top of page

En Manathai Aala Vaa-28

Updated: Oct 20, 2022

மித்ர-விகா-28


அதுவரை தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தவன் சட்டென மித்ரனைப் பார்த்து நக்கலாகச் சிரித்து வைத்தான் கதிர். அதன் காரணம் புரியாமல் மித்ரன் நண்பனைப் முறைக்க, "என்னடா மாமா, லவுசா" எனக் கிண்டலாகக் கேட்டு, "அதெல்லாம் உன் டிசைன்லயே கிடையாதே" என்று வேறு இன்னும் அதிக நக்கலாகச் சொல்ல, அவனுடைய முகம் லேசாகச் சிவந்து போய் வெட்கம் வேறு எட்டிப்பார்த்துத் தொலைத்தது மித்ரனுக்கு.


"உன்னை கழுவி ஊத்திட்டு இருக்கேன். நீ வெக்கபடறியா? ச்சீ. கருமம்டா... இதெல்லாம் உனக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகல" என்றான் கதிர் உண்மையான வியப்புடன்.


"மச்சான் கலாய்க்காத. கடுப்புல போட்டுத் தள்ளிடப்போறேன்" என்றான் உடனே காரமாக. உல்லாசமாக விசில் அடித்து, "அப்ப சீக்கிரமே கல்யாணம்னு சொல்லு" என்று வேறு கதிர் உண்மையான எதிர்பார்ப்புடன் சொல்ல, "நடந்தா நல்லாதான் இருக்கும். ஆனா இவளை எப்படி கரெக்ட் பண்றதுன்னே சத்தியமா தெரியலடா மச்சான்" எனப் பாவமாக மித்ரன் சொல்லவும், "உன்னால... ஒரு பொண்ண... கரெக்ட் பண்ண முடியல. நான் இதை நம்பனும்" என வாய் பிளந்தான் கதிர்.


"நீ நம்பலன்னாலும் அதுதான் நிஜம்" என்றவனால் அவளைப் பார்த்தபடி பெருமூச்சுதான் விடமுடிந்தது.


நண்பனின் மனநிலையை ஓரளவுக்கு உணர்ந்தவனாக, "வரோம்ன்னு நீ ப்ளுரல்ல சொன்னப்ப யாரோ பிக் அப்... ட்ராப்... எஸ்கேப்பதான் தள்ளிட்டு வரியோன்னு நினைச்சேன். உன் பிஏன்னு சொன்னதும்... கவி எப்ப பொண்ணா மாறினான்னுதான் தோணிச்சு. பட் நீ இவ்வளவு பொங்கறத பார்த்தால் உன் ஆளு சரியான ராணி தேனி பரம்பரை போலிருக்கே" எனத் தீவிரமாகச் சொன்ன கதிர், "சீக்கிரமா கல்யாணம், குடும்பம் பிள்ளைகுட்டின்னு நீ செட்டில் ஆனா சந்தோஷப்படற முதல் ஆள் நான்தான் மாமே" என்றான் மனதிலிருந்து.


அப்பொழுது அங்கே வந்த மோனா மித்ரனைப் பார்த்ததும், அவனை நோக்கி வந்து, அவனுக்கு அருகில் குனிந்து, ஒரு நட்புமுறை அணைப்புடன்,"ஹை அமித், வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்" என உண்மையாகவே வியந்தாள்.


அனிச்சையாக அவன் பார்வை மாளவிகாவிடம் செல்ல, நல்ல வேளையாக அந்தக் காட்சியைப் பார்த்து வைக்காமல் பக்கத்திலிருந்தப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தாள் அவனுடைய அழகான இராட்சசி.


"ஹேய்... மோனா மேம் செட்டுக்கு வந்தாச்சு. ஷூட்டிங்க ஸ்டார்ட் பண்ணிடுவாங்கன்னு நினைக்கறேன்" என அவளுடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் மற்றொருத்திச் சொல்ல, மாளவிகாவின் பார்வை மேடையை நோக்கிச் சென்றது. மித்ரனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் மோனா.


அவளுடைய பேக்லஸ் பிளவ்ஸும், அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு விலை உயர்ந்த டிசைனர் புடவையை அவள் கட்டியிருந்த லட்சணமும், அவ்வளவு கடுப்பை ஏற்படுத்தியது மாளவிகாவுக்கு.


புடவையைக் கூட எப்படி கவர்ச்சியாக உடுத்துவது என்பதை இவர்களைப் போன்றோரைப் பார்த்துத்தான் பலர் கற்றுக்கொள்கிறார்களோ என்றுதான் தோன்றியது அவளுக்கு.


அருகிலிருந்த பெண்களின் உடைகளும் கிட்டத்தட்ட இப்படிதான் இருந்தன. புலியைப் பார்த்துச் சூடுபோட்டுக்கொள்ளும் பூனைகள் என்ற எண்ணத்தில், அவர்களைப் பார்த்து பரிதாபம்தான் உண்டானது அவளுக்கு.


பெண்களைக் காட்சிப் பொருளாக சித்தரிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் கூட பார்க்கப் பிடிக்காது. நேரில் பார்க்க இன்னும் அதிகமாகவே பிடிக்கவில்லை.


மித்ரனின் பார்வை சென்ற திசையில் பார்த்துச் சிறு வியப்பு முகத்தில் தோன்ற, "ஹை" என்றாள் மோனா மாளவிகாவை நோக்கி.


பதிலுக்கு 'ஹை' என்று புன்னகைத்தவள், எப்பொழுது இங்கிருந்து கிளம்புவான் அவன் என்பது போல மித்ரனைப் பார்த்தாள்.


அவளுடைய பார்வையின் அர்த்தம் புரிந்தோ என்னவோ, அந்த இருக்கையிலிருந்து எழுந்தவன், "கிளம்பறேன் கதிர். நீ கூப்பிட்டன்னு பார்த்துட்டு இருந்த வேலையைப் பாதியிலயே விட்டுட்டு வந்தோம்" என மறுபடியும் அவன் பன்மையில் சொல்ல, கதிர் அவனைக் குறுகுறுவெனப் பார்த்த பார்வையில், அதன் அர்த்தத்தை உள்வாங்கி மோனா வேறு சிரித்து வைக்க, "வேணாம் சொல்லிட்டேன்" என சுட்டு விரல் காட்டி இருவரையும் எச்சரித்தவனின் குரலிலும் முகத்திலும் மென்மையும் வெட்கமும் மட்டுமே.


ஒருவாறாக அவன் அந்த மேடையிலிருந்து இறங்கவும், சரியாக அங்கே வந்து சேர்ந்தார் அந்த நிகழ்ச்சியின் நடன ஒருங்கிணைப்பாளர் ஜோசப்வருண்.


நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதை முன்னுக்குக் கொண்டுவர அவன் போராடிக் கொண்டிருந்த பொழுதிலிருந்து அவனுடன் இருப்பவர். வயதில் மூத்தவர்.


நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனைப் பார்க்கவும், "ஓஓஓஓய் மித்ரன், எப்படி இருக்கீங்க" என இன்முகமாய் அவனை எதிர்கொண்டார்.


"நல்லா இருக்கேன் மாஸ்டர். நீங்க எப்படி இருக்கீங்க?" என இயல்பான நல விசாரிப்புகளுடன், அந்த நிகழ்ச்சியின் வெற்றியைக் குறித்த மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டு சட்டென மித்ரன் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, "என்ன யங் மேன். எவ்வளவு நாளைக்கு என்னை இப்படியே ஏமாத்தறதா ஐடியா" என அவனைத் தடுத்தார் அவர்.


அவன் அவரை ஒரு புரியாத பார்வை பார்த்து வைக்க, "இந்த சீசன் டீஆர்பீ தொடர்ந்து நம்பர் ஒன்ல வந்தா எனக்காக ஒரு டான்ஸ் ஆடறதா நீங்க ப்ராமிஸ் பண்ணியிருக்கீங்க?" என அவர் தீவிரமாகச் சொல்லவும், நாக்கைக் கடித்தவன், "அப்படியா சொன்னேன். எனக்கு ஞாபகம் இல்லையே" என அவன் நழுவ முற்பட, "செல்லாது... செல்லாது... அப்பறம் நான் வீடியோ ஆதாரமெல்லாம் காட்ட வேண்டியதா இருக்கும்" எனத் தப்பிக்க வழியின்றி அவர் அவனை மடக்க, "நீ சொல்லு கதிர். நான் எப்பவாவது அப்படி சொல்லியிருக்கேனா என்ன?" என அவன் நண்பனை வேறு சாட்சிக்கு அழைக்க, அந்தோ பரிதாபம். 'ஆமாம்' என்ற ஒற்றை வார்த்தையில் அவனும் இந்த விஷயத்தில் மித்ரனுக்குப் பகைவனாகிப் போனான்.


"டேய் நான் ப்ரிப்பேர்டா வரலடா" என அவன் கழன்றுக் கொள்ள முயல, இதை என்ன டெலிகாஸ்ட் பண்ணவா போறோம். ஜஸ்ட் ஃபன்னுக்குதான. நம்ம மாஸ்டரோட சந்தோஷத்துக்கு. சும்மா கைய கால ஆட்டுங்க சார்" என அவனை வசமாகச் சிக்க வைத்துவிட்டு, ஜோசப்பைப் பார்த்துக் கண்ணடித்த கதிர், அவன் ஒப்புக்கொள்வதற்கு முன்பாகவே தன்னுடைய சட்டையில் மாட்டியிருந்த மைக்கை உயிர்ப்பித்து, "ஹை கைஸ். நம்ம மித்ரன் சார் இன்னைக்கு நமக்காக டான்ஸ் பண்ண போறார். ப்ளீஸ் ஆல் கம் டு த ஸ்டேஜ்" எனச் சொல்லிவிட்டான்.


வியப்பு தாங்காமல் 'இவன் டான்ஸ் கூட ஆடுவானா?' என்ற எண்ணத்தில் 'ஆ'வென அவன் முகத்தைப் பார்த்த மாளவிகா, 'அப்படியா?' என விழிகளால் கேட்க, நண்பனைக் கண்காண்பித்து முறைத்தான் மித்ரன்.


அந்த விழிகளின் உரையாடலைக் கவனித்தவாறே, "ஹு... ஹூ" எனக் குரல்கொடுத்த மோனா, "நம்ம அமித்தோட டேன்சிங் பார்ட்னர் யாரு?" என அடுத்த வம்பை இழுத்துவிட, கதிரை அவன் நன்றாக முறைக்கவும், அதற்கெல்லாம் அடங்குவேனா என்பது போல அவனைப் பார்த்தவன், அவனுடைய உதவியாளரை அழைத்து, "பேப்பர் எடுத்துட்டு வந்து இங்க இருக்கிற எல்லா கேர்ல்ஸ் கிட்டயும் கொடுங்க. எல்லாரோட பேரையும் எழுதிக் குலுக்கல் முறைல தேர்ந்தெடுக்கலாம். யார் அந்த அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சிடும்" என்று அவன் சொல்ல, கடுப்பின் உச்சிக்கே போனான் மித்ரன்.


எல்லோரும் வந்து அவர்களைச் சூழ்ந்துகொள்ள, மாளவிகாவும் எழுந்து அங்கே வந்தாள். "கெட் மீ ஒன். நானும் இதுல கலந்துக்கறேன்" என மோனா சொல்ல, மோனாவுடன் சேர்த்து அங்கே இருந்த பெண் போட்டியாளர்கள் எல்லோருக்கும் ஒரு காகித துண்டு கொடுக்கப்பட, மாளவிகாவிடமும் ஒன்றை நீட்டினார் அந்த உதவி இயக்குனர்.


"நோ... நோ..” என அவள் மறுத்து ஏதோ சொல்லவர, "சும்மா போடுங்க மாளவிகா. ஒரு ஃபன்னுக்காகதான" என்றாள் அதுவரை அவளுடன் பேசிக்கொண்டிருந்த பெண்.


'பார்றா. இப்படியெல்லாம் கூட நடக்குமா.' என்ற வியப்புதான் உண்டானது மித்ரனுக்கு.


"எனக்கு டான்ஸெல்லாம் ஆட வராது" என அவள் அப்பட்டமாகப் பொய் சொல்ல, 'அடிப்பாவி.' என்பதுபோல் அவளைப் பார்த்தான் அவன்.


"இப்ப போட்டியா நடத்தப்போறோம்? சும்மா போட்டு வைங்க மாளவிகா" என்ற மோனா சொன்னதோடு நிற்காமல் தானே ஒரு சீட்டில் மாளவிகா என்று எழுதி அதை அவளுடைய கையில் கொடுக்க, அந்தச் சூழ்நிலைக்கு மாறுபட்டு ஏதாவது பேசிவைத்தால் அது மித்ரனுடன் சேர்த்து அங்கே இருக்கும் மற்ற பெண்களையும் இறக்கிக் காண்பிப்பதுபோல் ஆகிவிடுமோ என்ற குழப்பத்தில் மற்றவர்கள் செய்ததுபோலவே அங்கே இருந்த கண்ணடி குடுவைக்குள் அந்தச் சீட்டை போட்டாள் மாளவிகா.


அந்தக் குடுவையைக் கையிலெடுத்த கதிர், மித்ரனிடம் அதைக் காண்பித்து, "நீயே செலெக்ட் பண்ணு உன்னோட ஜோடிய" என்று இரு பொருள்பட சொல்ல, வேறு எந்தப் பெண்ணையும் தனக்கு இணையாக ஏற்க சிறிதும் விருப்பமில்லாமல் போக, 'மாளவிகாவின் பெயர்தான் வரவேண்டும்' என்ற எண்ணத்தில் வேகமாக துடித்தது அவனுடைய இதயம்.


அவன் ஒரு சீட்டை கையில் எடுக்க, பட்டென அவன் கையிலிருந்து அதைப் பறித்து, தானே பிரித்த கதிர், "மித்ரனோட அந்த லக்கி பார்ட்னர் யாருன்னா..” என இழுக்க, தங்கள் பெயர் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அங்கிருந்த எல்லா பெண்களின் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிய, அவனுடைய அசல் ஜோடியோ அதற்கு நேர்மாறான மனநிலையில் இருக்க, "மாளவிகா" என முடித்தான் அவன்.


தூக்கிவாரி போட்டது அவளுக்கு.


உண்டான பரவசத்தில் ஆழ்ந்த மூச்செடுத்து தலையைக் கோதிக்கொண்டான் மித்ரன். 'ஹேய்' என்ற கூச்சலுடன் எழுந்த கரவொலியில் சமநிலைக்கு வந்தவள், உண்டான படபடப்புடன் அவனை நோக்கிப் போக, "என்ஜாய்டா மாமா" என மித்ரனின் காதுக்குள் கிசுகிசுத்துவிட்டு, "மியூசிக்" எனக் குரல்கொடுத்தான் கதிர்.


அப்பொழுதுதான் அவனுக்கே புரிந்தது, அந்தச் சீட்டில் எந்தப் பெயர் வந்திருந்தாலும் அது மாளவிகா என்றுதான் சொல்லப்பட்டிருக்கும் என!


'அடப்பாவி. மித்ர துரோகி. எல்லாம் திட்டமிட்ட சதியாடா?' என மனத்திற்குள்ளேயே நண்பனைத் தாளித்தவன் மாளவிகாவின் அருகில் வந்து தன் கைகளை நீட்ட, தயக்கத்துடன் அவன் கையை அவள் பற்றவும், அங்கே இருந்த லேசர் திரை வண்ணங்களை வாரி இறைக்கவும் சரியாக இருந்தது.


சிலர் அந்த மேடையின் ஓரத்திலிருந்த பியானோவை இழுத்து வந்து நடுவில் போட, 'அடப்பாவி.' என்ற பாவனையுடன் அவன் நண்பனை ஏறிட, அவன் என்ன திட்டமிட்டிருக்கிறான் என்பது தெளிவாக விளங்கியது மித்ரனுக்கு.


அதற்குமேல் யோசிக்க நேரம் கொடுக்காமல் எப்பொழுதுமே அவனை மயங்கி கிறங்க வைக்கும் 'புன்னகை மன்னன் தீம்' இசை ஒலிக்கத் தொடங்க, "ஹேய் ஸ்டாப். நாங்க பிரிப்பர் ஆக வேணாம்" என்றான் மித்ரன் படபடப்புடன்.


தன்னைச் சரிசெய்துகொள்ள அவனுக்கு சில நொடிகள் தேவைப் பட, மாளவிகாவைப் பற்றிய எண்ணம் வேறு மனதுக்குள் குறுகுறுக்க, "சாரி லயன்னஸ். ஆர் யூ ஓகே ஃபார் திஸ்" எனக் கேட்டான் தன் ஆவலை மறைத்தபடி.


இப்பழுது பின்வாங்கினால் அது அவனை அவமதிப்பதுபோல்தான் ஆகும் என்ற எண்ணம் தோன்ற, அன்புவுடன் நடனமாடிய நினைவில், 'ஹ்ம்' என முணுமுணுத்தாள் அவள்.


உடனே அவன் "ரெடி" என்றதும் மறுபடியும் இசைத் தொடங்கவும், ஆரம்பத்தில் அவளைத் தீண்டவே தயக்கமாகதான் இருந்தது அவனுக்கு.


எந்த நொடியிலும் எல்லைத் தாண்டக்கூடாது எனத் தனக்குத் தானே ஒரு வரையறையை வகுத்துக்கொண்டு அவளுடன் மென்மையாகதான் தொடங்கினான் அந்த நடனத்தை.


சிறிது சிறிதாக அந்த மென்மை தன் தன்மை மாறி எப்படி வன்மையாகிப் போனதென்றே தெரியவில்லை. முதலில் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் இயல்பாக அவள் காண்பித்த இணக்கம்தான் அவனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுபோனதா என்று கேட்டால் அவனிடம் அதற்கு பதிலில்லை.


நடனத்துடன் பின்னிப்பிணைந்த அவனுடைய சிறுசிறு அணைப்புகளுக்கு மறுப்புத் தெரிவித்து அவளது உடல் இறுகிப்போனதை உணர்ந்தும்கூட அவளை விட்டு விலகமுடியாத அளவுக்கு மாளவிகா எனும் சுழலில் சிக்கிக்கொண்டானா அவன்!?


அந்த இசை முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறதே என்கிற ஏக்கத்தில்... அவசரத்தில்... அவளை இன்னும்... இன்னும்... தனக்குள் ஆழமாகப் புதைத்துக்கொள்ளும் வேகம் ஏன் அவனுக்கு உண்டாகவேண்டும்!?


அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க இயலாமல் அவள் பின்வாங்க, அது புரியாமல் அவள் அணிந்திருத்த சேலை வேறு சதி செய்து அவளுடைய காலைத் இடறிவிட, பின்னோக்கி சரிந்தவளை இடையுடன் வளைத்து தன்னுடன் நெருக்கிக்கொண்டவனின் பார்வை அவளது செம்பவள இதழ்களில் போய் பதிய, செயலற்று கண் கலங்கி ஒரு தோல்வி மனப்பான்மையுடன் அவள் பார்த்த அந்தப் பார்வை அவனை ஏன் அப்படிப் பாதிக்க வேண்டும்!?


மூளை மரத்துப்போனவனாக அப்படியே ஸ்தம்பித்து சில நொடிகள் தன்னை மறந்து ஏன் அவனை நிற்க வைக்க வேண்டும்!?


அவள் முகத்தில் குடிகொண்டிருந்த கடுமையும் கோபமும் அவனை ஏன் செயலற்றவனாக ஆக்கி, அவளை விட்டு விலகச் சொல்ல வேண்டும்!?


அவனைப் பித்தனாக்குபவளும் அவள்தான். அந்தப் பித்தத்தைத் தெளிய வைத்து அவனுக்கு அவளை உணர்த்தி, அவனுக்கு அவனையே உணர வைப்பவளும் அவளேதானோ!?


செவிகளைக் கிழித்த கைதட்டல் ஒலியில் தங்கள் நிலை உணர்ந்தவன் அவளைத் தூக்கி நிறுத்தினான் மித்ரன், 'சாரி' என்ற மன்னிப்பு வார்த்தையை அவளுடைய இதழ்களுக்கு வெகு அருகில் உச்சரித்துவிட்டு.


அதற்கு அவள் எப்படி எதிர்வினையாற்றியிருப்பாளோ, "எக்ஸ்ட்ரா ஆர்டினரி பெர்பார்மன்ஸ். செம்ம கெமிஸ்ட்ரி" என்றவாறு மோனா அவர்களை நெருங்கி வரவும், அவனது கைப்பேசி இசைக்கவும் சரியாக இருந்தது.


"தேங்க்ஸ் மோனா" என்றான் ஸ்தம்பித்துப் போய் நின்றுகொண்டிருந்த மாளவிகாவைப் பார்த்துக்கொண்டே.


அவள் மட்டும் நினைத்திருந்தாள் என்றால் அந்தச் சூழ்நிலையில், அவனுக்குக் கீழே இயங்கிக்கொண்டிருக்கும் அத்தனைப்பேருக்கும் முன்னால், அவனை உதறித் தள்ளிவிட்டுப் போயிருக்க முடியும்.


அதைச் செய்யாமல் அவனுடைய மரியாதையை அந்த இடத்தில் தாங்கிப் பிடித்ததற்காக, "தேங்க்யூ அஜூபா” என உணர்ந்து அவளுக்கு நன்றி சொல்லி, "கொஞ்ச நேரம் மோனா கூட பேசிட்டு இரு. இதோ வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியே போனான் மித்ரன்.


மாளவிகாவைத் தன்னிடம் கொண்டுவர, அவளைத் தன்னுடனேயே தக்கவைத்துக்கொள்ள அக்னிமித்ரன் செய்த செயல்களெல்லாம் பூமராங் போல அவனைத் திரும்பத் தாக்குமா அல்லது நடப்பது எதையும் அறியாமல் நண்பனை மகிழ்விப்பதாக எண்ணி கதிர் செய்திருக்கும் இந்தத் திருவிளையாடல் உண்மையிலேயே மாளவிகாவை அவனுடைய வாழ்க்கையில் இணைக்குமா?


விடை காலத்தின் கைகளில்.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page