பகுதி - 13
ஹரியுடனான அந்தத் தருணம் தந்த இனிமையை அனுபவித்தவாறே சொல்லத் தொடங்கினாள் ஸ்வேதா வசுதாவுடனான அவளது பிணைப்பிற்கான காரணத்தையும் அந்தப் பிணைப்பே தன் வாழ்க்கை பாதையை மாற்றி அமைத்ததையும்.
ஸ்வேதா இரண்டாம் வகுப்பில் படிக்கும் சமயம் அவர்களது பக்கத்து ஃப்ளாட்டை விலைக்கு வாங்கி அங்கே குடி வந்தனர் ராஜன் சரஸ்வதி குடும்பம்.
அவர்களது மூத்த மகள் ஜெயசுதா ஆறாம் வகுப்புப்பிலும் இளையவள் வசுதா முதல் வகுப்பிலும் ஸ்வேதா படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்தனர்.
ஸ்வேதாவின் வயதை ஒத்திருந்த வசுதா அவளிடம் நன்றாக ஒட்டிக்கொண்டாள். ஆனால் ஜெயசுதாவிடம் எப்பொழுதும் ஒரு ஒதுக்கம் இருக்கும்.
இரண்டாவதும் பெண் குழந்தையாகப் போன ஏமாற்றத்தால் மூத்தவளைப் பிடிக்கும் அளவிற்கு வசுதாவை ராஜனுக்குப் பிடிப்பதில்லை. அவளிடம் எப்போதுமே கோபமும் கண்டிப்பாகவுமே இருப்பர்.
அவர் இருக்கும் சமயம் வாய் திறந்து பேசவே பயப்படுவாள் வசுதா. சரஸ்வதியும் இளைய மகளுக்கு ஆதரவாகப் பரிந்து எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே இருந்தார்.
இயல்பிலேயே சுயநலவாதியான ஜெயசுதாவும் அந்த நிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கையிடம் நன்கு தன் ஆதிக்கத்தைச் செலுத்துவாளே தவிர துளியும் அன்பு பாராட்டுவதில்லை.
அந்தக் காரணத்தினாலோ என்னவோ பள்ளி முடிந்து வந்ததும் வராததுமாக வீட்டுப்பாடம் செய்யவென ஸ்வேதாவின் வீட்டிற்கு வந்துவிடுவாள் வசுதா.
ஸ்வேதாவின் அன்பான நடவடிக்கை அவள் மனதிற்கு இதம் தர, அவள் ஸ்வேதாவுடனேயே அதிகமாக நேரம் செலவழிக்கத் தொடங்கினாள். மற்றபடி வேறு யாருடனும் அவள் எளிதில் பேசுவதோ பழகுவதோ இல்லை.
எப்பொழுதும் பயம் தயக்கம் எனத் தாழ்வு மனப்பான்மையால் நத்தை போல் சுருண்டுக் கொள்வாள். நாளடைவில் அது அவளுடைய குண இயல்பாகவே மாறிப்போனது.
சிறு வயதில் இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் நாட்கள் செல்லச் செல்ல ஸ்வேதாவிற்கு நன்றாகவே புரிந்தது. அதனால் வசுதாவிடமான அக்கறை மேலும் கூடித்தான் போனது. எனவே, எந்த நிலையிலும் அவளை விட்டுக் கொடுக்கவே மாட்டாள்.
வசுதாவைப் பொறுத்தமட்டில் படிப்பில் ஸ்வேதா அவளுடைய முன் மாதிரி. அவள் செய்வதைப் பின் பற்றித் தானும் அதுபோலவே செய்வாள். அப்படித்தான் அவள் ஸ்வேதா படித்த கல்லூரியிலேயே, அவள் படித்த அதே படிப்பைத் தேர்வு செய்ததும்.
மற்றபடி, ஸ்வேதா எவ்வளவு சொல்லியும் வசுதா தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யவே இல்லை. அவளது தயக்கமும் பயமும்தான் பின்னாளில் ஸ்வேதாவை ஆபத்தில் சிக்க வைத்தது.
ஸ்வேதா முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயம் ஜெயசுதா பொறியியல் முடித்து மிகப் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலையில் சேர்ந்திருந்தாள்.
அப்பொழுதுதான் உடன் வேலை செய்பவரைக் காதலிப்பதாகச் சொல்லி ஜெயசுதா ராஜனிடம் பிடிவாதம் பிடிக்கவும், அவர் கொஞ்சமும் வீட்டுக் கொடுக்காததுடன் விரைவிலேயே அவர்கள் சொந்தத்திலேயே மாப்பிள்ளையும் பார்த்து, இலட்சக் கணக்கில் செலவு செய்து திருமணத்தையும் நடத்தி முடித்து விட்டார்.
தந்தையை மீறி ஏதும் செய்ய முடியாத நிலையில், திருமணம் செய்துகொண்ட ஜெயசுதா தன் வன்மத்தையெல்லாம் அவள் கணவனிடம் காண்பிக்கத் தொடங்கினாள். அது ஒரு கட்டத்தில், மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்துகொண்டு சாகும் நிலைக்கு அவனைக் கொண்டு சென்றது.
மகளின் உண்மை நிலை அறியாத ராஜன் அவளை தன்னுடனேயே அழைத்து வந்துவிட்டார். ஒரு சில மாதங்களிலேயே வீட்டினருக்குத் தெரியாமல் ஜெயசுதா, அவள் முன்பு காதலித்தவனையே பதிவுத் திருமணம் செய்துகொண்டு கணிசமான நகைகளைளுடன் சென்று விட, சொந்தக்காரர்கள் நடுவில் மிகவும் அவமானமாகிப் போனது ராஜனுக்கு.
அதில் சரஸ்வதி தற்கொலை முயற்சி வரை சென்று உயிர் பிழைத்தார். அத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு ராஜனது முழு கவனமும் வசுதாவின் மீது விழ, நின்றால் குற்றம் உட்கார்ந்தால் குற்றம் என்ற அளவிற்குப் பாதிக்கப்பட்டாள்.
அடுத்த வீட்டில் இருக்கும் ஸ்வேதாவுடன் பேசக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டாள் அவள். ஏதொ ஒரு நல்ல காலத்தில் அவளது படிப்பை மட்டும் நிறுத்தாமல் விட்டுவைத்திருந்தார். அந்தப் புண்ணியத்தில், கல்லூரியில் மட்டுமே ஸ்வேதாவைச் சந்தித்து பேசுவாள் அதுவும் பயந்து பயந்துதான்.
அந்தச் சமயம்தான் கல்லூரி பேருந்தில் வீடு திரும்பும் நேரம், "அக்கா! எனக்குச் சொல்லவே பயமாக இறுக்குக்கா. ஒருத்தன் தினமும் ஏதாவது கிஃப்ட், கார்டுன்னு கைல வெச்சுட்டு என் பின்னாலேயே வந்து தொந்தரவு கொடுத்துட்டு இருக்கான்.
அதுவும் ஒரு வாரமா நீங்க ஸ்பெஷல் கிளாஸ்னு உங்க ஃபிரென்ட் கூட பைக்ல வீட்டுக்குப் போறதால உங்களுக்கு இதுபத்தி தெரியாம போச்சு. என்னால தனியா போக முடியலக்கா. வீட்டுல சொன்னா ஏதாவது பிரச்சனை ஆயிடுமோன்னு ரொம்ப பயமா இருக்கு" எனத் தயங்கித் தயங்கிச் சொல்லி முடித்தாள்.
அதுவரை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வேதா, “என்ன சொல்ற வசு, திடீர்னு எப்படி ஒருத்தன் இந்த மாதிரி வந்து குதிச்சான். அவன இதுக்கு முன்னாடியே உனக்குத் தெரியுமா?” என்று கூர்மையாகக் கேட்க,
சற்றுத் தடுமாறியவள், “இல்லக்கா, டூ த்ரீ மந்த்ஸ் முன்னாடி, சாமி படம் டீபியா வெச்சு, புவனான்னு ஒரு பொண்ணு கிட்டயிருந்து ஃபேஸ் புக்ல ஃபிரென்ட் ரெக்வஸ்ட் வந்துது. நானும் பொண்ணுதானன்னு அக்சப்ட் பண்ணிட்டேன்.
சும்மா, சாப்ட்டியா தோழி, தூங்கினியா தோழின்னு மெஸெஞ்சர்ல மெஸெஜ் வர ஆரம்பிச்சுது. நானும் எதார்த்தமா சேட் பண்ணிட்டு இருந்தேன். இப்ப திடீர்ன்னு பார்த்தா, லவ் பண்றேன் அது இதுன்னு மெசேஜ் பண்ணி தொல்லை பண்ண ஆரம்பிக்கவும்தான் அது ஒரு ஆம்பளன்னே புரிஞ்சுது.
பயந்து போய், பிளாக் பண்ணிட்டேன். உடனே பார்த்தா நேர்ல வந்து தொல்ல பண்ண ஆரம்பிச்சுட்டான்க்கா.
நான் எஃப்.பி அக்கவுண்ட் வெச்சிருக்கறதே அப்பாவுக்குத் தெரியாது. இதெல்லாம் தெரிய வந்தா அப்பா என்னைக் கொலையே செஞ்சிருவாரு. என்ன பண்றதுன்னே தெரியலக்கா” என அரண்டுபோய் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி அரற்றினாள் அவள்.
சற்றுப் பரிதாபம் உண்டானாலும் கூட, இவள் சொல்வதை வைத்துப் பார்த்தால் இவளைப் பல நாட்களாகப் பின் தொடர்ந்து, இவளைப் பற்றித் தெரிந்தேதான் அவன் அவன் முகநூல் மூலம் அவளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான் எனது தெளிவாக விளங்கவும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது ஸ்வேதாவுக்கு.
"அறிவிருக்கா உனக்கு, சோஷியல் மீடியாவ எப்படி சேஃபா ஹாண்டில் பண்ணணும்னு தெரியலன்னா நீயெல்லாம் எதுக்கு அக்கவுண்ட் வெச்சிருக்க? அதுவும் உங்கப்பா இவ்வளவு ஸ்டிக்ட்டா இருக்கும்போதே இப்படி?" என அவளை பிடிப் பிடியெனப் பிடிக்க,
"சாரிக்கா, சாரிக்கா" என்பதைத் தவிர வேறு வார்த்தையே வரவில்லை அவளிடமிருந்து.
"சரி விடு, நீ இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி பதில் பேசாமலேயே வந்தா அவன் அதைத் தனக்கு சாதகமாகத்தான் எடுத்துப்பான். உனக்குப் பிடிக்கலைனா அதை வாயை திறந்து தைரியமா சொல்லணும் வசு" என்று அவள் சொல்லிக்கொண்டிருக்க, அவர்கள் இறங்கும் நிறுத்தமும் வந்துவிட பேருந்திலிருந்து இறங்கினர் இருவரும்.
பரபரப்பான மாலை நேரத்திலும் கொஞ்சமும் பயமின்றி அங்கே வசுதாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தான் அவன்.
வசுதா அவனை ஸ்வேதாவிடம் சுட்டிக் காட்ட, அவனை நோக்கிப் போனாள். பயந்து தூரத்திலேயே நின்றுவிட்டாள் வசுதா.
அவனை நெருங்கியவள், "உங்க பேர் என்ன?" எனக் கேட்கவும் அதில் திகைத்தவன், "யாருங்க நீங்க?" எனப் பதில் கேள்வி கேட்க,
"நான் யாருங்கிறது இருக்கட்டும், முதல்ல நீ யாருன்னு சொல்லு" என்றவள் அவனைப் பார்க்க, இருபது வயதுதான் இருக்கும் அவனுக்கு.
அங்கே இருந்த ஒரு கடையில் வேலை செய்பவன் என்பது அவன் அணிந்திருந்த சீருடையில் தெரிந்தது.
அவன் பெயர் ‘மனோஜ்’ என்று அவன் அணிந்திருந்த அடையாள அட்டையைப் பார்த்து தெரிந்து கொண்டாள்.
"என்னடா, ஃபேக் ஐடில வந்து அந்தப் பொண்ணுக்கு லவ் டார்ச்சர் கொடுத்தியா? பெரிய இவன்னு நினைப்பா உனக்கு? இதோ பாரு, இதுதான் உனக்கு லாஸ்ட் வார்னிங். போகும் போது வரும்போதெல்லாம் இப்படி தொந்தரவு செஞ்சன்னு வை, அந்த சேட் ஹிஸ்ட்ரிய வெச்சு உன்னைப் பத்தி போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடுவோம். என்னோட அப்பா அவளோட அப்பா எல்லாரும் நல்ல பதவில இருக்கறவங்க தெரியும் இல்ல. உன்ன உள்ள தள்றதெல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்ல.
அதனால இந்த மாதிரி தொந்தரவு செய்யற வேலையெல்லாம் இன்னையோட நிறுத்திக்கோ!" எனக் கொஞ்சம் அழுத்தமான குரலில் அதே சமயம் அருகில் நின்றிருந்தவர்களின் கவனத்தைக் கவராத விதத்திலும் சொல்லிவிட்டுப் பயத்தில் வெளிறிய அவனது முகத்தைப் பார்த்தவாறே அங்கிருந்து சென்றாள் ஸ்வேதா.
அவன் மேலும் தொடர்ந்து தொல்லை செய்தால் அவளுடைய அப்பாவிடம் சொல்லிவிடலாம் என்ற முடிவுக்கும் வந்திருந்தாள். பிரச்சனையைப் பெரிதுபடுத்தாமல் நிச்சயம் அவர் வசுதாவுக்கு உதவுவார் என்கிற நம்பிக்கையும் அவளுக்கு இருந்தது.
அதற்குப் பிறகு அந்த மனோஜ் வசுதாவைத் தொடரவேயில்லை என்பதால் அதற்கு அவசியமே இல்லாமல் போக தொடர்ந்து வந்த நாட்கள் நீரோடை போல் தெளிவாகச் சென்றது.
***
டிசம்பர் மாதம் தொடங்கியிருந்தது அந்த வாரத்தில் ஹரியின் பிறந்தநாள் வரவிருப்பதால் அவனுக்குப் பரிசு வாங்குவது பற்றியும் அந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்பது பற்றியும் பாலு, வர்ஷினி, ஸ்வேதா என மூவரும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
பலத்த மழைப் பொழிந்து கொண்டிருந்ததால் அனைத்துப் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்திருந்தனர்.
ஒரு திருமணத்திற்காக வெங்கட்டும் லதாவும் திருச்சி சென்றிருக்க நந்தாவும் இரவு நேரப் பணி முடித்து வந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அங்கே வந்த வசுதா, "அக்கா கொஞ்சம் அவசரமாக பண்டிபஜார் வரைக்கும் போகணும். உங்களால என்கூட துணைக்கு வர முடியுமா?" என்று கேட்க, மழையை நினைத்து கொஞ்சம் யோசித்தாள்தான் ஸ்வேதா.
ஆனால் தனிப்பட்ட முறையில் ஹரிக்கென ஒரு பரிசு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கு வசுதாவுடன் சென்றால் அப்படியே வாங்கி வந்து விடலாம் என்ற எண்ணம் தோன்றவும்,
"அண்ணா கிட்ட கேட்டுப் பார்க்கறேன் வசு. அவங்க பர்மிஷன் கொடுத்தா வரேன்" என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தாள்.
பின் நந்தாவிடம் சென்று, “வசுதாவோட பர்ச்சேஸ் போகணும்ணா” என்று மட்டும் சொல்லி அனுமதி கேட்டாள் ஸ்வேதா.
மணியைப் பார்க்க மாலை நான்குதான் ஆகியிருந்தது. தங்கையிடம் மறுப்பு சொல்ல தோன்றாமல், "மழையா இருக்கே ஸ்வேதாம்மா, பத்திரமா போயிட்டு வந்துடுவியா? எனக்கும் இன்னைக்கு முக்கியமா ஆஃபீஸ் போயே ஆகணும்; இல்லைனா நானே உன்னைக் கூட்டிட்டுப் போவேன்" என அவன் தயங்க,
"பரவாயில்லண்ணா நாங்க ட்ரைன்லதான் போகப்போறோம். உடனே திரும்ப வந்துடுவோம்" என அவள் பதில் சொல்லவும்,
"சரி ஏழு ஏழரை மணிக்குள்ள வந்துடு. வந்ததும் எனக்கு மெசேஜ் மட்டும் பண்ணிடுமா" என்றவாறு அவன் மேலும் தடை ஏதும் சொல்லாமல் அவளை அனுப்பி வைத்தான்.
கைகளில் பெரிய பையுடன் கிளம்பி வந்தாள் வசுதா. இரயிலுக்காகப் பயணச் சீட்டை வாங்கிக்கொண்டு வரவும் அங்கே அவர்கள் செல்ல வேண்டிய இரயில் வரவும் சரியாக இருக்கவே இரயிலில் ஏறி உட்கார்ந்தனர் இருவரும்.
அதுவரை கொஞ்சம் ஓய்ந்திருந்த மழையும் மறுபடியும் லேசாகத் தூர ஆரம்பித்திருந்தது. "இவ்ளோ அவசரமா அப்படி என்ன வாங்கப் போற வசுதா" என ஸ்வேதா அவளைக் கேட்கவும்தான்,
"இல்லக்கா ஜெயா அக்கா ஃபோன் பண்ணியிருந்தாங்க. அவங்களோட சர்டிஃபிகேட்ஸ் எல்லாம் மறந்து இங்கேயே வச்சிட்டு போயிட்டாங்கக்கா. வெளிநாட்டுக்குப் போகப் போறாங்களாம். அவசரமா தேவைப்படுதுன்னு அதைக் கேட்டுக் கெஞ்சினாங்க. அப்பா வரதுக்குள்ள கொண்டு போய் கொடுக்கணும்" என்று தான் தவறு செய்கிறோம் என்பதே புரியாமல் சொல்லிக்கொண்டே போனாள் வசுதா.
அதுவரை கடை வீதியில் ஏதோ வாங்கப் போகிறாள் என நினைத்திருந்த ஸ்வேதா இதைக் கேட்டதும் கோபத்தின் எல்லைக்கே சென்றுவிட்டாள்.
"ஏய் லூசு, அறிவு இருக்கா உனக்கு? அவ்வளவு அவசரமா இருந்தா வீட்டு வாசல்ல வந்து உங்கக்கா அதை வாங்கிட்டுப் போயிருக்கலாமே. இதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியா உனக்குத் தோனவை இல்லியா?" என வெகுவாக அவள் வசுதாவைக் கடிந்து கொள்ளவும், அவள் முகம் இருண்டு போய்விட்டது.
கண்களில் நீர் திரள, "நான் சொன்னேன்கா. அவங்க கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம அழ ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு என்ன செய்யறதுனே தெரியல" என்றாள் அவள்.
"என்கிட்டயாவது இத முன்னாலயே சொல்லித் தொலைச்சிருக்கலாம் இல்ல" என ஸ்வேதா கோவம் குறையாமல் கேட்கவும்,
"சாரிக்கா” என்று மட்டுமே சொல்ல முடிந்தது வசுதாவால்.
ஜெயசுதாவின் சுயநலத்தையும், அதற்குப் பணிந்துபோகும் வசுதாவின் அறியாமையையும் நினைத்து ஆயாசமாக இருந்தது ஸ்வேதாவிற்கு.
இது முன்னமே தெரிந்திருந்தால் அவள் வசுதாவுடன் வந்திருக்கவே மாட்டாள். தன் அவசர புத்தியை நினைத்து நொந்தவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
மாம்பலம் வந்து சேர்ந்த பிறகு ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு பண்டிபஜாரில் ஜெயா குறிப்பிட்டிருந்த ஒரு உணவகத்தின் முன்பாகப் போய் இறங்கினர் இருவரும்.
வெளியிலேயே வசுதாவிற்காகக் காத்திருந்த ஜெயாவின் முகம் தங்கையுடன் ஸ்வேதவைக் கண்டதும் சுண்டித்தான் போனது.
"ஒரு துணை இல்லாம உன்னால வரவே முடியாதா?" எனச் சூடாக தங்கையைப் பார்த்துக் கேட்டவள்,
"நான் வசு கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும். நானே அவளை வீட்டில் விட்டுடறேன். உனக்கு வேற ஏதாவது வாங்க வேண்டியது இருந்தா முடிச்சிட்டுக் கிளம்பு" என்றாள் ஸ்வேதாவிடம் இங்கிதமே இல்லாமல்.
ஸ்வேதா, வசுதாவைக் கோபத்துடன் ஒரு பார்வை பார்க்க, அர்த்தம் புரிந்தவளாக, "அக்கா, இதோ நீங்க கேட்ட உங்களோட செர்டிஃபிகேட்ஸ்! இதைக் கொடுக்க மட்டும்தான் வந்தேன்" என்று அதை அவளிடம் கொடுத்துவிட்டு,
"அப்பா வரதுக்குள்ள நான் வீட்டுல இருக்கனும்... பை!" என்றவாறு கிளம்ப எத்தனிக்க, வசுதாவா இப்படிப் பேசியது?! என அச்சரியமாக ஸ்வேதா அவளைப் பார்க்க, அழவே தொடங்கிவிட்டாள் ஜெயா.
"நீயாவது என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணி பேசுவன்னு நினைச்சேன். நான் இலண்டன் போன பிறகு மறுபடியும் உன்னை எப்ப பார்க்க முடியுமோ?" என முதலைக் கண்ணீர் வடிக்க, என்ன செய்வது என்று புரியாமல் ஸ்வேதாவை ஒரு பரிதாபப் பார்வை பார்த்து வைத்தாள் வசுதா.
அவளது நிலைமை புரியவும் தனது கோபத்தைக் கை விட்டவளாக, "சரி நான் கிளம்பறேன்" என வசுதாவை நோக்கிச் சொன்னவள்,
"அக்கா பத்திரமா அவளை வீட்டுல விட்டுடுங்க, ராஜன் மாமா வீட்டுக்கு வந்துட்டா பிரச்சினை ஆயிடும்" என்று எச்சரித்துவிட்டு அவள் கிளம்ப,
"நீ பார்த்துப் போ. என் தங்கையை நான் பத்திரமா அழைச்சிட்டு வறேன்' என வெட்டி விடுவது போல் பதில் சொல்லிவிட்டு அவளை இழுத்துக் கொண்டு அந்த உணவகத்திற்குள் சென்றாள் ஜெயசுதா.
அந்த நேரத்தில் கூட வசுதாவின் பாதுகாப்பைப் பற்றி யோசித்தவள் தனது பாதுகாப்பைத்தான் மறந்து போனாள் ஸ்வேதா.
பிறகு யோசனை வந்தவளாக அங்கே இருந்த ஒரு பிரபல நகைக் கடைக்குச் சென்றவள் ஹரியின் பிறந்தநாளுக்குப் பரிசளிப்பதற்காக அழகான ஒரு மோதிரத்தை வாங்கி தனது கைப்பையில் பத்திரப்படுத்தினாள்.
பின் இரயில் நிலையம் வர, உடனே அங்கே வந்து சேர்ந்த இரயிலிலும் ஏறி உட்கார்ந்தாள். மழையும் பலமாகப் பொழியத் தொடங்கியது.
பத்திரமாக இருப்பதாக நந்தாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு வெளியில் பொழிந்து கொண்டிருந்த மழையைப் பார்க்க அவள் மனம் ஹரியின் நினைவுகளால் நிரம்பி வழிந்தது.
முதலில் நட்புடன் மட்டுமே அவனுடன் பழகி வந்தவள் தோழியர் மூலம் அவனுக்குத் திருமணம் என்று கேள்விப்படவும், அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. அதை அவனிடமே கேட்டுவிடும் நோக்கத்தில் அவனைத் தேடிச் சென்றாள் ஸ்வேதா.
அங்கே வேறு ஒரு பெண் அவனது அருகில் உட்கார்ந்திருப்பதைக் கண்டவுடன் அவளுக்குள் கனன்ற ஆத்திரம், இதுவரை அவள் யாரிடமுமே கொள்ளாதது. உரிமையுடன் அவன் அருகில் போய் நெருங்கி உட்கார்ந்து அவளை அங்கிருந்து ஓடவும் செய்தாள் ஒன்றுமே அறியாதவள் போல.
அவனுக்குத் திருமணம் நிச்சயிக்கப்படவில்லை என்பதை அறிந்த பொழுது அவளுக்கு ஏற்பட்ட நிம்மதி அவளுக்குச் சொல்லாமல் சொல்லியது அவளது மனதையும் ஹரியை எந்த நேரத்திலும் அவளால் விட்டுக் கொடுக்கவே முடியாது என்பதையும்.
***
அவளுடைய பிறந்தநாளன்று அவனது ஒவ்வொரு செயலிலும் அவனது மனதில் தான் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பதை முழுவதுமாக உணர்ந்தாள் ஸ்வேதா.
அவனுக்காகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவளை அன்று புதிதாக அவன் பார்த்த பார்வை அவள் உயிர் வரை ஊடுருவிச் சென்று அவளைத் தித்திக்கச் செய்தது.
அவனது காருக்குள் உட்கார்ந்த பிறகு கூட அவனை நேருக்கு நேர் பார்க்கவும் முடியாமல்தான் வெளியில் வேடிக்கை பார்ப்பது போல் அவள் தன்னை சமன் செய்துகொண்டாள். கோவிலுக்குச் சென்ற பிறகும் கூட அதுவேதான் தொடர்ந்தது.
அவளுக்காக அவன் பரிசளித்தப் புடவையை அவனுடைய அம்மாதான் தேர்ந்தெடுத்தது என்பது தெரிந்ததும், நன்றி சொல்ல அவள் அவருக்கு கால் செய்ய, அதை அவர் கட் செய்து விட, மறுபடி சில முறை அவள் முயலவும் மறுபடி மறுபடி அதுவே தொடர அவர், தன்னைப் பற்றி ஏதோ தவறாகப் புரிந்துகொண்டாரோ என்று கொஞ்சம் கலங்கித்தான் போனாள் ஸ்வேதா.
அதைப் பற்றி ஹரியிடம் சொல்லவும், கொஞ்சம் தயக்கமாக இருக்கவே அப்படியே விட்டுவிட்டாள்.
ஆனால் அன்று இரவு அவராகவே அவளை அழைத்துப் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல, பிறகுதான் அவளுக்குத் தெரிந்தது ஹரி அவருக்குப் புதிதாக வாங்கிக் கொடுத்திருந்த டச் ஃபோனில் அழைப்பை ஏற்கத் தெரியாமல் அவர் கட் செய்துகொண்டிருந்தார் என்பது.
அப்பொழுதுதான் அவர், "எங்கமா இவன் வீட்டில் இருக்கான், காலேஜ் லீவு நாள்ள கூட ஃபாக்டரியே கதியாக் கிடக்கிறான். படிப்பு முடிஞ்சு வெளிநாடு போயிடுவேன்னு சொன்னவன் எப்படி இந்த மாதிரி மாறிப் போனான்னே தெரியல! உங்களையெல்லாம் ஒரு தடவ பார்க்கணும் கேட்டா... கொஞ்சமும் கண்டுக்கவே மாட்டேங்கறான்" என மகனைப் பற்றி குற்றப் பத்திரிக்கை வாசித்தவர்,
"பாலுவோட ஒரு நாள் வீட்டுக்கு வாம்மா" என அவளை அன்புடன் அழைத்துவிட்டுத்தான் ஃபோனை வைத்தார்.
அவன் தந்தையின் தொழிலில் முழுவதுமாக ஈடுபடுவதைப் பற்றி அவனது தாயின் மூலமாகவே அறிந்த பிறகுதான் ஹரி அவர்களுடன் அதிக நேரம் செலவிடாததற்கு காரணம் புரிந்தது.
அவனாக தன்னிடம் வந்து பேசுவான் என அவள் காத்துக்கொண்டிருக்க இதுவரை அவன் மனதைத் தன்னிடம் திறக்காமல் இருப்பதன் காரணம்தான் அவளுக்குப் புரியவேயில்லை.
இன்னும் சில நாட்களிலேயே அவன் கல்லூரி படிப்பு முடிந்து தன்னைப் பிரிந்துச் சென்று விடுவான் என்பதை நினைக்கும் பொழுது அவளது மனம் கனத்துப் போனது.
அதனாலேயே அவன் பிறந்தநாளன்று தானே அவனிடம் பேசிவிட வேண்டும் என முடிவு செய்தாள். பழவந்தாங்கல் இரயில் நிலையம் வந்துவிட இரயிலிலிருந்து இறங்கினாள் ஸ்வேதா.
அங்கே, மனோஜ் வடிவில் காத்திருந்தது விதி அவளது வாழ்க்கைப் பாதையை மாற்றி எழுதவென.