top of page

En Manathai Aala Vaa 29.

Updated: Oct 21, 2022

மித்ர-விகா-29

அக்னிமித்ரன் செய்துவைத்திருந்த செயலுக்கு, அவனைக் கடித்து குதறும் மனநிலையில்தான் இருந்தாள் மாளவிகா.


ஆனால் அவன் தனிமையில் போய் கைப்பேசியில் வந்த அழைப்பைப் பேசிவிட்டுத் திரும்பிய அந்த அரை மணிநேரத்தில் மோனாவுடன் பேசிய பிறகு அவள் கோபம் சற்று மட்டுப்பட்டு அவளுடைய மன இறுக்கம் கொஞ்சம் தளர்ந்திருந்தது.


அவளுடைய கோபம் குறைந்துதான் இருந்ததே தவிர முழுவதுமாக விலகவில்லை அவ்வளவுதான்.


அவன் அந்த அழைப்பைப் பேசி முடித்துவிட்டு வந்தப் பிறகு, ஜோசப் அவனை அணைத்துக்கொண்டு, "பரவாயில்ல. நல்லாவே டேன்ஸ் பண்றீங்க மித்ரன். நான் இந்த அளவுக்கு எக்ஸ்பெக்ட் பண்ணல. பட் உங்க பீ.ஏ கொஞ்சம் சுமாராதான் ஆடறாங்க" என்றார் வெகு தீவிரமாக.


"ஆஹான்... பக்கா டான்ஸ் மாஸ்டர்ன்னு நிரூபிக்கறீங்க மாஸ்டர்ஜீ. தேங்க்ஸ்" என அவன் அவருக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்க, , தான் செய்து வைத்திருந்த செயலுக்கு அவனை நெருங்கினால் சேதாரம் நிச்சயம் என்பதை உணர்ந்து வேலையில் மும்மரமாக இருப்பதுபோல் தன்னைக் காட்டிக்கொண்ட கதிர் மித்ரனை நெருங்கவே இல்லை.


அதற்குமேல் பொறுமையின்றி, "மாஸ்டர்! சார் கூட கொஞ்சம் செல்ஃபீ எடுத்துக்கறோம் மாஸ்டர்! ப்ளீஸ்" எனத் தயக்கத்துடன் எல்லோரும் அவர்களைச் சூழ்ந்து கொள்ள, அதன்பின் 'செல்ஃபீ' 'ஆட்டோக்ராஃப்' என அனைத்திலிருந்தும் அவன் மீண்டுவருவதற்கு மேலும் சில நிமிடங்கள் பிடித்தன.


நடுநடுவே அவளுடைய முகத்தைதான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தான் மித்ரன்.


சலனமற்றிருந்த அவள் முகம் அவனுக்குக் குழப்பத்தைக் கொடுக்க, 'இது புயலுக்குப் பின் வரும் அமைதியா இல்லை புயலுக்கு முன் ஏற்படும் அமைதியா' என ஒரு முடிவுக்கு வர இயலாமல் தவித்தவன், ஒருவழியாக எல்லோரிடமிருந்தும் தப்பித்து அவளை நெருங்கி வந்து, அவளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மோனாவிடம், "பை மோனா! முடிஞ்சா ஃபினாலே செலிப்ரஷன்ஸ் அப்ப மீட் பண்ணலாம்" என்று சொல்லிவிட்டு, அதற்குள் தங்கள் வேலைகளில் மூழ்கிப்போயிருந்த கதிரிடமும் ஜோசப்பிடமும் தூரத்திலிருந்தே கைக் காண்பித்து விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் மாளவிகாவுடன்.


காரில் அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தவள், அவனுடன் எதுவும் பேசப் பிடிக்காமல் சாலையை வெறிக்கத் தொடங்கினாள். மோனா பேசிக்கொண்டிருந்த விஷயங்கள் அவளுடைய மனதிற்குள்ளே சுழன்றுகொண்டே இருந்தன.


மோனாவுடன் பேசிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டு அக்னிமித்ரன் அங்கிருந்து சென்றதும், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதிகமாகச் சலுகை எடுத்துக்கொண்டு அவன் செய்த செயலால் அவனிடம் அளவுகடந்த கோபத்திலிருந்தவளுக்கு, அந்தக் கோபத்தை மோனாவிடம் காண்பித்து விடுவோமோ என்று கொஞ்சம் பயமாகதான் இருந்தது.


வெகுவாகத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, வரவழைக்கப்பட்ட நிதானத்துடன் மாளவிகா அவளைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைத்தாள்.


பதிலுக்கு, விரிந்த புன்னகையுடன் வெகு இயல்பாக அவளுடைய கையைப் பற்றி, "வாங்க அங்க உட்கார்ந்து பேசுவோம்" என்ற மோனா, அங்கே போடப்பட்டிருந்த இருக்கை நோக்கி அவளை அழைத்துப்போக, இருவருமாக அங்கே போய் உட்கார்ந்து கொண்டார்கள்.


என்ன பேசுவது என்பது புரியாமல் மாளவிகா திணற, தூரத்தில் யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த மித்ரனைப் பார்த்துக்கொண்டே, "மிஸ்டர் அக்னிமித்ரன் என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு பர்ஃபக்ட் ஜென்டில் மேன்” என்றாள் மோனா.


'ஜென்டில் மேன்... ம்கும்... யாரது...' என மனதிற்குள் நொடித்துக் கொண்டாலும், 'ம்' என்றாள் மாளவிகா.


"என்னை இந்த இண்டஸ்ட்ரிக்குக் கொண்டு வந்தது கௌதம்தான். அப்ப எனக்கு வெறும் செவன்டீன் இயர்ஸ்தான் தெரியுமா?” என்றாள் மோனா.


மித்ரனின் விருப்பம் இவளிடம்தான் இருக்கிறது என்பதைப் புரிந்து வைத்திருந்ததால், மாளவிகா அவனுடைய சரிபாதி என்கிற உறுதியில்தான் தன் மனதிலிருப்பதை வெளிப்படையாக அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் அதை உணராமல், 'இவ ஏன் இதையெல்லாம் இப்ப நம்ம கிட்ட சொல்லிட்டு இருக்கா?' என்ற கேள்விதான் எழுந்தது மாளவிகாவுக்கு.


“ஒரு பேஷன்ல, ஃபேன்டஸில ஏகப்பட்ட ட்ரீம்ஸோட சினிமால நடிக்க வந்தேன். ஆரம்பத்துல மார்க்கெட் பிக் அப் ஆகிட்டு இருந்த சமயம், ஒரு கான்ட்ராக்ட்ல சிக்க வெச்சு, தொடர்ந்து மூணு படம் கமிட் பண்ணி வேற படத்துல நடிக்க விடாம செஞ்சு என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணான்.


என்னோட ஃபேமலில இருக்கிறவங்களுக்கு பணம் மட்டும்தான் முக்கியம். யாருக்கும் என்னைப் பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்ல. இராத்திரி பகல்னு இல்லாம ஷூட்டிங் ட்ராவெலிங்னு ஓடிட்டே இருந்தேன். கூடவே அவனோட பாலியல் ரீதியான தொல்லைகள் வேற. ஒரு ஸ்டேஜ்ல மனசுவிட்டு பேசக்கூட ஆள் இல்லாம டிப்ரஷன் அதிகமாகிப்போய் சூசைட் பண்ணிக்க ட்ரை பண்ணேன்”


அவள் அதை ஒரு உணர்வற்ற குரலில் வெகு சாதாரணமாகச் சொல்லவும் திக்கென்று ஆனது மாளவிகாவுக்கு. இதுபோன்ற விஷயங்கள் அவளை எப்பொழுதுமே பலகீனப்படுத்திவிடும். "ஐயோ... மை காட்" என அவள் பதறவும், "அட அதுக்காக நீங்க இப்ப ஏன் டென்சன் ஆகறீங்க? அதான் அந்த பீஸ்ட் என்னைக் காப்பாத்திட்டானே” என்று சொல்லிச் சிரித்தாள் மோனா.


அந்தச் சிரிப்புக்குப் பின் இருக்கும் அவளுடைய வலியை நன்றாகவே மாளவிகாவால் புரிந்துகொள்ள முடிந்தது. 'பொழுதுபோவதற்காக அவள் ஏதோ பேசுகிறாள். கேட்டு வைப்போம்' என்கிற ரீதியில் ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் கேட்கத் தொடங்கியவள், 'ஒருத்தி தன் மன வேதனைகளைத் தன்னுடன் பகிர்கிறாள் என்றால் நாம் அதை அலட்சியப் படுத்தக்கூடாது' என அக்கறையுடன் அவள் சொல்வதைத் தொடர்ந்து கவனிக்கத் தொடங்கினாள்.


"அதுக்கு பிறகு, கிட்டத்தட்ட என்னைப் பிணைக் கைதி மாதிரி அவனோட முழுக்கட்டுப்பாட்டுல வெச்சிருந்தான், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாதுன்னு சொல்றாங்களே அந்த மாதிரி. ஏன்னா நான் மறுபடியும் சூசைட்க்கு ட்ரை பண்ணி அது சக்ஸஸ் ஆகிட்டா அவன் ப்ரொட்யூஸ் பண்ண மூவிய அவனால முடிச்சு ரிலீஸ் பண்ண முடியாதில்ல அதான்.


அதுக்குப் பிறகு அந்த மூணு படத்துல ரெண்டு படம் நல்ல ஹிட் கொடுத்தது. மார்க்கெட் பிக்கப் ஆச்சு. ரெண்டு வருஷம் ஓடி ஓடி சம்பாதிச்சேன்.


வீட்டுல இருந்தவங்க பேராசைல தப்புத்தப்பா இன்வெஸ்ட் பண்ணி, நிறைய லாஸும் ஆச்சு. நிறைய கடன் ஆச்சு. நான் போட்ட உழைப்பெல்லாம் பலனில்லாம போச்சு.


அதை ஓவர் கம் பண்ண ஹெல்ப் கேட்டு என் மம்மி மறுபடியும் அவன்கிட்டதான் போய் நின்னாங்க. மறுபடியும் என்னை அவனோட கான்ட்ராக்ட்ல சிக்க வெச்சான் கௌதம்.


மம்மி சொன்னதை நம்பி கேரெக்டர் ரோல்னுதான் காண்ட்ராக்ட் சைன் பண்ணேன். ஆனா கேவலமா ஐட்டம் டான்ஸ் ஆட சொல்லி என்னை ஃபோர்ஸ் பண்ணான்.


மறுபடியும் டிப்ரஷன் ஸ்டேட். இந்த நிலமைலதான், ஃப்யூ மந்ஸ் பேக், ஒரு பார்ட்டில அமித்தை மீட் பண்ணேன். அதுக்கு முன்னாலயும் அமித்தை நிறைய பார்ட்டிஸ்ல பப்ளிக் ஃபங்ஷன்ஸ்ல எல்லாம் பார்த்திருக்கேன்.


கௌதம் அவரோட ரிலேட்டிவ்தான. அவங்க ரெண்டு பேருக்கும் டேர்ம்ஸ் சரியில்லைன்னு தெரியும். அதனால அவனுக்குப் பயந்துட்டு எப்பவுமே அமித்கிட்ட பேச நான் முயற்சி பண்ணாதே இல்ல. ஒரு ஹை...யோட கிராஸ் பண்ணி போயிடுவோம்.


ஏன்னா நான் எப்பவும் கௌதமோட சர்வயலன்ஸ்ல இருப்பேன். அமித் அவரோட கேள் ஃப்ரெண்டோட இருப்பார். அதுக்குமேல பேச சான்ஸ் இருக்காது. ஆனா அன்னைக்கு அந்த பார்ட்டிக்கு அவர் தனியா வந்திருந்தார்.


டிப்ரஷன்ல நான் கொஞ்சம் அதிகமா அன்னைக்கு ட்ரிங்க் பண்ணிட்டேன். அதை யூஸ் பண்ணி ஒரு க்ரூப் என்கிட்ட மிஸ் பிஹாவ் பண்ண பார்த்தாங்க.


அதை கவனிச்சிட்டு பேலன்ஸ் இல்லாம தடுமாறிட்டு இருந்த என்னைத் தாங்கிப் பிடிச்சு அமித்தான் அங்க இருந்து தனியா கூட்டிட்டுப் போனார். அவரோட ஹோல்ட்ல ஒரு கண்ணியம் இருந்துது.


அந்தச் சூழ்நிலையை அவர் கொஞ்சம் கூட வேற விதமா யூஸ் பண்ண நினைக்கல மாளவிகா! எங்க இண்டஸ்ட்ரில அந்த மாதிரி ஆட்களைப் பார்க்கறது ரொம்ப அதிசயம். அந்த நிலைமையிலயும் இவரை நம்பலாம்னுதான் தோணிச்சு. அப்பதான் என் பிரச்சனை எல்லாத்தையும் அவர்கிட்ட சொல்லி அழுதேன்.


என்னை ஹர்ட் பண்ணாம, அலட்சிய படுத்தாம எல்லாத்தையும் கேட்டுக்கிட்டார். இதோ இப்ப நீங்க கேட்டுட்டு இருக்கீங்க இல்ல, இந்த மாதிரி" என் அவள் சொல்லும்போது மாளவிகாவின் முகம் மலர்ந்தது. அதை உணர்ந்து புன்னகைத்தவள் “தென் பத்திரமா என்னை எங்க வீட்டுல கொண்டுபோய் விட்டார். ஏதோ ஒரு பரிதாபத்துல நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கிட்டார்னுதான் நினைச்சேன். ஆனா அதுக்குப் பிறகு அமித் எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணார் மாளவிகா. அவரோட சப்போர்ட்லதான் அப்படி ஒரு பிரஸ் மீட்டை என்னால கொடுக்க முடிஞ்சது. நான் மட்டும் அப்படி பண்ணலன்னா அந்த கான்ட்ராக்ட்ஸ் எல்லாத்தையும் வெச்சு கௌதம் என்னைத் தொல்லைப் பண்ணிட்டே இருந்திருப்பான்.


இந்த டான்ஸ் ஷோல ஒர்க் பண்ண ஆரம்பிச்ச பிறகு எனக்கு சினிமாலையும் நல்ல சான்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு. இப்ப ஓரளவுக்கு என் பிரச்னைகள்ல இருந்து வெளியில வந்திருக்கேன். பீஸ்ஃபுல்லா இருக்கேன்.


என்னாலல்லாம், அக்னிமித்ரன் மாதிரி ஒருத்தரைத் தூர இருந்துதான் பார்க்க முடியும் மாளவிகா. இவரோட லைஃப்ல ஒரு பார்ட்டா... லைப் பார்ட்னரா... இருக்கறதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும்.


அதைவிட... அவரே ஒரு பெண்ணைப் பார்த்து... அட்மயர் ஆகி, 'இவதான் என் லைஃப்ன்னு' அவரை நினைக்க வைக்கறதெல்லாம் வேற லெவல் அதிர்ஷ்டம்" என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லிக்கொண்டேபோனவள், “அப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி..” என அவள் மேற்கொண்டு ‘நீங்கதான்’ என்று சொல்லவர, மித்ரன் அங்கே வரவும், அங்கே உண்டான சலசலப்பில் அந்தப் பேச்சு அப்படியே நின்றுபோனது.


'நீதான்' என அவள் சொல்லாமல் விட்ட வார்த்தையை மாளவிகாவின் ஆழ்மனம் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, 'காதல்... திருமணம்... இதுபோன்ற வார்த்தைகளெல்லாம் அக்னிமித்ரனின் அகராதியில் கூட இருக்கக்கூடுமா?' என்ற கேள்விதான் முதலில் எழுந்தது அவளுக்கு.


சற்றுமுன் மோனா குறிப்பிட்ட அந்தக் கண்ணியம் என்னும் வார்த்தையின் எல்லையை, அவளைப் பொறுத்தவரைக்கும் தகர்த்திருந்த அவனது அணைப்பை... அவனுடைய கண்கள் காண்பித்த உணர்ச்சியை, எந்த வகைக்குள் அடக்குவது?


அப்படியே அதைக் காதல் என்றே கொண்டாலும், பல பெண்களை தன் இச்சைக்காகப் பயன்படுத்திக் கொண்டவனை எப்படி தன் வாழ்க்கைக்குள் அனுமதிப்பது?


அடிப்படையே இங்கே ஆட்டம் கண்டிருக்க, தன் மனம் போகும் போக்கை எண்ணி பயமும் அசூயையும் உண்டாக... விழிகளை மூடிக்கொண்டாள் மாளவிகா. அவளுடைய இதழ்களை இலக்காக்கி அவனது விழிகள் கணை தொடுத்த, நொடிக்கும் குறைவான தருணம் நினைவில் அவர் அவளது இறுகியது.


அவளுடைய இந்த மௌனமும் பாராமுகமும் கொஞ்சம் அதிகமாகவே அவனைப் பாதிக்க, அது கொடுத்தக் குற்றவுணர்ச்சியில், "இப்ப என்ன நடந்து போச்சுண்ணு இப்படி முகத்தைத் தூக்கி வெச்சுட்டு இருக்க” என்று சிடுசிடுத்தான் மித்ரன்.


அதில், கொஞ்சம் மட்டுப்பட்டிருந்த அவளுடைய கோபம் சுறுசுறுவென்று ஏற அவனைத் தீப் பார்வை பார்த்தாள் மாளவிகா. "ப்ச்... இப்ப எதுக்கு இப்படி காளி ஆத்தா மாதிரி முண்டக... கண்ணை உருட்டற” எனக் கிண்டல் இழையோடச் சொன்னவன், "இது ஒரு சாதாரண விஷயம். நீ இப்படி இருந்தா சொசைட்டியோட ஒட்டாம போயிடுவ" என்று வேறு சொல்லி அவளை மேலும் கடுப்பேற்றினான்.


"என்ன மித்ரன். செய்யறதெல்லாம் செஞ்சிட்டு... நீங்க ரொம்ப நல்லவர் மாதிரியும்... நான் என்னவோ தப்பு செஞ்ச மாதிரியும் பேசறீங்க” என்றாள் சீற்றமாக.


"அப்படி என்ன செய்யக் கூடாததை செஞ்சிட்டேன். டான்ஸ் பண்ணது ஒரு குத்தமா. நீ இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணாதன்னு சொன்னா... அது தப்பா?" என அவன் வெகு சாதாரணமாகக் கேட்க, "ஆமாம் தப்புதான்” என தன் பிடியிலேயே நின்றாள் மாளவிகா.


"ஏன் நீ அன்பு கூட... அவ்வளவு பெரிய க்ரௌட்ல டான்ஸ் பண்ணியே அப்ப தோணலியா உனக்கு இது" என்றான் குதர்க்கமாக.


'அதனால்தானே இவனுடைய பார்வையில் விழுந்து தொலைத்தோம்' என்ற எண்ணம் வேதனையை கொடுக்க, சில நொடிகள் அவன் முகத்தையே ஆழ்ந்து பார்த்தவள், " உண்மையிலேயே அது ரொம்ப பெரிய தப்புதான். ச்ச... ஏன்டா அன்னைக்கு டான்ஸ் பண்ணோம்னு நான் ஃபீல் பண்ணாத நாளே இல்ல" என்றாள் நடுங்கும் குரலில்.


அவள் சொன்ன விதம் சுருக்கென்று மனதைத் தைத்தாலும் அவளுடைய முகத்திலும் குரலில் வெளிப்பட்ட வருத்தமும் கசப்பும் அவனைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்க, "சரி... ஓகே... சாரி... கூல் டவ்ன்" என இறங்கி வந்தான் அவன்.


அதற்கும் விட்டுக்கொடுக்காமல், "என்ன அதுக்குள்ள சரண்டர் ஆகி சாரி கேட்டுடீங்க. நீங்க செஞ்சது தப்புதான்னு தெரிஞ்சிபோச்சா" என அவள் கடுப்புடன் கேட்க, 'இவ அடங்கவே மாட்டாளா?' என்றுதான் தோன்றியது மித்ரனுக்கு.


"நான் என்ன தப்பு பண்ணேன்?. இப்ப கூட நான் அதை தப்புனு சொல்லல. நீ அக்சப்ட் பண்ணிட்டுதான ஆட ஸ்டேஜ் ஏறின” என்றவன், "நான் சாரி கேட்டது, கோவமா உன்கிட்ட பேசினத்துக்கு மட்டும்தான்" என்றான் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்காமல், திமிருடன்.


"அது வெறும் தீம் மியூசிக்தான. அதுக்கு இப்படித்தான் இன்டிமேட்டா ஆடணும்னு ஏதாவது இருக்கா? இன்னும் கொஞ்சம் கண்ணியமா ஆடியிருக்கலாமே. உங்க இஷ்டத்துக்கு என்னை டச் பண்ற தைரியம் உங்களுக்கு எப்படி வந்துது. என்னை என்னன்னு நினைசீங்க? நான் மாளவிகா! உங்க இந்தப் பணத்தையும் உங்களோட இந்த செலிபிரிட்டி அந்தஸ்தையும் பார்த்துட்டு உங்கப் பின்னால வரவன்னு நினைசீங்களா" என அவள் கடித்தப் பற்களுக்கு இடையே வார்த்தைகளைச் சிதற அடிக்க, சடன் பிரேக் அடித்து வாகனத்தை அப்படியே ஓரமாக நிறுத்தியவன், "சாதாரண டச்சிங்கெல்லாம் நீ ஓவரா ரியாக்ட் பண்ற. வேணாம் மாளவிகா. ஏதோ என்னை மீறி நடந்துபோச்சு. இதுக்குமேல உன்னை ஹர்ட் பண்ண வேணாம்னு பாக்கறேன். இதோட விட்று” என்றான் மித்ரன் அடக்கப்பட்ட கோபத்துடன்.

Recent Posts

See All
En Manathai Aala Vaa - 48

மித்ர-விகா 48 சில தினங்களுக்குப் பின் அலுவலகம் வந்திருந்தாள் மாளவிகா மித்ரனுடன். அவளுடைய பேச்சுக்கள் கொஞ்சம் குறைந்தது போலவே தோன்றியது....

 
 
 
En Manathai Aala 50 (Final)

மித்ர-விகா-50 (இறுதி அத்தியாயம்) அவளுக்காக விட்டுக் கொடுத்துப் போகிறான் என்கிற ஒரே காரணத்துக்காக அவள் இஷ்டப்படி தன்னை ஆட்டிப் படைக்கிறாள்...

 
 
 
En Manathai Aala Vaa 47

மித்ர-விகா-47 அன்று இரவே, அவர்களுடைய குடும்ப மருத்துவர் ஆனந்தை அழைத்து அவரை நேரில் சந்திக்க வருவதாகச் சொன்னவன் சில நிமிடங்களிலேயே...

 
 
 

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
chittisunilkumar
Oct 21, 2022

Enda agni panradu ellam pannitu sadaranam nu solra ippo ava kitta vamga pora nalla teriidu

Like
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page