En Manathai Aala Vaa-31
Updated: Oct 22, 2022
மித்ர-விகா-31
தேவதைகளே தோற்றுப் போகும் வண்ணம், அழகிய மெரூன் வண்ண சாடின் முழு நீள ஃப்ராக்கில் அழகே வடிவாக, தீபலக்ஷ்மி டவர்ஸ்க்குள் நுழைந்தாள் மாளவிகா.
அந்த உடைக்குப் பொருத்தமாக அவள் அணிந்திருந்த தங்க நிற மணிகள் கோர்க்கப்பட்ட டெரகோட்டா ஜிமிக்கி அவளுடைய துள்ளலான நடைக்குத் தகுந்தாற்போல நடனமாட, மின்தூக்கிக்குள் புகுந்தாள்.
அனிச்சையாக அவளுடைய விரல் பதிநான்காவது தளத்திற்கான பொத்தானை அழுத்த, அவளது கண்கள் அதில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் பதிந்தது.
வழக்கம் போல தன் கூந்தலைச் சரி செய்துகொண்டவள்,
'எந்த காற்றின் அளாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ?
எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ?
ஒரு சிறு வலி இருந்ததுவே இதயத்திலே. இதயத்திலே.
உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே..
உதிரட்டுமே உடலின் திரை...
அதுதான் இனி நிலாவின் கறை கறை' எனச் சீழ்க்கையில் பாட, மின் தூக்கி நின்றதும் ஓட்டமும் நடையுமாக மித்ரனின் தனிப்பட்ட பகுதிக்குள் நுழைந்தாள்.
அவன் அங்கு இல்லாமல் போகவும், வேகமாக அவனது அறை கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றவளுக்கு அவனைக் கண்களில் நிரப்பிக் கொள்ளும் ஆவல் மட்டுமே மேலோங்கி இருக்க, அவன் அங்கேயும் இல்லாமல் போகவும் ஏமாற்றமாகிப்போனது.
மேலும் பொறுமையில்லாமல் பால்கனிக் கதவைத் திறந்து கொண்டு சென்றவள், அங்கே திரும்பி நின்று சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அக்னிமித்ரனைப் பார்த்து, ஆசுவாசத்துடன் மூச்சுவாங்க புன்னகைத்தவாறே, தேக்கி வைத்திருந்த ஆவல் மொத்தமும் தெறித்து விழ, "மித்ரன்” என்றழைக்க, சட்டெனத் திரும்பி ஒரு நம்பமுடியாத வியப்புடன் அவளைப் பார்த்தவனின் விழிகளில் காதலும் ஏக்கமும் கலந்து போட்டியிட்டன.
"அஜூபா" என்றவாறு அவளுக்காக தன் கரங்களை அவன் விரிக்கவும், மேலும் நெருங்கி அவனுடைய கைகளுக்குள் அடங்க முடியாத வண்ணம் தயக்கம் வந்து அவளிடம் ஒட்டிக்கொள்ள, அப்படியே தேங்கி நின்றவளின் நினைவில் அந்த மொட்டை மாடியும் அன்புக்கரசியும் ஒரு நொடி மின்னலாய் தோன்றி மறைய, உடல் மொத்தமும் நடுநடுங்கிப் போனது மாளவிகாவுக்கு.
கூடவே அன்பு, ரஞ்சனி, அவளுடைய நிச்சயதார்த்த ஃபோட்டோக்கள் என அனைத்தும் வரிசையாக நினைவில் வர, 'எப்படி எல்லாவற்றையும் மறக்கச்செய்து அவன் தன் நினைவு முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டான்' என்ற குற்ற உணர்ச்சியில் தலை வலி விண்ணென்று தெறிக்க, பதறி எழுந்து உட்கார்ந்தாள் மாளவிகா.
அது வெறும் கனவுதான் என்பது அவளுக்குப் புரியவே சில நிமிடங்கள் பிடித்தது.
அறை முழுதும் நிரம்பி வழிந்த 'ஏசி'யின் குளிரைத் தாண்டியும் வியர்வை அரும்புகள் முகத்தில் பூக்க, அதைத் துடைத்துக்கொண்டு மூச்சை உள்ளிழுத்து தன்னை அவள் சரிசெய்துகொள்ளவே சில நிமிடங்கள் ஆனது.
அதற்குள், அருகிலிருந்த அவளுடைய கைப்பேசி ஒளிர்ந்தவாறு மெல்லிய ஒலியுடன் இசைத்து ஓய்ந்தும் போனது. அது அலார ஒலி என்று எண்ணி, "அக்கா, அலாரம் அடிக்குது பாரு” என்று முனகியவாறு அவளுக்கு அருகில் படுத்திருந்த சாத்விகா தன் உறக்கத்தைத் தொடர, ‘இருள் கூட விலகாத இந்த அதிகாலைப் பொழுதில் யார் கால் செய்திருப்பார்கள். அன்புவாக இருக்குமோ? நாளை காலை வரை செல் ஃபோன் ஸ்விட்ச்ட் ஆஃப்லதான் இருக்கும்னு சொன்னானே. ஒரு வேளை ரஞ்சனி விஷயம் அவனுக்குத் தெரிந்து போயிருக்குமோ!? பொறுக்க முடியாமல் தன்னை அழைக்கிறானோ' எனப் பலவாறாக எணணியவாறே கைப்பேசியை எடுத்துப்பார்த்தாள் மாளவிகா.
அது 'கவி' என்று காண்பிக்கவும் ஆசுவாசமாக மூச்சு விட்டவள் அப்பொழுதுதான் கவனித்தாள், அவன் சில நிமிடங்களுக்கு முன்பாகவே ஒரு முறை கால் செய்திருக்கிறான் என்பதை.
அப்பொழுது கைப்பேசி இசைத்ததைதான் கனவில் விசில் அடித்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து தலையில் அடித்துக்கொண்டவள், 'இந்த நேரத்தில் என்ன விஷயமாக இருக்கும்?' என்ற கேள்வியுடன் கவியை அழைக்க, "சாரி மாளவிகா. இந்த நேரத்துல உங்களை டிஸ்டர்ப் பண்ணவேண்டியதா போச்சு" என்றான் அவன் சங்கடத்துடன்.
"நாட் அட் ஆல் அண்ணா, சொல்லுங்க ஏதாவது முக்கியமான விஷயமா?" என அவள் கேட்க, "நான் இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் அட்டண்ட் பண்ண டெல்லி போகணும். அது உங்களுக்கு தெரியும் இல்ல?" என அவன் கேட்க, "ஆமாம். தெரியுமே. மிஸ்டர் மித்ரன் அவருக்கு பதில் உங்கள போக சொல்லியிருந்தார் இல்ல?" என அவள் கேட்க, "ஆமாம்... ஆனா இன்னைக்கு ஈவினிங் தங்கச்சிய பொண்ணு பார்க்க வராங்க மாளவிகா. இந்த இடம் முடிஞ்சிடும் போல இருக்கு. அம்மா என்னைக் கட்டாயமா வரச் சொல்லி ஃபோன் பண்ணாங்க. நான் இப்பவே கிளம்பினாதான் சரியா இருக்கும். பாஸ் கிட்ட சொன்னேன். அந்த மீட்டிங்க அவரே அட்டென்ட் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டார். பட் அசிஸ்ட் பண்ண ஒரு பீஏ கூட இருக்கணும்னு சொல்றார். உங்களால அவர் கூட டெல்லி போக முடியுமா? இன்னைக்கு நைட்டே திரும்ப வந்திடலாம்.
எந்த டீடைல் வேணும்னாலும் நான் உங்களுக்கு ஃபோன்ல சொல்றேன். நீங்க ஓகே சொன்னா... நான் ஊருக்குப் போக முடியும்" என ஒரே மூச்சில் இறைஞ்சுதலாகச் சொல்லி முடித்தான் அவன்.
"அண்ணா..” எனத் தயங்கியவள், "அப்பா கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு உங்களுக்கு பதில் சொல்றேன்" என்று சொல்லிவிட்டு, உடனே மூர்த்தியிடம் அந்த தகவலைச் சொல்லி அனுமதியும் கேட்டாள்.
'தங்கையின் திருமண விஷயம்' என ஒருவன் சொல்லும்பொழுது அவரால் மறுக்க இயலவில்லை. "பத்திரமா போயிட்டு வா பாப்பா" என்று மட்டும் சொல்லிவிட்டு வழக்கம் போல அந்த அதிகாலை நேரத்திலேயே கடைக்குக் கிளம்பிப்போய்விட்டார் அவர்.
உடனே கவியை அழைத்துத் தான் அக்னிமித்ரனுடன் டெல்லி செல்வதை அவள் உறுதி செய்ய, "பாஸ்போர்ட் இருக்காம்மா? இல்லனா ஏதாவது ஐடி ப்ரூஃப் ஒண்ணு எடுத்துட்டு ஒரு ஹாஃப் அன் ஹவர்ல ரெடியா இருங்க" என்று சொல்லிவிட்டு அவளுடைய பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அவசரமாக அழைப்பைத் துண்டித்தான் கவி.
அதற்கு மேல் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க அவகாசம் இல்லாமல், அவசர அவசரமாக அவள் தயாராகியிருக்க, சொன்னதுபோல் அரை மணிநேரத்தில் அவளை அழைத்துச் செல்ல ‘கேப்’ வாகனம் வந்தது. கவியும் அதில் உட்கார்ந்து இருக்கவும் அவனை வியப்புடன் பார்த்துக்கொண்டே ஏறி உள்ளே உட்கார்ந்த மாளவிகா, "என்ன கவி...ணா. ஊருக்குப் போகணும்னு சொல்லிட்டு... பிக் அப் பண்ண நீங்க வந்திருக்கீங்க?" என அவனிடம் வெளிப்படையாக கேட்க, "நானும் ஃப்ளைட்லதான்மா போகப்போறேன்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டான் அவன்.
மாளவிகாவின் நினைவு முழுவதும் அன்புவை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்க, மேற்கொண்டு அவனிடம் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. வாகனம் விமான நிலையம் நோக்கிச் சென்றது. அவர்கள் அங்கே போய்ச் சேரவும், சிறிது நேரத்திற்கெல்லாம் அக்னிமித்ரனும் அங்கே வந்தான்.
அவனைப் பார்த்ததும் அவனுக்கு அருகில் ஓடிச் சென்றவன், "தேங்க் யூ பாஸ். நான் கேட்ட உடனே டெல்லி போக ஒத்துக்கிட்டதுக்கு" என்றான் நெகிழ்ச்சியுடன். ஒரு பிரபல அரசியல் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி அது.
உண்மையில், அக்னிமித்ரனே நேரில் சென்றுதான் இந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்கிற எந்த ஒரு அவசியமும் இல்லை. அவன் சார்பாக யாராவது ஒருவர் கலந்துகொண்டால் போதும்.
அங்கே மாற்றி மாற்றி மணிக்கணக்காகச் சிலர் ஆற்று ஆற்று என்று ஆற்றும் உரையை அலுப்பு சலிப்பில்லாமல் பொம்மை போல உட்கார்ந்து கேட்டுவிட்டு அவர்கள் எதிர்பார்க்கும் ஒரு தொகையை நன்கொடையாகக் கொடுத்துவிட்டு எழுந்து வரவேண்டும் என்கிற சூழல்தான்.
எப்பொழுதுமே இது போன்ற நிகழ்ச்சிகள் என்றால் மிகவும் அலர்ஜி அவனுக்கு.
அப்படி இருக்கச் சிறு மறுப்பு கூட காண்பிக்காமல் அவன் ஒப்புக்கொண்டதே அதிசயமாக இருந்தது கவிக்கு.
இதைச் சாக்காக வைத்து மாளவிகாவுடனான ஒரு பயணத்தை அவன் மனது க்ஷணப்பொழுதில் திட்டமிட்டுவிட்டதைக் கவியரசு அறிந்திருக்க வாய்ப்பில்லையே.
கவிக்கு அருகில் நின்றிருந்த மாளவிகாவிடம் பார்வையைச் செலுத்தியவாறு, "இட்ஸ் ஓகே கவி. சிஸ்டர் மேரேஜ்னு சொல்லிடீங்க... அதான்" என்றான் மித்ரன் பெருந்தன்மையாகச் சொல்வதுபோல.
அதையெல்லாம் உணரும் நிலையிலில்லை மாளவிகா. அவள் வேறு எதோ ஒரு உலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவன், "ஓகே கவி, பை...” என கவியிடம் விடைபெற்றுக்கொண்டு எங்கேயோ வெறித்தவண்ணம் நின்றிருந்தவளிடம், "என்ன மாளவிகா. என் கூட வர பிளான்லதான இருக்கீங்க?" எனக் கேட்டான் கிண்டலாக.
இதுதான் அவளுடைய முதல் விமான பயணம். அது அவனுக்கும் தெரியும். அந்தக் குதூகலத்தைக் கூட அனுபவிக்க இயலாமல் அவளைத் தடுப்பது எது? என்ற கேள்வியுடன் அவன் நடக்க, தன் சிந்தனை கலைந்து, "ஹான்... யா மித்ரன்" என்றவள், "பை கவி அண்ணா” என்று சொல்லிவிட்டு அவனுடன் இணைத்து நடந்தாள்.
ஏதோ பயணியர் விமானத்தில் ‘பிசினஸ் கிளாசில்’ செல்லப் போகிறோம் என்ற எண்ணத்தில் அவள் வந்திருக்க, வழக்கமான சில நடைமுறைகளை முடித்து, அவன் அவளை அழைத்துச் சென்றது ஒரு சிறிய ரக தனி நபர் விமானத்திற்கு. அவனுடைய செல்வ நிலை தெரிந்திருந்தும் இதைக் கூட யோசிக்கவில்லையே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள் அவள்.
அவர்களுடைய அலுவலக பால்கனியிலிருந்து விமானம் மேலெழும்புவதைப் பார்க்கும்பொழுதே அவ்வளவு உற்சாகம் அடைந்தவள், அந்த விமானம் மேலே எழும்பும்பொழுதும் சரி அதற்கு பின்பும் சரி எந்த வித மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அருகில் உட்கார்ந்திருப்பது அவனுக்குச் சற்றுச் சலிப்பைக் கொடுக்க, "மாள்வி, இங்க உன்னையும் என்னையும் தவிர வேற யாரும் இல்ல. நீ இப்படி உம்முனு இருந்தா, கூட இருக்கறவனுக்கு எவ்வளவு போரா இருக்கும் சொல்லு?" எனச் சற்று எரிச்சலுடன் கேட்க, "தூங்கிட்டு இருந்தவள எழுப்பி... அவசர அவசரமா கூட்டிட்டு வந்துட்டு... இது வேறயா" என முணுமுணுத்தாள்.
"ப்ச்... தூக்கம் உனக்கு முக்கியமா போச்சா? இப்படி ஃபிளைட்ல ட்ரேவல் பண்றது கொஞ்சம் கூட இன்ட்ரெஸ்டிங்கா இல்லையா உனக்கு?" எனக் கேட்டான் அவன் சலிப்பு குறையாமல்.
"அப்படி இல்ல மித்ரன். எனக்கு ஃபிளைட்ல போகணும். அப்பறம் ஷிப்ல போகணும் இப்படியெல்லாம் நிறைய ஆசை இருக்கு. ஆனா இப்ப அதை என்ஜாய் பண்ற மனநிலைல நான் இல்ல" என்றாள் வருத்தத்துடன்.
அது அவனையும் வருத்த, "ஏன்? என்ன பிரச்சனை?" எனக் கேட்டான் அவன் சற்று இறங்கி வந்து. இவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற கேள்வி எழ, ஒருவேளை, இந்தப் பிரச்சினையைச் சொல்வதால் கொஞ்சமாவது தன் மன அழுத்தம் குறையுமோ? என்ற எண்ணத்தில், "என் ஃபிரென்ட் அன்பு இருக்கான் இல்ல" என்று தொடங்கி அனைத்தையும் அவனிடம் சொன்னவள், "பாவம் மித்ரன் அவன். இந்த விஷயம் தெரிஞ்சா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு புரியல. நாளைக்கு அவனோட மெயின்ஸ் எக்ஸாம் ஆரம்பிக்குது. எப்படி எழுதப்போறானோன்னு பயமா இருக்கு" என்று முடித்தாள்.
அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டவன், "டோன்ட் ஒர்ரி லயன்னஸ் எல்லாம் சரியாயிடும். ஹி வில் ஹாண்டில் திஸ்" என அவளை ஆறுதல் படுத்தும் விதமாகச் சொன்னான் மித்ரன்.
அப்படியும் தெளியாமல், அவள் மனதிலிருந்த அழுத்தத்தை அவளுடைய முகம் படம்போட்டுக் காண்பிக்க, 'ஷி லுக்ஸ் எக்ஸ்ட்ரீம்லி அப்நார்மல். இன்னைக்கு காலத்துல இந்த லவ்... பிரேக் அப்... இதெல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயயம்தான? சம்பந்தப்பட்ட அன்பு கூட இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகியிருக்க மாட்டான். இவ ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் பண்றா?' என்ற பல கேள்விகள் எழுந்தது அவளுடைய அந்த முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அக்னிமித்ரனுக்கு.
சில நிமிட நேரத்துக்குள் ஒரு உயிர் மோசமான முறையில் துடிதுடித்துப் பிரிவதைப் பார்த்தவள் அவள். மன அழுத்தம்... தற்கொலை... இதெல்லாம் அதிகரித்துவரும் இன்றைய பதட்டமான காலகட்டத்தில் எக்காரணம் கொண்டும் தன் சிறு அலட்சியத்தால் மற்றொரு உயிர் பிரியக்கூடாது என்பதுதான் அவளுடைய மிகப்பெரிய கவலையே.
இதையெல்லாம் அவனிடம் சொல்லி விளங்கவைக்கும் நிலையில் அவளும் இல்லை. அவளுடைய மனப் பாதிப்பை உணரும் நிலையில் அவனும் இல்லை.
பல பெண்களின் தொடர்பிலிருந்தவன், இவனே காதல் என்ற உணர்வில் சிக்கி... மாளவிகாவைத் தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள எவ்வளவோ போராடிக்கொண்டிருக்கும்பொழுது, பதின்ம வயது மனநிலையின் மிச்ச சொச்சங்களிலிருந்து இன்னும் வெளிவராத அன்பு போன்றவனின் உணர்வை இவன் புரிந்துகொள்ளாதது ஆச்சரியமே.
ஆனால் அன்பு உள்ளுக்குள் துகள்களாக உடைந்து நொறுங்கிப் போயிருப்பான் என்பதை ஒரு தோழியாகப் புரிந்து வைத்திருப்பதால் அவள் அதிகம் உணர்ச்சி வசப்படுவதும் இயல்பே.
அதை உணராமல் போனாலும், வேறு எதையெதையோ பேசி அவள் மனதைத் திசை திருப்ப முயல அதற்குள் டெல்லி விமான நிலையத்தை அடைந்திருந்தனர் இருவரும்.
அங்கே அவர்களுக்காகத் தயாராக இருந்த கார் மூலம் நேராக அந்த சந்திப்புக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து சேர, அதன் பிறகு அந்த மீட்டிங்... அது முடியவும் அவனுடைய சில நண்பர்களுடன் பேசிக்கொண்டே மதிய உணவு என அவர்களுடைய நேரம் ரக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது. ஒருவாறாக அனைத்தும் முடித்து அங்கிருந்து கிளம்பினார்கள் இருவரும்.
அவனைப் போன்றே செல்வத்தில் கொழுத்தவர்கள் பலரும் நிறைந்திருந்த அந்த சபையில் அவன் தனித்து அடையாளம் காணப்படுவதை நன்றாகவே உணர்ந்தாள் மாளவிகா.
அவனுடைய பீஏ என்கிற எல்லைக்குள் அவள் நின்றுகொள்ள, அதற்குமேல் எதையும் எதிர்பார்க்காதது போலவே நடந்து கொண்டான் மித்ரனும். அதுவே சிறு நிம்மதியைக் கொடுத்தது அவளுக்கு.
அதன் பின் அவர்களுக்காகக் காத்திருந்த வாகனத்தில் இருவரும் கிளம்ப, அதுவோ விமான நிலையம் நோக்கிப் போகாமல், 'லால் கிலா' என்று அழைக்கப்படும் செங்கோட்டையை நோக்கிப் பயணித்தது.
அதன் முக்கிய வாயிலில் அவர்களுடைய வாகனம் நிற்கவும், முதலில் மித்ரன் இறங்க, வியப்புடன் விழி விரிய அந்தக் கோட்டையைப் பார்த்தபடி அவனுக்கு அருகில் வந்து நின்றாள் மாளவிகா.
அதே நேரம் வேக எட்டுக்களுடன் அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான் அன்பு மேலும் அவளை வியப்பில் ஆழ்த்தி.
மகிழ்ச்சியும் வியப்பும் கலந்து அவளுடைய விழிகள் நன்றியுடன் மித்ரனுடைய விழிகளைச் சந்தித்தன.