகிக்கொண்டே, "இங்க இருக்குற மெஷினரீஸ் எல்லாமே ரொம்ப ஓல்ட்தான் இல்லையப்பா?" என்று ஹரி கேட்க,
"ஆமாம் ஹரிப்பா! இப்ப ரொம்ப அட்வான்ஸ்ட் மாடல் மெஷஸ்லாம் வந்துடுச்சு. ஆனா நிறைய இன்வெஸ்ட் செய்ய வேண்டியதாக இருக்கும். இப்ப இருக்கற காம்படிஷன்ல என்னால இந்தப் பழைய மெஷின்ஸ வெச்சிட்டு பிசினஸ்ஸ நல்லபடியா நடத்த முடியல. பழைய கஸ்டமர்ஸ் சில பேரை மட்டுமே நம்பி ஓட்டிட்டு இருக்கேன்.
பேசாம இழுத்து மூடிட்டு போயிடலாமான்னு கூட யோசிச்சேன். ஆனா இங்க வேலை செய்யறவங்க பல பேர் ரொம்ப வருஷமா நம்ம கூடவே இருக்காங்க.
நாம அப்படி செஞ்சுட்டா அவங்கலாம் ரொம்பவே கஷ்டப்படுவாங்கப்பா. அதனாலதான் விட முடியாம ரன் பண்ண வேண்டியதா இருக்கு" என அவன் கேட்பதற்காகவே காத்திருந்தவர் போன்று, வருத்தத்துடன் தன் நிலையை விளக்கினார்.
துயரம் சுமந்த அவரது குரல் மனதைத் தைக்க, ஸ்வேதா சொன்ன ‘பத்து குடும்பத்தையாவது வாழ வைக்கணும்’ என்கிற வார்த்தைதான் நினைவில் வந்தது.
‘மாமனாருக்கு ஏத்த மருமகதான் அவ’ என்று எண்ணிக்கொண்டான். அங்கே வேலை செய்பவர்களுக்காக இரவு உணவு வரவழைக்கப்பட, அதையே தந்தையும் மகனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.
பிறகு அவர்கள் அந்த ஆர்டரை முடித்து டெலிவரி செய்து வீடு வந்து சேர இரவு பதினொன்று ஆனது.
காரில் கணவருடன் வந்து இறங்கிய மகனைப் பார்த்த விஜயாவால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் ஃபேக்டரி சென்றதை அறிந்து வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
கணவர் உறங்கச் சென்ற பின் மகனை சந்திக்க வந்தவர், "ஹரி கண்ணா! என்னப்பா ஒரே அதிர்ச்சியா கொடுக்கற?" என்று ஆர்வமுடன் கேட்க,
அவர் ஃபேக்டரி சென்றதைப் பற்றித்தான் சொல்கிறார் என்பது புரியவே, "இதுல என்னமா அதிர்ச்சி இருக்கு? இன்னைக்கு எனக்கு அங்க போகணும்னு தோனிச்சு, போனேன் அவ்வளவுதான்" என்று சொல்ல,
அதற்கு அவர், "உனக்கு எப்படியோப்பா, ஆனா எங்களுக்கு இது ரொம்பவே சந்தோஷமான விஷயம். இந்த பிசினஸ் அப்பா ஆர்வத்தோட ரொம்பவும் கஷ்டப்பட்டு ஸ்டார்ட் பண்ணது.
அதுவும் இப்ப கொஞ்ச நாளா தொழிலைக் கவனிக்க ரொம்ப சிரமப்படறார். அதனாலதான் உதவிக்கு நீ இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கறார் பாவம். இதுல உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லன்னு தெரிஞ்சதும் உன்னை நிர்ப்பந்திக்க அவர் விரும்பல. என்னையும் உங்கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார். நீ இன்னைக்கு அங்க போனது அவருக்கு எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும்னு உனக்குத் தெரியாது ஹரிப்பா" என்று கண்களில் நீர் கோர்க்க சொல்லி முடித்தார் விஜயா.
இதுநாள்வரை ஒரு பிடிவாதத்துடன் தன் கண்களை எவ்வளவு இறுக்கமாக மூடிக்கொண்டிருந்திருக்கிறான் என்பது அவனது மனதைச் சுட்டது.
அப்பாவுக்காகக் கட்டாயம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவாறே, "சரி, ரொம்பவே லேட்டாகிடுச்சு, போய் தூங்குங்கம்மா, காலைல பேசிக்கலாம்" என்று அவரை அனுப்பியவன் அடுத்துச் செய்ய வேண்டியவற்றை திட்டமிடத் தொடங்கிவிட்டான்.
தனது மகனின் குணமறிந்த அவனது அன்னையோ அவனின் மாற்றத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்றுதான் யோசித்தார்.
சனி, ஞாயிறு இரு தினங்களும் தன் மடிக்கணிணியே கதியென்று கிடந்தவனைப் பார்த்து, ‘இவன் சொன்னது போல சும்மாதான் ஃபேக்டரிக்கு போனானா? நாமதான் கொஞ்சம், எதிர்பார்த்து ஏமாந்துட்டோமா?’ என்று பெற்றோர் இருவரும் குழம்பிப் போயிருந்தனர்.
திங்களன்று தந்தைக்கு முன்னதாகவே அலுவலகம் கிளம்பி தயாராக இருந்த ஹரி அவரை எதிர்பார்த்து ஹால் சோஃபாவில் அமர்ந்தபடி, "உங்க வீட்டுக்காருக்குக் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லமா, இவ்வளவு லேட்டாவா ஃபேக்டரிக்குப் போறது" என்று நீட்டி முழங்கி சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டவாறே அங்கே வந்த ராதாகிருஷ்ணன்,
புன்னகைத்தவாறே "ம்ஹும்" என்று செரும,
"மீ எஸ்கேப்" என்று ஓடிப்போய் அவன் காரை ஸ்டார்ட் செய்ய அருகில் போய் அமர்ந்தார்.
பிறகு ஃபேக்டரியை சென்றடைய, அன்றைய தினம் முழுதும் அங்கே உள்ள நிலைமையை ஆராயவே சரியாகப்போனது ஹரிக்கு.
விடுமுறை முடிந்து அடுத்த நாள், விஜயாவின் ஸ்பெஷல் தயாரிப்பான காரகுழம்பும் காரைக்குடி உருளைக்கிழங்கு ஃப்ரையும் பேக் செய்துகொண்டு கல்லூரிக்குக் கிளம்பிச் சென்றான்.
அன்று மதியம் நண்பர்களுடன் உற்சாகமாக அவன் கொண்டு சென்ற உணவை உண்ணத் தொடங்க வர்ஷினியோ, "ஷ்ப்பா, செமக்காரம்," என்று நழுவ,
அதற்கு பாலுவோ, "அவ பருப்பு சாதம் சாப்ட்டாலே காரம்னு சொல்லுவா. இதுல காரக்குழம்ப எங்க இருந்து சாப்பிடப்போறா. அவளோட பங்கையும் நானே எடுத்துக்கறேன்" என்று கிண்டலடிக்க,
அதற்கு வர்ஷினி கையில் வைத்திருந்த புத்தகத்தாலேயே அவனை இரண்டு அடி கொடுக்க, இது எதையும் கண்டுகொள்ளாமல் அந்த உணவை இரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் ஸ்வேதா.
"அடிப்பாவி, இங்க என்னடான்னா ஒரு உலக யுத்தமே நடந்துட்டு இருக்கு, நீ பாட்டுக்குச் சோறுதான் முக்கியம்னு ஒரு கட்டுக் கட்டிட்டு இருக்க! உனக்கு காது கீது செவிடாப்போச்சா என்ன?” என்று பாலு வியக்க, "பாலுண்ணா சாப்பிடும்போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க. காரக்குழம்பு சாதம் செமையா இருக்கு. இந்த பொடேடோ ஃப்ரை சான்ஸே இல்ல. முதல்லல்லாம் எங்கம்மா இப்படித்தான செய்வாங்க. அப்பாக்கு அசிடிட்டி ப்ராப்லம் இருக்கறதால இப்பல்லாம் காரமாவே சமைக்கறதேயில்ல. நாக்கே செத்துப் போச்சு" என்று குறைப்பட்டுக் கொண்டே அந்த உணவை ஒரு பிடிப் பிடித்தாள் ஸ்வேதா.
அவள் சப்புக்கொட்டி அந்த உணவை உண்ணும் அழகை தன் கண்களால் பருகியவாறு, "ஆஹா!! நம்ம வீட்டு சமையல் முறைக்கு இவ நல்லாவே செட் ஆயிடுவா போலிருக்கே! நம்ம டேஸ்ட் இவளுக்கும் பிடிச்சிருக்கே" என மனதிற்குள்ளேயே ஆனந்தப்பட்டுக் கொண்டான் ஹரி.
தொடர்ந்த நாட்களில் ஒருநாள் விடுமுறை என்றாலும் கூட தொழிற்சாலை செல்லத் தொடங்கினான் ஹரி.
திரும்ப வரும்பொழுது ஸ்வேதாவுக்கு பிடித்த உணவு வகைகள் அவனது அம்மாவின் கை மணத்தில், மற்றவர்களுடன் சேர்ந்து அவளுக்கு வந்துசேரும்.
அவளும், வர்ஷினியும் விஜயாவிற்கு அழைத்து நன்றி சொல்வதுடன் அவரது கை மணத்தை வெகுவாகப் புகழ்ந்து தள்ளுவார்கள். அவரும் இரண்டு பெண்களும் அவனுடைய கல்லூரி தோழிகள் என்ற வகையில் மகிழ்ச்சியாகவே பழகலானார்.
சிறிது நாட்களில் அவர்களது தொழிலை விரிவுப் படுத்துவதற்கான சில திட்டங்களைத் தயார் செய்து அவற்றைச் செயல்படுத்தவும் தொடங்கினான் ஹரி.
அந்தச் சமயத்தில்தான் ஸ்வேதாவின் பிறந்தநாளும் வந்தது. அந்தநாள் அவர்களுடைய வாழ்க்கையின் மறக்கமுடியாத நாளாகவும் அமைந்தது.