top of page

Nee Sonna Oor Vaarthaikaga! 14

Updated: Mar 17, 2023

பகுதி - 14


ஏழு மணிக்கு வந்து சேர வேண்டிய இரயில் மாழையினால் தாமதமாக ஏழு நாற்பதுக்குத்தான் பழவந்தாங்கல் இரயில் நிலையத்தை அடைந்தது!


மழை லேசாகத் தூறிக் கொண்டிருக்க இரயிலிலிருந்து இறங்கி நடைமேடையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்த ஸ்வேதா பத்திரமாக இரயில் நிலையம் வந்து சேர்ந்துவிட்டதாக அண்ணனுக்கு மெசேஜ் செய்துவிட்டு, மழை அதிகரிப்பதற்குள் வீட்டிற்குச் செல்ல முடியுமா? என யோசிக்க, கையில் வைத்திருந்த அவளது கைப்பேசி நழுவிக் கீழே விழுந்து சிதறியது.


சிதறிய பாகங்களனைத்தையும் எடுத்து பொருத்தியவள் மின்வெட்டினால் வெளிச்சம் குறைவாக இருந்த காரணத்தால் தனியே போய் விழுந்திருந்த சிம்கார்டை கவனிக்கத் தவறினாள்.


இரயில் நிலையமே வெறிச்சோடி ஆளரவம் இ.ன்றி இருந்ததை அப்பொழுதுதான் உணர்ந்தாள் ஸ்வேதா.


ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்ததால் அதன் பிறகு வரவேண்டிய அனைத்து இரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.


அந்தச் சூழ்நிலையே கொஞ்சம் கிலியைக் கிளப்ப அங்கிருந்து அவள் செல்ல எத்தனிக்க, யாரோ வரும் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்


அங்கே அந்த மனோஜும் அவனுடன் மேலும் இருவரும், அவளை நோக்கி வந்து கொண்டிருந்தனர் முழு போதையில் தள்ளாடியபடி!


அவர்களைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தவள் எதிர்புறமாக நடக்கத்தொடங்கினாள்.


நந்தா அலுவலகம் சென்றுவிட்டதால் பாலுவிற்கு அழைக்கலாம் என கைப்பேசியைப் பார்க்க அது சிம்கார்ட் இல்லை என்பதைத் தெரிவித்தது. பயந்துதான் போனாள் ஸ்வேதா.


அதற்குள் மூவரும் அவளை நெருங்கியிருந்தனர்.


"இவதான்! மச்சி அன்னைக்கு என்னை மிரட்டினவ" என அருகில் இருந்தவனிடம் அவளைச் சுட்டிக்காட்டிய மனோஜ், "அவ ஓகே ஆகியிருப்பாடா! இவதான் குறுக்க பூந்து கட் பண்ணி விட்டுட்டாடா மச்சான்" என்றவன்,


"அந்தப் பெண்ணே வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கும்போது நீ என்னடி ரொம்ப ஓவரா ஆடற?" என நிதானமில்லாமல் ஒருமையில் தாறுமாறாகப் பேசத்தொடங்கினான்.


சற்று நிதானித்தவள் தைரியத்தைக் கூட்டி, "ஏய்! மரியாதையா பேசு இங்கேயே இரயில்வே போலீஸ் இருப்பாங்க" என எச்சரிக்க, அவள் சொன்ன விதத்தில் அவனுக்கு மேலும் ஆத்திரம்தான் கூடியது.


"கொஞ்சம் கூட பயமே இல்லாம எவ்ளோ திமிரா பேசறா பாருடா! இவளையெல்லாம் சும்மா விடக்கூடாதுடா மச்சான்!'' என மற்ற இருவரும் அந்த மனோஜை உசுப்பேற்றி விட, கையில் வைத்திருந்த மது பாட்டிலை ஓங்கி அவளது தலையில் அடிக்க அவன் எத்தனிக்க அதிலிருந்து தப்புவதற்காக கொஞ்சம் பின்வாங்கினாள் ஸ்வேதா.


மழை நீரினால் ஈரமாக இருந்த நடைமேடையின் விளிம்பில் நின்று கொண்டிருந்தவள் அதைக் கவனிக்காமல் ஒரு எட்டு பின்னே வைக்க, கால் வழுக்கிப் பிடிமானமும் இல்லாமல் நிலை தடுமாறி தண்டவாளத்தில் போய் விழுந்தாள்.


அதற்குள் அங்கே ஏதோ அரவம் கேட்க அவர்கள் மூவரும் அங்கிருந்து நழுவி வேகமாக ஓடத்தொடங்கினர்.


கீழே விழுந்த வேகத்தில் நெற்றியில் அடிபட்டு இரத்தம் கசிந்து கொண்டிருக்க ஸ்வேதா மெதுவாக எழ முயற்சிச் செய்ய, பசியும் சோர்வும் சேர்ந்துகொண்டதால் அவளது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்றாலும் அவள் எழுப்பிய குரல் அவளுக்கே கேட்கவில்லை.


இருள் சூழ்ந்த பகுதியில் அவள் அங்கே விழுந்து கிடந்தது அந்த இடத்தைக் கடந்து சென்ற ஒரு சிலருக்கும் கூடத் தெரிந்திருக்கவில்லை.


நேரம் செல்லச் செல்ல கண்கள் இருட்டிக் கொண்டு வரவும் இனி உயிர் வாழ்வோம் என்ற நம்பிக்கையே கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது ஸ்வேதாவிற்கு.


அந்த நேரத்தில் அவளுக்கிருந்த எண்ணமெல்லாம் அவளுடைய தாய், தந்தை, சகோதரர்கள் என அனைவரையும் கடந்து கடைசியாக ஹரியை ஒரு முறையேனும் கண்களால் காண வேண்டும் என்பதில் வந்து நின்றது.


அவனுடன் பல காலம் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்ற ஆசை மட்டும் முன்பிருந்ததைக் காட்டிலும் பல்கிப் பெருகிக் கொண்டிருந்தது.


சிறிது நேரத்திற்கெல்லாம் ஹரியின் நினைவுகளுடனேயே மயங்கியிருந்தாள் ஸ்வேதா.


அதன்பிறகு அங்கே இரவுநேரப் பணிக்காக வந்த போலீஸ் அதிகாரிதான் அவளை கவனித்துவிட்டு நூற்றியெட்டில் அரசு பொது மருத்துவமனைக்கு அவளை அனுப்பி வைத்தார்.


அவளுக்கு விபத்து நடந்த அதே நாளில், குடி போதை தலைக்கேறிப்போய் அதே இரயில் நிலையத்தில் பணியிலிருந்த ஒரு பெண் காவலரிடம் மனோஜ் செய்த தகராறில் அவன் வசமாகச் சிக்கிவிட, முகநூலில் போலிக் கணக்கு வைத்து அவன் பல பெண்களிடம் குற்றச் செயலில் ஈடுபட்டிருப்பதும் பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட, அது ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கும் வந்திருக்க, அவன் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் போனது.


***


அன்றைய நினைவுகளின் தாக்கத்தில் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது ஸ்வேதாவிற்கு.


அன்று ஆம்புலன்ஸில் செல்லும்பொழுது அந்த மயக்க நிலையிலும் அவள் தன்னைத் தேடியது ஹரியின் நினைவில் வர, அருகில் அவனுடன் ஒன்றி உட்கார்ந்திருந்தவளின் கையின் மேல் தன் கையை வைத்து ஆதரவாக அழுந்தப் பற்றிக்கொண்டான்.


அவனது ஆதரவான அந்தச் செய்கையில் கரைந்துபோய் அவன் தோளில் தலை சாய்த்தாள் ஸ்வேதா. அவளது உரிமையான செயலில் ஹரியின் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.


"சரி எல்லாம் நல்லபடியா முடிஞ்சு நார்மல் ஆகித்தான காலேஜுக்கு வந்த? அப்பறம் ஏன் ஸ்வேதா என்னை அவாய்ட் பண்ண ஆரம்பிச்ச?" எத்தனையோ நாள் யோசித்து பதில் கிடைக்காத கேள்வியை அவளிடம் கேட்டான் ஹரி.


அவளை அறியாமல் தனது நெற்றியின் வலதுபுறத்தை விரல்களால் தடவிக் கொண்டவள், "ப்ச்சு... அந்த சமயத்தில் என்னுடைய முகம் எப்படி இருந்ததுன்னு ஞாபகம் இருக்கா ஹரி?' என்று கேட்டாள் ஸ்வேதா.


நெற்றி எலும்பு உடைந்து அதைச் சரிசெய்யவென அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால் அவளது முக அமைப்பு கொஞ்சம் மாறியிருந்தது அவனுக்கு நினைவில் வந்தது.


அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்து அவனுக்குக் கோபம் வந்துவிட, அவனது கனிவான பார்வை மாறிப்போனது.


"அதனால?" கடுமையாக ஒலித்த அவனது குரல் அவளுக்கு வருத்தத்தைக் கொடுக்க,


"இல்ல ஹரி, ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த பிறகு ஒருநாள், அம்மா நந்து அண்ணா கிட்ட கோபமா பேசிட்டு இருந்ததைக் கேட்டேன் ஹரி!


'உன்ன நம்பித்தான அவள இங்க விட்டுட்டுப் போனோம்! அந்த மழைல அவள ஏன் தனியா போக விட்ட? கல்யாணம் ஆக வேண்டிய பெண்ணுடா! இப்ப அவளோட முகத்தைப் பாரு எப்படி மாறியிருக்கு! என்னாலேயே அவள பார்க்க முடியல’ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சுட்டாங்க. உடனே போய் கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன் ஹரி!"


சொல்லிக்கொண்டிருக்கும் போதே முகத்தை மூடி அழத்தொடங்கினாள் ஸ்வேதா.


அவளது கைகளை நீக்கி தனது கைக்குட்டையால் அவள் முகத்தைத் துடைத்தவன், "இப்படி அழறதுன்னா நீ எதுவுமே சொல்ல வேண்டாம் ஸ்வேதா!" எனக் கொஞ்சம் கடுமையாகவே சொல்ல,


"சாரி" என்றவள் தொடர்ந்து அவளது அன்றைய மனநிலையைச் சொல்லத் தொடங்கினாள்.


கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்த பிறகு அது அவளது முகம்தானா என்று அவளுக்கே கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. அவளது முகமே, சற்றுப் பெரியதாகிப் போனது போல் ஒரு எண்ணம் அவளுக்கு. அதுவும் நெற்றியில் சர்ஜரியால் ஏற்பட்டிருந்த வடு வேறு! அதன் மேல் உரோமம் வேறு முளைத்து விகாரமாகக் காட்சியளித்தது. அதைப் பார்க்கும்போதே அவ்வளவு அதிர்ச்சியாய் இருந்தது.


அதுவும் கல்லூரிக்கு வந்த பிறகு மற்ற பெண்கள் பார்த்த பார்வை, அவளை அவ்வளவு தாழ்வு மனப்பான்மையில் தள்ளியது.


படித்தது எதுவுமே கொஞ்சம் கூட மனதில் பதிவதில்லை. எதையுமே ஞாபகம் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை ஸ்வேதாவால்.


ஏதோ ஒரு வகை பாதுகாப்பின்மை, அச்சம், கோபம் என அவளது மன நிலைமையைக் கொஞ்சமும் கையாள முடியாமல் தவித்துத்தான் போனாள். ஏனோ, அந்த நேரம் அவளது எண்ணங்களையும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் மனமில்லை. இத்தனைப் பிரச்சனைகளுக்கும் தான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி வேறு அவளைக் கொன்று கொண்டிருந்தது.


அப்பொழுதுதான் ஒரு நாள் காதலைப் பற்றிய பேச்சு வரவும், ஹரியினுடைய நினைவெல்லாம் அப்பொழுது அவளுக்கு இல்லை.


மனோஜ் போன்றோரை நினைத்து மட்டும்தான் அவள் அப்படிப் பேசியது. அவனைப் போன்ற ஒருவன் காதலிப்பதாகத் தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்வதாக அவள் சொன்னாளே தவிர ஹரியைப் பற்றிய உயர்வான எண்ணதால் அவனைப் பற்றித்தான் பாலு பேசுகிறான் என அவளால் நினைக்க முடியவில்லை.


ஹரி அவள் பேசியதைக் கேட்டதையோ அவன் வருத்தத்துடன் அங்கிருந்து போனதையோ அவள் இன்று வரை அறிந்திருக்கவில்லை!!


அவள் பேசிய அனைத்தும் அவள் அனுபவித்த துன்பங்களின் வெளிப்பாடு என்பதை அங்கே ஒருவரும் அறியாமல் போனதுதான் பரிதாபத்திற்குரியது.


ஹரி அவளது நடவடிக்கைகளால் வருந்திக் கொண்டிருக்க, அவளோ தனது முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல்தான் அவன் அப்படி இருக்கிறான் என்று முற்றிலும் தவறாக அவனை நினைக்கத் தொடங்கினாள்.


தன்னுடைய இந்த முகத்தைப் பார்த்துக் கொண்டு வாழும் நிலைமையை அல்லது தண்டனையை எக்காரணம் கொண்டும் ஹரிக்குக் கொடுக்க விரும்பாமல், தன் மேல் அவனுக்கு இருக்கும் அன்பைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாமல், அவனை விட்டு விலகிவிட முடிவு செய்தாள் ஸ்வேதா.


ஆனால் அதைச் செயல் படுத்துவதுதான் அவளுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. ஒவ்வொரு முறை காணும்பொழுதும் அவனை அன்னியனாகத் தள்ளி நிறுத்தி, அவனை வேதனைப் படுத்தி தானும் வேதனைக் கொண்டாள்.


அதுவும் அன்றைய தினம் வசுதாவும் அவளது முகத்தைப் பற்றிப் பேசி அவளை எரிச்சல் படுத்திக் கொண்டிருக்க அதே நேரம் அனைத்தையும் கேட்டுக்கொண்டே ஹரி அங்கே வரவும் பயந்துதான் போனாள்.


ஏற்களவே ஜெயசுதா செய்து வைத்திருந்த குளறுபடியால் வசுதாவின் மேல் சிறு சந்தேகம் எழுந்தாலும் அவளது படிப்பு தடைப்படும் என்பதை ஸ்வேதா நன்றாகவே அறிந்திருந்ததால் அவளைப் பற்றிய எந்த விஷயமும் வெளியில் தெரிய வேண்டாம் என ஸ்வேதா நினைக்கவே அந்த மனோஜ் வசுதாவைத் தொந்தரவு செய்ததையோ, தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு அவன்தான் காரணம் என்பதையோ அவள் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.


அந்த நிகழ்வு ஒரு விபத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டாள். அதனால் அன்றைய விபத்திற்குக் காரணம், மனோஜ்தான் என்பது வசுதாவிற்குக் கூடத் தெரிந்திருக்கவில்லை.


அன்று தன்னுடன் வந்ததால்தான் அந்த விபத்து நடந்தது என்ற ரீதியில்தான் வசுதா பேசிக் கொண்டிருந்தாள்.


மேலும் ஹரி வசுதாவிடமே கோபமாய் பேசவும் அவள் எதையாவது உளறி வைக்கப் போகிறாளே என்ற பயத்தில்தான் தான் என்ன பேசுகிறோம் என்பதையே உணராமல் அவனை வார்த்தைகளால் காயப்படுத்திவிட்டாள் ஸ்வேதா.


அவன் அவ்வளவு கோபமாக பேசிவிட்டுப் போகவும், முதலில் சென்று அவனை சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்தவள் பிறகு அவனை விட்டு விலகியிருக்க இதையே ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டாள்.


மேற்கொண்டு அவனைச் சந்திக்க கொஞ்சமும் முயற்சி செய்யவில்லை ஸ்வேதா.


அவன் படிப்பு முடிந்து அங்கிருந்து சென்றுவிட முதலில் பைத்தியம் போன்று அவன் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்தாள். அதன் பிரதிபலிப்பு அடுத்து வந்த செமெஸ்டரில் நன்றாகத் தெரிந்தது. அவளது மதிப்பெண்கள் மிகவும் குறைந்து போயிருந்தன.


பிறகு, நிலைமை உணர்ந்து ஒருவாறாகத் தன்னை சமன்படுத்திக்கொள்ள முயன்று அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றாள்!


ஆனாலும் முன்பு இருந்ததை விட படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது. எவ்வளவுதான் முயன்று படித்தாலும் நினைவில் வைத்துக்கொள்வது அவளுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. தன்னை மீட்டுக்கொள்ள போராடிக் கொண்டிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.


நாட்கள் செல்லச் செல்ல அவளது நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் நந்துவிற்குச் சந்தேகத்தைக் கொடுக்க அவளுடைய மருத்துவ அறிக்கைகளைத் தனக்குத் தெரிந்த மற்றொரு மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை கேட்டான்.


அதை ஆராய்ந்தவர், அவளுக்கு 'டெக்ரீடால்' என்ற மாத்திரை பரிந்துரைக்கப் பட்டிருப்பதைக் கவனித்துவிட்டு, அதனால் ஏற்பட்டிருக்கும் பக்கவிளைவுதான் என்பதைத் தெரிவித்தார்.


இதுபோன்ற சூழ்நிலையில் சாதாரணமாகக் கொடுக்கப்படும் மாத்திரைதான் என்பதைச் சொன்னவர், எக்காரணம் கொண்டும் அந்த மாத்திரையை நிறுத்த வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்.


அவளுக்கு விபத்து நடந்த சமயம் நெற்றிப் பகுதியில் எலும்பு உடைந்து அது உள்ளுக்குள்ளே குத்தியிருந்ததால் ஹைட்ரோசிஃபலஸ் எனப்படும் மூளையின் திரவம் வரை பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.


அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரிசெய்திருந்தாலும் எதிர்காலத்தில் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பதற்காக கொடுக்கப்பட்ட மாத்திரைதான் 'டெக்ரீடால்'. தொடர்ந்து இரண்டு வருடங்கள் தினமும் ஒரு மாத்திரையை அவள் அவசியம் உட்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்த விஷயம் நந்துவிற்கு அப்பொழுதுதான் தெரிந்தது.


அவன் வீட்டிற்கு வந்து கூகுள் செய்து பார்க்க சில நேரங்களில் மங்கலான பார்வை, வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற பொதுவான சில பக்கவிளைவுகளும் ஒரு சிலருக்கு மட்டும் எரிச்சல், கோபம், நம்பிக்கையின்மை தள்ளாட்டம் சோகமான மனநிலை மறதி என அவர்களுடைய இயல்பான நடத்தையில் மாறுதல்கள் ஏற்படும். வெகு குறைவான சிலருக்குத் தற்கொலை எண்ணம்கூட ஏற்படும் எனத் தெரிந்து கொண்டான்.


துரதிஷ்டவசமாக ஸ்வேதாவிற்கு அதில் பெரும்பாலான அறிகுறிகள் இருக்க மிகவும் உடைந்துதான் போனான் நந்தா.


அம்மா, அப்பாவிற்குத் தெரிந்தால் மிகவும் வருந்துவார்கள் மேலும் இது வெளியில் தெரிந்தால் அது அவளது எதிர்காலத்தையே பாதிக்கலாம் என நினைத்து அவளது இந்த நிலையை வேறு ஒருவரிடமும் சொல்லாமல் தங்கையைக் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாக்கத் தொடங்கினான் அவளுடைய பொறுப்புள்ள பாசமான அண்ணனாக.


அந்த மாத்திரையை உட்கொள்ளத் தொடங்கியதிலிருந்து அந்த இரண்டு வருடமும், தினசரி நடவடிக்கைகள் வழக்கம்போல் இருப்பது போல் மற்றவருக்குத் தோன்றினாலும் பல விஷயங்கள் ஸ்வேதாவின் நினைவிலேயே இல்லை.


குறிப்பாக வர்ஷினியின் திருமணம் நடந்ததோ அதில், அவள் கலந்து கொண்டதோ எதுவுமே நினைவில் பதியவில்லை ஸ்வேதாவிற்கு.


இரண்டு வருடம் முடிந்த பிறகுதான் நந்தா மூலம் செய்தியாகவே அனைத்தையும் அறிந்து கொண்டாள்.


அதன் பிறகுதான் முகத்தைச் சீரமைக்கவெனச் சிறிய பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு கிட்டத்தட்டப் பழைய நிலைமைக்குத் திரும்பிய பின்புதான் அவள் எம்.எஸ். படிக்கவென அமெரிக்கா சென்றதே.


அங்கேயும், அவள் சேர்ந்திருந்த பல்கலைக் கழகத்தின் அருகிலேயே, வர்ஷினி, அவளது கணவருடன் குடியிருக்கவும் மிகவும் மகிழ்ச்சியாகிப் போனது.


வர்ஷினியின் கணவர் முகிலனும் பாலுவைப் போன்றே நல்ல தோழமையுடன் பழகவே சனி, ஞாயிறு மற்ற விடுமுறை நாட்கள் என அவர்களுடன் சேர்ந்து கொள்ள உற்சாகமாகவே அவளது நாட்கள் இறக்கைக் கட்டிப் பறந்தன.


நந்தாவும் கூட ஆன்சைட் என அவளைச் சுலபமாக அணுகும் தொலைவில், அங்கேயே வந்துவிட ஹரியின் நினைவுகளுடன் அவளது வாழ்க்கை ஒரு தெளிவிற்கு வந்திருந்தது.


அறிந்தே சிலவும் தன்னை அறியாமலேயே பலவும் என அவள் செய்த குளறுபடிகளால் அதன் பின் அவள் ஹரியைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.


இதற்கிடையில், வசுதாவின் படிப்பு முடியவும் அவள் மேற்கொண்டு வேலைக்குச் செல்வதைத் தடுத்துவிட்டார் ராஜன். தன் மூத்த மகள் தந்த கசப்பான அனுபவத்தால், ஒரு சூடு கண்ட பூனையாக.


அத்துடன் நிற்காமல் அவரது ஒன்றுவிட்ட சகோதரியின் மகனுக்கு வசுதாவைத் திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்திருந்தார்.


சில வருடங்களுக்கு முன் ஜெயசுதாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் போதே அவனது மோசமான நடவடிக்கைகள் பிடிக்காமல் அவனை மறுத்துத்தான் அவர் வேறு மாப்பிளை பார்த்தது.


ஜெயாவால் உறவினர் மத்தியில் அவர்கள் நிலை கீழே இறங்கிவிட வசுதாவை அவனுக்குக் கொடுக்கும் எண்ணம் அவருக்கு வந்திருந்தது.


மிகவும் பயந்துபோன வசுதா அவளது நலனில் அக்கறை உள்ள ஒரே தோழியான ஸ்வேதாவைத் தொடர்பு கொண்டு அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்.


ஜெயாவைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் அவர்களுடன் சம்பந்தம் செய்ய முன்வராததால்தான் ராஜன் இந்த முடிவுக்கு வந்ததாகவும், வேறு நல்ல இடம் அமைந்தால் வசுதாவைத் திருமணம் செய்து கொடுக்க அவர் தயாராக இருப்பதும் லதா மூலமாகத் தெரிய வந்தது ஸ்வேதாவிற்கு.


பாலுவிற்கும், திருமணத்திற்குப் பார்த்துக் கொண்டிருக்க, ‘வசுதாவை பாலுவிற்குக் கேட்டால் என்ன?’ என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றவே அவனை வீடியோ சாட்டிங்கில் தொடர்புகொண்டு மனோஜினால் அவளுக்கு நடந்த விபத்தைத் தவிர மற்ற அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னவள், "வசுதா ரொம்ப நல்ல பொண்ணு…ணா. சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா. உங்கள மாதிரி ஒருத்தராலதான் அவளை நல்லபடியா பார்த்துக்க முடியும். யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்க?" என விளக்கமாகச் சொல்லி முடித்தாள்.


அவனுக்குமே வசுதாவைப் பிடிக்காது என்றெல்லாம் இல்லை. அவள் இயல்பாகப் பழகவில்லை என்பதால்தான் அவளிடம் அவன் கோபப்படுவது. அப்பொழுது அவளது நிலையை ஸ்வேதா மூலமாகவே அறியவும், அதுவும் ஸ்வேதா எப்பொழுதுமே அவனது நன்மையை மட்டுமே நினைப்பவள் என்பதும் சேர்ந்து கொள்ள வசுதாவை மணந்து கொள்ள முழுமனதுடன் சம்மதித்தான்.


அதன் பிறகு வெங்கட் மூலமாக, இரண்டு குடும்பங்களுடன் பேசி முறைப்படி நிச்சயிக்கப்பட்டுத் தடபுடலாக நடந்து முடிந்தது பாலு வசுதா திருமணம்.


ஸ்வேதா கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவளது விடுமுறை சமயமாக திருமண நாளைக் குறிக்கச் சொன்னான் பாலு.


பாலு வசுதாவின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்ட அவனுக்குத் தங்கையாக நாத்தனார் முடிச்சைப் போட்டது ஸ்வேதாவேதான்.


பிறகு அவள் எம்.எஸ். முடிக்கவும் அங்கேயே அவளுக்கு உபகாரச் சம்பளத்துடன் பி.ஹெச்.டி. செய்யும் வாய்ப்பு வர, ஹரியின் நினைவு என்னும் பாரம் தாங்காமல் படிப்பின் பின் ஒளிந்து கொள்வது அவளுக்கு நிம்மதியை அளிக்க, வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் அதில் சேர்ந்துவிட்டாள்.


அந்த நேரம் சரியாக வர்ஷினி இரண்டாவது பிரசவத்திற்காக இந்தியா வந்துவிட அவளிடம் கூட இதுபற்றி ஏதும் ஆலோசிக்கவில்லை.


அவளது அவசர புத்தியைக் கண்டு வர்ஷினிதான் திட்டித் தீர்த்தாள். அன்று இருந்த நிலையில், அவளுடைய கோபத்திற்கான காரணம்தான் புரியவில்லை ஸ்வேதாவிற்கு.


கிட்டத்தட்ட அவளுடைய படிப்பு முடியும் தருவாயில் பாலு வாசுதாவின் குழந்தையைப் பார்க்கவென இப்பொழுது விடுப்பில் இங்கே வந்திருக்கிறாள்.


அவள் பக்க நியாயங்களைச் சொல்லி முடித்திருந்தாள் ஸ்வேதா.


அனைத்தையும் கேட்ட பின், அவளுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டிய நேரத்தில் அவளை விட்டு விலகியிருந்த தனது தவறை உணர்ந்து மனதின் கனம் தாங்காமல் குற்ற உணர்ச்சியில் கல்லென இறுகிப்போய் உட்கார்ந்திருந்தான் ஹரி.



0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page