top of page

Madhini-Yamini! 2


மாயா-2


அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மென்காதலுடன் கரை நனைக்கும் கடல் அலைகளுடன் அன்றைய சூர்யோதயம்!


அந்த உடைந்த பாலத்தினின்று பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.


ஒளிக் கற்றைகளை வாரி இறைத்துக்கொண்டு ஆதவன் புறப்பட, அவனுடைய கிரணங்கள் மாதியினியின் முகத்தில் தெறித்து வர்ண ஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தது.


முந்தைய தினம் சிந்துஜாஸ்ரீயிடம் பேசிமுடித்து விடைபெற்று வெளியில் வந்ததும், வேதனையின் சாயல் அளவுகடந்து அவளுடைய முகத்தில் படிந்திருக்க, இறுகிப்போயிருந்தாள் மாதினி.


மயிலாப்பூரில் உள்ள அவளுடைய அலுவலகத்தில் அவளுடன் போய் இறங்கும் வரையிலும் கூட அவளது முகம் கொஞ்சமும் மென்மையுறவில்லை.


ஏனோ அவளுடைய அந்த முகம், யாமினியின் நினைவை அதிகம் மேலெழுப்பி ஜெய்யுடைய உறக்கத்தைக் கெடுத்திருந்தது.


மனதில் ஒரு பொறி தோன்ற, அது நடு நிசி என்பதும் அவன் நினைவில் இல்லை. அந்த நேரத்தில் தான் ஒரு பெண்ணை அழைக்கிறோம் என்பதும் அவனுக்கு நினைவில்லை. நொடிக்குள் அவளது கைப்பேசியின் கதவைத் தட்டியிருந்தான் ஜெய்.


முதல் ஒலியிலேயே "சொல்லுங்க ஜெய்!" எனத் தெளிவாக ஒலித்த அவளுடைய குரல் அவளுமே உறங்கவில்லை என்பதை அவனுக்குத் தெரிவிக்க, "ஏம்மா தூங்கலையா!" என்றான் மென்மையாக.


"ப்ச்.. தூக்கம் வரல ஜெய்! மனச என்னவோ அழுதிட்டு இருக்கு!


அதான் ஒரு கேஸை ஸ்டடி பண்ணிட்டு இருக்கேன்!" என்றாள் அவள்.


அவளுடைய நினைவையுமே யாமினிதான் ஆக்கிரமித்திருந்தாள் என்பது புரிந்தது அவனுக்கு!


"எங்க என்னன்னு எந்த கேள்வியும் கேக்காத; நாளைக்கு ஏர்லி மார்னிங் அரௌண்ட் பைவ்; ரெடியா இரு! உன்னை வந்து பிக் அப் பண்ணிக்கறேன்!" அவன் சொன்ன விதத்தில் மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு.


அதிகாலை வீட்டின் வாயிலிலேயே தயாராகக் காத்திருந்தவளைத் தனது காரிலேயே அங்கே அழைத்து வந்திருந்தான்.


'சூரியன் உதிச்சா தாமரை மலருமாமே! இன்னைக்குத்தான் நேரில் பார்க்கறேன்!' என ஜெய் சொல்ல,


"கடல்ல தாமரையா! அது இங்க எங்க இருக்கு ஜெய்!" அவள் உண்மையாகவே வியந்துபோய் கேட்க, அவனது கைப்பேசியின் கேமராவை 'செல்ஃபி மோட்'இல் போட்டு அவளுக்கு அருகில் வந்து நின்று கொண்டு ஒரு க்ளிக் செய்தவன், "இதோ இங்க!" என அந்த திரையைக் காட்ட அவளது முகம் மேலும் மலர்ந்தது.


"ஜெய்!" எனப் பொய் கோபத்துடன் அழைத்தவள், "தேங்க்ஸ் ஜெய்! உண்மையாவே இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு!" என்றாள் அவள் ரசனையுடன்.


"இதை ப்ரோக்கேன் பிரிட்ஜ்னு சொல்லுவாங்க!" என்றவன், "வாலி படத்துல சோனான்னு ஒரு சாங் வரும் இல்ல; அதை இங்கதான் ஷூட் பண்ணியிருப்பாங்க!


அதுமட்டும் இல்ல நிறைய படம் இங்க ஷூட் பண்ணி இருக்காங்க.


இப்பகூட வெட்டிங் போட்டோ ஷூட்ஸ் எல்லாம் இங்க நிறைய பண்றாங்க!' என்றான் தகவலாக.


"ஓ.. மெட்ராஸா இருந்தது சென்னையா மாறின வருஷத்துல இருந்து நான் இங்கதான் இருக்கேன். ஆனா இப்படி ஒரு இடம் எனக்கு புதுசு!' என்றாள் மாதினி. 'இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு' எனச் சொல்லாமல் சொன்னது அவளுடைய குரலிலிருந்த உற்சாகம்.


"இப்ப உன்னோட மைண்ட் டைவர்ட் ஆச்சா மாது!" அவன் அக்கறையுடன் கேட்க, 'ஓஹ்! அதுக்குதான் இங்க கூட்டிட்டு வந்தீங்களா!" என நெகிழ்ச்சியுடன் கேட்டவள், "ரொம்பவே ரிலாக்ஸ்டா பீல் பண்றேன் ஜெய்! தேங்க்ஸ்!" என்றாள் மாதினி.


பேசிக்கொண்டே கடல் அலைகளை நோக்கி இருவரும் செல்ல, எக்கச்சக்கமாக நண்டுகள் அங்கே ஊர்ந்துக் கொண்டிருக்கவும், அவை பாதங்களின் அடியில் குறுகுறுக்கவே, அங்கே நடக்க முடியாமல் கரை நோக்கி இருவரும் வர, அப்பொழுது அவர்களை பார்த்துவிட்டு ஓடி வந்த ஒரு சிறுவன், "அக்கா..கா! நண்டு வேணுமா கா! பிரெஷ்ஷா புடிச்சது" என கேட்க, தூரத்தில் ஒரு பெரியவர் நண்டுகளைப் பிடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.


"நண்டா! ஐயோ! நண்டு தேளு இதெல்லாம் நான் சாப்பிட மாட்டேன் பா! வேண்டாம்!" என அவள் சொல்ல, "ப்ச்! இன்னிக்கி செலவுக்கு காலில ஏதாவது தேறும்னு பாத்தேன்! ம்.." என அலுத்துக்கொண்டான் அவன்.


அவன் அப்படி சொல்லவும் பாவமாகப் போனது அவளுக்கு.


"உன்னை இப்படி நண்டு பிடிக்க விட்டுட்டு உங்க அப்பா என்ன செய்யறாரு!" என மாதினி கேட்க, "அவன் கிடக்காரன் ஒரு பொறம்போக்கு***" என அவனுடைய வயதிற்கு மீறிய கொச்சையான வார்த்தைகளால் அவன் பெற்றவனை ஏச, ஒரு மாதிரியாகப் போய் விட்டது அவளுக்கு.


"என்ன ஜெய் இவன் இப்படி பேசறான்?" என அவள் அருவெறுப்புடன் கேட்க, "இங்க இதெல்லாம் ரொம்ப சகஜமான பேச்சு மாது! இப்படி பேசறது அசிங்கம்னு கூட இவனுக்கு தெரியாது; டேக் இட் ஈஸி!" என்றவன், "உனக்கு என்னடா உங்க அப்பா மேல அவ்வளவு கோபம்!" எனக் கேட்டான் ஜெய்.


"சார்! கஞ்சா வித்துட்டு சுத்திக்கிடிட்ருக்கற நாயி சார் அவன்.


அவன் பேருல அம்பது கேஸ் இருக்கு. எங்கள வுட்டுட்டு யாரோ ஒரு பொம்பள கூட பூட்டான் சார் அவன்!


அம்மா! தம்பி தாத்தா பாட்டினு அல்லாரும் கஸ்டமா லோல் பட்டுக்குனுகீறோம்!


அதோ நண்டு புடிச்சிகினுகீதே அதான் என்னோட தாத்தா! அதுதான் துட்டு சம்பாதிச்சு எங்கள காப்பாத்துது!


போன மாசம் அதுக்கு ஆக்சிடன்ட் ஆயி கால்ல எலும்பு ஒடிஞ்சி போச்சு!


சரி ஆயி இன்னிக்கிதான் பொழப்புக்கு வந்திருக்கு!" என்றான் அவன் சர்வ சாதாரணமாக!


"நீ ஸ்கூல் போறியா?" என மாதினி கேட்க, "ஆமாக்கா... எட்டாங்கிளாஸ் படிக்கிறேன்! இன்னும் கொஞ்ச நேரத்துல வூட்டுக்கு போயி எதுனா துண்ணுட்டு பொறவு ஸ்கூல் போயிருவேன் கா" என்றான் அவன்.


"எப்படியாவது படிப்பை முடிடா. நீ நல்ல நிலைமைக்கு வரலாம்!" என அவள் சொல்ல, "அம்மாவும் இப்படித்தான் கா சொல்லிக்கினுருக்கும்" என்றான் அவன்.


அப்பொழுது அங்கே திருமண 'போட்டோ ஷூட்' செய்ய சிலர் வரவும், "இங்க இப்படி நிறைய பேர் வருவாங்களாடா?" என மாதினி கேட்க, "ஆமாக்கா; ஆனா காலில மட்டும்தான் இப்படி வருவாங்க.


ராவானா இங்க வேற மாறி இருக்கும்!" என்றான் அவன் ஒரு மாதிரி குரலில்.


"என்ன வேற மாதிரி இருக்கும்!" என அவள் கேட்க, அதுவரை அமைதியாய் அவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த ஜெய், 'பயங்கர புத்திசாலின்னு நினைச்சா, சமயத்துல இப்படி சொதப்பிவெப்பா' என்ற எண்ணத்துடன் தலையில் அடித்துக்கொள்ள, அந்த சிறுவன் இளித்தவாறே, "ராவானா அண்ணாமாரு தம்பிமாரெல்லாம் இங்க வருவாங்கக்கா; ஒரே பப்பி ஷேமா இருக்கும்" என்றான் அவன் நெளிந்தவாறு.


அவன் சொல்வது விளங்காமல் மாதினி ஜெய்யின் முகத்தைப் பார்க்க, அந்த சிறுவனுக்குப் புரியவேண்டாம் என்று, 'ஆண்களும் பெண்களுமாக இங்கே வந்து, குடிப்பது; போதைப்பொருட்கள் எடுத்துக்கொள்வது; மேலும் பாலியல் அத்துமீறல்கள் எனத் தகாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அது எல்லோரும் அறிந்த விஷயம்தான்!' எனும் பொருள் படும்படியாக அவளுக்கு ஆங்கிலத்தில் விளக்கினான் ஜெய்.


"இவன் வயசுக்கு தம்பி மாரெல்லாம் இங்க வரமாட்டாங்க. அக்காங்கதான் வருவாங்க. அதைத்தான் இவன் அப்படி சொல்றான்! கரெக்ட்டாடா" என ஜெய் அவனிடம் கேட்க, "ஆமா சார்!” என சங்கடமாக நெளிந்தவன்,


ஒரு நாளு; டீவீல வருமே அந்த யமுனாக்கா இல்ல அதுவும் இங்க வந்துது.


டீவில பாக்க சொல்லோ அந்த அக்காவ எங்கம்மாக்கு ரொம்ப புடிக்கும்!


அன்னைக்கு அந்த அக்காவ இங்க பார்த்துட்டு அதுக்கு அழுகையே வந்துடிச்சி!


வூட்டுக்கு வந்து எங்கம்மா காறி காறி மீஞ்சுது சார்!' என்றான் அந்த பையன்.


"யாருடா அந்த யமுனாக்கா?" என அறிந்துகொள்ளும் ஆவலுடன் ஜெய் கேட்க, "அதா சார் 'குடும்ப குத்து வௌக்கு' ட்ராமால வரும் இல்ல அந்த அக்காதான்" என அவன் விளக்கவும், "ஜெய்! சிந்துஜாஸ்ரீயைத்தான் சொல்றான் அவன்; அந்த சீரியல்ல அவங்க கேரக்டர் நேம் அது!' என அதிர்ந்தாள் மாதினி.


"டேய் தம்பி அன்னைக்கு அந்த யமுனா அக்கா யார் கூட வந்திருக்காங்கன்னு நீ பார்த்தியாடா?" என ஜெய் அவனிடம் கேட்க, "இல்ல சார் அன்னைக்கு நான் இங்க வரல! அம்மாதா கண்டுக்குனு வந்து சொல்லிச்சு! அம்மாக்கு தெரியுங்காட்டியும்!" என்றான் அந்த பையன்.


அவனுடைய இருப்பிடத்தைக் கேட்டுத் தெறிந்துகொண்டு பின் அங்கிருந்து கிளம்பினார் இருவரும்.


***


ஜெய் வாகனத்தை செலுத்த, மாதினி அமைதியாக வரவும், "ப்ச்! இப்பதான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனன்னு பார்த்தேன். மறுபடியுமா?" என அவன் அங்கலாய்க்க, "இல்ல ஜெய்! அந்த சிந்து கேட்ட லீகல் கைடன்ஸ் ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல! அந்த பேமெண்ட் விவகாரமெல்லாம் எங்க கோதண்டம் மாமாவுக்கு சப்ப மேட்டர்!


ஆனா ஹாப்பி பில்ஸ் விவகாரம்தான் எனக்கு ரொம்ப வேதனையா இருக்கு" என்றாள் மாதினி.


'ஹாப்பி பில்ஸ்' இது சிறிது சிறிதாக ஒருவரை உள்ளே இழுத்துக்கொள்ளும் புதைகுழி. இது அதி ஆபத்தான ஒரு ரசாயன போதை மாத்திரை.


மதுவுடன் கூட ஆட்டம் பட்டம் உல்லாச கேளிக்கை கொண்டாட்டங்கள் தேடி மேல் தட்டு பெண்கள் கூடும் 'பப்'கள்தான் அந்த ரசாயன போதைப்பொருளை புழக்கத்திற்குக் கொண்டுவந்திருக்கும் 'நெட்ஒர்க்'கின் கைக்கூலிகள்.


வெள்ளிக்கிழமைதோறும் அதிக களைக் கட்டும் அந்த உயர்மட்ட 'பப்'களில், பெண்கள் அருந்தும் ஏதோ ஒரு மதுபானத்தில் அந்த மாத்திரையை அவர்களே அறியாமல் கலந்து கொடுக்கின்றனர்.


அதனால் அவர்கள் அதிக போதை கொள்வதுடன் அவர்களுடைய பாலியல் உணர்வுகள் அதிகம் தூண்டப்படுகிறது.


அதன்பின் அங்கே அவர்களை வேறுவிதமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.


அதில் சிக்கி சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சொல்கிறது ஒரு பிரபல புலனாய்வு பத்திரிகை.


அந்த மாத்திரைக்குத்தான் அவளே அறியாமல் அடிமையாக்கப் பட்டிருக்கிறாள் சிந்துஜாஸ்ரீ.


அப்படி ஒரு தருணத்தில் போதையின் மயக்கத்தில் தன் நினைவில் இல்லாத சமயம் அவளே அறியாமல் சில ஒப்பந்த பாத்திரங்களில் கையொப்பம் இட்டிருக்கிறாள் சிந்து.


அதன்படி அவள் இப்பொழுது நடித்து வரும் தொடரில் அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்களோ அப்படி நடிக்கவேண்டும். அப்படி நடிக்க மறுத்தாலோ அல்லது பாதியிலேயே விலக முற்பட்டாலோ, நஷ்ட ஈடாக அவர்கள் நிறுவனத்திற்கு ஒரு பெரிய தொகையை அவள் கொடுக்க நேரிடும்.


சில தினங்களுக்கு முன் ஒரு காட்சியில் வரம்பு மீறி அவளை நடிக்கச் சொல்லி அவர்கள் வற்புறுத்த அவள் அதை திட்டவட்டமாக மறுக்கவும், அப்பொழுதுதான் அந்த ஒப்பந்தம் பற்றியே அவளுக்குத் தெரிய வந்தது.


அத்துடன் இல்லாமல், அவளைத் தவறாகச் சித்தரிக்கும் சில காணொளிகளை அந்த நிறுவனத்தை நடத்திவரும் சதானந்த் அவளிடம் காண்பிக்க, ஆடித்தான் போனாள் சிந்து.


அந்த காணொளியில் அவளுடன் இருந்தவனின் முகம் முற்றிலும் மறைக்கப்பட்டிருக்க, அந்த தருணத்தில்தான் அவளுக்குத் தெரிந்திருக்கிறது தான் முற்றிலும் சுயநினைவை இழந்து இப்படி அவனுக்கு உடன்பட்டிருந்தது.


அன்று அவர்களிடம் சண்டையிட்டுக்கொண்டு அவள் வந்துவிட, அவளால் அந்த மாத்திரை எடுக்காமல் இருக்க முடியாது என்பதைத் தொடர்ந்து வந்த ஓரிரு நாட்களிலேயே அவள் உணரவும், கொஞ்சமாகத் தன்னை சுதாரித்துக்கொண்டு, அதிலிருந்து விடுபட மனநல மருத்துவரான அகிலாவின் துணை தேடி வந்திருந்தாள் அவள்.


அந்த ஒப்பந்தத்திலிருந்து விடுபட ஒரு திறமையான வழக்குரைஞர் அவளுக்குத் தேவைப்படவும் அதைப்பற்றியும் அவள் அகிலாவிடம் சொல்லியிருந்தாள்.


முந்தைய தினம் அனைத்தையும் அவள் மூலமாக அறிந்துகொண்ட பிறகு வெகுவாக மனம் கனத்துத்தான் போனது மாதினிக்கு.


அந்த ஒப்பந்தத்தை முறியடிப்பது அவளுக்கு ஒரு பொருட்டாக தோன்றவில்லை என்றாலும் அந்த 'ஹாப்பி பில்ஸ்' விவகாரம் அவளுடைய மூளையை குடைந்துகொண்டே இருந்தது.


அவளது மனநிலையை உணர்ந்தவனாக அவளுடைய வலதுகையின்மேல் தன் கையை வைத்து ஆறுதலாக அழுத்தியவன், "நாளைக்கு வேணா அந்த பையனோட அம்மாவை கேட்டு பார்க்கலாம்.


அன்னைக்கு அந்த சிந்துவை இங்க கூட்டிட்டு வந்தது யாருன்னு கண்டுபிடிக்க முடிஞ்சா, நம்ம யாமியை கொலை செஞ்சவன் யாருன்னு க்ளூ கிடைக்கும்.


முடிஞ்சா அந்த சதாவையும் கொஞ்சம் கண்காணிக்கணும்!" என்றான் ஜெய்.


"ப்ச்! அன்னைக்கு என்ன ஆச்சு; அந்த ஜிம் கோச் நந்தா கிட்ட போய் விசாரிச்சோம்! ஆனா அடுத்தநாளே அவன் அக்சிடெண்ட்ல செத்து தொலைஞ்சிட்டான்!


இப்ப இந்த சதாவுக்கு என்ன நடக்குமோ!" என அவள் படபடக்க.


"இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கிடைக்காம நீ ஓய மாட்ட! அதுக்காகவாவது அந்த ஆளை சீக்கிரம் கண்டுபிடிக்கணும்!" என்றான் ஜெய் தீவிரமாக.


***


அடுத்த நாளே அந்த சிறுவனின் அம்மாவிடம் சென்று அவர்கள் விசாரிக்க, முழு போதையின் பிடியிலிருந்த சிந்துவை அங்கே அழைத்துவந்தவனின் தெளிவான அடையாளத்தை அவரால் சொல்ல இயலவில்லை.


சில தினங்கள் கடந்த நிலையில் சிந்துஜாஸ்ரீயின் சார்பில் அந்த சதானந்த்தை நேரில் சந்தித்து அந்த ஒப்பந்தம் பற்றிப் பேச அவனுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தாள் மாதினி. உடன் மனோகரும்.


உள்ளே வர ஒருவருக்கு மட்டுமே அனுமதி கிடைக்க, அவனுடைய பிரத்தியேக அறைக்குள் மாதினி மட்டுமே நுழையவும், அவளைக் கண்டதும் தன்னையும் அறியாமல் ஒரு அதிர்வுடன் எழுந்துநின்ற சதா, "நீ.. நீ.. நீங்க!" எனத் தடுமாற, "நான் மாதினி; அட்வகேட் கே.ஆர் சார் ஜுனியர்!" எனத் தன்னை கம்பீரமாக அறிமுகப்படுத்திக்கொண்டாள் அவள்.


கூடவே பெட்ரோல் நெடியுடன் எதோ தீயில் கருகும் வாடையும் சேர்ந்து மூச்சுமுட்டச் செய்ய, அந்த அறை முழுவதுமே தீ பற்றி எறிவதுபோல் ஒரு பிரமை உண்டாக, அவளுக்குப் பின்னால் நின்றித்த கரிய நிழல் உருவம், "நான்தாண்டா யாமினி! என்னை உனக்கு அடையாளம் தெரியல!" என்றது.


மாதினியின் குரலோடு சேர்ந்தாற்போல உருமாலாக சீற்றத்துடன் ஒலித்த அந்த பயங்கர குரலில் ரத்தம் சில்லிட்டுப்போனது சதாவுக்கு!


மிரட்டுவாள் மாயா!



0 comments
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page