top of page

Nee Sonna Oor Vaarthaikaga! 1

Updated: Mar 17


நீ சொன்ன ஓர் வார்த்தைக்காக!



நீச்சல் குளம், ஜிம் என்று அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஆடம்பர குடியிருப்பு வளாகம் அது.


ஓட்டி வந்த தனது ஸ்கூட்டியை அதன் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, ‘அம்மா’ என்று அழைத்துக் கொண்டே தங்கள் வீட்டுக்குள் நுழைந்தாள் நமது நாயகி ஸ்வேதா.


மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட ட்யூப்ளக்ஸ் வில்லா அவர்களுடையது.


அமெரிக்காவில் பி.ஹெச்.டி. செய்து கொண்டிருப்பவள் ஒரு மாத விடுமுறையில் இந்தியா வந்திருக்கிறாள்.


"என்ன ஸ்வேதா! பாஸ்போர்ட் ரெனீவல் பண்ண யாரோ டிராவல் ஏஜன்ட்ட பார்க்கணும்னு கிளம்பிப் போனியே, அதுக்குள்ள வந்துட்ட?" என்று அவளது அம்மா லதா கேட்க,


"செம்ம டிராபிக் மா, தலை வேற பயங்கரமா வலிக்குது. அதனால நாளைக்குப் போகலாம்னு திரும்ப வந்துட்டேன், எனக்கு ஒரு காபி கொடுங்கம்மா" என ஸ்வேதா சொல்லி முடிப்பதற்குள்,


"ஏன் மா? ரொம்ப வலிக்குதா? டாக்டரைப் பார்க்கலாமா?" எனப் பதறியவாறு லதா கேட்க, "அம்மா! ஏன் டென்ஷன் ஆகறீங்க. நீங்க பயப்படற அளவுக்கு ஒண்ணும் இல்ல. நம்ம ஊர்லதான் டிசம்பர் மாசத்துலயும் வெயில் மண்டையைத் பிளக்குதே! அதனாலதான்" என்றவள்,


"அம்மா ப்ளீஸ்! காஃபி" எனச் சலுகையாகக் கேட்கவும் அடுக்களைக்குள் சென்றார் லதா.


அப்பொழுதுதான் அவளது கண்களில் பட்டது அந்த மாதாந்திர வணிகப் பத்திரிக்கை.


அதன் அட்டைப் படத்தைப் பார்த்தவள் இன்பமாய் அதிர்ந்தாள்.


கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாய் தொடர்பிலேயே இல்லாத அவளுடைய கல்லூரி தோழன் ஹரி! ஹரி கிருஷ்ணா!!! அதில் அட்டகாசமான போஸில் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.


ஜெல் தடவிப் படிய வைத்திருந்த அடர் கேசம், எதிரில் இருப்போரின் மனதின் ஆழம் வரை அளவிடும் கூர்மையான பார்வையுடன் வசீகர புன்னகையோடு, கருநீல கோட், அதே நிறத்தில் பேன்ட் அதற்கேற்ற டையுடன் வெள்ளை நிறச் சட்டை அணிந்து, விருது வாங்கியதற்கான அடையாளமாக ஷீல்டை அவனது வலது கையில் ஏந்தியிருக்க, அந்தப் படத்தையே கண்கள் அகற்றாமல் தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்வேதா


கல்லூரி காலத்தில் இருந்ததை விட அவ்வளவு கம்பீரமாக இருந்தான். "ஸ்வேதா வந்து காப்பியை எடுத்துக்கோடி" என்ற அவளது அம்மாவின் அழைப்பில் தன்நினைவுக்கு வந்தவள், காஃபியைக் கொண்டு வந்து பருகியவறே அந்தப் பத்திரிகையில் இடம்பெற்றிருந்த அவனது பிரத்தியேக பேட்டியைப் படிக்கத் தொடங்கினாள்.


அந்த வருடத்தின் இளம் தொழிலதிபருக்கான விருதை அவன் வாங்கி இருந்ததைக் கவுரவிக்கும் வகையில் வெளிவந்திருக்கும், முழுக்க முழுக்க அவனது தொழில் சம்பந்தமான பேட்டி அது.


இந்தக் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குள் அவன் அடைந்திருந்த உயரம் மிக மிக அதிகம் என்பது அந்தப் பேட்டியைப் படிக்கும்பொழுதுதே அவளுக்குப் புரிந்தது.