top of page

Maathini-Yaamini 6*

மாயா-6


அந்த உதவி பேராசிரியர் பணி பிடித்துத்தானிருந்தது யாமினிக்கு.


அன்று ஒருமுறை அந்த நரேனை நேரில் பார்த்ததுடன் சரி, அதன்பிறகு அவனைச் சந்திக்கும் தொல்லை நேரவில்லை அவளுக்கு.


எனவே கொஞ்சம் இலகுவாகவே உணர்ந்தாள் அவள்.


சேர்ந்து இரண்டு தினங்கள் மட்டுமே அவள் வேலைக்குச் சென்றிருக்க, அதற்குள் பொங்கல் பண்டிகை காரணமாக ஐந்து நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.


பண்டிகையைக் கொண்டாட மாதினியும் ஊருக்கு வந்துவிட, வீடே புது கோலம் பூண்டிருந்தது.


எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.


இன்றளவும் ரத்தினம் தாத்தாவின் வீட்டில் கறவைகளையும் காளைமாடுகளையும் கட்டி பராமரித்து வருவதால் பெரும்பொங்கலை விட மாட்டுப்பொங்கல் அவர்கள் வீட்டில் விசேஷமாகக் கொண்டாடப்படும்.


இந்த வருடக் கொண்டாட்டங்களுக்குப் பெரியவர்கள் ஜெய் குடும்பத்தையும் அழைத்திருக்க, பொங்கலன்று மாலையே அகிலா மற்றும் ஸ்ரீதரன் இருவருடனும் அங்கே வந்திருந்தான் அவன்.


அவர்கள் வீட்டு புழக்கடையில் அமைந்திருக்கும் மாட்டுக்கொட்டகையில் மாதினியும் யாமினியும் ஒரு காளையின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டிக்கொண்டிருக்க, யாருடைய கருத்தையும் கவராவண்ணம் யாமினியைத் தேடிக்கொண்டு அங்கே வந்த ஜெய், அன்று இருவருமே புடவையில் இருக்கவும், 'இவர்களில் யார் யாமினி' என்ற குழப்பத்துடனேயே அவர்களை நெருங்க, பின் நீளமான கூந்தலை பார்த்து அவனுடையவளை அடையாளம் கண்டுகொண்டான்.


அவளைப் பார்த்த மகிழ்ச்சியில் அவன் அவர்களின் அருகில் வர, கோபமாகச் சீறியது அந்தக் காளை.


அவன் பயந்து சற்று பின்வாங்க, அதைப் பார்த்து சிரித்த மாதினி, "இந்த காளையை அடக்கினாத்தான் எங்க வீட்டுல பெண்ணை கொடுப்பாங்க.


அதுக்குதான் தாத்தா உங்க எல்லாரையும் இங்க இன்வைட் பண்ணியிருக்கார்!" என்று தீவிரமாக சொல்ல, அந்த காளையுடைய உயரத்தையும் அதன் முதுகிலிருந்த திமிலையும் அதன் கொம்புகளையும் பார்த்து முதலில் சற்று அதிர்ந்தவன், மாதினியின் உதட்டில் தவழ்ந்த விஷம புன்னகையிலும் யாமினியின் கண்கள் காட்டிய எச்சரிக்கையிலும் சுதாரித்தவனாக, "என்ன மிஸ்டர் காளை! வரீங்களா ரெண்டுபேரும் சண்டை போடலாம்!


நான் ஜெயிச்சாத்தான் எனக்கு யாமினியை கொடுப்பாங்களாம்.


ஒரு வேளை நீங்க ஜெயிச்சிட்டா உங்களுக்கு மாதினியை கட்டி கொடுத்தாலும் கொடுப்பாங்க!" எனச் சொல்ல,


என்னவோ அவன் சொன்னது புரிந்த மாதிரி அதன் கொம்புகளைச் சுற்றி கட்டியிருந்த சலங்கை ஒலிக்க மாடு தலை அசைக்கவும், "பார்றா! காம்படிஷன் ரொம்ப டஃப்பா இருக்கும் போலிருக்கே!


மாடு உன்னை கட்டிக்க ரெடியா இருக்கற மாதிரி வேற தெரியுது!" என்றவன், "அப்படினா இவங்க மிஸ்ஸஸ் காளை; ரைட்!' என அவன் மேலும் கிண்டலில் இறங்க, அதற்கும் அந்த காளையன் தலை ஆட்டவும் கலகலவென சிரித்தாள் யாமினி.


அதில் காண்டானவள், "லூசு! நீ ஒண்ணும் பூம் பூம் மாடு கிடையாது! உழவு மாடு எரும!" என்று மாட்டைக் கடிந்துகொள்ள, "என்ன இது எருமையா! எருமை இப்புடி..யா இருக்கும்?" என்றான் ஜெய் தீவிரமாக.


"எங்க வீட்டுக்கு கெஸ்ட்டா வந்திருக்கீங்களேன்னு பார்க்கறேன்! இல்லனா இந்த பெயிண்டை உங்க மூஞ்சிலயே கொட்டிட்டு போயிட்டே இருப்பேன்!" என்று சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த 'பெயிண்ட்' டப்பாவை தொப்பென்று கீழே வைத்துவிட்டு, "நீயும்; உன்னோட இந்த காளையுமா சேர்ந்து இந்த எருமைக்கு பெயிண்ட்ட பூசுங்க!" என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டை நோக்கிப் போனாள் மாதினி.


"என்ன வக்கீலாம்மா! உங்களால என் கூட ஆர்க்யூ பண்ண முடியலையா?" என அவன் அவளை மேலும் வம்புக்கு இழுக்க, மறுபடியும் அவர்களை நெருங்கி வந்தவள், "மனுஷங்க கூடத்தான் ஆர்க்யூ பண்ணுவேன்" என அவள் சொல்ல, "அப்படினா என்னை தேவன்.. யக்ஷன் அப்படிங்கற!" என விடாமல் அவன் தொடர, "ப்ளீஸ்! விட்ருங்க!" என இருவருக்கும் பொதுவாக யாமினி ஜாடை செய்ய, அவளுடைய தவிப்பை உணர்ந்து அமைதியாக உள்ளே போனாள் மாதினி.


"இங்க ஜல்லிக்கட்டு உண்டா?" என அவன் சந்தேகமாக இழுக்க "ஐயோ இது ஒண்ணும் ஜல்லிக்கட்டு மாடு இல்ல ஜெய்; இது உழவு மாடு!


எங்க ஊர்ல ஜல்லிக்கட்டெல்லாம் கிடையாது. அவ சும்மா விளையாட்டா உங்களை ஓட்டிட்டு போறா!" என யாமினி விளக்கமாகச் சொல்லவும், ஒரு பெருமூச்சு விட்டவன் "ப்பா; இவளை எப்படி உங்க வீட்டுல சமாளிக்கறாங்க?" என ஜெய் கேட்க,


தலையைச் சாய்த்து அவனை ஒரு பார்வை பார்த்தவள், " உங்க வீட்டுல எப்படி உங்கள சமாளிக்கறாங்களோ அப்படித்தான்!" என அனாயாசமாகச் சொல்ல, "அடிப்பாவி! அக்காவுக்கு சப்போர்ட்டு!" என அவன் சொல்லவும்,


"இல்லையா பின்ன? அதுவும் உங்க ரெண்டுபேரையும் சேர்த்து இப்ப நான் சமாளிக்கணும்!" என அவள் சலிப்பாகச் சொல்வதுபோல் ஆனால் பெருமை பொங்கச் சொன்னாள்.


"உன்னை ரொம்ப அமைதியான பொண்ணுன்னு நினைச்சேன்! நீ கூடவா யாமு?" என அவன் அதிசயித்து கேட்க, மென்மையான புன்னகையைச் சிந்தியவள், 'எனக்கு ரொம்ப பிடிச்சவங்க கிட்ட மட்டும் இப்படி பேசுவேன்!" என்றாள் யாமினி.


"ம்ஹும்! என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமா?" என அவன் கேட்க, அதற்கு வெட்கப் புன்னகையை அவள் பதிலாகக் கொடுக்கவும், "ம்.. உங்க அக்கா என்னை ரிஜெக்ட் பண்ணதாலத்தான நீ என்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்ச?" என அவன் தீவிரமாகக் கேட்க, "இல்லை! முதன்முதலில் உங்க போட்டோவை தாத்தா எல்லாருக்கும் காமிச்சார். அப்ப நானும் அதைப் பார்த்தேன். அப்ப இருந்தே எனக்கு உங்களைப் பிடிக்கும்!" என்றவள் நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தாள். "ஓஹ்!" என வியந்தான் ஜெய்.


"என்னை கேள்வி கேக்கறீங்களே; மாது வேண்டாம்னு சொன்னதாலதான நீங்க எனக்கு ஓகே சொன்னீங்க?" என அதே கேள்வியை அவள் கேட்க, "உண்மையை சொல்லனும்னா நான் ஓகே சொன்ன பிறகு மாதினி என்னை ரிஜெக்ட் பண்ணதும் எனக்கு ரொம்ப கோபம்தான் வந்தது.


அம்மா அப்பா கம்ப்பல் பண்ணதாலதான் உன்னைப் பெண் பார்க்கவே வந்தேன்.


என் எதிர்பார்ப்புக்கும் ரசனைக்கும் மேட்சா நான் ஆசைப்பட்டபடி நீ இருக்கவும் உன்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு.


இனிமேல் உன்னை பிரிஞ்சு என்னால இருக்கவே முடியாது!" என்று சொல்லி அவளிடமிருந்து எழுந்த நறுமணத்தால் கிறங்கி அவன் அவளை நெருங்கவும், அவனுடைய பதிலில் தன்னை மறந்து அவள் இருக்க, மறுபடியும் தன் தலையை ஆட்டியவாறு அந்த காளை, 'புஸ் புஸ்!' என சீறவும், மயக்கம் தெளிந்தான் ஜெய்.


அந்த காளையிடம், "சிங்காரம்! நம்ம ஃப்ரெண்டுதான்! நீ கோபப்படாத!" என்றாள் யாமினி!


பேசிக்கொண்டே அவள் அதன் கொம்புகளில் வர்ணம் தீட்டி முடித்திருக்க, "இது என்ன ஃப்ராக்ரன்ஸ் யாமு!" என அந்த மணத்தை அனுபவித்துக்கொண்டே அவன் கேட்க, "ஓ.. இதுவா? இது மகிழம்பூவோட ஸ்மெல்!


இப்ப சீசன்லாம் இல்ல; ஆனாலும் பூத்திருக்கு!" என்றவள், வாங்க எங்க வகுளாம்மாவ உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கறேன்!" என்றவள் அவனது கரத்தை பற்றி மகிழ மரத்தை நோக்கி இழுத்துச்சென்றாள்.


"அது யார் வகுளா அம்மா?" என அவன் புரியாமல் கேட்க, அந்த மரத்தின் அடியில் வந்து நின்றவள், "இந்த மரம்தான் அது!


மகிழ மரத்துக்கு வகுளம்ன்னு ஒரு பேர் இருக்கு! எனக்கும் மாதுக்கும் இந்த மரம்னா ரொம்ப பிடிக்கும்" என்றவள் அதை வருடிக் கொடுக்க, அந்த இடம் முழுதும் அந்த பூ கொட்டிக்கிடக்க, அதன் மணம் பரவி கமகமத்துக் கொண்டிருந்தது.


அது அவனுக்கு ஒரு போதையைக் கொடுக்க அதில் கிறங்கியவன், அவள் கண்களில் பொங்கி வழிந்த காதலில் கரைந்துகொண்டே அவளை அந்த மரத்தின்மீது சாய்த்து, "ஐ ஃபீல் லைக் டு கிஸ் யூ! ப்ளீஸ் டோண்ட் சே நோ!" என்று சொல்லப் பேசாமல் கண்மூடி நின்றாள் யாமினி!


வில்லங்க வார்த்தைகட்கு விடை சொல்லத் தான் தயங்கி...


பேச்சுரைக்கும் இதழிரண்டும் மௌனத்தைப் பூட்டிக்கொள்ள,


இதழ் பேசா வார்த்தைகளை உரைத்திடுமோ விழி இரண்டும்?


அவ்விந்தைதனை தான் உணர்ந்து விபரீதம் தடுத்திடத்தான்...


மங்கையவள் மயங்கிப்போய் விழிப் அடைத்து நின்றிருக்க,


இதழ் பேசா... விழி உரைக்கா... வார்த்தைகள் அத்தனையும்...


ஐயமுற இடமின்றி விளக்கியதே முகச் சிவப்பு!


கண்டுகொண்ட கள்வனுமே மோகம் கறையுடைக்க...


பூட்டிய செவ்விதழ்களிலே...


தன் கவிதை முழுவதையும் வரைந்தானே முத்தத்தால்!


பெண்ணவளின் மனமறிந்து மென் காற்று தான் வீச...


காதலின் சாட்சியாகக் காவல் நின்ற அந்த மரம்...


மழையாகச் சொறிந்ததுவே மகிழ்வாக தன் மலரையெல்லாம்!


அன்று அவன் இதழ் பதித்த அந்த முத்தத்தின் சூட்டை உணர்ந்தவள், பதறி எழுத்து உட்கார்ந்தாள் மாதினி.


சுற்றி எங்கும் மகிழம்பூவின் மணம்.


கூடவே ஏதோ பற்றி எரியும் வாடை. மூச்சு முட்டுவதுபோல் இருந்தது அவளுக்கு.


தெரித்துவிடும் போல் வலித்த தலையை தன் கைகளால் தாங்கிக்கொண்டாள் அவள்.


கனவா நினைவா எனப் புரியாமல் குழப்பத்தில் அவள் உட்கார்ந்திருக்க, அவளுடைய கைப்பேசி ஒலித்தது.


யார் என்பதைக் கூட பார்க்காமல் அனிச்சையாக அந்த அழைப்பை அவள் ஏற்க, "ஏன் மாதினி உங்க வீட்டுல இப்படி சொல்லி வெச்சிருக்க?" கொஞ்சம் சூடாக ஒலித்தது ஜெய்யின் குரல்.


ஒரு தெளிவான மனநிலையில் தான் இல்லை என்பதை உணர்ந்தவள், "ஜெய்! இப்ப போன்ல வேணாம்; பொங்கல் முடியட்டும் நான் சென்னை வந்துடுவேன்! நேர்ல பேசலாம்!" என நிதானமாக அவள் சொல்ல,


"நீ இப்ப என்ன செஞ்சிட்டு இருக்க? வேற ஏதாவது கிரகத்துக்கு போயிட்டாயா? தை முதல் முகூர்த்தத்துல நாள் குறிச்சு சொல்லிட்டார் உங்க ரத்தினம் தாத்தா!


அம்மா அப்பா நான் சொல்ற எதையும் கேக்கற மூட்ல இல்ல.


எங்க அம்மா பயங்கர சென்டியா பேசறாங்க. அவங்க ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டான்னு எனக்கு சந்தேகமே வந்துடுச்சு.


நீ என்னடானா கோர்ட்ல வாய்தா கேக்கற மாதிரி கேக்கற!" என அவன் பெரிய,


"ஐயோ எனக்கு தெரியாது ஜெய்; சாயங்காலம்தான் பாட்டி உங்க அம்மா கிட்ட பேசப்போறதா சொன்னாங்க" என அவள் குழப்பமாகச் சொல்ல,


"மணி என்ன தெரியுமா! ஈவினிங் சிக்ஸ்" என அவன் சொல்லக் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு மணியைப் பார்த்தாள் மாதினி.


அறையின் ஜன்னல்கள் சாத்தப்பட்டு மின் விளக்கு எரிந்துகொண்டிருக்க அவளால் நேரத்தை கணிக்க இயலவில்லை.


"சாரி ஜெய்! ரொம்ப நேரம் தூங்கி இருக்கேன்" என அவள் சொல்ல, "ப்ச்.." என அலுத்துக்கொண்டவன், "ஏன் மாதினி இந்த திடீர் முடிவு? முதல்ல என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல" என அவன் கேட்க,


"ப்ளீஸ் ஜெய்! புரிஞ்சிக்கோங்க! இது போன்ல பேசற விஷயம் இல்ல! நாளைக்கே நாம மீட் பண்ணலாம்" என அவள் வருத்தத்துடன் சொல்ல, பட்டென்று அழைப்பைத் துண்டித்தான் ஜெய்.


அவள் அறையை விட்டு வெளியில் வரவும் அவளைப் பிடித்துக்கொண்ட அவளது பெரியம்மா, "என்ன மாது இப்படி தூங்கி இருக்க!


நானும் உங்க அம்மாவும் நாலஞ்சு தடவ வந்து எழுப்பி பார்த்தோம்! பாட்டிங்க ரெண்டுபேரும் பயந்து போயிருப்பாங்கச இப்படியா செய்வ" எனக் கேட்டவர், "ஜெய் வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க" என்று முடித்தார் மகிழ்ச்சியுடன்.


எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் கூடத்தை நோக்கி அவள் போக, அவளை உட்கார வைத்து த்ரிஷ்டி சுற்றி போட்டார் கனகா பாட்டி.


அன்று எல்லாமே வித்தியாசமாகத் தோன்றியது மாதினிக்கு.


***


அடுத்த நாள் காலை சூரியன் மேலே வரலாமா வேண்டாமா எனச் சோம்பலுடன் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, தனது 'நானோ'வை உயிர்ப்பித்து கிளம்பினாள் மாதினி.


"இந்த நேரத்துல எங்க கிளம்ப மாது? ஊரெல்லாம் போகிங்கர பேர்ல டயரையும் அதையும் இதையும் கொளுத்தி இருப்பாங்க. மூச்சை அடைக்கும்" எனச் சந்தா பாட்டி சொல்ல, "இல்ல பாட்டி நான் ஜெய்யை நேர்ல பார்க்கணும்.


அதுக்கு முன்னால புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயிட்டு வந்துடறேன் பாட்டி" என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டு தடுத்த ஸ்வர்ணாவையும் சமாளித்து அங்கிருந்து கிளம்பினாள் அவள்.


அன்று தேதி ஜனவரி பதினாலு!


***


கொதிநிலையில் அந்த காவல்நிலையத்திற்குள் நுழைந்தான் வீரா. அவனை அங்கு எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர் செல்வம், அமைதியாக இருக்குமாறு ஜாடை காட்டி அவனை உட்காரச் சொல்லிவிட்டு, “நீங்க சொல்றது போல இது கொலையோ சதியோ இல்லை மிஸ்டர் வீரா.


உங்க ஃபிரண்டுக்கு நடந்தது ஒரு அக்சிடண்ட். உங்களுக்கு நல்லாவே தெரியும் அது ஒரு ஆக்சிடண்ட் ஸோன் (zone).


நாம எப்படியும் வாரத்துல இரண்டு மூணு ஆக்சிடண்ஸ அந்த இடத்துல பார்த்துட்டுதானே இருக்கோம்.


யாரோ போகி கொளுத்தி இருந்திருக்காங்க.


அங்கே உங்க ஃப்ரெண்டோட கார் ஆக்சிடென்ட் ஆகி கவுந்திருக்கு.


பெட்ரோல் லீக் ஆகி தீ பிடிச்சு எரிஞ்சிருக்கு" என்று சொல்ல,


அவரை தீப் பார்வை பார்த்த வீரா, “என்ன மிஸ்டர் செல்வம்; டிசம்பர் 14 நந்தா; இந்த மாசம் சதா; இன்னுமா இதெல்லாம் ஆக்சிடன்ட்ணு சொல்றீங்க?


அதுவும் அதே இடத்துல?


அது திட்டமிட்ட கொலைதான். எனக்குத் தெரியும்!


கிட்டத்தட்ட ஒரு மாசமா நீங்க எந்த ஆணியும் புடுங்கல.


யாமினிக்காக யாரோ பழிவாங்கராங்கன்னு எனக்கு தோனுது.


யாரோ என்ன யாரோ அவளோட ட்வின் சிஸ்டர் மாதினிதான்!


இது உங்க மண்டையில ஏறல?” என எள்ளலாகக் கேட்க, அவரோ தணிந்த குரலில், “வீரா! டென்ஷன் ஆகாதீங்க;


இது ஸ்டேஷன்ல வச்சு பேசர விஷயிமில்ல. நாம எப்பவும் மீட் செய்யற இடத்தில் ஈவினிங் ஏழு மணிக்கு சந்திக்கலாம்” என்று கூறவே அவன் அடக்கப்பட்ட கோவத்துடன் காவல் நிலையத்தைவிட்டு வெளியேறினான்.


பயத்தில் குலை நடுங்கிப் போயிருப்பது புரிந்த்து செல்வத்துக்கு. காரணம், அன்று காலை நந்தா விபத்துக்குள்ளான அதே இடத்தில் காருடன் எரிந்து சாம்பலாகிப்போயிருந்தான் சதா!


(மிரட்டுவாள் மாயா)

0 comments
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page