top of page

En Manathai Aala Vaa-23

Updated: Oct 17, 2022

மித்ர-விகா-23

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மாளவிகாவை மருத்துவர் அகிலாவிடம் அழைத்துச்செல்ல, அவளிடம் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய மாற்றத்தைப் பார்த்து வியந்துதான் போனார் அவர்.


சில மருந்துகளை மாற்றிக் கொடுத்தவர், அவளுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு செயலில் அவளை அதிக நேரம் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தி அனுப்பவே, உடனே இசை மற்றும் பரதநாட்டிய வகுப்புகளில் அவளைச் சேர்த்துவிட்டார் துளசி.


முதலில் கொஞ்சம் சுணங்கினாலும், கொஞ்சம் கொஞ்சமாக விருப்பத்துடனேயே அந்த வகுப்புகளுக்குச் செல்ல தொடங்கினாள் மாளவிகா.


இப்படியே சில மாதங்கள் செல்ல, ஒரு நாள் மதியின் அக்காவும் அவருடைய கணவரும் அன்புவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.


அன்புவுக்கு அவனுடைய பெரியம்மா கண்ணம்மாவை நிரம்பவே பிடிக்கும் என்றால் அவனைப் பொறுத்தவரை சாமிக்கண்ணு ஐயா பெரியப்பாதான் அவனுடைய ஆதர்ச நாயகன் எனலாம். அவருடைய ஒவ்வொரு அசைவையும் அப்படி ரசிப்பான்.


அந்தச் சமயத்தில் அவர் சண்டைப் பயிற்சியாளராக வேலை செய்த ஒரு திரைப்படம் வேறு வெளியாகியிருக்க அந்தப் பெருமை வேறு அவனிடம் நிரம்பி வழிந்தது.


அவரைப் பார்த்ததும் உற்சாகத்துடன், “ஐ...பெரியப்பா” எனத் தாவி வந்து சாமிக்கண்ணுவை அணைத்துக்கொண்டான் அன்பு.


அவனுடைய மனநிலைக்கு மாறாக, கொஞ்சம் கரடுமுரடான தோற்றத்துடனிருந்த அவரைப் பார்த்ததும் கொஞ்சம் அதிகமாகவே மிரண்டுபோனாள் அங்கே அன்புவுடன் விளையாடிக்கொண்டிருந்த மாளவிகா.


அடுத்த நொடி, கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க, அங்கிருந்து பதறியடித்து அவள் ஓடிப் போக, "மாலு. நில்லு. ஏன் அழற?" எனக் கேட்டுக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்து ஓடினான் அன்பு.


'ஒரு குழந்தை கூட தன்னைப் பார்த்து மிரண்டு போகும்படியான தோற்றத்துடன் இருக்கிறோமே' என வருத்தமாகிப்போனது சாசமிக்கண்ணுவுக்கு. அதை அவர் அப்படியே சொல்லி வெளிப்படையாக வருந்தவும், கண்ணம்மாவுக்குமே ஒரு மாதிரி ஆகிப்போனது.


அவரை சமாதானப்படுத்தும் விதமாக, "அப்படியெல்லாம் இல்ல மாமா. பொதுவாவே மாலுவுக்கு ஆம்பளைங்கன்னா ரொம்ப பயம். அன்பு அப்பா கிட்ட கூட பேச மாட்டான்னா பாருங்க. நீங்க தப்பா நினைக்காதீங்க மாமா" என்ற மதி அவளைப் பற்றி முழுவதும் சொல்லவும், கண்ணம்மா சாமிக்கண்ணு இருவருமே அதிர்ந்துதான் போனார்கள்.


அவனுடைய அன்புக்கு உரியப் பெரியப்பாவைப் பார்த்து பயந்துபோய்தான் அவள் அங்கிருந்து ஓடிவந்தாள் என்பதை அறிந்துகொண்ட அன்பு, வழக்கம் போல அவளை உருட்டி மிரட்டி, அவனுடைய அய்யா பெரியப்பா மிகவும் நல்லவர் என்பதை அவளை வற்புறுத்தி நம்பவைத்து மறுபடி மாளவிகாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தான்.


மகளுடைய செய்கையை அறிந்து அவர்களுடன் வந்த துளசி, "ரொம்ப சாரிங்க” என அவர்களிடம் மன்னிப்பு வேண்ட, அதை பார்த்து தன் தவறை கொஞ்சம் உணர்ந்தாள் மாளவிகா.


"பரவாயில்லை விடுங்க. குழந்தைங்க அப்படி இப்படிதான் இருப்பாங்க" எனத் தன்மையுடன் சாமிக்கண்ணு பதில் சொல்லவும், கோபம் கொள்ளாமல் முகம் சுளிக்காமல் நிதானமாகப் பேசும் அவரிடம் சிறிய நம்பிக்கை உருவானது மாளவிகாவுக்கு.


பின் மென்மையான புன்னகையுடன் மாளவிகாவை தன்னிடம் வருமாறு கை நீட்டி அவர் அழைக்கவும், அன்புவின் மிரட்டல் பார்வைக்குப் பணித்து தயக்கத்துடன் அவரிடம் சென்றாள்.


"உனக்கு என்னைப் பார்த்தால் பிடிக்கலையா" என அவர் ஏக்கமாகக் கேட்க, ஏனோ அன்புவின் பெரியப்பாவைப் பிடிக்கவில்லை என்று சொல்வதற்கு இயலவில்லை அவளால்.


'இல்லை' என்று அவள் தலை அசைக்க, "அப்படினா ஏன் என்னைப் பார்த்து அழுதுட்டு ஓடின?" என அவர் அடுத்த கேள்வியைக் கேட்கவும், அன்புவைப் பார்த்துக்கொண்டே "பயந்துட்டேன்" என ஒரே வார்த்தையில் அவருக்குப் பதில் சொன்னாள்.


"நானும் அன்பு மாதிரி உனக்கு ஒரு ஃப்ரெண்ட்தான். இனிமேல் என்னைப் பார்த்துப் பயப்படாத என்ன” என அவர் அவளுக்குத் தகுந்தபடி இறங்கி வந்து சொல்லவும், லேசாகச் சிரிப்பு எட்டிப் பார்த்தது அவளுடைய முகத்தில்.


"இப்படி கொஞ்சமா சிரிக்கக்கூடாது. நல்லா பெருசா சிரிக்கணும்" என்று அவர் சொல்ல, அவள் முகம் மலர்ந்து சிரிக்கவும், அவரும் பெரிதாகப் புன்னகைத்தவாறு, " சொல்லு... இப்ப மட்டும் ஏன் சிரிச்ச?" எனக் கேட்க, தன் கையைத் தூக்கிக் காண்பித்தவாறு, "இவ்வளவு பெரியவங்க எங்கயாவது எனக்கு ஃப்ரெண்டா இருக்க முடியுமா?" என கேட்க, அங்கே இருந்த அனைவருமே இருவரையும் வியப்புடன் பார்த்தனர்.


"முடியுமே. உன்னை மாதிரியே இந்தக் குட்டி அன்புவும் என்னோட ஃப்ரெண்டுதான். நீ வேணா அவனைக் கேட்டுப்பாரு" என அவர் அன்புவையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ள, 'அப்படியா?' என்ற கேள்வியுடன் அன்புவைப் பார்த்தாள் மாளவிகா.