En Manathai Aala Vaa! 32
- Krishnapriya Narayan

- Jul 28, 2020
- 6 min read
Updated: Oct 26, 2022
மித்ர-விகா-32
அன்புவை அங்கே பார்க்கவும் அவளுடைய கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.
'இந்த நேரத்தில் இவன் எப்படி இங்கே வந்தான்?' என்ற கேள்வியுடன் மாளவிகாவின் பார்வை அனிச்சையாக அக்னிமித்ரனிடம் செல்ல, ஒரு கள்ளப் புன்னகை படர்ந்தது அவனுடைய முகத்தில்.
இருவரும் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அவள் உடையில் சூப் சிந்திவிட அவள் அதைச் சுத்தப்படுத்தச் சென்ற சமயம் மேசை மேல் அவள் விட்டுச்சென்றிருந்த அவளுடைய கைப்பேசி ஒலிக்கவும், அது அன்பு என்பதை அவனுடைய படத்துடன் மித்ரனின் கண்களுக்குக் காட்சிப் படுத்த, சற்றும் யோசிக்காமல் அந்தக் கைப்பேசியை எடுத்து அவளுடைய வாசத்தை ரசித்தவாறே அந்த அழைப்பை ஏற்றவன், அன்புவுடன் பேசித் துரிதமாக இந்த சந்திப்பைத் திட்டமிட்டுவிட்டான்.
விமானத்தில் அவள் சொன்ன விஷயங்கள் லேசாக அவனுடைய குற்ற உணர்ச்சியைக் கிளறி விட்டிருந்தது. அங்கே வந்த பிறகு வேலை மும்முரத்தில் அவள் அந்த விஷயத்தைச் சற்று மறந்திருந்தாளே ஒழிய, முற்றிலுமாக அதிலிருந்து அவள் வெளிவரவில்லை, அன்புவுடன் பேசி ஒரு தெளிவுக்கு வராமல் அவளால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதெல்லாம் ஒரு புறம் என்றால், ஒரு இளைஞனின் வளர்ச்சி எக்காரணம் கொண்டும் தடைப்படக்கூடாது என்பது மற்றொரு புறம் அவன் மனதை அழுத்திக்கொண்டிருந்தது.
ரஞ்சனியின் இந்த திடீர் திருமணத்திற்கும் அவனுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்றாலும் முன்பு யோசிக்காமல் அவன் செய்து வைத்திருந்த குளறுபடிகளுக்கெல்லாம் பிராயச்சித்தமாக இருவருக்கும் பொதுவாக ஏதாவது நன்மை செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தவனுக்கு அந்த அழைப்பு சிறு வாய்ப்பாக அமைந்துபோனது அவ்வளவுதான்.
மாளவிகாவைப் பொறுத்தமட்டில் நேரம் அமைந்தால் மித்ரனிடம் கேட்டுக்கொண்டு அன்புவைச் சென்று பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தாள். அவள் அதைக் கேட்பதற்கு முன்னதாகவே அவன் அதை நிறைவேற்றியிருக்க உண்மையிலேயே அவள் மனதிற்குள் இனம்புரியாத ஒரு பெருமிதம் வந்து ஒட்டிக்கொண்டது.
அந்த மனநிலையுடன் அவனை நன்றியுடன் அவள் ஒரு பார்வை பார்க்க, அதற்குள் அவர்களை நெருங்கி வந்திருந்தான் அன்பு. முன்பைவிட கொஞ்சம் மெலிந்துபோய் களைப்பாகத் தெரிந்தான்.
தன் உயிரை உருக்கிக்கொண்டு தன் இலட்சியத்தை நோக்கி இப்படி அவன் ஓடிக் கொண்டிருக்கும்பொழுது அந்த ரஞ்சனி அவன் பாதையில் இப்படி முள்ளாக மாறி அவன் பயணத்தைச் சிக்கலாக்குகிறாளே என்று வேதனையாக இருந்தது அவளுக்கு.
அணைத்து வைத்திருந்த கைப்பேசியை அவன் உயிர்ப்பித்த உடன் ரஞ்சனி விஷயம் அவனுக்குத் தெரிந்துபோயிருக்கும் என்பது உறுதி. அதில் மற்ற அனைத்தும் பின்னுக்குப் போய்விட, "ஆர் யூ ஆல்ரைட் அன்பு?" எனக் கேட்டாள் அவள் கண்களில் கண்ணீர் திரையிட.
"ஓ மை காட்... பப்பி” என்றவன், "எனக்கு என்ன நான் நல்லாதான் இருக்கேன்” என்றவாறே அவளது கண்களைத் துடைத்துவிட்டான் அன்பு.
மித்ரனின் மனது நெகிழ்ந்து போயிருந்ததாலோ இல்லை மாளவிகாவிடம் அவனுக்கு ஏற்பட்டிருந்த உரிமை உணர்வினாலோ அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அங்கிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை. இருவரையும் புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
"ரஞ்சனி” என அவள் ஏதோ சொல்ல எத்தனிக்க, அவளுடைய கண்களைச் சந்திக்கும் துணிவில்லாமல், "ஷி இஸ் எ பாசிங் கிளௌட்” என்றான் அவன் எங்கேயோ பார்த்துக்கொண்டு.
'பெண்கள் எல்லோரையுமே ஒரு தவறான கண்ணோட்டத்துடன் ஆண்கள் பார்ப்பதற்கு இவளைப் போன்றவர்கள்தான் காரணம்' என்ற எண்ணம் ஒரு கசப்பை ஏற்படுத்த, அவன் முகவாயைப் பிடித்து தன் முகத்தைக் காண வைத்தவள், "அந்த அளவுக்குத் தெளிவா ஆகிட்டியா அன்பு. அதுவும் இந்த ஷார்ட் டைம்-க்குள்ள" எனக் கேட்டாள் அவள் அவனுடைய மனதை உணர்ந்தவளாக.
"என்ன செய்யறது மாலு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெளிஞ்சுதான் ஆகணும். என்ன, எக்ஸாம்ஸ நினைச்சாதான், இந்த மனநிலைல நல்ல படியா பண்ண முடியுமான்னு கொஞ்சம் பயமா இருக்கு.” என்றவன், "அவளை ரொம்ப நம்பினேன் பப்பி. எனக்கு பொயடிக்கா இந்த லவ்வைக் கொண்டு போக தெரியல. அதனாலதானோ?" எனப் பிதற்றினான் உடைந்த குரலில்.
"அவளைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அன்பு. மெச்யூரிட்டி இல்லாத அரை வேக்காடு அவ. ஆனா இவ்வளவு செல்ஃபிஷ்ஷா இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. பட் நீ இன்னும் கூட இந்த லவ்ல சீரியசாதான் இருக்கற மாதிரி தெரியுது?" என அவள் கடுமையாகக் கேட்க, மௌனம் சாதிதான் அவன்.
"ப்ச்... மாள்வி. ஏற்கனவே அவன் டென்ஷன்ல இருக்கான். இந்த நேரத்துல நீ வேற எதுக்கு அவனை இன்னும் ஃப்ரை பண்ற" என்றான் மித்ரன் கண்டனமாக.
"இல்ல மித்ரன். உங்களுக்கு இவனைப் பத்தி தெரியாது” என்றவள், "அன்பு எக்ஸாம்க்கு எப்படி ப்ரிப்பேர் பண்ணியிருக்க?" எனக் கேட்டாள் அவள் பள்ளி ஆசிரியர் ஒரு மாணவனை மிரட்டும் தொனியில்.
"நல்லாதான் ரெடி பண்ணியிருக்கேன்” என்றான் அன்பு சலிப்புடன்.
"முதல்ல மத்ததெல்லாம் மெமரில இருந்து எரேஸ் பண்ணு, அட் ஒன்ஸ். அப்பதான், எல்லா எக்ஸாம்சையும் உன்னால நல்லா பண்ண முடியும்" என்றாள் அவள் சர்வ சாதாரணமாக.
"ஒரே செகண்ட்ல எல்லாத்தையும் டெலீட் பண்ணிட்டுப் போக நான் ஒண்ணும் சிட்டி ரோபோ இல்ல பப்பி. பட் ட்ரை பண்றேன். என்னால இப்போதைக்கு அதைதான் சொல்ல முடியும்" என்றான் அவன் வலி மிகுந்த குரலில்.
"உனக்கு தெரிஞ்ச விஷயம்தான். இருந்தாலும் நியாபக படுத்தறேன்” என்றவள், "அன்பு... ஆசை... நட்பு... இது மாதிரிதான காதலும்!?
மத்தது எல்லாத்தையும்விட விடக் காதல்ல... சம்பந்தப்பட்ட ரெண்டு பேரும் கம்பர்டபிளா இருந்தாதான் அது லாங் டேர்ம் ரிலேஷன்ஷிப்க்கு வழிவகுக்கும்.
இல்லன்னா... எலி கரைக்கு இழுக்க தவளை தண்ணிக்கு இழுக்கன்னு சொல்ற மாதிரி அது லைஃப் லாங் போராட்டமாதான் இருக்கும்.
ரஞ்சனி உன் கிட்ட ஏதோ ஒரு விதத்துல கம்பர்டபிளா பீல் பண்ணலன்னா அவளோட எக்ஸ்பெக்ட்டேஷன் வேறன்னு அர்த்தம். அது இந்த மேரேஜ்ல பூர்த்தி ஆகியிருக்கலாம். அதுல உன் தப்பு எதுவும் இல்ல.
இன்னும் கொஞ்ச நாள் இதை கன்டின்யூ பண்ணிட்டு இப்படி செய்யாம இப்பவே அவ இப்படி செஞ்சது இன்னும் நல்லது” என்று சில நொடிகள் இடைவெளி விட்டவள் அவனைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே தொடர்ந்தாள்.
"உனக்கு இந்த கருமத்துக்கெல்லாம் இன்னும் நிறைய நேரம் இருக்கு அன்பு.
பட் இந்த எக்ஸாம் அப்படி இல்லைடா புரிஞ்சிக்கோ. யூபிஎஸ்சி ப்ரிலிம்ஸ் க்ளியர் பண்றது ஒண்ணும் அவ்வளவு ஈஸி இல்ல..ல்ல? அதை செஞ்சு முடிக்க எவ்வளவு எஃபோர்ட் போட்டிருக்க.
அடுத்தக் கட்டத்தையும் அதே மாதிரி தாண்டி வந்தாதான என் அன்புக்கே மரியாதை. உன்னை நேரில் பார்த்து பேசணும்னு நேத்து ராத்திரியில இருந்து எனக்கு மனசு அடிச்சிட்டே இருந்தது தெரியுமா.
அந்த எண்ணம்தான் என்னை இங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கு. அதே மாதிரி உன்னோட ஸ்டார்ங் கோல் ரஞ்சனி இல்ல. ஐஏஎஸ். அதை மறந்துடாத" என்றாள் அவள் தெளிவாக.
"இதெல்லாம் பகுத்து ஆராயும் அறிவுக்குப் புரியுது மாலு. ஆனா நம்ம ஜீன்லயே ஊறிப்போன உணர்வுக்குத் தெரியலையே. பிடிவாதமா இந்த ஃபீலிங்கையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கு" என்றான் அன்பு.
"இல்ல. உணர்ச்சிவசப்படாம அமைதியா சிந்திச்சு... நம்ம அறிவைக் கொண்டு உணர்வை ஜெயிக்க வைக்கணும். அப்படி மட்டும் நடந்தா பெரிய பெரிய கலவரங்களையே தவிர்க் முடியும்ங்கற பொழுது இந்த சுண்டைக்கா போலி காதல் உணர்வையா ஜெயிக்க முடியாது?
இப்படி காதல் பீலிங்ல இருக்கும்போது நம்ம ப்ரெயின்ல டோபமைன் ஹை லெவல்ல சுரக்கும். அதனால கோகைன் கஞ்சா இதெல்லாம் கலக்கி அடிச்சா உண்டாகிற போதைக்கு ஈக்வலா ஒரு ப்ளெஷர் உண்டாகும். சடன்னா இப்படி பிரேக் அப் ஆகும்போது அது அப்படியே பொசுக்குன்னு மைன்ஸ்ல போய், நம்மள ரொம்ப லோவா பீல் பண்ண வைக்கும், குறிப்பா ஆண்களை. உடனே புத்தி மழுங்கிப் போய் நெகட்டிவா சிந்திக்க தோணும். மன வலிமை இல்லாம போனா, தாடி, சரக்கு, சூசைட்ன்னு கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிடும்.
டைம் கிடைக்கும்போதெல்லாம்... இல்லனா பிளான் பண்ணி அப்படி டைமை ஒதுக்கி வாட்ஸ் ஆப்ல சேட் பண்றது. கால் பண்ணி ஸ்வீட் நத்திங் பேசறது. அப்ப அப்ப நேர்ல மீட் பண்ணி... மொட்டை மாடில அன்னைக்கு செஞ்சுட்டு இருந்தீங்களே அப்படி உங்க ஃபீலிங்க்ஸை ஷேர் பண்ணிக்கறது. இதெல்லாம் காதல் இல்ல அன்பு, தெரிஞ்சிக்கோ.
இதெல்லாம் உனக்கு பிடிச்சுப்போனதால கொஞ்சம் கொஞ்சமா ஒரு வித ஹேபிட்டா மாறிப்போன விஷயம் அவ்வளவுதான். தொடர்ந்து இருபத்தி ஒரு நாள் ஒரு விஷயத்தை செஞ்சா அது ஒருத்தரோட ஹாபிட்டா மாறும். அதையே தொண்ணூறு நாள் செய்ய முடியும்னா அந்த ஹாபிட் நிரந்தரமா மாறிடும். இது சைக்காலஜி.
இந்த ஃபீலிங்ஸ் எல்லாமும் இப்படித்தான். இதை நாம ஈஸியா டேம் பண்ண முடியும். அதாவது பழக்கப்படுத்திக் கட்டுப்படுத்த முடியும்.
ஒரு வாரம் அவளைப் பார்க்காம அவ கூட பேசாம இருந்தாலே நீ நார்மலுக்கு வந்துடுவ. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. உன்னால முடியலைன்னா வேற யாரால” என அவள் சிறு உரையே ஆற்றி முடிக்க, "புரியுது” என்றவன், "உன்னைப் பார்த்ததுல... உன் கூட பேசினதுல இப்ப கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்றேன் பப்பி. நிச்சயமா இது என் எக்ஸாம்ஸ அஃபக்ட் பண்ணாம பார்த்துக்கறேன்” என்றான் அன்பு சற்றுத் தெளிவுடன்.
அனைத்தையும் ஒரு பார்வையாளனாக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவன், "எவ்வளவு தெளிவா பேசறீங்க மேடம் நீங்க?. ஆஹான்” என்றான் மித்ரன் கொஞ்சம் கிண்டலாக அதிகம் மெச்சுதலாக.
‘ஒரு சராசரி பெண்ணாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் ஒரு புதிய முகத்தை இவளால் மட்டும் இதுபோல எப்படிக் காண்பிக்க முடிகிறது?' என பெரும் வியப்பாக இருந்தது மித்ரனுக்கு.
ஆனால் அக்னிமித்ரன் இப்பொழுது எதை அதிகம் சிலாகிக்கிறானோ எதிர்காலத்தில் அதையே அவளுக்கு எதிரான ஆயுதமாகத் திருப்பி அவளையே அவளிடம் தோற்க வைக்கப்போகிறான் அவன் என்பதை இந்த நேரத்தில் அறியாமல் போனாள் மாளவிகா.
அக்னிமித்ரனுமே தான்!
***
அடுத்த சில நிமிடங்கள், அவன் எப்படி இங்கே வந்தான் என்பதைச் சொல்லிவிட்டு, மற்ற இருவருடனும் சில 'செல்ஃபீ'க்களை க்ளிக்கிக் கொண்டு, "நான் கிளம்பறேன் மாலு. இன்ஸ்டிட்யூட்ல வர சொல்லியிருக்காங்க" என்று அன்பு கிளம்ப, "நாம உள்ள போய் சுத்திப்பார்க்கப் போறோம்னு நினைச்சேன்" என்றாள் மாளவிகா ஏமாற்றம் கலந்த குரலில்.
"நான் ஹாலிடேஸ்ல இங்க அத்தை வீட்டுக்கு வரும்போதெல்லாம் நிறைய தடவ சுத்திப் பார்த்திருக்கேன். ஆனா நீ ரெட் ஃபோர்ட்ட தீபாவளி பட்டாசுல மட்டும்தான பார்த்திருக்க" என அவளைக் கிண்டலடித்தான் 'நான் இயல்பாகதான் இருக்கிறேன்' என்று காட்டிக்கொள்வதற்காக.
அதைப் புரிந்துகொண்டவள், "ஹேய்... ஓவரா சீன் போடாதடா. இந்தக் கோட்டை என்ன இருத்தலும் காப்பி தான? எனக்கு ஆக்ரால இருக்கில்ல அந்தக் கோட்டையைதான் பார்க்கணும். அதுவும் அங்க ஷாஜஹான் பார்த்த இடத்துல நின்னுட்டு தாஜ்மஹாலைப் பார்க்கணும்” எனத் தானும் அன்புவை வம்புக்கு இழுத்தாள் மாளவிகா.
ஆனால், "ஆக்ரா போற அளவுக்கு உனக்கு டைம் இருக்கா. இப்பவே மணி மூணு ஆகப்போகுது. இப்ப கிளம்பினா கூட அங்க போய் சேர சிக்ஸ்-சிக்ஸ் தர்டி ஆயிடும் மாலு. ஆனா அஞ்சறை மாணியோட அங்க என்ட்ரன்ஸ் க்ளோஸ் பண்ணிருவாங்க” என்றான் அன்பு அவள் சொன்னதைத் தீவிரமாக எண்ணிக்கொண்டு.
அது அவளுக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்க,"பிளைட்ல போனா” என அவள் விடாப்பிடியாகக் கேட்க, "என்னவோ சொந்தமா ஃப்ளைட் வெச்சிருக்கிற மாதிரி கேக்கற?" என்றவன், "இங்க இருந்து டைரக்ட் பிளைட் எல்லாம் கிடையது. அது இன்னும் லேட் ஆகும். ரோட் ட்ரேவல்தான் பப்பி ஈஸி” என அதற்கும் பதில்கொடுத்தான் அவன்.
"சரி விடு... நெக்ஸ்ட் டைம் வரும்போது பார்த்துக்கலாம்” என அவள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல, அது அன்புவைக் காட்டிலும் அக்னிமித்ரனை அதிகம் பாதிக்க, "ஹேய்... என்கிட்ட சொந்த ஃப்ளைட் இருக்கு. நான் இவளைக் கூட்டிட்டு போறேன்" என்றான் அவன் சட்டென.
அன்பு ஒரு நொடி அசந்துபோக, "மார்னிங் கூட சென்னைல இருந்து அதுலதான் வந்தோம் அன்பு" என்றாள் மாளவிகா தகவலாக.
அன்பு இதை எதிர்பார்த்திருக்கவில்லை. "ஓஹ்..” என்றவன், "சூப்பர் மாலு உன்னோட பாஸ்” என்று சொல்ல, 'பாஸ்' என்று அவனை அழைப்பதே அவளுக்குப் பிடிக்காது. மேலும் தன்னை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தும் அந்த வார்த்தை அவனுக்குக் கசப்பை ஏற்படுத்த அதை மறைத்துக் கொண்டு,, "உன் ஃப்ரெண்டுக்கு யாரவது பாஸா இருக்க முடியும்னா நினைக்கற. எனக்கே அவங்கதான் பாஸ்ங்கற மாதிரி நடந்துக்கறாங்க மேடம். நீ வேற" என்றான் மித்ரன் அவளைக் கலாய்ப்பது போல.
"பரவாயில்ல மித்ரன் சார், அதுக்குள்ள இவளைப் பத்தி நல்லா புரிஞ்சுகிட்டிங்க போலிருக்கு" என அன்பு சொல்லவும், "நல்லாவே” என்றான் மித்ரன் மாளவிகாவின் விழிகளுக்குள் ஊடுருவி பார்த்துக்கொண்டே.
அதில் உண்டான தடுமாற்றத்தை மறைத்து, "போதும்... இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா உண்டாகப்போற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல” என்றாள் சிலிர்த்துக்கொண்டு.
"ஐயோ. மீ எஸ்கேப்" எனப் பயந்தவன் போலச் சொல்லிவிட்டு, "டைம் ஆச்சு மாலு நான் கிளம்பறேன். சென்னை போயிட்டு கால் பண்ணு. உனக்காகவே ஃபோனை ஆஃப் பண்ணாம வெயிட் பண்ணிட்டு இருப்பேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு,
"பை சார்” என்றவாறு அவன் செல்ல எத்தனிக்க, அவன் கையை பிடித்துக்கொண்டவள், "அன்பு உண்மையாவே நீ ரிலாக்ஸ் ஆகிட்ட இல்ல? எக்ஸாம நல்லா பண்ணிடுவ இல்ல?” எனக் கேட்டாள் மாளவிகா அச்சமும் அக்கறையும் கலந்து.
அவளைத் தோளுடன் சேர்த்து மென்மையாக அணைத்து விடுவித்து, "ஆமாம்” என்றவன், 'கால் மீ இம்மீடியட்லி'ங்கற உன் ஆஃப் லைன் மெசேஜை பார்த்துட்டு நான் உனக்கு கால் பண்ணலன்னா... நான் இப்ப இங்க உன்னைப் பார்க்க வரலைன்னா அவ கிட்ட ஃபோன் பண்ணி கெஞ்சிட்டு இருந்திருப்பேன். அந்த ஃபோட்டோஸ் வீடியோஸ் எல்லாம் பார்த்துட்டு மூளை கொஞ்சம் கூட வேலையே செய்யல. உன்னைத் தவிர வேற யாராலயும் என்ன இந்த அளவுக்குப் புரிஞ்சுக்க முடியாது.
கவலை படாத. உனக்காகவாவது எக்ஸாம்ஸ நல்லா பண்ணிடுவேன்னு நினைக்கிறேன் பப்பி, பை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் அன்பு.
அவளுடைய தவிப்புக்குக் காரணம் புரிந்தது மித்ரனுக்கு. இருவரின் ஒட்டுதலையும் பார்க்கும்பொழுது அவனையும் அறியாமல் சாம்பவியும் அக்ஷையும்தான் அவனுடைய நினைவில் வந்தனர். வழக்கமாக அன்புவைப் பார்த்ததும் உண்டாகும் கசப்புணர்வு சுத்தமாக மறைந்து போயிருந்ததை நன்றாகவே உணர்ந்தான் அக்னிமித்ரன்.


Avalukaga enna vebe seivan nu nalla teriidu athu ivaluku puriyuda nu Dan teriala, anbu super ippadi dan irukanu
நன்றி சித்ராம்மா ஹரிதா RIF
Excited for next epi 😍👌🏼
Wow...
Yapdi ipdi mithran..
Mr.TT ippadi check mate vechutingale...
Malu yanna achu...
Yosichu solluma
நன்றாகவே செல்கிறது. எந்த முரண்பாடும் இல்லை.