மித்ர-விகா 38
தன் மீது அதீத விருப்பம் இருக்கிறது அதனால் சர்வ நிச்சயமாக அவனுடைய அஜுபாவே தன்னைத் தேடி வந்து அவளுடைய மனதைத் திறப்பாள் என அக்னிமித்ரன் காத்திருக்க, அவனது பொறுமை காற்றில் கரைந்துபோனதுதான் மிச்சம்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்தை நெருங்கியும், அவள் வரவே இல்லை. வருவாள் என்ற நம்பிக்கையும் குறைந்துகொண்டே வந்தது அவனுக்கு. தானாக இவனைத் தேடி வந்து, பித்துப் பிடித்து அவன் பின்னால் சுற்றிய பெண்களைதான் அறிவான் அவன்.
இப்படி மதி மயங்கி அவனை தன் பின்னால் அலைய வைத்தவள் முதலும் கடைசியுமாக இவள்தான். அவளுக்குத் தன்னை எந்த அளவுக்குப் பிடித்திருக்கிறது என்பதை அவன் அறிந்தேயிருந்ததால் 'அப்படி என்னடி இவ்வளவு தெனாவெட்டும் பிடிவாதமும் உனக்கு?' என்றுதான் தோன்றியதே ஒழிய அந்தப் பிடிவாதத்துக்குப் பின் இருக்கும் அவளுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் கூட முற்படவில்லை அவன்.
வேண்டுமென்றே தன்னை சுற்றில் விடுகிறாளோ என்ற கோபம் மட்டுமே மேலோங்கியிருந்தது அவனுக்கு. என்ன நடந்தாலும் சரி 'நீதான் வேண்டும்.' என தன்னைத் தேடி வந்து வெளிப்படையாக அவளே ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணினான் அவன். எண்ணினான் என்பதை விட ஒரு விதமான பிடிவாதத்துடன் கறுவினான் என்றே சொல்லலாம்.
'உணர்ச்சிவசப்படாம அமைதியா சிந்திச்சு... நம்ம அறிவைக் கொண்டு உணர்வை ஜெயிக்க வைக்கணும். அப்படி மட்டும் நடந்தால் பெரிய பெரிய கலவரங்களையே தவிர்க்கலாம்னும்பொழுது இந்தச் சுண்டைக்கா காதல்ங்கற போலி உணர்வையா ஜெயிக்க முடியாது? ஒரு வாரம் பார்க்காமல் பேசாமல் இருந்தால் அதுவே பழகிப் போகும். சீக்கிரமே இந்த நினைவுகளிலிருந்து மீண்டு விடலாம்' என சம்பந்தமே இல்லாமல் அவள் அன்று அன்புவுக்குச் சொன்ன அறிவுரைகள் வேறு அனுகூலமாக அவனது நினைவில் வந்தன.
இதுதான் அவளுடைய இப்போதைய மனநிலையோ என்ற கேள்வி எழ, அதற்குப் பின் அதிகம் யோசிக்கவில்லை அவன்.
இனி காலை கண் விழித்தது முதல் இரவு உறங்கும் வரை, நாள் முழுதும், சொல்லப் போனால் உறக்கத்திலும் கூட அவள் தன்னைப் பார்த்துக்கொண்டே, நினைத்துக்கொண்டே இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடித்துவிட்டான் மித்ரன் 'புதையல் வேட்டை சீசன் த்ரீ' என்கிற பெயரில்.
மாளவிகாவுக்கு மட்டுமல்ல அவனுடைய வீட்டிலிருப்பவர்களுக்கே கூட இது ஒரு அதிசயச் செய்திதான்.
யாரிடமும் இதைப் பற்றி அவன் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. முடிவு செய்த ஒரே நாளில் அதை நடைமுறையும் படுத்திவிட்டான்.
ஒரே இரவுக்குள், அந்த நிகழ்ச்சிக்கான விளம்பரங்கள் அவனுடைய தொலைக்காட்சியிலும் மற்ற அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வந்த வண்ணம் இருக்க, எங்கே பார்த்தலும் புதையல் வேட்டைதான்! அக்னிமித்ரன்தான்!
துளசி, மாலைகளில் கடையிலிருந்து திரும்ப வந்தார் என்றால், வீட்டு வரவேற்பறையிலிருக்கும் தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு பிறகுதான் மற்ற வேலைகளையே பார்க்கத் தொடங்குவார்.
தொடர்ந்து, அதில் வரும் நெடுந்தொடர்களைப் பார்த்துக்கொண்டே அவரது வேலைகள் தங்குதடையின்றி நடக்கும். அவர்கள் வீட்டில் மட்டுமல்ல பெரும்பான்மையான வீடுகளில் வீனஸ் தமிழ் தொலைக்காட்சிதான் கோலோச்சிக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு தொடர்களில் இடையேயும் புதையல் வேட்டையின் முன்னோட்டத்தில் அக்னிமித்ரன்தான் பேசிக்கொண்டே இருந்தான். எனவே அவனது குரல் அவளுடைய செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அதாவது வீட்டிற்கு வெளியில் புகைப்படமாகக் காட்சியளித்தவன் வீட்டிற்குள் காணொலியாகத் தோன்றி, பேசி பேசியே அவளைக் கொன்றான். தப்பித்தவறி தொலைக்காட்சியை அணைத்தாள் என்றால் முழு சந்திரமுகியாக மாறிவிடுவார் துளசி. அதற்குப் பயந்து அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்து அறைக்குள் போய் பதுங்கியவள், கைப்பேசியில் தஞ்சம் புக, முகநூலில் மட்டுமில்லை, அவள் பாடம் சம்பந்தமாக ஏதாவது குறிப்பெடுக்க வேண்டும் என்றோ அல்லது ஏதாவது கதைப் படிக்கலாம் என்றோ எந்த இணையதளத்தைத் திறந்தாலும் அவளைப் பார்த்து வசீகரித்துக்கொண்டிருந்தான் அவன்.
'ஐயோ! கோட்ட முதலிலிருந்து போடறானே!' என்றுதான் இருந்தது அவளுக்கு. இரண்டே இரண்டு நாட்களுக்குள் அவளைச் சுனாமியாகச் சுழன்றடித்தான் மித்ரன் என்றுதான் சொல்லவேண்டும்.
வெறும் முன்னோட்டத்துக்கே இந்த நிலை என்றால் இன்னும் அந்த நிகழ்ச்சி தொடங்கினால்? உண்மையிலேயே தன்னை நினைத்தே பயமாக இருந்தது மாளவிகாவுக்கு.
'உனக்கு அவனைப் பிடிக்காது. எப்ப கேட்டாலும் அவனுக்கு நோ... நாட் ஓகேதான். என்ன நடந்தாலும் அவனைப் பத்தி அதிகமா திங்க் பண்ணாத.' என அவளுடைய மனதின் உணர்வுகளுக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்துக் கட்டளையிட்டுக்கொண்டே இருந்தது அவளுடைய அறிவு.
ஆக மாளவிகாவால் அக்னிமித்ரனை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அக்னிமித்ரனும் அவளை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. நடக்கும் பணிப்போரில் 'எலி தரைக்கு இழுக்கத் தவளை தண்ணீருக்குள் இழுக்க' என்கிற நிலைமைதான் இருவருக்கும்.
எலியால் தண்ணீரில் வாழ இயலாது. தவளை மனது வைத்தால் நிலத்தில் வாழலாம்.
இவர்களில் யார் எலி யார் தவளை என்பதையும் இனி யாருடைய பாதையில் யார் பயணிக்கப் போகிறார்கள் என்பதையும் அவர்கள் இருவரால் மட்டுமே முடிவு செய்ய இயலும்!
***
தொடர்ந்து இரண்டு நாட்களாக உணவு உறக்கம் கூட மறந்து ’ஃபோட்டோ ஷூட்... ஷூட்டிங்' எனப் பரபரப்பாக இருந்தவன், அன்று சிறு ஓய்விலிருந்தான்.
மாளவிகா இல்லாத அலுவலகத்திற்குச் செல்லப் பிடிக்காமல் அவனது 'பிளாட்'டிலிருந்தபடியே மடிக்கணினியில் அலுவலக வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான் கொஞ்சம் சோம்பலுடன்.
அவனுடைய கைப்பேசி ஒலிக்கவும் சிறு சலிப்புடன், அதை எடுத்துப் பார்க்க, அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. காரணம் அழைத்தவள் அவனுடைய தோழி பிருந்தா.
அதுவரை இருந்த மந்த நிலை மாறி, "ஹேய் பிருந்தா. எப்படி இருக்க? தீடீர்னு என் ஞாபகமெல்லாம் வந்திருக்கு மேடம்க்கு" என்றவாறு குதூகலமாக அந்த அழைப்பை ஏற்றான் அவன்.
"சொல்ல மாட்ட நீ” எனக் காய்ந்தவள், "நான்தான் குழந்தையும் குட்டியுமா இருக்கேன். போறாததுக்கு காலேஜ் வேலை வேற. உனக்கென்ன நீ ஒண்டிக்கட்டைதான? நீ ஏன் என்னைக் கூப்பிடல?" என நொடித்துக்கொண்டாள் அவள்.
அவள் சொல்வதிலிருந்த உண்மை புரிய, "ஓகே ஐ சரண்டர்" எனத் தானே தகைந்து வந்தவன், "சொல்லு குட்டீஸ் எப்படி இருக்காங்க? அம்மா அப்பா எப்படி இருக்காங்க? நீ எப்படி இருக்க?" என அவளுடைய நலனை அவன் மறுபடியும் விசாரிக்க, "எல்லாரும் நல்லா இருக்கோம்" என்றவள் "ரொம்ப நாள் ஆச்சில்ல நாம மீட் பண்ணி?" எனக் கேட்டாள் அவள் கொஞ்சம் வருத்தத்துடன்.
உண்மையில் அன்று கல்லூரி விழாவில் பார்த்ததுடன் சரி. பிறகு அவளைச் சந்திக்கவே இல்லை. குற்ற உணர்வு குறுகுறுக்க மனம் விட்டு அவளிடம் பேசவேண்டும்போல் தோன்றியது அவனுக்கு.
"இப்ப நீ ஃப்ரீயா இருக்கியா பிருந்தா" எனக் கேட்டான் மித்ரன்.
"ஃப்ரீ மாதிரிதான். இன்னைக்கு புல்லா குட்டீஸ்காக ஒதுக்கி இருக்கேன்” என தன் நிலையை அப்படியே சொன்னாள் பிருந்தா.
"அப்படினா ஒண்ணு பண்ணு... நேரா" என ஒரு பிரபல நட்சத்திர விடுதியின் பெயரைச் சொன்னவன், "குட்டீஸைக் கூட்டிட்டு வந்துடு. இன்னைக்கே மீட் பண்ணிடுவோம்" என்று சொல்ல, அவள் சற்று நேரத்தில் அங்கே வந்துவிடுவதாகச் சொல்லவும் அந்த அழைப்பைத் துண்டித்தான்.
வீட்டைப் பூட்டிக்கொண்டு கீழே வந்தவன், தன் காரை கிளப்பிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். பிருந்தாவுடன் சேர்ந்த பலவிதமான நினைவுகள் அவன் மனதில் அலை அடித்தன.
அவனுடைய அத்தையால் அவன் அனுபவித்த இன்னல்கள் அதிகம். அதன் தொடர்ச்சியாய், அவனுடைய தோழி என்கிற ஒரே காரணத்தால் பிருந்தா அடைந்த இன்னல்கள் அதைவிட அதிகம்.
அவனுடைய அத்தை வாசுகி சிறு வயதிலேயே கணவரை இழந்தவர். அவருடைய மூத்த மகள்தான் தர்ஷினி. கவுதம் இளையவன். அவரை திருமணம் செய்துகொடுத்த இடமும் ஒன்றும் குறைந்தது இல்லை.
அவர்களுடையது கூட்டுக் குடும்பம் என்பதால் அங்கே ஒன்றி இருக்க இயலாமல் தன் ஒரே பற்றுக்கோலான தம்பியிடமே வந்துவிட்டார் வாசுகி.
அவருக்கு ஒரு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டுப் பொறுப்பு அனைத்தையும் தமக்கையிடம் ஒப்படைத்துவிட்டார் பரமேஸ்வரன். தீபாவைப் பற்றி அவர் கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவே இல்லை.
அப்பொழுது மித்ரன் பிறக்கவே இல்லை.
பரமேஸ்வரன் தீபாவினுடையது காதல் திருமணம். அதுவும் பெற்றோர்களை எதிர்த்து நடந்த திருமணம். எனவே வாசுகிக்கு உடன்பாடில்லாத திருமணம்.
ஒரு கட்டத்தில் அதை ஏற்றுக்கொண்டு, அதன் பின் அவர்கள் பெற்றோர் இறந்தப் பின்னும் வாசுகிக்கு உள்ளுக்குள்ளே தீபாவின் மேல் ஒரு காழ்ப்புணர்ச்சி இருந்துகொண்டேதான் இருந்தது.
தீபாவின் பிறந்த இடம் நல்ல வசதியானவர்கள்தான் என்றாலும் இவர்களைப் போல பரம்பரை பணக்காரர்கள் இல்லை. அனைத்தும் அவளுடைய அப்பா ராமசாமியின் சொந்த சம்பாத்தியம்.
மளிகை மொத்த வியாபாரத்தில் தொடங்கி, அதன் பிறகு அதை 'அக்மி செயின் ஆஃப் ரீடைல் ஸ்டோர்ஸ்'ஆக வளர்ந்திருந்தார் அவர். அவருடைய மனைவி அகிலாண்டேஸ்வரி, மகள் தீபலக்ஷ்மி இருவருடைய பெயர்கள் இணைந்ததுதான் அக்மி.
என்ன இருந்தாலும் அவர்கள் தங்களுக்குச் சமமானவர்கள் இல்லை என்பதுதான் வாசுகியின் எண்ணமாக இருந்தது.
நிரந்தரமாக இங்கே வந்த பின் தன் பரிதாப நிலையை சாதகமாக்கிக்கொண்டு அவர் பல குழப்பங்கள் செய்ய, கணவன் மனைவிக்குள் அதிகப் பிரச்சனை உருவாகிவிட்டது.
மித்ரன் பிறந்ததற்கு பிறகும் இதே நிலை நீடிக்கவும் பெற்றோரின் சண்டையைப் பார்த்தே வளரும் சூழ்நிலைக்கு ஆளாகிப் போனான் அவன்.
மூத்தது மோழை இளையது காளை என்பதுபோல விக்ரம் அவர்களுக்கு அப்பாவி பிள்ளையாகிப் போக, அவருடைய உடன்பிறந்தவருக்காகப் பார்த்து தன் அப்பா அம்மாவை விட்டுக்கொடுக்கிறார், அதனால் அம்மா காயப்படுகிறார் என்பதெல்லாம் புரியத்தொடங்கவும், எல்லாவற்றிற்கும் முகத்திற்கு நேராகக் கேள்வி கேட்டு அப்பாவையும் அத்தையையும் எதிர்த்துப் பேசிப் பொல்லாதவன் ஆகிப் போனான் மித்ரன். வாசுகிக்கு அவனை அறவே பிடிக்காமல் போனது.
கௌதமுக்கும் மித்ரனுக்கும் வேறு ஒத்துப் போகாமல் அடிக்கடி முட்டிக்கொண்டது. மித்ரனுக்கும் கௌதமுக்கும்தான் பிணக்கே ஒழிய தர்ஷினி எப்பொழுதுமே அவனுடைய பிரியத்துக்கு உரிய தோழிதான். அவர்கள் அண்ணன் தம்பி உறவுமுறைக்குள்ளும் எப்பொழுதுமே விட்டுக்கொடுக்காத அன்னியோன்னியம்தான்.
விக்ரம்தான் எல்லோருக்கும் பெரியவன். விக்ரமை விட இரண்டு வயது சிறியவள் தர்ஷினி என்றால் அவளைவிட நான்கு வயது இளையவன் கௌதம். அவனைவிட நான்கு வயது சிறியவன் மித்ரன்.
தர்ஷினி முதலாம் ஆண்டு கல்லூரியில் படிக்கும் பொழுதே அவளுக்கு யாருடனோ காதலென அரசல்புரசலாக காதில் விழ அவசர அவசரமாக விக்ரம் தர்ஷினி திருமணம் நடந்தது.
சிறுவனாக இருந்தாலும் கூட வீட்டில் நடக்கும் சச்சரவுகளால் இந்த பிரச்சனை அவன் வரை எட்டி இருந்தது. அழுது கலங்கி இருந்த தர்ஷினியை பார்த்து பாவமாகவும்... எதிர்த்துப் பேசத் துணிவில்லாத அண்ணனைப் பார்த்து கோபமாகவும்... எதையும் தடுக்க இயலாத அம்மாவை நினைத்து வேதனையாகவும்... அத்தையின் மீதும் அப்பாவின் மீதும் வெறுப்பாகவும் இருந்தது அவனுக்கு.
மொத்தத்தில் குடும்ப சூழ்நிலையை எண்ணி அருவருப்பாக உணர்ந்தான் அக்னிமித்ரன். இதையெல்லாம் பார்த்துப் பார்த்து எக்காரணம் கொண்டும் தன் முடிவுகளை வேறு யாரையும் எடுக்க விடக்கூடாது என்கிற வைராக்கியம் உருவாகியிருந்தது அவனுக்கு.
அதன் விளைவாக அவனுடைய கோபமும் பிடிவாதமும் யாராலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமாகிப்போனது. மித்ரன் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள்ளேயே அக்ஷய் சாம்பவி இருவருமே பிறந்துவிட்டனர்.
வயிற்றுக்குள் இருக்கும் பொழுதிலிருந்து அவர்களுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்திருப்பதால் அண்ணன் பிள்ளைகள் மேல் அலாதி பிரியம் மித்ரனுக்கு.
அவர்களுடைய குடும்ப நண்பரின் மகள் தான் பிருந்தா. பள்ளியிலிருந்து கல்லூரி வரை அவனுடன் ஒன்றாகப் படித்தவள். அவனுடைய மிக நெருங்கிய தோழி.
அவனைப் பார்க்க எதார்த்தமாக அவள் அடிக்கடி அவர்களுடைய வீட்டிற்கு வந்து செல்ல, அவளைதான் பிடித்திருக்கிறது திருமணம் செய்து வையுங்கள் என்று வந்து நின்றான் கௌதம்.
அந்த சமயத்தில் படித்து முடித்துவிட்டு அவனுடைய அப்பா வழி குடும்ப தொழிலான சினிமா தயாரிப்பிலும் அவன் பொறுப்புடன் ஈடுபட்டிருக்க அவனுடைய பிடிவாதமும், மகனுக்குப் பரிந்து வந்த வாசுகியினுடைய பேச்சும்தான் எடுபட்டது பரமேஸ்வரனிடம்.
நண்பருடன் பேசி இந்தத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார் அவர். இத்தனைக்கும் மூன்றாம் ஆண்டு பிபிஏ படிப்பில்தான் இருந்தாள் அவள்.
அதைத் தடுக்க மித்ரன் தன் தந்தையை எதிர்த்து நிற்க, மன உளைச்சலில் அவர் உடல் நலம் சரியில்லாமல் போகவும் வேறு வழி தெரியாமல் விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலைதான் உருவாகிப்போனது அவனுக்கு.
அவனுக்கும் கௌதமுக்கு ஒத்துப்போகாது என்ற ஒன்றைத் தவிர, அதனால் அவனுக்கும் பிருந்தாவுக்கும் இருக்கும் நட்பு பாதிக்கும் என்ற காரணத்தைத் தவிர வேறு குறை சொல்லும்படி எதுவும் இல்லை என்பதினால், பிருந்தாவும் அந்த ஏற்பாட்டிற்கு சம்மதித்திருக்கவும் மேற்கொண்டு பிரச்சனையை வளர்க்கவில்லை அவன். அப்படியே விட்டுவிட்டான்.
தந்தையிடம் தனக்கான அங்கீகாரம் இல்லை என்ற கோபத்தில் அதன் பிறகு தாத்தாவுடனேயே போய்விட்டான் மித்ரன். அதுவரை தாத்தாவின் தொழிலை அவருடன் சேர்ந்து தீபாதான் கவனித்துக் கொண்டிருந்தார்.
பரமேஸ்வரனின் உடல்நிலை காரணமாகத் தீபாவால் அவருக்கு உதவ முடியாமல் போக, அவர்களுடைய தொழிலை பரமேஸ்வரனுடன் இணைந்து விக்ரமும் தாத்தாவின் தொழிலை மித்ரனும் கவனிப்பது என்றாகிப்போனது.
மித்ரன் இப்படி பிரச்சனை செய்துகொண்டு தாத்தாவுடன் சென்று விடவும் அது ஒன்று தொட்டு ஒன்று பிரச்சினையாகிப்போய் கோபத்தில் மொத்த சொத்துக்களையும் மித்ரன் மீது எழுதி வைத்துவிட்டார் அவனுடைய தாத்தா.
அந்த சமயத்தில்தான் தனக்கு என்று தனியான ஒரு அடையாளத்தை தேடிக் கொள்ள வீனஸ் தொலைக்காட்சியை வாங்கினான் அக்னிமித்ரன்.
தாத்தா வயோதிகத்தில் இறந்து போகவும், அதன்பின் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான் அவன். திருமணம், குடும்ப உறவுமுறைகள் என எதிலும் நம்பிக்கையோ மரியாதையோ இல்லாமல் போகப் பெண்களின் சகவாசம் அவனுக்கு அதிகமானது அதன் பிறகுதான்.
அவனுடைய சேனல்களும் நன்றாக வளரத் தொடங்கியிருந்தது. கௌவுதம் பிருந்தா திருமணத்திற்குக் கூட செல்லவில்லை அவன். அதன் பிறகு அவளைக் கொஞ்சம் கூட தொடர்புகொள்ளவே இல்லை. அவளும் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை.
அதன் காரணத்தை அவன் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்திருக்கலாம்.
அதிகப்படி வேலையிலும் வாழ்க்கை முறையிலும் அவளை மறந்து போயிருந்தான் அவன்.
கௌதம் அவளை விரும்பி திருமணம் செய்தவன்தானே. தான் தலையிடாமல் இருத்தாலே அவன் அவளை நல்லபடியாகப் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணமும்தான்.
ஆனால் மோனாவை சந்தித்தப் பிறகு அவள் மூலம் கௌதமுடைய மற்றொரு முகத்தைப் பற்றி அறிந்த பிறகு மனதில் ஒரு பயம் வந்திருக்க, பதறி பிருந்தாவை நேரில் சென்று பார்த்தான் என்றால், அவள் முற்றிலுமாக நிலைகுலைந்து போயிருந்தாள்.
தன் இரண்டு குழந்தைகளுக்காகவும் தன்னைப் பெற்றவர்களுக்காகவும் அனைத்தையும் சகித்துக்கொண்டிருந்தவள், அவனைப் பார்த்ததும் உடைந்து அழுதேவிட்டாள் பிருந்தா.
Mithran nee enna apnnalam unnai mattum thedi varuva ni ninaichitu irukiya adu dan nadakathu da mithran,