top of page

Kadhal Va..Radha? 3*

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

காதல்-3


சொல்லிவிட்டு கிளம்பலாம் எனச் சேஷாத்ரியை தேடி சாப்பாட்டு அறைக்குள் கண்ணன் நுழைய, அங்கே இருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பத்தை ஆராய்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த ராதாவைக் காணவும் அவனுடைய முகத்தில் விஷம புன்னகை அரும்பியது.


அடக்கப்பட்ட சிரிப்புடன், "குரு நான் கிளமபிறேன்" என அவன் சொல்ல, உணவு மேசைக்கு இணையாகப் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்தவாறு, "டேய் கண்ணா! சாப்டுட்டு போடா!" என அவர் சொல்ல, "பரவால்ல குரு! நான் ஆத்துக்கு போய் குளிச்சிட்டு டிஃபன் எதாவது பண்ணி சாப்டுக்கறேன்!" என்றான் அவன்.


அதைக் கேட்டுக்கொண்டே அங்கே வந்த கீதா, "கிழிச்ச! குக்கர் வெக்க சோம்பேறித்தனம் பட்டுண்டு அறையும் குறையுமா எதாவது பழத்தை சாப்டுட்டு படுத்துப்ப! சித்த இரு" என அவனை அக்கறையாகக் கடித்துக்கொண்டு, "டீ ராதா! தளிகை உள் மேடைல இட்லி வார்த்து வெச்சிருக்கேன்! கூடவே தக்காளி சட்னியும் இருக்கு! ஒரு டப்பால போட்டு அவன்கிட்ட குடு!" என மகளைப் பணித்தவாறு கணவருக்கு உணவை பரிமாறினார்.


உண்மைதான்! இருக்கும் அலுப்புக்கு அப்படியே போய் விழலாம் போலிருந்தது அவனுக்கு. அவருடைய அக்கறை கண்டு நெகிழ்ந்தவன், "தேங்க்ஸ் மாமி!" என்று சொல்லிவிட்டு வரவேற்பறை நோக்கி அவன் போக, அவனை முறைத்துக்கொண்டே அடுக்களை நோக்கிச் சென்றாள் ராதா.


வரவேற்பறை 'சோஃபா'வில் அமர்ந்திருந்த கண்ணனுக்கு அருகில், பையுடன் கூடிய 'ஹாட் பேக்' ஒன்றை ராதா கொண்டுவந்து வைத்துவைக்க, கைப்பேசியில் ஏதோ விளையாடியவாறே, "ரொம்பல்லாம் ஆராய்ச்சி பண்ணாத; நீ அப்படியே உங்க அம்மா சாயல்தான்!


அதுல டவுட்டே இல்ல! ஆனா நான் சொன்னது உன்னைப் பத்தி இல்ல!" என அவன் தீவிரமாக சொல்ல, அவனை முறைத்தவள், "உங்க கண்டுபிடிப்புக்கு தேங்க்ஸ்; நான் ஒண்ணும் அந்த ஆராய்ச்சில இறங்கல! உங்களுக்காக இங்க யாரும் உருகல! நீங்க கிளம்பலாம்" எனச் சட்டென அவள் சொல்ல, "அப்பறம் ஏன் கண்ணாடி பார்த்த" என அவன் கேட்க, அதில் எரிச்சலுற்று ,"கண்ணன்!" என அவள் பற்களை கடிக்கவும், "தேங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் கண்ணன்.


'இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எத்தனை நாளைக்கோ' என ஆயாசமாக இருந்தது அவளுக்கு.


***


கூடத்தில் உட்கார்ந்து வலி நிவாரணி தைலத்தை முழங்காலில் தடவிக்கொண்டிருந்தார் ஆனந்தி.


அருகில் ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் மைத்ரேயி.


அருகிலிருந்த கைப்பேசி ஒலிக்கவும் அதனை எடுத்து காதில் பொருந்தியவர், "சொல்லுடா கண்ணா!" என்று கூற அவரது குரலிலிருந்த களைப்பை உணர்ந்தவன், "இன்னைக்கு வேலை ஜாஸ்தி இல்ல மா" என்று கேட்க, "அதுக்கென்ன பண்ணமுடியும்! நம்மாத்து பங்க்ஷன்! நாமதான எல்லாத்தையும் கவனிக்கணும்! இத்தனைக்கும் சித்தப்பாவும் சித்தியும் ரொம்பவே ஹெல்ப் பண்ணா! அதிருக்கட்டும் நீ சாப்டியா" என அவர் கேட்க, "ஆச்சுமா! இட்லி தக்காளி சட்னி! கீதா மாமி கொடுத்தனுப்பினா!" என்றவன் "பங்க்ஷன் எப்படி நடந்ததும்மா!" எனக் கேட்டான் அவன்.


"ரொம்ப நன்னா நடந்துதுப்பா! நீ இல்லைங்கற ஒரே ஒரு குறைதான்" என அவர் அந்த குறை மேலோங்கச் சொல்ல, "ரொம்ப நாளைக்கு முன்னாடியே பிக்ஸ் பண்ண ஆபரேஷன்மா!


அதுவும் காக்ளியர் இம்பிளான்டேஷன்! குரு பண்ணமாட்டார்!" என அவன் விளக்கமாகச் சொல்ல, "உன்னோட இந்த தொழில்தான் நம்ம குடும்பத்தை முன்னேத்தி இருக்கு. நம்மாத்து பெண் குழந்தைகள் ரெண்டுபேரையும் நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிகொடுத்திருக்கோம்னா அதுக்கும் இதுதான் காரணம்.


நான் எப்படி அதைக் குறை சொல்லுவேன். ஆனா முக்கியமான சந்தர்ப்பத்துல உன்னை விட்டுக்கொடுக்க வேண்டியதா போச்சே!


இன்னைக்கு விட்டா வேற நல்ல நாளே அமையலையே!" என்றார் ஆனந்தி வருத்தத்துடன்.


"பரவாயில்லைமா! அதான் சீமந்தத்தை சண்டேல அதுவும் சென்னைலயே வெச்சிருக்களே! ஜமாய்ச்சுடலாம்!" எனக் கண்ணன் சொல்ல,


"அடுத்தவாரம் மைத்துவ அழைச்சிண்டு நானும் அப்பாவும் அங்க வரலாம்னு இருக்கோம்; நீ என்னைக்கு ஃப்ரீயோ அன்னைக்கு போய் சீமந்தத்துக்கு புடவை வெள்ளி கிண்ணம் எல்லாம் வாங்கிண்டு அதுக்கப்பரம் அவளை அவா அதுல கொண்டுவிடலாம்!" என ஆனந்தி சொல்ல, "செஞ்சுடலாம்மா" என்றான் அவன்.


அலுப்போ சலிப்போ மறுப்போ இல்லாத அவனது பதில் மனதிற்கு நிறைவைக் கொடுக்க, அருகிலிருந்து அவனுடன் பேசவேண்டும் என்று ஜாடை செய்து கொண்டிருந்த மகளிடம் கைப்பேசியைக் கொடுத்தார் அவர்.


அவள் அவனிடம் அன்றைய தின நிகழ்வுகளைப் பேசி முடிக்க, அதன் பின் ராகவன், அவரது தம்பி வரதன், வரதனின் மனைவி ராஜி அவர்கள் மகன் அமுதன் என ஒவ்வொருவராக அவனுடன் பேசி முடிக்க, மணி பன்னிரண்டை நெருங்கி இருந்தது.


அதன் பின் கண்ணயர்ந்தவன் மறுபடி விழிக்கும்போது மணி காலை ஆறு. தானே காஃபியை தயாரித்து அதை அருந்திவிட்டு, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என முடித்து அவனே எளிமையாகத் தயாரித்த காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்தபொழுது மணி எட்டரை.


புற நோயாளிகள் பரிசோதனை, அங்கேயே அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் பரிசோதனை, அறுவை சிகிச்சைகள் என அவனது நாள் ரக்கை கட்டி பறக்க மறுபடி அவன் வீடு வந்தது சேரும்பொழுது இரவு எட்டு மணி.


அன்று சேஷாத்திரி மாலை சீக்கிரமே வீட்டிற்குச் சென்றுவிட அங்கே செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போனது அவனுக்கு.


'இதுக்கு மேல அடுப்பை மூட்டி எதாவது பண்ணணுமே!' என்ற அலுப்புடன் அவன் கதவைத்திறக்க, அவனுக்குச் சொந்தமான அந்த ஒற்றை படுக்கையறை கொண்ட 'பிளாட்'டின் வரவேற்பறையில் போடப்பட்டிருந்த உணவு மேசையின் மேல் அவனுக்காகத் தயாராகக் காத்திருந்தது ஒரு 'ஹாட் பேக்'.


வீட்டைச் சுத்தம் செய்ய ஒரு பெண்மணியை வேலைக்கு அமர்த்தியிருந்தான் அவன். அவருக்காகப் பக்கத்து விட்டில் ஒரு சாவி எப்பொழுதுமே இருக்கும்.


எப்பொழுதாவது அவனுக்குப் பிடித்த உணவாகச் செய்தால் அதை ராதா மூலமாக அவனுக்காகக் கொடுத்து அனுப்புவார் கீதா மாமி.


அவன் அங்கே இல்லாத பட்சத்தில் அந்த சாவியைப் பயன்படுத்திக்கொள்வாள் ராதா.


அதில் அவனது பார்வை பட்டதும் அவன் புன்னகை விரியக் குறுஞ்செய்தி வந்ததற்கான அடையாளமாக அவனது கைப்பேசி ஒலி எழுப்பியது.


'ப்ச்... ஆப்பம், தேங்காய் பால்! உங்க ஃபேவரைட்டாம்! அம்மா குடுத்துட்டு வரச்சொன்னா! டைனிங் டேபிள் மேல வெச்சிருக்கேன்! உங்களுக்காக இல்ல! அம்மா சொன்னதால அங்க வந்தேன்!' என உதடு சுழிக்கும் 'ஈமோஜி' ஒன்றையும் இணைத்து அனுப்பியிருந்தாள் ராதா!


அவனது புன்னகை மேலும் விரிந்தது.


***


சென்னையின் முக்கியப்பகுதியில் அமைந்திருந்த அந்த ஆடம்பர பங்களாவுக்கு முன் தான் ஓட்டி வந்த பி.எம்.டபள்யூவை நிறுத்தி ராதா 'ஆரன்' ஒலியை எழுப்ப, அதன் பிரம்மாண்ட 'கேட்டை' கொஞ்சமாகத் திறந்து கொண்டு வெளியில் வந்த அந்த பங்களாவின் காவலாளி மிகவும் பணிவுடன், "யுவர் குட் நேம் மேடம்!" என்று கேட்க, "அனுராதா சேஷாத்ரி!" என்றவள், "உள்ளே அரவிந்தன்னு ஒருத்தர்" என இழுக்க, "எஸ் மேடம்! ப்ளீஸ் கம் இன்" என்று சொல்லவிட்டு அந்த வாயிற் கதவை மொத்தமாகத் திறக்க, தன் வாகனத்தைச் செலுத்திக்கொண்டு உள்ளே சென்றவள் அதை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கவும் அவளை நோக்கி ஓடி வந்தான் அரவிந்தன்.


கொஞ்சம் உரிமையுடனான கோபத்துடன், 'என்ன அத்திம்பேர்! இவ்ளோ தூரம் வந்துட்டு நேரா நம்மதுக்கு வராம யாரோ மூணாம் மனுஷா ஆத்துல வந்து தங்கி இருக்கீங்கோ! அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா!" என்றாள் ராதா!


என்ன பண்ண சொல்ற ராதா! இது 'ஏ அண்ட் பீ பார்மா' இருக்கில்ல அவங்களுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ்.


முக்கியமான அபிஷியல் மீட்டிங். எங்க கம்பெனி மூலமா இங்க ஏற்பாடு பண்ணியிருக்கா!


இதை சொன்னா உங்கப்பா வானத்துக்கும் பூமிக்குமா குதிப்பார். உங்கக்கா கண்ணை கசக்குவா. நான் அங்க வந்து தங்கற நிர்பந்தம் உண்டாகும்.


அதனாலதான் சொல்லல.


இன்னும் டூ டேஸ் இங்கதான் இருப்பேன்.


கிளம்பறதுக்கு முன்னாடி அங்க வரேன்" என்றவன், "வா உள்ளே போய் பேசலாம்" என்று சொல்ல, அவனுடன் அந்த பங்களாவுக்குள் நுழைந்து அதன் வரவேற்பறையில் போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அவள் அமர, அங்கே வேலை செய்பவர் அருகில் வந்து பணிவுடன் நிற்கவும், "ரெண்டு காஃபீ" என்றான் அரவிந்தன்.


"இல்ல! காஃபீ வேண்டாம்! எனக்கு ஹாட் சாக்கலேட் இல்லனா பூஸ்ட் கொண்டு வாங்க!" என அவள் சொல்ல, அவர் உள்ளே சென்றார்.


"நீ காஃபீ சாப்பிடுவ இல்ல?" என அவன் கேட்க, "சாப்பிடுவேன்! ஆனா இப்ப மூட் இல்ல!" என்ற அவளது பதிலில் "ஓகே! ஓகே!' என்றவன், "உன்னை ஏன் இங்க வர சொன்னேன்னா; ஏ அண்ட் பீ குரூப்ஸ் சீ.ஈ.ஓ மிஸ்டர் அபிமன்யுவுக்கு உன்னை அறிமுகப்படுத்தத்தான்.


அவர் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்.


உன் பி.ஹெச்,டீ முடிஞ்ச உடனே இவங்க கம்பனிலேயே உனக்கு நல்ல ஸ்கோப் இருக்கு! ஸோ இந்த மீட்டிங் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்!" என்றான் அவன்.


அவனை ஒரு புரியாத பார்வை பார்த்தவள், "நான் இப்போதைக்கு வேலை எதுவும் தேடலையே அத்திம்பேர்" என்றாள் குழப்பமாக.


"அப்படினா தன் திறமையை வெச்சு பணம் பண்ணத்தெரியாம ஃபிலாசபி பேசற மொக்க டாக்டர் யாரையாவது லவ் பண்றியா!


அவனை கல்யாணம் பண்ணிண்டு ஹவுஸ் வைஃபா இருக்கற ஐடியா ஏதாவது இருக்கா" என அவன் எகத்தாளமாகக் கேட்க, "அத்திம்பேர்!" எனக் கோபமாக அழைத்தவள், "அனுபமா எம்.ஏ மியூசிக் முடிச்சிருக்கா! நன்னா பரதநாட்டியம் ஆடுவா! அவ திறமையை வளர்த்தா விட்டிருக்கீங்கோ! அங்க அவ நாட்டிய பள்ளி நடத்தறாளா இல்ல உங்களுக்கு துணி தோச்சு போட்டுண்டு இருக்காளா?" என்றாள் ராதா காரமாக.


எதிர்பாராத அந்த திடீர் தாக்குதலில் என்ன பதில் செய்வது எனப் புரியாமல் 'ஏண்டா இவகிட்ட வாயைக் கொடுத்தோம்!' என நொந்தே போனான் அவன்.


பின் சமாளிப்பாக, 'நான் என்ன வேண்டாம்னா சொல்றேன்! அவளுக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல" என்று சொல்லிவிட்டு, "ஊர் முழுக்க ஹாஸ்பிடல்ஸ்; லேப் அண்ட் ஸ்கேனிங் சென்டெர்ஸ்; பார்மா கம்பனிஸ்; செயின் ஆப் மெடிக்கல் ஸ்டோர்ஸ்; எல்லாம் வெச்சு கட்டி காப்பாத்தற ஒருத்தரை மீட் பண்றதுல தப்பு ஒண்ணும் இல்லையே?" என அவன் கேட்க, 'தப்பே இல்லை அத்திம்பேர்; அப்பா அம்மாவுக்கு சொல்லாம இங்க வரச்சொன்னீங்கோ இல்லையா அதுதான் தப்பு.


இப்படி ஒருத்தரை மீட் பண்றதுக்காகத்தான் என்னை இங்க கூப்பிடீங்கோன்னு நீங்க சொல்லியிருக்கணும்.


நான் இங்க வந்தது உங்களைப் பார்க்கத்தான். வேற யாரையும் இல்ல; அதுல எனக்கு எந்த இண்ட்ரஸ்டும் இல்ல" என அவள் சொல்ல, "பரவாயில்லை மிஸ் ராதா. உங்களுக்கு என்னைப் பார்க்க இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கலாம்! பட்; எனக்கு உங்களை மீட் பண்றதுல ரொம்ப இன்ட்ரெஸ்ட் இருக்கு! ரொம்ப ரொம்ப இன்ட்ரெஸ்ட் இருக்கு!" என ஒலித்தது ஒரு கம்பீர குரல்.


அதில் அவள் திடுக்கிட்டு திரும்ப அவளுக்கு அருகில் மிடுக்காக வந்து நின்றான் அந்த குரலுக்கு உரியவன்... அபிமன்யு. அபிமன்யு பரத்வாஜ்!


அதே நேரம் அவளது கைப்பேசி ஒலிக்க, அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததும் அனிச்சையாக அந்த அழைப்பை அவள் ஏற்க, "இப்ப எங்க இருக்க ராதா!' என ஒலித்தது ஆனந்த கிருஷ்ணனின் குரல் மிகவும் கடுமையாக!

0 comments

Commenti

Valutazione 0 stelle su 5.
Non ci sono ancora valutazioni

Aggiungi una valutazione
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page