பகுதி -8
அதன் பிறகு ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை ஹரி. வண்டியை ஓட்டும் நிலையில் கூட அவன் இல்லை என்பதால் கால் டாக்ஸி புக் செய்து அப்படியே மருத்துவமனை கிளம்பிவிட்டான்.
வழியிலேயே பாலுவைக் கைப்பேசியில் அழைத்தவன், "பாலு! ஒரு மெடிக்கல் எமெர்ஜன்சி, ஜி.ஹெச். போயிட்டு இருக்கேன். என்ன ஏதுன்னு கேட்காம உடனே கிளம்பி நேரா அங்க வந்துடு" என்று மட்டும் சொல்லிவிட்டு அவனது பதிலைக் கூட எதிர்பார்க்காமல் கட் செய்துவிட்டான்.
நேரமோ இரவு பதினொன்றை நெருங்கியிருக்க, அவனது அப்பாவிடம் மட்டும் நண்பனுக்கு உடல்நிலை சரியில்லை உடனே போகவேண்டும் என்று தகவல் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு வந்திருந்தான்.
வெளியிலேயே அவனுக்காகக் காத்திருந்தான் பாலு. அவனது ஓய்ந்து போன தோற்றத்தைக் கண்டு பதறியவன், "என்ன ஆச்சுடா?" என்று கேட்க,
அவனிடம், ‘கொஞ்சம் இரு’ எனக் கைகளால் ஜாடை செய்தவன், கைப்பேசியில் அவனது அக்காவை அழைத்து ஸ்வேதா அனுமதிக்கப் பட்டிருக்கும் அவசர சிகிச்சை பிரிவுக்கான இடத்தை விசாரித்து அங்கே பறந்தடித்துச் சென்றான்.
***
அங்கே மயக்க நிலையில் ஸ்ட்ரெக்ச்சரில் கிடத்தப்பட்டிருந்தது ஸ்வேதாவேதான். கபிலா அங்கேயேதான் இருந்தாள்.
நெற்றியில் பலமாக அடிப்பட்டு கட்டுப் போடப்பட்டிருந்தது. இரு கைகளிலும் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.
ஹரிக்குத் தெரிந்திருந்த தகவல் கூட அறிந்திராததால் பாலுதான் பதறித் துடித்தான்.
கண்கள் கலங்கி மூளை மரத்துப் போய் அமைதியாக நின்றிருந்த ஹரியைப் பார்த்த கபிலா, "ஹரி இந்தப் பொண்ணு உன் ஃப்ரெண்ட்தானா?" என்று கேட்க, அவள் பேசியது அவனைச் சென்றடைந்ததாகவே தெரியவில்லை.
அவள் அவனை உலுக்கியபடி, “ஹரீ” என்றழைக்க,
"ஹான், என்ன சொன்னக்கா" என்றவனிடம்,
"இந்தப் பொண்ண உனக்குத் தெரியுமா?" என்று கேட்க,
"இவ என்னோட ஸ்வேதா" என குரல்வளை அடைப்படச் சொன்னவனை அவள் ஒரு புரியாப் பார்வை பார்க்க,
உணர்வுக்கு வந்தவன், "இவ என்னோட ஃப்ரண்ட் ஸ்வேதா..க்கா" என்று சொல்ல,
“தேங்க் காட், நல்லதாப் போச்சு” எனச் சற்று ஆசுவாசமடைந்தாள் கபிலா.
அதற்குள் பாலு நந்தாவை அழைத்து ஸ்வேதாவின் நிலையைச் சொல்லியிருந்தான்.
"பழவந்தாங்கல் இரயில்வே ஸ்டேஷன்ல அடிபட்டுக் கிடந்தவள நூத்தியெட்டுல கொண்டுவந்து இங்க சேர்த்திருக்காங்க” என்று சொல்லி விட்டு, “எக்ஸ்ரே மட்டும் எடுத்திருக்கோம் ஹரி, வலது புருவத்துக்கு மேல சின்னதா எலும்பு உடைஞ்சு உள்ளே குத்தி இருக்கற மாதிரி தோனுது.
சீடீ இல்லன்னா எம்.ஆர்.ஐ. கூட தேவைப் படலாம். சின்னதா ஒரு சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும். அவளோட குடும்பத்துல யாராவது வந்தா அடுத்துச் செய்ய வேண்டியதைப் பத்தி முடிவு பண்ணலாம்” என்றாள் கபிலா.
"அவளோட அம்மா அப்பா ரெண்டு பேரும் வெளியூர் போயிருக்காங்க. அவ அண்ணனுக்குத் தகவல் கொடுத்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவான்” என்றான் பாலு.
"அக்கா மேற்கொண்டு டிரீட்மென்ட் இங்கேய பார்க்கறது நல்லதா? இல்ல வேற எங்கயாவது மாத்திடலாமா?" என்று ஹரி கேட்க,
"ஹரி, இங்க நல்ல சர்ஜன்ஸ் எல்லாம் இருக்காங்கதான், இல்லன்னு சொல்லல. ஆனா, நானே சொல்லக் கூடாது! இங்க கேஸஸ் எக்கச்சக்கமா வந்துட்டே இருக்கறதால எல்லாமே கொஞ்சம் டிலே ஆகும்டா. வசதி வாய்ப்பிருந்தா வேற எங்கயாவது பார்க்கறதுல தப்பில்ல" என்று முடித்துக்கொண்டாள் அவள்.
சிறிது நேரத்தில் அழுது, சோர்ந்து நந்தாவும் அங்கு வந்து சேர்ந்தான்.
அதற்கு முன்பாகவே ஹரி அவனது அக்காவின் கணவர் சஞ்சய் மூலம் அவளை வேறு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்திருந்தான்.
அதன்பின் அவளைவிட்டு எங்கேயும் நகரவில்லை ஹரி. ஆம்புலன்ஸில் கூட அவளது அருகிலேயே அமர்ந்திருந்தான். வலியில் அவள் முனங்கிக் கொண்டிருக்க, அந்த முனங்கல் சொன்ன செய்தியில் உயிர் கரைந்து அவனது கண்களில் வழிந்தது. அவனைக் கவனிக்கும் நிலையிலெல்லாம் மற்ற இருவரும் இல்லை.
அதன்பின் துரிதமாக அந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அவளுக்கு அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்தது. காலை ஏழு மணியளவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் விடப்பட்டாள் ஸ்வேதா. அவளது பெற்றோரும் தகவல் அறிந்து கிளம்பி வந்து கொண்டிருந்தனர்.
பிறகு அங்கிருந்தாலும், உள்ளே சென்று அவளைப் பார்க்கும் வாய்ப்பு நந்தாவைத் தவிர யாருக்கும் இல்லாமல் போக, அவனுடன் பாலுவும் அங்கேயே இருக்கவே ஹரி கிளம்பி வீட்டிற்குச் சென்றான்.
***
அதன் பிறகு அந்த மருத்துவமனையில் இருந்த ஒரு வாரமும், மருந்துகளின் வீரியத்தில் ஸ்வேதா பெரும்பாலும் உறக்கத்திலேயே இருந்தாள்.
காலையில் தினமும் அவளுக்கு உணவு கொண்டுவர அவளது அம்மா வீட்டிற்குச் சென்று வருவார். மாலை முழுவதும் அவளது அப்பாவும் நந்தாவும் அங்கேதான் இருப்பார்கள்.
தினமும் காலையில் கல்லூரி செல்லும் முன்பு அவளை மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டுப் போவான் ஹரி.
வர்ஷினி விடுப்பு எடுத்துக்கொண்டு அவளுடனேயே இருந்தாள். பாலு கல்லூரி நேரம் தவிர மருத்துவமனையிலேயே இருந்தான் எனலாம்.
ஹரி அங்கே செல்லும்போது ஓரிரு முறை மட்டுமே அவளுடைய அன்னை அங்கே இருந்தார். அப்படி அவனைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் நன்றி சொல்லாமல் அவனை விட்டதில்லை.
இத்தனை கலவரங்களுக்கும் நடுவில் அவனது பிறந்தநாளை அனைவரும் மறந்திருந்தனர். அவனும் கூட. அதுபோல் அந்த விபத்துக்கான காரணத்தை யாரும் அவளிடம் கேட்கவுமில்லை. அவளும் அதுபற்றி யாரிடமும் சொல்லவுமில்லை.
***
உடல் தேறி, கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்துத்தான் கல்லூரிக்கு வந்தாள் ஸ்வேதா. ஏனோ சிடுசிடுப்பு கோவம், சிறு சிறு ஞாபக மறதி என அவள் போக்கே கொஞ்சம் மாறித்தான் போயிருந்தது.
அவள் கல்லூரி வரத்தொடங்கிய பிறகு அவளைப் பார்ப்பதற்காகவே ஹரி தினமும் மதியம் அவர்களுடன் வந்து கலந்துகொள்வான் முன்பிருந்தது போலவே. ஆனால் ஸ்வேதா ஏனோ அவனிடம் ஒரு ஒதுக்கம் காண்பிப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. ஆனால் அதற்கான காரணம்தான் புரியவில்லை.
ஒரு நாள், முந்தைய தினம் பார்த்த ஒரு காதல் திரைப்படத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தாள் வர்ஷினி. பிறகு அவர்களது பேச்சு காதல் திருமணம் எனத் திசை மாற, பேச்சு வாக்கில், “லவ் மேரேஜ்தான் பெஸ்ட் இல்லையா ஸ்வேதா?" என்று கேட்டுவிட்டாள்.
அவ்வளவுதான், ஆவேசத்துடன் அப்படியே கொந்தளித்துப் போனாள் ஸ்வேதா.
"காதலாவது ஒண்ணாவது அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது, ஃப்ரெண்ட்ணு சொல்லி நூல் விட்டுப் பார்க்கறது, கொஞ்சம் முகங்கொடுத்துப் பேசிட்டா உடனே நான் காதலிக்கறேன்னு வழிய வேண்டியது. அவன பிடிக்காம, அந்தப் பொண்ணு சம்மதிக்கலன்னா கூட விடாம அவள ஸ்டாக் பண்ணி தொல்ல கொடுக்க வேண்டியது.
ஒரு பெண்ணை கரெக்ட் பண்ண கிஃப்ட்ஸ் வாங்கிக் கொடுத்தா போதும் அப்படிங்கற ஒரு சீப் மெண்டாலிட்டி இந்தப் பசங்களுக்கு ரொம்பவே இருக்கு. சில பொண்ணுங்க அப்படி நடந்துகறதும் ஒரு காரணம். ஆனா எல்லாரையுமே அதே போலவே நினைக்கறானுங்க பாரு, அதுதான் கேவலமா இருக்கு.
பிடிக்கலைனு ஒதுங்கிப்போனா... விட்டுத்தொலையாம, தொரத்திட்டே வந்து ஆசிட் அடிக்கறது, இல்ல வேற மாதிரி டார்ச்சர் செய்யறது, ஏன் கொலை செய்யக்கூட அஞ்ச மாட்டேங்கறானுங்க, டாக்ஸிக் மேஸ்குலைனிட்டி" என்று அவள் பொருமித்தள்ள, அதைக் கேட்டவாறே அங்கே வந்தான் ஹரி.
அவன் வந்ததை ஸ்வேதாவைத் தவிர மற்ற இருவரும் கவனித்து அதிர்ந்தனர்.
"ஸ்வேதா எல்லாரையும் பொதுவாக சொல்லாத, உண்மையா காதலிக்கற பசங்களும் இருக்காங்க... பொண்ணுங்களும் இருக்காங்க... அப்படி ஒருத்தனை நீ சந்திக்கும்போது உனக்கே புரியும்" என்று ஹரியை மனதில் வைத்து பாலு சொல்ல,
"நெவர் பாலுண்ணா, நான் எப்பவும் அப்படி ஒரு தப்பைப் பண்ணவே மாட்டேன்" என்றாள் ஸ்வேதா தீவிரமாக.
அத்துடனாவது விட்டிருக்கலாம் பாலு, "ஒருவேளை அப்படி ஒருத்தன் உனக்கு ப்ரபோஸ் பண்ணா என்ன செய்வ" என்று கேட்டுத் தொலைக்க,
"ஃப்ரெண்ட்னு சொல்லி பழகிட்டு, அதை மாத்தி லவ் பண்றேன்னு ஒருத்தன் சொன்னா, என்னால அதை அக்ஸப்ட் பண்ணவே முடியாது. அதோட அவன் முகத்துல கூட முழிக்க மாட்டேன் தெரிஞ்சுக்கோங்க. அத புரிஞ்சுக்கற அறிவில்லாம தொடர்ந்து வந்து தொந்தரவு செஞ்சான் வைங்க, யார் என்ன சொல்லுவாங்களோன்னு லூசு மாதிரி பயந்துட்டெல்லாம் இருக்க மாட்டேன். நேரா போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணி அவன உள்ள தள்ளிட்டுதான் மறு வேலையே பார்ப்பேன்" என்று சொல்லி, விறுவிறுவென அங்கிருந்து சென்றுவிட்டாள் ஸ்வேதா.
அதிர்ந்தனர் மற்ற மூவரும். மறுபடி பாலு ஏதோ அவளிடம் சொல்வதற்கு முயல பேசாதே! எனக் கைகளால் ஜாடைக் காட்டித் தடுத்துவிட்டான் ஹரி.
"ஏன்டா அவ இப்படிலாம் நடந்துக்கறா? ஒண்ணுமே புரியலையே!" என பாலு ஹரியிடம் வருந்த, வர்ஷினியோ என்ன சொல்வதென்றே புரியாமல் திகைத்திருந்தாள்.
இருவரையும் பார்த்து பொதுவாக, "இத்தோட இதை விட்டுடுங்க, இனிமேல தயவு செய்து இதுபத்தி அவ கிட்ட நீங்க எதுவும் பேசவே கூடாது" எனக் கட்டளையாகச் சொன்ன ஹரி அங்கிருந்து சென்றான் ஆற்றாமையுடன்.
***
சில தினங்கள் கடந்த நிலையில், கல்லூரி பேருந்திலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தனர் வசுதாவும் ஸ்வேதாவும். "என்னாலதானக்கா உங்களுக்கு இந்த மாதிரி ஆயிடுச்சு" என்று அவளது நெற்றியில் ஏற்பட்டிருந்த தழும்பைப் பார்த்து வருந்தினாள் வசுதா.
"பரவாயில்ல விடு வசு! முகத்துல அவ்வளவு ஒண்ணும் பெருசா சேஞ்சஸ் தெரில. தேவையில்லாம நீ எதையும் பேசி வைக்காத. பாலு அண்ணாவோட காதுல விழுந்தா பிரச்சனை ஆயிடும்!" என்று ஸ்வேதா சொல்லிக் கொண்டிருக்க, பைக்கை நிறுத்திவிட்டு அங்கே வந்துகொண்டிருந்த ஹரியின் காதில் தப்பிதமில்லாமல் நன்றாகவே விழுந்தது.
உடனே கோவமாக அவர்களை நோக்கி வந்தவன், "என்ன ஸ்வேதா நடந்துது? இவளாலதான்னா, அது ஆக்சிடென்ட் இல்லையா? நீ இருந்த நிலமையல உன்னை ஒண்ணும் கேட்கக் கூடாதுன்னு விட்டது தப்பா போச்சே! போலீஸ்ல கூட ஆக்சிடன்ட்னுதான ஃபைல் பண்ணி இருக்காங்க" என்று கேள்வி மேல் கேள்வி கேட்க,
எரிச்சலுற்றவள், "விடுங்க ஹரி, ஒரு பிரச்சினையும் இல்ல. அது அன் எக்ஸ்பெக்ட்டட்லி, ஃபுல் அன்ட் ஃபுல் என்னோட கேர்லஸ்நெஸ்ஸால நடந்த ஆக்ஸிடன்ட்தான்" எனப் பதைபதைத்தாள்.
"இல்ல நீ எதையோ மறைக்கற" என்றவன் வசுதாவை நோக்கி, "ஏய் நீ சொல்லு, அன்னைக்கு என்ன நடந்தது?" என்று மிரட்டத் தொடங்கினான்.
அங்கே, பேருந்துத் தடத்தின் ஓரமாக நின்று பேசிக்கொண்டிருந்த இவர்களை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக்கொண்டே மாணவர்கள் சிலர் கடந்து செல்லவும் கொதிநிலைக்குச் சென்ற ஸ்வேதா, "நீங்க யாரு இவளைக் கேள்வி கேட்க? உங்க வேலை எதுவோ அதை மட்டும் பார்த்துட்டு போங்க” என்று வசுதாவை அருகில் வைத்துக்கொண்டே ஆத்திரத்துடன் சொல்லிவிட,
அவள் பேசிய வார்த்தைகளில் அவனது தன்மானம் வெகுவாக சீண்டப்படவே ஏற்கனவே அவளது நடவடிக்கைகளில் மனம் வெறுத்துப் போய் இருந்தவன், "இனி நீயே வந்து என்கிட்ட என்ன நடந்ததுன்னு சொன்னாதான் நம்ம... ஃப்ரெண்ட்ஷிப் கன்டின்யூ ஆகும். இல்லைனா உன் விஷயத்துல எக்காரணம் கொண்டும் நான் தலையிடமாட்டேன். உனக்கு நான்" என்றவன் அதைத் திருத்தி, "என்னோட ஃப்ரண்ட்ஷிப் வேணும்னா, நீயேதான் என்னைத் தேடி வரணும்" என்று சொல்லிவிட்டு கோபத்துடன் அவளைக் கடந்து போனான் ஹரி.
***
அவள் கட்டாயம் தன்னைத் தேடி வருவாள் என்ற நம்பிக்கையுடன் அவன் காத்திருக்க, ஸ்வேதாவோ ஒரு முறை கூட அவனைச் சந்தித்து நடந்தவற்றைச் சொல்ல முற்படவில்லை. அவளுடைய அத்தகைய நடவடிக்கையை ஹரி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் தன்னை காதலனாகதான் எண்ணவில்லை ஆனால் நல்ல நண்பனாகவாவது எண்ணி அவனை நாடி வந்திருக்கலாமே!
ஆனால் அவளோ ஒரு சக மனிதனாகக்கூட தன்னை மதிக்கவில்லையே! என்ற ஏமாற்றத்தில் மனதளவில் மிகவும் அடிவாங்கிப்போனவன், அதன்பின் அந்த வருடத்தின் படிப்பு முடிந்து கல்லூரியை விட்டுச் செல்லும் வரையிலும் கூட ஸ்வேதவைச் சந்திக்கத் துளியும் முயலவில்லை.
வர்ஷினி மட்டும் அவனது வகுப்பிற்கே போய் அவனைச் சந்தித்துவிட்டு வருவாள். பாலுவுடன் எப்பொழுதும் போலவே நட்புடன் இருந்தான். ஆனால் ஸ்வேதவைப் பற்றி அவன் எதையவது பேச்செடுத்தாலே தவிர்த்துவிடுவான்.
சரியாகப் படிப்பு முடியவும் அவனுக்குக் கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டிய சூழலும் உருவாகி இருக்கவே, முழுவதுமாகத் தன்னைத் தொழிலில் புதைத்துக்கொண்டான் ஹரி.
அவளுக்காக ஏற்படுத்திக்கொண்ட நிலைதான் எனினும் அவள் மீது அவன் கொண்ட காதலைப் போலவே அந்தத் தொழிலையும் அவனால் விட இயலவில்லை.
இடைப்பட்ட காலத்தில் பாலு, கோயம்பத்தூரிலேயே ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்திருந்தான்.
வர்ஷினியும் பாலுவும் மட்டும் தொடர்பிலிருந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையில் வர்ஷினி அவளது திருமணப் பத்திரிக்கையுடன் நேரிலேயே வந்து அழைத்துவிட்டுச் சென்றாள்.
புதிதாக விவசாயம் தொடர்பான இயந்திரங்களின் தயாரிப்பில் இறங்கியிருந்ததால் ஹரியால் வர்ஷினியின் திருமண வரவேற்பிற்கு மட்டுமே போக முடிந்தது.
முதலில் திருமணத்திற்கு வராமல் விட்டதற்கு அவனை நன்றாக வறுத்தெடுத்தப் பின்புதான் அவளது கணவர் முகிலனை ஹரிக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அவரும் மிகவும் பண்புடன் அவர்களது நட்பை மதிப்பவராகவே அமைந்திருந்தார்.
அவர்களுக்குப் பரிசுக் கொடுத்துவிட்டு மேடையிலிருந்து இறங்கும்பொழுதுதான் அவன் ஸ்வேதாவைப் பார்த்தான். வர்ஷினிக்காக பழரசம் எடுத்து வந்தவள் அவனைக் காத்திருக்கச் சொல்லி ஜாடை காட்டிவிட்டு மேடை ஏறிச்சென்றாள்.
அவள் ஸ்வேதாவே இல்லையோ எனும் அளவிற்கு உடல் மிகவும் மெலிந்து, கொஞ்சம் கருத்து கண்களில் கருவளையம் விழுந்து எப்படியோ மாறிப் போயிருந்தாள்.
இப்படி அவளைக் கண்ட ஹரியின் மனமோ, சொல்லொணாத் துயர் கொண்டது. ‘ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்ற கேள்வி எழுந்து அவனை இம்சித்தது.
சில நிமிடங்களில் அவனைத் தேடி வந்தவள், "எப்படி இருக்கீங்க ஹரி" என்று கேட்க,
"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க ஸ்வேதா?" என்று அவளைத் தூரத்தில் நிறுத்தி அவன் கேட்கவும் அவனை ஒரு அதிர்ந்த பார்வை பார்த்தவள்,
“நான் நல்லா இருக்கேன். வர்ஷியோட அம்மா என்னைத் தேடுவாங்க. நான் வரேன் பை” என்று அங்கிருந்து சென்றாள் ஸ்வேதா.
'இப்படி ஒரு ஹை-பை யோடவே நம்ம காலம் முடிஞ்சிடுமா ஸ்வேதா' என மனதிற்குள்ளேயே கேட்டுக்கொண்டவன் அவளது அந்தப் பார்வையின் பொருள் விளங்காமல் வலியைச் சுமந்து கொண்டு அங்கிருந்து சென்றான் ஹரி.
***
அதன் பின் வந்த காலத்தில், பாலுவின் திருமணம் வசுதாவுடன் நிச்சயிக்கப்பட்டது கூட அவனுக்கு மிகப் பெரிய ஆச்சரியம்தான். பாலு எப்படி அவளை மணக்கச் சம்மதித்தான் என்றே புரியவேயில்லை. அதை அவனிடமே கேட்கவும் ஒரு தயக்கம் வந்திருந்தது.
இடையில் ஹரி அவனது தொழிலில் ஏற்பட்ட மிகப் பெரிய சறுக்கலைச் சரி செய்ய போராடிக்கொண்டிருந்த சமயம்தான் பாலுவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த நேரம் அவன் யாருடனும் அதிகத் தொடர்பில் இருக்கவில்லை.
வியாபார ஏற்றுமதித் தொடர்பாக அவன் வெளிநாடு சென்றிருந்ததால் பாலுவின் திருமணத்தில் கூட அவன் கலந்துகொள்ள முடியவில்லை. நட்பின் நல்ல புரிதலால் பாலுவும், அதற்காக அவனிடம் கோவம் கொள்ளவில்லை.
கடைசியாக வர்ஷினியின் திருமணத்தின் பொழுது ஸ்வேதாவைப் பார்த்தவன்தான் அதன் பிறகு அவளைச் சந்திக்கவே இல்லை.
அவனைப் பொறுத்தவரை காதலியாகத்தான் அவள் அவனுக்கு அறிமுகமானாள்.
அவளைப் பொறுத்தவரை அவளுக்கு நண்பனாக மட்டுமே அறிமுகமானவன் அவன்.
அன்றைய அவளது பேச்சில் காயமுற்றவன் அவள் தானாக அவனைத் தேடி வந்து மனதைத் திறந்தாலன்றி என்றைக்குமே தனது காதலை அவளிடம் சொல்லவே கூடாது என முடிவெடுத்திருந்தான் ஹரி.
மனம் நிறைய காதலுடன் நண்பனாகக்கூட அவனால் தொடர இயலாதுதான் விலகிப் போனான்.
பாலுவிடமும் வர்ஷினியிடமும், அவனைப் பற்றிய எந்த விஷயத்தையும் அவளிடம் சொல்லவே கூடாது என உறுதியாகத் தெரிவித்திருந்தான்.
இதோ அவளாகவே அவனைச் சந்திக்க விரும்பிக் காத்திருக்கிறாள்.
அவளுக்காகவே பல மைல்கள் கடந்து வந்து இதோ காத்திருக்கிறான் அவன்.
அனைத்தையும் எண்ணியவாறே ஹரி கடிகாரத்தைப் பார்க்க, காலை ஆறு மணி.
விடியும் அன்றைய பொழுது அவர்களுக்காக என்ன வைத்துக் காத்திருக்கிறதோ?!