Kadhal Va..Radha? 17
காதல்-17
அடுத்த நாள் வழக்கம் போல மருத்துவமனைக்கு வந்திருந்தான் கண்ணன்.
"நம்ம மீட்டிங் ஹால்ல இருக்கேன்! சித்த இங்க வா கண்ணா!" என அவனைக் கைப்பேசியில் அழைத்தார் சேஷாத்ரி.
பணி மருத்துவர்கள் மற்றும் அவர்கள் மருத்துவமனையின் அலுவலகர்களுடன் முக்கிய விஷயங்களைக் கலந்தாலோசிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கலந்தாய்வு கூடம் அது.
எதோ ஒரு மருத்துவ சம்பந்தமான அலுவலக ரீதியான சந்திப்பு என்ற எண்ணத்துடன் என்ன ஏது எனறு கூட கேட்காமல் கண்ணன் அங்கே வர, கீதாவுடன் ராதாவும் அங்கிருப்பதைக் கண்டு அதிர்ந்தான் அவன்.
தான் வந்த காரியத்தைச் சாதித்துக்கொண்ட நிம்மதியில் அனுபமா இரண்டு மூன்று தினங்கள் புக்ககத்தில் தங்கிவிட்டுவருவதற்காகச் சென்றுவிட, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சில விஷயங்களைப் பேசி முடிக்க எண்ணியிருந்த ராதா, அவளுடைய அம்மா அப்பா மருத்துவமனை கிளம்பவும் அவர்களுடன் அங்கே வந்துவிட்டாள்.
தங்கள் அபிப்ராயத்தை கேட்காமல் அபிமன்யுவை திருமணம் செய்துகொள்ள அனுபமாவிடம் ராதா சம்மதம் சொல்லியிருக்க, அதற்குப்பின்னால் கண்ணன்தான் இருக்கிறான் என்பதை அவர்கள் அறியாத காரணத்தால், அவள்மேல் கடும் அதிருப்தியில் இருந்தனர் சேஷாத்ரி மற்றும் கீதா இருவரும்.
அனுவை வைத்துக்கொண்டு அவளிடம் எதையும் பேச இயலாத நிலையிலிருத்தவர்கள் அவளுடைய மனதை மாற்ற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள எண்ணி அவளை உடன் அழைத்துவந்திருந்தனர்.
உள்ளே நுழைந்ததுமே, "போயும் போயும் அந்த அபிமன்யுவை கல்யாணம் பண்ணிக்க ஒத்துண்டு இருக்கியே ஏன் ராதா!
உனக்கு புத்தி கெட்டு போச்சா?
இல்ல அம்மா அப்பா மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என கீதா படபடக்க, தந்தையின் முகத்தைப் பார்த்தாள் ராதா.
மனைவியின் பேச்சை ஆமோதிப்பது போல மௌனமாக இருந்தார் அவர்.
"உங்க கேள்விக்கு நான் கட்டாயம் பதில் சொல்றேன்! ஆனா கொஞ்சம் கண்ணனை இங்க வரச்சொல்லுங்கோ..பா!" என்றாள் ராதா.
அவள் ‘சொல்லவந்திருக்கும் விஷயத்தை கண்ணனின் முன்னிலையில்தான் சொல்லுவேன்' என்று சொல்லவும், மகளின் முகத்தில் தளும்பிக்கொண்டிருந்த கோபத்தையும் பிடிவாதத்தையும் பார்த்த பிறகு அவருக்கு நடந்து கொண்டிருக்கும் நாடகம் கொஞ்சம் பிடிபட, 'தீர்ந்தடா கண்ணா நீ!' என மனதிற்குள் நகைத்தவாறு அவனை அங்கே வரச்சொல்லி அழைத்திருந்தார் சேஷாத்ரி.
அவளை அங்கே பார்த்ததும், 'அதான் அன்னைக்கு அவ்வளவு தூரம் படிச்சு படிச்சு சொன்னனே; இப்ப எதுக்கு சீன் கிரியேட் பண்ற!' என்கிற ரீதியில் அவளைக் கண்களால் எரித்தவன் ராதாவுக்கு நேர் எதிராகப் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவனாக, "எதாவது முக்கியமான விஷயமா குரு?" எனக் கேட்டான் கண்ணன் இயல்பாக.
அவனைப் பார்த்து ஒரு கிண்டல் சிரிப்பு சிரித்தவர், "ராதாதான் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை டிஸ்கஸ் பண்ணனும்னு சொன்னா!
அதான் கூப்பிட்டேன்" என்றார் சேஷாத்ரி.
மகள் என்ன பேசப்போகிறாளோ என்ற ஆவலுடன் அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார் கீதா!
"இது பெர்சனல் விஷயம் பேசற இடம் இல்ல! நம்ம ஹாஸ்பிடல் விவகாரம் எதாவது இருந்தால் மட்டும் டிஸ்கஸ் பண்ணலாம்னு உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்கோ குரு!" என்றான் கண்ணன் ராதாவை முறைத்துக்கொண்டே.
"பா! நான் பேச வந்திருக்கிற விஷயமும் ஒரு வகைல நம்ம ஹாஸ்பிடல் சம்பந்தப் பட்டதுதான்.
அதனால உங்க சிஷ்யரை கொஞ்சம் காது கொடுத்து கேக்க சொல்லுங்கோ" என்றாள் அவள் அவனது முறைப்பையெல்லாம் கண்டுகொள்ளாமல்.
'ஹாஸ்பிடல் பத்தி இவ என்ன பேசப்போறா?' என்ற கேள்வியுடன் அவன் அவளை கூர்மையாக கவனிக்க,
"அப்பா நேத்து அனு கிட்ட என்ன சொன்னீங்கோ?" என தீவிரமாகக் கேட்டாள் ராதா!
புரியாமல் விழித்தவர், "ராதா! எதைப் பத்தி கேக்கற! சொல்ல வரதை நேரடியா சொல்லு" என அவர் கடுகடுக்க, அவள் கேட்கும் கேள்வியின் அர்த்தம் புரியவும் கீதாவின் முகம் பிரகாசித்தது.
"ஏன்னா! 'ராதாவையும் ஹாஸ்பிடலையும் கண்ணனுக்குத்தான் கொடுக்கணும் நான் ஏற்கனவே முடிவு பண்ணிட்டேன்!
அவன் கைல ஒப்படைச்சதான் ராதாவுக்கும் நல்லது; என் ஹாஸ்பிடலுக்கும் நல்லது'ன்னு நேத்து சொன்னீங்களோல்லியோ" என கணவரிடம் அவரது வ