top of page

Kadhal Va..Radha? 2*

காதல்-2


ராதா அழைத்தவுடன் அவளை பின் தொடர்ந்து செல்ல அவனது 'ஈகோ' இடம்கொடுக்காமல், அந்த மருத்துவமனையின் முதல் தளத்தில் இருக்கும் அவனது பிரத்தியேக அறைக்கு வந்தவன், அதை ஒட்டி அமைந்திருந்த ஓய்வறைக்குள் சென்று தன்னை தூய்மைப் படுத்திக்கொண்டு ஒரு 'டீ-ஷர்ட்'டுக்கு மாறி பின் அவனது இருக்கையில் வந்து அமர்ந்தான் கண்ணன்.


ஒலித்த கைப்பேசியை எடுத்து அவன் காதில் பொறுத்த, "டேய் கண்ணா ஃப்ரீயா இருந்தா உடனே வாடா! சாப்பிடலாம்" என்றார் எதிர் முனையில் பேசியவர்.


ராதாவும் அங்கே இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில், "இல்ல குரு; எனக்கு பசிக்கல; அடுத்த கேஸ் பாக்கறதுக்குள்ள கொஞ்சம் ஹைபர்னேட் ஆகிக்கறேன்!" என்றான் அவன் அவரை தவிர்க்கும் பொருட்டு.


“பரவாயில்ல வா! உன் தங்கை பூச்சூட்டலுக்கு மாமி போய்ட்டு வந்திருக்கா!


அப்பொ உங்கம்மா புளியோதரை கொடுத்தனுப்பி இருக்கா!


உன் சித்தப்பா பண்ணதாம்! கமகமன்னு அவ்ளோ அருமையா இருக்குடா!


காரசேவை வாயில போட்ட உடனே கரையரதுடா கண்ணா!


ஜாங்கிரி அருமையோ அருமை! வா வா சாப்பிடலாம்!" என ஒலித்த அக்கறை நிரம்பிய குரலில் வீண் பிடிவாதம் பிடிக்கத் தோன்றாமல், "தோ வந்துடறேன் குரு!" என்று சொல்லி புன்னகையோடே அந்த அழைப்பைத் துண்டித்தான் கண்ணன்.


அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவனது குருவான 'டாக்டர்.சேஷாத்திரி'யின் முன் உட்கார்ந்திருந்தான் அவன்.


அறுபதை நெருங்கும் வயது. அளவான உயரம். நன்றாக வழுக்கை விழுந்த தலை. இருந்த கொஞ்சம் சிகையும் வெள்ளை வெளேர் என வெளுத்திருக்க, அமைதி ததும்பும் ஞானத்தின் களை பொருத்திய அவருடைய முகம் அவரது அகத்தை அப்படியே பிரதிபலிக்க, நெற்றியில் சிறியதாக வைத்திருந்த செந்தூரம் அவரது மலர்ந்த முகத்துக்கு மேலும் தேஜஸை கொடுத்தது.


சென்னையிலேயே புகழ்பெற்ற காது மூக்கு தொண்டை நிபுணர் அவர்.


அவரும் கூட அப்பொழுதுதான் ஒரு அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு வந்திருந்தார்.


அந்த மருத்துவமனையை அவர் சொந்தமாகத் தொடங்கி, இப்பொழுது அதற்கு வயது முப்பது.


முதலில் அடையாற்றிலிருந்த அவரது அப்பாவுக்குச் சொந்தமான அந்த இடத்தில் மிகச் சிறிய 'கிளினிக்;காக அவர் அதைத் தொடங்கி பின் நான்கு தளங்களை கொண்ட அதி நவீன மருத்துவமனையாக அதை வளர்த்து விட்டிருக்கிறார் அவர்.


அதுமட்டுமில்லாமல் தமிழ் நாட்டில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகள் சில இவருடைய திறமையை அடிக்கடி பயன்படுத்திக்கொள்வதும் உண்டு.


அவரது தொழிலைப் பொறுத்த மட்டும் மிகச்சிறந்த கைராசிக்காரர்; நேர்மையாளர்; ஒரு நல்ல மனிதாபிமானி.


ஆனால் மற்றவர் எளிமையாக அணுக முடியாத ஒரு பிடிவாதக்காரர்.


இந்த உலகில் யாராவது ஒருவருக்கு மட்டும் அவர் கட்டுப்படுவர் என்றால் அது கண்ணனுக்கு மட்டும்தான்.


***


"உன்னை விட்டுட்டு சாப்பிட மனசு வரலடா கண்ணா! அதான் கூப்பிட்டேன்!" என்றவர், "ராதாம்மா! கண்ணனுக்கும் ஒரு இலையைப் போடு!" என்று சொல்ல, அவனுக்கு நேராக வாழை ஏடு ஒன்றை அவள் விரிக்க, தானே அதில் புளியோதரை பரிமாறினார் சேஷாத்திரி.


"பரவாயில்ல குரு! நானே போட்டுக்கறேன்!" என்றவன் அதைச் சுவைக்க, "எப்படிடா இப்படி பண்றார்? நீ பண்ணதுன்னு சொல்லிப் போனவராம் கொண்டுவந்தியே அது இந்த அளவுக்கு டேஸ்ட்டா இல்லடா?" எனச் சொல்லிக்கொண்டே அதைச் சுவைத்துச் சாப்பிட்டார் அவர்.