En Manathai Aala Vaa-22
Updated: Oct 17, 2022
மித்ர-விகா-22
காலை கதிரவனின் சுள்ளென்ற கிரணங்களால் முகத்தில் பரவிய உஷ்ணத்தில் விழிப்புத் தட்ட, இமைகளைப் பிரிக்க இயலாமல் போராடி கண்களைத் திறந்தாள் மாளவிகா.
தான் இருக்கும் இடமும் சூழ்நிலையும் பிடிபட அவளுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முந்தைய நாள் விபரீதம் நினைவில் வர, அச்சம் சூழ்ந்துகொண்டது அவளை.
அன்புவைத் தூக்கி வீசிய திசையைப் பார்க்கவே துணிவில்லாமல் அவள் உடல் நடுங்கியது. அங்கிருந்து உடனே தப்பித்து ஓட வேண்டும் என்று தோன்றினாலும், கீழே இறங்கிப் போனால் அந்தப் பாவியின் கண்களில் சிக்கிக்கொள்வோமோ என்ற சொல்லொணா பயம் நெஞ்சை அடைக்க, மெதுவாக எழுந்துபோய் வீதியை எட்டிப்பார்த்தாள்.
அங்கே வசிப்பவர்கள் ஆங்காங்கே நின்று பரபரப்புடன் பேசிக்கொண்டிருக்க, தெரு முழுவதும் ஒரே சலசலப்பாக இருந்தது. அதைப் பார்த்ததும் அனிச்சை செயலாக அவள் கீழே இறங்கி வீதியை நோக்கி ஓடினாள்.
அவளைப் பார்த்துவிட்டு, 'மாலு. மாலு' என்ற கூச்சலுடன், "மது அம்மா, மாலு வந்துடுச்சு பாருங்க" என ஒரு பெண்மணி குரல் கொடுக்க, கண்ணீருடன் பதறித் துடித்து அவளை நோக்கி ஓடி வந்தார் துளசி.
முதலில், "பாவி... பாவி... பொழுது போய் தெருவுல விளையாடாதன்னு சொன்னா கேக்கறியா? ராத்திரி பூரா எங்கடி போய் தொலைஞ்ச?" என துளசி அவளைக் கைகளிலும் முதுகிலும் சரமாரியாக அடிக்க, அவள் எதிர்வினை ஆற்றாமல் அசைவற்று அப்படியே நிற்கவும் மனம் தாளாமல், அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் உகுத்தவர், அவள் உடல் அனல் போல் தகிக்கவும் ஸ்தம்பித்துப் போனார்.
"என்ன மதும்மா இப்படி செய்யறீங்க. புள்ள பயப்பட போகுது" என அருகிலிருந்த பெண்மணி அவரைக் கடிந்துகொள்ளவும் சுயநினைவுக்கு வந்தார் துளசி. அதற்குள் அவர்கள் இருவரையும் சுற்றிச் சிறு கூட்டம் சூழ்ந்துகொண்டது.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கிளம்பிக்கொண்டிருந்த மூர்த்தியும் அன்புவின் அப்பாவும் மாளவிகா வந்துவிட்டதை அறிந்து அங்கே வர, அன்புவின் அம்மாவும் கூடவே ஓடி வந்தார்.
மாளவிகா வந்துவிட்டாள் என்றால் அன்புவும் வந்திருப்பாள் என்ற நம்பிக்கையில் அவர் முகத்தில் சிறு நிம்மதி படர, "அன்பு எங்க மாலு?" என அவர் எதார்த்தமாகக் கேட்க, முகம் கன்றினாள் அவள்.
அன்புவின் பெயரைக் கேட்டதும் அச்சம் பிடித்துக்கொள்ள அன்னையை அணைத்துக்கொண்டவள், அவள் வீசி எறியப்பட்ட புதர் மண்டிய காலி மனையை நோக்கிக் கைக் காண்பிக்க, அதிர்ந்தனர் அனைவரும்.
"என்ன மாலு அந்தப் பக்கம் கைக் காமிக்கற. அன்பு எங்க இருக்கா சொல்லு" என ராஜன் பதட்டத்துடன் கேட்க, அன்னையின் தோளில் சாய்ந்துகொண்டு விசும்பினாள் அவள்.
"மாலு, ப்ளீஸ் அன்பு எங்க இருக்கானு சொல்லு?" என அன்புவின் அம்மா கெஞ்சலாகக் கேட்க, அவளுடைய கை மறுபடியும் அதே திசையில் நீளவும், "அங்கயா இருக்கா?" எனக் கேட்டார் மூர்த்தி.
"மாலு சொல்லு” என துளசி வேறு அழுத்தமாகச் சொல்லவும், 'ஆமாம்' என்பது போல் தலையை மட்டுமே அசைக்க முடிந்தது அந்த இளங்குருத்தால்.
விபரீதமாக ஏதோ நடந்திருக்கிறது என்பது அங்கே கூடி இருந்த அனைவருக்குமே புரிந்து போனது. அன்புவின் அப்பா அப்படியே ஸ்தம்பித்துப்போய் நிற்க, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு இரும்பில் கேட் போட்டுப் பூட்டப்பட்டிருக்கும் அந்த மனைக்குள் எப்படி நுழைவது என யோசித்தவர், பின் அந்தச் சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்றார் மூர்த்தி.
அப்பொழுது சரியாகக் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு அங்கே வந்தான் அந்த சந்தர். மாளவிகாவைப் பார்த்ததும் அவன் முகம் பேய் அறைந்தது போல ஆனது.
முந்தைய பின் மாலை வேளையில் சிறுமிகள் இருவரையும் காணாமல் துளசியும் அன்புவின் அம்மாவும் அந்த தெருவில் ஒவ்வொரு வீடாகத் தேடி அலைய, சில நிமிடங்களில் அவர்கள் காணாமல் போன செய்தி அந்தப் பகுதி முழுவதும் பரவிப்போனது.