மித்ர-விகா-34
சில வருடங்களுக்கு முன் 'வீனஸ் தமிழ்' தொலைக்காட்சி சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த 'புதையல் வேட்டை' எனும் கேம் ஷோ மிக மிகப் பிரபலம்.
அதன் முதல் சீசனை ஒரு பிரபல திரைப்பட கதாநாயகன் தொகுத்து வழங்கி அந்த நிகழ்ச்சி டீஆர்பியில் உச்சத்தைத் தொட்டிருக்க, அதன் இரண்டாவது சீசனில் அக்னிமித்ரன் தோன்றியிருந்தான்.
அவன் அணியும் உடையில் தொடங்கி, அவனுடைய கம்பீர நடை... நிமிர்ந்து அவன் உட்காரும் தோரணை... புன்னகை மாறாமல் அவன் பேசும் பாங்கு... தமிழானாலும் ஆங்கிலமானாலும் திருத்தமாக வார்த்தைகளை அவன் உச்சரிக்கும் நளினம்... என அனைத்து வகையிலும் காந்தமாக ஈர்த்தவன், ஒரு சில எபிசோட்களிலேயே, 'புதிதாக யார் இவன்?' என்ற கண்ணோட்டத்துடன் பார்த்த மக்களை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
அவனுக்காகவே அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து பார்த்தவர்கள் பலரென்றால் மாளவிகாவும் அதில் ஒருத்தி.
பொது அறிவு சார்ந்த நிகழ்ச்சி என்ற ஒரே காரணத்தினால் அதன் முதல் சீசனின் முதல் எபிசோடிலிருந்தே அதை விடாமல் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் அக்னிமித்ரனுக்காகவே அதைப் பார்க்கும் அளவுக்கு மாறிப்போயிருந்தாள்.
அது 'ஹீரோ ஒர்ஷிப்' அல்லது ஒரு பதின்ம வயதின் பாதிப்பு என்பதையெல்லாம் தாண்டி, புத்தகத்திற்குள் பொத்தி வைத்திருக்கும் ஒரு மயிலிறகைப் போல, கடைசி சொட்டு வரை சுவைக்க வைக்கும் ஐஸ்க்ரீமைப் போல, சில்லென்று முகத்தில் தெறிக்கும் அடைமழையின் சாரல் போல, மணமே இல்லை என்றாலும் மரத்தின் இலைகளே தெரியாவண்ணம் மலர்ந்து குலுங்கும் குல்மோஹர் மலர்களைப் போல, பறிக்க இயலா உயரத்தில் மலர்ந்து மணம் பரப்பி ஏங்க வைக்கும் நித்திய மல்லியின் வாசம் போல அவளுடைய ரசனைகளின் பட்டியலில் அவனும் சேர்ந்திருந்தான்.
"ஹேய் மாலு, உன் ஆளு டிவில வந்துட்டான் பாரு, வா வா…" என மதுவும் சாத்விகாவும் அவர்களையும் அறியாமல் சொல்லும் அளவுக்கு...
"ஏய் இது என்னடி இது... தட்டுல சாப்பாடு அப்படியே இருக்கு. நீ இப்ப சாப்பிடப்போறியா இல்ல டீவியை ஆஃப் பண்ணவா?" எனத் துளசியே கடுப்பாகும் அளவுக்கு...
"நாளைக்கு ரிவிஷன் எக்ஸாம் இருக்கு மாலு. அதை விட இப்ப இந்த ப்ரோக்ராம் முக்கியமா போச்சா?" என அன்பு எரிச்சல்படும் அளவுக்கு...
அவனுடைய படம் போட்ட போஸ்டர்களைத் தேடிப் பிடித்து அவளுடைய பிறந்தநாளுக்குத் தோழிகள் பரிசளிக்கும் அளவுக்கு... அக்னிமித்ரன் மெய்நிகராக மாளவிகாவின் அன்றாட வாழ்க்கையில் சங்கமித்திருந்தான் என்றால் அது மிகையில்லை.
கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர, அதன் பின் அதன் அடுத்தப் பகுதியை ஒளிபரப்பாமல் அவர்கள் அந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட, அவள் மனதில் ஒரு வெற்றிடமே உருவாகிவிட்டிருந்தது என்றால் அதுவும் மிகையில்லை.
தொடர்ந்து வந்த நாட்களில் அவளுடைய அப்பா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மதுவுக்குப் புதிதாக நவீன ரக கைப்பேசி ஒன்றை வாங்கிக் கொடுக்கும் வரை...
அவள் மூலம் சமூக வலைத்தளங்கள் இவளுக்கு அறிமுகமாகும் வரை...
அவற்றில் அக்னிமித்ரனின் வேறொரு முகத்தை அவள் காண நேரும் வரை...
இந்த நிலை நீடித்தது.
வாராவாரம் புதுமையைக் காண்பிப்பதற்காக அவன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் அரங்கத்தை மாற்றுவதுபோல் அவன் பெண்களை மாற்றிக் கொண்டிருக்க, ஏனோ காரணம் சொல்லத் தெரியாத அளவுக்கு அவள் மனம் கசந்துதான் போனது.
அர்த்தமே இல்லாமல், அவன் மீது அவள் உருவாக்கி வைத்திருந்த மாய பிம்பம் உடைந்து தூள் தூளாகிப் போயிருக்க, 'இவன் கூடவா இப்படி? போயும் போயும் இவனையா விழுந்து விழுந்து ரசித்தோம்?' என்று தன் மீதே கூட கோபம் வந்தது அவளுக்கு.
அவர்களுடைய அறை முழுவதும் ஒட்டி வைத்திருந்த அவனுடைய போஸ்டர்களைக் கிழித்து எறிந்தவள், அவனைப் பற்றிய எண்ணங்களையும் அதிகம் தூக்கிச் சுமக்காமல் அவனை வெட்டென மறந்தும் போனாள்.
அதாவது அவன் மேல் இருந்த அதிகமான விருப்பத்தை, 'சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்' என்கிற ரீதியில் அதிக வெறுப்பாக மாற்றி மனதைச் சமநிலைப் படுத்திக்கொண்டாள் எனலாம்.
இதைதான் மனோதத்துவத்தில் 'எதிர்வினை உருவாக்கம்' அதாவது 'ரியாக்ஷன் ஃபார்மேஷன்' என்கிறார்கள்.
இது, ஒருவருடைய ஆழ்மனமானது தந்திரமாக, அதிகம் பாதிப்புக்கு உள்ளாகாமல் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவருடைய மனநிலையைப் பக்குவப்படுத்தும் 'உளவியல் பாதுகாப்பு பொறிமுறை' அதாவது 'ஈகோ டிஃபென்ஸ் மெக்கானிசம்' ஆகும்.
மெய்நிகர் பிம்பமாக... தொலை தூர நட்சத்திரமாக அவனைப் பார்த்தபொழுதே இப்படி என்றால், காலம் அவனை அவளுக்கு மிக அருகில் கொண்டு வந்து நிறுத்தினால்?
சற்றுத் தடுமாறித்தான் போனாள் மாளவிகா.
ரஞ்சனியால் ஆட இயலாமல் போன நடனத்தைத் தானே ஆட அவள் ஒப்புக்கொண்டதே கல்லூரி விழாவுக்கு அவன்தான் சிறப்பு விருந்தினராக வருகிறான் என்ற காரணத்தினால்தானோ?
அன்புவுக்காகதான், ரஞ்சனிக்காகதான், அவளுடைய ஹெச்.ஓ.டிகாகதான் என அவள் தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டதெல்லாம் கூட வெறும் சப்பைக் கட்டுதானோ?
அன்று அவனை வரவேற்க எல்லோரும் பரபரப்பாக ஓடும்பொழுது தன்னையும் மீறி மற்ற அனைவரையும் முன்னால் போக விட்டு அவள் கடைசியாகச் சென்றது கூட அவனைப் பார்த்துவிடும் ஆவலில் உண்டான கள்ளத்தனத்தில்தானோ?
திரையில் தோன்றும் நாயகர்களுக்காக வெறி கொண்டு ஆண்களே ரசிகர் மன்றம் வைத்து பாலபிஷேகம் செய்யும் பொழுது, கதைகளிலும் பாடல்களிலும் கேள்விப்பட்டதால் மட்டுமே கண்ணனிடம் பித்தான மீராவைப் போன்று பெண்களும் பித்தாகிச் சுற்றுவதில் வியப்பேதும் இல்லைதான்.
அதை யாரும் நிரந்தரமாகத் தூக்கிப் பிடித்து அந்த ஆதர்ச நாயகர்களுக்காகவே வாழ்ந்து அவர்களுக்காகவே உயிரை விடுவதெல்லாம் எதார்த்தத்தில் நடப்பதில்லை.
அது ஒரு குறிப்பிட்ட சிறு காலகட்டத்துக்குள் உருவாகித் தானாகவே மறைந்து போகும் மாயை என்பதை எல்லோருமே உணர்ந்துதான் இருக்கிறார்கள். வயது கூடி முதிர்ச்சியும் பக்குவமும் ஏற்படும்பொழுது எதார்த்த வாழ்க்கை அவர்களைத் தன்னுள் இழுத்துக்கொள்கிறது.
ஆனால் அப்படி மனதைக் கவர்ந்த அந்த ஆதர்ச நாயகனை நேரில் பார்க்கும் பொழுது... அவனுடனேயே நாள் முழுவதையும் செலவிடும் சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது… அந்த இரசனை, அந்தப் பிடித்தம், அவர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் வாய்ப்புகள் அதிகம்.
அப்படி சூழ்நிலைகள் அமையும்பொழுது மனதிற்கு மயக்க மருந்து கொடுத்து அதை நீளுறக்கம் கொள்ளச் செய்வதென்பதெல்லாம் கொஞ்சம் சவாலான விஷயம்தான்.
முதன்முதலாக மின்தூக்கியில் அவனை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்ததும் உண்டான தடுமாற்றத்துக்கும், அவனிடத்தில்தான் அவள் வேலை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை உண்டான பொழுது அவள் கொண்ட அச்சத்துக்கும் பின்னல் இருந்த காரணமும் இதுதான்.
அவளுடைய இப்படிப்பட்ட மனப்போராட்டத்தை அறியாமலேயே இந்த சவாலில் அவளைச் சிக்க வைத்து விடுபட முடியாத வண்ணம் அவனுமே அதில் சிக்கிக்கொண்டிருக்கிறான் அக்னிமித்ரன்.
கல்லூரி விழாவில் அவளைப் பார்த்த பிறகு அவள் எந்த அளவுக்கு அவனைப் பாதித்திருக்கிறாள் என அவன் கொடுத்த விளக்கத்தில் அதிசயித்துதான் போனாள் மாளவிகா.
ஒரு வேளை காதல், திருமணம் எனச் சொல்லியிருந்தால் கூட அதற்கு அவள் ஒப்புக்கொண்டிருக்க மாட்டாள்.
ஆனால் அவன் நோக்கமே வேறு என்று அறிந்த பிறகு, அதுவும் அவளைத் திட்டமிட்டு தன்னிடம் கொண்டு வந்திருக்கிறான் என அவனே சொன்ன பிறகு, அவன் சொன்ன சவாலை ஏற்று அவன் நினைத்ததை நடக்கவிடாமல் செய்து தான் யார் என்பதை நிரூபித்தால்தான் என்ன என்றுதான் தோன்றியது அவளுக்கு, விபரீதமாக!
அது அவ்வளவு எளிதல்ல என்பது அவளுக்கு அப்பொழுது புரியாமல் போனதுதான் விந்தை!
திரையில் பார்த்தே அவனிடம் எதையெல்லாம் ரசித்தாளோ அவை நேரில் இன்னும் அதிகம் அவளை இரசிக்க வைக்கும் என்பதை அவள் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
என்னதான் 'ஜெல்' தடவிப் படிய வைத்திருத்தலும் 'நான் உனக்கு அடங்குவேனா?' என அவன் தலை முடி அவனுடைய நெற்றியில் புரண்டு அவனுடைய கண்களை மறைக்கும்.
ஓய்வின்றி அவன் கரங்கள் அதை மேலே தள்ளிக்கொண்டே இருக்கும்.
அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் உண்டாகும் புன்னகையை மறைப்பதென்பதொன்றும் அவ்வளவு சுலபமில்லை அவளுக்கு.
கோபமாக... மகிழ்ச்சியாக... ஏக்கமாக.. ஏமாற்றத்துடன்... பிடிவாதத்துடன்... காதலுடன்... என அவனுடைய உணர்வுகளை அவன் விழிகளே உரைத்துவிடும். அதற்காகவே அவனை அதிகம் சீண்டிப் பார்க்கத் தோன்றும்.
எதிரிலிருப்பவரை எளிதில் வீழ்த்தி அவனிடம் சரணடைய வைக்கும் அவனுக்கே பிரத்தியேகமான வசிய புன்னகை அவளை ஈர்க்கவில்லை என்றால்தான் வியப்பே!
அதுவும் அவளைப் போலவே அவன் சீழ்க்கை அடிக்கும்பொழுது கூடவே சேர்ந்து சீழ்க்கை அடிக்க மனம் துறுதுறுக்கும்.
அவனுடைய பரந்த தோள்களை எடுப்பாகக் காட்டும் வண்ணம் அவன் அணியும் 'ஸ்லிம் ஃபிட்' சட்டைகள், முழங்கை வரை அதை அவன் மடித்து விட்டிருக்கும் நேர்த்தி, அவ்வப்பொழுது அவனுடைய கழுத்திலிருந்து எட்டிப் பார்த்து டாலடிக்கும் அவன் அணிந்திருக்கும் பிளாட்டினம் செயின், ஏன் அவன் உபயோகிக்கும் கைப்பேசி முதல் அவனுடைய கார் வரை ஒவ்வொன்றுமே அவளுடைய ரசனைக்கு உரியவைதான்.
'இதெல்லாம் எனக்குப் பிடித்திருக்கிறது. நான் ரசிக்கிறேன் அவ்வளவுதான். அதைக் கடந்த வேறு எந்தவித உணர்வும் எனக்கு அவனிடம் ஏற்படவில்லை. ஏற்படவும் ஏற்படாது. இன்னும் வெகு சில நாட்கள் மட்டுமே நான் இங்கே வேலை செய்யப் போகிறேன். அதன் பிறகு அவனைப் பற்றிய நினைவு கூட எனக்கு இருக்காது.' தினமும் இப்படிதான் உருப்போட்டு தன் மனதை ஒரு நேர்கோட்டில் செலுத்திக் கொண்டிருந்தாள், சரவணன் மூலம் அப்படி ஒரு குழப்பம் ஏற்படும் வரை.
சில தினங்களாக மனம் அவள் கட்டுப்பாட்டில் இல்லை.
ஒன்று வேலைப் பளுவில் அவள் அதை உணரவில்லை.
இல்லை அவளுடைய மனதையே அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை.
இல்லை அவள் அதைக் கட்டுப்படுத்த முயலவேயில்லை.
ஆனால் எக்காரணம் கொண்டும் அவளுடைய இந்த மனநிலையை அவனுக்கு வெளிச்சம்போட்டுக் காண்பித்துவிடக் கூடாது என்ற ஒன்றில் மட்டும் மிகத் தெளிவாகவும் ஒரு எச்சரிக்கையுடனும் இருந்தாள்தான்.
ஆனால் அவளையும் மீறி, ஒரு ‘மைக்ரோ’ வினாடிக்குள், மயக்கமாக மாறிப்போயிருக்கும் அவளுடைய இரசனையை தன் ஒரே பார்வையால் அக்னிமித்ரனிடம் வெளிப்படுத்தி விட்டாள் மாளவிகா.
அந்த ஒற்றைப் பார்வை, வெளியேறவே முடியாத படி மித்ரனின் காதல் எனும் சுழலுக்குள் அவளைச் சிக்க வைக்கப் போகிறது என்பதுதான் நிதர்சனம்.
***
விமானம் சென்னையில் தரையிறங்கி, அங்கிருந்து அவர்கள் இருவரும் கிளம்பவே இரவு மணி பதினொன்றை நெருங்கிவிட்டது.
உறக்கம் தெளிந்தும் தெளியாமலும் அவனுடன் இணைந்து நடந்தாள் மாளவிகா.
விமானத்தில் நடந்த கூத்தெல்லாம் அவள் அறியாமல் போனாலும் நேரம் செல்லச்செல்ல, அவளுடைய அப்பாவை எண்ணி மனதிற்குள் ஒரு கலவரம் உண்டாகியிருந்தது.
விமான நிலையத்தின் வாகன நிறுத்தத்தை அடைந்து அவனுடைய காரை திறந்து இருவரும் உட்கார்ந்ததும், உள்ளே விளக்கை ஒளிரச்செய்தவன், அவளுடைய முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே, "நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நான் பேசி முடிக்கற வரைக்கும் நடுவுல நீ ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாது" என அழுத்தமாகச் சொல்லிவிட்டு, அவளுடைய மிரண்ட பார்வையில், 'இதுக்கேவா?!’என உள்ளுக்குள்ளேயே சிரித்தபடி தொடர்ந்தான்.
"எனக்கு நீ வேணும். அதாவது உன்னை முதல் முதல்ல பார்த்தப்ப என்ன மனநிலைல இருந்தேனோ அதே மனநிலைலதான் இப்பவும் இருக்கேன்.
ஆனா அப்ப லஸ்ட் ஃபீல் மட்டும் கொஞ்சம் தூக்கலாவும்... லவ் ஃபீல்னா என்னன்னே கொஞ்சம் கூட தெரியாமலும் இருந்தது.
இப்ப எனக்கு லவ்... லவ்... லவ்... இந்த லவ் மட்டும்தான் அத்தியாவசியத் தேவையா இருக்கு. இதுல லஸ்ட்டெல்லாம் ரெண்டாம் பட்சமா போயிடுச்சு.
நான் என்ன சொல்ல வரேன்னா... ஐ நீட் யூ இன் மை லைப் அஸ் மை லவ்" என அவன் சொல்ல மாளவிகாவின் நிலவரம் கலவரமானது.
"வாட்?" என அவள் பதறி ஏதோ சொல்ல வர, "நடுவுல பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்" என அவள் பேச இடங்கொடுக்காமல் தடுத்து, "நான் இபப்டியெல்லாம் ஒரு பொண்ணுகிட்ட சொல்லிட்டு இருப்பேன்னு கனவுல கூட நினைச்சதில்ல" என்றவன், "நான் இந்த விஷயத்துல ரொம்ப சீரியஸா இருக்கேன் அஜூபா. என்னோட பாஸ்ட் நம்ம ஃபியூச்சர பாதிக்காத அளவுக்கு இனிமேல் என்னால நடந்துக்க முடியும். இனி என் லைஃப்ல நீ மட்டும்தான் இருப்ப.
நான் என்னோட லவ்வ உன் கிட்ட சொல்ற இந்த நொடி, நான் உனக்கு இந்த வாக்கை கொடுக்கறேன். இதை ஒரு லாங் டேர்ம் ரிலேஷன்ஷிப்பா கொண்டுபோக முடியும்னு நான் நம்பறேன் லயன்னஸ். எனக்கு தேவையெல்லாம் உன்கிட்ட இருந்து எஸ்... ஓகே... இப்படிங்கற பாசிட்டிவ் பதில்தான். இந்த எஸ்... ஓகே... இதைச் சொல்ல உனக்கு ஒரு நாள் டைம் கொடுக்கறேன். நாளைக்கு நீ ஆஃபிஸ் வர வேண்டாம்.
ஒரு நாள் ரிலாக்ஸ் பண்ணிட்டு... நாளைக்கு மறுநாள் உன் முடிவை நீ என்கிட்ட சொல்லணும்” எனச் சொல்லிக்கொண்டே அவன் வாகனத்தைக் கிளப்ப, கோபமா பயமா எனப் பிரித்தறிய முடியாத வண்ணம் முகம் சிவந்து, "அதுக்கு ஒரு நாளெல்லாம் எனக்குத் தேவை இல்ல... இப்பவே சொல்றேன். நோ... நாட் ஓகே" எனப் படபடத்தாள் அவள்.
"ப்ச்... ஏன் அவசரப்படற. வீட்டுக்குப்போய் பொறுமையா யோசி. உன் மனசுக்குள்ள நீ என்ன நினைச்சிட்டு இருக்கன்னு எனக்குத் தெரியும். உன்னையும் ஏமாத்திட்டு என்னையும் ஏமாத்த ட்ரை பண்ணாத. இப்ப நீ என்ன பேசினாலும் அது வேஸ்ட். என் காதுலையே விழாது" என்று சொல்லிவிட்டு முடிந்தது என்பதுபோல் ஆடியோ சிஸ்டத்தில் ஏதோ ஒரு பாடலைச் சத்தமாக அலற செய்துவிட்டு சாலையில் கவனத்தைப் பதித்தான் அக்னிமித்ரன்.
வேறு வழி இல்லாமல் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்துகொண்டாள் மாளவிகா.
அவளுடைய வீட்டு வாயிலில் அவன் காரை நிறுத்தும் வரை இருவருக்குள்ளும் பேச்சுக்கே அவசியமில்லாமல் போக, பின்னால் சாய்ந்து பின் இருக்கையில் கிடத்தியிருந்த காகிதப் பைகளில் ஒன்றை எடுத்தவன், "இதை உனக்காக வாங்கினேன். நாளன்னைக்கு ஆஃபிஸ்க்கு வரும்போது இந்த ட்ரெஸ்ஸைப் போட்டுட்டு வா” என்றவன், அவளை உணர்ந்தவனாக, "வேண்டாம்னு சொல்ற ஆப்ஷன் உனக்கு கிடையாது. இந்த ட்ரெஸ்க்கும்... எனக்கும்" என்று பிடிவாதத்துடன் சொல்ல, வீட்டின் வராண்டாவிலேயே நாற்காலியைப் போட்டு உட்கார்ந்தவாறு மகளுக்காகக் காத்திருந்த அவளுடைய அப்பாவின் பார்வையில் மேலும் கீழே இறங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் மறுப்பு கூறாமல் அதை வாங்கிக்கொண்டு அவள் இறங்க, "பை... குட் நைட்... இதெல்லாம் சொல்லலாம்... தப்பில்ல" எனக் கிண்டலாகவே சொல்லிவிட்டு, அவளுடைய 'குட் நைட்' முறைப்பைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான் மித்ரன்.
"துளசி... மாலு வந்துடுச்சு பாரு" என மனைவிக்கு குரல் கொடுத்தவர், "சாப்பிட்டியா பாப்பா” என இலகுவாகவே மகளை எதிர்கொண்டார் மூர்த்தி.
அதில் பதட்டம் குறைந்து மனம் கொஞ்சம் லேசாக, அவர் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டு அவர்கள் படுக்கையறைக்குள் நுழைத்தவள், மித்ரன் கொடுத்தப் பையைக் கட்டில்மேல் போட்டுவிட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
முகம் அலம்பி அவள் வெளியில் வரவும், "அக்கா. இந்த டிரஸ்ஸை டெல்லில வாங்கினியா. கலர் செமையா இருக்குக்கா” என்றவாறே சாத்விகா அதைப் பிரித்து தன் மீது வைத்துக் காண்பிக்க, ஆடிதான் போனாள் மாளவிகா.
கிட்டத்தட்ட அன்று கண்ட கனவில் அவள் அணிந்திருந்ததை போன்ற அதே உடை. நிறமும் அதுவே.
அவளுடைய கனவில் கூட ஊடுருவ முடியுமா அக்னிமித்ரனால்?
கனவில் அவனுடைய தோள் சாய்ந்தபொழுது அவள் உணர்ந்த வெம்மை நினைவில் வரத் தன்னை நினைத்தே பயந்து போனாள் மாளவிகா.
பதில் சொல்ல அவன் கொடுத்த அந்த ஒரு நாளுக்குள்ளேயே அவளுக்குப் புரிந்துபோனது அவன் இல்லாத ஒரு வாழ்க்கை இனி அவளுக்குச் சாத்தியப்படாது என்று.
சில நாட்களுக்குள்ளேயே அப்படி அக்னிமித்ரனுக்குப் பழக்கப்பட்டுப் போயிருந்தாள் மாளவிகா. அவன் அவளை அப்படிப் பழக்கிவிட்டிருந்தான் என்பது தான் உண்மை.
コメント