top of page

Kadhal Va..Radha? 12

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

காதல்-12


"உன்னோட மார்க்கை பார்த்தேன்; இந்த கிராமத்துல இருந்து படிச்சுட்டு இவ்வளவு மார்க் வாங்கி இருக்க; ரியலி யு ஆர் கிரேட்!" என்றார் சேஷாத்திரி கொஞ்சம் இயல்புக்குத் திரும்பியிருந்த கண்ணனிடம்.


அவரது குரல் கேட்டு படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து புன்னகைத்தான் அவன்.


ஆனாலும் அதில் ஜீவனே இல்லாமலிருந்தது.


"ஒரு உயிரோட மகத்துவம் தெரியாமலிருக்கற நீயெல்லாம் டாக்டருக்கு படிச்சு என்ன பண்ண போற?" அவர் வெகு தீவிரமாகக் கேட்கவும் அவன் முகம் இருண்டுபோனது.


உடனே அவன் தந்தையின் முகத்தைப் பார்க்க, "கேக்கறேரோல்லியோ! பதில் சொல்லு" என்றார் அவர்.


தன்னுடைய இந்த செய்கையால் அவர் எந்த அளவுக்கு உடைந்துபோயிருக்கிறார் என்று புரிந்தது கண்ணனுக்கு.


ஆனாலும் தன் மன உணர்வுகளை வார்த்தைகளாய் கோர்த்து எப்படி அவர்களுக்கு உணர்த்துவது என்பது அவனுக்குப் புரியாமல் போக அவை கண்ணீராய் ஊற்றெடுத்தது.


மகனுடைய கண்ணீரைப் பார்த்துப் பொறுக்கமுடியாமல், "இவன் குழந்தைல இருந்தே எதுக்கும் பிடிவாதம் பிடிச்சு அழுது நான் பார்த்ததில்ல.


ஆனா இப்ப இந்த அளவுக்கு போயிருக்கான்னா என்ன சொல்ல?


இவன் ஆசைப் பட்ட படிப்பைப் படிக்க வெக்கற வசதியைப் இந்தப் பெருமாள் எனக்குக் கொடுக்கலையே" என தேய்ந்துபோன குரலில் வருந்தினார் ராகவன்.


இயலாமையில் அவர் கண்களில் நீர் துளிர்க்கத் தோளில் போட்டிருந்த அங்கவஸ்திரத்தால் கண்களைத் துடைத்துக்கொண்டார் அவர்.


"ஆனா அந்த வசதியை எனக்குக் கொடுத்து என்னை இங்க அனுப்பி வெச்சிருக்காறே அந்த பெருமாள்" என்ற சேஷாத்ரி கண்ணனைப் பார்த்துக்கொண்டே, "அதுக்குள்ள அவசரப்பட்டு இந்த பையன் இப்படி ஒரு வேலை செஞ்சு வெச்சிருக்கானே" என்று சொல்லிவிட்டு, "ஏன்பா கண்ணா! நீ பண்ண வேலையால ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிருந்தா உனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமலேயே போயிருக்குமே" என்று சொல்ல, அவன் கண்கள் பிரகாசம் அடைந்தன.


"என்ன சொல்றீர் ஸ்வாமின்?" என ராகவன் பரவசத்துடன் குதூகலிக்க, ஒரு மிகப் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொன்ன சேஷாத்ரி, "அதோட சேர்பெர்சன் டாக்டர் தேவகி என்னோட கிளாஸ் மெட்.


அவ அப்பா காலத்துல ஆரம்பிச்ச ஹாஸ்பிடலை பின்னாளில் மெடிக்கல் காலேஜா மாத்தினா!


ஏதாவது எமெர்ஜன்சி; சர்ஜன்ஸ் யாரும் அவைலபிளா இல்லன்னா சிச்சுவேஷனை ஹாண்டல் பண்ண அவ என்னைத்தான் கூப்பிடுவா!


நான் இதுவரைக்கும் ஆப்ளிகேஷன்னு போய் யார் கிட்டயும் நின்னதில்ல!


அதனால நான் ஒரு வார்த்தை சொன்னா மேனேஜ்மேண்ட் சீட்; பைசா செலவில்லாம குடுத்துடுவா தேவகி!


என் பொண்ணு அனுக்காக ஒரு சீட் கேட்கலாம்னு இருந்தேன்! ஆனா அதுக்கு அவசியம் இல்லாம போச்சு!


இப்ப இவனுக்காக கேட்டா என்னன்னு தோன்றது" என விளக்கமாகச் சொன்னவர் வேண்டுமென்றே, "இப்படி பொறுப்பில்லாம நடந்துக்கறவனுக்கு நான் எப்படி சிபாரிசு செய்ய முடியும்" என்றார் கொஞ்சம் சீண்டலாக.


"அப்படியெல்லாம் இல்ல சார்! நான் யோசிக்காம அவசர பட்டுட்டேன்!


இனிமேல் இந்த மாதிரி தப்பெல்லாம் நான் பண்ண மாட்டேன்!


என்னை நம்புங்கோ" என்றான் கண்ணன் சங்கோஜத்துடன்.


"நீ பயாலஜி ஸ்டூடன்ட் தான! நீ பண்ண காரியத்தோட சீரியஸ்னெஸ் தெரியாதா உனக்கு!


இப்ப உன்னோட லங்ஸ் இன்பெக்ட் ஆகியிருக்கு! லிவர் புண்ணாயிருக்கு!


உங்க சித்தி அதுல தண்ணி கொட்டி வெச்சிருந்ததால இந்தமட்டும் பொழைச்ச!


இல்லனா நெர்வஸ் சிஸ்டத்தையே அஃபக்ட் பண்ணியிருக்கும்.


இன்னும் கூட ஒரு மூணுமாசத்துல இருந்து ஆறு மாசம் வரைக்கும் கொஞ்சம் ஜாக்ரதையாத்தான் இருந்தாகணும்!


தேவையா இந்த கர்மமெல்லாம்" என அவனை வெகுவாக கடிந்துகொண்டார் அவர்.


"டாக்டர் ஆக முடியலையேங்கற வேதனை!' என அவன் தன் நிலையை விட்டுக்கொடுக்காமல் சொல்ல,


"அறிவு இருக்காடா உனக்கு!" எனக் கோபத்துடன் கேட்டவர், 'டாக்ரட் ஆகி என்ன பண்ண போற!" என்று அவனைக் கேட்க, "சர்ஜன் ஆகணும்! குறைஞ்ச செலவுல எல்லாருக்கும் வைத்தியம் பண்ணனும்!


எங்க சுத்துப்பட்டு ஊர்ல எல்லாம் நல்ல மெடிக்கல் பெசிலிட்டி இல்ல!


இங்க எல்லா வசதியோடவும் பெரிய ஹாஸ்பிடல் கட்டணும்!" என அவன் அடுக்கிக்கொண்டே போக, இருமல் வந்துவிட்டது அவனுக்கு.


பாவமாக இருந்தது சேஷாத்ரிக்கு.


"இங்க பாரு கண்ணா! அதுக்கு நீ டாக்டர்தான் ஆகணும்னு இல்ல!


இங்க இருக்கற பெரிய பெரிய ஹாஸ்பிடல்ஸ்; மெடிக்கல் காலேஜஸ் எல்லாத்தையும் எடுத்துக்கோ!


அதைத் தொடங்கி நடத்திண்டு இருக்கறவா எல்லாருமே டாக்டர் கிடையாது!


ஆனா டாக்டர்ஸ்; பாரா மெடிக்கல் ஸ்டாஃப்ஸ்; டெக்னீஷியன்ஸ்னு ஆயிரக்கணக்கானபேருக்கு வேலை கொடுத்திருக்கா.


அவா காலேஜ்ல வருஷத்துக்கு இருநூறு முந்நூறு டாக்டர்ஸை உருவாக்கறா!


அதுக்கு பின்னாடி அவாளோட உழைப்புதான் இருக்கு; டாக்டர் படிப்பு இல்லை!


அதுக்காக நீ டாக்டருக்கு படிக்க வேண்டாம்னு சொல்லல!


ஆனா நம்ம உயிர் இந்த படிப்பையெல்லாம் விட ஒசந்ததுடா கண்ணா.


விலை மதிப்பில்லாதது.


நீ இந்த உயிரை வெச்சிண்டு நல்லபடியா இருந்தா குறைந்தபட்சம் உன் அம்மா அப்பாவாவது சந்தோஷமா இருப்பாளா இல்லையா?


செத்துப்போனால் யாருக்கு என்ன பிரயோஜனம் சொல்லு" என்றவர், அவனது தலையை மென்மையாக வருடிவிட்டு, ராகவனை நோக்கி, "இவன் உடம்பு கொஞ்சம் தேரட்டும்; அதுக்குள்ள நான் எல்லா ஏற்படும் பண்ணிட்டு உங்களுக்கு இன்ஃபார்ம் பண்றேன்!


நீங்க இவனை அழைச்சிண்டு நம்மாத்துக்கு வாங்கோ! நான் கிளம்பறேன்" என்றார் அவர்.


நன்றியுடன் அவரை சரணடைந்தன கண்ணனின் கண்கள்.


"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்!" என்றான் அவன் மனதிலிருந்து.


"இப்படி சார் மோர்னெல்லாம் கூப்பிடாத; எனக்கு என்னவோ போல இருக்கு" என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் அவர்.


பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் அவர் செய்த செயலால் சேஷாத்ரியின்பால் கண்ணனுக்கு அதீத மரியாதையும் பக்தியும் எல்லையில்லா நன்றி உணர்ச்சியும் சிறு விதையாக விழுந்து பெரும் விருட்சமாக வளர்ந்து நின்றது இந்த இடத்திலிருந்துதான்.


அவர் சொன்னதுபோல் அடுத்த சில நாட்களிலேயே அந்த மருத்துவக் கல்லூரியில் கண்ணன் படிப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அவர்களுக்குத் தெரியப் படுத்தினார் சேஷாத்ரி.


குறைந்த பட்ச கட்டணங்கள் மற்றும் சில அடிப்படை செலவுகள் அவர்கள் சக்திக்கு உட்பட்டு இருக்க அவற்றை ராகவனே செய்தார்.


அவன் உட்கொண்ட 'பிளீச்'சினால் அவனது உணவுக்குழாய் மற்றும் வயிற்றின் பகுதிகள் புண்ணாகிப் போயிருக்க, அவனது நுரை ஈரலும் பாதிக்கப் பட்டிருந்தது.


அவன் குணமாகி நடமாடிக் கொண்டிருந்தாலும் காரமில்லாத உணவு கொடுத்து கொஞ்சம் கவனமாக அவனைப் பார்த்துக்கொள்ள வேண்டியதாக இருந்ததால் அவனைக் கல்லூரி விடுதியில் தங்க விடாமல் தங்கள் வீட்டிலேயே தங்கியிருந்து கல்லூரி சென்றுவருமாறு கட்டளையாகச் சொல்லிவிட்டார் சேஷாத்ரி.


அவர் செய்த உதவியே அளவுகடந்து போயிருக்க மேலும் அவருக்குத் தொல்லை கொடுப்பதாக ராகவனும் ஆனந்தியும் தயங்க, கண்ணன் அவர்களுடன்தான் இருக்கவேண்டும் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் கீதா.


கண்ணனின் நிலையை நேரில் பார்த்தது முதல் அவன் மேல் அளவுகடந்த பரிதாபம் உண்டாகியிருந்தது அவருக்கு.


அவனைப் பற்றிக் கேள்விப்பட்ட பின் அந்த பரிதாப உணர்ச்சி அக்கறையாக மாறிப்போயிருந்தது.


அவனிடம் அன்பு பாராட்டுவதில் கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சி நின்றனர்.


ஒரு கட்டத்திற்கு மேல் மறுக்க இயலாமல் ராகவன் மற்றும் ஆனந்தி இருவரும் அந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள்ள வேண்டியதாக ஆகிப்போனது.


சேஷாத்ரியின் இல்லத்தில் தங்கிக்கொண்டு கல்லூரிக்குச் சென்று வரத் தொடங்கினான் கண்ணன்.


அந்த சமயத்தில்தான் எட்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்திருந்தாள் ராதா.


***


கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக ஆகிக்கொண்டிருந்தான் கண்ணன்.


கீதாவை 'மாமி' என இயல்பாக அழைத்தவனுக்கு சேஷாத்ரியை ஏனோ மாமா என்று அழைக்கப் பிடிக்கவில்லை.


‘என்னை சார்னு கூப்பிடாத’ என அவர் சொல்லிவிட்டதால் எப்படி அழைப்பது என்ற குழப்பத்திலிருந்தவனுக்கு, அவர் ஆசிரியராக மாறி பாடத்தில் அவனது சந்தேகங்களைத் தெளிவுபடுத்தவும் வெகு உரிமையுடன் அவரை குரு என அழைக்கத் தொடங்கினான் கண்ணன்.


கண்ணனுடைய இல்லத்தில் ராகவன் ஆனந்தி இருவருக்கும் உதவியாக எல்லா வேலைகளையும் செய்து பழக்கப்பட்டவனாதலால் அதை இங்கேயும் கடைப்பிடிக்க உச்சி குளிர்ந்து போனார்கள் கீதாவும் சேஷாத்ரியும்.


இரண்டு தங்கைகளுடன் பிறந்த காரணத்தால் ராதாவிடம் இயல்பாகவே நடந்துகொண்டான் அவன்.


நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சேஷாத்ரி அவனது பாடங்களில் உதவி செய்ய அதையே அவரது மகளுக்குச் செய்தான் கண்ணன்.


அன்றாடம் பள்ளியில் நடந்த விஷயங்களை அவனிடம் பகிர்ந்துகொள்வது, அவளது பிரச்சனைகளை அவனிடம் சொல்லித் தீர்வு காண்பது என ராதாவும் அவனிடம் நட்புடன் நடந்துகொண்டாள்.


எப்பொழுதாவது அவள் தாமதமாகக் கிளம்பி பள்ளி வாகனத்தைத் தவறவிட்டால் இருசக்கர வாகனத்தில் அவளைப் பள்ளியில் விட்டுவிட்டு வருவான் கண்ணன்.


அந்த சந்தர்ப்பங்களில் ராதாவைத் திட்டி தீர்ப்பவர், "அவ கேக்கறதுக்கு முன்னாடி நீ வண்டியை எடுத்துண்டு ரெடியா நிக்கற திமிர்லதான் அவ இப்படி கேர்லஸ்ஸா இருக்கா! நாளைல இருந்து இந்த வேலையைச் செய்யாத" என அவனையும் கடிந்துகொள்ளவார் கீதா.


அது ஓரிரு நாட்களுக்கு மட்டுமே வேலை செய்யும். மறுபடியும், "கண்ணன் ப்ளீஸ்! ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன்!


அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப திட்டுவா!


என்னை ஸ்கூல்ல ட்ராப் பண்றீங்களா" என்று கெஞ்சிக்கொண்டு நிற்பாள் அவள்.


அவனும் மறுக்காமல் அவளை அழைத்துப் போவான்.


கீதாவின் அக்கறையான கவனிப்பில் அவன் உடல்நலம் இயல்பு நிலைக்குத் திரும்ப அதன் பின்னும் கூட அவனைப் பிரிய மனமில்லாமல் அவன் விடுதியில் தங்க அனுமதிக்கவில்லை கீதா.


"உன் ஒருத்தனுக்குன்னு மட்டும் தனியா தளிகை (சமையல்) பண்ணல! நீ ஒண்ணும் எங்களுக்கு அதிகப்படி கிடையாது" என அவனைப் பேசவிடாமல் செய்துவிட்டார் அவர்.


விடுமுறை சமயங்களில் தேர்த்தூரை சென்றுவிடுவான் அவன். அப்பொழுதெல்லாம் கடினமாக இருக்கும் மற்ற மூவருக்கும்.


அந்த அளவுக்கு அவர்கள் குடும்பத்தில் முக்கியமானவனாக மாறி இருந்தான் கண்ணன்.


நிலைமை இப்படியே தொடர அவன் மூன்றாம் ஆண்டு படிப்பை முடிக்கும்வரை எந்த சிக்கலும் இல்லாமல் சீராகச் சென்று கொண்டிருந்தன அவனுடைய நாட்கள்.


பதினொன்றாம் வகுப்பு படிப்பிற்காக ராதா புதிய பள்ளிக்கு மாறியிருக்க


அதிக கவனம் கொண்டு தன்னை அலங்கரித்துக்கொள்வது. எப்பொழுதுமே கைப்பேசியும் கையுமாக இருப்பது.


அதில் எப்பொழுதும் தோழிகளுடன் அரட்டையில் இருப்பது.


படிக்க அழைக்கும்போதெல்லாம் கண்ணனை அலட்சியம் செய்வது என வெளிப்படையாக சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தது அவளிடம்.


அவன் மருத்துவ படிப்பில் முன்னேறி வந்துகொண்டிருப்பதால் அவனுக்கே உரிய முதிர்ச்சியுடன், 'அது வயதின் கோளாறு' என இயல்பாக எடுத்துக்கொண்டான் கண்ணன்.


கீதா வருந்தினாலும், "இல்ல மாமி! நெக்ஸ்ட் இயர் பப்ளிக் எக்ஸாம் வந்திடும்! சீரியஸா படிக்க ஆரம்பிச்சிடுவா! கவலை படாதீங்கோ" என அவருக்கு ஆறுதல் சொல்லுவான் அவன்.


ஆனால் ஒரு சமயம் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் உட்கார்த்து அவள் எதோ படித்துக்கொண்டிருக்க, அந்த புத்தகம் இயல்பாகக் கண்ணனின் பார்வையில் படவும் அதிர்ந்துபோனான்.


காதல் என்ற பெயரில் பல விரசங்களை மனதில் புகுத்தும், அதிகமாகப் பெண்கள் படிக்கும் ஒரு ஆங்கில புதினம் அது.


கீதாவுக்குத் தெரியாமல் படிக்கத்தான் அவள் அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டான் அவன்.


சுறு சுறுவென கோபம் ஏற, அவளது கையிலிருந்து அந்த புத்தகத்தைப் பறித்தவன், "ஏய்! அறிவிருக்காடி உனக்கு; இந்த மாதிரி புக்கெல்லாம் படிக்கற!


எங்க வாங்கின இத?" என அடிக் குரலில் சீற, மிரண்டு போனாள் ராதா.


எப்பொழுதுமே தன்னிலை இழக்க மாட்டான் அவன். அதுவும் இந்த 'டீ' என்ற விளிப்பெல்லாம் இருக்கவே இருக்காது.


விடுமுறை சமயங்களில் அவனுடைய தங்கைகளான மைத்ரேயியும் சின்மயியும் அங்கே வருவதுண்டு.


அவர்களைக் கூட அவன் கோபமாகவோ டீ என அழைத்தோ பார்த்ததில்லை அவள்.


அவனது கோபம் அச்சத்தைக் கொடுக்க, "இது அனுவோட பழைய புக்; கப்போர்ட் க்ளீன் பண்ணும்போது கிடைச்சுது.


தெரியாம படிக்க ஆரம்பிச்சுட்டேன் கண்ணன்.


அம்மா கிட்ட சொல்லிடாதீங்கோ ப்ளீஸ்!"


அவள் கெஞ்சலில் இறங்க அவளது கண்களில் தெரிந்த மிரட்சியில் சற்று தணிந்தவன், "தோ பாரு ராதா! 'நாம என்ன நினைக்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம்'னு சொல்லுவா.


நாம வாசிக்கற புத்தகம் நம்ம எண்ணங்களை நல்லவிதமாகவோ இல்ல கெட்டதாகவோ மாற்றி அமைக்கும்.


அதனால தப்பான விஷயங்களை படிச்சு; அதையெல்லாம் மூளைக்கு அனுப்பக்கூடாது.


'நண்டு'னு ஒரு நாவல். நான் எட்டாவது படிக்கும்போது ராஜி சித்தி லைப்ரரில இருந்து கொண்டுவந்தா.


அதை சும்மா படிக்க ஆரம்பிச்சேன்.


அதுல சிவசங்கரி அம்மா கேன்சர் பத்தி எழுதி இருப்பா!


மனசு வலிச்சு போச்சு ராதா!


ஏன்னா என்னோட தாத்தா த்ரோட் கான்ஸர்லதான் செத்துப்போனார்.


லேசா அந்த ஞாபகம் நிழல் போல இருந்துது.


அந்த புக்கை படிச்ச பிறகுதான் இப்படி டாக்டர் ஆகணும்கற எண்ணம் என் மனசுல உருவாச்சு.


இந்த மாதிரி புக்கெல்லாம் படிக்காத.


அது நம்ம அறிவை மழுங்க அடிச்சிடும்" என நீளமாக உரையாற்றினான் அவன்.


முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அவனுடைய முகத்தையே விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதா!


அவன் சொன்னது அவள் செவிகளை எட்டியதா என்றே புரியவில்லை அவனுக்கு.


அதில் எரிச்சலுற்றவன், "ராதா! நான் பேசிண்டே இருக்கேன்; நீ என்ன இப்படி பேன்னு முழிச்சிண்டு இருக்க? நான் சொன்னது புரிஞ்சுதா?" என்ற அவனது அதட்டலில் உணர்வுக்கு வந்தவள், அவனது கையிலிருந்த புத்தகத்தை பறித்து தூர வீசி எறிந்துவிட்டு, 'புரிஞ்சுது' என்பதுபோல தலை அசைத்தவாறு அங்கிருந்து சென்றாள் அவள்.


'வர வர இவ ஏன் இப்படி இருக்கா?' என்ற எண்ணம் தோன்ற தன் அறை நோக்கிப் போனான் அவன்.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page